பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்கவின் நெருக்கமான நண்பர் என தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு இத்தாலி நாட்டில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி பல கோடி ரூபா பணத்தை பொது மக்களிடமிருந்து மோசடியாகப் பெற்றுக்கொண்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவரையும் இன்று 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கெக்கிராவை நீதிமன்ற நீதிபதி ஸ்ரீ நித் விஜேசேகர உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் முன்னாள் இராணுவ வீரர் எச்.பீ. நாரத லக்ஷ்மன் வனராஜ, முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் கருணாரத்ன பண்டார மற்றும் நெலும் அதிகாரி ஆகியோர்களாவர்.
மினுவாங்கொட பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட இம்மூவரும் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்கவுடன் நெருங்கிய தொடர்பிருப்பதாகவும் அவரின் உதவியுடன் இத்தாலி நாட்டில் தொழில் பெற்றுத்தருவதாகவும் கூறி நாட்டின் பல்வேறு பாகங்களிலுமுள்ளவர்களிடமிருந்து பல கோடி ரூபாவை பெற்றுக்கொண்டுள்ளனர் என கல்கிரியாகம பொலிஸார் கல்கிரியாகம நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர்.