சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

ஜனாதிபதியின் பதவிக்காலத்தை 20 வருடங்களாக அதிகரிக்க சட்டத்தில் திருத்தம் கொண்டுவரவேண்டும் – மேதானந்த தேரோ

ellawela-thera.jpgநாட்டின் பாதுகாப்பையும், அபிவிருத்தியையும் ஒரே தருணத்தில் முன்னெடுத்துச் செல்லக்கூடிய தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே. அவரது பதவிக்காலத்தை 20 வருடங்களாக அதிகரிக்கச் செய்வதற்கு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என எல்லாவல மேதானந்த தேரோ தெரிவித்தார்.  அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் கூறியதாவது:-  வன்னியில் சுமார் 3000 அரச சார்பற்ற நிறுவனங்கள் அபிவிருத்தி வேலைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் சுமார் 80 பில்லியன் ரூபா இப்பகுதியின் அபிவிருத்திக்காக செலவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.  ஆனால் அவர்கள் புலிகளுக்குரிய பங்கர்கள், முகாம்கள், பதுங்கு குழிகளையே அபிவிருத்தி செய்திருக்கிறார்கள்.  பிரபாகரன் தான் ஒருவரே தலைவர் என்றும் அவரை தோற்கடிக்க முடியாது என்றும் மார்தட்டிக் கொண்டிருந்தார். பல தலைவர்களை நாம் இழந்திருக்கிறோம். படையினரை இழந்திருக்கிறோம். இதற்கு காரணம் எமக்குடையே ஒற்றுமை இல்லை. ஒற்றுமை இல்லாமையை பயன்படுத்திக் கொண்டார்கள்.

புலிகள் தோல்வியை சந்தித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையிலாவது பேதங்களை மறந்து ஒற்றுமைப்பட வேண்டும். இது தொடர்பாக சிந்தித்து செயற்படவும் வேண்டும. படையினர் வடக்கில் கைப்பற்றும் சகல பிரதேசங்களிலும் பெளத்த விகாரைகள் இருந்தமைக்கான சான்றுகள் உள்ளன. இப்பகுதிகளில் சுமார் 1500 க்கும் மேற்பட்டகுளங்கள் இருக்கின்றன. 1500 குளங்கள் இருக்குமானால் 1500 கிராமங்கள் இருக்க வேண்டும். அப்படியானால் 1500 விகாரைகள் இருந்திருக்க வேண்டும். அதற்கான சான்றுகள் இருக்கின்றன.

வடக்கில் மீட்கப்பட்ட பிரதேசங்களில் 2 மாதத்தினுள் அபிவிருத்திப் பணிகள் – லக்ஷ்மன் யாப்பா

laksman-yaappa.jpgவடக் கில் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட பிரதேசங்களில் இன்னும் இரண்டு மாதத்திற்குள் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுமென்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா  அபேவர்தன தெரிவித்தார். கிளிநொச்சியை மீட்பதற்காக முன்னெடுக்கப்பட்டது ஒரு இனவாதப் போராட்டமென்று தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களுக்கு சமமான அபிவிருத்தியைத் துரிதமாக மேற்கொள்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும்” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் (06) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகளை விடவும், வட மாகாணத்தில் முன்னெடுக்கப்படுமென்று தெரிவித்த அமைச்சர் யாப்பா, மீட்கப்பட்ட பிரதேசங்களுக்கு மக்களைக் கொண்டு வந்து சேர்ப்பதில் படையினருக்குப் பாரிய பொறுப்பு உள்ளதென்றும் கூறினார்.

“ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டுச் சரணடையுமாறும், சிவிலியன்களை விடுவிக்குமாறும் புலிகளுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்தர்ப்பம் வழங்கியிருந்தார். ஆனால் புலிகள் ஜனாதிபதியின் வேண்டுகோளை நிராகரித்துவிட்டார்கள்” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் ரணில் காட்டிக்கொடுத்துள்ளார் – அநுர பிரியதர்ஷன

anura-priyatharsana.jpgஎதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க புலிகள் இயக்கத்துடன் போலியான போர்நிறுத்த ஒப்பந்தம் செய்துகொண்டு நாட்டை முழுமையாக காட்டிக்கொடுத்துள்ளாரென தகவல் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன  யாப்பா தெரிவித்துள்ளார்.

தன்னால் கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மூலமே யுத்தத்தில் வெற்றியடைவதற்கான அடித்தளம் இடப்பட்டதாக (05) அவர் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளாரென்றும் தேசிய ரீதியாக வெற்றியை கொண்டாடும் இந்த வேளையில் பிரபா- ரணில் போலி போர் நிறுத்த ஒப்பந்தத்தின் தேசத்துரோகத் தன்மையை புரிந்துகொள்ள வேண்டியது மக்கள் பொறுப்பாகுமென்றும் அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

‘2002 பெப்ரவரி 21 ஆம் திகதி சைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கை எமது தாய் மண்ணின் இறைமையையும் ஆள்புல ஒருமைப்பாட்டையும் முழுமையாக காட்டிக் கொடுத்துள்ளது. இந்த காட்டிக் கொடுப்பின் முதலாவது காரியம் மிலேனியம் சிட்டி அனர்த்தமாகும். இராணுவ பிரிவினருக்குரிய மிலேனியம் சிட்டி இல்லத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களை கொலை செய்வதற்கு திட்டமிட்டிருந்த சூழ்ச்சிகாரர்கள் ஒன்று கூடியிருப்பதாக கூறி புலனாய்வு பிரிவினரின் பெயர் விவரங்களை புலிகளுக்கு பெற்றுக்கொடுத்து அவர்களை கொலை செய்வதற்கு வழிவகுத்தன. அச்சமயத்தில் சுமார் 100 புலனாய்வு உத்தியோகத்தர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். தவிரவும் போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதிலிருந்து 2006ஆம் ஆண்டு மாவிலாறு மனிதாபிமான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது வரை போர் நிறுத்தம் என்ற போர்வையில் சுமார் 500 இராணுவத்தினரை படுகொலை செய்தனர். இதில் 34 தமிழ் அரசியல்வாதிகளும் கொல்லப்பட்டனர்.

ரணில் விக்கிரமசிங்கவின் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் தயவால் புலிகள் தோற்கடிக்கப்பட்டது எவ்வாறாக இருந்தாலும், அதன் மூலம் புலிகள் தமது கொலைச் செயலை தொடர்ந்து முன்னெடுத்து வலுவான இராஜதந்திரத்தை கட்டியெழுப்புவதற்கும் தேவையான தேசிய மற்றும் சர்வதேச ரீதியான அங்கீகாரத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் இதன்மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. அதுமாத்திரமன்றி புலிகளின் யுத்த பலம், தொலைத் தொடர்பு பலம், நிதி வளம் ஆகியவற்றை பல மடங்கு மேம்படுத்தி எமது இராணுவம் பலவீனமானதென காண்பித்து அவர்களை முகாமுக்குள் முடக்கும் மனோ பாவத்தை நாட்டில் ஏற்படுத்தும் வகையிலும் இவர்கள் செயற்பட்டனர். நிலைமை இவ்வாறிருக்க, நாட்டு மக்களை மேலும் தவறாக வழிநடத்த ரணில் விக்கிரமசிங்க கூறும் இந்தக் கருத்து உண்மைக்கு புறம்பானதாகும். இதனை எவருமே ஏற்றுக்கொள்ள மாட்டார்களென்பதும் எனது நம்பிக்கையாகுமெனவும் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண சபை: பொது மக்கள் சந்திப்புக்கு இரண்டு தினங்கள்

cm.jpgகிழக்கு மாகாண முதலமைச்சரரையும் செயலாளர் மற்றும் அதிகாரிகளையும் சந்திப்பதற்கென இரு தினங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சரின் அலுவலகம் அறிவித்துள்ளது. ஒவ்வொரு புதன், வெள்ளிக்கிழமைகளில் பொதுமக்கள் முதலமைச்சரரையும் மற்றும் அதிகாரிகளையும் சந்தித்து தங்களது குறை நிறைகளைத் தீர்த்துக் கொள்ள முடியும்.

இவ்வாறு ஒதுக்கப்பட்ட இந்த இரண்டு நாட்களும் பூரணமாக மக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதால் மக்களின் சிரமங்கள் குறைவடையும், இதேவேளை மற்றைய நாட்கள் அதிகாரிகள் தங்களது அலுவலக வேலைகளை மேற்கொள்வதற்கு இலகுவாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

‘தெய்வேந்திரமுனை-பருத்தித்துறைவரை இலங்கை இப்போது ஒன்றாகிவிட்டது’- அமைச்சர் மைத்திரிபால

maithiri-pala.jpgகிளிநொச்சியைக் கைப்பற்றியதன் மூலம் பல உயிர்களைப் பலி கொண்ட புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஆட்சியை புல்டோஸரைக் கொண்டு தகர்த்து தெய்வேந்திரமுனையிலிருந்து பருத்தித்துறை வரையிலான இலங்கை இப்பொழுது ஒன்றாகி விட்டதாக ஸ்ரீ.ல.சு. கட்சியின் பொதுச் செயலாளரும் விவசாய கமத்தொழிற் சேவை அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஹாரிஸ்பத்துவ ஸ்ரீ.ல.சு.கட்சியின் அதிகாரசபை கூட்டத்தின்போது உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். நுகவெல தேசிய பாடசாலையின் கேட்போர் கூடத்தில் (ஞாயிறன்று) நடைபெற்ற இக் கூட்டத்திற்கு முன்னாள் மத்திய மாகாண சபை அமைச்சரும் நடைபெறப்போகும் மாகாண சபைத்தேர்தலில் போட்டியிடுபவருமான எதிரிவீரவர்தன (ஐ.ம.சு.மு) தலைமை தாங்கினார். அமைச்சர் தொடர்ந்தும் கூறியதாவது, நாட்டின் ஒரு பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருந்த புலிகளின் பலத்தை பாதுகாப்புப் படையினர் உடைத்தெறிந்து விட்டனர். இதன் மூலம் தெய்வேந்திரமுனையும் பருத்தித்துறையும் இப்பொழுது இணைக்கப்பட்டுவிட்டது. ஜே. ஆரின் யுகத்தில் பிரபாகரனின் ஆட்சிப்பலம் கிளிநொச்சியில் இருந்துவந்தது.

பிரேமதாஸ, விஜேதுங்க ஆகியோரின் காலப்பகுதியிலும் பிரபாகரனின் ஆட்சி கிளிநொச்சியில் இருந்து வந்தது. சந்திரிகாவின் யுகத்திலும் பிரபாகரனின் ஆட்சி நிலைத்தது. ஆனாலும் மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியின் காலத்தில் பிளவுபட்ட நாடு ஒன்றாகிவிட்டது. இந்த நாட்டில் இரு அரசாங்கங்கள் இருக்க இயலாதென்பதை அன்று எடுத்துக் கூறிய ஜனாதிபதியின் வார்த்தை யதார்த்த நிலைக்கு உள்ளாகிவிட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2005ஆம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முன்வந்த பொழுது புதியதோர் நாட்டை உருவாக்கப்போவதாகவே அவர் அப்பொழுது கூறியிருந்தார்.

பொருளாதார சீர்குலைவு: சர்வதேச உதவிகளை தடைசெய்ய சில சக்திகள் சதி முயற்சி – பிரதமர்

ratnasri.jpgநாட்டின் சகல பகுதிகளிலும் தமிழர்கள் உயர் பதவிகளை வகித்து, வடக்கு – தெற்கு மக்கள் ஐக்கியமாக வாழ்ந்த காலமொன்றிருந்தது. இவ்வுறவை சீர் குலைத்த பிரபாகரன் இதற்கான பிரதி பலனை அனுபவிப்பது நியாயமானதென பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வடக்கில் யுத்தத்தை நிறுத்தவும் அதற்கான சர்வதேச ஒத்துழைப்பைப் பெறவும் நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் வகையில் சர்வதேச உதவிகளைத் தடைசெய்யவும் சில சக்திகள் சதிமுயற்சியில் ஈடுபட்டுள்ளன.

அனைத்துச் சவால்களுக்கும் முகம்கொடுக்க அரசாங்கம் தயாராகவுள்ளதெனவும் பிரதமர் தமதுரையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணையைச் சபையில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். பிரதமர் தமதுரையில் மேலும் தெரிவிக்கையில்:-

கிளிநொச்சியை பயங்கரவாதிகளிடமிருந்து மீட்ட வெற்றியை அறிவிக்கும் முக்கிமான காலகட்டமொன்றில் அவசரகால சட்டம் மேலும் ஒரு மாதகாலம் நீடிக்கப்படுவதற்கான பிரேரணை இன்று சபையில் சமர்ப்பிக்கப்படுகிறது. பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தமென்பது இலேசானதல்ல. கைகூடாத ஒன்று என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் எமது படையினர் சாதித்துக்காட்டியுள்ளனர். இதற்கான பின்னணியை ஏற்படுத்துவதற்காகவே மேலும் ஒருமாத காலத்திற்கு அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படுகிறது. விடுதலைப் புலிகளின் இறுதிமூச்சு உள்ளவாங்கப்படும் இன்றைய நிலையில் வத்தளையில் பல உயிர்களைக் காவு கொண்ட தாக்குதலை அவர்கள் மேற்கொண்டுள்ளனர்.

அரசாங்கம் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்குச் சமமானதாக சில சக்திகள் அரசாங்கத்துக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றன. நாட்டைச் சீர்குலைக்க இச்சக்திகள் பெரும் பிரயத்தனங்களை மேற்கொள்கின்றன. நாடு, இனம் என்ற உணர்வில்லாத இவர்களுக்கு என்ன நடந்தது என்ற கேள்வியையே இன்று நாட்டு மக்கள் முன்வைக்கின்றனர். பல அரசியல் வாதிகள் இதிலடங்குகின்றனர். இது போன்ற செயற்பாடுகளில் இறுதியில் நியாயமே வெல்லும்.

தேசிய உணர்வுள்ள மக்கள் வாழும் நாடு அதிஷ்டமிக்கது. எனினும் துரதிஷ்டவசமாக எமது நாட்டின் சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைக்க முடியாத நிலையே உள்ளது. புலிகளுக்கும் அல்கைதா இயக்கத்துக்குமிடையில் தொடர்புகள் இருப்பதாக இந்திய பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அண்மையில் காபுல் நகரில் இவர்களுக்கிடையிலான ஆயுத ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடந்ததாகத் தெரிய வருகிறது.

கேரளா, தமிழ்நாடு வழியாக நாட்டிற்குள் போதை மருந்துகளைக் கடத்தவும் இவர்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றைத் தடுப்பதற்கான சட்டதிட்டங்கள் அவசியம். இதற்குச் சகல தரப்பினரதும் ஒத்துழைப்பும் அவசியம். இவ்வேளையில் உயிரைப் பணயம் வைத்து பயங்கரவாதிகளின் கோட்டைக்குள் நுழையும் படைவீரர்களுக்கு மனதைரியத்தை வளர்க்கும் பொது நடவடிக்கைகளும் அவசியமென பிரதமர் மேலும் தெரிவித்தார். 

காஸா மீதான தாக்குதலை நிறுத்த இஸ்ரேல் நிபந்தனை

israeli-aircraft.jpg
யுத்தத்தை நிறுத்தும் படியான சர்வதேச உத்தரவுகளை உதாசீனம் செய்துள்ள இஸ்ரேல் மூன்று நிபந்தனைகளை விதித்துள்ளது. ஹமாஸ் அமைப்பினர் ரொக்கட் தாக்குதலை நிறுத்துதல், சர்வதேச மேற்பார்வையின் கீழ் உடன்படிக்கை செய்யப்படல், மீண்டும் ஹமாஸ் ஆயுதத் தாக்குதலை நடாத்துவதில்லை என உறுதியளித்தல் என்பவையே அவையாகும்.

இஸ்ரேல் மீதான ரொக்கெட் தாக்குதலை நிறுத்தப் போவதில்லை என சூளுரைத்துள்ள ஹமாஸ் தலைமையகம் இஸ்ரேல் முற்றுகைகள் அகற்றப்பட்டு எல்லைகள் திறக்கப்படுவதுடன் தாக்குதல்களையும் நிறுத்தும் பட்சத்தில் யுத்தநிறுத்தம் சாத்தியமென ஹமாஸ் அறிவித்துள்ளது.  காஸாவில் கடந்த இரு வாரங்களாக இடம்பெறும் மோதல்கள் மிகப் பெரிய பிராந்திய நெருக்கடியைத் தோற்றுவிக்கும் கட்டத்தை நெருங்கியுள்ளது. சிறுவர்கள், குழந்தைகள் எனப் பலியாவோரின் தொகை உயர்ந்தவண்ணமுள்ளன. காஸாவுக்குள் ஆழ ஊடுருவியுள்ள இஸ்ரேல் இன்னும் தங்கள் இலக்குகளை அடையவில்லை.

ஹமாஸின் ரொக்கட் தளங்களை தகர்ப்பதே நோக்கம் எனத் தெரிவித்துள்ளது. அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதாயின் பொதுமக்களை கேடயங்களாகப் பாவிப்பதை ஹமாஸ் நிறுத்த வேண்டுமெனவும் தெரிவித்தது.  ஹமாஸின் தலைமையகம் ஸியோனிஸ்டுகளை எதிர்த்து மூர்க்கமாகப் போராடும்படி தனது உறுப்பினர்களைக் கேட்டுள்ளது.  காஸாவில் எமது குழந்தைகளைக் கொலை செய்யும் சியோனிஸ்ட் வெறியர்கள் உலகில் உள்ள அனைத்து முஸ்லிம்களையும் கொலை செய்ய எண்ணியுள்ளதாகவும் ஹமாஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மருத்துவ உதவிகளைக் கொண்டு செல்ல இஸ்ரேல் தடையாக உள்ளதாக ஐ. சி. ஆர். சி. தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

அவசர கால சட்டம் 96 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

sl-parlimant.jpgஅவசர காலச் சட்டம் நேற்று பாராளுமன்றத்தில் 96 மேலதிக வாக்குகளால் நிறை வேற்றப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 106 வாக்குகளும், எதிராக 10 வாக்குகளும் கிடைத்தன. நேற்றைய வாக்கெடுப்பின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களான பைசல் காசிம், எஸ். ரஜாப்தீன் ஆகியோர் மட்டுமே சபையில் இருந்தனர். ஐ. தே. கட்சி உறுப்பினர்கள் எவரும் சபையில் இருக்கவில்லை. அதேபோன்று ஆளும் தரப்பில் இ. தொ. கா. மற்றும் மலையக மக்கள் முன்னணி உறுப்பினர்களும் சபையில் இருக்கவில்லை. சபையிலிருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 10 பேர் மட்டுமே பிரேரணைக்கு எதிராக வாக்களித்தனர். பாராளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடும்.

முகமாலை, கிளாலி முன்னரங்கு நிலைகள் படையினரின் கட்டுப்பாட்டில்

_army.jpgமுகமாலை மற்றும் கிளாலி பகுதிகளிலு ள்ள புலிகளின் பாதுகாப்பு முன்னரங்கு நிலைகளை பாதுகாப்புப் படையினர் நேற்று கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். யாழ்ப்பாணத்திலிருந்து தென்பகுதியை நோக்கி முன்னேறிவரும் இராணுவத்தின் 53 வது மற்றும் 58 வது படைப்பிரிவினர் இந்தப் பகுதியிலுள்ள முன்னரங்கு நிலைகளை தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

முகமாலை மற்றும் கிளாலி பகுதிகளிலுள்ள படையினர் இங்கிருந்து தென்பகுதியிலுள்ள பளையை நோக்கி தொடர்ந்தும் முன்னேறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைவரங்களை தெளிவுபடுத்தும் செய்தியாளர் மாநாடு நேற்றுப் பிற்பகல் கொள்ளுப்பிட்டியிலுள்ள தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.

தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தலைமையில் நடைபெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலைய பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்லே, விமானப்படைப் பேச்சாளர் விங்கமாண்டர் ஜனகநாணயக்கார, கடற் படைப் பேச்சாளர் கொமாண்டர் மஹேஷ் கருணாரட்ண மற்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர ஆகியோர் கலந்து கொண்டனர்.

பிரிகேடியர் உதய நாணயக்கார இங்கு மேலும் தகவல் தருகையில்:- யாழ்ப்பாணம், முகமாலை மற்றும் கிளாலி பாதுகாப்பு முன்னரங்கு நிலைகளில் நிலைகொண்டுள்ள இராணுவத்தின் 53 வது மற்றும் 55 வது படைப்பிரிவினர் புலிகளின் பாதுகாப்பு முன்னரங்கு நிலைகளை இலக்குவைத்து கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த 500 தொடக்கம் 600 மீற்றர் வரையான முன்னரங்கு பாதுகாப்பு நிலைகளை படையினர் மீட்டெடுத்துள்ளனர். தற்பொழுது முன்னெடுக்கும் படை நடவடிக்கையின் போது படையினரை இலக்கு வைத்த புலிகளின் பதில் தாக்குதல்கள் குறைந்துள்ளதாகவும், புலிகள் பின்வாங்கிச் செல்லும் நிலைகள் காணப்படுவதாகவும் பிரிகேடியர் குறிப்பிட்டார்.

ஆணையிறவுக்கு தெற்கு மற்றும் அதன் கரையோரப் பிரதேசத்தை தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ள இராணுவத்தின் 58 வது படைப்பிரிவினர் தட்டுவான் கட்டு மற்றும் தமிழ்மடப் பிரதேசத்தில் தமது நிலைகளை பலப்படுத்தியுள்ளனர். ஆணையிறவுக்கு தெற்கை கைப்பற்றியதை அடுத்து தெற்கு பகுதியில் அமைந்துள்ள புலிகளின் சகல விநியோகப் பாதைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.

தற்பொழுது முல்லைத்தீவு பகுதியிலுள்ள கிழக்கு கடற்கரை பிரதேசமும் அதனை அண்மித்த பகுதிகளும் மாத்திரமே புலிகளின் விநியோக பாதையாக உள்ளது. ஒலுமடுவுக்கு கிழக்கேயும், ஒட்டுசுட்டானுக்கு மேற்கேயும் நிலைக்கொண்டிருந்த இராணுவத்தின் நான்காவது மற்றும் மூன்றாவது செயலணியினர் ஏ- 32 பிரதான வீதியில் மாங்குளத்திலிருந்து ஒட்டுசுட்டான் மற்றும் ஒலுமடு வரையான பிரதேசத்தை தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர். இராணுவத்தின் 59 வது படைப்பிரிவினர் ஒட்டு சுட்டானிலிருந்து முள்ளியவளை வரையான வீதியை நோக்கி தற்பொழுது முன்னேறி வருவதாகவும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு பகுதியிலுள்ள தமது கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களை புலிகள் நாளுக்கு நாள் பாதுகாப்புப் படையினரிடம் இழந்து வருவதாகவும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார். முகமாலையிலிருந்து தெற்காகவுள்ள ஆணையிறவுக்கு 19 கிலோ மீற்றரும், அங்கிருந்து கிளிநொச்சிக்கு சுமார் நான்கு கிலோமீற்றர் தூரமும் உள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

ஆட்டோ: பெற்றோல் நிவாரணம்: சமுர்த்தி வங்கிகளினூடாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி பணிப்பு

presidentmahinda.jpgமுச்சக்கர வண்டிகளுக்கென குறைந்த விலையில் அரசினால் வழங்கப்படவுள்ள பெற்றோலுக்கான நிவாரணத்தை சமுர்த்தி வங்கிகளினூடாக வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

அகில இலங்கை முச்சக்கர வண்டி சங்க உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் நேற்று (06) அலரி மாளிகையில் நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்டு குறிப்பிடுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். மேற்படி நிகழ்வில் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள முச்சக்கர வண்டி சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்; சமுர்த்தி வங்கிகளினூடாக பெற்றோல் சகாய விலையை பெற்றுக் கொள்வதாயின் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சமுர்த்தி வங்கியில் தம்மை பதிவு செய்து கொள்வது கட்டாயம். 250,000 முச்சக்கர வண்டிகளுக்கென வருடாந்தம் 6000 மில்லியன் ரூபாவை மானியமாக பெற்றுக் கொடுத்தமை தொடர்பாக அரசுக்கு மேற்படி சங்க உறுப்பினர்கள் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர். மேற்படி தொகையை வடக்கில் யுத்தம் புரிவோரின் குடும்பங்களின் நலன்புரி விடயங்களுக்கு பயன்படுத்துமாறும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

அதற்கு பதிலளித்த ஜனாதிபதி; “மக்களுக்கு பெற்றுக் கொடுத்த சலுகைகளை மீளப் பெறுவது எனது நோக்கமல்ல. இதனை விரும்புவோர் பெற்றுக் கொள்ளலாம். விரும்பாதோர் படையிணரின் குடும்பங்களின் நலன்புரி விடயங்களுக்கு வழங்கலாம் என்றும் தெரிவித்தார். அத்துடன் முச்சக்கர வண்டிகளை காஸில் இயக்கக் கூடிய விதத்தில் அதனை மாற்றியமைக்க வெகு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார். முச்சக்கர வண்டிகளுக்கு பொருத்துவதற்கான மீட்டர்களை தருவிக்கும் போது அவற்றுக்கு வரிச்சலுகை வழங்குவது சம்பந்தமாக யோசிப்பதாகவும் தெரிவித்தார்.