::யுத்த நிலவரம்

::யுத்த நிலவரம்

இலங்கையில் நடைபெறும் யுத்தம் தொடர்பான செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

இராணுவத் தளபதி யாழ். விஜயம்

sarath_f_jaffna.pngஇராணுவத் தளபதி லெப்டினன்ற் ஜெனரல் சரத் பொன்சேகா தலைமையிலான உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.
பலாலி விமான நிலையத்தை நேற்றுக் காலை சென்றடைந்த இராணுவத் தளபதியை யாழ். பாதுகாப்பு படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மெந்தக சமரசிங்க தலைமையிலான உயர் அதிகாரிகள் வரவேற்றுள்ளனர்.

யாழ். குடாநாட்டின் பாதுகாப்பு நிலைமைகளை ஆராய்ந்து தேவையான ஆலோசனைகளை வழங்கும் வகையில் அங்கு விஜயம் செய்த இராணுவத் தளபதி, யாழ். கட்டளைத் தளபதி தலைமையிலான உயர் அதிகாரிகள், இராணுவத்தின் 51, 52 மற்றும் 55வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

யாழ். பாதுகாப்பு படைப்பிரிவின் கட்டளைத் தலைமையகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது அங்குள்ள தற்போதைய நிலைமைகளை அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.  யாழ். குடாநாட்டை நோக்கி நாளுக்கு நாள் வருகை தந்துகொண்டிருக்கும் பொதுமக்களுக்குத் தேவையான போதிய வசதிகள் செய்து கொடுக்க படையினர் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாகவும் இராணுவ உயர் அதிகாரிகள் தளபதியிடம் தெளிவுபடுத்தியுள்ளனர்.

 யாழ்ப்பாணத்திற்கு இதுவரை 2000 சிவிலியன்கள் தப்பி வந்து பாதுகாப்பு படையினரிடம் தஞ்சமடைந்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.  படையினரால் விரட்டியடிக்கப்பட்ட புலிகள் யாழ். குடாநாட்டுக்குள் எக்காரணம் கொண்டும் ஊடுருவி அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கையை சீர்குலைக்காத வண்ணம் தேவையான பாதுகாப்பையும் முன்னெடுக்குமாறும் இராணுவத் தளபதி இதன்போது அதிகாரிகளை பணித்துள்ளார்.

நீருக்கடியில் ஓடும் மூன்று ஸ்கூட்டர்கள் புதுக்குடியிருப்பில் படையினரால் கண்டெடுப்பு

ltte_underwater_vehicle.pngநீருக்கடியில் ஓடக்கூடிய புலிகளின் மூன்று ஸ்கூட்டர்களை (அண்டர் வோட்டர் ஸ்கூட்டர்கள்) படையினர் நேற்று வன்னியிலிருந்து மீட்டிருப்பதாக 58 ஆம் படையணியின் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா தெரிவித்தார். 

புதுக்குடியிருப்புக்கு வடக்கே தமது நிலைகளைப் பலப்படுத்திவரும் படையினர் அம்பலவன் பொக்கணை என்ற கிராமத்திலிருந்தே நீருக்கடியில் ஓடக் கூடிய மூன்று ஸ்கூட்டர்களுடன் பல பொருட்களையும் மீட்டெடுத்துள்ளனர்.  இந்த ஸ்கூட்டரில் ஒன்று ஒருவர் பயணிக்கக் கூடியது. இன்னுமொன்று இருவர் பயணிக்கக் கூடியது. மற்றையது தேவைக்கேற்ப விரித்து ஒடுக்கக் கூடியது. அதில் மூவரும் பயணிக்கலாம். ஒருவரும் பயணிக்கலாமெனவும் பிரிகேடியர் சவேந் திர சில்வா தெரிவித்தார். புலிகளின் மறைவிடமொன்றிலிருந்து இந்த ஸ்கூட்டர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இராணுவத்தின் 58 ஆம் படையினர் இவற்றுடன் 25 ஒட்சிசன் தாங்கிகள், நீருக்கடியில் உபயோகிக்கக் கூடிய இரண்டு தொலைநோக்கி, ஆயுதங்களை வைக்கக்கூடிய ஜக்கற்றுக்கள், சுழியோடிகள் பயன்படுத்தும் 20 அங்கிகள், கடற்புலிகளின் சீருடைகள் ஆகியவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை, ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு வீதியில் நேற்றுக் காலை இடம் பெற்ற மோதல்களில் புலிகளின் முக்கியத் தலைவர்களான அன்பு, சுரேஷ் ஆகியோர் உயிரிழந்திருப்பது தெரியவந்திருப்பதாகவும் பிரிகேடியர் நாணயக்கார கூறினார். இவர்கள் புலிகள் இயக்கத்தில் விசேட தேர்ச்சி பெற்றவர்களெனவும் அவர் தெரிவித்தார்.

காயமடைந்த மேலுமொரு தொகுதி பொதுமக்களுடன் முல்லைத்தீவிலிருந்து இன்று கப்பல் திருமலை வருகை

ship.jpgமுல்லைத் தீவிலிருந்து காயமடைந்த மேலும் ஒரு தொகுதி பொதுமக்களை ஏற்றிக்கொண்டு இன்று வெள்ளிக்கிழமை தான் கப்பல் புறப்படும் என்று மாகாண சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் வழித்துணையுடன் இக்கப்பல் நேயாளர்களுடன் வருவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. முல்லைத்தீவை நோக்கி கப்பல் சென்று கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டது.

ஏற்கனவே பெப்ரவரி, 11, 12, 16 ஆம் திகதிகளில் மூன்று தடவைகளில் 1,212 பொதுமக்கள் கப்பலில் செஞ்சிலுவைச்சங்கத்தினரால் கூட்டிவரப்பட்டு திருகோணமலை ஆஸ்பத்திரியில் முதலில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவர்களில் சிலர், கந்தளாய், தம்பலகமம், பொலநறுவை, கண்டி, கொழும்பு ஆகிய இடங்களிலுள்ள ஆஸ்பத்திரிகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டனர். சிறிய காயங்களுக்குள்ளானவர்கள், ஆரம்ப சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்தோர் நலன்புரி முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

திருமலை ஆஸ்பத்திரிக்குச் சென்று பார்வையிட்ட மட்டு.ஆயர் வேதனை

batticolo1.jpgகடல் கோள் அனர்த்தத்தின் போது ஏற்பட்ட பாதிப்புகளுடன் ஒப்பிடும்போது வன்னியில் யுத்த அனர்த்தத்திற்குள்ளாகி காயமடைந்தவர்களின் நிலை மிக மோசமானதென மட்டக்களப்பு திருகோணமலை ஆயர் கலாநிதி வண. கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை தெரிவித்துள்ளார். திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள காயமடைந்தவர்களை நேரில் சென்று பார்வையிட்டுத் திரும்பிய பின்பு இந்தக் கருத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

“”பாதுகாப்புத் தரப்பின் விசேட அனுமதி பெற்றே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களை பார்வையிட்டோம். இராணுவம், பொலிஸ் மற்றும் கடற்படை ஆகியன அங்கு பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால் வெளியார் எவரும் பார்வையிடுவதற்கு அனுமதியில்லை. இந்நிலையிலேயே இந்த விசேட அனுமதியைப் பெற்று நாம் நோயாளர்களைப் பார்வையிட்டோம்.

காயமடைந்தவர்களைப் பொறுத்தவரை பலரது கண்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பலர் கைகளையும் கால்களையும் இழந்துள்ளனர். சிலர் எரிகாயங்களுக்குள்ளாகியுள்ளனர். சிலரது உடலினுள் இன்னமும் குண்டுகள் அகற்றப்படாமல் இருப்பதை எக்ஸ்ரே மூலம் அறியக்கூடியதாக இருந்தது. இவற்றையெல்லாம் பார்க்கும் போது மக்களுக்கு இப்படியும் ஒரு மோசமான நிலை வந்து விட்டதே என்று வேதனையாக உள்ளது. ஏற்கெனவே ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அங்கிருந்து சிகிச்சைக்காக அழைத்துவரப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளமையினால் வைத்தியசாலையில் இட நெருக்கடி காரணமாக மெத்தைகள் போடப்பட்டு நோயாளிகள் நிலத்தில் படுக்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

இதனைத் தவிர ஏனைய வைத்தியசாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றார்கள். மேலும், இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நிலைமையைச் சமாளிப்பதற்கு வைத்தியசாலை நிர்வாகம் அங்கு எந்நேரத்திலும் தயார் நிலையிலேயே இருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. இந்த விடயத்தில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பங்களிப்பு பாராட்டுக்குரியது. காயமடைந்து வைத்தியசாலையில் உள்ளவர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு எந்தச் சிந்தனையும் இல்லை. அவர்களுடைய உறவினர்களைப் பற்றிய சிந்தனையிலேயே அவர்கள் இருக்கின்றார்கள்.

தங்கள் உறவினர்களைப் பற்றிய தகவல்களைப் பெற்றுத் தருமாறு அவர்கள் கோரினாலும் அது உடனடியாக சாத்தியப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை. வைத்திய வசதிகளும் ஏனைய வசதிகளும் அவர்களுக்குப் போதியளவு வழங்கப்பட்டுள்ளதைக் காணக்கூடியதாக இருந்தது. வைத்தியர்கள், தாதிகள் உட்பட வைத்திய மற்றும் சுகாதார துறையைச் சார்ந்த சகலரும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றுவது பாராட்டுக்குரியது என்றும் தெரிவித்தார்.

படையினர் அம்பலவான்பொகனை நகருக்குள் நுளைந்துள்ளனர்

truck.jpgமுல்லைத் தீவு புதுக்குடியிருப்பு மேற்கை கைபற்றியுள்ள 58வது டிவிசன் படையினர் நேற்று(பெப்:19)அம்பலவான்பொக்கனை நகருக்குள் நுளைந்துள்ளதாக இராணுவத்தலைமையகம் தெரிவிக்கின்றது.

அம்பலவான்பொகனை நகருக்குள் நேற்று பிற்பகல் நுளைந்துள்ள படையினர் பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கும் மீதிப்பகுதியை கைபற்றும் நோக்குடன் தாக்குதல்கள் தொடர்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
 
 

பொதுமக்கள் கோருவது போர்நிறுத்தமே—இந்தியாவுக்கு விடுதலைப் புலிகள் பதில்

nadesanltte.jpgஇலங்கை யின் வடக்கே போர்பிரதேசத்தில் சிக்குண்டிருக்கும் பொதுமக்களை வெளியே கொண்டுவருவதற்கு உதவ தாம் தயாராக இருப்பதாக இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்கள் தெரிவித்திருந்த கருத்துக்கு பதிலளித்த விடுதலைப்புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் பா. நடேசன் அவர்கள், தம் கட்டுப்பாட்டில் இருக்கும் பொதுமக்கள் இந்தியாவிடமும், சர்வதேச சமூகத்திடமும் போர் நிறுத்தத்தையே கோருவதாக தெரிவித்தார்.

பிபிசி தமிழோசைக்கு அவர் வழங்கிய சிறப்புச் செவ்வியில் விடுதலைப்புலிகள் போர் நடக்கும் பகுதியிலிருந்து வெளியேறும் பொதுமக்களை தடுப்பதாகவும், சிலரை சுட்டுக் கொல்வதாகவும் ஐநா மன்றம் கூறியிருந்ததை மறுத்ததுடன், இது குறித்து சர்வதேச நிறுவனங்கள் நேரில் வந்து பார்த்தால் உண்மை நிலைமை அவர்களுக்கு விளங்கும் என்றும் கூறினார்.

”எமது மக்கள் எங்களோடுதான் வாழ்ந்து வருகிறார்கள். கடந்த இரண்டு வருடங்களாக இராணுவ தாக்குதல்கள் நடந்த சமயத்தில் மக்கள், விடுதலை புலிகளின் இன்ப துன்பங்களில் மட்டுமல்லாது போராட்டத்திலும் பங்குபெற்று வருகிறார்கள். அரசு பொய்யான பிரச்சாரத்தை செய்கிறது. சர்வதேச நிறுவனங்களோ ஒரு தலைப்பட்சமான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன”, என்றார் நடேசன்.

ஐநா மன்ற ஊழியரை விடுதலைப்புலிகள் கட்டாயமாக ஆள்சேர்த்திருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து அவரிடம் கேட்டபோது, தமது அமைப்பு யாரையும் கட்டாயப்படுத்தி ஆட்சேர்ப்பதில்லை என்றும், அதேசமயம் அரச படைகளின் அக்கிரமங்கள் அதிகரிக்கும்போது பொதுமக்களின் சகலதரப்பாரும் தமது இயக்கத்தில் தாமாக முன்வந்து இணைவதாகவும், அப்படி அந்த ஊழியரும் இணைந்திருந்தால் தமது இயக்கம் அவரை இணைத்துக்கொண்டிருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

61 சிவிலியன்கள் நேற்று வருகை

civilians-1002-09.jpgபுலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்லிருந்து பாதுகாப்பு தேடி 61 சிவிலியன்கள் இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை நோக்கி நேற்று வருகை தந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பு மேற்கு பிரதேசத்தை நோக்கி நேற்று முன்தினம் இரவு வருகை தந்த 61 சிவிலியன்களும் ஆரம்பக் கட்ட விசாரணைகளுக்குப் பின்னர் நிவாரணக் கிராமங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கமைய ஜனவரி மாதம் முதல் இதுவரை 35,817 பொதுமக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு பாதுகாப்பு தேடி வருகை தந்துள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

புதுமாத்தளன் மருத்துவ நிலவரம் குறித்து சுகாதார அமைச்சுக்கு கடிதம்

puthumaattalan-hospital.gifமுல்லைத் தீவு மாவட்டத்தில் அரசாங்கம் அண்மையில் அறிவித்துள்ள பாதுகாப்பு வலயப்பகுதியில் உள்ள புதுமாத்தளன் வைத்தியசாலையில் பல்வேறு வசதியீனங்கள், மருந்துத் தட்டுப்பாடு, மன உளைச்சல்களுக்கு மத்தியில் அரச வைத்தியர்கள் பணியாற்றி வருவதாக முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் துரைராஜா வரதராஜா சுகாதார அமைச்சின் செயலாளருக்கு எழுதியுள்ள அவசர கடிதம் ஒன்றில் தெரிவித்திருக்கி்ன்றார்.

இந்த வாரம் நடத்தப்பட்ட எறிகணை தாக்கதலில் இறந்துபோன பலரது உடல்களும், காயமடைந்தவர்கள் பலரும் புதுமாத்தளன் வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், மிகவும் குறைவான வைத்திய வசதிகளுடன், பெரும் எண்ணிக்கையில் வந்துள்ள காயமடைந்தவர்களுக்கு எவ்வாறு சிகிச்சையளிப்பது என்று தெரியாமல் தாங்கள் திகைப்படைந்திருப்பதாகவும் அந்தக் கடிதத்தில் டாக்டர் வரதராஜா தெரிவித்திருக்கின்றார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உடையார்கட்டு, சுதந்திரபுரம், தேவிபுரம் ஆகிய இடங்களில் இயங்கிவந்த வைத்தியசாலைகள் போர்ப்பதட்டம் காரணமாக கைவிடப்பட்டு, தற்போது புதுமாத்தளன் வைத்தியசாலை மாத்திரமே இந்தப் பிரதேசத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்களுக்கான ஒரேயொரு வைத்தியசாலையாக வசதியீனங்களுக்கிடையில் இயங்கி வருவதனால், இந்தப் பிரதேசத்தின் வைத்தியசேவை நிலைகுலைந்து ஸ்தம்பிதமடையும் அபாய நிலைமை நிலவுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு சிறிய பாடசாலை கட்டிடத்தில் ஆரம்ப வைத்திய நிலையமாக இயங்கி வருகின்ற புதுமாத்தளன் வைத்தியசாலையில் நாளாந்தம் 100 தொடக்கம் 200 வரையில் போர்க்காயங்களுடன் வருகின்ற காயமடைந்தவர்களை அறுவைச் சிகிச்சைக்கு உட்படுத்துவதற்கு இடவசதியோ ஏனைய உட்கட்டமைப்பு வசதியோ இல்லாத நிலையில் வைத்தியர்கள் அங்கு போராடிக்கொண்டிருக்கி்ன்றார்கள் என்றும் டாக்டர் வரதராஜா தெரிவித்திருக்கின்றார்.

புலிகளின் விமானத்தின் பகுதிகள் படையினரால் வட்டக்கச்சியில் மீட்பு!

ltte_aircraft.pngமுல்லைத்தீவு வட்டக்கச்சி பிரதேசத்தில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினர் புலிகளினது விமானங்களின்; சில பகுதிகளைக் கண்டுபிடித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. விமானத்துக்குரிய சில உதிரிப்பாகங்கள் தப்பியோடிய புலிகளால் தீயிட்டு எரிக்கப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விமானங்கள் தொடர்பான கைநூலொன்றும் அவற்றை இயக்கும் முறைகள் அடங்கிய வரைபடங்களும் இப்பிரதேசத்திலிருந்து படையினரால் மீட்கப்பட்டுள்ளன. இங்கு விமானங்களை உருவாக்கும் முயற்சியிலும் அவற்றை இயக்கும் பயிற்சியிலும் புலிகள் ஈடுபட்டுள்ளனர் என படையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இப்பிரதேசத்திலிருந்து மோட்டார் இயந்திரங்களின் பாகங்கள் அலுமினியத் தகடுகள்,  ஆணிகள் தயாரிக்கும் இயந்திரங்கள் என்பன கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சு மேலும் அறிவித்துள்ளது. 

ஏ 35 வீதி படையினர் வசம்!

udaya_nanayakkara_.jpgமுல்லைத் தீவு மாவட்டத்திலுள்ள ஏ 35 வீதியை படையினர் இன்று முழுமையாக கைப்பற்றியுள்ளனர் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்

இந்த வீதியை மீட்பதற்காக இடம்பெற்ற மோதலில் புலி உறுப்பினர்கள் 23 பேர் கொல்லப்பட்டனர் எனவும்   கைப்பற்றப்பட்ட பகுதியில் தொடர்ந்தும் தேடுதல் மெற்கொள்ளப்பட்டு வருவதோடு படையினர் அங்கு நிலை கொண்டுள்ளனர் எனவும் பிரிகேடியர் உதய நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.