இந்திய காங்கிரஸ் கட்சி தலைவி சோனியா காந்தி உட்பட்ட இந்திய தலைவர்களுக்கு தமிழீழ விடுதலைப்புலிகள் அச்சுறுத்தலாக உள்ளதாக வெளியான செய்தியை தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பா நடேசன் மறுத்துள்ளார். இந்திய உளவுத் துறை விடுத்துள்ள அந்த எச்சரிக்கைக்கு மறுப்பு தெரிவித்து சி.என்.என்-ஐ.பி.என் எனும் ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் பா. நடேசன் மின்னஞ்சல் விடுத்துள்ளார்.
அந்தக் கடிதத்தில், தமிழர்களின் அவலத்தையும், அவர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தையும் மறைக்கவும், திசை திருப்பவும் இப்படிப்பட்ட விஷமத்தனமாக பிரச்சாரம் திட்டமிட்டு செய்யப்படுகிறது. காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவை தேர்தல் பிரச்சாரத்தின் போது விடுதலைப் புலிகள் தாக்கலாம் என்று இந்தியாவின் உளவுத் துறை வெளியிட்ட எச்சரிக்கை, இந்திய மக்களை திசைதிருப்பும் நடவடிக்கை என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் கூறியுள்ளது. சோனியா காந்திக்கோ அல்லது அவருடைய பிள்ளைகளுக்கோ எங்களிடமிருந்து எந்த அச்சுறுத்தலும் இல்லை” என்று நடேசன் தெரிவித்துள்ளார்.