::யுத்த நிலவரம்

::யுத்த நிலவரம்

இலங்கையில் நடைபெறும் யுத்தம் தொடர்பான செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

புலிகளின் தலைவர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச அமெரிக்க உதவி அமைச்சர் விருப்பம்

richard_boucher0.jpgபுலிகள் தமது ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைவது தொடர்பில் அவர்களின் தலைவர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கான சாத்தியம் குறித்து அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி அமைச்சர் ரிச்சர்ட் பௌச்சர் பிரஸ்தாபித்துள்ளார்.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித ஹோகன்னவை நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை சந்தித்துக் கலந்துரையாடிய போதே றிட்சார்ட் பௌச்சர் தமது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.

இலங்கையின் முல்லைத்தீவு வடக்கின் மிகச்சிறிய பகுதியில் சுமார் 500 புலிகள் உள்ளனர். அவர்களால் 30 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரையான பொதுமக்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர் என்று இலங்கையின் வெளிவிவகாரச் செயலாளர் பௌச்சரிடம் விரிவாக எடுத்துரைத்தார். அதன்போது இணைத்தலைமை நாடுகள் புலிகளிடம் “மக்களை சுதந்திரமாக நடமாட அனுமதிக்க வேண்டும் என்று கேட் டுக்கொண்டதை பிரதி அமைச்சர் பௌச்சர் மீளவும் சுட்டிக்காட்டி வலியுறுத்தினார்  என்று இங்குள்ள இலங்கைத் தூதரகம்  நேற்று விடுத்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

606 பேர் அரச பகுதிக்கு வருகை

_mullai_1.jpgபாதுகாப்பு வலயப் பகுதியிலிருந்து 173 பெண்கள், மற்றும் 242 குழந்தைகள் உட்பட 606 பேர் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நேற்று முன்தினம் மாலை வந்துள்ளதாக ஊடக மத்திய நிலையம் நேற்று தெரிவித்தது. 173 பெண்களும், 193 ஆண்களும், 112 சிறுவர்களும், 130 சிறுமிகளும் இதில் அடங்குவதாகவும் ஊடக மத்திய நிலையம் தெரிவிக்கிறது.

முல்லைத்தீவு இராமநாதபுரம் பகுதியில் படையினர் தொடர்ந்தும் மேற்கொண்டு வரும் தேடுதலின் போது பெருந்தொகையான ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளனர். 60 எம்.எம். மோட்டார் குண்டுகள், எம்.பி.எம்.ஜி. குண்டுகள், 6 லைனர்கள், 4 கிரேன்டுகள், 55 வரை படங்கள், புலிகளின் சீருடை ஒன்று, புலிகளின் தொப்பிகள் 25 என்பவற்றையும் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்தவர்களுள் எவரும் காயமடைந்திருக்கவில்லை எனவும் ஊடக மத்திய நிலையம் தெரிவிக்கிறது.

68, 863 மக்கள் விடுவிக்கப்பட்ட பகுதிக்கு வருகை

udaya_nanayakkara_brigediars.jpgபுலிகளின் கட்டுப்பாட்டை மீறி பாதுகாப்பு வலயத்தில் இருந்து மேலும் 200 பொது மக்கள் இன்று (ஏப். 11) காலை இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்து சேர்ந்துள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர். புலிகளிடமிருந்து தப்பித்து இதுவரையில் 68, 863 பொதுமக்கள் அரச கட்டுப்பாட்டுக்கு வந்து சேர்ந்துள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாப்பு வலயத்தில் இருந்து வெளியேறி மக்கள் பாதுகாப்பாக  அரச கட்டுப்பாட்டிற்கு வருவதற்கான வழிகளை படையினர் அடையாளப்படுத்தி காட்டியுள்ளதாகவும் இதற்கென ஒலி பெருக்கிகள் மூலம் அறிவித்தல்களை தொடர்ந்து ஒலிக்க விட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தொடரும் கடும் மழையினால் இடம்பெயர்ந்து பாதுகாப்பு வலயத்திலுள்ளோர் பெரும் அவலம்

rain-wanne.jpgதற்போது தொடரும் கடும் மழையினால் இடம்பெயர்ந்து பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்கள் மேலும் கஷ்ட நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரச அதிபர் பா. பார்த்தீபன் தெரிவித்துள்ளதுடன், சிறுவர்களே இதனால் பெருமளவில் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். இடைநிலை காலநிலையினால் முல்லைத்தீவிலுள்ள புதுமாத்தளன், அம்பலவன் பொக்கணையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை பிற்பகல் மழை பெய்தது.

அதேவேளை, நேற்று வெள்ளிக்கிழமை பரவலாக தொடராக மழை பெய்துவருகின்றது. இதனால் இடம்பெயர்ந்து கூடாரங்களில் உள்ள மக்கள் மேலும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள கூடாரங்களிலுள்ள துவாரங்கள் காரணமாக ஒழுக்கு ஏற்பட்டு சிறுவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது உணவுப் பற்றாக்குறை காணப்படுகின்ற நிலையில் கடந்தவாரம் கப்பலில் வந்த 110 மெற்றிக்தொன் உணவுப் பொருட்களை விநியோகித்து வருகின்றோம். மேலும், உணவுப் பொருட்கள் தேவையாகவுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

சீரற்ற காலநிலையால் கப்பல் திருமலை திரும்பியது

புதுமாத்தளன் பகுதியிலுள்ள அவசரமாக சிகிச்சை பெற வேண்டிய நோயாளர்கள் மற்றும் காயப்பட்டவர்களை புல்மோட்டைக்கு அழைத்துவரும் நோக்கில் புறப்பட்ட சேருவில கப்பல் சீரற்ற காலநிலை காரணமாக திரும்பிவிட்டது. நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு திருகோணமலையிலிருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்க வழித்துணையுடன் சேருவில கப்பல் சென்றது. இக்கப்பல் நேற்று காலை 7 மணியளவில் புதுமாத்தளன் கரையை அடைந்ததாக முல்லைத்தீவு மாவட்ட சுகாதார பணிப்பாளர் டாக்டர் ரி. வரதராஜா தெரிவித்தார்.

எனினும், காலநிலை சீரின்மையால் கடல்கொந்தளிப்பையடுத்து நோயாளர்களையும் காயப்பட்டவர்களையும் கப்பலில் ஏற்றுவது சிரமமானதென்பதால் அக்கப்பல் பிற்பகல் 2 மணிக்கு திருமலை நோக்கி புறப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, புதிதாக நேற்று வெள்ளிக்கிழமை மாலை இக்கப்பலில் கொண்டுவரப்படும் அவசர மேலதிக சிகிச்சைக்காக அழைத்துவரப்படுவோருக்கென புல்மோட்டை கள வைத்தியசாலை தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.

புதுமாத்தளன் வைத்தியசாலை மீது படையினர் தாக்குதல் நடத்தவில்லை -பிரிகேடியர் மறுப்பு

udaya_nanayakkara_brigediars.jpgமுல்லைத்தீவு, புதுமாத்தளன் வைத்தியசாலை மீது படையினர் எக்காரணம் கொண்டும் ஷெல் தாக்குதலை நடத்தவில்லை. குறித்த வைத்தியசாலை உள்ளிட்ட அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு வலயத்தின் மீது தாக்குதலை நடத்த வேண்டிய அவசியம் படையினருக்கு இல்லை என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

புதுமாத்தளன் வைத்தியசாலையின் மீது கடந்த புதன்கிழமை நடத்தப்பட்ட ஷெல் தாக்குதலின் போது 18மாதக் கைக்குழந்தை மற்றும் வைத்தியசாலையின் பணியாளர் ஒருவர் உட்பட 20 பேர் கொல்லப்பட்டதுடன் 300 பேர் படுகாயமடைந்ததாக அவ்வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி தங்கமுத்து சத்தியமூர்த்தி சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டிருந்தார். அவரது கருத்து தொடர்பில் கேட்டபோதே பிரிகேடியர் மேற்கண்டவாறு கூறினார். இராணுவ பேச்சாளர் கூறியதாவது

இரு தரப்புக்குமிடையில் மோதல் இடம்பெறுகின்ற பட்சத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கவென்றே அரசாங்கத்தால் பாதுகாப்பு வலயமொன்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதிக்குள் தங்கியுள்ள பொதுமக்கள் மீது இரு தரப்பும் தாக்குதல்களை நடத்தக்கூடாது என்பதே அரசாங்கத்தினதும் உலக நாடுகளினதும் வேண்டுகோளாகவும் உள்ளது. இந்நிலையில் குறித்த பாதுகாப்பு வலயத்தின் மீது தாக்குதல்களை நடத்த வேண்டிய அவசியம் படையினருக்கு இல்லை.

புதுமாத்தளன் வைத்தியசாலையின் மீது படையினர் ஷெல் தாக்குதலை நடத்தினர் என்று சுமத்தப்படும் குற்றச்சாட்டிலும் எவ்வித உண்மையும் இல்லை. இதனை படையினர் முற்றாக மறுக்கின்றனர். படைத்தரப்பின் மீது வீணான குற்றச்சாட்டுக்களை சுமத்துவதற்காக விடுதலைப் புலிகளும் அவர்களுக்கு ஆதரவான தரப்பினரும் இவ்வாறான பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். 

பொதுமக்களை மீட்டெடுக்கும் இறுதிகட்ட நடவடிக்கையில் இராணுவம்: இலங்கை பாதுகாப்பு அமைச்சு

army-wanni.jpgஇலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள சிறிய பகுதியில் விடுதலைப் புலிகளால் மனித கேடயமாக பிடித்துவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கத்தால் கூறப்படும் மக்களை, விடுவிப்பதற்கான இறுதி மீட்பு நடவடிக்கைகளை இலங்கை இராணுவம் ஆரம்பித்துள்ளதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

அம்பலவன் பொக்கணைக்கு மேற்கேயும் புதுமாத்தளனுக்கு தெற்கேயும் உள்ள பாதுகாப்பு வலயப் பகுதியின் எல்லைகளில் இராணுவத்தினர் தமது நிலைகளை நடவடிக்கைகளுக்காக நகர்த்தியுள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகின்றது. விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்ட மண் சுவர்களுக்கு 150 மீட்டர்களுக்கும் குறைவான தூரத்தில், அங்கு அகப்பட்டுள்ள மக்களை மீட்பதற்காக இலங்கை இராணுவத்தால் ஏற்படுத்தப்பட்ட மீட்பு நிலைகள் சில அமைந்துள்ளதாகவும் இலங்கை பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.

அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வழிகளின் ஊடாக மக்களை வருமாறு கோரும் அறிவிப்புகளும் மேற்கொள்ளப்படுவதாகவும் பாதுகாப்பு அமைச்சு கூறுகின்றது.

அதேவேளை, இந்த மீட்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவாக சில மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அந்த அமைச்சு அறிவித்துள்ளது. ஆனால், இத்தகைய தாக்குதல்கள் பொதுமக்களுக்கு மேலும் ஆபத்தை விளைவிக்கும் என்று ஆய்வாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

முகாம்களிலுள்ள பெற்றோரை இழந்து பரிதவிக்கும் சிறுவரை பராமரிக்க திருச்சபை அமைப்புகள் முன்வருகை

இடைத்தங்கல் முகாம்களிலுள்ள பெற்றோரை இழந்த சிறுவர்களை விடுவித்தால் அவர்களை திருச்சபை அமைப்புகள் பராமரிக்க முடியுமென்ற விருப்பத்தை மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு யோசப், இராணுவ மற்றும் சிவில் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்து வருவதாக அம்மாவட்ட குருமுதல்வர் வணபிதா விக்டர் சோசை தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்; வன்னியில் அரச கட்டுப்பாடற்ற பகுதியிலிருந்து வருகை தந்து செட்டிகுளம் அருணாச்சலம் இடைத்தங்கல் முகாம்களிலுள்ள மக்களை புதன்கிழமை மாலை ஆயர் சென்று பார்வையிட்டார். 14 ஆயிரம் மக்களை கொண்டுள்ள இம்முகாமில் சிறியதொகை மக்களைச் சந்தித்து அவர் கலந்துரையாடினார்.

இடைத்தங்கல் முகாம் மற்றும் மருத்துவமனைகளில் கைவிடப்பட்டுள்ள முதியோர் 150 பேர் வவுனியா பம்பைமடுவிலுள்ள அன்னை திரேசா முதியோர் இல்லத்தில் ஆயரின் உத்தரவின் பேரில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மேலதிகமான 100 பேரை மன்னார் பட்டித் தோட்டத்தில் அமைந்திருக்கும் அன்பு கன்னியர் நடத்திவரும் இல்லத்தில் தங்கவைக்க முடியுமென்பதால் அவர்களை அங்கு அனுமதிக்குமாறு இராணுவ மற்றும் சிவில் அதிகாரிகளை கோரியுள்ளார்.

இதன் அடிப்படையில் 15 முதியவர்கள் அங்கு அனுப்பப்பட்டுள்ளனர். குறிப்பாக முகாம்களிலுள்ள பெற்றோரை இழந்து நிர்க்கதியாகியுள்ள சிறுவர்களை விடுவித்தால் அவர்களை திருச்சபை அமைப்புகள் பராமரிக்க முடியுமென விரும்புவதாக ஆயர் இராணுவ மற்றும் சிவில் அதிகாரிகளைக் கோரியுள்ளார். அதேபோல கால், கைகளையிழந்துள்ளவர்களை பராமரிக்க திருச்சபை அமைப்புக்கள் தயாராகவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

புதன்கிழமை புல்மோட்டைக்கு வந்தவர்களில் இரு குழந்தைகள் உட்பட 9 பேர் மரணம்

trico.gifமுல்லைத் தீவிலிருந்து கப்பல் மூலம் கொண்டுவரப்பட்டு புல்மோட்டைக் களவைத்தியசாலையில் நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை அனுமதிக்கப்பட்ட 537 காயமடைந்தவர்கள் மற்றும் நோயாளர்களில் 9பேர் உயிரிழந்துள்ளதாக மாகாண சுகாதாரத் திணைக்களம் வெளியிட்ட களநிலைவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இவர்களில் 4 ஆண்கள், 3 பெண்கள் மற்றும் 2 குழந்தைகள் என்றும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களையும் சேர்த்து புல்மோட்டைக்கு கூட்டிவரப்பட்ட பின்னர் இறந்தவர்களின் எண்ணிக்கை27 ஆக அதிகரித்துள்ளது.  கூட்டிவரப்பட்ட காயமடைந்தவர்களில் புல்மோட்டை கள வைத்தியசாலையில் 169 பேருக்குச் சிகிச்சையளிக்கப்பட்டது. இதில் 90 ஆண்கள், 55 பெண்கள், 24 குழந்தைகள் அடங்குவர், 147 பேர் (ஆண்கள் 80, பெண்கள் 49, குழந்தைகள் 18) பதவியா அரசினர் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இவர்களில் ஒருவர் கர்ப்பிணித் தாய். இவர்களுடன் வந்த உறவினர்கள் மற்றும் உதவியாளர்கள் என்று 386 பேரும் பதவியா ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

தற்போது புல்மோட்டைக் களவைத்தியசாலையில் 22 காயமடைந்தவர்களும் (10 ஆண்கள், 6 பெண்கள், குழந்தைகள் 6) 22 உறவினர்களுமே தங்கவைக்கப்பட்டுள்ளனர். வவுனியாவில் உள்ள நலன்புரி நிலையத்திற்கு 98 பேர் அனுப்பிவைக்கப்பட்டனர்.

16.3.2009 இலிருந்து 8.4.2009 வரை முல்லைத்தீவிலிருந்து புல்மோட்டைக்கு கப்பல் மூலம் கூட்டிவரப்பட்டு ஆஸ்பத்திரிகள், நலன்புரி நிலையங்களில் அனுமதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,468 ஆகும். இவர்களில் 1,164 பேருக்கு புல்மோட்டையில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிப்பதில் சிரமங்கள்

rain-wanne.jpgவடக்கில் பெய்யும் மழை காரணமாக  காயமடைந்து புதுமாத்தளன் வைத்தியசாலைக்குச் செல்கின்ற காயமடைந்தவர்களையும்,  ஏனைய நோயாளர்களையும் பொறுப்பேற்று சிகிச்சையளிப்பதில் வைத்தியர்களும், ஊழியர்களும் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.நேற்றிரவு காற்றுடன் தொடங்கிய மழை சிறிது நேர இடைவெளியின் பின்னர் தொடர்ச்சியாகப் பெய்து கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.