::யுத்த நிலவரம்

::யுத்த நிலவரம்

இலங்கையில் நடைபெறும் யுத்தம் தொடர்பான செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

புலிகளின் ஆறு படகுகள் நிர்மூலம் 25 கடற்புலிகள் பலி

navy.jpgமுல்லைத்தீவு கடற்பிரதேசத்தில் இன்று காலை கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதலொன்றில் புலிகளின் ஆறு படகுகள் நிர்மூலமாக்கப்பட்டதாகவும் 25 கடற்புலிகள் கொல்லப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

பாதுகாப்பு வலயத்திலிருந்து புலிகளின் தற்கொலைத் தாக்குதல் படகுகளும் தாக்குதல் படகுகளும் முல்லைத்தீவு கடற்பிரதேசத்துக்குள் நுழைவதை அவதானித்த கடற்படையினர் அவற்றின்மீது உடனடியாகத் தாக்குதல் நடத்தினர். இன்று அதிகாலை; 4.30 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

அதி சக்திவாய்ந்த வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட நான்கு தற்கொலைத் தாக்குதல் படகுகளும் கலிபர் துப்பாக்கிகள் பொருத்தப்பட்ட இரண்டு தாக்குதல் படகுகளையம் படையினர் தாக்கியழித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதல் காரணாக கடற்படைப் படகு ஒன்றுக்கு சிறு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் கடற்படை வீரர் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு மேலும் அறிவித்துள்ளது. 

Project Beacon இறுதி 48 மணி நேரத்தில். துருக்கியின் பாடம் இலங்கைக்கும் புலிகளுக்கும் உதவுமா! : த ஜெயபாலன்

Pirabakaran 2007Abdullah_Ocalan‘தகவல் வெளிவந்தது. அது பேர்லின் கோபன்ஹேகன் ஸ்ரொக்ஹோம் லண்டனுக்கும் தெரியவந்தது. ஹேக்கில் இருந்து ஜெரூசலம் வரை பரிஸில் இருந்து சூரிச் வரை. மக்களுடைய கோபத்தை வெளிப்படுத்துவதற்கு சரியான தருணம். மின் அஞ்சல் கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டது. கைத்தொலைபேசிகளினூடாகவும் தகவல்கள் விரைந்தது. சில மணி நேரங்களிலேயே அந்தக் கோபம் முழு உலகையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. உலகம் முழுவதும் உள்ள தூதுவராலயங்கள் ஆர்ப்பாட்டக்காரர்களின் முற்றுகைக்கு உள்ளானது. இதன் உச்ச கட்டமாக லண்டனில் உள்ள தூதரகத்திற்கு முன்னால் 15 வயதுச் சிறுமி தீக்குளிதால். அழகிய சிறுமி தீப்பிளம்பானால்.’ பெரும்பாலும் பிரித்தானியாவின் தேசியப் பத்திரிகைகள் அனைத்தினதும் முதற் பக்கத்தை பெற்றுக் கொண்டது அச்செய்தி.

இது இன்று நேற்று அல்லது கடந்த சில வாரங்களாக லண்டனிலும் உலகின் ஏனைய நாடுகளிலும் நடைபெறும் போராட்டங்கள் அல்ல. பத்து ஆண்டுகளுக்கு முன்னர் 1999 பெப்ரவரி 17யைத் தொடர்ந்து நடைபெற்ற சம்பவங்கள்.  எதிரிகளால் பயங்கரவாதி என்றும் குழந்தைகளைக் கொல்பவர் என்றும் வர்ணிக்கப்படுபவர். ஆனால் அவரது விசுவாசிகள் சூரியன் என்றும் கடவுளின் அவதாரம் என்றும் போற்றும் பிகெகெ – குர்திஸ் தொழிலாளர் கட்சியின் தலைவர் அப்துல்லா ஓச்சுலான் கைது செய்யப்பட்டதை அடுத்தே உலகம் முழுவதும் பரந்து வாழும் குர்திஸ் மக்கள் வீதிகளில் இறங்கினர். முதல் எதிரியும் ஓச்சுலானை கைது செய்த நாடுமான துருக்கியினதும் கைது செய்யப்பட்ட நாடான கென்யாவினதும் தூதரகங்கள் புலம்பெயர்ந்த குர்திஸ் மக்களின் முற்றுகைக்கு உள்ளானது.

இன்று லண்டன் உட்பட உலகின் பல பாகங்களிலும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களால் நடத்தப்படும் போராட்டங்களுக்கும் பத்து ஆண்டுகளுக்கு முன் பிகெகெ தலைவர் ஒச்சுலானை விடுவிக்கும்படி நடந்த போராட்டங்களுக்கும் உள்ள ஒரே வேறுபாடு வருமுன் காப்பு என்பதைத் தவிர வேறு பாரிய வேறுபாடுகள் கிடையாது. தமிழீழ விடுதலைப் புலிகளைப் போலல்லாது குர்திஸ் தொழிலாளர் கட்சி மார்க்ஸிச லெனினய கருத்தியலை அடிப்படையாகக் கொண்ட இயக்கம். அதனால் அமெரிக்காவினதும் அதன் சார்பு அணியினதும் கழுகுப் பார்வையில் எப்போதும் இருந்த அமைப்பு. தமிழீழத்தைப் போன்று ஒரு நாட்டிற்குள் மட்டும் அவர்களது குர்திஸ்தான் தாயகம் அடங்கவில்லை. வடக்கு ஈராக், மேற்கு ஈரான், தென்கிழக்கு துருக்கி, சோவியத்தினதும் சிரியாவினதும் சிறு பகுதியை உள்ளடக்கியதே குர்திஸ் மக்களின் தாயகமான குர்திஸ்தான். எண்ணை வளம் மற்றும் புவியியல் அமைவு காரணமாக காலத்திற்குக் காலம் வேறு வேறு நாடுகளால் புற அரசியல் சக்திகளால் குர்திஸ்தான் விடுதலைப் போராட்டம் சதிராடப்பட்டு வந்தது. (இக்கட்டுரையின் நோக்கம் இதைப்பற்றி ஆராய்வதல்ல. அது பற்றி தனியாக ஆராய்வதே பொருத்தமானது.)

பிகெகெ தலைவர் அப்துல்லா ஒச்சுலான் கென்யாவின் தலைநகர் நைரோபியில் வைத்துக் கைது செய்யப்பட்டதும் அதற்குப் பின் ஓச்சுலான் வழங்கிய வாக்குமூலங்களும் ஓச்சுலான் மீதிருந்த விம்பங்களைத் தவிடுபொடியாக்கியது. துருக்கிய சிறைகளில் இருக்கும் குர்திஸ் கைதிகள் சிறை ஆடைகளை அணிந்தாலோ அல்லது துருக்கிய தேசிய கீதத்தை பாடினாலோ அவர்களைத் துரோகிகள் என்று முத்திரை குத்தியது ஓச்சுலானின் தலைமை. ஆனால் ஒச்சுலான் தன்மீதான வழக்கை துருக்கி அரசு மீதான வழக்காக மாற்றுவதை விடுத்து எதற்காக ஆயிரக் கணக்காண குர்திஸ் இளைஞர் யுவதிகள் போராடினார்களோ உயிரிழந்தார்களோ அதனைக் கைவிட்டார். ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டார். தனது தாயகக் கோட்பாட்டைக் கைவிட்டார். போராளிகளை ஆயுதங்களைக் கைவிடும்படி கோரினார். துருக்கிய படைகளிடம் சரணடையும் படியும் கோரினார். ஒச்சுலானின் கட்டளைப்படி ஒரு பகுதியினர் ஆயுதங்களை ஒப்படைத்தனர். சரணடைந்தனர். ஓச்சுலானுடைய பழக்கங்கள் பயங்கரமானது ஆனால் ஒச்சுலான் விடவிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடும் குர்திஸ்தானுக்கான சோசலிஸக் கட்சியின் செயலாளர் கெமல் புர்கே ‘ஒரு தனிமனிதனின் வாழ்வுக்காக மக்களை தியாகம் செய்ய முடியாது’ என்று தனது கட்சியின் 25வது ஆண்டு நிகழ்வில் குறிப்பிட்டு இருந்தார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த புலிகள் தவிர்ந்த இயக்கங்கள் பெரும்பாலும் தங்களது ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டனர். ஆயுதப் போராட்டத்தை கைவிட்டவர்கள் தங்கள் இலட்சியத்திற்காக வேறு வடிவங்களில் போராடவில்லை. மாறாக அரசிடம் சரணாகதி அடைந்தனர். அன்று யாருக்காகப் போராடப் புறப்பட்டார்களோ அதே மக்களுக்கு எதிராக அரசுடன் இணைந்து தங்கள் ஆயுதங்களைத் திருப்பினர். இன்றும் மக்களுக்கு எதிராக தங்கள் ஆயுதங்களைப் பயன்படுத்துகின்றனர்.

அதே காரணத்திற்காக வே பிரபாகரன் என்ற தனிமனிதனைச் சுற்றிக் கட்டப்பட்ட சூரியத்தேவன் போன்ற விம்பங்கள் இன்று ஈடாடிப் போயுள்ளது. ‘தலைவர்’ தலைமையில் திட்டமிடப்பட்டு நடாத்தப்படும் போராட்டம் ஒரு மணி நேரத்திற்குள் சைக்கிளில் சுற்றிவரக் கூடிய எல்லைக்குள் முடங்கி நிற்கின்றது. ‘உள்ளுக்கு விட்டு அடிப்பார்கள்’ என்ற இராணுவத் தந்திரோபாயத்தை முழுவதுமாக நம்பியிருந்த புலம்பெயர்ந்த புலி உறவுகளுக்கு ஏப்ரல் 5ல் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து வன்னியில் இருந்து வந்த கட்டளைகள் யதார்த்தத்தைப் புரிய வைத்தது. மறுநாள் ஏப்ரல் ஆறாம் திகதி அவசரமாகக் கூடி உடனடியாக உலகெங்கும் போராட்டங்கள் முடக்கிவிடப்பட்டது. (தலையோடு வந்தது தலைப்பாகையோடு போனது. ‘தலைவர் எஸ்கேப்’ : த ஜெயபாலன்)

ஓச்சுலான் அன்று கைது செய்யப்பட்ட சூழலும் புலிகளின் தலைமை இன்று சுற்றி வளைக்கப்பட்ட சூழலும் ஒன்றல்ல. (வே பிரபாகரன் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதயில் இருந்து ஏற்கனவே வெளியேறி விட்டதாக முன்னர் தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனாலும் வே பிரபாகரன் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ளாரா இல்லையா என்பது இன்றும் மில்லியன் டொலர் கேள்வியாகவே உள்ளது.) இன்னும் 50000 மக்கள் வரையும் பணயமாக வைக்கப்பட்டு உள்ளனர். இலங்கை அரச இயந்திரம் புலிகளின் தலைமையை அழிப்பதற்கு அல்லது அதற்கான முயற்சிக்கு என்ன விலையையும் எத்தினை ஆயிரம் உயிர்களையும் பலிகொடுக்கத் தயார் நிலையிலேயே உள்ளது. இன்று புலிகளால் பணயம் வைக்கப்பட்டு உள்ளவர்கள் தமிழர்கள் என்பதால் இலங்கை அரசுக்கு அவர்களைப் பலிகொடுப்பதிலும் எவ்வித உறுத்தலும் இருக்கவில்லை. இதுவரை 7000க்கும் அதிகமான பொது மக்கள் கடந்த மூன்று மாதங்களில் கொல்லப்பட்டு உள்ளதாக ஐ நா மதிப்பிட்டு உள்ளது. 14 ஆயிரம் பேர் காயங்களுக்கு உள்ளாகி உள்ளனர்.

இலங்கை அரச கூறுவது போல் வே பிரபாகரன் உட்பட புலிகளின் தலைமை அப்பகுதியில் இருந்தால் அது அப்பகுதியில் பணயம் வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு மிக மிக மோசமான துரதிஸ்டமாக அமையலாம். வரலாறு காணாத மனித அவலம் ஒன்று அங்கு நிகழும் அச்சம் உள்ளது. புலிகளின் தலைமைக்கு நிகழும் ஆபத்தின் எதிரொலியாக யுத்தப் பகுதிக்கு வெளியே தயார் நிலையில் உள்ள புலிகளின் உறுப்பினர்கள் எல்லைப் புற சிங்களக் கிராமங்களில் மோசமான படுகொலைகளை மேற்கொள்ளும் வாய்ப்பும் அது இனக்கலவரம் ஒன்றுக்கு இட்டுச்செல்லும் சூழலும் உள்ளது.

வன்னி மக்கள் தற்போது இரு கொலை இயந்திரங்களுக்கு இடையே மாட்டுப்பட்டு உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத் தவிக்கின்றனர். இரு புறம் இலங்கை இராணுவ இயந்திரம். ஆண்டாண்டு காலமாக அவர்கள் அறிந்த எதிரி. அந்த எதிரி இவ்வாறு நடந்து கொள்வான் என்பதை அவர்கள் அறிந்தே இருந்தனர். அதனால் அந்த எதிரியைக் கையாளவும் அவர்கள் தெரிந்திருந்தனர். கடந்த அறுபது வருடங்களாக் அதனைச் செய்தும் அதனிடம் இருந்து தப்பியும் வந்துள்ளனர். ஆனால் தங்போது தங்கள் சூரியபகவானாகவும் கடவுளின் அவதாரமாகவும் கண்டவர்கள் தங்களைப் பணயம் வைத்த போதும் அவர்களின் கொலை இயந்திரத்தை தங்களுக்கு எதிராகத் திரும்பிய போதும் அவர்களால் அதனைக் கையாள முடியவில்லை.

இந்நிலையை புலம்பெயர்ந்த நாடுகளில் நடைபெறும் போராட்டங்கள் வெளிப்படுத்தவில்லை. வன்னி மக்களின் நலன்களை அப்போராட்டங்கள் முன்னெடுக்கவில்லை. மாறாக அப்போராட்டங்கள் சில சமயம் வன்னி மக்களின் உணர்வுகளுக்கு மாறாகவே அமைந்துள்ளது. வன்னி மக்களின் அவலங்கள் மீது ஒரு அரசியல் சதுரங்கம் நடத்தப்படுகிறது. அதனை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு இலங்கை அரச இயந்திரம் தன் இனவாத நடவடிக்கைகளைக் கூர்மைப்படுத்தி உள்ளது. ஸ்தாபன மயப்படுத்தப்பட்ட இனவாதத்தையுடைய அரச இயந்திரம் மனிதாபிமான நடவடிக்கைகளை வெறும் பிரச்சாரத்திற்காகவே மேற்கொள்கிறது. இலங்கை அரசு பயங்கரவாதிகளாக வர்ணிக்கும் புலிகள் சிங்கள மக்களைப் பணயமாக வைத்திருந்தால் இதே மனப்பாங்குடன் அவர்களை நடத்தியிருக்குமா என்ற கேள்வி ஒவ்வொரு சிறுபான்மைச் சமூகத்திடமும் எழுவது தவிர்க்க முடியாதது.

அரசினுடைய செயற்பாடுகள் ஒருபுறம் இருக்க புலம்பெயர்ந்த புலி ஆதரவுத் தமிழர்களும் இந்த யுத்தப் பிராந்தியத்தில் இருந்து வெளியேறுபவர்கள் விடயத்தில் பாராமுகமாகவே உள்ளனர். இன்னும் சொல்லப் போனால் அவர்கள் யுத்தப் பிரதேசத்தில் இருந்து வெளியேறி வந்ததை அவர்கள் துரோகத்தனமாகவே பார்க்கின்றனர். ஆனால் அதனை வெளிப்படையாகத் தெரிவிக்க முடியாதவர்களாக உள்ளனர். ஆரம்பத்தில் இருந்தே இந்த புலி ஆதரவு அமைப்புகள் ‘வன்னி மண் அவர்களின் பூர்வீக மண்’ என்ற பிரச்சாரத்தை மையப்படுத்தி அங்கிருந்து அவர்களை வெளியேறவிடாது தடுக்கும் புலிகளுக்கு கருத்தியல் அரணை உருவாக்கினர். அப்படி வெளியேறுபவர்கள் இராணுவத்தால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட வேண்டும், கொல்லப்பட வேண்டும், பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட வேண்டும், கருக்கலைப்புச் செய்யப்பட வேண்டும் என்று விரும்பினர். இவற்றையெல்லாம் ஒரு இனவாத அரச இயந்திரம் செய்யத் தயங்காது. ஆனாலும் சர்வதேசத்தில் தனது முகத்தைக் காப்பாற்றிக் கொள்ள இலங்கை அரச இயந்திரம் சில முகத்தைக் காப்பாற்றும் விதிமுறைகளை பின்பற்ற முயல்வதை மறுப்பதற்கில்லை. ஆனால் அரசின் எதிர் நடவடிக்கைகளில் மட்டும் தங்கி இருந்து அரசியல் செய்து றிம்மில் சைக்கிள் ஓடுவதாகத்தான் புலிகளின் பிரச்சாரங்கள் உள்ளது.

இலங்கை அரசினுடைய முன்னெடுப்புகள் ஒன்றும் புலிகளுக்குக் குறைந்தது அல்ல. பிகெகெ தலைவர் அப்துல்லா ஓச்சுலான் கைது செய்யப்பட்டதும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்களும் இலங்கை அரசுக்கும் ஒரு பாடமாக அமையும். ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் சமூசத்தின் ஒரு தனிமனிதனையோ ஒரு அமைப்பையோ பணிய வைப்பதன் மூலம் அச்சமூகத்தின் ஒடுக்குமுறைக்கு எதிரான உள்ளுணர்வைப் பணிய வைத்துவிட முடியாது. ஓச்சுலானாக இருக்கலாம் பிரபாகரனாக இருக்கலாம் அவர்கள் சார்ந்த சமூகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட ஒடுக்குமுறையின் பக்க விளைவுகளே அவர்கள். ஒச்சுலான் கைது செய்யப்பட்டு பத்து ஆண்டுகளாகியும் இன்னமும் துருக்கிய அரசுக்கு எதிரான போராட்டங்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. இராணுவத் தாக்குதல்களும் நிகழ்கிறது. அதற்குக் காரணம் தொடர்ச்சியாக ஒடுக்கப்பட்டு வரும் குர்திஸ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய ஒரு அரசியல் தீர்வை துருக்கி முன்வைக்கவில்லை. குர்திஸ் மக்களுக்கு நம்பிக்கையூட்டவில்லை. ஒச்சுலான் கைது செய்யப்பட்ட ஆரம்ப காலங்களில் ஒருவகை ஸ்தம்பிதம் ஏற்பட்டு இருந்தாலும் இப்போது மீளவும் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் தலைதூக்குகின்றது. ஒச்சுலான் ‘ஆயுதங்களைக் கீழே போடுங்கள்! சரணடையுங்கள்!’ என்று சொன்னாலும் அதற்கு பணியாது பிகெகெயின் சில தலைவர்கள் ஆயுத நடவடிக்கையைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.

அந்த முல்லைத்தீவுச் சிறுநிலப்பரப்பில் எதுவும் நடக்கலாம். அங்கிருந்து பெரும்பாலும் பிரபாகரன் தப்பி இருக்கலாம். சிலசமயம் இறுதி மூச்சுவரை போராடுவேன் என்று போராடலாம். அல்லது சரணடையலாம். அதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. எது எப்படியானாலும் இந்த பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் இலங்கை அரசு தமிழ் மக்கள் மீது மிக மோசமான ஆறாத வடுவை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை அரசு தனது ஸ்தாபனமயப்படுத்தப்பட்ட இனஒடுக்குமுறையைக் களைந்து தமிழர்களுடைய அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய அரசியல் தீர்வை முன்வைக்கத் தவறினால் இந்த நச்சுச் சூழற்சி மீண்டும் நிகழ்வதைத் தவிர்க்க முடியாது. பிரபாகரனும் புலிகளும் மட்டுமல்ல பிரச்சினை ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் மக்களது அரசியல் அபிலாசைகளைத் தீர்க்கக் கூடிய ஒரு தீர்வை முவைக்க முடியாத இலங்கை அரசும் அரச இயந்திரமும் முக்கியமான பிரச்சினை.

இனிமேல் ஏற்படப் போகும் மனித அவலங்களுக்காவது முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஆயுதங்களை சர்வதேச கண்காணிப்பில் ஒப்படைத்து தங்கள் வரட்டுத்தனமான ஏகபிரதிநிதித்துவக் கோசத்தைக் கைவிட்டு பேச்சுவார்த்தைக்குச் சென்றிருக்க வேண்டும். இலங்கை அரசும் அரசியல் தீர்வு ஒன்றின் மூலம் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்தி அரசியல் தீர்வை முன்வைத்து பேச்சுவார்த்தையை ஆரம்பித்திருக்க முடியும். இவற்றின் மூலம் பல்லாயிரக்கணக்காண உயிரிழப்புகளைத் தடுத்திருக்க முடியும். அரசாக இருந்தாலும் புலிகளாக இருந்தாலும் தங்கள் முகத்தைக் காப்பாற்றிக் கொண்டு இரு தரப்பும் வெற்றிகொண்டதான நிலையை உருவாக்கி தற்போதுள்ள இறுக்கத்தில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்வது மிகவும் கடினமாகி உள்ளது.

இலங்கை அரசு இந்தியா உட்பட இணைத்தலைமை நாடுகளுடன் உடன்பட்ட புரஜக்ற் பீக்கன் திட்டத்தின் இறுதி 72 மணித்தியாலங்ளை எதிர்நோக்கி உள்ளது. அதனை இலங்கை அரசு இன்னும் சில தினங்களில் இந்த முல்லை யுத்தம் முடிவுக்கு வரும் என்கிறது. பா சிதம்பரம் இன்னும் இரு தனங்களில் நல்ல முடிவை எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கின்றார். ஆனால் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா நடேசன் ஏப்ரல் 28 இலங்கை அரசபடைகள் பல்முனைத் தாக்குதலை தொடங்கிவிட்டனர் என்றும் புலம்பெயர்ந்த தமிழர்களை வீதிகளில் இறங்கிப் போராடும்படியும் அழைத்துள்ளார். இளையவர்களுக்கு விடுக்கப்பட்ட மாணவ அமைப்பு ஒன்றின் அறிக்கை இன்று ஏப்ரல் 29 திகதியை குறிப்பாகச் சுட்டிக்காட்டி உள்ளது.

2005 டிசம்பரில் பதவிக்கு வந்த ராஜபக்ச அரசால் ஒஸ்லோவில் இணைத் தலைமை நாடுகளுக்கு கையளிக்கப்பட்ட 5 ஆண்டுகளில் புலிகளை துடைத்தழிக்கும் திட்டமே புரஜக்ற் பிக்கன். (Project Beacon – இறுதிக் கட்டத்தில்!! புலிகளின் தலைமை ஆபத்தில்!!! : த ஜெயபாலன்) பாதுகாப்பு அமைச்சுச் செயலர் கோதபாய ராஜபக்சவாலும் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவாலும் வடிவமைக்கப்பட்ட இந்த இராணுவத் திட்டத்தின் மூன்றாவது வருட நடவடிக்கை இவ்வாண்டு ஏப்ரல் 30ல் இன்னும் 48 மணி நேரத்தில் முடிவுக்கு வருகிறது. இத்திட்டத்தின்படி குறிப்பிட்ட கால எல்லைக்குள் இலங்கை அரசு தனது இராணுவ நடவடிக்கைகளை முடித்துள்ளது. இந்த மூன்றாவது ஆண்டின் முடிவில் அதாவது ஏப்ரல் 30ல் புலிகளுடைய கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் அனைத்தையும் மீட்க வேண்டும் என புரஜகற் பீக்கனில் திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி அடுத்த 48 மணிநேரம் யுத்தப் பகுதியில் உள்ள மக்களைப் பொறுத்தவரை மிக முக்கியமானதாகவும் அதே சமயம் மிகவும் ஆபத்தானதாகவும் அமைய உள்ளது.

700 மீற். நீளமண்அணை படையினரால் மீட்பு: வலைஞர் மடத்தில் புலிகளின் குண்டுலொறி தாக்கி அழிப்பு

udaya_nanayakkara_brigediars.jpg வலைஞர் மடத்திற்கு தெற்கே இர ட்டை வாய்க்கால் பிரதேசத்தில் புலி களால் அமைக்கப்பட்டிருந்த 12 அடி உயரமும் 700 மீற்றர் நீளமுமான மற்று மொரு பாரிய மண் அணையை பாது காப்புப் படையினர் கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

வலைஞர்மடம் பகுதியில் நிலை கொண்டு ள்ள படையினரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த வந்த புலிகளின் வெடி மருந்துகள் நிரப்பப்பட்ட லொறி யொன் றின் மீது படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், இந்த தாக்குதல்களில் அந்த லொறி முற்றாக வெடித்துச் சிதறியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சிறிய ரக ஆயுதங்களைப் பாவித்த வண்ணம் பாதுகாப்பு வலயத்தில் எஞ்சியுள்ள பிரதேசத்தை நோக்கி முன்னேறி வரும் இராணுவத்தின் 58வது படைப் பிரிவினரே இந்த மண்அணையை கைப்பற்றியுள்ளதாக பிரிகேடியர் மேலும் குறிப்பிட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக இராணுவப் பேச்சாளர் மேலும் தகவல் தருகையில்; பாதுகாப்பு வலயத்தில் எஞ்சியுள்ள பிரதேசத்தில் புலிகளிடம் சிக்கியுள்ள சிவிலியன்களை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர் நேற்று அதிகாலை மற்றுமொரு பாரிய மண்அணையை கைப் பற்றியுள்ளனர்.

இந்த மண்அணையைக் கைப்பற்றிய சில நிமிடங்களில் படையினரை நோக்கி லொறி ஒன்று வேகமாக வந்துள்ளது. அந்த லொறி வந்த நோக்கத்தை புரிந்து கொண்ட படையினர் அதன் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

முற்றிலும் சி-4 ரக அதி சக்தி வாய்ந்த வெடிமருந்துகள் நிரப்பப்பட்டிருந்த அந்த லொறி வெடித்துச் சிதறியுள்ளது. இரட்டை வாய்க்கால் பிரதேசத்திலுள்ள மண் அணையை கைப்பற்றிய படையினர் அந்தப் பிரதேசத் திலிருந்து கொல்லப்பட்ட புலிகளின் ஏழு சடலங்கள், எம்.பி. எம்.ஜி-01, தொலைத் தொடர்பு கருவிகள் –3 மற்றும் உபகரணங்களை படையினர் மீட்டெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்தவர்களுக்கு உதவுமாறு தொடர்ந்தும் பொதுமக்களிடம் கோரிக்கை

flee0009.jpg
வன்னியிலிருந்து படை நடவடிக்கை காரணமாக வவுனியா வந்தவர்களுக்கு உணவு மற்றும் உடைகளை வழங்கி உதவுமாறு தொடர்ந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இடம்பெயர்ந்து வந்த மக்களில் பலருக்கு மாற்று உடைகள் இல்லை. சமூக நிறுவனங்கள், வசதி படைத்தவர்கள் உடைகளை அன்பளிப்பு செய்யுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  பெண்கள் சிறுவர்களுக்குரிய ஆடைகள் அதிகளவு தேவைப்படுகின்றது. சவக்கார வகைகள், துவாய், படுக்கை விரிப்புக்கள், பற்பசை. தூரிகை, முகச்சவரம் செய்வதற்குரிய பொருட்கள், சுகாதார துவாய் போன்ற பொருட்கள் அதிகளவில் தேவைப்படுவதாக நலன்புரிநிலைய பொறுப்பதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குடிநீருக்கும் பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது. சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றபோதிலும் மனநிலை பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆறுதல் சொல்ல எவருமே கிடையாது. சிறுவர்களுக்கு போசாக்கு உணவுகளும் தேவைப்படுகின்றது. சில தற்காலிக நலன்புரிநிலையங்களில் அடிப்படைவசதிகள் போதுமானதாக இல்லை எனவும் குறைகூறப்படுகின்றது.

‘இடர்படும் மக்களின் துயர் துடைப்போம்’ – அமைச்சர் டக்ளஸ் அவசர கோரிக்கை

Douglas Devananda வன்னியிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு அவசர நிவாரண உதவிகளைச் செய்யுமாறு சமூக சேவைகள், சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டு கோள்விடுத்துள்ளார். இடர்படும் மக்களின் துயர் துடைப்போம் என்ற தொனிப் பொருளின் கீழ் நிவாரண உதவிகளை வழ ங்க முன்வருமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரசாங்கமும், பல்வேறு தொண்டு நிறுவனங்களும் இவர்களுக்கான உதவிப் பணிகளை முன்னெடுத்து வருகின்றபோதிலும், எதிர்பாராத அளவில் பெரும் எண்ணிக்கையில் வந்திருக்கும் இந்த மக்களுடைய அவசர உதவிகளை உடனடியாக முன்வந்து செய்யுமாறு மனிதாபிமான உள்ளம் கொண்ட அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

இவர்களுக்கான அவசர உதவிப் பொருள்களான பிஸ்கட் வகைகள், போத்தலில் அடைக்கப்பட்ட தண்ணீர், பிற அனைத்து வகை உணவுப் பொருள்கள் மற்றும் உடு புடவைகள், பாய், தலையணை போன்றவற்றை, இல. 61 இசிபத்தான மாவத்தை, கொழும்பு 5 இல் அமைந்துள்ள, சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சு அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

சகல அச்சு மற்றும் இலத்திரணியல் ஊடகங்களும் நிவாரண சேகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

கனரக ஆயுதங்கள் பாவிப்பதில்லை என்ற உறுதிமொழியை அரசு நடைமுறையில் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் – ஜோன் ஹோம்ஸ் தெரிவிப்பு

john_holmes.jpgவடக்கில் மோதல்கள் இடம்பெறும் பகுதியிலுள்ள பொதுமக்கள் உயிராபத்தை எதிர்நோக்கியிருக்கும் நிலையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதல்களில் கனரக ஆயுதங்களைப் பாவிப்பதில்லையென்ற புதிய வாக்குறுதியை இலங்கை அரசாங்கம் நடைமுறையில் செய்து காட்ட வேண்டுமென ஐ.நா. தெரிவித்துள்ளது.

வன்னியில் சிக்கியிருக்கும் மக்களை மீட்பதற்கான நடவடிக்கையில் கனரக ஆயுதங்கள் பாவிக்கமாட்டோம் என இலங்கை அரசாங்கம் தெரிவித்திருப்பது தொடர்பிலேயே மனிதாபிமான விடயங்களுக்கான ஐ.நா. வின் உதவிச் செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ் நேற்று திங்கட்கிழமை இந்தக் கருத்தை வெளியிட்டிருப்பதாக ரொய்ட்டர் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

முன்னரை போன்ற நிலைமை ஏற்பட்டு விடக் கூடாதென்றே நான் அஞ்சுகிறேன். கனரக ஆயுதங்களை பாவிப்பதில்லையென்ற யோசனையை நேர்மையாக மதித்து செயற்படுவார்களென நான் நம்புகிறேன் என்று ஜோன் ஹோம்ஸ் தெரிவித்திருக்கிறார்.  அரசாங்கம் கூறியதை தற்போது மதிக்கிறதா என்பது இதில் மிகவும் முக்கியமானதென்றும் அவர் கூறியிருக்கிறார்.

இரு நாட்கள் விஜயமாக இலங்கை வந்திருந்த ஜோன் ஹோம்ஸ் வவுனியா முகாம்களுக்குச் சென்று திரும்பியதன் பின்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவையும் சந்தித்துப் பேசியிருந்தார். இதன் பின்னர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே ஹோம்ஸ் மேற்கண்ட கருத்துகளை வெளியிட்டிருக்கிறார்.

இவற்றுக்கமைய களத்தில் என்ன நடக்கிறது என்பதை நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. கூறியது நடைபெற்றால் மோதல் நிலைமைகள் வெகுவாக குறைவடையும் என நான் நம்புகிறேன் என்று ஹோமஸ் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம் வன்னியிலிருந்து பெருந்தொகை மக்கள் அரச கட்டுப்பட்டுப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்ததையடுத்து அங்கு 20 ஆயிரத்திற்கும் குறைவான மக்களே எஞ்சியிருப்பதாக அரசாங்கம் தெரிவித்து வரும் நிலையில் அரச கட்டுப்பாடற்ற பகுதியில் இன்னும் 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் எஞ்சியிருக்கின்றனர் என்பதே ஐ.நா.வின் மதிப்பீடென்று ஹோம்ஸ் தெரிவித்திருக்கிறார்.

அரசாங்கத்தினது புள்ளி விபரங்களிலும் பார்க்க எமது புள்ளிவிபரங்கள் சரியானவை? என்று கூறியிருக்கும் அவர், 70 ஆயிரத்துக்கும் குறைவான மக்களே அங்கு இருப்பதாக பெப்ரவரி மாத நடுப்பகுதியில் கொழும்பு தெரிவித்திருந்ததையும் சுட்டிக் காட்டியுள்ளார். அத்துடன், இந்த மக்கள் உயிராபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறியிருகிறார்.

இதேநேரம், ஆயிரக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கின்ற போதிலும், ஐ.நா.புள்ளிவிபரங்களென ஜனவரி மாத இறுதியிலிருந்து 6,500 பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக வெளியான தகவல்களை உறுதிப்படுத்த அவர் மறுத்து விட்டதாகவும் ரொய்ட்டர் செய்திச் சேவை தெரிவித்திருக்கிறது. அத்துடன், அது ஐ.நா.வின் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களென கூற போதிய தெளிவான தகவல்கள் இல்லையென்றும் ஹோம்ஸ் இதன்போது கூறியிருக்கிறார்.

விடுதலைப் புலிகளுடான பேச்சுக்கள் பயனுடையதாக அமையவில்லை. நான் தொடர்பு கொண்டிருந்த போது, பொது மக்களை விடுவிப்பது பற்றியோ அல்லது ஆயுதங்களை கீழே வைப்பது பற்றியோ அவர்கள் உரிய பதிலெதுவும் அளிக்கவில்லை. தப்பிச் செல்ல முயற்சிக்கும் மக்கள் மீது விடுதலைப் புலிகள் துப்பாக்கிச் சூடு நடத்துவதாகவும், ஏனையவர்களை பலவந்தமாக படைக்கு சேர்ப்பதாகவும் பல்வேறு சாட்சியங்கள் தெரிவிக்கின்ற போதிலும், மக்கள் அவர்களது தெரிவின் பேரிலேயே தங்களுடன் இருப்பதாக புலிகள் கூறுகின்றனர்.

இதேநேரம், மோதல் இடம்பெறும் பகுதிகளுக்கு ஐ.நா.மனிதாபிமான அணியொன்றை அனுமதிக்க வேண்டுமென கடந்த வாரம் ஐ.நா.செயலாளர் நாயகம் பான்கீ மூன் விடுத்த வேண்டுகோள் தொடர்பாகவோ, அகதி முகாமிலுள்ள ஐ.நா.வின் உள்நாட்டு பணியாளர்களை விடுவிப்பது குறித்தோ எந்த ஒரு உடன்பாடும் எட்டப்படவில்லை என்றும் ஜோன் ஹோம்ஸ் இதன்போது மேலும் தெரிவித்திருப்பதாக ரொய்ட்டர் செய்தி சேவை தெரிவித்துள்ளது.

வன்னி மக்களுக்காக பௌத்த பிக்குகள் பாத யாத்திரை

buddhist.jpgவன்னி மக்களுக்காக பௌத்த பிக்குகள் பாத யாத்திரையொன்றை நாளை கல்கிஸ்சையிலிருந்து ஹங்குலான வரை மேற்கொள்ளவுள்ளனர். இந்த பாத யாத்திரையில் 200 பௌத்த பிக்குகள் கலந்து கொள்ளவுள்ளனர். இடம்பெயர்ந்து வந்துள்ள வன்னி மக்களுக்காக நிவாரண உதவி சேகரிப்பதே பௌத்த பிக்குகளின் பாத யாத்திரையின் நோக்கமாகும்.

பிரபாகரனின் மறைவிடத்தை நெருங்குகின்றது இராணுவத்தின் 58 ஆவது படையணி?

images-army.jpgபுலிகளின் தலைவர் பிரபாகரனின் மறைவிடத்தை இராணுவத்தின் 58 ஆவது படையணி நெருங்கியுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

புலிகளின் பிடியிலுள்ள பொது மக்களை மீட்கும் மனிதநேய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இராணுவத்தின் 53 ஆம் 58 ஆம் படையணியினர் கரையாமுள்ளி வாய்க்கால் பகுதியை நோக்கி முன்னேறியுள்ளனர். பிரபாகரனின் மறைவிடத்திலிருந்து 3.5 கிலோ மீற்றர் தொலைவில் இராணுவத்தின் 58 ஆவது படையணி இப்போது நிலைகொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பிரபாகரனும் அவரது மிக நம்பிக்கைக்கு உரியவர்களான பொட்டு, சுசை, பானு என்போர் வெள்ளாமுள்ளி வாய்க்கால் பகுதியில் மிகப் பாதுகாப்பான பதுங்கு குழிக்குள் இருப்பதாக பாதுகாப்பு வலயத்தில் இருந்து வெளியேறி வந்து இராணுவத்திடம் சரணடைந்த புலி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை விமானப் படையின் ஆளில்லா விமானம் விடுவிக்கப்படாத பகுதியை மிக நுணுக்கமாக அவதானித்து வருகிறது. அதேவேளை கடற்படையினரும் வலைஞர் மடத்தில் இருந்து வட்டுவாகல் பகுதியில் உள்ள 7 கி.மீ கடற் பிராந்தியத்தை இடைவிடாது கண்காணித்து வருகின்றனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளில் தமிழர்கள் அனைவரும் உடனடியாக வீதியில் இறங்கி போராடுங்கள்! பா. நடேசன் அவசர வேண்டுகோள்

nadesan-10.jpgபாதுகாப்பு வலயத்துக்குள் பிரவேசிப்பதற்கு தரைவழியாகவும் கடல்வழியாகவும் பலமுனைத் தாக்குதலினை சிறிலங்கா படையினர் இன்று தொடங்கியிருக்கின்றனர்.  இந்த பெரும் இன அழிவைத் தடுத்து நிறுத்த புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளை பாகு வேறுபாடு இன்றியும் வயது வேறுபாடு இன்றியும் வீதியில் இறங்கி உடனடியாக போராடுங்கள் எனவும் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

teelamanavar.jpgபுலம்பெயர் நாடுகளில் உள்ள எம் உறவுகளே! ஒன்று குவிந்து தமிழர் பலத்தையும், தமிழ் இன அழிப்பையும் வெளிக்காட்டுங்கள்: இலங்கைத் தழிழ் மாணவர் ஒன்றியம்

புலம் பெயர் தமிழர்களே!

இளையோர்கள!

இயலுமானவரை உங்களது வழமை நடவடிக்கைகளை நிறுத்தி, தங்கள், தங்கள் நாடுகளில் ஒன்று குவிந்து தழிழர் பலத்தையும், தழிழர் மீதான இன அழிப்பையும் வெளிக்காட்டுங்கள். என இலங்கை தமிழ் மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
 
சர்வதேச அன்புற்கினிய உறவுகளே !…

இளையோர்களே !…

சர்வதேசத்திலே தழிழர் போராட்டம் சார்பாக சில மாற்றங்கள் நிகழ்கின்றன. அது உங்களால் ஏற்படுத்தப்பட்டவை.

தழிழர் வரலாற்றை சிங்கள பயங்கரவாதம் அழித்தொழிக்கும் இறுதிக்கட்டத்தில் நிற்கின்றோம். இது சிங்கள பயங்கரவாதம் தழிழர் மீது செய்கின்ற மாபெரும் இன அழிப்பாய் காட்சியழிக்கின்றது.

இன்னும் சில நாட்களில் அதாவது எதிர்வரும் 29ம் திகதிக்கு முன்னர் தழிழர் போராட்டத்தையும், தழிழ் இனத்தையும் அழித்து விடுவேன் என்று மகிந்த கம்பனியின் கதாநாயகன் கங்கணம் கட்டி நிற்கின்றார்.

ஈழத்திலே எதிர்வரும் சில தினங்கள் தழிழர் போராட்ட வரலாற்றில் மிக முக்கிய தினங்களாய் இருக்கின்றது. தமது தாயக மண்ணிலே உணவில்லாமல், உறக்கம் இல்லாமல், காய்ந்து, கறுத்து, மெலிந்து, எமது உரிமையை பாதுகாக்க தங்கள் உயிரை துட்சமாய் நினைத்து எமது விடுதலைப் போராட்ட வீரர்கள் ஒட்டுமொத்த தழிழ் இனத்துக்காயும் ஏறத்தாழ இரண்டு இலட்சம் புதைகுழிகளுக்கு எதிராயும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

குருதியில் துவைந்து நின்று சிங்கள் எதிரிக்கெதிராய்போரிடுகின்றனர். எமது உறவுகளே இன்னும் சில நாட்களுக்கு உலகின் அனைத்து நாடுகளிலும் உங்களது குரலை ஓங்கி ஒலிக்கச் செய்யுங்கள்.

இயலுமானவரை உங்களது வழமை நடவடிக்கைகளை நிறுத்தி, தங்கள், தங்கள் நாடுகளில் ஒன்று குவிந்து தழிழர் பலத்தையும், தழிழர் மீதான இன அழிப்பையும் வெளிக்காட்டுங்கள்.

புலம் பெயர் தழிழாகளே !….

இளையோர்களே !….

உங்களது நாடுகளில் நடத்தப்படும் போராட்டத்தில் அன்னாட்டை சேர்ந்த ஒரு தழிழரேனும் குறையாமல் உங்களது குரலை ஓங்கி ஒலிக்கச் செய்யுங்கள் சிங்கள பயங்கரவாதத்திடமிருந்து எமது உயிரையும், உரிமையையும் பாதுகாக்க ஒன்று திரளுங்கள்.

இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்கல் – சர்வதேச நாடுகளிடமிருந்து நிதியுதவிபெற அரசு முடிவு

flee0009.jpgஇடம் பெயர்ந்த மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக ஐ. நா. வின் ஒத்துழைப்புடன் சர்வதேச நாடுகளிடம் நிதியுதவிகளைப் பெற்றுக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை அடுத்தவாரம் மேற்கொள்ளவுள்ளதாக இடர்முகாமைத்துவ, மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த நிதியுதவியைப் பெற்றுக் கொள்வதற்கான ஒத்துழைப்பினை வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் சபை இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் இலங்கை வந்துள்ள ஐ. நா. பிரதிநிதி இதற்கான இணக்கப்பாட்டைத் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் சமரசிங்க தெரிவித்துள்ளார். தாம் ஐ. நா. வின் மனித உரிமைத் தொடர்பான பிரதிச் செயலாளர் நாயகம் சேர் ஜோன் ஹோம்சுடன் இது பற்றி விரிவாகப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தொடர்பான பிரதிச் செயலாளர் நாயகம் சேர் ஜோன் ஹோம்ஸ் நேற்று வவுனியாவிற்கு சென்று நிலைமைகளை நேரில் அவதானித்துள்ளார்.

கொழும்பிலிருந்து நேற்று விசேட விமானம் மூலம் வவுனியாவுக்குச் சென்ற அவர் வவுனியாவிலிருந்து ஹெலிகொப்டர் மூலம் ஓமந்தை மெனிக்பாம், செட்டிக்குளம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று இடம்பெயர்ந்த மக்களை நேரில் சந்தித்துள்ளார்.

அமைச்சர் ரிசாட் பதியுதீன், வவுனியா அரச அதிபர், பாதுகாப்புப் படை அதிகாரிகள் சகிதம் இடம்பெயர்ந்தோர் தற்காலிகக் குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்ற அவர் அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்துள்ளார். இதன்போது இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வரும் வசதிகள் சம்பந்தமாக அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் அவருக்கு விளக்கியுள்ளனர்.

யுத்தப் பிரதேசத்திலிருந்து அரச பாதுகாப்புப் பிரதேசத்துக்கு வரும் மக்கள் ஓமந்தை இடைத்தங்கல் முகாமில் தம்மைப் பதிவு செய்தே நலன்புரி நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர். இப்பதிவு நடவடிக்கைகளையும் ஜோன் ஹோம்ஸ் அவதானித்துள்ளார்.