புலம்பெயர் வாழ்வியல்

புலம்பெயர் வாழ்வியல்

தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் அவர்களுடைய வாழ்வியல், சமூக, அரசியல் தொடர்பான செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

தமிழ் போராட்டங்கள் – ஜி20 போராட்டங்கள் போன்றவை தடை செய்யப்படலாம்!!!

Steve_O_Connellலண்டனில் இடம்பெற்ற தமிழ் மக்களின் போராட்டம் மற்றும் ஜி20 போன்ற பெரும்  போராட்டங்களை மெற்றோ பொலிட்டன் பொலிஸார் தடைசெய்யவதற்கான தெரிவு அவர்களுக்கு இருப்பதாக அமைச்சரவை உறுப்பினர் ஸ்ரீவ் ஓ கொன்னல் தெரிவித்துள்ளார். இவர் மெற்றோ பொலிட்டன் பொலிஸ் ஆணையகத்தின் குரொய்டன் – சட்டம் பகுதிப் பிரதிநிதியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. இவர் இக்கருத்தை யூலை 22ல் இடம்பெற்ற இக்குழுவின் சந்திப்பில் வெளிப்படுத்தி இருந்தார்.

பிரித்தானியாவில் ஆட்சியில் உள்ள கொன்சவேடிவ் – லிபிரல் டெமொகிரட் கூட்டாட்சி மெற் பொலிஸ் சேவைகளுக்கான நிதி ஒதுக்கீடு 25 வீதத்தால் குறைத்துள்ளது. அதனால் மெற் பொலிஸ் தனது சேவைகளை மட்டுப்படுத்திக் கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளது. அதனால் 7.5 மில்லியன் பவுண் செலவை ஏற்படுத்திய தமிழ் மக்களினால் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்கள்; ஜி20 போராட்டங்கள் என்பனவற்றை எதிர்காலத்தில் அனுமதிக்க முடியுமா என்ற ஐயம் எழுப்பப்பட்டு உள்ளது.

‘தற்போதுள்ள நெருக்கடியான  சூழலில் வாழ்பவர்களை எது முக்கியம் எனக் கேட்டால் அவர்கள் இளைஞர்களின் வன்முறை, கடத்தல், பாதுகாப்பு என்பனவே முக்கியமானது எனப் பதிலளிப்பார்கள். போராட்டங்களைக் கவனிப்பது முக்கிய பொறுப்பாக இருக்க முடியுமா?’ என்று ஸ்ரீவ் ஓ கொன்னல் கேள்வி எழுப்பி உள்ளார்.

‘நான் ஒட்டுமொத்தமாக அனைத்து போராட்டங்களையும் தடை செய்யும் நிலைப்பாட்டைக் கொள்ளவில்லை. பிரித்தானியாவில் போராட்டங்களுக்கு ஒரு பாரம்பரியம் உண்டு.  பெரும்பாலான போராட்டங்கள் அனுமதிக்கப்படும். ஆனால் தமிழ் மக்களின் ஜீ20 போன்ற பெரிய அளவிலான போராட்டங்களே இதனால் பாதிக்கப்படும்’ என்றும் ஸ்ரீவ் ஓ கொன்னல் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த மெற் பொலிஸ் கொமிஸ்னர் சேர் போல் ஸ்ரீபன்சன் ‘பிரித்தானியாவுக்கு கருத்துச் சுதந்திரம் தொடர்பில் ஒரு பாரம்பரியம் உண்டு. லண்டனில் இடம்பெறும் போராட்டங்கள் அதில் முக்கியமானவை. இது லண்டன் நகருக்கும் பெருமை சேர்க்கின்ற விடயம்’ எனத் தெரிவித்து இருந்தார்.

சேர் போல் ஸ்ரீபன்சன் மேலும் தெரிவிக்கையில் ‘எதிர்காலத்தில் போராட்டங்களை ஏற்பாடு செய்பவர்களே அவற்றைக் கண்காணிப்பதற்கான தொண்டர்களை ஏற்பாடு செய்வதன் மூலம் பொலீஸ்க்கு ஏற்படும் செலவைத் தவிர்க்க முடியும்’ என்றார்.

ஸ்ரீவ் ஓ கொன்னலின் கருத்தை எதிர்த்த மெற் பொலிஸ் ஆணையகத்தின் தொழிற்கட்சி உறுப்பினர் வாஸ் சோகுரோஸ் ‘ஸ்ரீவ் ஓ கொன்னல்  எமது போராடும் ஆர்ப்பாட்டம் செய்யும் உரிமையை கீழ்ப்படுத்தவும் பொலீஸ் வரவுசெலவுத் திட்டத்தை மேலும் 25 வீதத்தால் குறைக்கவும் சொல்கின்றாரா?’ எனக் கேள்வி எழுப்பினார்.

லண்டனில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த பரமேஸ்வரன் மக்டோனால்ட் சாப்பிட்டார் என சண் டெய்லி மெயில் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு இருந்தன. இதற்கு எதிராக பரமேஸ்வரன் தொடுத்த வழக்கில் நீதிமன்ற விசாரணைகள் இல்லாமலேயே இரு தரப்பினரும் உடன்பாட்டுக்கு வந்து யூலை 29ல் இரு பத்திரிகைகளும் தங்களது செய்தி தவறானது எனத் தெரிவித்தனர். இரு பத்திரிககைளும் இணைந்து 77500 நட்டஈடு வழங்கவும் உடன்பட்டனர்.

வர்த்தக முக்கியஸ்தரின் பல்கலைக்கழக இறுதியாண்டில் படிக்கும் மகன் தற்கொலை !!!

Kannan_Shanmugakumaranபிரித்தானிய தமிழ் வர்த்தகப் புள்ளியாக அறியப்பட்ட சண் என்ற சண்முககுமாரன் நவரட்ணம் அவர்களின் மகன் யூலை 23 2010ல்  தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஷெபீல்ட் பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவத் துறையில் இறுதியாண்டில் கல்விகற்கும் கண்ணன் சண்முககுமாரனே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சம்பவம் பற்றித் தெரியவருவதாவது: சண் குடும்பத்தினர் தம் வியாபார நிறுவனத்திற்கு அருகில் குடியிருந்தனர். லூட்டனில் உள்ள இவர்களின் வீட்டில் தனியாக தங்கியிருந்து மகன் கண்ணன் படித்துக் கொள்வது வழமை. தற்போது சமர் ஹொலிடே என்பதால் அப்போதும் கண்ணன் தனியாக லூட்டனில் தங்கி படித்து வந்தார். சம்பவத்திற்கு முதல்நாள் இரவு யூலை 22 சண் குடும்பத்தினர் கண்ணனை வந்து பார்த்து அவருக்கான உணவுகளை எல்லாம் தயாரித்து உணவருந்தி மகிழ்ந்து இருந்ததாக சண் குடும்பத்தின் நெருங்கிய நண்பர் லண்டன் குரலுக்குத் தெரிவித்தார்.

மறுநாள் யூலை 24 அன்று லூட்டனில் உள்ள அவர்களின் வீட்டை நீண்ட காலமாகப் பராமரித்து துப்பரவு செய்யும் வெள்ளைகார வயோதிப மாது வழமைபோல் தனது கடமைகளைச் செய்யச் காலை வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கே கண்ணன் வேட்டியில் சுருக்கிட்டு மாடிப் படிக்கட்டுப் பகுதியில் தொங்கிக் கொண்டு இருந்தார். அதனைப் பார்த்துப் பயந்துபோன வயோதிப மாது அவசரசேவைக்கு உடனடியாக அழைப்பு விடுத்தார்.

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸாரும் மருத்துவப் பிரிவினரும் கண்ணனின் உடலை மருத்துவ வண்டியில் எடுத்துச் சென்றனர். பொலிஸார் கண்ணனின் லப்ரொப்பையும் மோபைல் போனையும் தடயப் பொருட்களாகக் கொண்டு சென்றனர். அதன் பின்னர் மதியம் ஒரு மனியளவில் ஃபமிலி லெய்சன் ஒபிசர்ஸ் சண் குடும்பத்திற்கு இந்த அதிர்ச்சியான துக்ககராமான செய்தியைத் தெரியப்படுத்தினர். அவர்கள் லூட்டன் வந்த போது கண்ணனின் உடல் ஏற்கனவே வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு இருந்தது.

தங்கள் மகனின் மிகச் சடுதியான உயிரிழப்பை ஏற்றக்கொள்ளவோ புரிந்துகொள்ளவோ முடியாத வேதனையுடள் குடும்பத்தினர் தவிப்பதை சண்னின் நண்பர் லண்டன் குரலுக்கு விபரித்தார்.

புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ் மக்கள் மத்தியில் இவ்வாறான தற்கொலைகள் வழமையாகி வருகின்றது. பாதிக்கப்பட்ட குடும்பங்களால் இதனைப் புரிந்துகொள்ள இயலாமல் உள்ளதுடன் குடும்பத்தை நிலைகுலையச் செய்கின்றது. தற்கொலை பற்றிய விழிப்புணர்வு தமிழ் சமூகத்திற்கு மிக அவசியமாகின்றது.

முகாமைத்துவ இறுதியாண்டு மாணவனான கண்ணன் ரக்பீ விளையாட்டில் மிகுந்த ஆர்வம் உடையவர். தனது உடலை திடகாத்திரமாகவும் பலமாகவும் வைத்திருப்பதில் நாட்டம் உடையவர். அவரைத் தன்னையே அழிக்கும்படி தூண்டிய மனநிலைக்கு என்ன காரணம் என்பதை குடும்பத்தினராலும் நண்பர்கள் உறவுகளாலும் விளங்கிக்கொள்ள முடியவில்லை.

2008ல் அகிலன் கோபாலகிருஸ்ணன் தனது மருத்துவ காரணங்களால் ஏற்பட்ட மன உளைச்சலில் தன்னுயிரை மாய்த்துக் கொண்டார். தங்கள் மகனின் இழப்புப் போன்று மற்றவர்களுக்கு ஏற்படுவதைத் தவிர்க்க தொலைபேசி ஆலோசனைச் சேவையை கோபாலகிருஸ்ணன் தம்பதிகள் அகிலன் நினைவாக மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சண் குடும்பத்தினர் மிகுந்த கடவுள் நம்பிக்கையும் கடவுள் பக்தியும் உடையவர்கள். நல்லூரில் 10ம் திருவிழாவைச் செய்து வந்த இவர்கள் ஆச்சுவே முருகன் ஆலயத்தில் 10வது திருவிழாவைச் சிறப்பாகச் செய்து வந்தனர். கண்ணனும் மிகுந்த கடவுள் பக்தி உடையவர். இறுதியில் அந்த வேட்டியிலேயே தன்னுயிரையும் முடித்துக் கொண்டார்.

இவருடைய ஓகஸ்ட் 1 2010ல் இறுதிக் கிரியைகள் ஹென்டனில் இடம்பெற்றது.

வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் தரை வழியாக யாழ்ப்பாணம் வருவதற்கு தடை!

Signpost_to_Jaffnaவெளிநாட்டுக் கடவுச் சீட்டு வைத்திருப்பவர்கள் தரை வழியாக வடபகுதிக்குச் செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதி  தரைவழியாக யாழ் செல்வதற்கு தொடர்ந்தும் தடை அமுலில் உள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு கடவுச்சீட்டுடன் வரும் சுற்றுலாப்பயணிகள், ஊடகவியலாளர்கள்  உட்பட்ட வெளிநாட்டவர்கள் அனைவரும் விமானம் மூலமாக மட்டுமே யாழ்ப்பாணம் செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும், பாதுகாப்பு அமைச்சின் முன்னனுமதியின்றி தரைவழியாக பயணிக்க அனுமதி இல்லை எனவும் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பதிகாரி மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ தெரவித்துள்ளார்.

வெளிநாட்டிலுள்ள இரட்டைக் குடியுரிமையுள்ள இலங்கையர்களுக்கும் இந்நடைமுறை பொருந்தும்; எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் உள்ளுர் ஊடகவியலாளர்களும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்றே வவுனியாவிற்கு அப்பால் செல்ல வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அண்மையில் இலங்கை சென்று திரும்பிய வாசுதேவன் தேசம்நெற்க்கு தெரிவிக்கையில் பயணம் செய்வதற்கு மூன்று தினங்களுக்கு முன் பயணவிபரங்களையும் கடவுச்சீட்டு விபரங்களையும் தொலை அஞ்சல் செய்தால் பாதுகாப்பு அமைச்சு அனுமதியை இலங்கையில் வழங்கப்படும் தொலைஅஞ்சலுக்கு அனுப்பி வைக்கும். இல்ரலையானால் நேரடியாகச் சென்றும் அனுமதியைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார். இந்நடைமுறை வெளிநாட்டவர்கள் சிலர் ஆயுதப் போராட்டத்தை தூண்டிவிடும் முயற்சிகளில் ஈடுபடுவதையொட்டியே மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.

இது பற்றிக் கருத்து வெளியிட்ட மற்றுமொருவர் இவ்வாறான நடைமுறைகள் தமிழ் மக்கள் மீது தமிழ் பிரதேசங்கள் மீது அரசு நெருக்கடியை வழங்குவதையே வெளிப்படுத்துவதாகத் தெரிவித்தார்.

பிரிட்டனிலிருந்து இலங்கை திரும்பிய இளைஞன் பொலிஸாரினால் கைது!

Stop_the_War_on_Asylumபிரிட்டனில் இருந்து இலங்கைக்கு வந்த யாழ்ப்பாண இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். பிரிட்டனிலிருந்து விமானத்தில் வந்திறங்கிய யாழ்ப்பாணம் கரவெட்டியைச் சேர்ந்த மயில்வாகனம் சிவநேசன் (வயது 30) என்பவரே பெரிஸாரினால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று முன்தினம் செவ்வாய் கிழமை இவர் கைது செய்யப்பட்டுள்ளார்

இவர் 12 வருடங்களுக்கு முன்னர் பிரிட்டனுக்குச் சென்று அரசியல் தஞ்சம் கோரியிருந்தார் எனவும். இவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டு இவரை நாடு கடத்துவதற்காக ஒரு வருடத்திற்கு முன்னர் இவர் கைது செய்யப்பட்டு  தொடர்ச்சியாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இவர் இலங்கைக்குத் திரும்பிச் செல்வதில் எதுவித பிரச்சனைகளும் இல்லை எனவும், இவரது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் எனவும் குடியேற்றவாசிகளுக்கான சர்வதேச ஸ்தாபனம் இவருக்கு வாக்குறுதி வழங்கியிருந்ததாம். இதனையடுத்து இவர் இலங்கைக்குத் திரும்பிச்செல்ல சம்மதித்திருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

நோர்வேயில் சிவசுப்பிரமணியர் ஆலயத் தேர்த் திருவிழாவில் நடந்தது என்ன? : ரி சோதிலிங்கம்

Sivaganesh_Vadiveluநோர்வேயின் ஒஸ்லோவில் அமைந்திருக்கம் அம்மரூட் சிவசுப்பிரமணியர் ஆலயத்தின் தேர்த்திருவிழா பிரசித்தமானதோ இல்லையோ அங்கு நடந்த அடிபாடு வேண்டிய அளவு பிரசித்தம் பெற்றுள்ளது. இவ்வாலயத்தில் அடிக்கடி அடிபாடுகள் சகஜமாகி வருகிறது, இது ஆலயத்தின் பொதுச்சபைக் கூட்டங்களிலும் சர்வ சாதாரணமான ஒன்றாகி விட்டது என்கிறார் இவ்வாலயத்தின் அடியார் ஒருவர். 8.8.2010 ஞாயிறு தேர் வீதிவலம் வரும்போது அங்கு பலத்த சலசலப்பும் சண்டையும் நிகழ்ந்தது. அதுவே நோர்வேயையும் தாண்டி தற்போது பேசப்படும் விடயமாக மாறியுள்ளது.

அன்பே சிவம் என்று போதிக்கும் சைவ சமயத்தவரின் திருவிழாவில் தொண்டர்கள் கையிலே ஏன் கிரிக்கட் பட், விக்கற்றுக்களும், பொல்லுக் கட்டைகளும் என்று மற்றுமொரு அடியார் தேசம்நெற் இடம் முறைப்பட்டார். ஒழுங்கு விதிகளை உறுதிப்படுத்தவும் அன்பைப் போதிக்கவும் ஆலயம் எதற்காக கராட்டி சிவா என அறியப்பட்ட சிவகணேஸ் வடிவேலுவை நியமித்தது என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.
 
சம்பவம் பற்றித் தெரியவருவதாவது; வெள்ளை நிற கார் ஒன்றில் குடும்பமாக வந்தவர்கள் தமது காரை வீதியோரமாக கார் நிறுத்துவதற்கான இடத்தில் நிறுத்த முற்பட்டனர். ஆனால் அங்கு கடமையில் இருந்த தொண்டர்கள் காரை அவ்விடத்தில் தரித்து நிறுத்த அனுமதிக்க மறுத்தனர். இதன் விளைவாக எழுந்த தர்க்கம் கைகலப்பிலும் விக்கற், பொல்லுக் கட்டைகளுடனான மோதலிலும் முடிவடைந்தது.

தொண்டர்களாக கடமையில் அமர்த்தப்பட்டவர்கள் ஏற்கனவே தயார் நிலையில் இருந்தவர்கள் போல் தம்முடன் வைத்திருந்த கிரிக்கெட் பட், விக்கெட்டுகளோடு காரில் வந்தவரைத் தாக்கியுள்ளனர்.

தேர்த் திருவிழாவிற்கு மனைவி, பிள்ளைகள் மற்றும் சகோதரர் ஒருவருடனும் குடும்பமாக வந்த அசோக் என்பவரே தொண்டர்களால் தாக்கப்பட்டு உள்ளார். காரில் வந்த அசோக் மற்றும் அவருடைய சகோதரனும் பதில் தாக்குதலில் ஈடுபட்டும் உள்ளனர்.

என்ன நடந்தது என்பதை விபரிப்பதிலும் பார்க்க காட்சிகளை கீழேயுள்ள இணைப்பில் காணலாம். இது நோர்வே ஊடகங்களில் வெளிவந்த ஒளிப்பதிவு.
http://www.vg.no/nyheter/innenriks/artikkel.php?artid=10026130
 
திருவிழாவின் போக்குவரத்து மற்றும் ஒழுங்குகளைக் கவனிக்க கோவில் நிர்வாகத்தினால் நியமிக்கப்படவர் கராட்டி சிவா என்ற சிவகணேஸ் வடிவேலு என்பவராகும். இவர் தமிழர் அவை (Norwegian Council of Eelam tamil) அங்கத்தவர். அண்மையில் தமிழர் அவைத் தேர்தலில் போட்டியிட்டவர். சிவகணேஸ் வடிவேலு கோவிலின் திருவிழா ஒழுங்குகளை கவனிக்கும் பொறுப்பை ஏற்கும்போதே அடிதடிக்கு தேவையான ஆயதங்களைத் தயார் நிலையில் வைத்திருந்ததாக எமக்குக் கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
ஆனால் காரில் அசோக் என்பவரும் சாதாரணமானவர் அல்ல என்றும் வாய்ச் சண்டையாக இருக்கும் போதே அவர், தான் பயன்படுத்தும் சிறுகத்தியால் காவல் பொறுப்பை ஏற்ற சிவகணேஸ் வடிவேலுவின் தலையில் கீறியதாகவும் சிவகணேஸ் வடிவேலுவின் பொறுப்பில் இருந்த தொண்டர்கள் தெரிவிக்கின்றனர். இதனைத் தொடர்ந்தே இந்த அடிபாடுகள் ஆரம்பித்தது என அவர்கள் பக்கச் செய்தி தெரிவிக்கின்றது.

இந்த அடிபாட்டில் 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அறியவருகிறது.
 
கோயிலில் ஒழுங்கு கடமைகளுக்கு என அமர்த்தப்பட்ட தொண்டர்கள் சமயோசித புத்தியுள்ளவர்களாக, மற்றவர்களின் மனம் நோகாது கையாளுபவர்களாக தெரிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கோவில் அதற்கு முற்றிலும் மாறாக காராட்டி பயிற்சி பெற்ற ஒருவரை அரசியல் பின்னணியுடைய ஒருவரை இப்பணிக்கு பொறுப்பாக நியமித்து, சர்வ சாதாரணமான விடயமொன்றை ஆறு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டிய வன்முறைக் கலகமாக மாற வழிவகுத்துள்ளது.

மேலும் இத்தேர்த் திருவிழாவிற்கு முதல்நாள் இடம்பெற்ற அன்னதான நிகழ்விலும் நோர்வே அரசின் உணவுக் கட்டுப்பாட்டு அலுவலர்கள், ஆலயம் உணவு சமைப்பது மற்றும் அதனை கையாளவது பரிமாறுவது தொடர்பில் சரியான வழிமுறைகளைக் கடைப்பிடிக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி அங்கு உணவு சமைத்து மக்களுக்கு பரிமாற வேண்டாம் என்று அறிவுறுத்திச் சென்றனர். ஆனால் அதனையும் மீறி அன்னதானம் பரிமாறப்பட்டது.

வன்னியில் மக்கள் ஒருவேளை உணவுக்கே மிகுந்த கஸ்டத்தை எதிர் நோக்கியுள்ள நிலையில், இலங்கையின் வடக்கு கிழக்கில் ஒருவேளை உணவுக்கு எவ்வளவோ கஸ்டங்களை சந்திக்கும் போது நோர்வேயில் அன்னதானம் கொடுக்கும் உபயகாரர்கள் தங்கள் பெயருக்காகவே இதனைச் செய்கிறார்கள் என்றும் அபிப்பிராயம் தெரிவித்தார்கள்.
 
சிவகணேஸ் வடிவேலு வன்முறைகளுடன் நெருக்கமானவர். இவரது கோஸ்டியைச் சேர்ந்த ஒருவர் சில வருடங்களுக்கு முன்னர் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்ட அதிர்ச்சி தரும் சம்பவத்தின் ஆரம்பமே இந்தக் கோவில்தான். இன்று இவர்கள் மீண்டும் வன்முறைகளில் இறங்கியுள்ளனர்.

மக்கள் அவையின் உறுப்பனர்களாக அறியப்பட்ட சிவகணேஸ் வடிவேலு போன்றவர்கள் இன்னமும் கோவிலில் பொது இடங்களில் மக்கள் கூடும் இடங்களில் உள்ள மிகச்சிறிய நடைமுறைகளையே பண்பாக நடத்தத் தெரியாதவர்களாகவே இருக்கிறார்கள்.
 
தனிநாடு பெற்ற பின்னர் பணம் தருவோம் என்று கூறிப் பணம் பெற்றவர்களும், இந்த கோவில் நிர்வாகத்தினரும் தேர்திருவிழா உபயகாரர்களும் ஊரை அடித்து உலையில் போட்டு கணக்கு விட்டு கணக்குக் காட்டிக் கொண்டு திரிகிறார்கள், என்று கடன் கொடுத்தவர்கள் கோவிலில் வந்து சாமியின் முன்னால் குமுறி அழும்குரலைக் கேட்டதாக ஒரு அடியார் என்னிடம் தெரிவித்தார்.

இந்த குறிப்பிட்ட வன்முறை எழுந்தமானமாக விபத்தாக நடந்த விடயம் அல்ல என்பதை உறுதிப்படுத்த முடிகிறது. இவ்வாறான சம்பவங்கள் நிகழ்வதற்கான சூழல் இன்னமும் இந்த ஆலயத்தில் உள்ளது. சிவசுப்பிரமணியர் ஆலயம், மக்கள் அவை போன்ற அமைப்புகள் இவ்வாறான அடிபாடுகள் நிகழாமல் தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்த அடிபாடு அரசியல் சம்பந்தப்பட்டது என பிபிசி சந்தேசயா செய்தி வெளியிட்டு இருந்தது. சிவகணேஸ் வடிவேலு தமிழீழ விடுதலைப் புலிகளின் நெடியவனைத் தலைமையாகக் கொண்டு இயங்கும் மக்கள் அவை உறுப்பினர் என அச்செய்தி சுட்டிக்காட்டி இருந்தது. இவ்வடிபாட்டில் சம்பந்தப்பட்ட மறு தரப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் நெடியவன் பிரிவுக்கு எதிரானவர்கள் எனச் செய்தி தெரிவித்து இருந்தது. தமிழ்நெற் இச்செய்தியை மறுத்து அச்சம்பவம் முற்றிலும் தனிப்பட்ட ஒரு ஒழுங்குப் பிரச்சினையில் ஏற்பட்ட தகராறு எனச் சுட்டிக்காட்டி இருந்தது. நோர்வே மக்கள் அவை உறுப்பினரான சிவகணேஸ் வடிவேலு காயப்பட்டதை வைத்துக் கொண்டு சந்தேசயா செய்தியைத் திரிபுபடுத்தியதாக தமிழ்நெற் தனது செய்திக் கட்டுரையை வெளியிட்டு இருந்தது.

நெதர்லாந்திலிருந்து வந்த மாப்பிள்ளை திருமணக் கோலத்திலேயே நீதிமன்றில் நிறுத்தப்பட்டார்!

ஒன்பது வருடங்களுக்கு முன்பு நெதர்லாந்தில் திருமணம் முடித்துவிட்டு தற்போது யாழ்ப்பாணத்தில் இன்னொரு திருமணம் செய்யமுற்பட்டதாகக் கூறப்படும் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு,  மாப்பிள்ளை கோலத்தில் நீதிமன்றில் நிறுத்தப்பட்டார். கடந்த 12ம் திகதி மல்லாகம் மாவட்ட நீதிமன்றில் மல்லாக நீதிமன்ற நீதவான் ஜே.கஜநிதிபாலன் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணை நடைபெற்றது.

குறித்த நபர் நெதர்லாந்திலிருந்து வருகை தந்தவர் எனவும், குறித்த 12ம் திகதி அவருக்கு திருமணம் நடைபெறவிருந்ததாகவும், அவ்வேளையில் தெல்லிப்பழை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. குறித்த நபர் ஒன்பது வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திலிருந்து பெண்ணொருவரை நெதர்லாந்திற்கு அழைத்துச்சென்று சம்பிரதாய முறைப்படி திருமணம் செய்தவர் என அவரது முன்னைய மனைவியின் சகோதரர் வழங்கிய முறைப்பாட்டையடுத்தே அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் நிறுத்தப்பட்டார்.

விசாரணைகளின் போது, தான் முன்னர் சட்டபூர்வமாகத் திருமணம் முடிக்கவில்லை எனக்கூற, மனைவியின் சகோதரர் எனக் குறிப்பிடப்பட்டவரால் திருமணப் புகைப்படங்கள் சில நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டன. அப்படங்களில் ஒன்றில் குறிப்பட்ட நபர் பெண்ணிற்கு தாலிகட்டும் படமும் காணப்பட்டது. அத்தோடு, திருமணத்திற்காக அச்சிடப்பட்ட அழைப்பிதழ்களும் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டன.

விசாரணைகளின் போது, அந்தப்படத்திலுள்ள பெண் தனது ஒன்றுவிட்ட சகோதரி எனவும், அவரை நெதர்லாந்திற்கு அழைத்துச் செல்வதற்காகவே திருமணம் செய்வது போன்று நடித்ததாகவும்,  அப்பெண்ணின் குடும்பத்தவர்களின் நன்மைக்காகவே அவ்வாறு செய்ததாகவும் கூறினார்.

நீதவான் சில கேள்விகளை அவரிடம் தொடர்ந்து கேட்டபோது அதற்குப் பதில் கூறமுடியாமல் முரண்பாடான பதில்களை கூறியதையடுத்து குறித்த நபரை எச்சரித்த நீதிபதி ஒரு லட்சம் ரூபா பிணையில் செல்லுமாறும், கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்குமாறும், ஞாயிற்றுக்கிழமை தோறும் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்திற்குச் சென்று கையெழுத்திடுமாறும் உத்தரவிட்டு வழக்கை அடுத்த தவணைக்கு ஒத்திவைத்தார்.

எழுவைதீவில் நன்னீர் கிணறு: லிற்றில் எய்ட் உம் எழுவைதீவு மீனவ சமூகமும் இணைந்த வேலைத்திட்டம்

Elluvaitheevu_Leaders_With_Little_Aid750 பேர் வாழ்கின்ற எழுவைதீவில் நன்னீர் கிணறு வெட்டும் வேலைத்திட்டத்தில் லிற்றில் எய்ட் உம் எழுவைதீவு மீனவ சமூகமும் இணைந்துள்ளன. எழுவைதீவில் நன்னீர் பெரும் பிரச்சினையாக இருப்பதுடன் அங்கு பொதுக் கிணறுகள் எதுவும் இல்லை. அதனால் எழுவை தீவு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சமூகம் எழுவைதீவு கீராமசேவகர் ஆகியொருடன் கலந்துரையாடிய பின்னரே இந்தக் கிணறு வெட்டும் வேலைத்திட்டத்தில் உடன்பாடு எட்டப்பட்டது.

தீவை மீள்மேம்படுத்தும் சமூகம் -Islands Restoration Society (IRS)  எழுவைதீவில் ஊசிக்கிணறு அமைக்கும் திட்டத்தை முன்னெடுக்குமாறு லிற்றில் எய்ட் இடம் விண்ணப்பித்து இருந்தது. அதனைத் தொடர்ந்து ஊசிக் கிணறு அமைக்கும் திட்டத்துடன் எழுவை தீவு சென்று கிராமத் தலைவர்களுடன் உரையாடியதில் அவர்கள் பாரம்பரயமான கிணறும் கிணற்றடியும் தான் தம் ஊருக்கு பொருத்தமானது எனத் தெரிவித்ததைத் தொடர்ந்து ஊசிக்கிணற்றுத் திட்டம் கைவிடப்பட்டு பாரம்பரிய கிணறு அமைக்க உடன்பாடு எட்டப்பட்டது.

Elluvaitheevu_Fishermen_Co-Operative_Societyயூன் 24 2010ல் எழுவைதீவு கடந்தொழிலாளர் கூட்டுறவுச் சமூகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் லிற்றில் எய்ட் தலைவர் ரி கொன்ஸ்ரன்ரைன் எழுவைதீவு கிராமசேவகர் வி வடிவழகன் எழுவைதீவு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சமூகச் செயலாளர் அருள்நாதன் அமலநாதன் ஆகியோர் உட்பட இன்னும் சிலரும் கலந்துகொண்டனர்.

இக்கிணறு வெட்டும் வேலைத்திட்டத்திற்கு 130 000 ரூபாய்கள் மதிப்பிடப்பட்டு உள்ளது. இத்திட்டத்திற்கு நிபுணத்துவம் மிக்கவர்களை மேற்பார்வைக்கு நியமிக்குமிடத்து கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சமூகம்  தங்கள் உழைப்பை வழங்கும் என தெரிவித்து உள்ளது. இத்திட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பை கிராமசேவகரும் முன் வந்துள்ளார்.

எழுவைதீவு சுகாதார மையத்திற்கு மருத்துவ உதவி:

Elluvaitheevu_Medical_Centreமேலும் லிற்றில் எய்ட் மேற்கொண்ட இப்பயணத்தின் போது எழுவைதீவு சுகாதார மையத்திற்கு 1200 பவுண்கள் பெறுமதியான மருந்துப் பொருட்கள் கையளிக்கப்பட்டது. தீவின் மருத்துவ அலுவலர் ஈ ஞானச்செல்வி லிற்றில் எய்ட் தலைவர் கொன்ஸ்ரன்ரைனிடம் இருந்து மருந்துப் பொருட்களைப் பெற்றுக்கொண்டார். இம்மருந்துப் பொருட்கள் எல்லைகளற்ற மருத்துவர் அமைப்பு டென்மார்க்கினால் லிற்றில் எய்ட் க்கு வழங்கப்பட்டு இருந்தது தெரிந்ததே.

ஊர்காவற்துறை பொது மருத்துவமனையில் லிற்றில் எய்ட்:

இந்த விஜயத்தின் போது ஊர்காவற்துறை பொது மருத்துவ மனைக்கு 20 000 பவுண்கள் பெறுமதியான மருந்துப் பொருட்கள் கையளிக்கப்பட்டது. பொது மக்கள் சார்பில் மருத்துவ மேலதிகாரி டொக்டர் அருணா புண்ணியமூர்த்தி லிற்றில் எயட் இடம் இருந்து மருந்துப் பொருட்களைப் பெற்றுக்கொண்டார்.

ஊர்காவற்துறையில் 18 000 பேர் வாழ்கின்றனர். ஊர்காவற்துறை பொது மருத்துவமனை 58 000 பேருக்கு மருத்துவ சேவையை வழங்குகின்றது. அப்பகுதியில் உள்ள தீவுவாழ் மக்களுக்கு அருகில் உள்ள பெரிய மருத்துவமனை இதுவே.

Kayts_General_Hospitalலிற்றில் எய்ட் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மருத்துவ மனைகளுக்கு விஜயம் செய்து மருந்துவகைகளை விநியோகம் செய்திருந்தது. அந்த வகையில் ஊர்காவற்துறை மருத்துவமனை மிகவும் சுகாதாரத்துடன் பேணப்படுவதாக ரி கொன்ஸ்ரன்ரைன் தெரிவித்தார்.

ஊர்காவற்துறை மாதம் 15 அவசர பிரசவங்களைக் கையாள்கின்றது. ஆனால் அங்கு அல்ராசவுண்ட் ஸ்கான் போன்ற வசதிகள் இல்லை. மருத்துவ மேலதிகாரி டொக்டர் புண்ணியமூர்த்தி இது பற்றி லிற்றில் எய்ட் இடம் விணணப்பித்துள்ளார். இதுதொடர்பாக லிற்றில் எய்ட் ரஸ்டிகள் சந்தித்து ஆராய உள்ளனர்.

தீவுப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட லிற்றில் எய்ட் உதவித் திட்டங்களுக்கு தீவுப்பகுதிகளை மீளமேம்படுத்தும் சமூகம் – Islands Restoration Society (IRS) குறிப்பாக இப்பகுதியைச் சேர்ந்த சிறீபதி சிவனடியார் ஒத்துழைப்புகளை வழங்கி இருந்தார்.

இவ்வுதவித் திட்டங்கள் தொடர்பான மேலதிக தகவலக்கு: http://littleaid.org.uk/report-on-island-projects-elluvaithivau-kayts

நாடுகடந்த அரசாங்கத்தின் பேர்மிங்காம் கூட்டத்தில் கைவரிசை! ஏற்பாட்டாளர் சிறுகாயத்துடன் தப்பினார்!

Bermingham_TGTE_Incidentயூலை 3 2010 பேர்மிங்காமில் இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்களின் கூட்டத்தில் வன்முறைத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் செல்வா அண்ணா என்பவர் கூட்டியிருந்த இந்தக் கூட்டத்தை நீல நிற 7 இருக்கைகள் கொண்ட வாகனத்தில் வந்த சிலர் தாக்கி உள்ளனர்.

இச்சம்பவத்தையடுத்து பேர்மிங்காம் கவுன்சிலர் பொலிஸ் மற்றும் மருத்துவ ஊர்திக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

Bermingham_TGTE_Incidentவெள்ளை நிற ரிசேர்ட் அணிந்த குமரன் மற்றும் அவரின் பின்புறமாக உள்ள பச்சைநிற கோடுள்ள ரீசேர்ட் அணிந்த மோகன் ஆகியோர்களும்  இந்த நீலநிற வாகனத்தில் வந்ததாக இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஒருவர் தேசம்நெற்க்கு தெரிவித்தார்.

இத்தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்கள் லண்டனில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதிசேகரிப்பில் ஈடுபட்ட தனம் மற்றும் கமல் ஆகியோருக்கு நெருக்கமானவர்கள் என தேசம்நெற்க்கு தகவல் வழங்கியவர் மேலும் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் வந்தவர்கள் தங்களுக்கு அறிவிக்காமல் எவ்வாறு கூட்டம் கூட்ட முடியும் என வாக்குவாதப்பட்டதாகவும் அதன் பின் வன்முறையில் இறங்கியதாகவும் தெரிவித்தார். வாக்குவாதத்தில் ஈடுபட்டவரை ஏற்பாட்டாளர்களில் ஒருவர் கைத்தொலைபேசியில் படம் எடுக்கவும் விவாதத்தில் ஈடுபட்டவர் கைவரிசையைக் காட்டி உள்ளார்.

Bermingham_TGTE_Incidentஇத்தாக்குதல் சம்பவத்தில் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த செல்வா அண்ணாவுக்கு சொண்டு வெடித்து பல்லுடைந்ததாகவும் அதனால் இரத்தம் வெளிவந்ததாகவும் அச்செய்தி மேலும் தெரிவித்தது. மேலும் பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்து இருதரப்பையும் சமாதானப்படுத்தியதாகவும் தெரியவருகின்றது.

இச்சந்திப்பில் நாடுகடந்த தமிழீழ பாராளுமன்றத்தின் உறுப்பினர்கள் இருவரும் பேர்மிங்காம் பகுதியைச் சேர்ந்த சிலரும் கலந்துகொண்டனர்.

அவர்கள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தலில் இடம்பெற்ற மோசடிகள் பற்றியும் வாக்குவாதப்பட்டதாக இன்னுமொரு செய்தி தெரிவிக்கின்றது. தாக்குதலில் ஈடுபட்டவர்களில் ஒருவர் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தலில் போட்டியிட்டதாகவும் அவருக்கு கிடைத்த வாக்குகள் மோசடியானவை என தேர்தல் ஆணையாளரால் நிராகரிக்கப்பட்டு இருந்ததாகவும் அச்செய்தி மேலும் தெரிவிக்கின்றது.

புலி ஆதரவுக்குழுவின் இலங்கை விஜயத்தை அடுத்து கே பி எதிர் அன்ரி கே பி பனிப்போர். : த ஜெயபாலன்

BTF_Bannerகுமரன் பத்மநாதனின் (கே பி) அழைப்பில் 9 பேர் கொண்ட புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் இலங்கை சென்று வந்ததை அடுத்து புலம்பெயர் புலிஆதரவு அமைப்புகளிடையே பனிப்போர் ஒன்று ஆரம்பமாகி உள்ளது.

கே பி யின் அழைப்பில் சென்றிருந்த டொக்டர் அருட்குமார் பிரித்தானிய தமிழர் பேரவையை (பிரிஎப்) ப் பிரதிநிதித்துவப்படுத்திச் செல்லவில்லை என்றும் அவரது பயணம் பற்றி பிரித்தானிய தமிழர் பேரவை எதையும் அறிந்திருக்கவில்லை என்றும் பிரித்தானிய தமிழர் பேரவை இன்று (யூன் 28 2010) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

டொக்டர் வேலாயுதம் அருட்குமார் பிரித்தானிய தமிழர் பேரவையின் முக்கிய உறுப்பினர். பிரித்தானிய பாராளுமன்றத்தின் முன் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடாத்திய பரமேஸ்வரனின் உல்நிலையை பரிசோதிக்கும் மருத்துவராகவும் இவர் செயற்பட்டு வந்தவர். இவரது சகோதரர்களும் குடும்பமும் மிகுந்த புலி ஆதரவானவர்கள்.

டொக்டர் அருட்குமார் வேலாயுதம் பற்றி கருத்து வெளியிட்ட பிரித்தானிய தமிழர் பேரவையின் ஆதரவாளர் ஒருவர் இவரது இலங்கை விஜயம் தனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக தேசம்நெற்க்கு தெரிவித்தார். தாங்கள் பிரித்தானிய தமிழர் பேரவையின் நடவடிக்கைகளுக்கு வெளியே நின்று ஆதரவு வழங்கி வந்தோம் ஆனால் டொக்டர் அருட்குமார் நூறுவீதம் தன்னை அர்ப்பணித்துச் செயற்பட்டவர் என்றும் அவரைப் போன்றவர்களை நாம் எடுத்த எடுப்பில் துரோகியாக்கிவிட முடியாது என்றும் தெரிவித்தார்.

இப்பயணம் பற்றிய விரிவான கட்டுரை தேசம்நெற்றில் வெளியாகி இருந்தமை தெரிந்ததே. அதில் சென்றுவந்தவர்களின் விபரங்களையும் தேசம்நெற் வெளியிட்டு இருந்தது. புலிஆதரவு புலம்பெயர் குழு இலங்கை சென்று திரும்பிய பின்னரும் மெளனமாகவே இருந்தனர். தேசம்நெற் ரிபிசி ஆகிய ஊடகங்கள் சென்று வந்தவர்களின் முழுமையான பட்டியலை வெளியிட்ட பின்னர் அவர்கள் மெளத்தை கலைத்துக் கொண்டனர்.

இக்குழுவில் தமிழர் சுகாதார அமைப்பின் பிரதிநிதியாகத் தான் கலந்துகொண்டதாக பிபிசி தமிழோசைக்கு பேட்டியளித்த சார்ள்ஸ் அன்ரனிதாஸ் தேசம்நெற் இல் வெளியான பெயர்ப் பட்டியலையும் பயணத்தின் நோக்கம் பற்றிய தகவல்களையும் உறுதிப்படுத்தி உள்ளார்.

புலம்பெயர் புலி ஆதரவுக்குழுவின் இலங்கைப் பயணம் புலி ஆதரவுக் குழுக்களிடையே விரிசலை ஏற்படுத்தி உள்ளது. நாடுகடந்த தமிழீழப் பாராளுமன்றத்தின் பிரதிநிதி எஸ் ஜெயானந்தமூர்த்தி இப்பயணத்தை ஆபத்தானது என்று எச்சரித்துள்ளார். ஈழமுரசு பத்திரிகை கே பி யையும் அவருக்கு துணை போவவர்களையும் எதிர்ப் புரட்சியாளர்கள் எனக் குற்றம்சாட்டி உள்ளது.

புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் மரணத்தை அறிவித்ததை அடுத்து கே பி க்கு ஆதரவாகச் செயற்படுவதாகக் ஜிரிவி மீது குற்றம்சாட்டப்பட்டு ஜிரிவி மீது தாக்குதலும் நடாத்தப்பட்டது இருந்தது தெரிந்ததே. தற்போது பிரித்தானிய தமிழர் பேரவையின் சார்பில் டொக்டர் அருட்குமார் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டார் என்று வெளியான செய்தியை அடுத்து பிரித்தானிய தமிழர் பேரவை ஜிரிவியை பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறு அன்பாகக் கேட்டுக் கொண்டு உள்ளது.

மேலும் பிரிஎப் மற்றும் கே பி க்கு எதிரான அமைப்புகளில் இருந்து கே பி யின் உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாளர்கள் களையெடுக்கும் படலம் ஆரம்பமாகி உள்ளது. அதன் ஒரு கட்டமாக கே பி யின் நெருங்கிய உறவினரான உதயன் என்பவர் பிரிஎப் இல் இருந்து ஓரம்கட்டப்பட்டு உள்ளதாக பிரிஎப் க்கு நெருக்கமானவர்கள் தேசம்நெற்க்கு தெரிவிக்கின்றனர்.

மேலதிக வாசிப்பிற்கு:

வெளிச்சத்திற்கு வரும் கே பி மர்மமும் – கே பி உடன் புலம்பெயர் புலிஆதரவுக் குழுவின் சந்திப்பும் : த ஜெயபாலன்

கே பி யின் சிபார்சில் சு.ப. தமிழ்ச் செல்வனின் சகோதரர் உட்பட முன்னாள் போராளிகள் 26 பேர் விடுதலை!

‘போர்குற்ற விசாரணைகளில் அரசாங்கத்தின் சாட்சியாக கே.பி!’ கெஹலிய ரம்புக்வெல

வடமாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக கே.பி?

 புலம்பெயர்ந்த புலித் தலைவர்கள் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு – கே.பி. உட்பட 9 பேர் கொழும்பில் பேச்சுவார்த்தை

கே.பி.க்கு மன்னிப்பு வழங்குவதென அரசு தீர்மானித்தால் ஆச்சரியப்படமாட்டேன் அமைச்சர் கெஹலிய

வெளிச்சத்திற்கு வரும் கே பி மர்மமும் – கே பி உடன் புலம்பெயர் புலிஆதரவுக் குழுவின் சந்திப்பும் : த ஜெயபாலன்

Pirabakaran VKumaran_Pathmanathanதமிழீழ விடுதலைப் புலிகளின் மிக ஆரம்பகால உறுப்பினராகவும் அவ்வியக்கத்தின் வளர்ச்சியில் மிக முக்கியமான நபராகவும் இருந்த கே பி என அறியப்பட்ட குமரன் பத்மநாதன் இலங்கை அரசாங்கத்தினால் புலிகளை அழிப்பதற்கு தயாரிக்கப்பட் புரொஜக்ற் பீக்கனின் இறுதிக் கட்டத்தை மேற்கொள்வதில் முக்கிய நபராக உள்ளார். புலிகளின் பெரும்பாலான தலைமைகள் அழிக்கப்பட்ட நிலையில் எஞ்சியுள்ளவர்களை களையெடுக்கும் முயற்சிகளுக்கு கே பி யின் பங்கு தற்போது இலங்கையில் மிக அவசியமான ஒன்றாகி உள்ளது. கே பிக்கு பொது மன்னிப்பு வழங்குவது பற்றியும் கே பி யை முதலமைச்சராக்குவது தொடர்பாகவும் இலங்கையரசு தீவரமான ஆலோசணைகளை நடாத்தி வருகின்றது.

இதன் ஒரு பகுதியாக வடக்கு கிழக்கு அபிவிருத்தியை கே பி யை வைத்து முன்னெடுப்பதன் மூலம் முள்ளை முள்ளால் எடுக்கும் கைங்கரியத்தை மேற்கொள்ளலாம் என இலங்கையரசு கருதுகின்றது. அதன் ஒரு அம்சமாக புலம்பெயர்ந்த ஒன்பது பேர்கொண்ட குழுவொன்று கே பியின் அழைப்பில் இரகசியமாக இலங்கை சென்றிருந்தது. இக்குழுவில் புலிகளின் முன்னணி அமைப்புகளான பிரித்தானிய தமிழர் பேரவை, தமிழர் சுகாதார அமைப்பு, தமிழர் புனர்வாழ்வுக்கழகம், வணங்கா மண் ஆகிய நிதிசேகரிப்பில் முன்னின்ற அமைப்புகளின் பிரதிநிதிகள் அல்லது அவ்வமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் கலந்த கொண்டுள்ளனர். ஆனால் தற்போது அவ்விஜயம் பெரும்பாலும் பரகசியமாகி விட்டுள்ளது. இக்குழுவில் சென்றவர்கள் விபரம் வருமாறு:

பிரித்தானியா: சார்ள்ஸ் அன்ரோனிதாஸ், டொக்டர் வேலாயுதம் அருட்குமார், சிறிபதி சிவனடியார், விமலதாஸ்
பிரான்ஸ்: கெங்காதரன்
சுவிஸ்லாந்து: டொக்டர் சந்திரா மோகன் ராஜ்
அவுஸ்திரேலியா: டொக்டர் ரூபமூர்த்தி
கனடா: பேரின்பநாயகம், சிவசக்தி

இவர்களில் நால்வர் லண்டனில் இருந்து சென்றுள்ளனர். இவர்களில் சார்ள்ஸ் அந்தோனிதாஸ் முன்னாள் ரெலோ முக்கிய உறுப்பினர்களில் ஒருவர். அவ்வியக்கத்தின் தலைவர் சிறிசபாரத்தினம் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட பின் அவ்வியக்கத்தின் தலைமைப் பொறுப்புக்கு போட்டியிட்டவர். பின்னர் பிரித்தானிய தமிழர் பேரவை போன்ற புலிகளின் முன்னரங்க அமைப்புகளுடன் மிக நெருக்கமாகச் செயற்பட்டவர். கே பி இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட செய்தி வெளிவந்த போது அவரை விடுவிப்பதற்காக சில முயற்சிகளையும் எடுத்தவர். இந்த விஜயத்தை முடித்துக் கொண்டு மீண்டும் பிரித்தானியா திரும்பியுள்ள இவரை இவருடைய அண்மைய விஜயம் பற்றி கருத்தறிய அவருடன் தொடர்பு கொண்ட போதும் தகவல்பெற முடியவில்லை.

இந்த விஜயத்தில் லண்டனில் இருந்து சென்ற மருத்துவர் வேலாயுதம் அருட்குமார் காரைநகரைச் சேர்ந்தவர். புலிகளின் தீவிர ஆதரவாளர். இவருடைய சகோதரர்கள் புலிகளின் உறுப்பினர்களாக இருந்தனர். இவரும் பிரித்தானியத் தமிழர் பேரவையில் அறியப்பட்ட முக்கிய உறுப்பினர். பரமேஸ்வரன் பிரித்தானிய பாராளுமன்றத்தின் முன் உண்ணாவிரதம் இருந்தபோது பரமேஸ்வரனுடைய உடல்நிலையை பரிசோதிக்க நியமிக்கப்பட்ட மருத்துவர்களில் வேலாயுதம் அருட்குமார் முக்கியமானவர்.

சிறிபதி சிவனடியார் ஊர்காவற்துறையைச் சேர்ந்தவர். ஜேர்மனியில் இருந்து லண்டனுக்கு புலம்பெயர்ந்தவர். இவரது குடும்பமே புலிகளுக்கு மிக ஆதரவானவர்கள். இவரது சகோதரி புலிகளுடன் நிதிகொடுக்கல் வாங்கல் உறவுகளை மேற்கொண்டு இருந்தவர். ஒரு தடவை புலிகள் இவரிடம் இருந்து பெற்ற நிதியை திருப்பிக் கொடுக்காததால் ஏற்பட்ட பொருளாதாரச் சுமையால் இவரும் இவரது கணவரும் தூக்கிட்டு மரணித்தனர். இருந்தும் சிறிபதி சிவனடியார் புலிகளுக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்கிவந்தவர். இவர் தீபம் தொலைக்காட்சியின் பங்குதாரர் செல்வகுமாரின் மைத்துனர். தீபம் தொலைக்காட்சியிலேயே பணியாற்றி வருகின்றார். தீபம் தொலைக்காட்சிக்கான கலையகம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் அமைப்பது தொடர்பாக இலங்கை அரசுடன் தீபம் தொலைக்காட்சி இரகசிய சந்திப்பு ஒன்றையும் நடாத்தி இருந்தது. இச்செய்தி எழுதப்பட்டுக் கொண்டிருக்கையில் சிறிபதி சிவனடியார் இலங்கையிலேயே நிற்பதாக அறியமுடிகின்றது. அவருடன் தொடர்பு கொள்ள எடுத்த முயற்சியும் பலனளிக்கவில்லை.

ஏனையவர்கள் பற்றிய விபரங்கள் இன்னமும் முழுமையாக வரவில்லை.

இவர்களுடைய பயண ஏற்பாட்டை மேற்கொண்டதில் மார்ச் 2009ல் இலங்கை சென்ற டயஸ் பொறா டயலொக் குழுவிற்கும் சம்பந்தம் உண்டு. இக்குழுவில் சென்ற டொக்டர் நடேசன், டொக்டர் நரேந்திரன், சூரியசேகரம், குகநாதன் ஆகியோர் கே பி யை புலம்பெயர்ந்த புலி அதரவுக் குழுவினர் சந்திப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ததில் ஈடுபட்டு இருந்தனர். கே பி யினதும் புலம்பெயர்ந்த புலி ஆதரவுக் குழுவினரதும் வடக்கு நோக்கிய பயணத்தில் டொக்டர் நடேசன், டொக்டர் நரேந்திரன், சூரியசேகரம், குகநாதன் ஆகியோரும் கலந்தகொண்டதாக தெரியவருகின்றது. ஆனால் இதனை உறுதிப்படுத்த முடியவில்லை.

‘வடக்கு கிழக்கு அபிவிருத்தித் திட்டம்’ என்ற அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றை நிறுவி அதனூடாக அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பது பற்றி கே பி வெளிநாடுகளில் இருந்து சென்ற குழுவினருடன் கலந்துரையாடியதாக தெரியவருகின்றது. வெளிநாடுகளில் உள்ள புலிகளின் சொத்து விபரங்களை சேகரிப்பதிலும் அதனை மீண்டும் இலங்கைக்குக் கொண்டு வருவதிலும் இலங்கை அரசு மிகவும் கவனமாக உள்ளது. புலிகளுக்கு 300 மில்லியன் அமெரிக்க டொலர் வரை ஆண்டு வருமானத்தை வழங்குகின்ற 3 முதல் 5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்துக்கள் உலகின் பல பாகங்களிலும் இருப்பதாக ஜேன்ஸ் வீக்லி என்ற புலனாய்வுச் சஞ்சிகை 2007ல் மதிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த நிதியின் சிறுபகுதி மீண்டும் ஆயுத வன்முறையை மேற்கொள்ள விரும்புபவர்களின் கைகளுக்குச் செல்லுமாயின் அவர்களால் தொடர்ச்சியான ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்க முடியாவிட்டாலும் இலங்கையில் தற்போது காணப்படுகின்ற ஸ்தீரத்தன்மையை குலைக்க முடியும். இந்த நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் இலங்கை அரசு மிகக் கவனமாக உள்ளது.

மே 18 2009ல் யுத்தம் முடிவடைந்த போதும் இலங்கையில் முற்றுமுழுதாக புலிகளின் செயற்பாடுகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுவிடவில்லை என இலங்கையின் புலனாய்வுத்துறையினர் மத்தியில் இருந்து வெளிவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆங்காங்கு சிறு அசம்பாவிதங்கள் ஏற்பட்டும் உள்ளது. தப்பியோடிய புலிகளில் சிலர் இன்னமும் இலங்கையின் காட்டுப் பகுதிகளில் உள்ளதாக அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை அரசு கடைப்பிடிக்கும் மிகக் கடுமையான செய்தித் தணிக்கை காரணமாக ஊடகங்கள் இவ்வாறான தகவல்களை வெளியிடுவதைத் தவிர்த்து வருகின்றன. ஆங்காங்கு இராணுவ வீரர்கள் ஒரு சிலர் காயமடைந்து அல்லது மரணமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு வரும் சம்பவங்கள் இடம்பெறவே செய்கின்றன. இவை புதைக்கப்பட்ட கண்ணி வெடிகளால் நிகழ்வதாக அரச தரப்பினால் தெரிவிக்கப்பட்ட போதும் அதனை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியாத நிலையொன்று உள்ளது. அண்மையில் ஒளிபரப்பப்பட்ட ஸ்ரீபன் சார்க்கரின் ஹாட் ரோக் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான ஒரு போராளியின் வாக்குமூலமும் இதனை உறுதிப்படுத்தி உள்ளது.

தடுத்து வைக்கப்பட்டு உள்ள பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகளை விடுவிப்பதில் அரசு தயக்கம் காட்டி வருவதற்குள்ள பல காரணங்களில் முக்கிய காரணமாக இருப்பது புலிகள் மீண்டும் தங்களை ஒழுங்கமைக்க முற்படும் போது, விடுவிக்கப்படும் போராளிகள் மீண்டும் அவர்களினால் இயக்கத்திற்குச் சேர்க்கப்படும் வாய்ப்பு இருப்பதே. அதனாலேயே கைது செய்யப்பட்ட அல்லது சரணடைந்த போராளிகளை விடுவிப்பது காயப்பட்டவர்களுடன் மட்டுப்படுத்தப்பட்டு விடுகின்றது. தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளில் முற்றுமுழுதான மனமாற்றத்தை ஏற்படுத்தவே கே பி மற்றும் வெளிநாட்டுக் குழுவினர் இந்தப் போராளிகளைச் சந்திக்கவும் உரையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

புரஜக்ற் பீக்கன் இராணுவத் திட்டப்படி புலிகளின் கரையோரக் கட்டுப்பாட்டுப் பகுதிகளை 3 பிரிவுகளாகப் பிரித்து அவை ஒவ்வொன்றையும் கைப்பற்ற 12 மாதங்களை ஒதுக்கி 3 ஆண்டுகளுக்குள் புலிகளின் நிலப் பரப்பைக் கைப்பற்ற திட்டம் போட்டு அதனை வெற்றிகரமாகவும் அரசு நிறைவேற்றியது.

01 மே 2006 – 30 ஏப்ரல் 2007 திருகோணமலையின் சம்பூர் முதல் மட்டக்களப்பின் பனிச்சங்கேணி வரையான கரையோரப் பகுதி கைப்பற்றப்பட்டது.
01 மே 2007 – 30 ஏப்ரல் 2008 மன்னார் முதல் பூனேரியன் வரையான கரையோரப் பகுதி கைப்பற்றப்பட்டது.
01 மே 2008 – 30 ஏப்ரல் 2009 ஆனையிறவு முதல் கொக்குத்தொடுவாய் வரையான கரையோரப் பகுதியையும் அதனோடு இணைந்த நிலப்பகுதியையும் கைப்பற்றியது.

இதன் மூலம் புலிகளுக்கான ஆயுதங்கள் தரையிறக்கப்படும் விநியோக வழிகள் (அம்பாறை, சிலாவத்துறை, புல்மோட்டை மற்றும் பருத்தித்துறை) முற்றாகக் கட்டுப்படுத்தப்பட்டது.

01 மே 2009 – 30 ஏப்ரல் 2011 காலப் பகுதி – தற்போதைய காலப்பகுதி புலிகளை களையெடுக்கும் காலப் பகுதியாகத் திட்டமிடப்பட்டு இருந்தது. தங்களுக்கான விநியோகங்கள் இல்லாத நிலையில் வன்னி காடுகளுக்குள் உள்ள புலிகளை களையெடுக்கும் காலப் பகுதியாக இது அமைந்துள்ளது. இந்த புரொஜக்ற் பீக்கன் திட்டம் 2007ல் வெளியே கசிந்திருந்தது. இது பற்றிய விரிவான கட்டுரை ஏப்ரல் 7 2009ல் தேசம்நெற்றில் வெளியிடப்பட்டு இருந்தது. தற்போது புலிகளை களையெடுக்கின்ற இறுதி நடவடிக்கைகளில் இலங்கையரசு மிகத் தீவிரமாக உள்ளது.

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் 2011 ஏப்ரலில் புலிகள் முற்றாக களையெடுக்கப்பட்ட பின்னரேயே நடாத்த ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டது. ஆனால் புலிகளுடனான யுத்தத்தால் கிடைத்த இராணுவ வெற்றி சரத்பொன்சேகாவுடன் ஏற்பட்ட முரண்பாட்டில் அடிபட்டுச் சென்றுவிடலாம் என்ற அச்சத்தாலும் அதனை எதிர்க்கட்சிகள் பயன்படுத்தலாம் என்பதாலும் ஜனாதிபதித் தேர்தல் திட்டமிடப்பட்டதற்கு ஓராண்டுக்கு முன்னதாகவே இடம்பெற்றது.

புரஜக்ற் பீக்கனின் இறுதிக்கட்டத்தில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் புலிகளைக் களையெடுக்கின்ற நடுநிலையாக்குகின்ற முயற்சிகளுக்கு புலிகளையே அரசு பயன்படுத்த திட்டமிட்டு உள்ளது. உள்நாட்டில் புலிகள் மிகவும் பலவீனமான நிலையில் கிட்டத்தட்ட போராட்டத்தின் ஆரம்ப காலகட்டங்களில் தலைமறைவாக வாழ்ந்தது போன்ற நிலையிலேயே உள்ளனர். ஆனால் வெளிநாடுகளில் உள்ள புலிகளின் கட்டமைப்பு யுத்தத்தினால் எவ்வகையிலும் பாதிக்கப்படவில்லை. ஆனால் புலிகளின் தலைமைகள் அழிக்கப்பட்டதால் அவர்கள் மாற்றுத் தலைமையின்றி ஆளுக்காள் ஆழமான சந்தேகம் கொண்டவர்களாக உள்ளனர். இருந்தாலும் இந்த வெளிநாட்டுப் பிரிவில் ஒரு பகுதியினர் மீண்டும் இலங்கையில் ஒரு ஆயுத வன்முறையை உருவாக்கத் தீவிரமாக முயற்சிக்கின்றனர். இவர்கள் அங்கு காடுகளில் பதுங்கியுள்ள மீளிணைகின்ற புலிகளுக்கு ஒரு பின்பலத்தை பொருளாதார பலத்தை வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக இலங்கை அரசு நம்புகின்றது.

அண்மைக் காலமாக ஒட்டுக்கேட்கப்படும் தொடர்பாடல்கள் புலிகளின் நடமாட்டங்களை உறுதிப்படுத்துவதாக இலங்கைப் புலனாய்வுத்துறையிடம் இருந்து செய்திகள் கசிந்துள்ளது. மே 18 முடிவில் சரணடைந்தவர்களில் புலிகளின் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்களும் இருந்துள்ளனர் என்பதையும், அவர்கள் புலிகள் என அடையாளம் காணப்படுவதற்கு முன்னதாகவே பெரும்தொகைப் பணத்தைச் செலுத்தி முகாம்களில் இருந்து வெளியேறி இலங்கைக்கு வெளியே சென்றுவிட்டதையும், இலங்கை இராணுவத்தரப்பு தற்போது உத்தியோகப்பற்றற்ற முறையில் ஒத்துக்கொள்கின்றது. அவ்வாறு தப்பியவர்களில் பிற்காலங்களில் வே பிரபாகரனின் ஆலோசகராக இருந்த மு திருநாவுக்கரசும் ஒருவர். யுத்தத்தின் இறுதிநாளில் இலங்கைப் படையிடம் சரணடைந்த மு திருநாவுக்கரசு குடும்பத்தினர் முகாமை விட்டு வெளியேறி தற்போது இந்தியாவில் தங்கி உள்ளனர். இவ்வாறு தப்பித்த பலர் இந்தியா, மலேசியா, வியட்நாம், தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் தலைமறைவாகி உள்ளனர். இவர்களில் யாராவது மீளிணையும் புலிகளுக்கு தலைமை கொடுத்து நெருக்கடியைத் தோற்றுவிக்கலாம் என்ற அச்சம் இலங்கை இராணுவத்தரப்பில் தற்போது வெளிப்படுகின்றது. அதனைத் தவிர்ப்பதற்கும் கையாள்வதற்கும் கே பி யின் ஆளுமையை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை அரசு ஆராய்கின்றது.

‘தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதி பற்றிய விபரங்களை அரசாங்கத்திற்கு வழங்குவது தொடர்பாக கே பி க்கு பொதுமன்னிப்பு அழிக்கப்பட்டால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்’ என ஊடகத்துறை அமைச்சர் ஹெகலிய ரம்புக்வல யூன் முற்பகுதியில் தெரிவித்து இருந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் ‘கே பி வெளியிட்ட தகவல்களால் வெளிநாடுகளில் இருந்த புலிகளின் பல சொத்துக்களை அடையாளம் காணக் கூடியதாக இருந்தது’ என்றும் தெரிவித்தார். ஆயினும் அச்சொத்துக்களின் பெறுமதி பற்றியோ அல்லது அவை இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதா என்ற தகவல்களையோ அமைச்சர் வெளியிட மறுத்துள்ளார். ‘மன்னர் போன்று வாழ்ந்தவர் கே.பி. இப்போது தனது சகல சிறப்புரிமைகளையும் இழந்துவிட்டார். தனது தோழர்களுக்கு துரோகம் செய்துவிட்டார் என்று சிலர் கூறக்கூடும். ஆனால், இப்போது நாட்டுக்காக அவர் அதிகளவுக்குச் செய்கிறார் என்பதையிட்டு நாம் திருப்தியடைவது அவசியமானதாகும். அவர் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குகிறார்’ என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

2009 மார்ச் 27 – 29 ல் வெளிநாட்டுத் தமிழர்கள் குழு இலங்கை அரசின் அழைப்பில் தலைநகர் கொழும்பு சென்றது. ‘ஸ்ரீலங்கன் டயஸ்பொறா டயலொக்’ என்ற தலைப்பில் இடம்பெற்ற இச்சந்திப்பில் புலிகளின் முக்கிய தலைவரான திரு கே பத்மநாதன் உடன் இலங்கை அரசு ஒழுங்கான தொடர்பில் இருப்பதாக அப்போது அமைச்சர் பசில் ராஜபக்ச குறிப்பிட்டு இருந்தார். அமைச்சர் பசில் ராஜபக்ச கே பியை அழைக்கும் போது திரு கே பத்மநாதன் என்று கௌரவமாகவே அழைத்திருந்தமையும் அச்சந்திப்பில் கலந்துகொண்டவர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.

கே பி பெரும்பாலும் புலிகளின் ஆயுதக் கொள்வனவுகளில் தலைமறைவாகவே செயற்பட்டு வந்தவர். 2007 செப்ரம்பர் 10ல் கே பி பாங்கொக்கில் வைத்து கைது செய்யப்பட்டதாக பாங்கொக் போஸ்ற் செய்தி வெளியிட்டு இருந்தது. இச்செய்தி இலங்கை, இந்தியா மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்கள் நாழும் நாடுகளில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆயினும் தாய்லாந்துப் பொலிஸார் இச்செய்தியை மறுத்து இருந்தனர். கே பி கைது செய்யப்பட்ட போதும் ஊழல் நிறைந்த தாய்லாந்துப் பொலிஸ் உயர் அதிகாரிகளால் அவர் விடுதலை செய்யப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. புரஜக்ற் பீக்கன் ஆரம்பிக்கப்பட்டு கிழக்கில் புலிகள் தங்கள் கட்டுப்பாட்டை இழந்திருந்த நிலையிலேயே கே பி கைது செய்யப்பட்டதான செய்தி அல்லது வதந்தி வெளிவந்தது. இச்சம்பவத்தின் உண்மைத் தன்மை என்னவென்பது இதுவரை வெளிவரவில்லை.

இச்சம்பவத்திற்கு முன்னதாகவே கே பி அவருடைய சர்வதேசப் பொறுப்பில் இருந்து ஓரங்கட்டப்பட்டு இருந்தார். பின்னர் 2008ன் பிற்பகுதியில் கே பி தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச இணைப்பாளராக நியமிக்கப்பட்டார். அதன் பின் 2009ல் பேச்சுவார்த்தைகளுக்கு புலிகளின் சிரேஸ்ட பிரதிநிதியாகவும் பிரதிநிதியாக புலிகளின் பேச்சாளராகவும் நியமிக்கப்பட்டார்.

மே 18ல் புலிகளின் தலைமை அழிக்கப்பட்ட நிலையில் கே பி தன்னையே புலிகளின் தலைவராக அறிவிக்கின்றார். அவ்வாறு ஒருவரை அறிவிப்பதற்கான அதிகாரம் கே பியைத் தவிர வேறு யாரிடமும் இருந்திருக்கவும் இல்லை. தலைவராக அறிவிக்கப்பட்ட கே பி மாறுபட்ட கருத்தடையவர்களையும் இணைத்து நாடுகடந்த அரசாங்கம் ஒன்றை அமைக்க வி உருத்திரகுமாரன் தலைமையிலான குழுவொன்றை உருவாக்கினார். அதற்காகப் பலருடனும் தொடர்புகளை ஏற்படுத்தி இருந்தார். இரகசியத் தன்மையை மிகக்கடுமையாக பின்பற்றுகின்ற அமைப்பை உருவாக்கி அதன் வளர்ச்சியில் இரண்டறக் கலந்த கே பி சாதாரணமாகவே பலருடன் தொடர்புகளை ஏற்படுத்தி வந்தார். அவரை பலரும் மலேசியா சென்றே சந்தித்து வந்தனர். அவர் தனது இருப்பு பாதுகாப்புப் பற்றி அதிகம் கவனம் கொண்டிருக்கவில்லை. தனது பாதுகாப்பை வேறுவழிகளில் உறுதிப்படுத்திக் கொண்டதாகவும் தற்போது கொள்ளமுடியும்.

அதன் பின்னர். ஓகஸ்ட் 7 2009ல் மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டார்.

தற்போது கே பிக்கு பொது மன்னிப்பு அழிப்பது பற்றியும் அவரை முதலமைச்சராக்குவது பற்றியும் அரசாங்கத்தரப்பில் தீவரமாக ஆலோசிக்கப்படுகின்றது. கே பி தற்போது இலங்கையில் இருந்து நாடுகடந்த தமிழீழக்குழு, வட்டுக்கோட்டைத் தீர்மானக் குழு, தமிழர் புனர்வாழ்வுக்கழகம், தமிழர் சுகாதார அமைப்பு, பிரித்தானிய தமிழர் பேரவை என புலிகளின் முன்னரங்க அமைப்புகளில் உள்ளவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி வருகின்றார்.

கே பி முழுமையாக அரசாங்கத்துடன் இணைந்து தமிழ் மக்களின் அபிவிருத்தியில் ஈடுபடுவதைத்தவிர வேறு வழியில்லை என்பதை தன்னிடம் பேசியவர்களுக்குத் தெரிவிப்பதாக தேசம்நெற் அறிகின்றது. மேலும் பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மிகுந்த நம்பிக்கைக்குரிய மனிதர் என்றும் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுபவர் என்றும் அவர் தன்னைச் சந்தித்தவர்களுக்குத் தெரிவித்துள்ளார்.

கே பி யின் அழைப்பில் இலங்கை சென்றவர்கள் தொடர்பில் கே பியுடன் முரண்பட்டவர்கள் குறிப்பாக பிரித்தானிய தமிழர் பேரவை குற்றச்சாட்டுக்களை வைப்பதில் அல்லது அவர்களுக்கு வழமைபோல் துரோகிப் பட்டம் வழங்குவதில் சிக்கல்களை எதிர்நோக்குகின்றது. சென்றவர்களில் சிலர் புலிகளின் தீவிர ஆதரவாளர்கள் மட்டுமல்ல புலிகளுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர்கள்.

கே பி யின் வடக்கு கிழக்கு அபிவிருத்தித் திட்டம் எவ்வளவுதூரம் வெற்றிகரமாகச் செயற்படப் போகின்றதோ இல்லையோ புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள புலிகள் நாளுக்கு நாள் அரசியல் ரீதியாகப் பலவீனமடைகின்றனர். அதேநேரம் அவர்களிடம் உள்ள சொத்துக்கள் பெரும்பாலும் ஒரு சிறுகுழுவினரினால் அனுபவிக்கப்பட்டுக் கொண்டும் உள்ளது. தற்போது புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள புலிகள் மத்தியில் கே பி யின் நிலை முக்கிய விவகாரமாகி உள்ளது. கே பி யின் நிலையை விளங்கிக்கொள்வதில் சர்ச்சைகளும் சங்கடங்களும் காணப்படுகிறது. புலிகள் எப்போதும் அரசியல் அடிப்படையில் அணிசேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் எப்போதும் நபர்களின் அடிப்படையிலேயே அணி சேர்ந்தனர். அதனால் அவர்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சிக்கலைக் கையாள முடியவில்லை. தொடர்ந்தும் நபர்கள் தொடர்பான முரண்பாடுகளிலேயே காய்களை நகர்த்துகின்றனர்.

கே பி இலங்கை அரசாங்கத்துடன் முழுமையாக இணைந்து செயற்படுவது என்ற முடிவை எப்போது எடுத்தார் என்பது தற்போது மில்லியன் பவுணுக்குரிய கேள்வியாக உள்ளது. 2006 மேயில் புரஜக்ற் பீக்கன் ஆரம்பிக்கப்பட்ட போதே கே பி இலங்கை அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க ஆரம்பித்துவிட்டாரா என்ற சந்தேகங்கள் பல்வேறு தரப்பினரிடமும் உள்ளது.

புலிகளை அழிக்கின்ற புரொஜகற் பீக்கன் வீச்சுடன் இடம்பெற்றிருந்த காலப்பகுதியில் புலிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஆயுதங்கள் சர்வதேசக் கடற்பரப்பில் வைத்தே தாக்கி அழிக்கப்பட்டது. இதற்கு இந்தியாவின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்ததாக இலங்கை இராணுவம் அதற்கு நன்றியைத் தெரிவித்து இருந்தது. ஆனால் இதில் எங்களை மட்டும் சொல்லிக் குற்றமில்லை கே பி யும் முக்கியமான தகவல்களை இலங்கைக்கு வழங்கி வந்ததாக லண்டனில் உள்ள இந்திய அதிகாரி ஒருவர் தங்களைச் சந்திக்க வந்த தமிழ் பிரதிநிதிகளுக்கு சுட்டிக்காட்டி உள்ளார்.

புலிகள் முற்றுமுழுதாக இலங்கை அரச படைகளால் சுற்றிவளைக்கப்பட்டு இருந்தநிலையில் தாங்கள் ஆயுதங்களை மௌனிப்பது என்ற முடிவை எடுத்த போது அவர்களின் பிரதான வெளித்தொடர்பு கே பி உடனேயே இருந்தது. அதேசமயம் புலிகளின் உள்ளுர் தலைவர்கள் தமிழக அரசியல்வாதிகள் நோர்வேயில் எரிக்சோல் ஹெய்ம், ரைம்ஸ் பத்திரிகையாளர் போன்றவர்களுடன் தொடர்பைப் பேணி வந்தனர். இவர்களுடைய படுகொலைகள் நிகழ்வதற்கு 48 மணிநேரத்திற்குள் இவர்கள் மேற்குறிப்பிட்டவர்களுடன் தொடர்பில் இருந்துள்ளனர்.

கே பி ஏற்கனவே இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட ஆரம்பித்து இருந்தால் புலிகளின் ஆயுதக் கப்பல்கள் தாக்கி அழிக்கப்பட்டதில் இந்திய அதிகாரி குறிப்பிட்டது போல் கே பி க்கும் தொடர்பு இருந்தால் புலிகளின் தலைமையை சரணடைய வைக்கும் முயற்சியிலும் சரணடையும் பட்சத்தில் சர்வதேச பாதுகாப்புடன் அவர்கள் இலங்கைக்கு வெளியே கொண்டு செல்லப்படுவார்கள் போன்ற நம்பிக்கைகளையும் கே பி அவர்களுக்கு வழங்கி இருக்கக் கூடும். ஆனால் இவை யாவும் முழுமையான தகவல்கள் கிடைக்கும் வரை அறுதியிட்டுக் கூறிவிடக் கூடியதல்ல.

அதேவேளை எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தைகளுக்கு தங்களின் பிரதிநிதியாக கே பி புலிகளாலேயே நியமிக்கப்பட்டு இருந்தவர். ஆனாலும் புலிகள் கே பி இல் மட்டும் தங்கி இருக்கவும் இல்லை. கே பி முன்னர் புலிகளின் ஒரு பகுதியினரால் ஓரங்கட்டப்பட்டு பின்னர் மீண்டும் சர்வதேசப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவர். கே பி மீதான சந்தேகம் புலிகளுக்கு ஏற்பட்டு இருந்தால் அப்படியான ஒருவரின் கையில் தங்கள் உயிர்களைப் பணயம் வைத்திருப்பார்களா என்பதும் கேள்விக்குரியது. பேச்சுவார்த்தைகளுக்கு கே பி புலிகளின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டதால் பேச்சுவார்தையில் ஈடுபட்டவர்களிடையே குறிப்பாக கோதபாய ராஜபக்சவுக்கும் கே பி க்கும் இடையே ஒரு உறவு ஏற்பட்டு இருக்கக் கூடும்.

யூன் 14 2009ல் தேசம்நெற்றுடன் கே பி தொடர்புகொண்டதில், 2002 பேச்சுவார்த்தைகளில் இருந்து புலிகளை வெளியேற வேண்டாம் என்று தான் வலியுறுத்தி வந்ததாகவும், தலைவர் தனது ஆலோசனையிலும் பார்க்க தமிழக அரசியல் வாதிகளிடம் இருந்து தினம் கிடைக்கும் ஆலோசணைகளையே கூடுதலாக ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார். கே பி பிற்காலங்களில் யுத்தத்தைத் தொடர்வதில் பெரிய நாட்டம் கொண்டிருக்கவில்லை என்பதை பெரும்பாலும் அறிய முடிகின்றது. கருணா அம்மான் புலிகளில் இருந்து வெளியேறுகின்ற முடிவை எடுத்ததற்கும், புலிகளின் தலைமை தொடர்ந்தும் யுத்தத்தை முன்னெடுப்பதே காரணம் எனத் தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. பேச்சுவார்த்தைகளில் புலிகளைப் பிரதிநிதித்துவம் செய்த கருணா எடுத்த அதே முடிவுக்கே கே பியும் வந்துள்ளார்.

கே பி க்கும் இலங்கை அரசுக்குமான நெருக்கமான உறவு யுத்தத்தின் பிற்பகுதியில் கே பி பேச்சுவார்த்தைகளுக்கு புலிகளின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டது முதல் ஏற்பட்டிருக்க வேண்டும். இந்திய அதிகாரி குறிப்பிட்டது போல் அதற்கு முன்பே கே பி இலங்கை அரசுடன் இணைந்து செயற்பட்டு இருந்தால் புலிகளுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரும் துரோகத்தனமாக அது அமையும்.

புலிகள் தங்களில் இருந்து மாறுபட்ட கருத்துடையவர்கள் அனைவரையும் துரோகிகள் என்று முத்திரை குத்தி இறுதியில் தங்களுக்குள்ளேயே துரோகிகளைத் தேட நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளனர்.

புலிகளை யுத்தத்தின் ஆரம்பம் முதலேயே பேச்சுவார்த்தை மூலமான உடன்பாட்டுக்குச் செல்லுமாறு வலியுறுத்தியதாக கே பி தேசம்நெற்றுக்குத் தெரிவித்து இருந்தார். இதனை கிளிநொச்சியின் வீழ்ச்சிக்கு முன்னும், பின்னரும் கூறியதாகவும் ஆனால் தமிழகத் தேர்தல் முடிவுகளில் தலைமை மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்ததாகவும் கூறியிருந்தார். அப்போது யுத்தமுனையில் இருந்து வந்த தகவல்கள் அனைத்தும் தாங்கள் தமிழீழத்தை நெருங்கிக் கொண்டிருப்பதாகவே தெரிவித்து வந்தன. மே 16 2009 இலேயே சூசை முதற்தடவையாக தாங்கள் ஆயுதங்களை மௌனிக்க வைக்கத் தயார் என்று அறிவிக்கின்றார். இப்பேச்சு புலிஆதரவு ஊடகங்களுக்கு வழங்கப்பட்டு ஒலிபரப்பப்பட்டது. புலிகள் தாங்கள் சரணடையத் தயார் என முதலும் கடைசியுமாகத் தெரிவித்தது அப்போதே.

எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் திறமையாகப் பேரம்பேசக் கூடியவருக்கும் இந்நிலையில் பேச்சுவார்த்தையை மேற்கொள்வது மிகக் கஸ்டம். ஓரிரு சதுர கிலோ மீற்றருக்குள் முழுமையாக இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டு இருக்கும் தலைமையை காப்பாற்ற பேச்சுவார்த்தை நடாத்த கால அவகாசம் இல்லை. சரணைடைவதற்கான நிபந்தனைகளை விதிக்கவும் புலிகளிடம் ஒருபிடியும் இருக்கவில்லை. தங்களை சில மணிநேரத்திற்குக் கூட தற்காத்துக் கொள்ள முடியாத நிலையிலேயே சரணடைவதற்கான முடிவை அவர்கள் அறிவித்தனர். சரணடைவதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளவும் அங்கு நேரம் இருந்திருக்கவில்லை. அதனால் இலங்கை அரச தரப்பில் அல்லது இராணுவம் சொல்வதையெல்லாம் நம்புவதைத் தவிர அங்கு புலிகளுக்கோ, அவர்களுக்காக பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட கே பி க்கோ வேறுவழி இருந்திருக்க முடியாது.

இலங்கை அரசு கே பி க்கு சில நம்பிக்கை சமிஙைகளை வழங்கி கே பி மூலமாக புலிகளுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கலாம். இதுவரை புலிகளின் தலைமை சரணடைந்ததும் அவர்கள் இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர் என்ற தகவல் மட்டுமே உறுதிப்படுத்தக் கூடியதாக உள்ளது. எவ்வாறு அது சம்பவித்தது என்பது இன்னமும் ஊகங்களுக்கே விடப்பட்டு உள்ளது.

இவற்றைத் தொடர்ந்து ஓகஸ்ட் 7 2009ல் மலேசியாவில் வைத்து துப்பாக்கிப் பிரயோகம் இன்றியே கே பி கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டார். இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டவர் இலங்கையின் சிறைக்கூடங்களில் தடுத்த வைக்கப்பட்டு இருக்கவில்லை. முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸவினால் கட்டப்பட்ட “விசும்பாய” வில் தங்க வைக்கப்பட்டு இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யூனியன் பிளேசில் உள்ள இந்த வாஸஸ்தலத்திலேயே அநுரா பண்டாரநாயக்காவும் வாழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கைது இலங்கை அரசாங்கத்தாலும் கே பி ஆலும் அரங்கேற்றப்பட்ட ஒரு நாடகம் என்றே தற்போது அறிய வருகின்றது. இந்தக் கைதுக்கு முன்னதாகவே கே பி க்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டு இருக்க வேண்டும் என்ற சந்தேகம் வலுவடைந்துள்ளது. புலிகளின் தலைமை முற்றாக அழிக்கப்பட்ட நிலையில் கே பி யால் புலிகள் அமைப்பை நீண்ட காலத்திற்கு தலைமை தாங்க முடியாது. சர்வதேச உளவு நிறுவனங்களுக்கே வேண்டப்பட்ட கே பி, இன்று அனுபவிக்கின்ற சுதந்திரக் காற்றை பலவருடங்களாக அனுபவித்திருக்கவில்லை. மேலும் புலிகளில் ஒரு பகுதியினர் தலைமையின் அழிவுக்குத் தன்னை ஒரு காரணமாகக் காட்டுவதால் புலிகளாலும் அவருக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சமும் தவிர்க்க முடியாதது. அதனால் நோயாளியுமான இவர் இலங்கை அரசுடன் ஒரு உடன்பாட்டுக்குச் சென்று சரணடைவதே அவருக்கு பாதுகாப்பானதாக அமைந்திருக்கும். அந்த நாடகமே ஓகஸ்ட் 7 2007 ல் மலேசியாவில் அரங்கேறியிருக்க வாய்ப்புள்ளது.

தற்போது ஆலோசிக்கப்படுவது போல் வட மாகாண முதல்வராக கே பி நியமிக்கப்பட்டால் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் புலிகளினாலேயே நிர்வகிக்கப்படுகின்றது என்றும் கொள்ள முடியும். அங்கு எழக்கூடிய எதிர்ப்பு நடவடிக்கைகள் எதுவானாலும், காடுகளில் உள்ள புலிகள் மீளினைந்து சில தாக்குதல்களை மேற்கொண்டாலும், அதனை புலிகளை வைத்தே இலங்கை அரசினால் கையாள முடியும். இலங்கையின் எந்தக் காடுகளின் மூலைகளில் எப்படிப் பதுங்க முடியும் என்பது முதல் சர்வதேச பாதாள உலகில் எவ்வாறு ஆயுதங்களை வாங்கி எப்படிக் கொண்டுவர முடியும் என்பதுவரை அனைத்தையும் அறிந்தவர்கள், ஒரே பாசறையில் உண்டு உறங்கியவர்கள், இன்று இலங்கை அரசுடன் இணைந்துள்ளனர். இவர்களுக்கு புலிகள் எப்படிச் சிந்திப்பார்கள் என்பதும் நன்கு தெரிந்தே இருக்கும்.

இதற்குள் அண்மையில் ஒரு புலி ஆதரவாளர் ‘கே பி இலங்கை அரசாங்கத்தினுள் புகுந்து விளையாடுகிறார்” என்றும் பெருமைகொண்டார். ‘தலைவர் உள்ளுக்கு விட்டு அடித்து முடிந்துவிட்டார். இப்ப கே பி இன் ரேன்’ என்று  அவருக்கு என் கருத்தைத் தெரிவிப்பதைவிட என்ன சொல்ல முடியும்.

புலிகளின் பெயரில் மட்டுமே தமிழ் மக்களின் விடுதலை இருந்ததே அல்லாமல் அவர்களின் அரசியலிலோ செயற்பாடுகளிலோ தமிழ் மக்களின் விடுதலை பற்றிய உணர்வோ சிந்தனையோ இருக்கவில்லை. ஆனாலும் தமிழ் மக்களின் விடுதலையின் பெயரில் மிகப்பெரிய அழிவுகளும் அனர்த்தங்களும் நேர்ந்துள்ளது. பானையில் இருப்பதே அகப்பையில் வரும் என்பதற்கமைய இன்று புலிகளில் எஞ்சி நிற்பது கே பி, பிள்ளையான், கருணா….. புலம்பெயர்ந்த நாடுகளை எடுத்தால் நெடியவன், ரூட்ரவி, தனம் ….

இந்த சூழலுக்கள் தான் தாயகத்தின் தமிழ் மக்கள் வாழ வேண்டிய நிலையுள்ளது. இவர்களையோ இலங்கை அரசாங்கத்தையோ நிராகரித்து தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்க முடியாது. கடந்த மூன்று தசாப்த கால யுத்தமும் அதில் ஈடுபட்ட அனைத்து தரப்பினரும் ஏற்படுத்திய அழிவும் சாதாரணமானதல்ல. இது தமிழ் மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்தை தடுத்தது மட்டுமல்ல பல பத்து ஆண்டுகள் பின்நோக்கியும் தள்ளியுள்ளது. மீண்டும் அந்த மக்களை கொண்டு வந்து வளர்ச்சிப் பாதையில் விடுவது அவசியமாகின்றது. அதற்கு எதிரான அரசியல் தடைகளை உடைப்பதற்கான வழிவகைகளை ஆராயப்பட வேண்டும்.

இச்சூழலில் தமிழ் மக்களின் அபிவிருத்தி கருதிச் செயற்படுபவர்கள் தங்கள் நடவடிக்கைகள் பற்றி வெளிப்படையாக இருப்பது அவசியம். தமிழ் மக்கள் என்ற பெயரில் செய்யப்படும் எந்த விடயமும் அந்த மக்களுக்கு அறிவிக்கப்பட வேண்டும். அதனை இரகசியமாக மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை. கே பி யைச் சந்தித்தவர்கள் சந்திக்க முன்னரோ அல்லது சந்தித் பின்னரோ பின்னரோ தமது நோக்கம் பற்றி வெளியிட்டு இருக்க வேண்டும். ஆனால் அதனை அவர்கள் செய்யாதது அவர்கள் மீது பலவாறான சந்தேகங்களுக்கு இட்டுச்செல்கின்றது. இவ்வாறான மூடுமந்திர சந்திப்புக்கள் ஆரோக்கியமானதல்ல.

குறிப்பாக இக்குழுவில் பயணித்த சார்ள்ஸ் அந்தோனிதாஸ் ஜனநாயக நடைமுறை பற்றியும் வெளிப்படையான அரசியல் பற்றியும் பொது இடங்களில் கருத்து வெளியிட்டுவருபவர் இப்பயணம் குறித்து மௌனிப்பது தவறான முன்னுதாரணமாக அமையும். தமிழ் சமூகத்தில் காணப்படும் இவ்வகையான மூடுமந்திரமான அரசியல் கலாச்சாரம் முடிவுக்கு வர வேண்டும்.