கருணா அம்மான்

கருணா அம்மான்

நீங்கள் மாறி வரும் அரசாங்கங்களுடன் கூட்டணி அமைத்தது இராஜதந்திரம் என்றால் கருணாஅம்மான் செய்ததும் இராஜதந்திரமே – ஜெயா சரவணா

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு சேர்வது இராஜதந்திரமாக இருந்தால் கருணாம்மான் செய்ததும் இராஜதந்திரமே என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உப தலைவரும், அம்மான் படையணியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான ஜெயா சரவணா தெரிவித்தார்.

பிரத்தியேகமாக வழங்கப்பட்ட செவ்வி ஒன்றின் போது கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

அம்மான் படையணியின் தலைவரால் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் அனைத்தும் சரியான முறையில் சென்று கொண்டிருக்கின்றது. வன்னி பெருநிலப்பரப்பில் நூற்றுக்கணக்கான போராளிகள் எம்முடன் இணைந்து வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.

அதேபோல் கிழக்கு மாகாணத்தில் வருகின்ற வாரமளவில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட இருக்கின்றது.

அம்மான் படையணியின் செயற்பாடுகள் என்ன என அதிகமானோர் கேள்வி எழுப்பியிருந்தனர். ஆயுதத்தை தூக்கி இராணுவத்தினரை சுடுவதல்ல. சமூக சீர்திருத்தத்திற்காகவே உருவாக்கப்பட்டது. கடந்த காலங்களில் வவுனியாவில் போதைவஸ்து பாவனையை அடையாளம் காண உதவியிருந்தோம். அதேபோல் கடந்த வாரமளவில் மண் அகழ்வு, மரம் வெட்டுதல் போன்ற செயற்பாடுகளை பாதுகாப்பு தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுத்திருந்தோம். அவ்வாறு எமது பணி தொடர்ந்து கொண்டிருக்கின்றது. தற்போது எம்முடன் இணைந்த போராளிகள் குறித்த வேலைத்திட்டங்களினை முன்னெடுத்து வருகிறார்கள்.

கருணாம்மானிடம் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றில் நீங்கள் துரோகி என மக்கள் கூறுகிறார்கள் அதற்கு உங்கள் பதில் என்ன ? என வினவியதற்குரிய பதிலை அவர் வழங்கியிருந்தார். என்னுடைய மனதிலும் சில கருத்துக்கள் இருக்கின்றது. துரோகி என்பது என்ன என்று எனக்கு புரியவில்லை. யார் துரோகி? அமைச்சராக இருக்கும் டக்ளஸ் தமிழ்மக்கள், விடுதலைப்புலிகளை சார்ந்த வகையில் அவர் துரோகி. இந்திய இராணுவத்துடன் இருந்து எங்களை காட்டி கொடுத்ததால் துரோகி. எதற்காக காட்டிக்கொடுத்தார் எனில் அவரை கொலை செய்ய செல்லும் போது உதவியை நாடினார்.

அதே விடயத்தில் ரெலோ தலைவர் செல்வம் , ஈபிஆர்எல்எப் தலைவர் சுரேஸ் இவர்கள் ஆரம்ப காலத்தில் துரோகி அதன் பின்னர் விடுதலைப்புலிகளிடம் வன்னிக்கு சென்று விருந்துண்டதன் பின்னர் அவர்கள் தமிழின காவலர்கள். யாரெல்லாம் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறார்களோ அவர்கள் துரோகி இல்லை. யார் எதிர்க்கிறார்களோ அவர்கள் துரோகி. கருணாம்மானை கொலை செய்திருந்தால் இன்று அவரின் பெயர் அடிபட்டிருக்காது. அவரை கொலை செய்ய முடியவில்லை அதனால் துரோகியாக்கப்பட்டார்.

நாங்கள் தேசிய தலைவர் மீது பெரும் மதிப்பு வைத்திருக்கின்றோம். கருணாம்மானை துரோகி என்று கூறுமளவிற்கு யார் தற்போது இருக்கிறார்கள். விடுதலை புலிகளை பொறுத்தவரை ஒரு தீர்ப்பெனில் அது மரணதண்டனை தான். அத் தண்டனை கருணாம்மான் மீது ஏவப்பட்டது. அவர் அதிலிருந்து தப்பித்து கொண்டார்.

சிங்கள அரசாங்கத்துடன் சேர்ந்தது துரோகம் என கூறுகிறார்கள். அவரை கொலை செய்ய செல்லும் போது அரசியல் நீரோட்டத்தில் சேர்ந்தார். அவருக்கு இன்றுவரை பாதுகாப்பு வழங்கப்படுகின்றது. ஒவ்வொரு முறையும் மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு சேர்ந்தால்  அதென்ன இராஜதந்திரமா? அது இராஜதந்திரமாக இருந்தால் கருணாம்மான் செய்ததும் இராஜதந்திரம் தான். நீங்கள் எதிரியுடன் கூட்டு சேர்ந்தால் இராஜதந்திரம் நாங்கள் கூட்டு வைத்தால் துரோகம்.

பார்ப்பதற்கு ஆயிரம் வேலைகள் இருக்கிறது. முன்னாள் போராளிகளை பார்க்க வேண்டும். அவர்களது வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும். வன்னியிலும் கிழக்கு மாகாணத்திலும் அடிப்படை வசதிகள் இல்லாது வாழ்கின்ற மக்களுடைய வாழ்க்கையை பார்க்க வேண்டும். அரசியல் மாற்றங்கள் வரப்போகிறது நாடு முழுவதும் அலைமோதி கொண்டிருப்பது அரசியல் மாற்றம். சிங்கள, தமிழ் பகுதியாக இருக்கலாம் இரு பகுதியிலும் அவ்வாறான ஒரு நிலையே காணப்படுகிறது. களத்தில் வந்து நின்று பிரச்சினைகளை சந்தித்து பாருங்கள் வன்னி மற்றும் கிழக்கு பகுதிகளில் நடந்து பாருங்கள்.

அண்மையில் முன்னாள் போராளி அரவிந்தன் கைது செய்யப்பட்டிருந்தார். போராளிகளது நலன் திட்டத்திற்காக அவர் குரல் கொடுத்திருக்கிறார். ஆனால் அவரது விடுதலைக்காக யாராவது குரல் கொடுத்திருக்கிறீர்களா? பௌத்த விகாரை மூன்று வருடமாக கட்டிக்கொண்டு இருக்கிறார்கள் கட்டி முடிஞ்சு பெயின்ற் அடிக்கிற நேரத்தில் பாயை போட்டு படுக்கிறவங்களையும் காணல, வெடுக்குநாறிமலையில் தூக்கும் வரைக்கும் கிடக்கிறவங்களையும் காணல, முருகனாக்கள் வருகிறார்கள் என விமான நிலையத்திற்கு சென்று போஸ் கொடுத்தவர்களையும் காணல தமிழ் தேசியம் எங்களுடையது தான் என்று வந்து நிக்கிறவர்கள் என்ன செய்திருக்கிறீர்கள் என மேலும் கருத்து தெரிவித்தார்.

600 காவல்துறையினரை கொன்றமை தொடர்பில் கருணா அம்மானுக்கு எதிராக குற்றப்பத்திரிகை !

33 வருடங்களுக்கு முன்னர் திருக்கோவில் காட்டில் 600 காவல்துறையினரை கொன்றமை தொடர்பில் விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற கருணா அம்மானுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவினாலேயே குறித்த குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.

இக்காவல்துறையினரின் கொலையை கருணா தான் செய்ததாக பெங்களுரை சேர்ந்த பேராசிரியரும், திருக்கோவில் முகாமில் இருந்த முன்னாள் சிறப்பு அதிரடிப்படை வீரருமான ஜனித் சமிலாவும் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் முறைப்பாடு செய்துள்ளார்.

ஜூன் 11, 1990 அன்று நடந்த இக்கொலை சம்பவம் குறித்து எந்த விசாரணையும் இடம்பெறவில்லை என்பதும், படுகொலையில் இரண்டு காவலர்கள் மட்டுமே உயிர் தப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

“பிரபாகரன் இறந்ததை அவருடன் இருந்த கருணா அம்மான் உறுதிப்படுத்தினார்.” – இலங்கை பாதுகாப்பு அமைச்சு

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாக இந்திய அரசியல்வாதி ஒருவர் கூறுவது உண்மைக்குப் புறம்பானது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான அறிக்கைகள் நகைப்புக்குரியவை என பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் கேர்னல் நளின் ஹேரத் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாக உலகத் தமிழர் அமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் தமிழகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்திருந்தார்.

தமிழினத்தின் விடுதலைக்காக பிரபாகரன் விரைவில் மக்கள் மத்தியில் வருவார் என பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இது தொடர்பான அறிக்கை உண்மைக்குப் புறம்பானது என பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் கேர்னல் நளின் ஹேரத் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணம் டிஎன்ஏ பரிசோதனையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களான கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் தயா மாஸ்டர் ஆகியோரும் பிரபாகரனின் சடலத்தை அவதானித்ததன் பின்னர் அவரது மரணத்தை உறுதிப்படுத்தியதாக கேர்னல் நளின் ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.

“யுத்தத்தின் வலிகள் எனக்கும் தெரியும். யுத்த இழப்புக்கள் எனக்கும் உள்ளது.”- கிளிநொச்சியில் கருணா அம்மான் !

“யுத்தத்தின் வலிகள், பாதிப்புக்கள் எனக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை. நானும் எனக்கான அண்ணன் ஒருவரை யுத்தத்தில் பறி கொடுத்துள்ளேன்.” என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று (24) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கருணா அம்மான் படையணி என புதிய இளைஞர் அணி ஒன்றை உருவாக்கியுள்ளோம். காரணம் அடுத்து வரும் காலம் இளைஞர்கள் கையில் கொடுக்க வேண்டும். இன்று எமது பாராளுமன்ற உறுப்பினர்களை தூக்கி சென்று பாராளுமன்றத்தில் அமர்த்த வே்ண்டும். நடக்க முடியாத நிலையில் பாராளுமன்றம் சென்று எவ்வாறு எமக்கு சேவை செய்யப்புாகின்றார்கள். இந்த நிலையில் இளைஞர்கள் கையில் அடுத்த காலம் செல்ல வேண்டும். அதற்காகவே தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்ற கட்சியை ஆரம்பித்து பயணிக்கின்றோம்.

யுத்தத்தின் வலிகள், பாதிப்புக்கள் எனக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை. நானும் எனக்கான அண்ணன் ஒருவரை யுத்தத்தில் பறி கொடுத்துள்ளேன். அவ்வாறு நீ்களும் உறவுகளையும், அங்கங்களையும் இழந்து இன்றும் மாறாத வடுக்களுடன் வாழ்கின்றீர்கள். தொடர்ந்தும் கடந்த காலங்கள் தொடர்பில் பேசிக்கொண்டிருப்பதில் பயன் இல்லை. அவ்வாறு பெசுவதென்றால் நிறைய பேசக்கூடியதாக இருக்கும். அவற்றை விட்டுவிட்டு, கல்வி, பொருளாதாரம் உள்ளிட்ட விடயங்களில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.

அகில இலங்கை ரீதியில், மட்டக்களப்பை சேர்ந்த மாணவன் முதல் இடத்தை பிடித்துள்ளார். அதனை நாங்கள் பாராட்டியாக வேண்டும். அவ்வாறு கல்வியில் நாம் இன்றும் பின்னால் செல்லவில்லை. அதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவ்வாறு, கல்வி, பொருளாதாரம் உள்ளிட்ட விடயங்களில் எவ்வாறு முன்னுக்கு வரலாம் என்பது தொடர்பில் நாங்கள் சிந்தித்து செயற்பட வேண்டும்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினையானது இன்னும் 5 ஆண்டுகளிற்கு குறையப்போவதில்லை. தவறான ஜனாதிபதி ஒருவரை நாங்கள் தெரிவு செய்தமையால் இன்று நாட்டின் பொருளாதாரம் அதளபாதாளத்திற்குள் சென்றுள்ளது. மாற்றங்களை உருவாக்கலாம் என்ற நோக்கில் நானும் பின்னால் நின்றேன். எவரது ஆலோசனைகளையும் கேட்காது பல முடிவுகளை தன்னிச்சையாக எடுத்ததன் விளைவினை இன்று நாங்கள் அனுபவிக்க வேண்டி உள்ளது. பசளைக்கு தடை விதித்தமையால் ஏற்பட்ட விவசாய உற்பத்தியின் பாதிப்ப பொருளாதாரத்தை சரிவடைய செய்தது.

அதனால் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பினை சந்தித்தார். தொடர்ந்து பல பொருட்களிற்கு தடை விதிக்கப்பட்டது. அதனால் நாட்டின் பொருளாதாரம் படு வீழ்ச்சி அடைந்தது. மஞ்சளிற்கு விதிக்கப்பட்ட தடையால் 6,000 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டது.

இவ்வாறு, பல்வேறு வகையில் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பினை இன்று நாங்கள் அனுபவித்த வருகின்றோம். அதனால் மக்கள் கிளர்ச்சி ஒன்று ஏற்பட்டு நாட்டை விட்டு களைக்கப்பட்டு, எந்தவொரு நாடும் தஞ்சம் கொடுக்காத நிலையில் மீண்டும் நாட்டுக்கு அனுப்பப்பட்டார்.

எனவே நாங்கள், பொருளாதாரம், கல்வி உள்ளிட்ட விடயங்களில் வடக்க கிழக்கு மக்கள் சிந்திக்க வேண்டும். அதற்கான முன்னேற்றத்திற்கான பணிகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.