வடக்கு – கிழக்கு

வடக்கு – கிழக்கு

“வடக்கிலும், கிழக்கிலும் தமிழர்கள் இல்லாத நிலைக்கு நாங்கள் தள்ளப்படுவோம்.” – இரா. சாணக்கியன்

“வடக்கிலும், கிழக்கிலும் தமிழர்கள் இல்லாத நிலைக்கு நாங்கள் தள்ளப்படுவோம்.” என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

இன்று (19) பாடசாலை நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

எங்கள் கைகளில் அதிகாரம் கிடைக்கவில்லை. கிடைக்கவில்லை என்பதற்காக அதிகாரம் வேண்டாம் என்று எங்களினால் கூற முடியாது. அதிகாரம் எங்களுக்கு தேவையாக இருக்கிறது. மயிலத்தமடு பிரச்சினைக்கு நானும் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாவும் இணைந்து வழக்கு தாக்கல் செய்துள்ளோம். எங்களின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஆஜராகி வழக்கு பேசி வருகிறார். அந்த வழக்கை கொண்டு இவர்களை வெளியேற்றுவது மட்டுமல்ல நோக்கம். அந்த இடத்தை மேய்ச்சல்தரையாக்க வேண்டும்.

தமிழர்களின் மேச்சல்தரையான மயிலத்தமடு மாதவனை, கெவிலியாமடு திபுலான, வட்டமடு போன்ற அனைத்தையும் பிரித்து ஏனைய சமூகங்களுக்கு கொடுக்க முனைப்பு நடந்துகொண்டிருக்கிறது. இதனை எங்கள் மக்கள் உணரவேண்டும். இவற்றெல்லாம் மாற்றியமைக்க அரசியல் அதிகாரம் எங்களின் கைக்கு வரவேண்டும். காணியதிகாரம், பொலிஸ் அதிகாரம் எங்களுக்கு தேவை. பொலிஸ் அதிகாரம் எங்களிடம் இருந்தால் நாங்கள் விடயங்களை கையாளுவோம். இப்போது எங்களின் பிரச்சினைகளுக்கு கொழும்பில் இருந்துதான் அறிவித்தல்கள் வருகிறது.

வடக்கிலும், கிழக்கிலும் தமிழர்கள் இல்லாத நிலைக்கு நாங்கள் தள்ளப்படுவோம். வடக்கு கிழக்கு என்று நாங்கள் பார்க்க முடியாது. வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழர்கள் பூர்விகமாக வாழ்ந்த பிரதேசங்கள். அது எங்களின் நிலம் அதனை பாதுகாக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு சில வேலைத்திட்டங்களை செய்து கொண்டிருக்கிறது என்றார்.

“தமிழ் மக்களுக்கு சிங்களம் தெரிந்திருந்தால் இந்த 30 வருட யுத்தமே நடந்திருக்காது.” – யாழில் அத்துலிய ரத்ன தேரர் !

கடந்த 30 வருடம் காலமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருக்கின்ற மக்கள் சிங்களம் மொழிப்புலமை தெரிந்து இருந்தால் யுத்தம் செய்து இருக்க தேவையில்லை என இந்து பௌத்த கலாச்சார பேரவையின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆகிய அத்துலிய ரத்ன தேரர் தெரிவித்தார்.

வடமாகாண இந்து பௌத்த கலாச்சார பேரவையின் ஏற்பாட்டில் யாழ் மாவட்டத்தில் இரண்டாம் மொழிக்கற்கை நெறியினை முதற்கட்டமாக 32 மாணவர்களுக்கான பயிற்சி நெறியினை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று யாழ் மத்தியின் அன்னசத்திர பகுதியில் அமைந்துள்ள இந்து பௌத்த கலாச்சார பேரவையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இந்து பௌத்த கலாச்சார பேரவையின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆகிய அத்துலிய ரத்தனதேரர் கலந்துகொண்டு இரண்டு மொழிக்கற்கையின் சிங்கள பாடநெறியினை கற்ற மாணவர்களுக்கே இச் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

சிங்களம், தமிழ் மொழியிலான பிரச்சனையில் விவசாயிகளுக்கான காணியில்லை, விவசாயிகள் தொழில்நுட்பத்திற்கான தொழில் முறையில்லை அதற்கான நிதியில்லை அதனை முன்னெடுத்து செல்லுகின்ற போகின்றவர்களுக்கு நல்ல தொழில் வாய்ப்பில்லை. இவை தீர்க்கப்பட்டால் பிரச்சனை தீர்ந்துவிடும். அதிலும் சாதிப் பிரவினை ஏற்றுக்கொள்ள முடியாது நன்கு வளர்ச்சி அடைந்த பிரிவினையில் சாதிப் பிரவினையினை ஏற்றுக்கொள்ள முடியாது.

விவேகானந்தர் மற்றும் ஏனைய சமய பெரியார்களின் உருப்பட்ட உபதேசங்களில் கூறப்பட்ட ஒன்று இந்த பிரச்சனை இருக்ககூடாது என்று தெரிவித்துள்ளனர். ஆனால் நாங்கள் எல்லாரும் சாதிப்பிரச்சனையில் இருந்து விடுபட வேண்டும். பௌத்த மதத்திலும் சாதிப்பிரவினையினை புத்தபெருமான் எதிர்க்கின்றார். உலகத்தினை நேசிப்பதுதான் பௌத்த மதம் உலகத்தில் உள்ளதைபோன்று அனைத்து உயிர்களையும் நேசிக்கவேண்டும். அதுதான் காலத்தின் அவசியம். இப்போது எமது மாகாணத்தில் தேவையாக இருப்பது கணனி பொறியிலாளராக வருவது மிக அவசியம் அதற்கான தொழில்வாய்ப்பு அதிகமாக கிடைக்கும். அதற்காக தயார் நிலையில் உருவாக வேண்டும்.

“வடக்கு – கிழக்கு டயஸ்போராக்களின் ஆசைக்காக சாணக்கியன் வேலை செய்துகொண்டிருக்கிறார்.” – அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் குற்றச்சாட்டு !

வடக்கு கிழக்கின் இணைப்பு என்பது வெளிநாட்டு சக்தியான டயஸ்போராக்களின் விருப்பமாகும்.வடக்கினையும் கிழக்கினையும் இணைத்து முதலமைச்சராக வருவதே ஆகும். இந்த விருப்பத்திற்கு சாணக்கியன் ஒரு உந்துகோலாக இருந்து கொண்டு இருக்கின்றார் என அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினரும் அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவருமான எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார்.
இன்று(11) அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது ,

சாணக்கியன் எம்.பிக்கு வரலாறு தெரியாது என தமிழ் பேசும் மக்கள் கூறியிருந்தால் அதில் உண்மை இருக்கும்.எனெனில் இன்று அவருக்கு பேச்சு திறமை இருக்கலாம் .அதற்காக எல்லாவற்றையும் பேசி தன்னை ஒரு திறமைசாலியாக காட்ட முயற்சிக்கின்றார்.ஆனால் அவருக்கு வரலாறுகள் தெரியாது.ஆனால் அவரது வரலாறு நம் எல்லோருக்கும் தெரியும்.கடந்த காலங்களில் அவர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளராக இருந்தவர்.வடக்கு தொடர்பாக வரலாறு இன்னும் அவருக்கு தெரியாது.

ஏனெனில் அவருக்கு வயது போதாது.தற்போது 30 வயதினை தான் தாண்டியிருப்பார் என்று நினைக்கின்றேன்.வடக்கில் மக்களுக்கு நடந்த துன்பங்கள் கிழக்கிலே மக்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் எதுவும் அவருக்கு தெரியும் என்பதை நாம் நம்பவில்லை.அதனால் அவருக்கு அந்த அனுபவம் காணாது என்பதே எமதும் மக்களினதும் கருத்தாகும்.அவர் இப்பொழுது வெளிநாட்டு சக்திகளின் ஆசைகளை நிறைவேற்றுவதற்காகவே செயற்படுவதை அவதானிக்க முடிகின்றது.இவரது செயற்பாடு ஆடு நனைகின்றது ஓநாய் அழுதது என்ற செயலில் தான் உள்ளது.இன்று முஸ்லீம் மக்களுக்கு பிரச்சினை உள்ளது என்று கூறி திரிகின்ற இந்த வார்த்தைகள் இந்த பழமொழிக்கு ஒப்பானது என்பதை மக்கள் எல்லோரும் அறிவார்கள்.

இவரது தற்போதைய தேவையானது வடக்கினையும் கிழக்கினையும் இணைத்து முதலமைச்சராக வருவதே ஆகும்.இந்த வடக்கு கிழக்கின் இணைப்பு என்பது வெளிநாட்டு சக்தியான டயஸ்போராக்களின் விருப்பமாகும்.இந்த விருப்பத்திற்கு சாணக்கியன் ஒரு உந்துகோலாக இருந்து கொண்டு இருக்கின்றார்.நாங்கள் அதை அனுமதிக்க முடியாது.நீங்கள் சிங்கள மக்களுடன் வாழ முடியாது என்பதனால் தான் தனிநாடு கேட்டு போராடினீர்கள்.அதுமாத்திரமன்றி வடக்கில் நிம்மதியாக முஸ்லீம் மக்களை வாழ அனுமதித்தீர்களா?அங்குள்ள அவர்களின் காணி பிரச்சினைகளை தீர்த்து கொடுத்துள்ளீர்களா? அம்மக்களை அங்கு இதுவரை ஒழுங்காக குடியேற்றப்படாமல் தடுத்துள்ளீர்களே இதற்கு என்ன கூறுவது என்று கேட்கின்றேன் என்றார்.

தமிழ் பேசும் மக்களை பிரிக்கும் செயற்பாட்டுக்கு துணைபோகும் பிள்ளையான் – நாடாளுமன்றில் குற்றஞ்சாட்டிய சாணக்கியன் !

தமிழ் பேசும் மக்களை பிரிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே அவர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“அரசாங்கத்தின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்திற்கு எதிராக வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களும் வாக்களிக்க வேண்டும். விசேடமாக நீங்கள் தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தால், இதற்கு ஆதரவாக வாக்களிக்க நீங்கள் சில நிபந்தனைகளை விதிக்க வேண்டும்.

“நீண்டகாலமாக சிறைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, முகநூல் பதிவுகளுக்காக சிறைகளிலுள்ளவர்களின் விடுதலை, வடக்கு – கிழக்கில் இடம்பெறும் காணி அபகரிப்பினை தடுத்து நிறுத்துங்கள்.“ என நிபந்தனைகளை வைத்து நீங்கள் வாக்களிக்கலாம்.

அதேபோன்று இஸ்லாமிய பாராளுமன்ற உறுப்பினராக இருந்தால், ´ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தால் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகதத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களின் விடுதலை, கொரோனாவினால் உயிரிழப்போரின் ஜனாசாக்களை ஓட்டமாவடியில் அடக்கம் செய்வதனை நிறுத்துங்கள், ஞானசார தேரர் தலைமையிலான செயலணியினை கலையுங்கள்.“ உள்ளிட்ட நிபந்தனைகளை வைத்து நீங்கள் வாக்களிக்கலாம்.

மேலும் அண்மையில் கிண்ணியாவில் படகுவிபத்தில் உயிரிழந்த சிறுவர்களை நினைத்துக் கொண்டு நீங்கள் அனைவரும் வரவு – செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும். அங்கே சிறுவர்கள் உயிரிழந்த நிலையில் இங்கே களனிபாலம் திறந்து வைக்கப்பட்டிருந்தது. அதனையும் நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

அத்துடன், இலங்கையிலுள்ள தமிழ் பேசும் மக்களை பிரிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கு பிள்ளையானும் துணைபோகின்றார்.´ எனத் தெரிவித்துள்ளார்.

“பாகிஸ்தானில் எரிக்கப்பட்ட இலங்கையருக்கு அனுதாபங்கள். ஆனால் இலங்கையில் தமிழர்களுக்கு நடந்தவற்றை நாம் மறக்கவில்லை.” – நாடாளுமன்றில் இரா.சாணக்கியன் !

வர்த்தக அமைச்சர் விமல் வீரவன்ஸவையும், சுற்றுலாத்துறை அமைச்சரையும் தோற்கடிக்க வேண்டுமென்றுதான் இந்த அமைச்சுக்களுக்கு இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்களா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்

“நாடாளுமன்றில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த சம்பவத்திற்கு எனது கண்டனத்தை நான் இவ்வேளையில் பதிவு செய்கிறேன். எனது நண்பரான மனுஸ நாணயக்காரவுக்கு நடந்த இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த தற்போது பிரதி சபாநாயகர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் சில சிரேஸ்ட உறுப்பினர்களும் தொடர்புபட்டுள்ளார்கள்.

இதேபோன்ற சம்பவங்களுக்கு நானும் கடந்த காலங்களில் முகம் கொடுத்துள்ளேன். எனவே, இவை தொடர்பாக எதிர்க்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என நான் நம்புகிறேன். அதேபோன்று, நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமார விஜேரத்தன தொடர்பாக நாடாளுமன்றில் பின்வரிசை உறுப்பினர் ஒருவர் வெளியிட்ட கூற்று தொடர்பாக, நான் ஒரு ஆண் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினியிடமும் ஏனைய பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் இவ்வேளையில் மன்னிப்பைக் கேட்கிறேன்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி தொடர்பாக குறித்த உறுப்பினர் மிகவும் கீழ்த்தரமான கருத்தை வெளியிட்டிருந்தார். ஆனால், குறித்த உறுப்பினர் அவ்வாறான கருத்தை வெளியிடும்போது, அவரை சுற்றி அமர்ந்திருந்த உறுப்பினர்கள் அதைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தமையானது, உறுப்பினரின் அந்தக் கருத்தைவிட கேவலமானது.

அந்த இளம் நாடாளுமன்ற உறுப்பினரின் தாய் மற்றும் சகோதரிகளிடமும் நாம் மன்னிப்பைக் கேட்ட வேண்டும். இவர்கள் மட்டுமன்றி, நாட்டிலுள்ள ஒட்டுமொத்த பெண்களிடமும் நாம் மன்னிப்புக் கோர வேண்டும். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்து குறித்த உறுப்பினரை இரண்டு வாரங்களுக்கேனும் நாடாளுமன்றிலிருந்து இடைநிறுத்தம் செய்து, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இதனை மேற்கொள்ளாது விட்டால் அது பிழையான உதாரணமாக மாறிவிடும் என்பதையும் நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

வடக்கு – கிழக்கில் உள்ள தொழிற்சாலைகளை அரசாங்கம் புதுபிக்க வேண்டும் என்பதோடு, அங்கு புதிய தொழிற்சாலைகளையும் ஸ்தாபிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். நான் ஏற்கனவே, தலைமன்னாரிலிருந்து இராமேஸ்வரம் வரையிலான கப்பற்சேவையை மீள ஆரம்பிக்க வேண்டும் என அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டுள்ளேன்.

அத்தோடு, மட்டக்களப்பு விமாநிலையம், பலாலி விமான நிலையங்களை மீள செயற்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளேன். குறைந்தது பொலன்னறுவையிலிருந்து வரும் புகையிரதத்தையேனும் மட்டக்களப்பிலிருந்து ஆரம்பிக்குமாறு கேட்டிருந்தேன். ஆனால், இவையெதுவும் இன்றுவரை நடக்கவில்லை.

பிரதேசங்களுக்கிடையில் ஒரு தொடர்பு இல்லாவிட்டால் எம்மால் பொருளாதார ரீதியாக எதனையும் செய்ய முடியாது. வடக்கு – கிழக்கில் உள்ள தொழிற்சாலையொன்றில் உருவாக்கப்படும் ஒரு தயாரிப்பை, இங்குள்ள துறைமுகத்திற்கு கொண்டுவரும்போது, அந்த தயாரிப்பில் உள்ள பெறுமதியே இல்லாது போய்விடும்.

வடக்கு – கிழக்கில் தொழிற்சாலைகளை உருவாக்குதாயின், ஒரு இணைப்பு இன்றி அவற்றை மேற்கொள்ள முடியாது. கிழக்கில் சில ஆடைத் தொழிற்சாலைகள் இருக்கின்றன. எனினும், இந்தத் தொழிற்சாலைகளின் கிளைகள் இலங்கையின் ஏனைய இடங்களிலும் இருப்பதால்தான் அவை லாபகரமானதாக இயங்குகின்றன.

எனினும், புதிதாக ஒரு தொழிற்சாலையை இந்தப் பிரதேசங்களில் ஆரம்பிக்க வேண்டுமெனில், நிச்சயமாக போக்குவரத்து உள்ளிட்ட இணைப்புக்களை அரசாங்கம் ஏற்படுத்தியே ஆகவேண்டும். புன்னக்குடா எனும் பகுதியில் 260 ஏக்கரில், ஆடைத்தொழிற்சாலையொன்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறியக்கிடைத்து.

புன்னக்குடா என்பது கிழக்கில் உள்ள மிகவும் அழகான கடல் பிரதேசமாகும். ஆனால், இங்கு இவ்வாறானதொரு தொழிற்சாலையை ஸ்தாபிப்பது எவ்வளவு தூரத்திற்கு சாத்தியம் என்பது விளங்கவில்லை. மாறாக, இங்கு சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் திட்டங்களை அரசாங்கம் கொண்டுவந்தால் வரவேற்கத் தக்கதாக இருக்கும்.

அத்தோடு, வர்த்தக அமைச்சர் விமல் வீரவன்ஸவையும், சுற்றுலாத்துறை அமைச்சரையும் தோற்கடிக்க வேண்டுமென்றுதான் இந்த அமைச்சுக்களுக்கு இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்களா எனும் சந்தேகமும் எமக்கு எழுகிறது. ஏனெனில், நாட்டில் தற்போதைய நிலைமையில் இந்த இரண்டு துறைகளும் பாரிய வீழ்ச்சியடைந்துள்ளன.

இவ்வாறான நிலையில், கொழும்பு மற்றும் கம்பஹாவில் அதிகூடிய விருப்பு வாக்கு பெறும் இவர்கள் இருவரின் செல்வாக்கையும் வீழ்த்த திட்டமிட்டுத்தான் இந்த அமைச்சுக்கள் வழங்கப்பட்டதோ என்றும் எமக்கு தோன்றுகிறது. மேலும், நாட்டில் இன்று டொலர் வருகை இல்லாது போயுள்ளது.

இவ்வாறானதொரு நிலையில், ஒரு நாடு – ஒரு சட்டம் எனும் செயலணியின் தலைவரான கலகொட அத்தே ஞானசார தேரர், நாட்டில் எவ்வேளையிலும் குண்டுத் தாக்குதல் இடம்பெறலாம் என்று அரச ஊடகங்கள் முன்பாக கருத்து வெளியிட்டுள்ளார்.

நான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கனடா, பிரித்தானியா மற்றும் அமெரிக்காவக்கு விஜயம் மேற்கொண்டிருந்தேன். இங்குள்ள முதலீட்டாளர்கள், நாட்டுக்குள் வர அச்சப்படுகிறார்கள். நாட்டில் எவ்வேளையிலும் குண்டுத்தாக்குதல் இடம்பெறலாம் என்றால், எப்படி வந்து முதலீடு செய்வது என எம்மிடம் அவர்கள் கேள்வி கேட்கிறார்கள்.

ஒரு நாடு – ஒரு சட்டம் எனும் செயணி ஊடாக, இலங்கைக்கு வரவுள்ள டொலர்கள் இல்லாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எதிர்க்காலத்தில் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையும் இல்லாதுபோகும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இப்படியே சென்றால், இலங்கையில் எந்தவொரு வியாபாரமும் செய்ய முடியாத நிலைமை ஏற்படலாம்.

பாகிஸ்தானின் கடந்த சில நாட்களுக்கு முன்னர், பிரியந்த குமாரவுக்கு நிகழ்ந்த துன்பியல் சம்பவம் தொடர்பாக எனது கவலையை இவ்வேளையில் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரது குடும்பங்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபகங்களையும் கூறிக்கொள்கிறேன். இந்தச்சம்பவம் தொடர்பாக எமது இளைஞர்கள் இன்று சமூக வலைத்தளங்கள் ஊடாக தொடர்ச்சியாக அனுதாபங்களையும் எதிர்ப்புக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

ஆனால், அதேபோன்ற சம்பவங்கள் எமது நாட்டிலும் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளமையை நான் நியாபகப்படுத்த விரும்புகிறேன். 1956- 57 களில் நடைபெற்ற கிளர்ச்சியின்போதும், இதற்கு சமமான சம்பவங்கள் இங்கும் நிகழ்ந்துள்ளன. அதுவும் அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன் தான் இவை நிகழ்த்தப்பட்டன.

குறிப்பாக தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். 1983 கலவரத்தின்போது இலங்கை வாழ் தமிழர்கள் நடு வீதிகளில்வைத்து படுகொலை செய்யப்பட்டார்கள். இவை தொடர்பான புகைப்படங்கள் இன்றும் காணப்படுகின்றன. அதேபோன்று, நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலை செய்யப்பட்டார். இவரது கொலைக்கு யார் காரணம் என இங்குள்ள சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக்கூட தெரிந்திருக்கலாம்.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜ சிங்கத்தை கொலை செய்தார் எனும் குற்றஞ்சாட்டுள்ள ஒருவர் இன்றும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். பாகிஸ்தானில் இடம்பெற்றதைப் போன்று இலங்கையில் பல சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளன. 1956 ஆம் ஆண்டில் இலங்கையில் விடுதலைப்புலிகள் எனும் அமைப்பே இருக்கவில்லை.

1948 முதல் 1978 வரையான காலப்பகுதியில் அரசியல் உரிமைக்காக தமிழ்த் தரப்புக்கள் அரசாங்கங்களுடன் பேச்சுவார்த்தைகளையே மேற்கொண்டார்கள். இந்தப் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்த காரணத்தினால்தான் தமிழ் இளைஞர்கள் அன்று ஆயுதம் ஏந்தினார்கள். பாகிஸ்தானில் மத அடிப்படைவாதத்தினால் தான் இந்த சம்பவம் இடம்பெற்றது.

ஆனால், ஒருநாடு – ஒரு சட்டம் என்பதன் ஊடாக இலங்கையில் பௌத்த அடிப்படைவாதம் தலைத்தூக்கியுள்ளது என்பதையும் நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

கிழக்கு மக்கள் அனைவரும் இந்த செயலணிக்கு எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்கள். ஒரு நாடு – ஒரு சட்டம் என்பதை வைத்து நாட்டை ஒருபோதும் முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியாது என்பதை அனைவரும் புரிந்துக் கொள்ள வேண்டும்.

நாம் இந்த அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டுமென்றோ, ஆட்சியைக் கைப்பற்ற வேண்டுமென்றோ ஒருபோதும் நினைக்கவில்லை. மாறாக பொருளாதாரத்தை வளர்க்கவம் நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்கவும் இணைந்து செயற்படத் தயார் என்பதையே கூற விரும்புகிறோம்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

பனை அபிவிருத்தி சபையை கொழும்புக்கு நகர்த்த பெரும் முயற்சி – ஊடுருவும் சிங்களவர்கள் !

யாழ்ப்பாணத்தில் உள்ள பனை அபிவிருத்தி சபையை கொழும்புக்கு மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதுடன் அதன் தலைவராக சிங்களவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.”  என  தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற பெருந்தோட்ட அமைச்சு, காணி அமைச்சு மற்றும் 3 இராஜாங்க அமைச்சுக்கள் மீதான  குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த சிறிதரன் மேலும் கூறுகையில்,

“யாழ்ப்பாணம் மாவட்டத்திலே இருக்கின்ற குறிப்பாக வடக்கையும், கிழக்கையும் பிரதிநிதித்துவப்படுத்தி  உருவாக்கப்பட்டுள்ள பனை  அபிவிருத்தி சபை என்பது  இப்போது கொழும்பை நோக்கித் தள்ளப்படுகின்றது. அதனுடைய தலைவராக தற்போது முதன்முதலாக ஒரு சிங்கள மொழி பேசுபவர் நியமிக்கப்பட்டுள்ளார். நான் அவர் மீது குற்றம் சொல்லவில்லை. ஆனால், பனை  அபிவிருத்தி சபை தமிழர்களின் பாரம்பரிய தொழிலை அடிப்படையாகக்கொண்டது. எனவே, தயவு செய்து அதனைத் தமிழர்களிடம் விடுங்கள். ஒரு கித்துள் திணைக்களத்துக்கோ அல்லது தென்னை அபிவிருத்தி திணைக்களத்துக்கோ தமிழ்த் தலைவரை நியமியுங்கள் என்று நான் கேட்கவில்லை.

பனை  அபிவிருத்தி சபை கம்பணக்காளர், உத்தியோகஸ்தர்களில் கூட அதிகளவான சிங்களவர்கள் இணைக்கப்படுகின்றனர். பனை அபிவிருத்தி சபையை யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குக் கொண்டு வரும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகினறன. அது வடக்கு, கிழக்குக்கு உரியது. அதில் உள்ள தொழிலாளர்கள், உத்தியோகஸ்தர்களில் நிறைய மாற்றங்கள் செய்யப்படுகின்றன என்று அறிகின்றோம்.  பல பேரின் மாற்றங்களில்  தமிழர் நீக்கப்பட்டு சிங்களவர் நியமிக்கப்படுகின்றனர்.

குறிப்பாக வடக்கு மாகாண செயலருக்கு ஆங்கிலமும் தமிழும் தெரியாத ஒரு சிங்கள மொழி பேசுபவர். நாங்கள்  மொழி ரீதியாக அவருடன் பேச முடியாது. வடக்கு மாகாண ஆளுநரால் கூட தமிழ் பேச முடியாமல் உள்ளது. அவ்வாறான நிலைமைக்குள்தான் நாம் தொடர்ந்தும் தள்ளப்படுகின்றோம்.

ஒரு கல்வி அமைச்சை எடுத்தீர்களேயானால் அங்குள்ள மேலதிக செயலாளர்களில் ஒருவர் கூட தமிழர் இல்லை. பல அரச திணைக்களங்களில் இதே நிலைதான். தமிழ்மொழியில் மொழி பெயர்ப்பதற்கு கூட ஆட்கள் இல்லை. இன விகிதாசாரம் கூட பேணப்படாது நிலைமை மோசமாக இருக்கின்றது. தயவு செய்து இந்த விடயத்தில் அதிக கரிசனை செலுத்துங்கள்” – என்றார்.

“9 மாகாணங்களையும் ஒன்றாகக் கருதி இன, மத பேதமின்றி வரவு – செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.” – நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச

2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தில் வடக்கு, கிழக்கு தொடர்பில்  கவனம் செலுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என  நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு என்று பாராது 9 மாகாணங்களையும் ஒன்றாகக் கருதி இன, மத பேதமின்றி வரவு – செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக மாநாடு நேற்று சனிக்கிழமை அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச மேலும் கூறுகையில்,

பொருட்களின் விலைகளை குறைக்க குறுங்கால தீர்வுகள் தோல்வியடைந்துள்ளதால் இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில் பொருட்களின் விலைகளைக் குறைக்க வேறு அணுகுமுறை  முன்வைக்கப்பட்டுள்ளது. எந்த அரசும் பொருட்களின் விலைகளைக் குறைத்தது கிடையாது. பொருட்களின் விலையேற்ற பிரச்சினைக்கு குறுகிய கால தீர்வு தேடி எமது நாடு மட்டுமன்றி ஏனைய நாடுகளும் தோல்வியடைந்தன. உற்பத்தியை அதிகரித்து பொருட்களை சந்தையில் இலகுவாகப் பெறக் கூடிய நிலைமையை உருவாக்க வேண்டும்.

இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில் பொருட்களின் விலைகளைக் குறைக்க வேறு அணுகுமுறை  தீர்வையே   முன்வைத்துள்ளோம். வெளிநாட்டிலிருந்து தருவிக்கும் பொருட்கள் அடுத்த வருடம் குறையும் என்று கூறு முடியாது. இறக்குமதி செய்யும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும்போது விலைகள் உயரும். பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்க ஆவண செய்யப்படும்.

பொருட்களின் விலைகளில் மாற்றம் இருந்தாலும் தட்டுப்பாடின்றி அவை கிடைக்கும். முறையற்ற விதத்தில் பொருட்களின் விலைகளை அதிகரித்து மக்களைச் சூறையாட வேண்டாம் என வியாபாரிகளிடம் கோருகின்றோம். பின்தங்கிய மக்களுக்கு நிவாரணம் மற்றும் சலுகை வழங்குவதற்காக 31 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணிப் பெண்களுக்கு 24 மாதங்களுக்கு நிவாரணப் பொதி வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்காக ஓரிரு பொருட்களின் விலைகளை குறைப்பதில் பயனில்லை. எரிவாயு  விலையைக் குறைப்பதால் சகல மக்களுக்கும் நன்மை கிடைக்காது. எரிவாயு  பாவிக்காத மக்களும் உள்ளனர். விசேட வர்த்தகப் பண்டவரியின் கீழ் மக்கள் மீது சுமையேற்றப்படமாட்டாது – என்றார்.

இதன்போது வடக்கு, கிழக்கு தொடர்பில் இந்த வரவு – செலவுத்திட்டத்தில்  கவனம் செலுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்பில்  ஊடகவியலாளரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச பதிலளிக்கையில்,

நாம் ஒரே நாடாகவே இந்த வரவு – செலவுத் திட்டத்தை முன்வைத்துள்ளோம். வடக்கு, கிழக்கு என்று பாராது 9 மாகாணங்களையும் ஒன்றாகக் கருதி இன, மத பேதமின்றி இந்த வரவு – செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

30 வருட போர் காரணமாக அப்பிரதேசங்கள் பின்னடைந்திருந்தன. எமது அரசு  வடக்கின்  வசந்தம் மற்றும் கிழக்கின்  உதயம் திட்டங்களின் கீழ் அப்பிரதேசங்களை ஏனைய மாகாணங்களுக்கு சமமாக அபிவிருத்தி செய்தது. சகல உட்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டன. 17 மிதவைகளுக்குப் பதிலாக பாலங்கள் நிர்மாணிக்கப்பட்டன. வடக்கில் 85 வீதம் வயல் நிலங்களில் பயிரிடப்பட்டுள்ளன.

9 மாகாணங்களிலும் வாழும் மக்களையும்  சமமாக கவனிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. வடக்கு, கிழக்கு உட்பட 14 ஆயிரத்து 21 கிராம சேவகர் பிரிவுகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனது கிராம சேவகர் பிரிவுக்கும் 3 மில்லியன் ரூபாதான் ஒதுக்கப்பட்டுள்ளது. எந்தச் சந்தர்ப்பத்திலும் இன, மத மற்றும் பிரதேச பேதமின்றி சுதந்திரமாக வாழும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது” என்றார்.

3 வருடங்களின் பின்னர் சிகரெட் விலை 5 ரூபாவால் மாத்திரம் அதிகரிக்கப்பட்டுள்ளது பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த நிதி அமைச்சர், “சிகரெட் விலையைக் கூடுதலாக அதிகரிப்பது தொடர்பில் சட்டப் பிரச்சினை உள்ளது. சிகரெட், மதுபானம் மற்றும் சீனிக் கட்டுப்பாடு தொடர்பில் சுகாதாரத் தரப்பால்  எமக்கு யோசனை முன்வைக்கப்பட்டது. இந்தநிலையில், சீனி தவிர  சிகரெட் மற்றும் மதுபானம்  ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. என்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு நிதி அமைச்சர் பதிலளிக்கையில்,

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய காலம் 5 வருடத்தில் இருந்து 10 ஆக அதிகரிக்கும் யோசனை ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களால்தான் முன்வைக்கப்பட்டது. அரச ஊழியர்களுக்கும் 10 வருடங்கள் பணியாற்றினாலே ஓய்வூதியம் கிடைக்கின்றது. அதனால்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் பெறுவதற்கான  காலம் 10 வருடங்களாக நீடிக்கப்பட்டது. இந்த யோசனையை  முன்வைத்தபோது ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் கரகோசம் செய்தனர். இது தொடர்பான சட்டத்துக்கு ஆளும் தரப்பு, எதிர்த்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்குவர் என நம்புகிறேன். இளம் நாடாளுமன்ற உறுப்பினர்க்களே கூடுதலாக உள்ளனர். அடுத்த தடவையும் அவர்களுக்குப் நாடாளுமன்றம் வரச் சந்தர்ப்பம் உள்ளது – என்றார்.

“வடக்கு கிழக்கின் அபிவிருத்தி தொடர்பான திட்டங்கள் கைவசமுள்ளன. அரசுடன் இணைந்து செயற்பட தயார்.” – இரா.சாணக்கியன்

“வடக்கு கிழக்கின் அபிவிருத்தி தொடர்பான திட்டங்கள் கைவசமுள்ளன. வடக்கின் அபிவிருத்திக்காக அரசுடன் இணைந்து செயற்பட தயார்.” என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“நாட்டை நடத்தி செல்ல வருமானம் அதிகமாக இருக்க வேண்டும். செலவு குறைவாக இருக்கவேண்டும். சாதாரணமாக கூறுவது என்றால் நாட்டில் பணம் இருக்க வேண்டும்.உலகில் ஷ்டீவ் ஜொப்ஸ். பில்கேடஸ், ஜெக் மார்க் போன்ற மில்லியனர்கள், பில்லியனர்கள் தமது திறமையால், உழைப்பால் முன்னேறி வந்தவர்கள் என்பதை நாம் அறிவோம். ஆனால், எமது நாட்டில் மில்லியனர்கள் அதிகளவில் உள்ளனர். திருட்டுகளின் ஊடாக மில்லியனரகள் ஆனவர்கள் உள்ளனர். அவர்களின் திருட்டுகளுக்கு உதவி செய்த அரசியல்வாதிகள் உள்ளனர்.  திறமையால் முன்னேறியவர்களும் இருக்கின்றனர். எனினும்,  அரசியல்வாதிகள் உதவியுடன் பணம் சம்பாதித்தவர்களே அதிகளவானவர்கள் உள்ளனர். அண்மைய காலங்களை எடுத்துக்கொண்டால் ஒரு வருடத்துக்குள் பில்லியன் கணக்கில் இலாபம் பெற்ற தனியார் நிறுவனங்கள் உள்ளன. அவர்களுக்கு அவ்வாறு முடியும் என்றால், அரசுக்கு வருமானம் குறைவடைந்தமை குறித்து அரசாங்கம் தேடியறிய வேண்டும்.

அரசு வழங்கிய வரி சலுகைகள் காரணமாக பொதுமக்களை விட நிறுவனங்களே அதிகளவில் நன்மை பெற்றனர். இன்று சீமெந்து, பால்மா, கேஸ் உள்ளிட்டவற்றுக்கான கட்டுப்பாட்டு விலைகள் நீக்கப்பட்டுள்ளன. சீனி மோசடி, வெள்ளைப்பூடு மோசடி என்று மோசடிகளை அடுக்கிக்கொண்டே செல்லாம். நான் விமர்சிக்கவில்லை. வரிச்சலுகை வழங்கப்படுவதால் சாதாரண மக்கள் மீதே தாக்கம் செலுத்துகின்றது.  பாரிய நிறுவனங்கள் பாதிக்கப்படுவதில்லை. எனவேதான், பொதுமக்களுக்கு நன்மை பெற்றுக்கொடுக்கும் வகையிலான வரிச்சலுகை முறையினரை அறிமுகப்படுத்துமாறு நாங்கள் தொடர்ச்சியாக கூறி வருகின்றோம்.

காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு மாதாந்தம் 6 ஆயிரம் ரூபாய் வழங்க 2019 ஏப்ரல் பட்ஜட்டில் முன்மொழியப்பட்டது. இன்றுவரை 153 குடும்பங்களுக்கு மாத்திரம் அந்த கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. அந்த கொடுப்பனவும் 2019 டிசெம்பர் 31ஆம் திகதிக்கு பிறகு வழங்கப்படவில்லை. காணாமல் போன நபர்களுக்கு என்ன நடந்தது என்பதை கண்டறிய வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. எனினும், அதனை செய்யும் வரை அந்த மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படவேண்டும். அதற்காக மரண சான்றிதல் வழங்குவதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

எனவே  காணாமல் போன நபர்களுக்கு என்ன நடந்தது என்பதை கண்டறியும் வரை இந்த தொகை அந்த மக்களுக்கு நிவாரணமாக வழங்கப்பவேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம். வடக்கு – கிழக்கில் உள்ள வளங்களை வைத்துக்கொண்டு அந்த பகுதிகளை அபிவிருத்தி செய்வதன் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தக்கூடிய வழிமுறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பான எம்மிடம் உள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் வடக்கு – கிழக்கில் உங்கள் அருகில் வைத்திருந்த அந்த நபர்கள் செய்த மோசடிகள், திருட்டுகள் காரணமாகவே நீங்கள் பாரிய தோல்வியை அந்தப் பகுதிகளில் சந்திக்க நேரிட்டது. இன்றும் அதுதான் நடக்க போகின்றது. நிதியமைச்சரின் கட்சியை சேர்ந்த மூவரின் பெயரில் மட்டக்களப்பு மண் அகழ்வு அனுமதிப்பத்திரம் உள்ளது. பீ.சந்திரகுமார் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அமைப்பாளர்.

அடுத்தது, சதாசிவம் மயுரன் வியாழேந்திரனின் தம்பி, அடுத்தது, சிவனேசத்துறை சந்திரகாந்தன். இந்த தகவல்களை நாடாளுமன்றில் தான் நான் பெற்றுக்கொண்டேன். நாங்கள் நிதியமைச்சருடன் வடக்கு – கிழக்கு அபிவிருத்தி வேலைத்திடங்களில் இணைந்து செயற்பட தயாராக உள்ளோம். எம்மிடம் சிறந்த முன்மொழிவுகள் உள்ளன.

மாவட்ட ரீதியில் சில முன்மொழிவுகளை கூட எம்மால் வழங்க முடியாது உள்ளது. எனவே எமது திட்டங்களை முன்மொழிய எமக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தாருங்கள்.“ எனக்குறிப்பிட்டுள்ளார்.

“புதிய அரசாங்கமானது பௌத்த கோயில்கள் கட்டுவது, பௌத்த புராதன சின்னங்களைப் பராமரிப்பது என பல திட்டங்களின் கீழ் தமிழ் மக்களின் காணிகளைத் தொடர்ந்து கபளீகரம் செய்கிறது” – சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றச்சாட்டு !

“புதிய அரசாங்கமானது பௌத்த கோயில்கள் கட்டுவது, பௌத்த புராதன சின்னங்களைப் பராமரிப்பது என பல திட்டங்களின் கீழ் தமிழ் மக்களின் காணிகளைத் தொடர்ந்து கபளீகரம் செய்து வருகின்றது. இதனை அரசாங்கம் நழறுத்த வேண்டும்” என  ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் தன்னுடைய கோரிக்கையினை அறிக்கையாக வெளியிட்டுள்ளார்  சுரேஷ் பிரேமச்சந்திரன் . அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

“இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தனது ஒரு வருட நிறைவு விழாவில் தான் சிங்கள மக்களால் தெரிவு செய்யப்பட்டவராகவும் சிங்கள மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி வருவதாகவும் கூறியுள்ளார். கடந்த ஒருவருட சாதனைகளை அவர் பட்டியலிடும் பொழுது, முதலாவதாக கிழக்கிலங்கையில் சிங்கள பௌத்த புராதனச் சின்னங்களை அடையாளமிடுவதற்கான ஆணைக்குழுவை நான் நியமித்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்டத்தின் மேய்ச்சல் தரையை கபளீகரம் செய்து, அதனை சிங்கள விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதேபோல, வடக்கு-கிழக்கின் முக்கியமான பல பகுதிகளை முழுமையாக கபளீகரம் செய்து, அங்கும் சிங்கள மக்களைக் குடியேற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முல்லைத்தீவின் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி, நாயாறு போன்ற பகுதிகளை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையானது இந்த பிரதேசத்தின் நிர்வாகத்தைக் கையேற்பதன் மூலம் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபருக்கோ? அல்லது பிரதேச செயலருக்கோ? எத்தகைய நிர்வாக அதிகாரமும் இல்லாமல் செய்து, அதனை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை கையேற்பதன் ஊடாக அதனை முழுமையான சிங்களக் குடியேற்றத்திற்கு உட்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இது தற்காலிகமாக தடைசெய்யப்பட்டிருப்பினும்கூட, அடுத்த கட்டங்களில் என்ன நடக்குமென்று கூறமுடியாது. இதனைப் போன்றே, திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் ஏறத்தாழ ஒன்பது காணித்துண்டுகள் அடையாளம் காணப்பட்டு பௌத்த கோயில்கள் கட்டுவதற்காக அடையாளமிடப்பட்டு வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றது.

குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தென்னமரவாடி கிராமத்தில் 20,2343 ஹெக்டெயர் நிலப்பரப்பும் அதே பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புல்மோட்டையில் மூன்று வெவ்வேறு இடங்களில் 11ஹெக்டெயர், 7 ஹெக்டெயர், 1ஹெக்டெயர் நிலப்பரப்பு காணிகளும் குச்சவெளி திரியாய் கிராமத்தில் 20ஹெக்டெயர் நிலப்பரப்பும் குச்சவெளி கும்புறுபிட்டி கிழக்கு கலப்பையாறு கிராமத்தில் 20 ஹெக்டெயர் நிலப்பரப்பும் குச்சவெளி புல்மோட்டை 3 பிரதேசத்தில் 6ஹெக்டெயர் நிலப்பரப்பும் குச்சவெளி புல்மோட்டை 1 நிலப்பரப்பில் 13 ஹெக்டெயர் நிலப்பரப்பும் அதே பிரதேசத்தில் மற்றொரு பகுதியில் 19 ஹெக்டெயர் நிலப்பரப்பும் பௌத்த கோயில்கள் கட்டுவதற்காக அரசாங்கம் ஒப்புதலளித்து வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்புற கிராமங்களும் திருகோணமலை மாவட்டத்திற்குட்பட்ட குச்சவெளி பிரதேச எல்லைப்புற கிராமங்களும் சிங்கள மயமாக்கப்படுவதற்கான அடிப்படையிலேயே புத்த கோயில்களுக்கான காணிகளை கையகப்படுத்துவதும் முல்லைத்தீவில் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின்கீழ் காணிகளை அபகரிப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

தமிழ்பேசும் மக்கள் செறிந்துவாழும் குச்சவெளி போன்ற ஒரே பிரதேச செயலகப்பிரிவில் ஒன்பதுக்கும் மேற்பட்ட பௌத்த கோயில்களைக் கட்டுவதற்காக நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளைக் கையகப்படுத்துவதன் நோக்கம் என்ன? சிங்கள மக்களே இல்லாத இத்தகைய பிரதேசத்தில் மிக நெருக்கமான முறையில் பௌத்த கோயில்களைக் கட்டுவதற்கு முயற்சிப்பதும், இதனை ஏற்றுக்கொண்டு அரசாங்கம் காணிகளை வழங்க முன்வருவதும், மிகப் பாரிய அளவிலான சிங்கள பௌத்த விஸ்தரிப்பினை ஏற்படுத்துவதற்கான முயற்சியாகும். இது அந்தப் பிரதேசங்களில் பெரும்பான்மையாக வாழும் சிறுபான்மை தேசிய இனங்களை சிறுபான்மையாக்கும் முன்னெடுப்பாகும்.

இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, திருகோணமலை, போன்ற எல்லைப்புற பிரதேசங்களிலும் வடக்கில் வவுனியா, முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களின் எல்லைப்புற பிரதேசங்களிலும் அங்கு வசித்து வந்த தமிழ் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு, பல்லாயிரக்கணக்கான சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டு வந்திருக்கின்றனர். இதனால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களும் தமிழ் மக்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றது. வடக்கிலும் கிழக்கிலும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் கடந்த எழுபது வருடங்களாக முற்றுப்பெறாத நிலையில், இந்த புதிய அரசாங்கமானது பௌத்த கோயில்கள் கட்டுவது, பௌத்த புராதன சின்னங்களைப் பராமரிப்பது, மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினூடாக காணிகளை நிர்வாகம் செய்வது போன்ற பல திட்டங்களின் கீழ் தமிழ் மக்களின் காணிகளைத் தொடர்ந்து கபளீகரம் செய்துவருவதையே மேற்கண்ட நடவடிக்கைகள் தெளிவுபடுத்தி நிற்கின்றது.

இலங்கை அரசாங்கங்களின் இத்தகைய நடவடிக்கையானது தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களான வடக்கு-கிழக்கின் நிலத்தொடர்ச்சியை இல்லாமல் செய்து வடக்கையும் கிழக்கையும் நிரந்தரமாக இரண்டு பகுதிகளாக மாற்றுவதற்கான முயற்சியே ஆகும். இதனூடாக தமிழ் மக்களின் இருப்பும் அடையாளமும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.

நீதிமன்றங்களினூடாக பெற்றுக்கொள்ளப்படும் தற்காலிகத் தடை உத்தரவுகள் என்பது இவற்றுக்கான நிரந்தரத் தீர்வாக அமையாது. வடக்கு-கிழக்கிலிருந்து தெரிவு செய்யப்பட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவை தொடர்பாக காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு அரசாங்கத்தின் இத்தகைய கபடத்தனமான சூழ்ச்சிகளை முறியடித்து, தமிழ் மக்களின் பாரம்பரிய நிலங்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும்.” என அவர் தன்னுடைய கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

“வடக்கின் அபிவிருத்திக்காக நடப்பு ஆண்டில் அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை” – பாராளுமன்றில் கஜேந்திரன் !

‘யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு பகுதியில் எந்தவித அபிவிருத்திக்கும் 2020ஆம் ஆண்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.இந்த நிலைமை தொடர்ந்தால் அரசாங்கம் பாரிய தோல்வியொன்றைச் சந்திக்கும்”  என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான விவாதம், நேற்றையதினம் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. குறித்த  விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது,

கடந்த தேர்தல் காலத்தின்போது பலருக்கு வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட்டிருந்தன. சுதந்திரக் கட்சி சார்ந்தவர்கள் மற்றும் பொதுஜன பெரமுன கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு இவ்வாறான வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட்டன.

பருத்தித்துறையில் இவ்வாறு பொறுப்பேற்றுக்கொண்ட ஒருவரின் பதவி கடந்த ஓகஸ்ட் மாதம் நிறுத்தப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் உள்ள பட்டியலில் அவரின் பெயர் இருந்ததாகவும் பின்னர் வந்த பட்டியலில் இல்லையென்றும் அவர் இடை நிறுத்தப்பட்டுள்ளார். இதுபோன்று 600ற்கும் அதிகமானவர்களின் பெயர்கள் இவ்வாறு நீக்கப்பட்டுள்ளன. வடபிராந்திய போக்குவரத்துத் திணைக்களத்தில் தகுதியற்றவர்கள் நியமிக்கப்படுகின்றனர். தேர்தல் காலத்தில் தமக்குப் பணியாற்றியவர்கள் இவ்வாறு பதவியில் இணைக்கப்படுகின்றனர்.

இரண்டு அரசாங்கங்களும் மாறி மாறி இவ்வாறான செயற்பாடுகளையே தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. சட்டரீதியாக அனுமதிக்கப்பட்ட செலவீனங்களையும் தாண்டிய சட்டவிரோதமான செலவீனங்களுக்கும் சேர்த்து அங்கீகாரம் பெறுவதற்கு விவாதம் நடைபெறுகிறது. இந்த விவாதத்தில் எமது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றிச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இலங்கையில் மிகவும் புகழ்பெற்ற வடமாகாண போக்குவரத்து சபையானது சீரழிந்து வருகிறது. ஏதாவது விபத்தொன்று இடம்பெற்றால் இதற்கான தீர்ப்புக்காக சம்பந்தப்பட்ட சாரதிகள் கொழும்புக்கு அனுப்பப்படுகின்றனர். ஏனைய மாகாணங்களில் அவ்வாறு இல்லை. வடமாகாணத்தின் கல்வி நிலைமை மோசமாகியுள்ளது. கல்வி நிர்வாக சேவையின் வகுப்பு ஒன்றைச் சேர்த்த வடபகுதியைச் சேர்ந்தவர்களுக்கு சம்பள உயர்வு இதுவரை வழங்கப்படவில்லை.

பாடசாலைகளை தேசிய பாடசாலைகள் ஆக்குகின்றோம் என்ற போர்வையில் பாடசாலைகளை மத்திய அரசின் கீழ் கொண்டு செல்லும் நிலைமைகள் காணப்படுகின்றன. மாகாண நிர்வாகத்தின் கீழ் உள்ள முன்பள்ளிகளுக்கு வசதிகள் எதுவும் இல்லை. இவ்வாறான நிலையில் சிவில் பாதுகாப்புத் திணைக்களம் முன்பள்ளிகளை அமைத்து ஆசிரியர்களுக்கு சம்பளங்களை வழங்கி அவற்றை நிர்வகித்து வருகிறது.

மாகாண நிர்வாகத்தின் கீழ் உள்ள விடயம் வேண்டும் என்றே சீரழிக்கப்படுகின்றன. இந்த மாதிரியான முறைகேடான செயற்பாடுகளை அரசாங்கம் நிறுத்த வேண்டும். யுத்தத்தினால் அழிக்கப்பட்ட வடபகுதியில் எந்தவித அபிவிருத்திக்கும் 2020ஆம் ஆண்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இந்த நிலைமை தொடர்ந்தால் அரசாங்கம் பாரிய தோல்வியொன்றைச் சந்திக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.