மனோ கணேசன்

மனோ கணேசன்

“பயங்கரவாததடைச்சட்டம் இலங்கைக்கு தேவையில்லை.” – மனோகணேசன்

பயங்கரவாத தடை சட்டத்தின் திருத்தங்களை உள்ளடக்கிய வர்த்தமானி வெளியாக்கப்பட்டுள்ளது.

இதன்படி தற்போதிருக்கின்ற சட்டத்தின்படி தடுத்து வைத்தல் உத்தரவின் கீழ் உள்ள 18 மாத தடுப்புக் காவல் காலம், 12 மாதங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டவரைச் சட்டத்தரணிகள் அணுகுவதற்கும் வழி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் சந்தேக நபர் தமது உறவினர்களுடன் தொடர்பு கொள்ளவும், அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்துக்கு நீதவான் ஒருவர் விஜயம் செய்து, அவர் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படவில்லை என்பதை உறுதி செய்வதற்கான வாய்ப்புகளும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

மேலும் சந்தேக நபர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்காகச் சட்ட மருத்துவ அதிகாரியிடம் முன்னிலைப்படுத்துவதற்கான திருத்தமும் செய்யப்பட்டுள்ளது.

இந்த திருத்தங்கள் சர்வதேச அழுத்தங்களைச் சமாளிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சி என்றபோதும், அதனையும் ஒரு முன்னேற்றமாகவே தாம் கருதுவதாக மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், யுத்தம் நிறைவடைந்து 10 ஆண்டுகளுக்கு மேல் கடந்து விட்ட சூழ்நிலையில் இந்த சட்டம் அவசியம் இல்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

“ நான் தமிழன். என்னிடம் நாடு வராது.” – மனோ கணேசன்

“சஜித் பிரேமதாசவும், பாட்டலி சம்பிக்க ரணவக்கவும் முரண்பாடுகளை மறந்து கரங்கோர்த்தால் மட்டுமே  இந்த காட்டாட்சியை வீழ்த்த முடியும் .” என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும்  நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன்  தெரிவித்துள்ளார்.

பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் 43ஆவது படையணியின் மாநாடு கொழும்பில் நேற்றையதினம் நடைபெற்றுள்ளது. இம்மாநாட்டில் கலந்துகொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் கலந்துகொள்ள கூடாது என கட்சியினால் அறிவறுத்தல் வழங்கப்பட்டடிருந்தது.  எனினும் நேற்றைய தினம் மனோ கணேசன், தலதா அத்துக்கோரளை மற்றும் குமார வெல்கம ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இந்த விடயம் பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் மனோ கணேசன் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டிருந்தார்,

நான் மனோ கணேசன். நான் ஒரு யதார்த்தவாதி. கொள்கைக்கும், நடைமுறைக்கும் இடையில் சமநிலை பயணம் செய்பவன். நான், இருப்பதை விட்டு விட்டு, பறப்பதை பிடிக்க அலைபவன் அல்ல. அன்றும், இன்றும், சமீப எதிர்காலம் வரைக்கும் இந்நாட்டில் பெரும்பான்மை ஆட்சிதான்.

அதற்குள் நாம் எப்படி எமது காரியங்களை செய்வது என்பதை நான், முயன்று, செய்து வருகிறேன். ஏதோ, நாட்டில் நான்தான் சர்வ அதிகாரம் கொண்ட அரச தலைவராக இருந்தது – இருப்பது போல் என்னிடம் கேள்வி கேட்பவர்களை கண்டால் எனக்கு சிரிப்புதான் வருகிறது.

முடியுமானால், என்னிடம் நாட்டை கொடுத்து பாருங்கள். மாற்றி காட்டுகிறேன். ஆனால், நான் தமிழன். என்னிடம் நாடு வராது. அதுதான் யதார்த்தம். நான் சுதந்திரமாக முடிவுகளை தைரியமாக எடுப்பதால்தான் எனக்கு எங்கும் அழைப்பு இருக்கிறது. எந்தவொரு பெரும்பான்மை கட்சிகள் – அரசியல்வாதிகள் நடத்தும் கலந்துரையாடல்களிலும் நான் கலந்துக்கொள்வேன்.

ஒருகாலத்தில் அதிகார பரலாக்கலுக்கு எதிராக இருந்த நண்பர் சம்பிக்க ரணவக்க இன்று அதுபற்றி சாதகமாக பேசுகிறார். அதுபற்றி பொது முடிவு எடுக்க வேண்டும் என்று என் பெயரை குறிப்பிட்டு கூறுகிறார். அது எமது வெற்றி. நாம் முன்னோக்கி செல்வோம். சஜித் பிரேமதாசவும், சம்பிக்க ரணவக்கவும் முரண்பாடுகளை மறந்து கரங்கோர்க்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி விரும்புகிறது. அதன்மூலமே இந்த காட்டாட்சியை வீழ்த்த முடியும் என நம்புகிறது.

தமிழ் முற்போக்கு கூட்டணி, எவருக்கும் எடுபிடி வேலை செய்யாத, ஒரு பலமான சுதந்திரமான கட்சி. இது காட்சி அல்ல, மக்களின் கட்சி. அதை இன்னமும் பலமாக நாம் வளர்ப்போம். அது ஒன்றே எமது பலம். அதன் மூலமே எம்மால் சாதிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

“ஒரு நாள் போராட்டத்தை அன்றி தொடர் போராட்டத்தை கஜேந்திரகுமார் முன்னெடுக்க வேண்டும்.” – மனோ கணேசன்

“தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அரசியல் போராட்ட அறிவிப்பை நான் முழு மனதுடன் வரவேற்கின்றேன். அது ஒருநாள் போராட்டமாக இல்லாமல், தொடர் போராட்டமாக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றேன்.” என  தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

13ஆம் திருத்தம் தமிழ் மக்களுக்காக உருவாக்கப்பட்ட சதி எனவும் அதற்கு எதிராக தொடர் போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாகவும்  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  தெரிவித்திருந்தார். இது தொடர்பில் பேசிய போதே மனோகணேசன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்த போது,

“நண்பர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இம்மாத இறுதியில் அரசியல் போராட்டத்தை அறிவித்துள்ளார். உண்மையில் அவரது கட்சி நிலைப்பாட்டின்படி இது மிக சரியான முடிவாகும். 13 மற்றும் மாகாண சபைகள் வேண்டாம்’ என்றால் மாற்றுப் பயணம் இருக்க வேண்டும்.

விடுதலைப்புலிகள் 13ஐ நிராகரித்தார்கள். ஆனால், நிராகரித்து விட்டு, “எல்லாம் தானாக மாறும்” என அவர்கள் வாளாவிருக்க இல்லை. புலிகளது வழிமுறையை ஏற்காதவர்கள்கூட, மாற்றுப் பயணத் திட்டத்தை முன்னெடுத்த அவர்களது அரசியல் நேர்மையை மதித்தார்கள்.

2005 முதல் 2009 வரை இறுதிப் போர் காலத்தில் கொழும்பில் வந்து அடைக்கலம் புகுந்த வடக்கு – கிழக்கு புலத்து உடன்பிறப்புகளுக்காக நானும், எனது கட்சியும், நான் உருவாகிய ‘மக்கள் கண்காணிப்பு குழு’ என்ற மனித உரிமை இயக்கமும் வீதி போராட்டங்களை உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நடத்திப் போராடினோம்.

மேற்கு நாடுகளில் தஞ்சம் புகுந்து, அங்கிருந்தபடி நான் அறிக்கை அரசியல் செய்யவில்லை. இது இங்கே சிங்கத்தின் குகையில் இருந்தபடி நான் நடத்திய என் நேர்மையான அறப் போராட்ட வரலாறு. ஆகவே, ’13 என்பது முதல்படி கூட கிடையாது. அதை தீண்டவும் மாட்டோம். அதற்கு அப்பால் போயே தீருவோம்’ என்பவர்கள் மாற்று போராட்ட பயணத்தை முன்னெடுக்க வேண்டும். 13 இற்கு அப்பால் செல்லும் அந்த மாற்றுப் பயணம் ஊடக சந்திப்புகளுக்கு அப்பால் செல்ல வேண்டும்.

‘அமெரிக்காவில் இருந்து இந்திரன் கொண்டு வருகின்றான். ஆபிரிக்காவில் இருந்து சந்திரன் கொண்டு வருகிறான்’ என்று அறிக்கை இடுவதெல்லாம் போராட்டம் அல்ல. ஆகவே, நண்பர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் போராட்ட அறிவிப்பை நான் முழு மனதுடன் வரவேற்கின்றேன். அது ஒருநாள் போராட்டமாக இல்லாமல், தொடர் போராட்டமாக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றேன்” – என்றார்.

“மலையகத் தமிழர்களை பாரத தாய் ஒருபோதும் மறக்காது.” – மனோ கணேசன்

“மலையகத் தமிழர்களை பாரத தாய் ஒருபோதும் மறக்காது.” என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

மலையக பாரம்பரிய கலை, கலாசார நிகழ்வுகளுடன் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று நுவரெலியா சினிசிட்டா மைதானத்தில் ஆண்டுக்கான தைப்பொங்கல் விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இலங்கை மக்களை, குறிப்பாக மலையகத் தமிழர்களை பாரத தாய் ஒருபோதும் மறக்காது என இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தமதுரையின் போது குறிப்பிட்டார். ஆகவே, எமது மக்களுக்கு தேவையானவற்றை பெற்றுக்கொள்வதற்கு இந்தியத் தாயுடன் பேசுவதற்கும், சண்டையிடுவதற்கும், தொல்லைக்கொடுப்பதற்கும் எமக்கு உரிமை இருக்கின்றது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நோர்வூட் வந்திருந்தபோது 10 ஆயிரம் வீடுகள் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். அவருடன் பேச்சு நடத்தி நாமே அதனை பெற்றோம். தற்போது 4 ஆயிரம் வீட்டுத் திட்டம் நிறைவுபெற்றுள்ளது. 10 ஆயிரம் வீட்டுத் திட்டம் எமது ஆட்சியின்கீழ் நிச்சயம் ஆரம்பமாகும்.

இனி நல்லாட்சி அல்ல, விரைவில் வல்லாட்சி அதாவது வல்லவர்கள் ஆளக்கூடிய ஆட்சி உருவாகும். பொங்கலுக்கு முன்னர் போகிப் பண்டிகை கொண்டாடப்படும். பழையவை எரிக்கப்படும். நாமும் இந்நாட்டிலுள்ள சில பழைய விடயங்களை எரிக்க வேண்டியுள்ளது.

இந்நிகழ்வில் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவரும், எதிர்கால ஜனாதிபதியுமான சஜித் பிரேமதாச, மலையக மக்களுக்கு நில உரிமை வழங்கப்படும் என உறுதியளித்தார். வருங்கால ஜனாதிபதியிடம் அந்த உறுதிமொழியை பெற்றுள்ளோம்.” – என்றார்.

“எனக்கு ஆதரவாக பேசிய முதல் சிங்கள அமைச்சர், சுசில் பிரேமஜயந்த தான்.” – மனோ கணேசன்

“நுவரெலிய மாவட்டத்தில், புதிய பிரதேச சபைகள் அமைத்தே ஆக வேண்டும்” என நான் பிரதமர் ரணில் விக்கிரமசுங்க உடன் கடும் வாய்தர்க்கம் செய்த போது எனக்கு ஆதரவாக பேசிய முதல் சிங்கள அமைச்சர், சுசில் பிரேமஜயந்த தான் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தொடர்பில், மனோ கணேசன் கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு கூறினார். அவர்  மேலும் கூறியதாவது,

அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொழும்பு பெஜட் வீதி இல்லத்தில் நடைபெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தில், “நுவரெலியா மாவட்டத்தில், புதிய பிரதேச சபைகள் அமைத்தே ஆக வேண்டும்” என நான் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உடன் கடும் வாய்தர்க்கம் செய்த போது, பிரதமர் ரணில், “நுவரேலியாவில் புதிய சபைகள் இப்போது வேண்டாம். அம்பாறை மாவட்டத்தில் புதிய சபைகள் பிறகு அமைக்கப்படும் போது, இதையும் அப்போது அமைப்போம். ஆகவே இப்போது இதை ஒத்தி வைப்போம்” என கூறிய போது, எனக்கு ஆதரவாக பேசிய முதல் சிங்கள அமைச்சர், சுசில் பிரேமஜயந்த தான்.

நுவரெலியா மாவட்டத்தில் இருக்கின்ற மிகப்பெரிய அம்பகமுவ, நுவரெலியா பிரதேச சபைகளை பிரித்து புதிய பிரதேச சபைகளை அமைக்க வேண்டும் என நான் கோரிய போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, “அம்பாறை மாவட்டத்திலும் புதிய பிரதேச சபைகளை அமைப்பதாக நான் தேர்தல் பிரசாரத்தின் போது, அமைச்சர் ரவுப் ஹக்கீமின் மேடையில் இருந்து அந்த மக்களுக்கு உறுதி அளித்துள்ளேன். அந்த சபைகள் இன்னமும் அமைக்கப்படவில்லை. ஆகவே, அம்பாறை மாவட்டத்தில் புதிய சபைகள் பிறகு அமைக்கப்படும் போது, இதையும் அப்போது அமைப்போம். இப்போது இதை ஒத்தி வைப்போம். இப்போது இதை அமைத்தால், ஏன் நுவரெலியாவில் மட்டும் அமைக்கிறீர்கள்? ஏன் அம்பாறையில் அமைக்கவில்லை? என்ற குற்றச்சாட்டு எழும்” என்றார்.

“அம்பாறை மக்களுக்கு நீங்கள் வாக்குறுதி அளித்து இருந்தீர்கள் என்றால் அதை நிறைவேற்றுங்கள். அது உங்களுக்கும் அமைச்சர் ரவுப் ஹக்கீமுக்கும் இடைப்பட்ட பிரச்க்சினை. ஆனால், நுவரெலியா வேறு. அம்பாறை வேறு. தமிழ் முற்போக்கு கூட்டணியாக நாங்களும் எங்கள் மக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளோம். நாட்டில் ஏனைய பிரதேசங்களில் 25,000 பேருக்குகூட ஒரு பிரதேச சபை இருக்கும் போது, தலா இரண்டரை இலட்சம் ஜனத்தொகை கொண்டதாக அம்பகமுவ, நுவரெலிய பிரதேச சபைகள் 30 வருடங்களாக செயற்படுகின்றன. இது மிகப்பெரும் அநீதி. பாரபட்சம். எமக்கு கட்டாயம் புதிய பிரதேச சபைகள் அமைத்தே வேண்டும்” என சிங்களத்தில் கடுமையாக சத்தம் போட்டேன்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெஜட் வீதி இல்லத்தில் நடைபெற்ற அந்த விசேட அமைச்சரவை கூட்டத்தில், இதை சொல்லி விட்டு, நான் அமர்ந்து இருந்து நாற்காலியை உதைத்து விட்டு, கூட்டத்திலிருந்து, வெளியேற கோபத்துடன் நான் எழுந்த போது, எனக்கு ஆதரவாக “மனோ எமதிதுமாகே இல்லீம இதாம சாதாரணய்” (அமைச்சர் மனோவின் கோரிக்கை மிகவும் நியாயமானது) என சொன்ன நண்பர்தான், அன்றைய அமைச்சர் சுசில் பிரேமஜயந்த.

அதன் பிறகு தான் இன்று நுவரெலியாவில் செயற்படும், நோர்வுட், மஸ்ககெலியா, அம்பகமுவா, அக்கரபத்தனை, தலாவக்கலை, நுவரெலிய ஆகிய ஆறு புதிய பிரதேச சபைகளை அமைக்கும் வர்த்தமானியை வெளியிட அன்றைய அரசு இணங்கியது.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணைக்கு சமூகம் அளிக்கும்படி கோரி மனோகணேசனுக்கு தமிழ் மொழியில் அழைப்பாணை !

கடந்த ஆட்சிக்கு முந்தைய ஆட்சியின் போது நடைபெற்றதாக கூறப்படும் ஊழல்களை விசாரிக்க, கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு குழு மற்றும் அதன் செயலகம் தொடர்பாக இந்த ஆட்சியின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி ஆணைக்குழு, சார்பாக ஆணைக்குழுவின் செயலாளர் எச். எம். பீ. பி. ஹேரத், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனை இம்மாதம் 29ம் திகதி விசாரணைக்கு சமூகம் அளிக்கும்படி கோரி தமிழ் மொழியில் அழைப்பாணையை மனோவின் இல்லத்துக்கு அந்த வலய பொலிஸ் நிலையம் மூலம் அனுப்பி வைத்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைக்கு சமூகம் அளிக்கும்படி, கடந்த வாரம் தனி சிங்கள மொழியில் இந்த அழைப்பாணை மனோ கணேசனுக்கு அனுப்பட்ட போது, அதை ஏற்க மறுத்து தமிழ் மொழியில் அழைப்பாணையை அனுப்பும்படி மனோ கூறி இருந்தார். இந்நடவடிக்கை ஊடகங்களில் பேசுபொருளாக இருந்தது.

இந்நிலையில் தற்போது தமிழ் மொழியில், இந்த அழைப்பாணையை மனோ எம்பியின் இல்லத்துக்கு அந்த வலய பொலிஸ் நிலையம் மூலம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் சார்பாக ஆணைக்குழுவின் செயலாளர் எச். எம். பீ. பி. ஹேரத் அனுப்பி வைத்துள்ளார்.

“பெளத்த தொல்பொருள் சின்னங்கள் என்று கூறி இந்து ஆலயங்களை அபகரிக்கும் சதியில் ஞானசார தேரர்.” – மனோகணேசன் குற்றச்சாட்டு !

“வட கிழக்கில், பெளத்த தொல்பொருள் சின்னங்கள் என்று கூறி இந்து ஆலயங்களை அபகரிக்கும் சதியில் ஞானசார தேரருக்கும் பங்கு இருக்கின்றது.” என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இந்து ஆலய வளவில் பெளத்த தேரரின் சடலத்தை எரித்தவர் மீது சட்டம் பாயாது என்றும் ஆனால், முகநூலில் எதையாவது சிறுபிள்ளைத்தனமாக எழுதி விடும் தமிழ் இளைஞர்களைத் தேடி வீட்டுக்கு பொலிஸ் வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள அவர்,

“அமைச்சர் அலி சப்ரியை பதவி விலகுமாறுக் கூறும் ஞானசார தேரரை, ஜனாதிபதி செயலணிக்கு ஜனாதிபதிதான் நியமித்தார். அமைச்சர் அலி சப்ரியையும் அமைச்சராக இந்த ஜனாதிபதிதான் நியமித்தார். இந்நிலையில் ஜனாதிபதியின் ஞானசாரர், ஜனாதிபதியின் அமைச்சரை பதவி விலக சொல்கிறார். இதென்ன கூத்து?

எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் இப்படி சொன்னால் அதில் ஒரு அரசியல் தர்க்கமாவது இருக்கும். அப்படியும் நான் அதை சொல்ல மாட்டேன். அரசை நாம் கடுமையாக எதிர்ப்பது என்பது வேறு. ஆனால் இந்த அரசுக்குக்கு உள்ளே சிறுபான்மை அமைச்சரவை அமைச்சர்கள் இருப்பது நல்லது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இதுதான் இலங்கை அரசு. அமைச்சர்கள் அலி சப்ரி, டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் அங்கே இருப்பதால் தமிழ் பேசும் மக்களின் குறைந்தபட்ச பிரச்சினைகளையாவது அரசாங்க தலைமையின் கவனத்திற்கு கொண்டு வர முடிகிறது.

இந்த குறைந்தபட்ச அவகாசத்தையும்கூட தட்டி பறிக்க இந்த காவி பயங்கரவாதி ஆள் முயல்கிறார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றை தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக இந்த ஆள் பேசுகிறார். கிறிஸ்மஸ் பிறக்கிறது. அதற்கும் இவர் எதையாவது திருவாய் மலருவார். முஸ்லிம்களுக்கு எதிராக பலமுறை பலதையும் பேசியுள்ளார். இந்துக்களை அரவணைப்பது போல் பம்மாத்து காட்டுகிறார்.

ஆனால், வட கிழக்கில், பெளத்த தொல்பொருள் சின்னங்கள் என்று கூறி இந்து ஆலயங்களை அபகரிக்கும் சதியில் இவரும் இருக்கிறார். இதுபற்றி இவருக்கும் எனக்கும் ஒருமுறை வாக்குவாதமே நடந்தது. இந்து ஆலய வளவில் பெளத்த தேரரின் சடலத்தை எரித்தவர் தானே இவர்?
இவர் மீது சட்டம் பாயாது. ஆனால், முகநூலில் எதையாவது சிறுபிள்ளைத்தனமாக எழுதி விடும் தமிழ் பையன்களை தேடி வீட்டுக்கு பொலிஸ் வருகிறது.

இந்த ஆளுக்கு விசேட சட்ட விலக்கு இருக்கிறது. ஆகவே, இவரது செயலணியின் பெயரை ‘ஒரு ஆளுக்கு ஒரு சட்டம்’ என நான் பிரேரிக்கிறேன்.

அதேபோல், இவரது இந்த வாயில் வருவதை எல்லாம் பேசும் நடத்தையை ஆட்சேபித்து, செயலணியில் இருக்கும் தமிழ், முஸ்லிம்கள் உடன் பதவி விலக கோருகிறேன். இல்லா விட்டால் இந்த பாவம் இவர்களையும் சேரும் எனவும் கூறுகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

“சிங்கள தரப்புடன் இணைந்து அரசியல் நடத்த வேண்டிய கட்டாயத்தில் மனோகணேசன்.” – கஜேந்திரகுமார்

தென்னிலங்கை சிங்கள தரப்புடன் இணைந்து அரசியல் நடத்த வேண்டிய கட்டாயத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் உள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலம் இது தொடர்பில் பேசிய அவர்,

ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் ஒற்றையாட்சிக்குள் திணிக்கும் சதி வலையில் சிக்கிக் கொள்ளக் கூடாது.  இந்தியாவின் ஒற்றையாட்சிக்குள் தமிழ் பேசும் தலைவர்களான மனோ கணேசன் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர் கலந்து கொண்டுள்ளமை வேதனையளிக்கின்றது.

உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் முஸ்லிம் மக்களே பேரினவாதிகளால் இலக்கு வைக்கப்படுகின்றமையை உணர்ந்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமை செயற்பட வேண்டும் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.

சிங்கள மொழியில் விசாரணைகளுக்கான அழைப்பாணை – ஏற்க மறுத்த மனோகணேசன் !

கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு குழு மற்றும் செயலகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் விசாரிப்பதற்காக தற்போதைய ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட விசேட ஜனாதிபதி ஆணைக்குழு, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனுக்கு, விசாரணைக்கு சமூகமளிக்குமாறு அழைப்பாணை அனுப்பியுள்ளது.

தமது இல்லத்துக்கு, கொஹுவளை வலய பொலிஸ் நிலையம் மூலமாக, கொண்டு வந்து தரப்பட்ட விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அழைப்பாணை முழு சிங்கள மொழியில் மாத்திரம் இருந்த காரணத்தால், அதை தமிழ் மொழியில் அனுப்புமாறும், அதுவரை அதை ஏற்று தன்னால் விசாரணைக்கு சமூகமளிக்க முடியாது என்றும், தமிழ் மொழியிலான ஒரு மின்னஞ்சல் பதில் கடிதத்தை, விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு, மனோ கணேசன் அனுப்பி வைத்துள்ளார்.

இதுபற்றி மனோ ஊடகங்களுக்கு கூறியுள்ளதாவது,

இந்த விசேட ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகள் நீண்ட காலமாக நடக்கின்றன. பல எதிரணி எம்பீக்கள் பலமுறை அழைக்கப்பட்டார்கள். நான் அழைக்கப்படவில்லை. இந்நிலையில் இப்போது திடீரென நான் அழைக்கப்பட்டுள்ளேன். ஏனிந்த திடீர் அழைப்பு என தெரியவில்லை. தனது மூன்றில் இரண்டு பலத்தை பயன்படுத்தி, கடந்த ஆட்சியின் முழு அமைச்சரவையையும், குற்றம் சாட்டி தண்டனைக்கு உள்ளாக்க முடியும் என்ற பாணியில் ஜனாதிபதி சமீபத்தில் பேசி இருந்தார். அதன் வெளிப்பாடோ இதுவென தெரியவில்லை.

இந்த அழைப்பாணை முழுக்க சிங்கள மொழியில் மாத்திரம் இருக்கின்றது. இந்நிலையில் இதை ஏற்று என்னால், விசேட ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளுக்கு வர முடியாது என அறிவித்து விட்டேன். அத்துடன் எனக்கு சிங்கள மொழியில் இந்த அழைப்பாணை அனுப்பி இந்த விசேட ஜனாதிபதி ஆணைக்குழு ஆணையாளர்கள், இலங்கை அரசியலமைப்பின் 4ம் அத்தியாயம், 22ம் விதி (2), (a) பிரிவுகளை மீறியுள்ளனர் எனவும் சுட்டிக்காட்டி உள்ளேன்.

இலங்கை அரசியலமைப்பின் 4ம் அத்தியாயம், 22ம் விதி (2), (a) என்ற சட்ட விதிகளின்படி இலங்கையின் எந்தவொரு பிரஜையும், எந்தவொரு அரசு அலுவலகத்தில் இருந்தும், தமிழ் மொழியில் எழுத்து மூலமாகவும், வாய்மொழி மூலமாகவும், தொடர்பாடல்களை பெற உரிமை கொண்டவர்கள் என்பதையும், நான் ஒரு தமிழர் என்பதை அறிந்த நீங்கள், இலங்கையின் சக ஆட்சிமொழியான தமிழ் மொழியில், என்னுடன் தொடர்பாடல் செய்ய தவறி, அரசியலமைப்பு சட்ட விதிகளை மீறியுள்ளீர்கள் எனவும், நான் இந்த விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு சுட்டிக்காட்டியுள்ளேன்.

எதுவானாலும் முதலில் தமிழ் மொழியில் இந்த விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அழைப்பாணை வரட்டும். அப்புறம் விசாரணைகளை அவசியமானால் சந்திப்பேன். ஆனால், அங்கேயும் பிழையில்லா தமிழ் மொழியில் இவர்கள் எனது வாக்குமூலத்தை எழுதி பதிவு செய்ய வேண்டும்.

“தேர்தல் முறைமையை மாற்றி நாட்டை சர்வதிகார படுகுழியில் தள்ள வேண்டாம்.” – மனோ கணேசன்

“ஒரு சிலரின் தேவைகளுக்காக, விகிதாசார தேர்தல் முறைமையை மாற்றி நாட்டை சர்வதிகார படுகுழியில் தள்ள வேண்டாம்.” என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

தேர்தல் முறைமை சீர்திருத்த தெரிவுக்குழு நாடாளுமன்ற வளாகத்தில் தவிசாளர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் கூடியபோது, த.மு.கூ. தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர் வி. இராதாகிருஷ்ணன்,  நாடாளுமன்ற .உறுப்பினர்களான வேலு குமார், உதயகுமார் ஆகியோர் அடங்கிய கூட்டணி தூதுக்குழுவினர் சமூகமளித்தனர்.

அதன்போது கூட்டணியின் நிலைப்பாடுகளை எடுத்துக்கூறிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது:-

நீண்டகாலமாக பேசப்பட்டு வந்த தேர்தல் முறை மாற்றம் எமது ஆட்சிகாலத்தில் கலப்பு முறைக்கு பரீட்சார்த்தமாக மாற்றப்பட்டது. ஆனால், அந்த மாற்றம் உள்ளூராட்சி மன்றங்களில் நிலையான ஆட்சிக்கு வழி காட்டவில்லை. அத்துடன் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை நாடெங்கும் ஏறக்குறைய அறுபது முதல் எழுபது விகிதம் அதிகரித்தது. ஆனாலும், குழப்ப நிலைமையே ஏற்பட்டது.

இந்நிலையில், இதே விதமான குழப்ப நிலைமையை  மாகாண சபை, நாடாளுமன்றங்களிலும் ஏற்படுத்தி இந்நாட்டின் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்க வேண்டாம். எமக்கு முன் சாட்சியம் அளித்த ஒரு இன்னொரு கட்சியின் பிரதிநிதி, சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவங்களை வெட்டி குறைத்தால், அவர்கள் கடந்த காலங்களை போல் வேறு வழி இல்லாமல், ஆயுதம் தூக்கும் நிலைமைக்கு தள்ளப்படுவார்கள் .

அது உண்மை. ஆனால், அந்த நிலைமை வடக்கில் மட்டுமல்ல. தெற்கிலும் ஏற்பட்டது என்பதை நான் இந்த குழுவுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நாடாளுமன்றத்தில் நியாயமான பிரதிநிதித்துவங்களை பெற முடியாத நிலையில், தென்னிலங்கையிலும் சிங்கள இளையோர் இப்படி ஆயுதம் தூக்கினார்கள். இன்று விகிதாசார முறையின் கீழ்தான் இந்நிலைமை மாறியது.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை அறிமுகம் செய்த ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனதான், உள்ளூராட்சி, மாகாணசபை, நாடாளுமன்றங்களுக்கு விகிதாசார தேர்தல் முறைமையையும் கொண்டு வந்து அறிமுகம் செய்தார்.   ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் சில பிழையான செய்கைகளுக்கு மத்தியில் அவரது தீர்க்கதரிசனமிக்க சரியான செய்கை இதுவாகும்.

இன்று நீங்கள் ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இன்னமும் பலமிக்கதாக 20ம் திருத்தத்தின் மூலம் மாற்றியுள்ளீர்கள். இது உண்மை. எனவே ஒரு சிலரின் தேவைகளுக்காக, விகிதாசார தேர்தல் முறைமையை மாற்றி நாட்டை சர்வதிகார படுகுழியில் தள்ள வேண்டாம்.

இலங்கையின் அனைத்து இன மற்றும் சமூக குழுவினர்களும் பிரதிநிதித்துவம் செய்ய இடந்தரும் வண்ணமும், பெரிய, சிறிய கட்சிகள் தாம் பெறுகின்ற வாக்கு தொகைகளுக்கு ஏற்ப பிரதிநிதித்துவங்கள் பெரும் வண்ணமும், உள்ளூராட்சி, மாகாணசபை, நாடாளுமன்ற தேர்தல்கள் முழுமையான விகிதாசார முறைமையின்படியே நடத்தப்பட வேண்டும். இதன்மூலம் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை கண்காணித்து சமநிலைப்படுத்தும் நிறுவனங்களாக ஜனநாயகத்தின் பேரில் நாடாளுமன்றமும், மாகாண சபைகளும் செயற்பட முடியும். இதுவே தமிழ் முற்போக்கு கூட்டணியின் நிலைப்பாடு என்றார்.