மனித உரிமை மீறல்கள்

மனித உரிமை மீறல்கள்

போரை நடத்தியவன் நானே. போர்க் குற்றங்களில் யாரும் ஈடுபடவில்லை – முன்னாள் ஜனாதிபதி மகிந்த 

போரை நடத்தியவன் நானே. போர்க் குற்றங்களில் யாரும் ஈடுபடவில்லை – முன்னாள் ஜனாதிபதி மகிந்த

 

விடுதலைப் புலிகளுடனான போரில் இலங்கையின் முன்னாள் படைத்தளபதி சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்தகரெனகொட மற்றும் முன்னாள் ராணுவத் தளபதி ஜகத் ஜெயசூர்யா ஆகியோருக்கு எதிரான எந்த குற்றச்சாட்டுகளும் எங்கும் நிரூபிக்கப்படவில்லை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மகிந்த ராஜபக்ச வெளியிட்ட அறிக்கையில், “இலங்கையின் அப்போதைய நிறைவேற்று ஜனாதிபதியாக இருந்த நான்தான், விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போரை நடத்த முடிவு செய்தேன். தாக்குதலில் ஈடுபட்டிருந்த போது இராணுவம் அந்த முடிவை செயல்படுத்தியது. போரின் போது பெரிய அளவிலான மனித உரிமை மீறல்கள் நடந்ததாக பிரித்தானிய அரசாங்கத்தின் குற்றச்சாட்டுகளை நான் கடுமையாக நிராகரிக்கிறேன். எனவே, இலங்கையின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தங்கள் கடமைகளைச் செய்த ஆயுதப் படை வீரர்களை குறிவைத்து வெளிநாட்டு அரசாங்கங்கள் மற்றும் அமைப்புகளால் நடத்தப்படும் அழுத்தங்களுக்கு எதிராக தற்போதைய அரசாங்கம் நிற்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

புலிகளை வென்றதை வைத்து மகிந்தவும் ஏனைய எதிர்க்கட்சிகளும் தேசிய மக்கள் சக்திக்கு நெருக்கடிகொடுக்க நேரம் பார்த்து இருந்தனர். அதற்கான வாய்ப்பை பிரித்தானிய அரசின் தடையுத்தரவு அவர்களுக்கு பெற்றுக்கொடுத்துள்ளது. அதே போல் மாறி மாறி இனவாதம் பேசி அரசியல் நடத்துவதற்கு தடையாக உள்ள தேசிய மக்கள் சிக்தியை கவிழ்ப்பதற்கும் தமிழ் தேசியக் கட்சிகளும் சிங்கள பேரினவாதக் கட்சிகளோடு கூட்டுச் சேர்ந்து இனவாதத்தை தூண்டிவிட்டு தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியை கவிழ்க்கலாம் என பல்வேறு முயற்சிகளையும் எடுக்கின்றனர். ஜனாதிபதித் தேர்தல், உள்ளுராட்சித் தேர்தலில் மண் கவ்விய சிங்கள தமிழ் தேசியவாதக் கட்சிகளுக்கு உள்ள ஒரே துருப்புச் சீட்டு உள்ளுராட்சி சபை. வாயில் வந்தது எல்லாம் பேசி களமாடுகின்றனர். மே ஆறு பலருக்கும் பல கட்சிகளுக்கும் இறுதி ஊர்வலமாக அமைந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

நானும் உள்ளேன் ஐயா முன்னாள் எம்பி எம். ஏ. சுமந்திரன் !

நானும் உள்ளேன் ஐயா முன்னாள் எம்பி எம். ஏ. சுமந்திரன் !

 

இலங்கையில் நடைபெற்ற கடந்த கால மனித உரிமை மீறல்களை கண்டுங்காணாதது போல் கடந்து செல்கிறது என்.பி.பி அரசாங்கம். சுமந்திரன் குற்றச்சாட்டு. ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறையை நிராகரிப்பதாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. இந்நிலையில் கடந்தகால மனித உரிமை மீறல்கள் பற்றிய உண்மைகளை அறியவேண்டிய அவசியம் தமக்கு இல்லை அல்லது அவை மூடிமறைக்கப்படவேண்டும் என்ற தோரணையில் என்பிபி செயற்படுவதையே காண்பிப்பதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் விசனம் வெளியிட்டுள்ளார்.

இம்முறை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் ஆகிய மூன்று கட்டமைப்புக்களையும் பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும், உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையொன்றை ஸ்தாபிப்பதன் ஊடாக நாட்டில் நிலவும் நீண்டகாலப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாகவும் தெரிவித்திருக்கிறார். அவை இலங்கையில் மனித உரிமைககள், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிசெய்வதை இலக்காகக்கொண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளுக்குத் தடையேற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றன என்றும் எம். ஏ. சுமந்திரன் குற்றம் சாட்டினார்.

இந்த செயற்பாடுகளுக்காக அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் தான் அவர்கள் கூறுவதை உண்மையிலேயே நடைமுறைப்படுத்தப்போகிறார்களா என்பது தெரியவரும். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமக்கு ஆணை அளிக்கப்பட்டிருப்பதாகக் கூறும் தற்போதைய அரசாங்கம் அம்மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களின் பிரதான கோரிக்கையை இவ்வாறு நிராகரிப்பது ஏற்புடையதன்று என்றார். மைத்திரியின் நல்லாட்சி அரசாங்கத்திற்கு முண்டு கொடுத்த தமிழரசுக் கட்சியில் அங்கம் வகித்த சுமந்திரன் அப்போது இவ்விடையம் குறித்து காத்திரமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என விமர்சனத்திற்குள்ளாகிறார்.

ராஜபக்சக்கள் மீதான தடையின் பின்னணியில் கனேடிய பிரதமர்..?

கனேடிய பிரதமர் அலுவலகத்தின் வற்புறுத்தலின் பேரில் இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளின் பெயர்கள் தடைபட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மனித உரிமை மீறல்களில் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமல்ல, அதற்கு தலைமை வகித்தவர்களும் இணைக்கப்பட வேண்டும் என கனேடிய பிரதமர் அலுவலகம் கருதுகின்றது.

போரின் போது மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்காக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் மஹிந்த மற்றும் கோட்டாபய ராஜபக்சவுக்கு கனடா பயணத் தடை விதித்திருந்தது.

இதேவேளை கனடாவில் உள்ள புலம்பெயர் தமிழர்களின் அழுத்தம் காரணமாக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன என உயர்ஸ்தானிகர் ஹர்ஷ நவரத்ன குற்றம் சாட்டியுள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கோரிக்கையை அவர் பின்பற்றவில்லை என்பதனாலேயே இந்த நிலைமைக்கு வழிவகுத்தது என்றும் கூறியுள்ளார்.