போதைப்பொருள் பாவனை

போதைப்பொருள் பாவனை

மாணவர்களை இலக்கு வைக்கும் போதைப்பொருள் மாபியாக்கள் !

மாணவர்களை இலக்கு வைக்கும் போதைப்பொருள் மாபியாக்கள் !
வவுனியா வேப்பங்குளம் பகுதியிலுள்ள வீட்டில் போதை மாத்திரை வியாபாரம் செய்யப்படுவதாக வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் (DCDB) பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயத்திலக்க அவர்களின் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சந்தேகத்திற்கிடமான குறித்த வீட்டின் மீது திடீர் சுற்றிவளைப்பை நேற்று 4ஆம் திகதி  மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 188 போதை மாத்திரைகளுடன் அதேபகுதியைச் சேர்ந்த 22 மற்றும் 23 வயதுடைய இரு இளைஞர்களையும் கைது செய்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணைகளில் குறித்த போதை மாத்திரைகள் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்தது என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக்கு போதைப்பொருள் கடத்துவதில் தமிழக மீனவக் கிராமங்கள் நுழைவாயில் ! இந்திய மத்திய உளவுத்துறை

இலங்கைக்கு போதைப்பொருள் கடத்துவதில் தமிழக மீனவக் கிராமங்கள் நுழைவாயில் ! இந்திய மத்திய உளவுத்துறை

 

இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க மட்டும் வருவதில்லை. அவர்கள் அங்கிருந்து போதைப்பொருட்களையும் பெருமளவில் கொண்டுவருகின்றனர் என்பதை இந்திய மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. வட இலங்கையில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து இருப்பதற்கு எல்லைதாண்டி வந்து மீன் பிடிப்பவர்களும், அவர்களுடைய ஏஜென்டுகளாகச் செயற்படும் எம்மவர்களும் காரணமாக உள்ளனர். சென்னையின் திருவொற்றியூர் தொடங்கி ராமேஸ்வரம் வரையுள்ள மீனவக் கிராமங்கள் இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தலுக்கான நுழைவாயிலாக மாறியிருப்பதாக இந்திய மத்திய உளவுத்துறை தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் பாவனைக்கு வடக்கு இளைஞர்கள் அடிமையாகி, தங்கள் இளமையையும் வாழ்வையும் தொலைப்பது பற்றி எவ்வித அக்கறையும் இல்லாமல் வடக்கில் உள்ள தமிழ் தேசியக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மௌனமாகவே உள்ளனர். இந்திய மீனவர்கள் மூலமே பெரும்தொகையான போதைப்பொருள் யாழ் வருகின்றமையை மூடிமறைத்து, சிங்களவர்களும் முஸ்லீம்களும் தான் போதைப்பொருட்களை திட்டமிட்டு தமிழ் இளைஞர் மத்தியில் பரப்புகின்றனர் என்று குற்றம்சாட்டிவிட்டு பொலிஸாரும் படையினரும் தான் இதற்குக் காரணம் எனவும் தெரிவித்துவிட்டு, அவர்கள் தங்களுடைய அரசியல் பிரச்சாராத்திற்காக இதனைப் பயன்படுத்தி வந்தனர். இதனால் இளைய சமூகம் சீரழிந்தது தான் மிச்சம்.

இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் உள்ள மீனவக் கிராமங்களைக் கண்காணிப்பதற்கான குழுக்கள் அமைக்கப்பட உள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு கடத்துவதற்காக் கொண்டுவரப்படும் போதைப்பொருட்கள் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு பின்பு அங்கிருந்து மண்டபம் முகாமுக்கு வந்து தமிழக மீனவக் கிராமங்களிலும் அவர்களுடைய படகுகளிலும் பதுக்கி வைக்கப்பட்டு இலங்கைக்கு கொண்டு வரப்படுகின்றது என தமிழக காவல்துறை தலைவர் சங்கர் ஜீவால் சுட்டிக்காட்டியுள்ளார். அதனால் தமிழக மீனவக் கிராமங்களில் கண்காணிப்புக் குழக்களை அமைக்க காவத்துறைத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்

போதைப்பொருள் வாங்க பணம் கேட்டு மனைவியுடன் வாக்குவாதம் – சிறுவனைத் தரையில் அடித்த தந்தை கைது !

போதைப்பொருள் வாங்க பணம் கேட்டு மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஏழு வயது சிறுவனைத் தரையில் அடித்துப் பலத்த காயப்படுத்திய தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு, தனது ஏழு வயது சிறுவனைத் தனது கணவர் தரையில் அடித்து காயப்படுத்தியதாகப் பெண் ஒருவர் கொழும்பு கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளார் .
தனது கணவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும், போதைப்பொருள் வாங்கப் பணம் கேட்டு தன்னையும் பிள்ளையையும் தொடர்ந்து துன்புறுத்தியதாகவும் அவர் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார் .
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டபோது , சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் காயமடைந்த 7 வயது சிறுவன் கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் போதைப்பொருள் பாவனைக்காகப் பல சந்தர்ப்பங்களில் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டவர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது .
நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகாமையில் 15 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் – 2 வருடங்களாக நடைபெற்ற போதைப்பொருள் கடத்தல்!

ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகில் இன்று (வியாழக்கிழமை) நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது, ​​டுபாய் கபில என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிக்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படும் 15 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நடத்திய இந்த சுற்றிவளைப்பில் 13 கிலோ ஹெரோயின், 6 கிலோ கிராம் ஹாஷ், 500 கிராம் கொக்கெய்ன் மற்றும் 15 இலட்சம் ரூபா கைப்பற்றப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட கார் ஒன்றுடன், பணத்தை வைத்திருந்த சந்தேக நபர் மற்றும் பெண் சந்தேக நபர் ஒருவரும் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

51 வயதான சந்தேக நபர் ஒருவரும் பன்னிபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நபர் ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தை அண்டிய பகுதியில் வாடகை வீட்டில் சுமார் 2 வருடங்களாக பாரியளவில் போதைப்பொருள் கடத்தலை மேற்கொண்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

இதேவேளை, கடந்த ஏப்ரல் 24ஆம் திகதி இந்த போதைப்பொருள் விநியோகம் தொடர்பில் கல்வி அமைச்சின் அதிகாரி ஒருவர் 1 கிலோ 60 கிராம் ஹெரோயின் மற்றும் 49 இலட்சம் ரூபா பணத்துடன் கிராண்ட்பாஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

போதைப்பொருள் பாவனை தொடர்பில் அறிவிக்குமாறு மக்களிடம் பொலிஸார் வேண்டுகோள்!

யுக்திய நடவடிக்கையை மேலும் வெற்றிகரமாக செயற்படுத்தும் வகையில், போதைப்பொருள் குறித்த தகவல்களை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் தொலைபேசி எண்களை அறிமுகப்படுத்தியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

 

தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளும்போது அழைப்பாளரின் அடையாளத்தை அடையாளம் காண முடியாத வகையில் இந்த இலக்கங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸ் பிரிவுகளுக்குப் பொறுப்பான அதிகாரிகளின் தொலைபேசி இலக்கங்கள் கீழே காட்டப்பட்டுள்ளன.

மகளிர் தினத்தன்று இடம்பெற்ற  போதைப்பொருள் விருந்து – 27 இளைஞர்கள் கைது !

ஹோமாகம மாகம்மன ஆடம்பர வீடமைப்புத்  தொகுதியில் மகளிர் தினத்தன்று இடம்பெற்ற  பிறந்தநாளை முன்னிட்டு போதைப்பொருள் விருந்து நடத்திய 27 இளைஞர்களில் போதைப்பொருள் வைத்திருந்த ஐந்து இளைஞர்கள் மற்றும் பணத்தை பெற்றதாக சந்தேகிக்கப்படும் மூன்று யுவதிகள் கெஸ்பாவ  நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தப்பட்டனர்.

இவர்களில் 6 பேரை இம்மாதம் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதிவான்  இஷாரா ஜெயக்கொடி உத்தரவிட்டார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்களில் பல்கலைக்கழக மாணவர் ஒருவரும் அடங்குவார்.

சந்தேக நபர்களான பெண்களின் சமூக நோய் அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் நீதவான் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தொடரும் யுக்திய விசேட நடவடிக்கை – இரகசிய தகவல்களை வழங்க புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம் !

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள விசேட சோதனை நடவடிக்கைக்கு (யுக்திய ) தகவல்களை வழங்குவதற்காக இன்று (02) அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தலைமையில், குறித்த அவசர இலக்கம் காவல்துறை தலைமையகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

071 859 88 00 என்ற குறித்த அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொண்டு தகவல்களை வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாடளாவிய ரீதியில் ‘யுக்திய’ காவல்துறை  நடவடிக்கையின் கீழ் நேற்று (01) முதல் இன்று (02) அதிகாலை வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 822 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 273 கிராம் ஹெரோயின், 111 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 426 போதை மாத்திரைகளும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கொண்டு சென்ற இரு அதிகாரிகள் கைது !

போதைப்பொருள், சிகரெட், பீடிகள் மற்றும் கைத்தொலைபேசி ஆகியவற்றை அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்குள் கொண்டுவர முயன்ற இரண்டு சிறைச்சாலை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கடமையாற்றும் சிறைச்சாலையின் தொழிற்கல்வி ஆலோசகர் மற்றும் சிறைச்சாலை கண்காணிப்பாளர் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் .

 

விசேட அதிரடிப்படையினர், இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து நேற்று வெள்ளிக்கிழமை (22) நடத்திய விசேட சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

 

இவர்களிடமிருந்து 110 மில்லி கிராம் போதைப்பொருள் , 2 பிடிகள் , ஒரு சிகரெட் பெட்டி , சிறிய கையடக்கத் தொலைபேசி என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

 

கைதானவர்கள் அங்குனுகொலபெலஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் அங்குனுகொலபெலஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பேராதனைப் பல்கலைக்கழக விஞ்ஞான பிரிவு மாணவர் ஒருவர் கைது !

ஹாஷ் போதைப்பொருளை பொதி செய்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பேராதனைப் பல்கலைக்கழக விஞ்ஞான பிரிவு மாணவர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (22) இடம்பெற்றுள்ளது.

 

கைது செய்யப்பட்டவர் இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்த பேராதனை பல்கலைக்கழகத்தின் 2014 ஆம் ஆண்டின் விஞ்ஞான பிரிவை சேர்ந்த மாணவராவார்.

 

இவர் பல்கலைக்கழக பரீட்சைக்கு தோற்றாத காரணத்தினால் இதுவரை பட்டம் பெறவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

 

கண்டி, கண்ணொரு பிரதேசத்தில் ஹாஷ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவரிடமிருந்து கிடைத்த தகவலின் பேரில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடத்திலிருந்து 15 கிராம் நிறையுடைய ஹாஷ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

 

இவர் கண்டி, முறுத்தலாவை பிரதேசத்தில் உள்ள வீடொன்றை வாடகைக்கு பெற்று போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். இவருடன் மேலும் இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் வசித்து வந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

சோதனையின் போது இவர்கள் இருவரும் வீட்டில் இருக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் இருவரும் போதைப்பொருள் விற்பனையுடன் தொடர்புடையவர்களா என்பது தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் வவுனியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் கைது !

வவுனியாவில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 16,00 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன், அதனை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

 

நேற்று வியாழக்கிழமை (21) இரவு வவுனியா பொலிஸ் விசேட குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயக்கொடியின் தலமையில் திடீர் சோதனை ஒன்றினை மேற்கொண்டனர்.

 

இதன்போது, வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு முன்பாக உள்ள டயர் திருத்தக வியாபாரநிலையத்தில் மிகவும் சூட்சுமமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 16,000 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

இதனையடுத்து, அதனை உடைமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் வியாபார நிலையத்தின் உரிமையாளரான பெண் மற்றும் அவரது மகள்கள் என மூன்று பேர் கைதுசெய்யப்பட்டதுடன், அவர்களது வீடுகளும் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டு சோதனை நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டருந்தது.

 

கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.