பிள்ளையான்

பிள்ளையான்

எனது கட்சிக்கு ஜே.வி.பியினரே ஆயுதங்களை வழங்கினர் – பிள்ளையான்

எனது கட்சிக்கு ஜே.வி.பியினரே ஆயுதங்களை வழங்கியிருந்ததாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” பிள்ளையான் மக்களை அச்சுறுத்துவதாக அநுர குமார திசநாயக்க தெரிவித்திருந்தார்.

அநுர குமார திசநாயக்க தரப்பினரே எங்களுக்கு முதல் முறையாக ஆயுதங்களை வழங்கினர். அதன் பின்னர் மக்களை சுடுவதற்கு எங்களிடம் ஆயுதம் கேட்டார்கள். ஆனால் நாங்கள் அதனைக் கொடுக்கவில்லை.

பிள்ளையான் மக்களை அச்சுறுத்துவதாக இருந்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான வாக்குகளைப் பெற்றது யார்? எனவே ஜனநாயகத்தை பற்றி பேசுவதாக இருந்தால் அநுர குமார திசாநாயக்க யோசித்து பொறுப்பான தலைவராகப் பேச வேண்டும்” எனத் தெரிவித்தார்.

மேலும் ”இந்த நாட்டை அழிக்க நினைக்கின்ற தலைவர் எங்கள் மண்ணில் வந்து பேசியதையிட்டு கவலையடைகின்றேன். அவர்கள்தான் ஒரு பிரபல்யமான ஆயுத குழு. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு ஆயுதம் தந்தவர்களும் அவர்கள்தான். பின்னர் அதனைக் கைமாற்றியதும் அவர்கள்தான். எனவே அந்த ஆயுதங்களை தேடி எடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு அநுர குமார திசநாயக்காவுக்கு தெரிவிக்கின்றேன்” இவ்வாறு சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

கிழக்கில் தமிழர் அரசியல் கட்டமைப்பு செயலிழந்துள்ளது – இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரக்காந்தன்

“அம்பாறையில் ஒரு கணக்காளரைக் கூட நியமிக்க முடியாத அளவிற்கு அரசியல் கட்டமைப்பு செயலிழந்துள்ளதாக” கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரக்காந்தன் தெரிவித்துள்ளார்.

காரைதீவு மத்திய கல்லூரியில் இடம்பெற்ற ஈஸ்டர் படுகொலை தொடர்பிலான நூல் அறிமுக நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

சமூகத்தின் பொருளாதார அரசியல் அதிகரித்துள்ள நிலையில் அம்பாறை மாவட்ட மக்களின் ஆணையை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்ற கேள்வி எழுந்துள்ளது.

எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு அம்பாறையில் ஒரு கணக்காளரைக் கூட நியமிக்க முடியாத அளவிற்கு, அரசியல் கட்டமைப்பு அம்பாறை மாவட்டத்தில் காணப்படுகின்றது.

இவ்வாறான பிரச்சினைகள் தமிழரசுக் கட்சியின் தனிப்பட்ட பிரச்சினை கிடையாது. மாவட்ட மக்களினது தேவைகளை அறிந்து செயற்படுவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்” இவ்வாறு அமைச்சர் சிவநேசத்துரை சந்திரக்காந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.

புலிப்பயங்கரவாத அமைப்புடன் இருந்ததற்காக எல்லா பழிகளையும் என் மீது போடாதீர்கள் – நாடாளுமன்றத்தில் பிள்ளையான்!

தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பு என நாடாளுமன்றத்தில் விழித்த இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக எல்லாக் குற்றச்சாட்டுக்களையும் தன்மீது சுமத்த முடியாது என தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக நேற்று சபையில் சாணக்கியன் பிள்ளையான் மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.

 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையை கண்டறிய வேண்டுமானால் பிள்ளையானை கைது செய்து விசாரணை செய்யவேண்டும் என நேற்று நாடாளுமன்றத்தில் தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்திருந்தார்.

 

அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 2019ஆம் ஆண்டில் இடம்பெற்றிருந்தாலும் அதனுடன் தொடர்புடைய குழுக்கள் கடந்த 2005ஆம் ஆண்டு தொடக்கம் நாட்டில் செயற்பட்டு வந்துள்ளதாகவும் இரா.சாணக்கியன் நேற்று சபையில் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்கில் பிள்ளையானுடன் கைது செய்யப்பட்ட கஜன் மாமா என்பவர் சில மாதங்களுக்கு முன்னர் திடீரென உயிரிழந்துள்ளதாகவும் ஆனால் அவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு இடமளிக்காது உடலை எரித்துள்ளதாகவும் இரா.சாணக்கியன் சபையில் தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் இன்று சபையில் சாணக்கியனின் கருத்தினை மறுத்துக் கருத்து வெளியிட்டிருந்ததுடன், தானும் ஏற்கனவே ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பில் இருந்ததாகவும் அது ஒரு பயங்கரவாத அமைப்பு என்றும் குறிப்பிட்டார்.

 

அத்துடன் ஜே.வி.பி உள்ளிட்ட அமைப்புக்களும் பல பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்ததாகவும் தான் யார் என்பதை தனது மக்கள் நன்கு அறிவார்கள் எனவும், இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மேலும் குறிப்பட்டார்.

பிள்ளையானை கைதுசெய்து விசாரணை நடத்துங்கள் ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகளை கைது செய்யலாம் – இரா.சாணக்கியன்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையானை கைதுசெய்து விசாரணை நடத்தினால் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் உள்ளிட்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் 2005இல் இடம்பெற்ற பல்வேறு கொலைகள் தொடர்பான உண்மைகளை அறிந்துகொள்ள முடியும்.

 

அதேநேரம் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை இடம்பெறுமாக இருந்தால் அதில் சாட்சி சொல்வதற்குப் பலரும் இருக்கின்றனர் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சாணக்கியன் ராவமாணிக்கம் தெரிவித்தார்.

 

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

 

அவர் அங்குத் தொடர்ந்து தெரிவிக்கையில்,

 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 2019ஆம் ஆண்டில் நடந்திருந்தாலும் அதனுடன் தொடர்புடைய குழுக்கள் 2005ஆம் ஆண்டு முதல் இந்த நாட்டில் செயற்பட்டு வந்துள்ளன.

 

இது தொடர்பில் அடிக்கடி கூறியிருந்தாலும் இதன் பாரதூர தன்மை தொடர்பில் புரிந்துகொள்ளாது இருக்கின்றனர். எவ்வாறாயினும் தற்போது 2014ஆம் ஆண்டில் நடந்த சம்பவமொன்று தொடர்பில் மீண்டும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 

இலங்கையில் புலனாய்வுத்துறையுடன் சம்பந்தப்பட்ட மூன்று இனங்களையும் சேர்ந்த புலனாய்வுக் குழு அதிகாரிகளின் குழுவொன்றே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளன.

 

2004ஆம் ஆண்டில் ஈமானிய நெஞ்சங்கள் என்ற அமைப்பொன்று அமைக்கப்பட்டுள்ளது. பொலிஸ் பாயிஸ், ஆமி மொஹிதீன், கலீல் ஆகிய மூவரையும் உள்ளடக்கியதாக இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. கலீல் என்ற நபர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்கில் சிறைக்குச் சென்று விடுதலையானவர்.

2009 ஆம் ஆண்டில் திருகோணமலையில் 6 வயது வர்ஷா என்ற சிறுமி பெற்றோரிடம் கப்பம் கோரி கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

 

இது தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் திருகோணமலைக்குப் பொறுப்பான மேர்வின் என்பவர் கைது செய்யப்பட்டார் ஜனார்த்தனர், நிசாந்தன், ரெஜினோல்ட் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பின்னர் பொலிஸாரின் பொறுப்பிலிருந்த போதே உயிரிழந்துள்ளனர்.

 

இதேவேளை 8 வயது சிறுடு ஒருவரும் கப்பம் கோரி 2009இல் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அந்த சம்பவம் தொடர்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பின்னர் அவர்கள் நால்வரும் அரச படையினரால் கொலை செய்யப்பட்டனர்.

 

புலனாய்வு பிரிவின் குழுவினர் தமது நோக்கத்திற்காகக் கப்பம் பெறும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதுடன், அதன்பின்னர் கைது செய்யப்படுபவர்களைக் கொல்லும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு பலர் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

 

இந்த சம்பவங்களுக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் இடையே என்ன தொடர்பு என்று நினைக்கலாம். ஆனால் 2008 ஆம் ஆண்டில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் திட்டமிட்டு கிழக்கில் ஸ்தீரமற்ற நிலைக்குக் கொண்டு செல்ல பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. அவ்வாறாகப் பரிசோதிக்கப்பட்ட விடயங்களே பின்னர் நாடு முழுவதும் நடத்தப்பட்டுள்ளது.

 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் பல்வேறு தகவல்கள் வெளியாகின்றன. பிள்ளையான் உள்ளே இருந்தால் அவர் பலவற்றை கூறலாம் என்பதனால் அவரை விடுதலை செய்ய நடவடிக்கையெடுத்துள்ளனர்.

 

ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் பிள்ளையானுடன் கைது செய்யப்பட்ட கஜன் மாமா என்பவர் சில மாதங்களுக்கு முன்னர் திடீரென உயிரிழந்துள்ளார். மரண பரிசோதனைக்கு இடமளிக்காது அவரின் உடலை எரித்துள்ளனர்.

 

அதனால் 2005ஆம் ஆண்டு முதல் ஈஸ்மர் தாக்குதல் வரை இடம்பெற்ற கொலை சம்பவங்களுக்குத் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்குத் தொடர்பு இருக்கிறது. அதனால் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அந்த கட்சியின் தலைவை கைதுசெய்து விசாரணை நடத்தினால் இது தொடர்பான அனைத்து உண்மைகளையும் தெரிந்துகொள்ளலாம். எனவே மட்டக்களப்பு மாவட்ட வாக்குகளைப் பார்க்காமல் ஜனாதிபதி அவரை கைதுசெய்து விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

இலங்கையில் ஒரு பொறுப்பற்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவும் ஜே.வி.பியும் ஈஸ்டர் தாக்குதலை அரசியலாக்க பார்க்கிறார்கள் – பிள்ளையான்

உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பை உலகளாவிய ரீதியில் கையாண்ட அமெரிக்கா, அவுஸ்திரேலியா. பொலிஸார் இதனை சரியாக கணித்து ஆராய்ந்து நடந்ததை கண்டுபிடித்து அறிக்கையை சமர்ப்பித்து விட்டு வெளியேறி விட்டார்கள். ஆனால், இலங்கையில் ஒரு பொறுப்பற்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவும் ஜே.வி.பி போன்ற கட்சிகளும் தற்போது இதனை கையில் எடுத்து அரசியலாக்கப் பார்க்கிறார்கள். மதங்களைப் பின்பற்றுவது சம்பந்தமான ஒரு அறிவு ரீதியாக ஒழுங்குபடுத்தலை எதிர்காலத்தில் உண்டாக்குவதன் மூலம் மதத்தின் பெயரால் இவ்வாறான குண்டு வெடிப்புகளை தவிர்க்க முடியும் என இராஜாங்க கிராமிய வீதி அபிவிருத்தி அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

 

மட்டக்களப்பில் ஞாயிற்றுக்கிழமை (21) மாலை மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,

 

உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலின் போது ஒரே நேரத்தில் பல இடங்களில் குண்டு வெடிப்பை தற்போது அரசியலாக்க பார்க்கிறார்கள் இவர்கள் ஆழமான அறிவை தேடி பார்க்க வேண்டும் இதனை அரசியல் சாயம் பூச முயல்கிறார்கள் எல்லா மதங்களிலும் கடும் போக்கானவர்கள் இருக்கிறார்கள். உலகளாவிய ரீதியில் தடை செய்யப்பட்ட பல இயக்கங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அதில் ஒரு கூராகத்தான் ஐ எஸ் ஐ எஸ். தீவிரவாதமும் இருந்தது. பல நாடுகளிலும் பயிற்சி எடுத்த காத்தான்குடியைச் சேர்ந்த சஹரானும் அவரது குழுவினரும் இருந்தனர். இதனை உலகளாவிய ரீதியில் கையாண்ட அமெரிக்கா ஆஸ்திரேலியா பொலிசார் இதனை சரியாக கனித்து ஆராய்ந்து அவர்கள் அறிக்கையை சமர்ப்பித்து விட்டு வெளியேறி விட்டார்கள் ஏனென்றால் அவர்கள் சரியாக நடந்ததை கண்டுபிடித்து விட்டார்கள்.

 

இவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்போது இவ்வாறான சம்பவங்கள் இனிமேலும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற அச்சம் நமக்கு உள்ளது. இதற்காக தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும். மதத்தின் பெயரால் நூறாண்டுகளுக்கு மேல் இயங்கும் இந்த வகாபாதத்தை முறியடிப்பது இலகுவான விடயம் அல்ல இதனை முறியடிப்பதற்கு அதி தொழில்நுட்பம் கூடிய பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்கப்பட வேண்டும்.

 

நாட்டில் ஏனைய மதத்தவரையும் மதித்து நடக்க வேண்டும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடு இலங்கை போன்ற நாட்டில் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்தால் ஏனைய நாடுகளைப் போல் இலங்கையும் அபிவிருத்தி இலக்கை அடைய முடியும் என அவர் தெரிவித்தார்.

தமிழரசு கட்சி தேர்தலையே ஒற்றுமையாக நடத்த முடியாதவர்கள் தான் பொதுவேட்பாளர் பற்றி பேசுகிறார்கள் – பிள்ளையான்

சிறுபான்மை மக்கள் ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதென்பது காலத்திற்கு பொருத்தமில்லாத செயற்பாடாகும் என இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன்(பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் எருவில் கிராமத்தில் இன்று (20) மாலை நடைபெற்ற சித்திரை விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“எதிர்வரும் ஒக்டோபர் நடுப்பகுதிக்கு முன்னர் தேர்தல் ஒன்று நடைபெறவுள்ளதாக ரணில் அறிவித்துள்ளார். நாட்டில் அடுத்த தலைவர் யார் என்ற பலமான கேள்வி இருக்கின்றது.எமக்கான தலைவரை தேர்வு செய்வதற்கு அதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்குவதற்குரிய திட்டங்களை நாங்கள் தீட்டியுள்ளோம்.

தற்போது இலங்கையிலுள்ள சிறுபான்மை மக்களை மையப்படுத்தியதாக பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தவேண்டும் என்ற தகவல்கள் ஊடகங்களில் வெளிவருகின்றன. இந்த பொது வேட்பாளர் தொடர்பில் நாங்கள் ஆழமாக ஆராய வேண்டும். யாரும் அரசியலுக்காக கருத்துக்களைச் சொல்லலாம். இவ்வாறானவர்கள் முன்னரும் வடகிழக்கிலுள்ள சிறுபான்மை மக்களை ஒற்றுமைப்படுத்துவோம் என சொல்வார்கள், அதனைச் செயல்படுத்த முடியாமல் போய்விடும்.

இதற்கு நல்ல உதாரணம் தான் இலங்கைத் தமிழரசுக் கட்சியினுடைய தேசியமாநாடும், அதன் தலைவர் தெரிவும். இலங்கை அரசிடமிருந்து தீர்வு பெற்றுத் தருவோம் என்றவர்கள், அதன் நீதித்துறையின் காலடியில் வீழ்ந்து கிடக்கின்றார்கள்.

கட்சிக்குள்ளேயே ஒரு அமைப்பை ஒன்றுபடுத்த முடியாத தலைவர்கள் நாம் மட்டுமே தான் என சிந்திக்கின்ற யாழ்ப்பாணத்து தலைவர்கள், இந்த மண்ணுக்கும் இந்த நாட்டுக்கும் ஒன்றையுமே பெற்றுக் கொடுக்கவுமில்லை, பெற்றுக் கொடுக்கப்போவதுமில்லை.

அந்த அடிப்படையில் பொது வேட்பாளர் என்ற கருத்தும் அங்கிருந்துதான் ஆரம்பித்திருக்கின்றார்கள். அது வெற்றிபெற முடியாத, திட்டமிடல் இல்லாத ஒரு கற்பனை.அவர்கள் ஒலிவாங்கிகளுக்கு முன்னால் கருத்துக்களை வெளியிடும் ஒரு புரளியாகும்.

எனவே சிறுபான்மை மக்கள் ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதென்பது காலத்திற்கு பொருத்தமில்லாத செயற்பாடாகும்.”என அவர் சுட்டிக்காட்டினார்.

“சந்திரகாந்தனின் ஈஸ்டர் படுகொலையும் மரத்தில் மாடு கட்டுதலும்” – அத்தாஸ் – அக்கரைப்பற்று

சர்வதேச ரீதியாக அதிர்வலையை ஏற்படுத்திய ஈஸ்டர் தீவிரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சிவ . சந்திரகாந்தன் நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார் . அந்த நூலின் பெயர் ‘ ஈஸ்டர் படுகொலை இன , மத நல்லிணக்கம் – அறிதலும் புரிதலும் ‘ ஆகும் . இந்த நூல் 23.03.2024 ஆம் திகதி மட்டக்களப்பில் வெளியீட்டு வைக்கப்பட்டது . இவரது இந்த முயற்சி பாராட்டுதலுக்குரியதாகும் .

இவருக்குப் பாராட்டுத் தெரிவித்துவிட்டு பின்னர் ஏன் ‘ சந்திரகாந்தனின் ஈஸ்டர் படுகொலையும் மரத்தில் மாடு கட்டுதலும் ‘ என்று தலைப்பிடப்பட்டுள்ளது என்ற கேள்வி வாசகர்களுக்கு எழக்கூடும் . இவரது நூலும் அந்த மாதிரித்தான் உள்ளது . ஈஸ்டர் படுகொலை தொடர்பில் தலைப்பிட்டுவிட்டு இணையத்தள செய்திகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளார் . இந்த நூலைப் பொறுத்தவரை தகவல் மூலமற்ற செய்திகளும் பல குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன . குறிப்பாக இந்த நூலின் பின்னால் அதிகார சக்திகளின் மறைகரங்கள் உள்ளதா என்ற கேள்வி எழுகின்றது . ஏனெனில் , ஈஸ்டர் தீவிரவாதத் தாக்குதல் இடம்பெற்ற போது சஹ்ரானின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைத் தொலைபேசியில் வைத்திருந்தமைக்காக பல நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கைது  செய்யப்பட்டு பல மாதங்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர் . ஆனால் அவ்வாறான எதுவித கெடுபிடிகளும் இல்லாமல் சர்வதேச ரீதியாகப் பிரகடனப்படுத்தப்பட்ட சஹ்ரான் எனும் தீவிரவாதியின் புகைப்படத்தை முன் அட்டையில் இட்டு இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.  இங்குள்ள கேள்வி என்னவெனில் , பாதுகாப்புத் தரப்பினர் முஸ்லிம்களைக் கைது செய்தமை போன்று ஏன் பிள்ளையானைக் கைது செய்யவில்லை என்பதுடன் அவருக்கு எதிராக ஏன் எதுவித சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதாகும் . மேலும் சஹ்ரானின் இப் புகைப்படத்தை இவர் இஸ்லாமிய மதத்திற்கும் அதனைப் பின்பற்றும் முஸ்லிம்களுக்கும் எதிரான குறியீடாகப் பயன்படுத்தியுள்ளார் . ஈஸ்டர் தாக்குதல் இஸ்லாத்திற்காகப் புரியப்பட்ட ஒன்று என்பதுடன் அவ்வாறான தாக்குதல்கள் இஸ்லாத்தைப் பின்பற்றும் முஸ்லிம்களால் மேலும் செய்யப்பட முடியும் என்ற வக்கிரப் போக்கு இந்த நூலின் முன் அட்டை சஹ்ரானின் புகைப்படத்தின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது . மேலும் முக்கியமாக நூல் விபரக் குறிப்பில் நூல் அச்சிடப்பட்ட அச்சகத்தின் விரபங்கள் எதுவும் குறிப்பிடப் பட்டிருக்கவில்லை . அவை மறைக்கப்பட்டுள்ளன . குறிப்பாக அச்சு மற்றும் வெளியீட்டுக் கட்டளைச் சட்டம் பிரிவு 02 இன் படி இது குற்றச் செயல் என்பதுடன் பிரிவு 03. இக் குற்றத்திற்கான தண்டனையும் குறிப்பிடுகின்றது .

இந்நூலானது குறித்த சட்டத்தை மீறி வெளியிடப்பட்டுள்ளது . குறிப்பாக இந்நூலானது மிகப்பெரிய பொய்யொன்றைப் பதிவு செய்துள்ளது . பக்கம் 30 இல் ” இரண்டாம் தடவை மேற்கொள்ளப்பட்ட உடற் கூற்றியல் மரபணுப் பரிசோதனையில் ( DNA ) புலஸ்தினியின் மரணம் உறுதி செய்யப்பட்டது ” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது . இது திட்டமிட்ட பொய்ப் பிரச்சாரமாகவே அமைகின்றது . ஏனெனில் , புலஸ்தினி மகேந்திரன் ( சாரா ஜாஸ்மின் ) எனும் பெண் 26.04.2019 ஆம் திகதி சாய்ந்தமருது பாதுகாப்பு வீட்டில் உயிரிழந்தாரா என்பது தொடர்பில் இலங்கை அரசாங்கத்தினால் 03 பரிசோதனைகள் நடத்தப்பட்டன . இதில் முதல் பரிசோதனையில் இவரது மரணம் உறுதிப்படுத்தப்படவில்லை . இரண்டாவது பரிசோதனையிலும் இவரது மரணம் உறுதிப்படுத்தப்படவில்லை . சுமார் 04 வருடங்களின் பின் 06.04.2023 ஆம் திகதி வெளியிடப்பட்ட மூன்றாவது பரிசோதனை அறிக்கையிலேயே குறித்த பெண் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது . உண்மை இவ்வாறு இருக்க இவர் , இரண்டாவது பரிசோதனையில் புலஸ்தினி மகேந்திரனின் மரணம் உறுதிப்படுத்தப்பட்டது என்று எழுதியுள்ளமை ஏன் ? மேலும் பக்கம் 32 இல் ” நேரடியாக எதிர்வினையை சிங்கள பௌத்த மக்கள் மீது தொடுத்தால் அதனால் ஏற்படும் விளைவுகள் சிறுபான்மை முஸ்லிம்களைப் பொறுத்தவரை பாரதூரமாக இருக்கும் . அதனால் எதிர்கொள்ளும் கட்டமைப்பு ஐ.எஸ் குழுவினரிடம் இல்லை . இதனால் பௌத்த விகாரைகள் தடுக்கப்பட்டு சிங்கள மக்கள் ஒன்று கூடும் தேவாலயங்கள் குறிவைக்கப்பட்டன ” என்ற கருத்தைப் பதிவு செய்துள்ளார். இத்தகவல் இருட்டடிப்புச் செய்யப்பட்ட பொய்யாகும் . ஏனெனில் , கொச்சிக்கடை அந்தோனியர் தேவாலயத்தில் இறந்தவர்களில் கணிசமானவர்கள் தமிழ் பேசும் கிறிஸ்தவர்கள். மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இறந்தவர்கள் அனைவரும் தமிழ் கிறிஸ்தவர்கள் . அதேபோன்றுதான் நீர்கொழும்பு கட்டுவாப்பீட்டி தேவாலயமுமாகும் . இம் மூன்று தேவாலயங்களில் இறந்தவர்களில் கணிசமானவர்கள் தமிழ் பேசும் மக்களாக உள்ளமையை மறைத்து சிங்கள் மக்கள் ஒன்று கூடும் தேவாலயங்கள் குறிவைக்கப்பட்டன என்ற கருத்தைக் குறிப்பிடுகின்றார் . ஆனால் தொலைக்காட்சிகளில் பேசும் பேசும் போது இஸ்லாமியத் தீவிரவாதிகள் திட்டமிட்டு தமிழ் மக்களை அல்லது கிறிஸ்தவர்களைப் படுகொலை செய்துள்ளார்கள் என்று பேசி வருகின்றார். ஆக இவரின் இரண்டு கருத்துக்களும் ஒன்றுக்கொன்று முரண்பாடுடையதாக உள்ளது . இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயம் என்னவெனில் , ஈஸ்டர் தாக்குதலைத் தொடர்ந்து முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வியாபார நிலையங்கள் மீதான எரிப்புக்களையும் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களையும் உயிரழிப்புக்களையும் செய்தவர்கள் யார் ? அவர்கள் அத்தனை பேரும் கிறிஸ்தவர்களா ? மேலும் சீயோன் தேவாலய சபையின் பிரதம ஊழியரான றொசான் மகேசன் என்பரின் நேர்காணல் ஒன்று இந்த நூலில் பிரசுரிக்கப்பட்டுள்ளது . பக்கம் 48 இல் அவர் இவ்வாறு குறிப்பிடுகின்றார் . சீயோன் தேவாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலினால் ஏற்பட்ட தீயை அணைக்க தீ அணைப்புப் படையினர் அழைக்கப்பட்டனர்.

* 45 நிமிசம் நெருப்பு பத்திக் கொண்டே இருந்துச்சு . தீயணைப்புப் படை வாரதுக்கு எப்படியும் 15 – 17 நிமிசம் போயிருச்சு . நான் அந்த சி.சி.டியில் கவனிச்சனான் . 17 நிமிசத்துக்குப் பிறகு தான் அவங்க வந்ததும் அவர்களுக்குத் தண்ணீரக் குழாய்களைப் பூட்டத் தெரியவில்லை. இதெல்லாம் இழுத்திட்டு போற நேரம் ஒரு 35 நிமிசம் ஆச்சுது . அப்ப எங்கட பிள்ளைகள் தான் அந்தக் குழாய்களையும் பூட்டிக் குடுக்கக்கூட உதவியிருக்காங்க ” எனக் குறிப்பிடுகின்றார் . இவரின் நேர்காணலில் இருந்து எழும் கேள்வி என்னவெனில் , சியோன் தேவாலயத்திற்குத் தீயணைக்க வந்தவர்களுக்கு தண்ணீரக் குழாய்களைப் பூட்டத் தெரியாமல் போனமை ஏன் என்பதாகும் . இவர்கள் உண்மையில் தீயணைப்புப் படையினரா அல்லது வேற்று நபர்களா ? மேலும் இவர் குறித்த நேர்காணலின் இறுதியில் பக்கம் 49 இல் ” முஸ்லிம்களுக்குத் தெரியும் , அவர்களுக்குத் தெரியாம இது நடக்கல்ல ” என்பதைத் தொடர்ந்து மூன்று தடவைகள் சொன்னதாகத் தொடர்ந்து மூன்று தடவைகள் இந்நூலில் பதியப்பட்டுள்ளன . இங்குள்ள கேள்வி என்னவெனில் , சீயோன் தேவாலய சபையின் பிரதம ஊழியரான றொசான் மகேசன் குறிப்பிடும் முஸ்லிம்கள் யார் ? எல்லா முஸ்லிம்களும் ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதலை அறிந்திருந்தார்களா அல்லது குறித்த முஸ்லிம் நபர்கள் மாத்திரம் ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதலை முன்கூட்டியே அறிந்திருந்தார்களா ? அவர் உறுதியாகக் குறிப்பிடும் அந்த முஸ்லிம் நபர்கள் யார் ? ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முன்கூட்டியே அறிந்து அதனை மறைத்த குற்றத்தைப் புரிந்த முஸ்லிம் நபர்களுக்கு எதிராக ஏன் இவர் இதுவரை சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை அத்துடன் அல்லது கோரவில்லை ? மேலும் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முன்கூட்டியே அறிந்த முஸ்லிம் நபர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்காமல் மறைத்த குற்றத்திற்கு பிரதம ஊழியரான றொசான் மகேசனும் உள்ளாக்கப்படுவாரா ? றொசான் மகேசனின் கருத்தானது மிகவும் பாராதூரமான குற்றச்சாட்டாக உள்ளது . முஸ்லிம்கள் முன்கூட்டியே அறிந்திருந்தார்கள் என்று குறிப்பிடுவதானது கிறிஸ்தவர்கள் கொல்லப்படுவதை முஸ்லிம்கள் விரும்பியிருந்தார்கள் என்பதாக அரத்தம் கொள்ளப்படுவதுடன் முஸ்லிம்கள் ஈஸ்டர் படுகொலையைத் தடுக்க விரும்பவில்லை என்பதாக அமைகின்றது . இதன் மறுதலை முஸ்லிம்கள் . மாற்று மதத்தினர் கொல்லப்படுவதை ஆதரிக்கின்றவர்களாக உள்ளனர் . உண்மையில் மதிப்புக்குரிய றொசான் மகேசன் இக்கருத்தைக் கூறினாரா அல்லது இந்நூலின் ஆசிரியர் சந்திரகாந்தன்இக்கருத்தைப் பதிவு செய்துள்ளாரா ? நிச்சயமாக இக்கருத்தானது கத்தோலிக்க கிறிஸ்தவ முஸ்லிம்களுக்கு இடையிலான நல்லுறவினைச் சிதைக்கும் ஆபத்தைக் கொண்டுள்ளது . இவ்வாறான ஒரு நிலையை உருவாக்குவதற்காக இக்கருத்து திட்டமிட்டுப் பதியப்பட்டுள்ளதா என்ற பல கேள்விகள் உள்ளன .

மேலும் இந்நூலின் 121 ஆம் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது ” இந்தியாவில் உள்ள ஹெச்.ஜி. ரசூல் என்ற எழுத்தாளர் பின்வருமாறு கூறுகின்றார் . இந்த வஹாபி குழுவினர் உயர்ந்தது எது ? புத்த சாசனமா ? அல்லது குரானா ? என இலங்கையில் பிரச்சாரம் செய்து புத்த பிக்குகளிடமும் பொதுபலசேனாவிடமும் சமய வெறியை ஊட்டுவதற்குக் காரணமாக அமைந்த அண்மைக்கால வரலாறு நாம் அறிந்ததே ” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது . இதில் ஒரு சில உண்மைகள் இருந்தாலும் நூறு வீத உண்மையாகக் கொள்ள முடியாது . இங்கு பாரிய இருட்டடிப்பொன்று செய்யப்பட்டுள்ளது . பௌத்த பிக்குகளுக்கும் பொதுபலசேனா அமைப்பிற்கும் மத வெறி ஏற்படக் காரணம் வஹாபிசக் குழுவினர் என்ற கருத்தானது பொதுபலசேனா இயக்கம் இயல்பிலேயே சாந்தமான அமைதி போதிக்கும் அமைப்பு என்பதும் அதற்கு மதவெறி வருவதற்குக் காரணம் வஹாபிசக் குழுவினர் தான் என்பதாகவும் உள்ளது . எனினும் வரலாற்றை எடுத்து நோக்கினால் , 30 வருட யுத்த காலத்தில் பொதுபலசேனாவைப் போன்று பல பௌத்த அமைப்புக்கள் உருவாகியிருந்தன . அவை தமிழர் தொடர்பில் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை என்ற நிலைப்பாடு தமிழர்களிடம் உண்டு . குறிப்பாக தனிச் சிங்கள் மொழிச் சட்டம் போன்ற மொழி வெறி பிடித்தமைக்கும் கிறிஸ்தவ மிசனறிகளுக்கு எதிரான தாக்குதல்களின் போது மதவெறி பிடித்தமைக்கும் காரணம் இந்த வஹாபிச குழுவினர் அல்ல . 1900 ஆண்டளவில் கிறிஸ்தவ மிசனறிகளுக்கு எதிராகவும் கிறிஸ்தவர்களுக்கும் எதிராகவும் பௌத்த தேசிவாத அமைப்புக்கள் தாக்குதல்களை நடத்தியுள்ளன . அவ்வாறான தாக்குதல்களுக்கு கிறிஸ்தவ மிசநெறிகளின் அடிப்படைவாதமே காரணம் என்று குற்றம் சுமத்த முடியுமா ? ஒருபோதும் இல்லை . அது தவறான வாதமாகும் . – இலங்கையைப் பொறுத்தவரை சிங்கள பௌத்த தேசியவாதம் நன்கு கட்டமைக்கப்பட்ட ஒன்றாக இருந்து வருகின்றது . ஆரம்பத்தில் அதன் எதிரியாக கிறிஸ்தவர்கள் இருந்தார்கள் . 1915 சிங்கள முஸ்லிம் கலவரத்தின் போது முஸ்லிம்களின் வர்த்தகம் மறைமுகக் காரணியாக இருந்தது . பின்னர் 1956 களில் சிங்கள மொழி பௌத்த மத மறுலர்ச்சியாக மாறியது . பின்னர் 1970 களில் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தின் போது அது பௌத்த இனவாதமாக வடிவம் கொண்டது . குறிப்பாக 2009 யுத்தத்தின் பின்னர் முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்த பேரினவாதமாக அது வடிவம் கொண்டுள்ளது . பொதுபலசேனா போன்ற பௌத்த இயக்கங்களின் உருவாக்கம் அதன் ஸ்தீரம் என்பது பூகோள மற்றும் தேசிய அரசியல் சக்திகளின் மறைகரம் என சர்வதேச ரீதியாக அறியப்பட்ட கலாநிதிகள் பேராசிரியர்கள் மிகப் பெரிய ஆய்வுகளை வெளியிட்டுள்ள நிலையில் வராற்றை இருட்டடிப்புச் செய்து மொட்டைத் தலைக்கும் முழங்காலும் முடிச்சுப் போடும் இதுபோன்ற பல கதைகள் இந்நூலில் அதிகம் உள்ளன .

எனினும் இந்நூலில் பக்கம் 121 – 122 இல் மிக முக்கிய விடயம் ஒன்றைப் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர் சந்திரகாந்தன் . சிங்கள மக்களை மையப்படுத்தி ஏன் இந்த தஃவா தேவைப்பட்டது ? இந்த தஃவா அமைப்பை முன்னெடுத்தவர்கள் தமிழக தவ்ஹீத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் . தமிழ் நாட்டில் உள்ள எல்லா இந்துக்களுக்கும் இஸ்லாத்தைச் சொல்லிவிட்டு அவர்கள் இலங்கைக்கு வந்துவிட்டார்களா ? இலங்கை போன்ற பல்லின சமூகங்கள் . பல மதங்கள் உள்ள நாட்டில் இந்த அணுகுமுறை என்ன விபரீதத்தை தரப்போகின்றது என்ற விமர்சனங்களை நாம் எளிதில் புறந்தள்ளிவிட முடியாது என்கின்றார்.

 

இவ்விடயம் மிகவும் முக்கியத்துவத்துடன் முஸ்லிம்களால்  அணுகப்பட வேண்டியதாகும் . தீவிரப் போக்குள்ள தவ்ஹீத் நபர்கள் தொடர்பில் முஸ்லிம் சமுதாயம் மிகவும் அவதானமாக நடந்து கொள்ளவேண்டிய அபாயக் கட்டத்தில் உள்ளது . குறிப்பாக இலங்கையில் உள்ள ஒரு சில தவ்ஹித் அமைப்புக்களுக்கும் படையினருக்கும் இடையில் தொடர்பு இருந்ததா என்பது தொடர்பில் ஈஸ்டர் தாக்குதலை விசாரணை செய்த பாராளுமன்ற விசேட குழு பல இடங்களில் கேள்வி எழுப்பியுள்ளது .

இலங்கையில் இவ்வாறான குற்றச்சாட்டுக்கு உள்ளான தவ்ஹீத் இயக்கங்களின் மூலவேர் இந்தியா குறிப்பாக தமிழ் நாட்டில் செயற்பட்டுவரும் சில தவ்ஹீத் இயக்கங்களாகும் . இங்குள்ள முக்கிய கேள்வி என்னவெனில் , இலங்கையில் உள்ள ஒரு சில தவ்ஹீத் இயக்கங்களுக்கும் படையினருக்கும் தொடர்பிருப்பதாக எழுப்பப்பட்ட கேள்விகளும் சந்தேகங்களும் தமிழ் நாட்டுத் தவ்ஹீத் இயக்கங்கள் மீதும் எழுத்துள்ளன . மேலும் குறித்த தவ்ஹீத் இயக்கங்களால் இந்தியாவிலும் இலங்கையிலும் மத நல்லிணக்கம் உருவானதை விடவும் இனக் குரோதமும் மத முரண்பாடுகளுமே அதிகம் வளர்ந்துள்ளன . ஆக இவ் அமைப்புக்களின் செயற்பாடுகளின் பின்னணியில் ஏதாவது மறை கரங்கள் உள்ளனவா என்ற கேள்வி உள்ளதுடன் இவர்கள் மத நல்லிணக்கத்தைக் காட்டிலும் இனங்களுக்கும் மதங்களுக்குமிடையில் முரண்பாடான விடயங்களையே தூக்கிப் பிடிப்பவர்கள் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகி வருகின்றமை ஏன் ? மேலும் இந்நூலின் பக்கம் 125 இல் தப்லீக் ஜமாஅத் எனும் தலைப்பு இடப்பட்டு அது தொடர்பில் பல விடயங்கள் எழுதப்பட்டுள்ளன . பக்கம் 126 இல் குறிப்பிடப்பட்ட முக்கிய விடயங்கள் பின்வருமாறு ” சாதாரண முஸ்லிம்களை மதவாதிகளாக மாற்றுவதில் பெரும்பங்கை இவர்களே வகிக்கின்றனர் . உயிரைக் கொடுப்பவர்களுக்கு சுவர்க்கத்தில் பெரிய அந்தஸ்து உள்ளது . அப்படியாக உயிரைக் கொடுத்து ஷஹீத் ஆகும் போது நேரடியாக மரணித்தவுடன் சுவர்க்கம் கிடைக்கும் . அப்படியானவர்களுக்கு மரணத்தின் பின்னர் எவ்வித விசாரணைகளும் கிடையாது . அவர்களுக்கு சுவரக்கத்தில் வாழ்வதற்கு 72 கன்னிகள் கிடைப்பார்கள் என்பதாக கற்பிப்பதன் மூலமாக அல்லாஹ்வின் பாதையில் செல்வது என்பதன் முழு அர்த்தங்களையும் புரிந்து கொள்வர் என இந்த தப்லீக் ஜமாஅத் பிரச்சாரங்களுக்குள் உள்வாங்கப்பட்டு பக்தி மயமானவர்களாக மாறுகின்ற இளைஞர்கள் ‘ பீஸபீலில்லாஹ் ‘ என்பதன் முழு அர்த்தமான ஜிஹாத் மற்றும் ஷஹித் போன்றவற்றை நோக்கி செல்லக் கூடிய நிலமைக்கு இட்டுச் செல்லப்படுவார்கள் . இந்த தப்லீக் ஜமாஅத்தினர் ஒருபோதும் ஜிஹாத்துக்குச் செல்லுங்கள் . இஸ்லாமிய ஆட்சியை உருவாக்குங்கள் என்கின்ற வஹாபிச பிரச்சாரங்களை நேரடியாக மேற்கொள்வதில்லை . சஹ்ரானின் தந்தையார் முகம்மது ஹாசிம் , தப்லீக் பணிகளில் இணைந்து பங்காற்றியவர் என்பது கவனம் கொள்ளத்தக்கது ” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது .

பல்வேறு இஸ்லாமிய இயக்கங்கள் தொடர்பிலும் நபர்கள் தொடர்பிலும் ஈஸ்டர் தாக்குதலுக்கு ஈடான குற்றச்சாட்டுக்களை முன்வைத்த இந்த நூல் , பக்கம் 146 இல் அப்துல் ரவூப் மௌலவி என்பவர் தொடர்பில் புகழ்மாலை சூடியுள்ளது . ” அப்துர் ரவூப் மௌலவி அவர்கள் தனது வசிப்பிடமான ஐந்தாம் குறிச்சி , ஆதம்போடி ஹாஜியார் ஒழுங்கையிலிருந்து முஅத்தினார் வீதியூடாக தனது தந்தையின் பத்ரிய்யாப் பள்ளிக்குச் செல்லும் காட்சி ஒரு தனியழகாகும் . இந்திய அத்தரின் நறுமணம் மௌலவி அவர்கள் வருவதற்கு முன்பாகவே அவ்வீதிகளில் பரவத் தொடங்கிவிடும் . தென்றல் தவழ்ந்து வரும் அந்த இனிய மாலைப் பொழுதுகளில் தூரத்தே வருவோரையும் சுண்டி இழுக்கும் வாசணை அப்துல் ரவூப் மௌலவி வருகின்றார் என்ற செய்தியைச் சொல்லிவிடும் ” என்று புகழ்ந்துள்ளது . இங்கு சுட்டிக்காட்ட வேண்டிய விடயம் என்னவெனில் , சந்திரகாந்தனின் இந்த நிலைப்பாட்டையே இந்தியத் தூதரும் பொதுபலசேனாவும் கொண்டுள்ளதாக அறியப்படுகின்றது . இந்தியத் தூதர் சிறிகோபால் பாக்லே 02.10.2022 ஆம் திகதி அப்துல் ரவூப் மௌலவி குழுவினருடன் பிரத்தியேக சந்திப்பொன்றினை மேற்கொண்டிருந்தார் . இது இவரது கிழக்கு மாகாண விஜயத்தின் ஓர் அங்கமாக இருந்தது . அதேபோன்று 21.01.2022 ஆம் திகதி அப்துல் ரவூப் மௌலவி குழுவினருக்கும் கலபொட அத்த ஞானசார தேரருக்கும் இடையிலான சந்திப்பு இராஜகிரியவில் இடம்பெற்றது . கலபொட அத்த ஞானசார தேரர் ஏனைய எல்லா இஸ்லாமிய இயக்கங்களை எதிர்ப்பதுடன் சூபிக்கொள்கை ஆதரிக்கின்றார் . அதேபோன்றே சந்திரகாந்தனும் ஏனைய இஸ்லாமிய இயக்கங்கள் மீது இந்நூலில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளடன் அப்துல் ரவுப் மௌலவியை மாத்திரம் ஆதரிக்கின்றமையில் ஏதாவது திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரல் உண்டா ? மேலும் முக்கியமாக ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் இந்நூலின் ஆசிரியரான சந்திரகாந்தன் மீது அவரது பிரத்தியேகச் செயலாளராகப் பல வருடங்கள் பணிபுரிந்து வந்த ஹன்சீர் அசாத் மௌலானா என்பவர் பாரிய குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார் . இக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஆவணம் 05.09.2023 ஆம் திகதி சனல் 04 தொலைக்காட்சியினால் வெளியிடப்பட்டது . எனினும் இக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பதிலளிக்காமல் சந்திரகாந்தன் நழுவிச் சென்றுள்ளார் . ஈஸ்டர் படுகொலை தொடர்பில் 329 பக்கங்களில் நூலை எழுதிய சந்திரகாந்தன் , தன்மீதான குற்றச்சாட்டுக்களுக்கு பதில் வழங்க ஆகக் குறைந்தது ஒரு பக்கத்தைக் கூட ஒதுக்காமல் விட்டுள்ளமை மிகப் பெரிய அபத்தமாகும் . பக்கம் 324 இல் முடிவுரை எனக் குறிப்பட்டதுடன் அதில் இவ்வாறு குறிப்பிடுகின்றார் . ” குறித்த நூல் அச்சுக்குப் போகத் தயாராகிக் கொண்டிருந்த வேளையில் குறித்த ஈஸ்டர் தாக்குதல் பற்றிய புதிய புரளி கலந்த செய்தியொன்று வெளிவந்தது . அதாவது சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகிய என்னையும் குறித்த தாக்குதலுடன் தொடர்புபடுத்தி அப்புரளியானது சர்வதேச ஊடகமான லண்டனைத் தளமாகக் கொண்டிருக்கும் சனல் 04 தொலைக்காட்சியில் 05.09.2023 அன்று ஒளிபரப்பாகியுள்ளது ” என தன் மீதான குற்றச்சாட்டு தொடர்பில் வெறும் 15 வரிகளில் எழுதியுள்ளமை இந்நூலை வாங்கிய அனைவரையும் ஏமாற்றியதாகவே அமையக் கூடும் .

இந்நூலின் இறுதியாக அவர் இவ்வாறு குறிப்பிடுகின்றார் . ” இந்நூலினை ஊன்றி படிக்கின்ற போது சனல் 4 ஊடாக என்மேல் பரப்பப்பட்டுள்ள என்மீதான புரளிகள் எவ்வளவு அபத்தமானவை என்பதை வாசகர்களாகிய ஒவ்வொருவரும் நன்கே புரித்துகொள்வார்கள் என்று நம்புகின்றேன் . அதையும் தாண்டிய ஏதாவது சந்தேகங்கள் உங்கள் மனதில் இருந்தால் சஹ்ரான் தலைமையிலான ஈஸ்டர் தாக்குதல்தாரிகள் தமது தாக்குதலுக்கு தயாரான போது ஒருமித்து நின்று சத்தியப்பிரமாணம் செய்த காணொளி அதனைத் தீரத்து வைக்கும் என்று நம்புகிறேன் ” என நூலை முடித்துள்ளார் . இந்நூல் தொடர்பில் குறிப்பிட்டுச் சொன்னால் , இந்நூலின் சுமார் 200 பக்கங்களுக்கு மேல் வாசிக்க அவசியப்படவில்லை . ஏனெனில் , இணையத்தளங்களில் உள்ள இஸ்லாமியத் தீவிரவாத இயக்கங்களின் விபரம் , இஸ்லாமியத் தீவிரவாத இயக்கங்களினால் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச ரீதியான தாக்குதல்கள் எனக் குறிப்படப்படும் பல் விடயங்கள் அப்படியே பிரதியிடப்பட்டுள்ளன . அச் செய்திகள் தொடர்பில் தகவல் மூலங்களும் இடப்படவில்லை . இந்நூலை வாசிப்பதற்கு முன்பு இருந்த ஈர்ப்பும் அவதானிப்பும் வாசித்து முடித்த பின் அப்படியே இல்லாமற் போய்விட்டது . உண்மையைச் சொல்லப்போனால் இந்த நூலை வாசித்து முடித்த போது மரத்தில் மாடு கட்டிய நகைச்சுவை தான் என் ஞாபகத்திற்கு வந்தது . உங்களுக்கும் மரத்தில் மாடு கட்டிய நகைச் சுவை தெரிந்தால் சிரித்துவிட்டுச் செல்லுங்கள் . தெரியாவிட்டால் இந்த நூலை வாசித்துப் பாருங்கள் .

கிறிஸ்தவ மக்கள் மறக்க முடியாத செயலை செய்து விட்டு அவர்களுக்கு வாழ்த்து வேறு சொல்கிறார் பிள்ளையான் –

கிறிஸ்தவ மக்களுக்கு அவர்களுடைய முக்கிய நாட்களில் மறக்க முடியாத செயலை செய்து விட்டு நல்லவர் போல் நேற்று (25) கிறிஸ்துமஸ் மக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்று பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

 

மட்டக்களப்பு புனித மரியால் பேராலயத்தில் கிறிஸ்மஸ் ஆராதனையின் போது சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் அவர்களின் படுகொலைக்கு நீதிகோரிய போராட்டமும் நினைவேந்தல் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

 

நத்தார் திருப்பலி பூஜையின்போது ஆயுதக்குழுவினால் சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான மாமனிதர் அமரர் ஜோசப்பரராஜசிங்கத்தின் 18 ஆவது நினைவு தினம் நேற்று மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது.

 

25-12-2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியால் தேவாலயத்தில் நள்ளிரவு நத்தார் ஆராதனையின்போது இவர் சுட்டுக்கொல்லப்பட்டதுடன் அவரது மனைவி படுகாயமடைந்திருந்தார்.

 

அமரர் ஜோசப்பரராஜசிங்கத்தின் 18வது நினைவு தினம் நேற்று மாலை மட்டக்களப்பில் இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிபமுன்னணியின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டது.

 

இதன்போது புனித மரியால் பேராலயத்திற்கு முன்பாக கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கத்தின் படுகொலைக்கு நீதிவேண்டும்,படுகொலையாளிகளை சட்டத்தின் முன்பாக நிறுத்து,கொலையாளிகள் சொகுசுவாழ்க்கை வாழ அனுமதித்தது யார் போன்ற கோசங்கள் எழுப்பப்பட்டதுடன் நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு ஊர்வலமாக வருகைதந்தனர்.

 

மட்டக்களப்பு,சார்ள்ஸ் மண்டபத்தில் தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் கே.சோபனன் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

 

இதன்போது அமரர் ஜோசப்பரராஜசிங்கத்தின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது.மலர் மாலையினை பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ,மட்டக்களப்பு மாவட்ட தலைவர் சோபனன் ஆகியோர் அணிவித்தனர்.

 

இந்த நிகழ்வில் தமிழ் தேசிய அரசியலும் பெண்களும் என்னும் தலைப்பில் கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் திருமதி புளோரிடா சிமியோன் சிறப்புரையாற்றினார்.

 

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்,கட்சியின் முக்கியஸ்தர்கள்,சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்,மதத்தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

கொலைக்குற்றச்சாட்டில் அமைச்சர் பிள்ளையான் விரைவில் கைது..?

பல்வேறு கொலை குற்றச்சாட்டுக்களின் கீழ் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் விரைவில் கைது செய்யப்படலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

 

ஏப்ரல் 21 தாக்குதல் மற்றும் தற்போதைய தேசிய பாதுகாப்பு தொடர்பில் எதிர்க்கட்சி கொண்டுவந்துள்ள சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் கருத்திற்குப் பதிலளித்த இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன்,

மக்கள் பிரதிநிதி என்ற வகையில் தனக்கு வழங்க வேண்டிய மரியாதை தொடர்பில் சுமந்தின் முதலில் தெரிந்துக் கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

 

மேலும் ஒரு சட்டத்தரணியாக இந்த விடயங்களை சுமந்திரன் தெரிந்து கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்த சந்திரகாந்தன், இவ்வாறான இழிவான கருத்துக்களை நாடாளுமன்றத்தில் வெளியிடுவதற்கு சபாநாயகர் அனுமதி வழங்க கூடாது எனவும் சபையில் வலியுறுத்தினார்.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரி பிள்ளையான்..? – ஹிருணிக்கா பிரேமச்சந்திர

பிள்ளையான் ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்கு சூத்திரதாரியாக இருக்கலாம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர ஊகம் வெளியிட்டுள்ளார்.

பணத்துக்காக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைக் காட்டிக் கொடுத்துவிட்டு, தனியாகப் பிரிந்து கட்சி வளர்த்த பிள்ளையான் ஈஸ்டர் குண்டு தாக்குதலுக்கு சூத்திரதாரியாக இருக்க மாட்டாரா..? என ஹிருணிக்கா பிரேமச்சந்திர கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஈஸ்டர் குண்டு தாக்குதலில் இலங்கையர்கள் மட்டுமல்லாமல் இலங்கையின் அழகை ரசிக்க வந்த சுற்றுலா பயணிகளும் இந்த குண்டு வெடிப்பில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் எமது நாட்டுசுற்றுலா துறையை ஊக்குவிக்க முயன்றவர்களை கொலை செய்தது ராஜபக்ச அரசாங்கம் என்பது தெட்டத் தெளிவாக விளங்குகின்றது.

அரச புலனாய்வுத் துறையில் ஒரு முஸ்லிம் பிரதானியை வைத்துக்கொண்டு சகல விடயங்களையும் செய்துவிட்டு இன்று ஏதும் தெரியாத போல் நடிப்பது வேடிக்கையாக இருக்கின்றது.

உயிரிழந்த மக்களுக்கான நீதி கிடைக்க வேண்டும் யாராக இருந்தாலும் தண்டனை வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.