பிள்ளையான்

பிள்ளையான்

ஜனாதிபதியும் சி.ஐ.டியினரும் முட்டாள்கள், முடிந்தால் மௌளானாவை முதலில் விசாரியுங்கள் – பிள்ளையான்

ஜனாதிபதியும் சி.ஐ.டியினரும் முட்டாள்கள், முடிந்தால் மௌளானாவை முதலில் விசாரியுங்கள் – பிள்ளையான்

 

உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி வெளிநாட்டில் நிரந்தர வதிவிட உரிமை கோரும் மௌலானாஇ ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். அரசாங்கம் முடிந்தால் மௌளானாவை நாடுகடுத்தி இலங்கைக்கு கொண்டு வந்து விசாரிக்க வேண்டும். இல்லையேல் சுவிஸ்க்குச் சென்று விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் தேசம்நெற்க்கு வழங்கிய செய்தியில் தெரிவித்து இருந்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆறு வருடங்களிற்கு முன்னர் இடம்பெற்றது. ஏன் அவர் அந்தவேளை அது குறித்த விபரங்களை அம்பலப்படுத்தாமல் நான்கு வருடங்கள் காத்திருந்த பின்னர் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவைக்கும் சனல் 4ற்க்கும் சென்றார்? என கேள்வியெழுப்பிய பிள்ளையான், தற்போதைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனிவிரட்ண உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றவேளை சி.ஐ.டியின் தலைவராக பணியாற்றினார். ஜனாதிபதியும் சி.ஐ.டியினரும் முட்டாள்கள். அவர்களுக்கு ஆயுதங்களை கைவிட்டவர்களிற்கும், ஐ.எஸ். மற்றும் முஸ்லிம் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளுக்கும் இடையிலான வித்தியாசத்தை புரிந்துகொள்ள முடியாதா? என தெரிவித்தார்.

இதேவேளை ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தன்மீதான குற்றச்சாட்டு பற்றி மௌனம் களைத்துள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ‘ ஈஸ்டர் தாக்குதல் பற்றிய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை தயவு செய்து படிக்குமாறும், சிஐடி அதிகாரிகள் அளித்த சாட்சியங்கள் உட்பட ‘அந்த அறிக்கையில் உள்ளதைத் தவிர வேறு தனக்குத் தெரியாது எனவும் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் படுகொலையின் பின் நின்றவர்களை அனுர அரசு கண்டுபிடித்து தூக்கிலேற்ற வேண்டும் – பிள்ளையான்

நான் எந்த நாட்டுக்கும் தப்பித்துப் போகப் போவதில்லை! ஈஸ்டர் குண்டுதாரிகளை கண்டுபிடித்து தூக்கிலிடுங்கள்!” – பிள்ளையான்: “அசாத் மௌலான தனக்கும் குடும்பத்துக்கும் விஸா எடுப்பதற்கு விட்ட ரீல்களை வைத்துக் கொண்டு படங்காட்ட வேண்டாம். ஈஸ்டர் குண்டுதாரிகளைக் கண்டுபிடித்து தூக்கிலிடுங்கள்” என்று தேசம்நெற்க்கு நேற்று வழங்கிய நேர்காணலில் பிள்ளையான் என அறியப்பட்ட சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். இன்று தேசம் ரியூப்பில் வெளியாகியுள்ள இக்காணொலியில், “இந்த ஊடகங்கள் குற்றம்சாட்டுகின்ற மௌலவியை சிறையிலிருந்த 500 வரையானவர்களில் ஒருவராக கண்டிருக்கிறேன். பேசியிருக்கிறேன். அவர்களுடைய அதிதீவிரவாதத்தை அவர்களிடமே கண்டித்து இருக்கிறேன்” என்றும் பிள்ளையான் தெரிவித்தார்.

 

“அசாத் மௌலானா விசா எடுப்பதற்காகவும் பணத்திற்காகவும் சுவிஸில் உள்ள யாழ்ப்பாணத்துப் புலிகளுக்காகப் புனைந்த கதை தான் அது. ரிஎம்விபியினது அரசியல் வளர்ச்சியை பொறுக்க முடியாத சுவிஸில் உள்ள யாழ்பாணத்து புலிகள் தமிழ் தேசியம் தமிழரசுக் கட்சி செய்த சதி தான் இது” எனவும் பிள்ளையான் குற்றம்சாட்டினார். “யாழ்ப்பாணத்தில் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றவர்களுக்கு ஒப்பாக நான் முப்பதினாயிரம் வரை வாக்குகளைப் பெற்றவன். என்னிலும் பார்க்க பொன்னம்பலம் கஜேந்திரகுமாருக்கு, செல்வம் அடைக்கலநாதனுக்கு எல்லாம் குறைந்த வாக்குகளே கிடைத்தது. இந்த நெருக்கடியிலும் மட்டக்களப்பு மக்கள் எனக்கு வாக்களித்துள்ளார்கள்” என்றும் பிள்ளையான் குறிப்பிட்டார்.

 

“ரிஎம்விபி யும் பிள்ளையானும் இந்த வீழ்ச்சியில் இருந்து நிச்சயம் மீள எழுவோம் எனத் தெரிவித்த பிள்ளையான் 16 வயதிலேயே போராடப் போய் எத்தனையோ அனுபவித்துவிட்டோம் இதையெல்லாம் பார்த்து மிரண்டுவிடமாட்டோம். ஜனாதிபதி அனுரா தேர்தலில் என்னைத் தோற்கடிக்க என்னை விசாரணைக்கு அழைத்தார்;. அவர் உண்மையான சூத்திரதாரிகளைக் கண்டுபிடித்து தூக்கிலிட வேண்டும்” என்றும் அந்த நீண்ட நேர்காணலில் பிள்ளையான் தெரிவித்தார்.

 

எங்களுக்கு துப்பாக்கி தந்தவர் யார் என்பதை மறந்துவிட்டு தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன் எல்லாம் தமிழ்தேசியம் பேசுகின்றனர் – பிள்ளையான்

நான் ஒரு முன்னாள் போராளி. விடுதலைப் புலிகள் அமைப்பில் துப்பாக்கி தூக்கிய ஒரு நபர் என்று எல்லோருக்கும் தெரியும். துப்பாக்கி தூக்குவது என்பது ஒயில் போட்டுவிட்டு துப்பாக்கி சாத்தி வைப்பது அல்ல. துப்பாக்கி என்றால் சுடும். எவரை சுடுவது என்பது ஒரு தர்மம். இவ்வாறான துப்பாக்கிகளை எமக்கு யார் கொடுத்தார்கள் என்பது இவ்விடத்தில் முக்கியம். யார் இவ்வாறான துப்பாக்கிகளை தூக்குவதற்கு எமக்கு சந்தர்ப்பத்தை உருவாக்கியவர்கள். இவ்வாறான விடயங்கள் எல்லாம் மறந்து போய் தமிழ் தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன் எல்லாம் வந்து எமது மக்களுக்கு தேசியத்தை கற்பிக்கின்ற சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து நாங்கள் வெட்கப் படுகின்றோம்” என தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்தார்.

 

அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி வேப்பையடி 15 ஆம் கிராமம் பகுதியில் விக்னேஸ்வரன் ஆதரவணி தலைமையில் நாவிதன்வெளி கிராம பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் ஆதரவாளர்களுடனான சந்திப்பு நாவிதன்வெளி பிரதேச ஆலயங்களின் நிர்வாகிகள் விளையாட்டு கழகங்கள் கட்சியின் பிரதேச மற்றும் கிராமிய குழுக்களின் ஒருமித்த ஒழுங்குபடுத்தலில் ஆசிரியர் மு.விக்னேஸ்வரனை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

மேலும் தனது உரையில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

 

”ஜேவிபி அரசுடன் இணைந்து அமைச்சரவையில் அங்கம் வைப்பது பற்றி சுமந்திரன் சாணக்கியனும் இன்று சொல்கிறார்கள். இவ்வாறான தடம் புரள்வு இவர்களுக்கு எவ்வாறு வந்தது. இந்த மக்களை அழித்த ஒரு கட்சி அது. இவ்வாறு இருந்த அக்கட்சி எம்மைப் பார்த்து முன்னாள் ஆயுதக் குழுக்கள் என அவர்கள் கூறுகின்றார்கள். அமைச்சரவையில் ஆயுதக் குழுவை சேர்க்க மாட்டார்களாம் சேர்க்கவும் விடமாட்டார்களாம். நான் முன்பே கூறியிருக்கின்றேன் அரசியலில் நிரந்தரம் ஒன்றுமில்லை அதாவது நண்பனும் இல்லை எதிரியும் இல்லை. அதே போன்று இவர்களுக்கு சொல்ல வேண்டிய விடயம் ஒன்று இருக்கிறது.

 

நான் ஒரு முன்னாள் போராளி . விடுதலைப்புலிகள் அமைப்பில் துப்பாக்கி தூக்கிய ஒரு நபர் என்று எல்லோருக்கும் தெரியும். துப்பாக்கி தூக்குவது என்பது ஒயில் போட்டுவிட்டு துப்பாக்கி சாத்தி வைப்பது அல்ல. துப்பாக்கி என்றால் சுடும். எவரை சுடுவது என்பது ஒரு தர்மம். இவ்வாறான துப்பாக்கிகளை எமக்கு யார் கொடுத்தார்கள் என்பது இவ்விடத்தில் முக்கியம். யார் இவ்வாறான துப்பாக்கிகளை தூக்குவதற்கு எமக்கு சந்தர்ப்பத்தை உருவாக்கியவர்கள்.

 

இவ்வாறான விடயங்கள் எல்லாம் மறந்து போய் தமிழ் தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன் எல்லாம் வந்து எமது மக்களுக்கு தேசியத்தை கற்பிக்கின்ற சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து நாங்கள் வெட்கப் படுகின்றோம்.

 

ஆகவே, எமது அன்பு மக்களே இவர்கள் காலத்துக்கு காலம் தேவைக் கேற்றால் போல் பல்வேறு புரளிகளை எழுப்புவார்கள். இது தவிர பிள்ளையானுக்கும் ஈஸ்டர் குண்டு தாக்குதலுக்கும் சம்பந்தமாம். சாணக்கியன் சொல்கின்றார். ஒரு இஸ்லாமிய மகன் சொல்லியிருந்தால் பரவாயில்லை. உங்களுக்கு தெரியும். தெமட்டகொட என்ற இடத்தில் உள்ள ஒரு தொழிலதிபர் ஒருவர் ஒரு ஹோட்டலில் இறந்த இடம்பெற்ற குண்டு தாக்குதலில் சம்பந்தப்பட்டிருக்கின்றார். அவர் கடந்த கால பாராளுமன்ற தேர்தலில் ஜேவிபி கட்சி சார்பாக தேசிய பட்டியலில் இருந்திருக்கின்றார். பெயரை மறந்துவிட்டேன். அவர் ஒரு பெரிய வியாபாரி. அவரது இரு மகன்களும் அச்சம்பவத்தில் இறந்து விடுகின்றார்கள். இவ்வாறு இறந்தவர்களில் ஒருவரான இன்ஷாப் என்பவரின் தெமடகொட வீட்டுக்கு காவல் அதிகாரிகள் வருகின்ற போது அந்த வீட்டில் இருந்த பெண்மணி இரண்டு குழந்தைகளோடு தனது வயிற்றில் உள்ள மற்றுமொரு குழந்தையுடன் வெடித்து சிதறுகிறார். எவ்வாறு இந்த சம்பவம் நடக்கின்றது. நன்றாக படித்த ஒரு பொறியியலாளரின் மனைவி. பணத்தில் உயர்வான குடும்பம். இவ்வாறு இறந்த போகின்றது என்றால் இந்த குடும்பத்தினரை பிள்ளையான் மூளைச்சலவை செய்வாரா. விடுதலைப் புலிகளுக்கு கரும்புலியாகி வெடிப்பதற்கு 30 ஆண்டுகள் சென்றிருக்கின்றது. இந்த முப்பது ஆண்டுகளுக்கு பின்னர் போர்க் என்பவர் மாங்குளத்தில் முதலாவது கரும்புலி தாக்குதல் மேற்கொண்டார்கள். இவ்விடத்தில் இந்த விடயத்தை ஏன் சொல்கின்றேன். இவ்வாறான வரலாறுகள் தெரியாத சாணக்கியன் போன்றவர்கள் பசப்பு வார்த்தைகளை தொடர்ச்சியாக கூறி வருகிறார்கள். அதற்கு ஊதுகுழலாக எம்மோடு இருந்த நாங்கள் நம்பி இருந்த மருதமுனை பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஒரு அமைப்பின் தலைவர் பத்மநாபாவுடன் இந்தியாவில் மரணித்த ஒருவரின் மகன் ஆசாத் மௌலானா இருந்தார். அவரை நம்பிக்கையானவர் என்று நான் நன்றாக பார்த்தேன். இந்த உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலின் பின்னர் அவர் உயிர் வாழ்வதற்காக இலங்கையில் சில பெண்களோடு பிரச்சினை என்று வெளிநாட்டிற்கு சென்றார்.

 

அவர் அங்கு சென்று அரசியல் தஞ்சம் பெறுவதற்கு எடுத்த ஆயுதம் ஈஸ்டர் குண்டு தாக்குதலில் பிள்ளையானுக்கு தொடர்பு உள்ளது என ஒரு பொய்யை உருவாக்கினார். அதனை சர்வதேச ரீதியாக இயங்கும் சனல் 4 என்ற ஒரு ஊடகமும் என்னை அரசியல் ரீதியாக அழிக்க துடிக்கின்ற சில சக்திகளும் விடயத்தை தூக்கிப் பிடித்தார்கள். இதனால் சனல் 4 என்ற ஊடகம் இதனால் பிரபல்யம் அடைந்தது. மிக அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பில் உதய கன்வன்வில என்பவர் சொல்லியிருக்கின்றார். ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை சொல்லி இருக்கின்றது. எல்லாம் பச்சப்பொய். இதனை விசாரிக்க முடியாது.

 

அதே போன்று குறித்து சம்பவத்தை வெளியிட்ட சனல் 4 என்ற ஊடகம் அந்த செய்தியினை முற்றாக நீக்கி இருக்கின்றது. இவ்வாறான விடயத்தை யாருமே வெளியில் சொல்வது கிடையாது. ஏனென்றால் அரசியலுக்காக சகல பிரச்சினைகளை எல்லாம் இழுத்து வடுவார்கள். கோடீஸ்வரன் என்பார்கள் துவக்கு வைத்திருந்தவர் என்பார்கள். பிள்ளையானை சிறைச்சாலையில் அடைக்கப்படுவார் என்பார்கள். மட்டக்களப்பில் சில அம்மாமார் கூறியிருக்கிறார்கள். பிள்ளையான் உங்களை சிறையில் அடைத்திருக்கின்ற போது தான் வாக்குகள் நாங்கள் இட்டு வெளியே எடுத்து இருக்கின்றோம். இனியாவது அடைக்கப் போகிறார்கள்? ஏனெனில் உளவியல் ரீதியாக எம்மை யாழ்ப்பாண சக்திகளும் சவால் விடுகின்றோம் என்பதற்காக கிழக்கு மாகாணத்தில் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காத சில அரசியல்வாதிகளும் எம்மை அழிக்க நினைக்கின்றார்கள்.

 

அந்த சக்திகள் எல்லாம் எமது மக்களுக்கு எதிரானவர்கள். நாம் இந்த மக்களுக்கு உண்மையாக நேர்மையாக 16 வயதில் இருந்து இன்று 50 வயது வரைக்கும் எமது பணிகளை சிறப்பாக செய்து வந்திருக்கின்றோம் அதில் நாங்கள் எங்கும் பிழை விட்டது கிடையாது. யாருக்கும் அநியாயம் செய்தது கிடையாது எவரையும் ஏமாற்றியது கிடையாது. ஆனாலும் இந்த அரசியல் சூழலில் எதிர்பார்ப்புடன் இருக்கின்ற மக்களுக்கு ஆங்காங்கே இருக்கின்ற சிறு சிறு பிழைகளை வைத்துக்கொண்டு பெரிதாக உருவாக்குகின்றார்கள். ஆனால் இக்காலத்தில் பொறுப்பு மிக்க அரசியல் கட்சி ஒன்றை தலைவராக எமது பணி கிழக்கு மாகாணம் பூராகவும் விஸ்தரிக்கப்படும்.

 

அதில் ஒரு அங்கமாக இந்த தேர்தலை நான் பார்க்கின்றேன். இந்த தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வெற்றி என்பது கிழக்கு தமிழர்களின் வெற்றியாகும். ஆதித் தமிழன் உறுதியாக வாழ வேண்டும் என்றால் நாங்கள் எல்லோரும் ஒன்று பட்டு கிழக்கு மாகாணத்திற்கான தனித்துவமான அரசியலை முன்னெடுக்கின்ற தமிழ் மக்கள் விடுதலை புலிக் கட்சியை பாதுகாத்து தூக்கிப் பிடித்து அதனை வெற்றி பெறச் செய்ய வேண்டும் அந்த ஆணையிலிருந்து அதிகாரத்துடன் நாங்கள் பேரம் பேச வேண்டும். அதற்கான ஒரு சந்தர்ப்பத்தை அம்பாறை வாழ் மக்கள் எமக்கு அழியுங்கள் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

வடக்கு, கிழக்கில் நடைமுறை சாத்தியமற்ற தீர்மானங்களுக்காக தமிழ் தலைவர்கள் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கின்றார்கள். – பிள்ளையான்

வடக்கு, கிழக்கில் நடைமுறை சாத்தியமற்ற தீர்மானங்களுக்காக சில தலைவர்கள் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கின்றார்கள். தமிழ் பொது வேட்பாளர் விவகாரமும் அவ்வாறு நேரத்தை வீணடிக்கும் செயற்பாடே. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீது தமிழ் மக்களின் நம்பிக்கை மேலெழுந்துள்ளதாக கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுறை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் செவ்வாய்கிழமை (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

 

நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டிய நிலைமையில் தான் இன்று தமிழரசு கட்சி காணப்படுகிறது. ஒரு சிலர் வடக்கு, கிழக்கில் பொது வேட்பாளர் களமிறக்கப்பட வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்கின்றார்கள். சில தலைவர்கள் அவர்களது சித்தாந்தத்தின் அடிப்படையில் நாட்டை குழப்பும் வகையில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

 

அவர்கள் நடைமுறை சாத்தியமற்ற, மீண்டும் மீண்டும் மக்கள் தோல்வியடையக் கூடிய சிந்தனைகளில் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கின்றார்கள். எனவே அவர்களது எண்ணங்கள் சாத்தியமற்றவை. ஆனால் மக்கள் சிறந்த தீர்மானத்தை எடுக்கக் கூடிய புத்திசாலிகளாகவே இருக்கின்றனர்.

 

நாட்டில் தற்போதுள்ள பிரச்சினைகளைத் தீர்த்துக் கொண்டு அதிகார பரவலாக்கலிலும் அவதானம் செலுத்தக் கூடிய தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே. அவருக்கும் ஒரு கடமை இருக்கிறது. கடந்த காலங்களில் தான் வகித்த வகிபாகம், 13ஆவது திருத்தத்தின் வெற்றி, தோல்வி, விடுதலைப்புலிகளுடனான உடன்படிக்கைகள் உள்ளிட்டவற்றில் அவரும் பங்கேற்றுள்ளார்.

 

தேர்தலின் பின்னர் தன்னால் முடிந்த வரை மாற்றங்களை ஏற்படுத்துவதாகக் கூறியுள்ளார். அவர் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அதுவே அவர் இந்த நாட்டுக்கு ஆற்றக் கூடிய மிகப் பாரிய பணியாக இருக்கும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதனை செய்யக் கூடிய வாய்ப்பிருந்த போதிலும், கடும்போக்குவாதிகள் அதற்கு இடமளிக்கவில்லை.

 

எவ்வாறிருப்பினும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவற்றை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை தமிழ் மக்கள் மத்தியில் மேலெழுந்திருக்கின்றது. அவ்வாறு அவர் செய்யும் பட்சத்தில் உலகலாவிய பிரபல்யமடைந்த தலைவராக அவர் உருவாகக் கூடிய வாய்ப்புக்கள் கூட இருக்கின்றன என்றார்

எனது கட்சிக்கு ஜே.வி.பியினரே ஆயுதங்களை வழங்கினர் – பிள்ளையான்

எனது கட்சிக்கு ஜே.வி.பியினரே ஆயுதங்களை வழங்கியிருந்ததாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” பிள்ளையான் மக்களை அச்சுறுத்துவதாக அநுர குமார திசநாயக்க தெரிவித்திருந்தார்.

அநுர குமார திசநாயக்க தரப்பினரே எங்களுக்கு முதல் முறையாக ஆயுதங்களை வழங்கினர். அதன் பின்னர் மக்களை சுடுவதற்கு எங்களிடம் ஆயுதம் கேட்டார்கள். ஆனால் நாங்கள் அதனைக் கொடுக்கவில்லை.

பிள்ளையான் மக்களை அச்சுறுத்துவதாக இருந்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான வாக்குகளைப் பெற்றது யார்? எனவே ஜனநாயகத்தை பற்றி பேசுவதாக இருந்தால் அநுர குமார திசாநாயக்க யோசித்து பொறுப்பான தலைவராகப் பேச வேண்டும்” எனத் தெரிவித்தார்.

மேலும் ”இந்த நாட்டை அழிக்க நினைக்கின்ற தலைவர் எங்கள் மண்ணில் வந்து பேசியதையிட்டு கவலையடைகின்றேன். அவர்கள்தான் ஒரு பிரபல்யமான ஆயுத குழு. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு ஆயுதம் தந்தவர்களும் அவர்கள்தான். பின்னர் அதனைக் கைமாற்றியதும் அவர்கள்தான். எனவே அந்த ஆயுதங்களை தேடி எடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு அநுர குமார திசநாயக்காவுக்கு தெரிவிக்கின்றேன்” இவ்வாறு சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

கிழக்கில் தமிழர் அரசியல் கட்டமைப்பு செயலிழந்துள்ளது – இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரக்காந்தன்

“அம்பாறையில் ஒரு கணக்காளரைக் கூட நியமிக்க முடியாத அளவிற்கு அரசியல் கட்டமைப்பு செயலிழந்துள்ளதாக” கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரக்காந்தன் தெரிவித்துள்ளார்.

காரைதீவு மத்திய கல்லூரியில் இடம்பெற்ற ஈஸ்டர் படுகொலை தொடர்பிலான நூல் அறிமுக நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

சமூகத்தின் பொருளாதார அரசியல் அதிகரித்துள்ள நிலையில் அம்பாறை மாவட்ட மக்களின் ஆணையை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்ற கேள்வி எழுந்துள்ளது.

எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு அம்பாறையில் ஒரு கணக்காளரைக் கூட நியமிக்க முடியாத அளவிற்கு, அரசியல் கட்டமைப்பு அம்பாறை மாவட்டத்தில் காணப்படுகின்றது.

இவ்வாறான பிரச்சினைகள் தமிழரசுக் கட்சியின் தனிப்பட்ட பிரச்சினை கிடையாது. மாவட்ட மக்களினது தேவைகளை அறிந்து செயற்படுவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்” இவ்வாறு அமைச்சர் சிவநேசத்துரை சந்திரக்காந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.

புலிப்பயங்கரவாத அமைப்புடன் இருந்ததற்காக எல்லா பழிகளையும் என் மீது போடாதீர்கள் – நாடாளுமன்றத்தில் பிள்ளையான்!

தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பு என நாடாளுமன்றத்தில் விழித்த இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக எல்லாக் குற்றச்சாட்டுக்களையும் தன்மீது சுமத்த முடியாது என தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக நேற்று சபையில் சாணக்கியன் பிள்ளையான் மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.

 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையை கண்டறிய வேண்டுமானால் பிள்ளையானை கைது செய்து விசாரணை செய்யவேண்டும் என நேற்று நாடாளுமன்றத்தில் தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்திருந்தார்.

 

அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 2019ஆம் ஆண்டில் இடம்பெற்றிருந்தாலும் அதனுடன் தொடர்புடைய குழுக்கள் கடந்த 2005ஆம் ஆண்டு தொடக்கம் நாட்டில் செயற்பட்டு வந்துள்ளதாகவும் இரா.சாணக்கியன் நேற்று சபையில் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்கில் பிள்ளையானுடன் கைது செய்யப்பட்ட கஜன் மாமா என்பவர் சில மாதங்களுக்கு முன்னர் திடீரென உயிரிழந்துள்ளதாகவும் ஆனால் அவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு இடமளிக்காது உடலை எரித்துள்ளதாகவும் இரா.சாணக்கியன் சபையில் தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் இன்று சபையில் சாணக்கியனின் கருத்தினை மறுத்துக் கருத்து வெளியிட்டிருந்ததுடன், தானும் ஏற்கனவே ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பில் இருந்ததாகவும் அது ஒரு பயங்கரவாத அமைப்பு என்றும் குறிப்பிட்டார்.

 

அத்துடன் ஜே.வி.பி உள்ளிட்ட அமைப்புக்களும் பல பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்ததாகவும் தான் யார் என்பதை தனது மக்கள் நன்கு அறிவார்கள் எனவும், இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மேலும் குறிப்பட்டார்.

பிள்ளையானை கைதுசெய்து விசாரணை நடத்துங்கள் ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகளை கைது செய்யலாம் – இரா.சாணக்கியன்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையானை கைதுசெய்து விசாரணை நடத்தினால் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் உள்ளிட்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் 2005இல் இடம்பெற்ற பல்வேறு கொலைகள் தொடர்பான உண்மைகளை அறிந்துகொள்ள முடியும்.

 

அதேநேரம் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை இடம்பெறுமாக இருந்தால் அதில் சாட்சி சொல்வதற்குப் பலரும் இருக்கின்றனர் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சாணக்கியன் ராவமாணிக்கம் தெரிவித்தார்.

 

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

 

அவர் அங்குத் தொடர்ந்து தெரிவிக்கையில்,

 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 2019ஆம் ஆண்டில் நடந்திருந்தாலும் அதனுடன் தொடர்புடைய குழுக்கள் 2005ஆம் ஆண்டு முதல் இந்த நாட்டில் செயற்பட்டு வந்துள்ளன.

 

இது தொடர்பில் அடிக்கடி கூறியிருந்தாலும் இதன் பாரதூர தன்மை தொடர்பில் புரிந்துகொள்ளாது இருக்கின்றனர். எவ்வாறாயினும் தற்போது 2014ஆம் ஆண்டில் நடந்த சம்பவமொன்று தொடர்பில் மீண்டும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 

இலங்கையில் புலனாய்வுத்துறையுடன் சம்பந்தப்பட்ட மூன்று இனங்களையும் சேர்ந்த புலனாய்வுக் குழு அதிகாரிகளின் குழுவொன்றே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளன.

 

2004ஆம் ஆண்டில் ஈமானிய நெஞ்சங்கள் என்ற அமைப்பொன்று அமைக்கப்பட்டுள்ளது. பொலிஸ் பாயிஸ், ஆமி மொஹிதீன், கலீல் ஆகிய மூவரையும் உள்ளடக்கியதாக இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. கலீல் என்ற நபர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்கில் சிறைக்குச் சென்று விடுதலையானவர்.

2009 ஆம் ஆண்டில் திருகோணமலையில் 6 வயது வர்ஷா என்ற சிறுமி பெற்றோரிடம் கப்பம் கோரி கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

 

இது தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் திருகோணமலைக்குப் பொறுப்பான மேர்வின் என்பவர் கைது செய்யப்பட்டார் ஜனார்த்தனர், நிசாந்தன், ரெஜினோல்ட் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பின்னர் பொலிஸாரின் பொறுப்பிலிருந்த போதே உயிரிழந்துள்ளனர்.

 

இதேவேளை 8 வயது சிறுடு ஒருவரும் கப்பம் கோரி 2009இல் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அந்த சம்பவம் தொடர்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பின்னர் அவர்கள் நால்வரும் அரச படையினரால் கொலை செய்யப்பட்டனர்.

 

புலனாய்வு பிரிவின் குழுவினர் தமது நோக்கத்திற்காகக் கப்பம் பெறும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதுடன், அதன்பின்னர் கைது செய்யப்படுபவர்களைக் கொல்லும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு பலர் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

 

இந்த சம்பவங்களுக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் இடையே என்ன தொடர்பு என்று நினைக்கலாம். ஆனால் 2008 ஆம் ஆண்டில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் திட்டமிட்டு கிழக்கில் ஸ்தீரமற்ற நிலைக்குக் கொண்டு செல்ல பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. அவ்வாறாகப் பரிசோதிக்கப்பட்ட விடயங்களே பின்னர் நாடு முழுவதும் நடத்தப்பட்டுள்ளது.

 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் பல்வேறு தகவல்கள் வெளியாகின்றன. பிள்ளையான் உள்ளே இருந்தால் அவர் பலவற்றை கூறலாம் என்பதனால் அவரை விடுதலை செய்ய நடவடிக்கையெடுத்துள்ளனர்.

 

ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் பிள்ளையானுடன் கைது செய்யப்பட்ட கஜன் மாமா என்பவர் சில மாதங்களுக்கு முன்னர் திடீரென உயிரிழந்துள்ளார். மரண பரிசோதனைக்கு இடமளிக்காது அவரின் உடலை எரித்துள்ளனர்.

 

அதனால் 2005ஆம் ஆண்டு முதல் ஈஸ்மர் தாக்குதல் வரை இடம்பெற்ற கொலை சம்பவங்களுக்குத் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்குத் தொடர்பு இருக்கிறது. அதனால் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அந்த கட்சியின் தலைவை கைதுசெய்து விசாரணை நடத்தினால் இது தொடர்பான அனைத்து உண்மைகளையும் தெரிந்துகொள்ளலாம். எனவே மட்டக்களப்பு மாவட்ட வாக்குகளைப் பார்க்காமல் ஜனாதிபதி அவரை கைதுசெய்து விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

இலங்கையில் ஒரு பொறுப்பற்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவும் ஜே.வி.பியும் ஈஸ்டர் தாக்குதலை அரசியலாக்க பார்க்கிறார்கள் – பிள்ளையான்

உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பை உலகளாவிய ரீதியில் கையாண்ட அமெரிக்கா, அவுஸ்திரேலியா. பொலிஸார் இதனை சரியாக கணித்து ஆராய்ந்து நடந்ததை கண்டுபிடித்து அறிக்கையை சமர்ப்பித்து விட்டு வெளியேறி விட்டார்கள். ஆனால், இலங்கையில் ஒரு பொறுப்பற்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவும் ஜே.வி.பி போன்ற கட்சிகளும் தற்போது இதனை கையில் எடுத்து அரசியலாக்கப் பார்க்கிறார்கள். மதங்களைப் பின்பற்றுவது சம்பந்தமான ஒரு அறிவு ரீதியாக ஒழுங்குபடுத்தலை எதிர்காலத்தில் உண்டாக்குவதன் மூலம் மதத்தின் பெயரால் இவ்வாறான குண்டு வெடிப்புகளை தவிர்க்க முடியும் என இராஜாங்க கிராமிய வீதி அபிவிருத்தி அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

 

மட்டக்களப்பில் ஞாயிற்றுக்கிழமை (21) மாலை மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,

 

உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலின் போது ஒரே நேரத்தில் பல இடங்களில் குண்டு வெடிப்பை தற்போது அரசியலாக்க பார்க்கிறார்கள் இவர்கள் ஆழமான அறிவை தேடி பார்க்க வேண்டும் இதனை அரசியல் சாயம் பூச முயல்கிறார்கள் எல்லா மதங்களிலும் கடும் போக்கானவர்கள் இருக்கிறார்கள். உலகளாவிய ரீதியில் தடை செய்யப்பட்ட பல இயக்கங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அதில் ஒரு கூராகத்தான் ஐ எஸ் ஐ எஸ். தீவிரவாதமும் இருந்தது. பல நாடுகளிலும் பயிற்சி எடுத்த காத்தான்குடியைச் சேர்ந்த சஹரானும் அவரது குழுவினரும் இருந்தனர். இதனை உலகளாவிய ரீதியில் கையாண்ட அமெரிக்கா ஆஸ்திரேலியா பொலிசார் இதனை சரியாக கனித்து ஆராய்ந்து அவர்கள் அறிக்கையை சமர்ப்பித்து விட்டு வெளியேறி விட்டார்கள் ஏனென்றால் அவர்கள் சரியாக நடந்ததை கண்டுபிடித்து விட்டார்கள்.

 

இவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்போது இவ்வாறான சம்பவங்கள் இனிமேலும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற அச்சம் நமக்கு உள்ளது. இதற்காக தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும். மதத்தின் பெயரால் நூறாண்டுகளுக்கு மேல் இயங்கும் இந்த வகாபாதத்தை முறியடிப்பது இலகுவான விடயம் அல்ல இதனை முறியடிப்பதற்கு அதி தொழில்நுட்பம் கூடிய பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்கப்பட வேண்டும்.

 

நாட்டில் ஏனைய மதத்தவரையும் மதித்து நடக்க வேண்டும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடு இலங்கை போன்ற நாட்டில் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்தால் ஏனைய நாடுகளைப் போல் இலங்கையும் அபிவிருத்தி இலக்கை அடைய முடியும் என அவர் தெரிவித்தார்.

தமிழரசு கட்சி தேர்தலையே ஒற்றுமையாக நடத்த முடியாதவர்கள் தான் பொதுவேட்பாளர் பற்றி பேசுகிறார்கள் – பிள்ளையான்

சிறுபான்மை மக்கள் ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதென்பது காலத்திற்கு பொருத்தமில்லாத செயற்பாடாகும் என இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன்(பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் எருவில் கிராமத்தில் இன்று (20) மாலை நடைபெற்ற சித்திரை விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“எதிர்வரும் ஒக்டோபர் நடுப்பகுதிக்கு முன்னர் தேர்தல் ஒன்று நடைபெறவுள்ளதாக ரணில் அறிவித்துள்ளார். நாட்டில் அடுத்த தலைவர் யார் என்ற பலமான கேள்வி இருக்கின்றது.எமக்கான தலைவரை தேர்வு செய்வதற்கு அதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்குவதற்குரிய திட்டங்களை நாங்கள் தீட்டியுள்ளோம்.

தற்போது இலங்கையிலுள்ள சிறுபான்மை மக்களை மையப்படுத்தியதாக பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தவேண்டும் என்ற தகவல்கள் ஊடகங்களில் வெளிவருகின்றன. இந்த பொது வேட்பாளர் தொடர்பில் நாங்கள் ஆழமாக ஆராய வேண்டும். யாரும் அரசியலுக்காக கருத்துக்களைச் சொல்லலாம். இவ்வாறானவர்கள் முன்னரும் வடகிழக்கிலுள்ள சிறுபான்மை மக்களை ஒற்றுமைப்படுத்துவோம் என சொல்வார்கள், அதனைச் செயல்படுத்த முடியாமல் போய்விடும்.

இதற்கு நல்ல உதாரணம் தான் இலங்கைத் தமிழரசுக் கட்சியினுடைய தேசியமாநாடும், அதன் தலைவர் தெரிவும். இலங்கை அரசிடமிருந்து தீர்வு பெற்றுத் தருவோம் என்றவர்கள், அதன் நீதித்துறையின் காலடியில் வீழ்ந்து கிடக்கின்றார்கள்.

கட்சிக்குள்ளேயே ஒரு அமைப்பை ஒன்றுபடுத்த முடியாத தலைவர்கள் நாம் மட்டுமே தான் என சிந்திக்கின்ற யாழ்ப்பாணத்து தலைவர்கள், இந்த மண்ணுக்கும் இந்த நாட்டுக்கும் ஒன்றையுமே பெற்றுக் கொடுக்கவுமில்லை, பெற்றுக் கொடுக்கப்போவதுமில்லை.

அந்த அடிப்படையில் பொது வேட்பாளர் என்ற கருத்தும் அங்கிருந்துதான் ஆரம்பித்திருக்கின்றார்கள். அது வெற்றிபெற முடியாத, திட்டமிடல் இல்லாத ஒரு கற்பனை.அவர்கள் ஒலிவாங்கிகளுக்கு முன்னால் கருத்துக்களை வெளியிடும் ஒரு புரளியாகும்.

எனவே சிறுபான்மை மக்கள் ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதென்பது காலத்திற்கு பொருத்தமில்லாத செயற்பாடாகும்.”என அவர் சுட்டிக்காட்டினார்.