பிள்ளையான்

பிள்ளையான்

வேலிக்கு ஓணான் சாட்சி’ போல பிள்ளையான் வழக்கிற்கு சட்டத்தரணியாக உதய கம்பன்பில !

வேலிக்கு ஓணான் சாட்சி’ போல பிள்ளையான் வழக்கிற்கு சட்டத்தரணியாக உதய கம்பன்பில !

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் ரவீந்திரநாத் சிவசுப்பிரமணியம் வழக்கில் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் கைதாகியுள்ளார். தற்சமயம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பிள்ளையான் கைது செய்யப்பட்டு 90 நாட்களுக்கு விசாரணை கைதியாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். இந்த வழக்கு தவிர முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கிலும் பிள்ளையான் கைதாகி 5 வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் ஆதாரங்கள் இல்லை என காரணம் காட்டி விடுதலை செய்யப்பட்டும் இருந்தார். அத்துடன் ஈஷ்டர் குண்டுத் தாக்குதலிலும் பிள்ளையானின் பங்களிப்பு இருப்பதாக குற்றஞ் சாட்டப்படுகிறது. இது தொடர்பிலும் பிள்ளையான் இரண்டு தடவைகள் விசாரிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இனவாதியான பிவித்துரு ஹெல உறுமய தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்பன்பில பிள்ளையானின் பிரத்யேக சட்டத்தரணியாக நியமிக்கப்பட்டுள்ளார். பிள்ளையானுக்கு உதய கம்பன்பில வழக்கறிஞராகியுள்ளமை பிரச்சினையின் தீவிரத்தை காட்டுகின்றது என என்பிபி அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கண்டியில் நடந்த கூட்டத்தில் மக்கள் மத்தியில் தெரிவித்தார்.

கடந்தகாலங்களில் இடம்பெற்ற கொலைகள், ஊழல்கள் மற்றும் மோசடிகள் எவ்வளவு பாரதூரமானவையாக இருந்தால் கம்பன்பில மூக்கை நுழைத்திருப்பார் என்று நளிந்த ஜயதிஸ்ஸ அச்சம் வெளியிட்டார். உதய கம்பன்பில இதுவரை எந்தவொரு வழக்குகளிலும் ஆஜராகி பார்க்கவில்லை என மேலும் தெரிவித்தார்.

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவும் இப்போது சுறுசுறுப்பாக செயற்பட ஆரம்பித்திருக்கிறது. நீதிமன்றம் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் வழக்குகளை பதிந்து விசாரிக்க ஆரம்பித்து விட்டது எனவும் கூறி நளிந்த ஜயதிஸ்ஸ ஊழல், மோசடி மற்றும் குற்றவாளிகளின் வயிற்றில் புளியை கரைத்தார்.

 

பிள்ளையானின் எதிர்காலம் கேள்விக் குறியாகின்றது ? விதியா? சதியா ? ரிஎம்விபி இன் அடுத்த தலைவர் கருணா அம்மானா ?

பிள்ளையானின் எதிர்காலம் கேள்விக் குறியாகின்றது ? விதியா? சதியா ? ரிஎம்விபி இன் அடுத்த தலைவர் கருணா அம்மானா ?

அண்மையில் கருணா அம்மான் விசாரிக்கப்பட்ட நிலையில் பிள்ளையான் கைது இடம்பெற்றுள்ளது. கருணா – பிள்ளையான் – வியாழேந்திரன் இணைந்த கிழக்கு முன்னணி உதயம்பெற்றுள்ளது. இந்தப் பின்னணியில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் தாக்குதல் சம்பவங்கள் நடந்த காலகட்டங்களில் கருணா இலங்கையில் இருக்கவில்லை. அத்தோடு தமிழீழ விடுதலைப் புலிகளும் புலம்பெயர் தமிழர்களும் பிள்ளையானையே குறிவைத்து பிரச்சாரம் செய்வதாக பிள்ளையானின் நெருங்கிய நண்பரொருவர் தேசம்நெற்குத் தெரிவித்தார். உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில் தனக்கு மாற்றுக் கருத்து இல்லை எனத் தெரிவிக்கும் அவர், கைது செய்யப்பட்ட காலகட்டம் தங்களுடைய அரசியல் செயல்பாட்டை முடக்கவே மேற்கொள்ளப்படுவதாகக் குற்றம்சாட்டுகின்றார்.

தமிழீழ விடுதலைப் புலிகளிலிருந்து பிரிந்த பிள்ளையானின் அரசியல் அஸ்தமனமாகின்றது என்ற கணிப்புகள் பரவலாகத் எதிர்வு கூறப்படுகின்றது. இக்கைதுக்கு சில மாதங்களுக்கு முன் இவற்றையெல்லாம் மீறி வருவேன் என்று பிள்ளையான் தேசம்நெற்க்குத் தெரிவித்திருந்த போதும் பிள்ளையானின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே உள்ளது.

 

யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த பேராசிரியர் சிவசுப்பிரமணியம் இரவீந்திரன் கடத்தப்படுவதற்கு முன் கிழக்குப் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி கிழக்கைச் சேர்ந்த பால சுகுமாரன் கடத்தப்பட்டு இருந்தார். தற்போது லண்டனில் உள்ள பால சுகுமாரனுடன் இது தொடர்பில் உரையாடுவதற்குத் தொடர்பு கொண்ட போதும் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இந்தக் கடத்தல் நாடகங்களுக்குப் பின்னால் பிரதேசவாதம் தலைதூக்கியிருந்த காலகட்டம் அது. தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து கருணா அம்மான் 2004 யூலை இறுதிப் பகுதியில் வெளியேறியாதிலிருந்து கிழக்குப் பல்கலைக்கழகமும் வடக்கு – கிழக்கு பிரதேசவாதச் சிக்கலுக்கு உள்ளாகியது. கிழக்கு பல்கலைக்கழகத்தில் கருணாவுக்கு ஆதரவாக சில பேராசிரியர்கள் திரும்பினர். ஆனால் வடக்கைச் சேர்ந்தவர்கள் அணிசேரா நிலையை எடுக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. அவர்களுடைய குடும்பங்கள் வடக்கில் இருந்தது.

2004 இல் கருணா அம்மானுக்கு ஆதரவாக கிழக்கு பல்கலைக்கழகத்தில் போராட்டங்களை மேற்கொண்ட கிழக்கு பல்கலைக்கழக விவசாய பீடாதிபதி தம்பையா திருச்செல்வம் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். 2004 மார்ச் 24ஆம் திகதி மட்/கல்லடியிலுள்ள அவரது வீட்டில் இருந்தபோது சுமார் மலை 8.30 மணியளவில் ஆயுதமேந்திய இரு இளைஞர்களால் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

2004ஆம் ஆண்டின் பாராளுமன்ற தேர்தலுக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரான இராஜன் சத்தியமூர்த்தி அவர்கள் மட்டக்களப்பு மக்களின் பெருமதிப்புக்குரியவர். மார்ச் மாதம் 30ஆம் திகதி அதிகாலை 07.40 மணிக்கு அவர் தன்னுடைய பூசையறையில் முருகன் படத்தில் முன்னால் நின்று தீபம் ஏற்றி சாம்பிராணி கொளுத்தி வழிபாடு செய்து கொண்டிருக்கையில் புலிகளால் சாராமரியாகச் சுடப்பட்டு கொல்லப்பட்டார்.

இந்நிலையில்தான் 2004, 63 வயதான மட்டக்களப்பு அரசாங்க அதிபர் இரத்தினம் மௌனகுருசாமி, தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்னரான மார்ச் 27ல் மட்/ பிள்ளையாரடியில் வைத்து கைத்துப்பாக்கி ஏந்திய புலிகளால் சுடப்பட்டார். எனினும் அதிஷ்ட வசமாக அவருடைய உயிர் காப்பாற்றப்பட்டது.

இந்த வடக்கு – கிழக்கு பிளவின் போட்டியில் நடந்த மற்றுமொரு முக்கிய படுகொலை தமிழரசுக் கட்சியின் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை. 2005 கிறிஸ்மஸ் தினமான டிசம்பர் 25இல் இவர் படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பில் பிள்ளையான் குற்றம்சாட்டப்பட்டு கொலைக் குற்றச்சாட்டு நிருபிக்கப்படாத நிலையில் பிள்ளையான் விடுவிக்கப்பட்டார்.

இதனையடுத்து 2006இல் கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் இரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டார். சம்பவம் தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். பிள்ளையானை கைது செய்து தண்டிப்போம் என்பதை தேசிய மக்கள் சக்தி அரசு பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னரேயே அறிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் 08 மட்டக்களப்பில் வைத்து அவர் கைது செய்யப்பட்டு தற்போது பிள்ளையான் கொழும்பிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏட்டிக்குப் போட்டியான கொலைக் கலாச்சாரம் புலிகள் உட்பட்ட தமிழ் ஆயுதக் குழுக்களிடம் மலிந்து காணப்பட்டது. யாழ்ப்பாணத்தில் வளர்ந்த சகோதரப் படுகொலைக் கலாச்சாரம் தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து கருணா அம்மான் வெளியேறியதும் கிழக்கிலும் பரவியது. யாழ்ப்பாணத்தில் பாடசாலை அதிபர்களே ஏட்டிக்கு போட்டியாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் நடந்தேறியுள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டம் படுமொசமான கொலைக் கலாச்சாரத்தை தன்னகத்தே கொண்டிருந்தது.

இதற்கு பிள்ளையான் என அறியப்பட்ட சிவநேசதுரை சந்திரகாந்தன் விதிவிலக்கல்ல. இவர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் என்பதோடு, கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அவர் கைதாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.

பிள்ளையான் மீது ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியாமல் போனாலும் பிள்ளையான் மீதுள்ள நீண்ட குற்றச்சாட்டுகளின் பட்டியலில் இருந்து விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தாங்கள் அரசியலுக்கு வந்த 2008க்குப் பின் தாங்கள் வன்முறையில் ஈடுபடவவில்லை எனத் தேசம்நெற்க்குத் தெரிவித்து இருந்தார். ஆனால் நடைமுறையில் 2008க்கு முன்னும் பின்னும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்கள் பல உள்ளது.

தேசிய மக்கள் சக்தி அரசு தற்போது அடுத்தடுத்த முன்னாள் அமைச்சர்கள், முதலமைச்சர், பொலிஸ் தலைமைப் பொறுப்பாளர் என எவ்வித வேறுபாடுமின்றி சட்டத்தை மிகத் தீவிரமாக அமுல்படுத்த முயற்சிப்பதால் பிள்ளையான் இந்தக் கிடுக்குப் பிடியிலிருந்து தப்புவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றே கருதப்படுகின்றது.

இந்த வடக்கு – கிழக்கு முரண்பாட்டில் யாழ் மையவாதம் எப்போதும் ஏனையவர்கள் மீது பழியைப் போட்டு தப்பிவிடுகின்ற போக்கே இன்னமும் தொடர்கின்றது. தற்போது புலம்பெயர் தமிழர்களின் பழிவாங்கும் உணர்வு பிள்ளையானையே மையம் கொண்டுள்ளது. மேலும் தேசிய மக்கள் சக்தி வெற்றியை நழுவவிட்ட ஒரே மாவட்டம் மட்டக்களப்பு. அந்த வகையில் பிள்ளையான் ஒரு இளகிய இரும்பு. தூக்கித் தூக்கி அடிப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே சமயம் பிள்ளையான் கொலைகள் மற்றும் வன்முறைகள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரிக்கப்படுவதும் அவை நிரூபிக்கப்படும் பட்சத்தில் தண்டிக்கப்படுவதும் மிக அவசியம்.

பிள்ளையான் தற்போது கிடுக்குப் பிடியில் மாட்டியுள்ளதால் கருணா அம்மானின் தலைமைத்துவத்திற்கு கதவுகள் திறந்துவிடப்படும் வாய்ப்பு உள்ளது. பிள்ளையானுக்கு விழுந்த வாக்குகளுக்குப் பின் யாழ் மையவாத எதிர்ப்பு பலமாக இருப்பதை தமிழ் தேசியவாதிகள் உணர்ந்து தமிழ் சமூகம் ஒரு பல்லின சமூகம் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். பிள்ளையானின் மீது அனைத்து பழிகளையும் போட்டுவிட்டு நாங்கள் சுத்தமான சுவாமிப்பிள்ளைகளாக காட்டிக்கொள்ள முடியாது. கிழக்கை ஆதரித்தமைக்காக கிழக்கின் ஆளுமைகள் பலர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அவையும் விசாரிக்கப்பட வேண்டும்.

ஈஸ்டருக்கு முன் பிள்ளையான் சி.ஐ.டியினரால் கைது ! பயங்கரவாதத் தடைசட்டம் பயன்படுத்தப்படும் !

ஈஸ்டருக்கு முன் பிள்ளையான் சி.ஐ.டியினரால் கைது ! பயங்கரவாதத் தடைசட்டம் பயன்படுத்தப்படும் !

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பிலிருந்து வந்த குற்றப் புலனாய்வுப் பிரிவால் கட்சி தலைமை காரியாலயத்தில் வைத்து பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கைதுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

தற்போதுள்ள நிலையில் அரசாங்கம் விரும்பியோ விரும்பாமலோ பயங்கரவாதத் தடைச்சட்டத்தை பயன்படுத்தும் நிலையிலேயே இருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். தற்போதுள்ள குற்றச்செயல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு பயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியமாக உள்ளது என அவர் சுட்டிக்காட்டினார். திட்டமிட்ட பாதாளக்குழுக்கள், போதைவஸ்து கடத்தல் மற்றும் குற்றங்கள், தேசிய பாதுகாப்புக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு வேறு சட்டங்கள் நடைமுறையில் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதில் உறுதியாக உள்ளோம் என்றும் அதற்கு அவகாசம் தேவை எனவும் சுட்டிக்காட்டினார்.

அந்தவகையில் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் சூத்திரதாரிகள் தொடர்பான தகவல்கள் ஏப்பிரல் 21 ஈஸ்டருக்கு முதல் வெளியாகும் என ஜனாதிபதி அநுர சமீபத்தில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இதன்பின்னணியில் கோத்தபாய மற்றும் ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் துணை இராணுவக் குழுவாக செயற்பட்ட பிள்ளையானின் கைது இடம்பெற்றிருக்கலாம் என கருதப்படுகிறது. அநுர தலைமையிலான என்பிபி அரசாங்கம் பதவியேற்றதிலிருந்து ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பாக பிள்ளையான் இரண்டு தடவை கொழும்பு குற்றப் புலனாய்வுத் துறைக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

 

அதேநேரம் பிள்ளையான் போன்று விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறி துணை இராணுவக் குழுவாக செயற்பட்ட கருணா அம்மானும் முன்னாள் எம்பி சதாசிவம் வியாழேந்திரனும் பிள்ளையானுடன் இணைந்து ‘ கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ என்றவொரு தேர்தல் கூட்டை உருவாக்கியிருந்தனர். இந்த அமைப்பு உள்ளூராட்சித் தேர்தல்களில் போட்டியிட வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளது. இரு வாரங்களுக்கு முன்னர் ச. வியாழேந்திரன் கைதானார். இப்போது பிள்ளையான் கைதாகியுள்ளார். என்பிபி அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தை தேர்தல் காரணங்களுக்காக பயன்படுத்துகிறது என பிள்ளையான் ஆதரவாளர்கள் விமர்சிக்கின்றனர். இன்னொரு பக்கம் ராஜபக்ச குடும்பத்தை காப்பாற்ற பிள்ளையான் பலி ஆடாக்கப்படுகிறார் எனவும் கூறப்படுகிறது.

 

ஜனாதிபதியும் சி.ஐ.டியினரும் முட்டாள்கள், முடிந்தால் மௌளானாவை முதலில் விசாரியுங்கள் – பிள்ளையான்

ஜனாதிபதியும் சி.ஐ.டியினரும் முட்டாள்கள், முடிந்தால் மௌளானாவை முதலில் விசாரியுங்கள் – பிள்ளையான்

 

உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி வெளிநாட்டில் நிரந்தர வதிவிட உரிமை கோரும் மௌலானாஇ ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். அரசாங்கம் முடிந்தால் மௌளானாவை நாடுகடுத்தி இலங்கைக்கு கொண்டு வந்து விசாரிக்க வேண்டும். இல்லையேல் சுவிஸ்க்குச் சென்று விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் தேசம்நெற்க்கு வழங்கிய செய்தியில் தெரிவித்து இருந்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆறு வருடங்களிற்கு முன்னர் இடம்பெற்றது. ஏன் அவர் அந்தவேளை அது குறித்த விபரங்களை அம்பலப்படுத்தாமல் நான்கு வருடங்கள் காத்திருந்த பின்னர் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவைக்கும் சனல் 4ற்க்கும் சென்றார்? என கேள்வியெழுப்பிய பிள்ளையான், தற்போதைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனிவிரட்ண உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றவேளை சி.ஐ.டியின் தலைவராக பணியாற்றினார். ஜனாதிபதியும் சி.ஐ.டியினரும் முட்டாள்கள். அவர்களுக்கு ஆயுதங்களை கைவிட்டவர்களிற்கும், ஐ.எஸ். மற்றும் முஸ்லிம் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளுக்கும் இடையிலான வித்தியாசத்தை புரிந்துகொள்ள முடியாதா? என தெரிவித்தார்.

இதேவேளை ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தன்மீதான குற்றச்சாட்டு பற்றி மௌனம் களைத்துள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ‘ ஈஸ்டர் தாக்குதல் பற்றிய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை தயவு செய்து படிக்குமாறும், சிஐடி அதிகாரிகள் அளித்த சாட்சியங்கள் உட்பட ‘அந்த அறிக்கையில் உள்ளதைத் தவிர வேறு தனக்குத் தெரியாது எனவும் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் படுகொலையின் பின் நின்றவர்களை அனுர அரசு கண்டுபிடித்து தூக்கிலேற்ற வேண்டும் – பிள்ளையான்

நான் எந்த நாட்டுக்கும் தப்பித்துப் போகப் போவதில்லை! ஈஸ்டர் குண்டுதாரிகளை கண்டுபிடித்து தூக்கிலிடுங்கள்!” – பிள்ளையான்: “அசாத் மௌலான தனக்கும் குடும்பத்துக்கும் விஸா எடுப்பதற்கு விட்ட ரீல்களை வைத்துக் கொண்டு படங்காட்ட வேண்டாம். ஈஸ்டர் குண்டுதாரிகளைக் கண்டுபிடித்து தூக்கிலிடுங்கள்” என்று தேசம்நெற்க்கு நேற்று வழங்கிய நேர்காணலில் பிள்ளையான் என அறியப்பட்ட சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். இன்று தேசம் ரியூப்பில் வெளியாகியுள்ள இக்காணொலியில், “இந்த ஊடகங்கள் குற்றம்சாட்டுகின்ற மௌலவியை சிறையிலிருந்த 500 வரையானவர்களில் ஒருவராக கண்டிருக்கிறேன். பேசியிருக்கிறேன். அவர்களுடைய அதிதீவிரவாதத்தை அவர்களிடமே கண்டித்து இருக்கிறேன்” என்றும் பிள்ளையான் தெரிவித்தார்.

 

“அசாத் மௌலானா விசா எடுப்பதற்காகவும் பணத்திற்காகவும் சுவிஸில் உள்ள யாழ்ப்பாணத்துப் புலிகளுக்காகப் புனைந்த கதை தான் அது. ரிஎம்விபியினது அரசியல் வளர்ச்சியை பொறுக்க முடியாத சுவிஸில் உள்ள யாழ்பாணத்து புலிகள் தமிழ் தேசியம் தமிழரசுக் கட்சி செய்த சதி தான் இது” எனவும் பிள்ளையான் குற்றம்சாட்டினார். “யாழ்ப்பாணத்தில் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றவர்களுக்கு ஒப்பாக நான் முப்பதினாயிரம் வரை வாக்குகளைப் பெற்றவன். என்னிலும் பார்க்க பொன்னம்பலம் கஜேந்திரகுமாருக்கு, செல்வம் அடைக்கலநாதனுக்கு எல்லாம் குறைந்த வாக்குகளே கிடைத்தது. இந்த நெருக்கடியிலும் மட்டக்களப்பு மக்கள் எனக்கு வாக்களித்துள்ளார்கள்” என்றும் பிள்ளையான் குறிப்பிட்டார்.

 

“ரிஎம்விபி யும் பிள்ளையானும் இந்த வீழ்ச்சியில் இருந்து நிச்சயம் மீள எழுவோம் எனத் தெரிவித்த பிள்ளையான் 16 வயதிலேயே போராடப் போய் எத்தனையோ அனுபவித்துவிட்டோம் இதையெல்லாம் பார்த்து மிரண்டுவிடமாட்டோம். ஜனாதிபதி அனுரா தேர்தலில் என்னைத் தோற்கடிக்க என்னை விசாரணைக்கு அழைத்தார்;. அவர் உண்மையான சூத்திரதாரிகளைக் கண்டுபிடித்து தூக்கிலிட வேண்டும்” என்றும் அந்த நீண்ட நேர்காணலில் பிள்ளையான் தெரிவித்தார்.

 

எங்களுக்கு துப்பாக்கி தந்தவர் யார் என்பதை மறந்துவிட்டு தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன் எல்லாம் தமிழ்தேசியம் பேசுகின்றனர் – பிள்ளையான்

நான் ஒரு முன்னாள் போராளி. விடுதலைப் புலிகள் அமைப்பில் துப்பாக்கி தூக்கிய ஒரு நபர் என்று எல்லோருக்கும் தெரியும். துப்பாக்கி தூக்குவது என்பது ஒயில் போட்டுவிட்டு துப்பாக்கி சாத்தி வைப்பது அல்ல. துப்பாக்கி என்றால் சுடும். எவரை சுடுவது என்பது ஒரு தர்மம். இவ்வாறான துப்பாக்கிகளை எமக்கு யார் கொடுத்தார்கள் என்பது இவ்விடத்தில் முக்கியம். யார் இவ்வாறான துப்பாக்கிகளை தூக்குவதற்கு எமக்கு சந்தர்ப்பத்தை உருவாக்கியவர்கள். இவ்வாறான விடயங்கள் எல்லாம் மறந்து போய் தமிழ் தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன் எல்லாம் வந்து எமது மக்களுக்கு தேசியத்தை கற்பிக்கின்ற சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து நாங்கள் வெட்கப் படுகின்றோம்” என தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்தார்.

 

அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி வேப்பையடி 15 ஆம் கிராமம் பகுதியில் விக்னேஸ்வரன் ஆதரவணி தலைமையில் நாவிதன்வெளி கிராம பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் ஆதரவாளர்களுடனான சந்திப்பு நாவிதன்வெளி பிரதேச ஆலயங்களின் நிர்வாகிகள் விளையாட்டு கழகங்கள் கட்சியின் பிரதேச மற்றும் கிராமிய குழுக்களின் ஒருமித்த ஒழுங்குபடுத்தலில் ஆசிரியர் மு.விக்னேஸ்வரனை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

மேலும் தனது உரையில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

 

”ஜேவிபி அரசுடன் இணைந்து அமைச்சரவையில் அங்கம் வைப்பது பற்றி சுமந்திரன் சாணக்கியனும் இன்று சொல்கிறார்கள். இவ்வாறான தடம் புரள்வு இவர்களுக்கு எவ்வாறு வந்தது. இந்த மக்களை அழித்த ஒரு கட்சி அது. இவ்வாறு இருந்த அக்கட்சி எம்மைப் பார்த்து முன்னாள் ஆயுதக் குழுக்கள் என அவர்கள் கூறுகின்றார்கள். அமைச்சரவையில் ஆயுதக் குழுவை சேர்க்க மாட்டார்களாம் சேர்க்கவும் விடமாட்டார்களாம். நான் முன்பே கூறியிருக்கின்றேன் அரசியலில் நிரந்தரம் ஒன்றுமில்லை அதாவது நண்பனும் இல்லை எதிரியும் இல்லை. அதே போன்று இவர்களுக்கு சொல்ல வேண்டிய விடயம் ஒன்று இருக்கிறது.

 

நான் ஒரு முன்னாள் போராளி . விடுதலைப்புலிகள் அமைப்பில் துப்பாக்கி தூக்கிய ஒரு நபர் என்று எல்லோருக்கும் தெரியும். துப்பாக்கி தூக்குவது என்பது ஒயில் போட்டுவிட்டு துப்பாக்கி சாத்தி வைப்பது அல்ல. துப்பாக்கி என்றால் சுடும். எவரை சுடுவது என்பது ஒரு தர்மம். இவ்வாறான துப்பாக்கிகளை எமக்கு யார் கொடுத்தார்கள் என்பது இவ்விடத்தில் முக்கியம். யார் இவ்வாறான துப்பாக்கிகளை தூக்குவதற்கு எமக்கு சந்தர்ப்பத்தை உருவாக்கியவர்கள்.

 

இவ்வாறான விடயங்கள் எல்லாம் மறந்து போய் தமிழ் தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன் எல்லாம் வந்து எமது மக்களுக்கு தேசியத்தை கற்பிக்கின்ற சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து நாங்கள் வெட்கப் படுகின்றோம்.

 

ஆகவே, எமது அன்பு மக்களே இவர்கள் காலத்துக்கு காலம் தேவைக் கேற்றால் போல் பல்வேறு புரளிகளை எழுப்புவார்கள். இது தவிர பிள்ளையானுக்கும் ஈஸ்டர் குண்டு தாக்குதலுக்கும் சம்பந்தமாம். சாணக்கியன் சொல்கின்றார். ஒரு இஸ்லாமிய மகன் சொல்லியிருந்தால் பரவாயில்லை. உங்களுக்கு தெரியும். தெமட்டகொட என்ற இடத்தில் உள்ள ஒரு தொழிலதிபர் ஒருவர் ஒரு ஹோட்டலில் இறந்த இடம்பெற்ற குண்டு தாக்குதலில் சம்பந்தப்பட்டிருக்கின்றார். அவர் கடந்த கால பாராளுமன்ற தேர்தலில் ஜேவிபி கட்சி சார்பாக தேசிய பட்டியலில் இருந்திருக்கின்றார். பெயரை மறந்துவிட்டேன். அவர் ஒரு பெரிய வியாபாரி. அவரது இரு மகன்களும் அச்சம்பவத்தில் இறந்து விடுகின்றார்கள். இவ்வாறு இறந்தவர்களில் ஒருவரான இன்ஷாப் என்பவரின் தெமடகொட வீட்டுக்கு காவல் அதிகாரிகள் வருகின்ற போது அந்த வீட்டில் இருந்த பெண்மணி இரண்டு குழந்தைகளோடு தனது வயிற்றில் உள்ள மற்றுமொரு குழந்தையுடன் வெடித்து சிதறுகிறார். எவ்வாறு இந்த சம்பவம் நடக்கின்றது. நன்றாக படித்த ஒரு பொறியியலாளரின் மனைவி. பணத்தில் உயர்வான குடும்பம். இவ்வாறு இறந்த போகின்றது என்றால் இந்த குடும்பத்தினரை பிள்ளையான் மூளைச்சலவை செய்வாரா. விடுதலைப் புலிகளுக்கு கரும்புலியாகி வெடிப்பதற்கு 30 ஆண்டுகள் சென்றிருக்கின்றது. இந்த முப்பது ஆண்டுகளுக்கு பின்னர் போர்க் என்பவர் மாங்குளத்தில் முதலாவது கரும்புலி தாக்குதல் மேற்கொண்டார்கள். இவ்விடத்தில் இந்த விடயத்தை ஏன் சொல்கின்றேன். இவ்வாறான வரலாறுகள் தெரியாத சாணக்கியன் போன்றவர்கள் பசப்பு வார்த்தைகளை தொடர்ச்சியாக கூறி வருகிறார்கள். அதற்கு ஊதுகுழலாக எம்மோடு இருந்த நாங்கள் நம்பி இருந்த மருதமுனை பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஒரு அமைப்பின் தலைவர் பத்மநாபாவுடன் இந்தியாவில் மரணித்த ஒருவரின் மகன் ஆசாத் மௌலானா இருந்தார். அவரை நம்பிக்கையானவர் என்று நான் நன்றாக பார்த்தேன். இந்த உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலின் பின்னர் அவர் உயிர் வாழ்வதற்காக இலங்கையில் சில பெண்களோடு பிரச்சினை என்று வெளிநாட்டிற்கு சென்றார்.

 

அவர் அங்கு சென்று அரசியல் தஞ்சம் பெறுவதற்கு எடுத்த ஆயுதம் ஈஸ்டர் குண்டு தாக்குதலில் பிள்ளையானுக்கு தொடர்பு உள்ளது என ஒரு பொய்யை உருவாக்கினார். அதனை சர்வதேச ரீதியாக இயங்கும் சனல் 4 என்ற ஒரு ஊடகமும் என்னை அரசியல் ரீதியாக அழிக்க துடிக்கின்ற சில சக்திகளும் விடயத்தை தூக்கிப் பிடித்தார்கள். இதனால் சனல் 4 என்ற ஊடகம் இதனால் பிரபல்யம் அடைந்தது. மிக அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பில் உதய கன்வன்வில என்பவர் சொல்லியிருக்கின்றார். ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை சொல்லி இருக்கின்றது. எல்லாம் பச்சப்பொய். இதனை விசாரிக்க முடியாது.

 

அதே போன்று குறித்து சம்பவத்தை வெளியிட்ட சனல் 4 என்ற ஊடகம் அந்த செய்தியினை முற்றாக நீக்கி இருக்கின்றது. இவ்வாறான விடயத்தை யாருமே வெளியில் சொல்வது கிடையாது. ஏனென்றால் அரசியலுக்காக சகல பிரச்சினைகளை எல்லாம் இழுத்து வடுவார்கள். கோடீஸ்வரன் என்பார்கள் துவக்கு வைத்திருந்தவர் என்பார்கள். பிள்ளையானை சிறைச்சாலையில் அடைக்கப்படுவார் என்பார்கள். மட்டக்களப்பில் சில அம்மாமார் கூறியிருக்கிறார்கள். பிள்ளையான் உங்களை சிறையில் அடைத்திருக்கின்ற போது தான் வாக்குகள் நாங்கள் இட்டு வெளியே எடுத்து இருக்கின்றோம். இனியாவது அடைக்கப் போகிறார்கள்? ஏனெனில் உளவியல் ரீதியாக எம்மை யாழ்ப்பாண சக்திகளும் சவால் விடுகின்றோம் என்பதற்காக கிழக்கு மாகாணத்தில் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காத சில அரசியல்வாதிகளும் எம்மை அழிக்க நினைக்கின்றார்கள்.

 

அந்த சக்திகள் எல்லாம் எமது மக்களுக்கு எதிரானவர்கள். நாம் இந்த மக்களுக்கு உண்மையாக நேர்மையாக 16 வயதில் இருந்து இன்று 50 வயது வரைக்கும் எமது பணிகளை சிறப்பாக செய்து வந்திருக்கின்றோம் அதில் நாங்கள் எங்கும் பிழை விட்டது கிடையாது. யாருக்கும் அநியாயம் செய்தது கிடையாது எவரையும் ஏமாற்றியது கிடையாது. ஆனாலும் இந்த அரசியல் சூழலில் எதிர்பார்ப்புடன் இருக்கின்ற மக்களுக்கு ஆங்காங்கே இருக்கின்ற சிறு சிறு பிழைகளை வைத்துக்கொண்டு பெரிதாக உருவாக்குகின்றார்கள். ஆனால் இக்காலத்தில் பொறுப்பு மிக்க அரசியல் கட்சி ஒன்றை தலைவராக எமது பணி கிழக்கு மாகாணம் பூராகவும் விஸ்தரிக்கப்படும்.

 

அதில் ஒரு அங்கமாக இந்த தேர்தலை நான் பார்க்கின்றேன். இந்த தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வெற்றி என்பது கிழக்கு தமிழர்களின் வெற்றியாகும். ஆதித் தமிழன் உறுதியாக வாழ வேண்டும் என்றால் நாங்கள் எல்லோரும் ஒன்று பட்டு கிழக்கு மாகாணத்திற்கான தனித்துவமான அரசியலை முன்னெடுக்கின்ற தமிழ் மக்கள் விடுதலை புலிக் கட்சியை பாதுகாத்து தூக்கிப் பிடித்து அதனை வெற்றி பெறச் செய்ய வேண்டும் அந்த ஆணையிலிருந்து அதிகாரத்துடன் நாங்கள் பேரம் பேச வேண்டும். அதற்கான ஒரு சந்தர்ப்பத்தை அம்பாறை வாழ் மக்கள் எமக்கு அழியுங்கள் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

“சந்திரகாந்தனின் ஈஸ்டர் படுகொலையும் மரத்தில் மாடு கட்டுதலும்” – அத்தாஸ் – அக்கரைப்பற்று

சர்வதேச ரீதியாக அதிர்வலையை ஏற்படுத்திய ஈஸ்டர் தீவிரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சிவ . சந்திரகாந்தன் நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார் . அந்த நூலின் பெயர் ‘ ஈஸ்டர் படுகொலை இன , மத நல்லிணக்கம் – அறிதலும் புரிதலும் ‘ ஆகும் . இந்த நூல் 23.03.2024 ஆம் திகதி மட்டக்களப்பில் வெளியீட்டு வைக்கப்பட்டது . இவரது இந்த முயற்சி பாராட்டுதலுக்குரியதாகும் .

இவருக்குப் பாராட்டுத் தெரிவித்துவிட்டு பின்னர் ஏன் ‘ சந்திரகாந்தனின் ஈஸ்டர் படுகொலையும் மரத்தில் மாடு கட்டுதலும் ‘ என்று தலைப்பிடப்பட்டுள்ளது என்ற கேள்வி வாசகர்களுக்கு எழக்கூடும் . இவரது நூலும் அந்த மாதிரித்தான் உள்ளது . ஈஸ்டர் படுகொலை தொடர்பில் தலைப்பிட்டுவிட்டு இணையத்தள செய்திகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளார் . இந்த நூலைப் பொறுத்தவரை தகவல் மூலமற்ற செய்திகளும் பல குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன . குறிப்பாக இந்த நூலின் பின்னால் அதிகார சக்திகளின் மறைகரங்கள் உள்ளதா என்ற கேள்வி எழுகின்றது . ஏனெனில் , ஈஸ்டர் தீவிரவாதத் தாக்குதல் இடம்பெற்ற போது சஹ்ரானின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைத் தொலைபேசியில் வைத்திருந்தமைக்காக பல நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கைது  செய்யப்பட்டு பல மாதங்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர் . ஆனால் அவ்வாறான எதுவித கெடுபிடிகளும் இல்லாமல் சர்வதேச ரீதியாகப் பிரகடனப்படுத்தப்பட்ட சஹ்ரான் எனும் தீவிரவாதியின் புகைப்படத்தை முன் அட்டையில் இட்டு இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.  இங்குள்ள கேள்வி என்னவெனில் , பாதுகாப்புத் தரப்பினர் முஸ்லிம்களைக் கைது செய்தமை போன்று ஏன் பிள்ளையானைக் கைது செய்யவில்லை என்பதுடன் அவருக்கு எதிராக ஏன் எதுவித சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதாகும் . மேலும் சஹ்ரானின் இப் புகைப்படத்தை இவர் இஸ்லாமிய மதத்திற்கும் அதனைப் பின்பற்றும் முஸ்லிம்களுக்கும் எதிரான குறியீடாகப் பயன்படுத்தியுள்ளார் . ஈஸ்டர் தாக்குதல் இஸ்லாத்திற்காகப் புரியப்பட்ட ஒன்று என்பதுடன் அவ்வாறான தாக்குதல்கள் இஸ்லாத்தைப் பின்பற்றும் முஸ்லிம்களால் மேலும் செய்யப்பட முடியும் என்ற வக்கிரப் போக்கு இந்த நூலின் முன் அட்டை சஹ்ரானின் புகைப்படத்தின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது . மேலும் முக்கியமாக நூல் விபரக் குறிப்பில் நூல் அச்சிடப்பட்ட அச்சகத்தின் விரபங்கள் எதுவும் குறிப்பிடப் பட்டிருக்கவில்லை . அவை மறைக்கப்பட்டுள்ளன . குறிப்பாக அச்சு மற்றும் வெளியீட்டுக் கட்டளைச் சட்டம் பிரிவு 02 இன் படி இது குற்றச் செயல் என்பதுடன் பிரிவு 03. இக் குற்றத்திற்கான தண்டனையும் குறிப்பிடுகின்றது .

இந்நூலானது குறித்த சட்டத்தை மீறி வெளியிடப்பட்டுள்ளது . குறிப்பாக இந்நூலானது மிகப்பெரிய பொய்யொன்றைப் பதிவு செய்துள்ளது . பக்கம் 30 இல் ” இரண்டாம் தடவை மேற்கொள்ளப்பட்ட உடற் கூற்றியல் மரபணுப் பரிசோதனையில் ( DNA ) புலஸ்தினியின் மரணம் உறுதி செய்யப்பட்டது ” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது . இது திட்டமிட்ட பொய்ப் பிரச்சாரமாகவே அமைகின்றது . ஏனெனில் , புலஸ்தினி மகேந்திரன் ( சாரா ஜாஸ்மின் ) எனும் பெண் 26.04.2019 ஆம் திகதி சாய்ந்தமருது பாதுகாப்பு வீட்டில் உயிரிழந்தாரா என்பது தொடர்பில் இலங்கை அரசாங்கத்தினால் 03 பரிசோதனைகள் நடத்தப்பட்டன . இதில் முதல் பரிசோதனையில் இவரது மரணம் உறுதிப்படுத்தப்படவில்லை . இரண்டாவது பரிசோதனையிலும் இவரது மரணம் உறுதிப்படுத்தப்படவில்லை . சுமார் 04 வருடங்களின் பின் 06.04.2023 ஆம் திகதி வெளியிடப்பட்ட மூன்றாவது பரிசோதனை அறிக்கையிலேயே குறித்த பெண் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது . உண்மை இவ்வாறு இருக்க இவர் , இரண்டாவது பரிசோதனையில் புலஸ்தினி மகேந்திரனின் மரணம் உறுதிப்படுத்தப்பட்டது என்று எழுதியுள்ளமை ஏன் ? மேலும் பக்கம் 32 இல் ” நேரடியாக எதிர்வினையை சிங்கள பௌத்த மக்கள் மீது தொடுத்தால் அதனால் ஏற்படும் விளைவுகள் சிறுபான்மை முஸ்லிம்களைப் பொறுத்தவரை பாரதூரமாக இருக்கும் . அதனால் எதிர்கொள்ளும் கட்டமைப்பு ஐ.எஸ் குழுவினரிடம் இல்லை . இதனால் பௌத்த விகாரைகள் தடுக்கப்பட்டு சிங்கள மக்கள் ஒன்று கூடும் தேவாலயங்கள் குறிவைக்கப்பட்டன ” என்ற கருத்தைப் பதிவு செய்துள்ளார். இத்தகவல் இருட்டடிப்புச் செய்யப்பட்ட பொய்யாகும் . ஏனெனில் , கொச்சிக்கடை அந்தோனியர் தேவாலயத்தில் இறந்தவர்களில் கணிசமானவர்கள் தமிழ் பேசும் கிறிஸ்தவர்கள். மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இறந்தவர்கள் அனைவரும் தமிழ் கிறிஸ்தவர்கள் . அதேபோன்றுதான் நீர்கொழும்பு கட்டுவாப்பீட்டி தேவாலயமுமாகும் . இம் மூன்று தேவாலயங்களில் இறந்தவர்களில் கணிசமானவர்கள் தமிழ் பேசும் மக்களாக உள்ளமையை மறைத்து சிங்கள் மக்கள் ஒன்று கூடும் தேவாலயங்கள் குறிவைக்கப்பட்டன என்ற கருத்தைக் குறிப்பிடுகின்றார் . ஆனால் தொலைக்காட்சிகளில் பேசும் பேசும் போது இஸ்லாமியத் தீவிரவாதிகள் திட்டமிட்டு தமிழ் மக்களை அல்லது கிறிஸ்தவர்களைப் படுகொலை செய்துள்ளார்கள் என்று பேசி வருகின்றார். ஆக இவரின் இரண்டு கருத்துக்களும் ஒன்றுக்கொன்று முரண்பாடுடையதாக உள்ளது . இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயம் என்னவெனில் , ஈஸ்டர் தாக்குதலைத் தொடர்ந்து முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வியாபார நிலையங்கள் மீதான எரிப்புக்களையும் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களையும் உயிரழிப்புக்களையும் செய்தவர்கள் யார் ? அவர்கள் அத்தனை பேரும் கிறிஸ்தவர்களா ? மேலும் சீயோன் தேவாலய சபையின் பிரதம ஊழியரான றொசான் மகேசன் என்பரின் நேர்காணல் ஒன்று இந்த நூலில் பிரசுரிக்கப்பட்டுள்ளது . பக்கம் 48 இல் அவர் இவ்வாறு குறிப்பிடுகின்றார் . சீயோன் தேவாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலினால் ஏற்பட்ட தீயை அணைக்க தீ அணைப்புப் படையினர் அழைக்கப்பட்டனர்.

* 45 நிமிசம் நெருப்பு பத்திக் கொண்டே இருந்துச்சு . தீயணைப்புப் படை வாரதுக்கு எப்படியும் 15 – 17 நிமிசம் போயிருச்சு . நான் அந்த சி.சி.டியில் கவனிச்சனான் . 17 நிமிசத்துக்குப் பிறகு தான் அவங்க வந்ததும் அவர்களுக்குத் தண்ணீரக் குழாய்களைப் பூட்டத் தெரியவில்லை. இதெல்லாம் இழுத்திட்டு போற நேரம் ஒரு 35 நிமிசம் ஆச்சுது . அப்ப எங்கட பிள்ளைகள் தான் அந்தக் குழாய்களையும் பூட்டிக் குடுக்கக்கூட உதவியிருக்காங்க ” எனக் குறிப்பிடுகின்றார் . இவரின் நேர்காணலில் இருந்து எழும் கேள்வி என்னவெனில் , சியோன் தேவாலயத்திற்குத் தீயணைக்க வந்தவர்களுக்கு தண்ணீரக் குழாய்களைப் பூட்டத் தெரியாமல் போனமை ஏன் என்பதாகும் . இவர்கள் உண்மையில் தீயணைப்புப் படையினரா அல்லது வேற்று நபர்களா ? மேலும் இவர் குறித்த நேர்காணலின் இறுதியில் பக்கம் 49 இல் ” முஸ்லிம்களுக்குத் தெரியும் , அவர்களுக்குத் தெரியாம இது நடக்கல்ல ” என்பதைத் தொடர்ந்து மூன்று தடவைகள் சொன்னதாகத் தொடர்ந்து மூன்று தடவைகள் இந்நூலில் பதியப்பட்டுள்ளன . இங்குள்ள கேள்வி என்னவெனில் , சீயோன் தேவாலய சபையின் பிரதம ஊழியரான றொசான் மகேசன் குறிப்பிடும் முஸ்லிம்கள் யார் ? எல்லா முஸ்லிம்களும் ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதலை அறிந்திருந்தார்களா அல்லது குறித்த முஸ்லிம் நபர்கள் மாத்திரம் ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதலை முன்கூட்டியே அறிந்திருந்தார்களா ? அவர் உறுதியாகக் குறிப்பிடும் அந்த முஸ்லிம் நபர்கள் யார் ? ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முன்கூட்டியே அறிந்து அதனை மறைத்த குற்றத்தைப் புரிந்த முஸ்லிம் நபர்களுக்கு எதிராக ஏன் இவர் இதுவரை சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை அத்துடன் அல்லது கோரவில்லை ? மேலும் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முன்கூட்டியே அறிந்த முஸ்லிம் நபர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்காமல் மறைத்த குற்றத்திற்கு பிரதம ஊழியரான றொசான் மகேசனும் உள்ளாக்கப்படுவாரா ? றொசான் மகேசனின் கருத்தானது மிகவும் பாராதூரமான குற்றச்சாட்டாக உள்ளது . முஸ்லிம்கள் முன்கூட்டியே அறிந்திருந்தார்கள் என்று குறிப்பிடுவதானது கிறிஸ்தவர்கள் கொல்லப்படுவதை முஸ்லிம்கள் விரும்பியிருந்தார்கள் என்பதாக அரத்தம் கொள்ளப்படுவதுடன் முஸ்லிம்கள் ஈஸ்டர் படுகொலையைத் தடுக்க விரும்பவில்லை என்பதாக அமைகின்றது . இதன் மறுதலை முஸ்லிம்கள் . மாற்று மதத்தினர் கொல்லப்படுவதை ஆதரிக்கின்றவர்களாக உள்ளனர் . உண்மையில் மதிப்புக்குரிய றொசான் மகேசன் இக்கருத்தைக் கூறினாரா அல்லது இந்நூலின் ஆசிரியர் சந்திரகாந்தன்இக்கருத்தைப் பதிவு செய்துள்ளாரா ? நிச்சயமாக இக்கருத்தானது கத்தோலிக்க கிறிஸ்தவ முஸ்லிம்களுக்கு இடையிலான நல்லுறவினைச் சிதைக்கும் ஆபத்தைக் கொண்டுள்ளது . இவ்வாறான ஒரு நிலையை உருவாக்குவதற்காக இக்கருத்து திட்டமிட்டுப் பதியப்பட்டுள்ளதா என்ற பல கேள்விகள் உள்ளன .

மேலும் இந்நூலின் 121 ஆம் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது ” இந்தியாவில் உள்ள ஹெச்.ஜி. ரசூல் என்ற எழுத்தாளர் பின்வருமாறு கூறுகின்றார் . இந்த வஹாபி குழுவினர் உயர்ந்தது எது ? புத்த சாசனமா ? அல்லது குரானா ? என இலங்கையில் பிரச்சாரம் செய்து புத்த பிக்குகளிடமும் பொதுபலசேனாவிடமும் சமய வெறியை ஊட்டுவதற்குக் காரணமாக அமைந்த அண்மைக்கால வரலாறு நாம் அறிந்ததே ” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது . இதில் ஒரு சில உண்மைகள் இருந்தாலும் நூறு வீத உண்மையாகக் கொள்ள முடியாது . இங்கு பாரிய இருட்டடிப்பொன்று செய்யப்பட்டுள்ளது . பௌத்த பிக்குகளுக்கும் பொதுபலசேனா அமைப்பிற்கும் மத வெறி ஏற்படக் காரணம் வஹாபிசக் குழுவினர் என்ற கருத்தானது பொதுபலசேனா இயக்கம் இயல்பிலேயே சாந்தமான அமைதி போதிக்கும் அமைப்பு என்பதும் அதற்கு மதவெறி வருவதற்குக் காரணம் வஹாபிசக் குழுவினர் தான் என்பதாகவும் உள்ளது . எனினும் வரலாற்றை எடுத்து நோக்கினால் , 30 வருட யுத்த காலத்தில் பொதுபலசேனாவைப் போன்று பல பௌத்த அமைப்புக்கள் உருவாகியிருந்தன . அவை தமிழர் தொடர்பில் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை என்ற நிலைப்பாடு தமிழர்களிடம் உண்டு . குறிப்பாக தனிச் சிங்கள் மொழிச் சட்டம் போன்ற மொழி வெறி பிடித்தமைக்கும் கிறிஸ்தவ மிசனறிகளுக்கு எதிரான தாக்குதல்களின் போது மதவெறி பிடித்தமைக்கும் காரணம் இந்த வஹாபிச குழுவினர் அல்ல . 1900 ஆண்டளவில் கிறிஸ்தவ மிசனறிகளுக்கு எதிராகவும் கிறிஸ்தவர்களுக்கும் எதிராகவும் பௌத்த தேசிவாத அமைப்புக்கள் தாக்குதல்களை நடத்தியுள்ளன . அவ்வாறான தாக்குதல்களுக்கு கிறிஸ்தவ மிசநெறிகளின் அடிப்படைவாதமே காரணம் என்று குற்றம் சுமத்த முடியுமா ? ஒருபோதும் இல்லை . அது தவறான வாதமாகும் . – இலங்கையைப் பொறுத்தவரை சிங்கள பௌத்த தேசியவாதம் நன்கு கட்டமைக்கப்பட்ட ஒன்றாக இருந்து வருகின்றது . ஆரம்பத்தில் அதன் எதிரியாக கிறிஸ்தவர்கள் இருந்தார்கள் . 1915 சிங்கள முஸ்லிம் கலவரத்தின் போது முஸ்லிம்களின் வர்த்தகம் மறைமுகக் காரணியாக இருந்தது . பின்னர் 1956 களில் சிங்கள மொழி பௌத்த மத மறுலர்ச்சியாக மாறியது . பின்னர் 1970 களில் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தின் போது அது பௌத்த இனவாதமாக வடிவம் கொண்டது . குறிப்பாக 2009 யுத்தத்தின் பின்னர் முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்த பேரினவாதமாக அது வடிவம் கொண்டுள்ளது . பொதுபலசேனா போன்ற பௌத்த இயக்கங்களின் உருவாக்கம் அதன் ஸ்தீரம் என்பது பூகோள மற்றும் தேசிய அரசியல் சக்திகளின் மறைகரம் என சர்வதேச ரீதியாக அறியப்பட்ட கலாநிதிகள் பேராசிரியர்கள் மிகப் பெரிய ஆய்வுகளை வெளியிட்டுள்ள நிலையில் வராற்றை இருட்டடிப்புச் செய்து மொட்டைத் தலைக்கும் முழங்காலும் முடிச்சுப் போடும் இதுபோன்ற பல கதைகள் இந்நூலில் அதிகம் உள்ளன .

எனினும் இந்நூலில் பக்கம் 121 – 122 இல் மிக முக்கிய விடயம் ஒன்றைப் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர் சந்திரகாந்தன் . சிங்கள மக்களை மையப்படுத்தி ஏன் இந்த தஃவா தேவைப்பட்டது ? இந்த தஃவா அமைப்பை முன்னெடுத்தவர்கள் தமிழக தவ்ஹீத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் . தமிழ் நாட்டில் உள்ள எல்லா இந்துக்களுக்கும் இஸ்லாத்தைச் சொல்லிவிட்டு அவர்கள் இலங்கைக்கு வந்துவிட்டார்களா ? இலங்கை போன்ற பல்லின சமூகங்கள் . பல மதங்கள் உள்ள நாட்டில் இந்த அணுகுமுறை என்ன விபரீதத்தை தரப்போகின்றது என்ற விமர்சனங்களை நாம் எளிதில் புறந்தள்ளிவிட முடியாது என்கின்றார்.

 

இவ்விடயம் மிகவும் முக்கியத்துவத்துடன் முஸ்லிம்களால்  அணுகப்பட வேண்டியதாகும் . தீவிரப் போக்குள்ள தவ்ஹீத் நபர்கள் தொடர்பில் முஸ்லிம் சமுதாயம் மிகவும் அவதானமாக நடந்து கொள்ளவேண்டிய அபாயக் கட்டத்தில் உள்ளது . குறிப்பாக இலங்கையில் உள்ள ஒரு சில தவ்ஹித் அமைப்புக்களுக்கும் படையினருக்கும் இடையில் தொடர்பு இருந்ததா என்பது தொடர்பில் ஈஸ்டர் தாக்குதலை விசாரணை செய்த பாராளுமன்ற விசேட குழு பல இடங்களில் கேள்வி எழுப்பியுள்ளது .

இலங்கையில் இவ்வாறான குற்றச்சாட்டுக்கு உள்ளான தவ்ஹீத் இயக்கங்களின் மூலவேர் இந்தியா குறிப்பாக தமிழ் நாட்டில் செயற்பட்டுவரும் சில தவ்ஹீத் இயக்கங்களாகும் . இங்குள்ள முக்கிய கேள்வி என்னவெனில் , இலங்கையில் உள்ள ஒரு சில தவ்ஹீத் இயக்கங்களுக்கும் படையினருக்கும் தொடர்பிருப்பதாக எழுப்பப்பட்ட கேள்விகளும் சந்தேகங்களும் தமிழ் நாட்டுத் தவ்ஹீத் இயக்கங்கள் மீதும் எழுத்துள்ளன . மேலும் குறித்த தவ்ஹீத் இயக்கங்களால் இந்தியாவிலும் இலங்கையிலும் மத நல்லிணக்கம் உருவானதை விடவும் இனக் குரோதமும் மத முரண்பாடுகளுமே அதிகம் வளர்ந்துள்ளன . ஆக இவ் அமைப்புக்களின் செயற்பாடுகளின் பின்னணியில் ஏதாவது மறை கரங்கள் உள்ளனவா என்ற கேள்வி உள்ளதுடன் இவர்கள் மத நல்லிணக்கத்தைக் காட்டிலும் இனங்களுக்கும் மதங்களுக்குமிடையில் முரண்பாடான விடயங்களையே தூக்கிப் பிடிப்பவர்கள் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகி வருகின்றமை ஏன் ? மேலும் இந்நூலின் பக்கம் 125 இல் தப்லீக் ஜமாஅத் எனும் தலைப்பு இடப்பட்டு அது தொடர்பில் பல விடயங்கள் எழுதப்பட்டுள்ளன . பக்கம் 126 இல் குறிப்பிடப்பட்ட முக்கிய விடயங்கள் பின்வருமாறு ” சாதாரண முஸ்லிம்களை மதவாதிகளாக மாற்றுவதில் பெரும்பங்கை இவர்களே வகிக்கின்றனர் . உயிரைக் கொடுப்பவர்களுக்கு சுவர்க்கத்தில் பெரிய அந்தஸ்து உள்ளது . அப்படியாக உயிரைக் கொடுத்து ஷஹீத் ஆகும் போது நேரடியாக மரணித்தவுடன் சுவர்க்கம் கிடைக்கும் . அப்படியானவர்களுக்கு மரணத்தின் பின்னர் எவ்வித விசாரணைகளும் கிடையாது . அவர்களுக்கு சுவரக்கத்தில் வாழ்வதற்கு 72 கன்னிகள் கிடைப்பார்கள் என்பதாக கற்பிப்பதன் மூலமாக அல்லாஹ்வின் பாதையில் செல்வது என்பதன் முழு அர்த்தங்களையும் புரிந்து கொள்வர் என இந்த தப்லீக் ஜமாஅத் பிரச்சாரங்களுக்குள் உள்வாங்கப்பட்டு பக்தி மயமானவர்களாக மாறுகின்ற இளைஞர்கள் ‘ பீஸபீலில்லாஹ் ‘ என்பதன் முழு அர்த்தமான ஜிஹாத் மற்றும் ஷஹித் போன்றவற்றை நோக்கி செல்லக் கூடிய நிலமைக்கு இட்டுச் செல்லப்படுவார்கள் . இந்த தப்லீக் ஜமாஅத்தினர் ஒருபோதும் ஜிஹாத்துக்குச் செல்லுங்கள் . இஸ்லாமிய ஆட்சியை உருவாக்குங்கள் என்கின்ற வஹாபிச பிரச்சாரங்களை நேரடியாக மேற்கொள்வதில்லை . சஹ்ரானின் தந்தையார் முகம்மது ஹாசிம் , தப்லீக் பணிகளில் இணைந்து பங்காற்றியவர் என்பது கவனம் கொள்ளத்தக்கது ” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது .

பல்வேறு இஸ்லாமிய இயக்கங்கள் தொடர்பிலும் நபர்கள் தொடர்பிலும் ஈஸ்டர் தாக்குதலுக்கு ஈடான குற்றச்சாட்டுக்களை முன்வைத்த இந்த நூல் , பக்கம் 146 இல் அப்துல் ரவூப் மௌலவி என்பவர் தொடர்பில் புகழ்மாலை சூடியுள்ளது . ” அப்துர் ரவூப் மௌலவி அவர்கள் தனது வசிப்பிடமான ஐந்தாம் குறிச்சி , ஆதம்போடி ஹாஜியார் ஒழுங்கையிலிருந்து முஅத்தினார் வீதியூடாக தனது தந்தையின் பத்ரிய்யாப் பள்ளிக்குச் செல்லும் காட்சி ஒரு தனியழகாகும் . இந்திய அத்தரின் நறுமணம் மௌலவி அவர்கள் வருவதற்கு முன்பாகவே அவ்வீதிகளில் பரவத் தொடங்கிவிடும் . தென்றல் தவழ்ந்து வரும் அந்த இனிய மாலைப் பொழுதுகளில் தூரத்தே வருவோரையும் சுண்டி இழுக்கும் வாசணை அப்துல் ரவூப் மௌலவி வருகின்றார் என்ற செய்தியைச் சொல்லிவிடும் ” என்று புகழ்ந்துள்ளது . இங்கு சுட்டிக்காட்ட வேண்டிய விடயம் என்னவெனில் , சந்திரகாந்தனின் இந்த நிலைப்பாட்டையே இந்தியத் தூதரும் பொதுபலசேனாவும் கொண்டுள்ளதாக அறியப்படுகின்றது . இந்தியத் தூதர் சிறிகோபால் பாக்லே 02.10.2022 ஆம் திகதி அப்துல் ரவூப் மௌலவி குழுவினருடன் பிரத்தியேக சந்திப்பொன்றினை மேற்கொண்டிருந்தார் . இது இவரது கிழக்கு மாகாண விஜயத்தின் ஓர் அங்கமாக இருந்தது . அதேபோன்று 21.01.2022 ஆம் திகதி அப்துல் ரவூப் மௌலவி குழுவினருக்கும் கலபொட அத்த ஞானசார தேரருக்கும் இடையிலான சந்திப்பு இராஜகிரியவில் இடம்பெற்றது . கலபொட அத்த ஞானசார தேரர் ஏனைய எல்லா இஸ்லாமிய இயக்கங்களை எதிர்ப்பதுடன் சூபிக்கொள்கை ஆதரிக்கின்றார் . அதேபோன்றே சந்திரகாந்தனும் ஏனைய இஸ்லாமிய இயக்கங்கள் மீது இந்நூலில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளடன் அப்துல் ரவுப் மௌலவியை மாத்திரம் ஆதரிக்கின்றமையில் ஏதாவது திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரல் உண்டா ? மேலும் முக்கியமாக ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் இந்நூலின் ஆசிரியரான சந்திரகாந்தன் மீது அவரது பிரத்தியேகச் செயலாளராகப் பல வருடங்கள் பணிபுரிந்து வந்த ஹன்சீர் அசாத் மௌலானா என்பவர் பாரிய குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார் . இக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஆவணம் 05.09.2023 ஆம் திகதி சனல் 04 தொலைக்காட்சியினால் வெளியிடப்பட்டது . எனினும் இக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பதிலளிக்காமல் சந்திரகாந்தன் நழுவிச் சென்றுள்ளார் . ஈஸ்டர் படுகொலை தொடர்பில் 329 பக்கங்களில் நூலை எழுதிய சந்திரகாந்தன் , தன்மீதான குற்றச்சாட்டுக்களுக்கு பதில் வழங்க ஆகக் குறைந்தது ஒரு பக்கத்தைக் கூட ஒதுக்காமல் விட்டுள்ளமை மிகப் பெரிய அபத்தமாகும் . பக்கம் 324 இல் முடிவுரை எனக் குறிப்பட்டதுடன் அதில் இவ்வாறு குறிப்பிடுகின்றார் . ” குறித்த நூல் அச்சுக்குப் போகத் தயாராகிக் கொண்டிருந்த வேளையில் குறித்த ஈஸ்டர் தாக்குதல் பற்றிய புதிய புரளி கலந்த செய்தியொன்று வெளிவந்தது . அதாவது சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகிய என்னையும் குறித்த தாக்குதலுடன் தொடர்புபடுத்தி அப்புரளியானது சர்வதேச ஊடகமான லண்டனைத் தளமாகக் கொண்டிருக்கும் சனல் 04 தொலைக்காட்சியில் 05.09.2023 அன்று ஒளிபரப்பாகியுள்ளது ” என தன் மீதான குற்றச்சாட்டு தொடர்பில் வெறும் 15 வரிகளில் எழுதியுள்ளமை இந்நூலை வாங்கிய அனைவரையும் ஏமாற்றியதாகவே அமையக் கூடும் .

இந்நூலின் இறுதியாக அவர் இவ்வாறு குறிப்பிடுகின்றார் . ” இந்நூலினை ஊன்றி படிக்கின்ற போது சனல் 4 ஊடாக என்மேல் பரப்பப்பட்டுள்ள என்மீதான புரளிகள் எவ்வளவு அபத்தமானவை என்பதை வாசகர்களாகிய ஒவ்வொருவரும் நன்கே புரித்துகொள்வார்கள் என்று நம்புகின்றேன் . அதையும் தாண்டிய ஏதாவது சந்தேகங்கள் உங்கள் மனதில் இருந்தால் சஹ்ரான் தலைமையிலான ஈஸ்டர் தாக்குதல்தாரிகள் தமது தாக்குதலுக்கு தயாரான போது ஒருமித்து நின்று சத்தியப்பிரமாணம் செய்த காணொளி அதனைத் தீரத்து வைக்கும் என்று நம்புகிறேன் ” என நூலை முடித்துள்ளார் . இந்நூல் தொடர்பில் குறிப்பிட்டுச் சொன்னால் , இந்நூலின் சுமார் 200 பக்கங்களுக்கு மேல் வாசிக்க அவசியப்படவில்லை . ஏனெனில் , இணையத்தளங்களில் உள்ள இஸ்லாமியத் தீவிரவாத இயக்கங்களின் விபரம் , இஸ்லாமியத் தீவிரவாத இயக்கங்களினால் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச ரீதியான தாக்குதல்கள் எனக் குறிப்படப்படும் பல் விடயங்கள் அப்படியே பிரதியிடப்பட்டுள்ளன . அச் செய்திகள் தொடர்பில் தகவல் மூலங்களும் இடப்படவில்லை . இந்நூலை வாசிப்பதற்கு முன்பு இருந்த ஈர்ப்பும் அவதானிப்பும் வாசித்து முடித்த பின் அப்படியே இல்லாமற் போய்விட்டது . உண்மையைச் சொல்லப்போனால் இந்த நூலை வாசித்து முடித்த போது மரத்தில் மாடு கட்டிய நகைச்சுவை தான் என் ஞாபகத்திற்கு வந்தது . உங்களுக்கும் மரத்தில் மாடு கட்டிய நகைச் சுவை தெரிந்தால் சிரித்துவிட்டுச் செல்லுங்கள் . தெரியாவிட்டால் இந்த நூலை வாசித்துப் பாருங்கள் .

மக்கள் பிரச்சினைகளை கவனத்தில் கொள்ளாது மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டம் – பெண்ணின் கழுத்தை நெரித்த பொலிஸார் !

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம், மக்களையும், மக்கள் பிரதிநிதிகளையும் புறந்தள்ளி மக்களின் பிரச்சினைகளை கணக்கில் எடுக்காது நடைபெற்றமையால்,  பல சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.

இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தங்களது பிரச்சினைகளை முன்வைப்பதற்காக சென்ற பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை புறந்தள்ளி, முக்கியமாக இராஜாங்க அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்களை வெளியில் நிற்க வைத்து பிரதான கதவை பூட்டி விட்டு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரான பிள்ளையானும், மாவட்ட அரசாங்க அதிபரும் இணைந்து  அபிவிருத்தி குழு கூட்டத்தை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மயிலத்தமடு, மாதவனை பிரதேச பண்ணையாளர் பிரச்சினை, மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை ஊடாக சூரிய கலங்களை நிறுவுவதற்காக விவசாய காணிகளை கையகப்படுத்துவது சம்பந்தமான பிரச்சினை, மணல் அனுமதிப் பத்திரம் வழங்கல் தொடர்பான பிரச்சினைகள், வாகரை மீனவர்கள் பிரச்சினை, காணிகளை காப்ரேட் நிறுவனங்களுக்கு வழங்குவது தொடர்பான பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரச்சினைகள் தொடர்பாக மக்கள் முறைப்பாடு வழங்கச் சென்றுள்ளனர்.

இவ்வாறு மக்கள் பிரச்சினையை ஆராய வேண்டிய மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இவற்றை எல்லாம் கணக்கில் எடுக்காது பிரச்சினைகளை தெரிவிக்க வந்த பொதுமக்களையும், பொதுமக்களுக்காக குரல் கொடுக்க வந்த இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்,  ஊடகவியலாளர்கள் என அனைவரையும் மாவட்ட செயலகத்திற்கு வெளியே வைத்து பூட்டி விட்டு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பிள்ளையானும், மாவட்ட அரசாங்க அதிபர், அதிகாரிகளும் இணைந்து அபிவிருத்தி குழு கூட்டத்தை நடத்தியதால் மாவட்ட செயலகத்திற்கு வெளியே பெரும் அமளிதுமளி ஏற்பட்டது.

வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளினால் பெண் ஒருவரின் கழுத்தை காவல்துறையினர் நெரித்தமையால் அப்பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

மாவட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக மாவட்ட அரசியல்வாதிகளின், மாவட்ட முதலாளிகளின், கார்ப்பரேட் கொம்பனிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கும் இடமாக இது போன்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றது என்பதே உண்மை எனவும் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதன்போது ஆர்ப்பாட்டத்திற்கும் தனது ஆதரவினைத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், பொதுமக்களின் கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்படாமல், ஒரு சில அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் முன்னெடுக்கும், செயற்பாடுகள் காரணமாக மாவட்டம் பல கஸ்டங்களை எதிர்கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளதாக இதன்போது இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட நிலையில், மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்திற்கு செல்வதற்கு அனுமதியை பொலிஸாரிடம் கோரிய நிலையில், பொலிஸார் இராஜாங்க அமைச்சரையும், பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மற்றும் ஊடகவியலாளர்களையும் மாவட்டச் செயலகத்திற்குள் செல்வதற்கு அனுமதித்தனர்.

இதன்போது மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்று, மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக குழப்ப நிலையேற்பட்டது.

மக்கள் வெளியே போராடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர்களின் கோரிக்கையினை நிறைவேற்றிவிட்டு அல்லது அவர்களின் கோரிக்கை தொடர்பில் சரியான பதிலை வழங்கி விட்டு, மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தை நடத்துங்கள் என்று கோரிய நிலையில், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருக்கும் பாராளுமன்ற உறுப்பினருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து, மாவட்டச் செயலகத்தின் காணி தொடர்பில் தன்னால், தகவல் அறியும் சட்டத்தில் கோரப்பட்ட தகவல்கள்வழங்கப்படாத காரணத்தினை கோரிய நிலையில், அது தொடர்பான விளங்கங்கள் மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஆகியோரால் வழங்கப்பட்ட போதிலும்,அதனை ஏற்றுக்கொள்ளதாக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், 30 வருடமாக நிலத்தினைப் பாதுகாப்பதற்காகவே தமிழ் மக்கள் போராடிய நிலையில், இன்று அந்த நிலத்திற்குஆபத்தான நிலையேற்பட்டுள்ளதால், இங்கு அதற்கான சரியான தெளிவுபடுத்தல்கள் வழங்கப்படாத நிலையில், இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதில் பயனில்லை எனத் தெரிவத்து, இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வெளியேறிச் சென்றார்.

அதைத் தொடர்ந்து, இரா. சாணக்கியனும், சில வினாக்களை, அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எழுப்பிய நிலையில், அதற்கு உரிய பதில் கிடைக்காததையடுத்து, இரா.சாணக்கியனும் கூட்டத்தில் வெளிநடப்புச் செய்தார். இதன் பின்னர் அபிவிருத்திக் குழுக்கூட்டம் சுமூகமாக இடம்பெற்றது.

“என்னை வடக்கு தலைவர்கள் அழிக்க நினைக்கின்றார்கள்.” – சிவநேசதுரை சந்திரகாந்தன்

“இந்த மண்ணை நம்பி பணியாற்றிய என்னை வடக்கு தலைவர்கள் அழிக்க நினைக்கின்றார்கள். காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இளைஞர் யுவதிகள் அதிகூடிய வாக்கினையளித்து கௌரவத்துடன் சிறையிலிருந்து மீட்டெடுத்தனர்.” என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுங்கான்கேணி கிராமத்திற்கான பிரதான வீதியை புனரமைப்பதற்கான பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய சந்திரகாந்தன்,

வடகிழக்கில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டவர்களில் அதிகூடிய விரும்பு வாக்கு எனக்கு கிடைத்தது. அதற்கு காரணம் இந்த மண்ணை நம்பி பணியாற்றியவன், கிழக்கு மாகாணத்தின் தனித்துவம் பற்றி பேசிய வரை வடக்கு தலைவர்கள் அழிக்க நினைக்கின்றார்கள் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இளைஞர் யுவதிகள் அதிகூடிய வாக்கினையளித்து கௌரவத்துடன் சிறையிலிருந்து மீட்டெடுத்தனர்.

நான் சிறையிலிருந்து வெளிவரும் போது கொவிட் தொற்று உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுவிட்டது. நாங்கள் முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தினை விரைவாக அமுலாக்குவதில் மிகப்பெரிய சங்கடங்களும் உள்ள சூழ்நிலையில்தான் உள்ளோம்.

இருந்த போதிலும் நாங்கள் பொதுஜன பெரமுன அரசாங்கத்துடன் ஒரு இணக்கப்பாட்டு அரசியலை மேற்கொண்டு வருகின்றோம். தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஒரு தனித்துவமான கட்சி. எமது கட்சி பொதுஜன பெரமுனவுடன் கூட்டு வைத்து வைத்துள்ளது. அந்த கட்சியின் உறுப்பினர் இந்த நாட்டின் ஜனாதிபதியாகவுள்ளார். ஒரு இணக்கப்பாட்டுடன் நாங்கள் செயற்படுவதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கொவிட் தொற்றின் காரணமான கடுமையான நெருக்கடிகளுக்கும் மத்தியில் பல அபிவிருத்தி திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம், பலவற்றை செய்து வருகின்றோம்.

நான் கல் வைத்தேன் என்பதற்காக கட்டப்படாமலிருந்த பொது நூலகத்திற்கான கட்டுப்மானப்பணிக்கு நான் 200 மில்லியன் ரூபாவினை ஒதுக்கீடு செய்து பணி நடைபெற்று வருகின்றது. இந்த கொரோனா தொற்று அதிகரிக்காத நிலையிருந்தால் மே மாதம் அல்லது அதற்கு பின்னர் நூலகம் திறந்து வைக்கப்படும்.

அதேபோன்று 62 கிலோமீற்றர் பாதைகளை புனரமைப்புக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.100 கிலோ மீற்றர் முதல் கட்ட அனுமதி எனக்கு கிடைத்திருந்தது. இரு வாரத்தில் மேலும் 40 கிலாமீற்றர் வீதி வரவுள்ளது. பல அபிவிருத்தி சார்ந்த நிதிகளை நாங்கள் கொண்டு வந்திருக்கின்றோம். இந்த நன்மைகள் ஊடாக கிராமங்களில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். கல்வியும் பொருளாதாரமும் இல்லையென்றால் மிகவும் பின்தங்கிய நிலைக்கு சென்று விடும்.

அதனை கட்டியெழுப்புவதற்கான தளம் இன்னும் எங்களுக்கு போதாததாகவேயுள்ளது. நாங்கள் எமது பிரதேசத்தின் உற்பத்தி துறையினை சர்வதேசத்தின் தரத்திற்கு கொண்டு செல்வதற்கான கல்வி துறையை நாங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

அதேபோன்று தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொள்வதற்கு இளைஞர் யுவதிகளுக்கு தேவையான மொழியறிவுகளை வழங்குவதற்கு கிராம மட்ட கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். இதேநேரம், கடந்த காலத்திலிருந்த அரசியல் சாணக்கியமற்ற தமிழ் அரசியல் தலைவர்களின் வெளிப்பாடே இன்று தமிழ் மக்கள் பல்வேறு தேவைகளுடன் வாழ்வதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் இதன்போது தெரிவித்தார்.