பயங்கரவாத தடைச் சட்டம்

பயங்கரவாத தடைச் சட்டம்

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும்! புதிய சட்டம் உருவாக்கப்படும் ! – நீதி அமைச்சர்

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும்! புதிய சட்டம் உருவாக்கப்படும் ! – நீதி அமைச்சர்

 

பயங்கரவாத தடைச் சட்டம் இல்லாதொழிக்கப்பட்டு உலக பயங்கரவாதம் மற்றும் உலகளாவிய நவீன சவால்களை எதிர்கொள்ளும் வகையில், சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமை கோட்பாடுகளுக்கு அமைவாக புதிய சட்டம் உருவாக்கப்படும் எனவும் எதிர்வரும் தேர்தல் வரை அது இழுத்தடிக்கப்பட மாட்டாது என்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார சபையில் தெரிவித்தார்.

தற்போது பாதாள உலகத்தவர்களுக்கு எதிராகத் திரும்பியுள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குமாறு தமிழ் தேசியக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். அண்மையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 17 பேரில் 15 பேர் பாதாள உலகத்தோடு தொடர்பானவர்கள் இருவர் மட்டுமே தமிழர்கள்.

 

2.3: இந்நிலையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குங்கள் எங்களுடைய சகோதரங்களிடம் சொல்லி நான் உங்களுக்கு பிச்சை போடுகிறேன் எனப் பாராளுமன்றத்தில் குவினார் அர்ச்சுனா. பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்காதபடியால் வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களித்தாகத் தெரிவித்தார் பொன்னம்பலம் கஜேந்திர குமார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரனும் இக்கோரிக்கையை வைத்தார். உள்ளுராட்சி தேர்தலை மையப்படுத்தி பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முன்னுக்குத் தள்ளுகின்றனர் தமிழ் தேசியவாதிகள்.

 

2.4: இது தொடர்பில் நீதி அமைச்சர் மேலும் நாடாளுமன்றத்தில் தெரிவித்த போது, அரசாங்கமானது தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மறந்து செயற்படவில்லை. பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என அன்றும் குறிப்பிட்டோம்.இன்றும் அதனையே குறிப்பிடுகின்றோம்.

பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் ஆகியவற்றை மீளாய்வு செய்வதற்காக ஓய்வு பெற்ற நீதியரசர் ஹர்ஷ குலரத்ன தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய அது தொடர்பான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். எவ்வாறெனினும் இந்த நடவடிக்கைகள் அடுத்த தேர்தல் வரை இழுத்தடிப்புச் செய்யப்பட மாட்டாது என்றார்.

இதேவேளை நேற்றைய தினம் பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இனவாதம் அல்லது தீவிரவாதம் தலைதூக்க ஒருபோதும் இனிமேல் அனுமதிக்கப்படாது. அதேவேளை, புதிய சட்டக் கட்டமைப்பின் மூலம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ரத்து செய்ய அரசாங்கம் தயாராக இருக்கிறது. அதற்காக ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்திருந்ததும் கவனிக்கத்தக்கது.

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குங்கள் – சுமந்திரனும் வலியுறுத்தல் !

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குங்கள் – சுமந்திரனும் வலியுறுத்தல் !

பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவதாக வாக்குறுதியளித்து ஆட்சிபீடமேறிய தற்போதைய அரசாங்கம், அவ்வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வெள்ளவத்தை தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் வலியுறுத்தினார்.

தற்போதைய அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 15 பேரில் இருவர் மட்டுமே தமிழர்கள். ஆனால் தமிழ் தேசியம் பேசுபவர்கள் தமிழர்களுக்கு எதிராக மட்டும் பயங்கரவாதத் தடைச்சட்டம் மேற்கொள்ளப்படுகின்றபோது கூட் இவ்வளவு ஆக்ரோசமாக அதனை நீக்கச் சொல்லிக் கேட்கவில்லை. ஆனால் தற்போது பயங்கரவாதத் தடைச் சட்டம் பெருமளவில் பாதாள குழுக்களுக்கு எதிராகப் பாய்ந்துகொண்டிருக்கின்ற இந்நேரத்தில் தமிழ் தேசியம் பேசுபவர்கள் பெரும் கொள்கைப் பிடிப்போடு பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கக் கோருகின்றனர்.

சில தினங்களுக்கு முன் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குங்கள் எங்களுடைய சகோதரர்கள் உங்களுக்குப் பிச்சை போடுவார்கள் என்று பா உ அர்ச்சுனா முழங்கினார். பொன்னம்பலம் கஜேந்திர குமார் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கினால் வரவுசெலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருப்போம் என்று தெரிவித்திருந்தார். பாதாள குழுக்களின் மனித உரிமைகள் மீது தமிழ் தேசியத்துக்கு ரொம்பவும் கருணைதான் என்கிறார் ஆய்வாளர் வி சிவலிங்கம்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த சுமந்திரன், இச்சட்டம் நடைமுறையிலிருந்த காலப்பகுதியில் பாரதி ஊடகவியலாளராகப் பணிபுரிந்ததுடன், இச்சட்டத்தின் கீழ் நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்களை நாம் பார்த்திருக்கிறோம். தற்போதைய ஆட்சியாளர்கள் ஏற்கனவே வாக்குறுதியளித்ததைப் போல் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும்.

அதேவேளை இச்சட்டத்தைப் பிறிதொரு சட்டத்தினால் பதிலீடு செய்யாமல், முழுமையாக நீக்க வேண்டியது மிகமிக அவசியமானதாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

 

 “பொதுசன வாக்கெடுப்பின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு: பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும்” – அமைச்சர் விஜித ஹேரத் 

“பொதுசன வாக்கெடுப்பின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு: பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும்” – அமைச்சர் விஜித ஹேரத்

 

காலாவதியாகியுள்ள அரசியலமைப்பை இரத்துச் செய்து, மக்களின் விருப்பத்துடன், புதிய அரசியலமைப்பை நிச்சயம் உருவாக்குவோம். வழங்கிய வாக்குறுதிக்கு அமைய பயங்கரவாத தடைச்சட்டத்தை வெகுவிரைவில் இரத்துச் செய்வோம் என வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் அண்மையில் இது தொடர்பில் உரையாற்றியிருந்த அமைச்சர் விஜித ஹேரத், எதிர்க்கட்சிகள் கலக்கமடைந்துள்ளதை கண்டு அரசாங்கம் கலக்கமடைய போவதில்லை. மக்களுக்க வழங்கிய வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றுவோம். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களும், பெருந்தோட்ட மக்களும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியுள்ளார்கள். ஆகவே மக்களின் ஆணைக்கமைய செயற்படுவோம்.

புதிய அரசியலமைப்பு தொடர்பில் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம் காலாவாதியடைந்துள்ள இந்த அரசியலமைப்பை இரத்துச் செய்து மக்களின் விருப்பத்துடன், பொதுஜன வாக்கெடுப்புடன் புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம்.

நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கு அமைச்சரவை உப குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. குழுவின் அறிக்கைக்கு அமைய இந்தச் சட்டம் இரத்துச் செய்யப்படும். அதேபோல் நிகழ்நிலை காப்புச் சட்டத்தை திருத்தம் செய்வதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.

விடாது துரத்தும் பயங்கரவாதத் தடைச்சட்டம் – முன்னாள் போராளி !

விடாது துரத்தும் பயங்கரவாதத் தடைச்சட்டம் – முன்னாள் போராளி !

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நிறுத்தவதாகக் கோரி ஆட்சிக்கு வந்தது. ஆனால் இந்தப் பயங்கரவாத்த தடைச்சட்டம் முன்னாள் போராளிகளாகிய எங்களை விடாது துரத்துகின்றது என முன்னாள் போராளி ஒருவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் “நாங்கள் நாட்டுக்கு எதிரானவர்கள் அல்ல விசாரணைகளுக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் எங்களை திருப்பித் திருப்பி விசாரணைக்கு அழைக்கின்றார்கள். என்னை ஒன்பது தரம் அழைத்துவிட்டார்கள். விசாரணை செய்வதை எங்கள் மாவட்டத்திலேயே வைத்துச் செய்யாமல் கொழும்புக்கு அழைக்கின்றனர். நான் கொழும்புக்கு சென்று வருவது என்றால் எனக்கு தங்குமிடம் போக்குவரத்து என 25,000 ரூபாய் தேவைப்படும். எல்லா மாவட்டங்களிலும் பொலிஸ் நிலையங்கள் புலனாய்வு பிரிவுகள் உள்ளது தானே. அங்கே வைத்ததே விசாரக்க முடியும் தானே. ஏன் எங்களை கொழும்புக்கு வரச் சொல்லிக் கேட்கிறார்கள்” எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

 

@jeevan0508

♬ original sound – jeevan0508 – jeevan0508

சிவாஜிலிங்கத்துக்கு எதிரான பயங்கரவாத தடைச்சட்ட வழக்கை நிராகரித்தது கொழும்பு மேல் நீதிமன்றம் !

 

சிவாஜிலிங்கத்துக்கு எதிரான பயங்கரவாத தடைச்சட்ட வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதோடு அவ்வழக்கினை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு மன்றுக்கு நியாயாதிக்கம் கிடையாதென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

2020 வருடம் செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி இலங்கை அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் அங்கத்தவரான திலீபன் எனப்படும் ராசையா பார்த்தீபன் என்பவரின் 33ஆம் நினைவு தினத்தை நினைவுகூருமுகமாக கோண்டாவிலைச் சேர்ந்த கோகுல வீதியில் சிவாஜிலிங்கம் நினைவு தீபத்தை ஏற்றி நினைவுகூர்ந்தார்.

 

அதனூடாக அவர், இனங்களுக்கிடையே முரண்பாட்டை தோற்றுவிக்க முயற்சித்ததாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் 27ஆம் பிரிவின் கீழ் பிரகடனப்படுத்தப்பட்ட 29.08.2011ஆம் திகதி 1721/2 என்ற வர்த்தமானியின் கீழ் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகளின் 3(ஊ) பிரிவின் கீழ் குற்றம் ஒன்றை புரிந்ததன் விளைவாக, அவ்வொழுங்கு விதிகளின் நான்காம் பிரிவின் கீழ் தண்டிக்கப்படக்கூடிய குற்றமொன்றை செய்ததாக ம.க.சிவாஜிலிங்கத்தின் மீது மேல் மாகாணத்தின் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

 

கடந்த பெப்ரவரி 5ஆம் திகதி இவ்வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருக்கும் குற்றப்பத்திரிகை சட்ட விரோதமானது எனவும் இவ்வழக்கினை விசாரிப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு நியாயாதிக்கம் இல்லை எனவும் பூர்வாங்க ஆட்சேபனை குற்றம் சாட்டப்பட்டவரின் சார்பில் நீதிமன்றத்தின் முன்னிலையாகிய சட்டத்தரணிகளால் வாதம் முன்னெடுக்கப்பட்டது.

 

இலங்கை அரசியல் யாப்பின் 154 P (3) பிரிவின் பிரகாரம், குற்றங்கள் நடந்ததாக கூறப்படும் பிரதேச எல்லைக்குள் நியாயாதிக்கம் கொண்ட மாகாண நீதிமன்றம் மட்டுமே மேற்குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும் என்ற ஏற்பாடுகள் சுட்டிக்காட்டப்பட்டன.

 

எனவே, குற்றம் புரியப்பட்டதாக கூறப்படும் நியாயாதிக்க எல்லைக்குள் அமைந்திருக்காத கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இவ்வழக்கினை தாக்கல் செய்வதற்கும் விசாரணை செய்வதற்கும் சட்ட ஏற்பாடுகள் அமைவாக இல்லை என்றும் சட்டத்தரணியினால் சமர்ப்பணம் மேற்கொள்ளப்பட்டது.

 

அத்துடன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான வழக்குகள் நியாயாதிக்கம் எவ்வாறு இருப்பினும் மேல் மாகாண மேல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல் செய்யமுடியும் என்ற வகையில் அமைந்துள்ள 27ஆம் பிரிவின் கீழ் பாதுகாப்பு அமைச்சரினால் பிரகடனப்படுத்தப்பட்ட ஒழுங்குவிதிகள் செல்லுபடியற்றன என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது. ஏனென்றால், வியாக்கியானங்கள் சட்டத்தின் 17(1) (சி)இன் பிரகாரம், எச்சட்டத்தின் கீழும் மேற்கொள்ளப்படும் ஒழுங்குவிதிகள் மூலச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு முரண்பாடாக அமையக்கூடாது என்று விதந்துரைக்கப்பட்டிருக்கிறது.

 

எனினும், இவ்வழக்கில் குறிப்பிடப்பட்ட ஒழுங்கு விதிகள் மூலச்சட்டமான பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு முரண்பாடாக மேல் மாகாண மேல் நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்யும் அதிகாரத்தினை சட்டவிரோதமாக சட்டமா அதிபருக்கு கொடுத்திருக்கிறது.

 

எனவே குறித்த ஒழுங்குவிதிகள் சட்டவலு அற்றவை என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது.

 

அத்துடன் இவ்வுலகை நீற்றுச்சென்ற சக மனிதர்களின் அல்லது உறவினர்களின் நினைவு தினத்தை அனுஷ்டிப்பதை எந்த சட்டமும் தடைசெய்யலாகாது என்றும் இது தனிமனித சுதந்திரத்தையும் கலாசார மரபுகளையும் சமய மற்றும் பண்பாட்டு மரபுகளையும் சிதைக்கும் ஒரு செயல்.

 

மேலும் 33 வருடங்களுக்கு முன் மரணித்த அகிம்சை வழிப் போராளிகளை நினைவுகூரும் ஒரு செயல் எவ்வாறு பயங்கரவாத செயலாக அமையும்? அது எவ்வாறு இனங்களுக்கிடையே முரண்பாட்டினை தோற்றுவிக்கக்கூடும் என்கிற வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

 

இந்நிலையில் குறித்த வழக்கு நீதிமன்றத்தின் கட்டளைக்காக நேற்றைய தினம் நியமிக்கப்பட்டிருந்தது.

 

இத்தீர்ப்பின் பகுதிகளை வாசித்த மேல் நீதிமன்ற நீதிபதி இலங்கை அரசியல் யாப்பின் சட்ட ஏற்பாடுகளுக்கும் மற்றும் குற்றவியல் சட்டங்களுக்கும் அத்துடன் மாகாணங்களின் மேல் நீதிமன்ற விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் கீழும் குறித்த நியாயாதிக்கம் குற்றங்கள் இழைக்கப்பட்டதாக கூறப்படும் மாகாணத்தின் மேல் நீதிமன்றத்துக்குத்தான் நியாயாதிக்கம் உள்ளது என்று வியாக்கியானம் செய்யப்பட்டது.

 

எனவே, இவ்வழக்கினை விசாரிப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு நியாயாதிக்கம் இல்லை என்று குறிப்பிட்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி, மேற்குறித்த வழக்கினை நியாயாதிக்கம் உள்ள ஒரு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபருக்கு அறிவுறுத்தினார்.

 

அத்துடன் ம.க. சிவாஜிலிங்கத்தை வழக்கிலிருந்து முற்றாக விடுதலை செய்தார்.

 

குற்றம் சாட்டப்பட்டவரான ம.க. சிவாஜிலிங்கத்தின் சார்பாக சட்டத்தரணிகள் சுரங்க பண்டார, லக்ஷ்மன் அபேவர்தன ஆகியோருடன் சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ்.இரத்தினவேல் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் அரசாங்கம் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் -மனித உரிமைகள் கண்காணிப்பகம்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் அரசாங்கம் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

 

அத்துடன், குறித்த சட்டத்தை நீக்கும் வரையில், அதன் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என அந்த கண்காணிப்பகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

1983 முதல் 2009 ஆம் ஆண்டு வரையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரில் இறந்தவர்களை நினைவு கூர்ந்தமைக்காக 9 தமிழர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

 

சிறுபான்மை சமூக உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களை தன்னிச்சையாக தடுத்து வைத்து சித்திரவதை செய்வதற்கு நீண்டகாலமாக இந்த சட்டம் பயன்படுத்தப்பட்டு வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

 

இந்த பயங்கரவாதத் தடைச் சட்டத்தை, மாற்றியமைப்பதாக இலங்கை அரசாங்கம் சர்வதேச நட்பு நாடுகள், வர்த்தக பங்காளிகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கு பலமுறை உறுதியளித்துள்ளது.

 

எனினும் இதுவரை அது நடைமுறைக்கு வரவில்லை. ஏற்கனவே தொடர்ச்சியான அரசாங்க பாகுபாட்டை எதிர்கொள்ளும் ஒரு சமூகத்தை மேலும் இது ஓரங்கட்டுவதாக அமைந்துள்ளதென என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் துணை ஆசிய இயக்குநர் மீனாட்சி கங்குலி கூறியுள்ளார்

 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ‘நல்லிணக்கம்’ பற்றி கருத்துரைக்கின்ற போதிலும், அவரது அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இனப்பிளவுகளை ஆழப்படுத்த மட்டுமே உதவுவதாக அவர் விமர்சித்துள்ளார்.

தமிழ் மக்கள் மீது திணிக்கப்படுகின்ற பொலிஸ் பயங்கரவாதத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

திட்டமிட்டு தமிழ் மக்கள் மீது திணிக்கப்படுகின்ற பொலிஸ் பயங்கரவாதத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அமைப்பாளர் உள்ளிட்டவர்களை மட்டு சிறைச்சாலைக்கு சென்று சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தர்.

 

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்கள் மீது திணிக்கின்ற பொலிஸ் பயங்கரவாதத்திற்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கையை நாங்கள் மேற்கொள்வோம்.

 

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கடந்த 25, 27 ம் திகதி தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியைச் சேர்ந்த இருவர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இதில் அரசாங்கமே நினைவு கூறலாம் என தெரிவித்துவிட்டு வடக்கு கிழக்கிலே மூதூர் சம்பூரை தவிர தவிர அனைத்து நீதிமன்றங்களிலும் தடை உத்தரவு பெறுவதற்கு பொலிசார் முயற்சி எடுத்து போது அனைத்து நீதிமன்றங்களிலும் நினைவு கூறுவதற்கு உரிமை உண்டு என தீர்ப்பு வழங்கப்பட்டது.

 

அதேவேளை விடுதலைப்புலிகள் தடைசெய்யப்பட்ட அமைப்பு என்ற வகையில் அந்த அமைப்பின் சின்னங்கள் இல்லாமல் அந்த நினைவேந்தல் நடைபெறமுடியும் எனவும் கட்டளை வழங்கப்பட்டது.

 

இந்த நிலையில் அந்த நினைவேந்தலில் கலந்துகொண்டு அதனை ஒழுங்கு செய்த ஒரே ஒரு காரணத்திற்காக இந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

தமிழ் மக்கள் நியாயமில்லாத பயங்கரவாத தடைச் சட்டத்தை தெரிந்து அதனுள் போகாது நடந்து கொண்ட போதும் அவர்கள் மீது குறிவைக்கப்படுகின்றது.

 

இதனை தமிழத் தேசிய மக்கள் முன்னணியாக கடுமையாக எதிர்க்கின்றோம்.

 

இந்த பயங்கரவாதத்தை மக்கள் மீது திணிக்கின்ற செயற்பாடுகளுக்கு அடிபணியாது நாங்கள் இதை எதிர்நோக்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். நாங்கள் இதனை எதிர்கொள்வோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் தொடர்ந்தும் பயங்கரவாத தடைச் சட்டம் பயன்படுத்தப்படுவது கவலையளிக்கிறது – அமெரிக்கா

பயங்கரவாத தடைச் சட்டத்தை தொடர்ந்தும் பயன்படுத்தப்படுவதாக வெளியாகும் தகவல்கள் கவலையளிப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

அமைதியான வழியில் ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் கைதுசெய்யப்படுவதும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் நடத்தப்படும் விதம் குறித்து பல தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறியுள்ளார்.

 

ஆகவே கருத்து சுதந்திரத்தையும் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் மனிதாபிமான ரீதியில் நடத்தப்படுவதையும் உறுதிப்படுத்துவது அவசியம் எனவும் அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.

 

அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி புதிய சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

பிறந்தநாளுக்கு கேக் வெட்டியதற்கும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளார்கள் – சாணக்கியன் விசனம் !

நல்லிணக்கம் பேசும் ஜனாதிபதி நல்லிணக்கத்திற்கு மாறாக இறந்தவர்களை நினைவுகூருவோரை கைதுசெய்யும் பொலிஸாரின் செயற்பாடுகளை அவர் கண்டு மௌனமாக இருப்பாரானால் அவரின் செயற்பாடுகளை அவர் ஏற்றுக்கொள்கின்றார் என்றே பார்க்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

 

இன்று (29) மட்டக்களப்பு வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகரை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் அண்மையில் தரவை துயிலும் இல்லத்தில் கைது செய்யப்பட்டவர்கள் குறித்து அவருடன் கலந்துரையாடியுள்ளார்.

 

மாவீரர் துயிலும் இல்லம் என்ற பதாகை வைக்கப்பட்டதன் காரணமாக மாவீரர் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு உறுப்பினர் உட்பட நான்கு பேரை கைது செய்து அவர்கள் மீது பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் பொலிஸார் வழக்கு தொடுத்துள்ளதாகவும் இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

 

குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டு இரண்டு தினங்களை கடந்துள்ள நிலையில் இதுவரையில் அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தாமை குறித்து கேள்வியெழுப்பியபோதிலும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்துள்ளதன் காரணமாக அவர்களை மூன்று தினங்கள் வைத்து விசாரணை செய்த பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த முடியும் என பொலிஸாரினால் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

 

பயங்கரவாத தடைச்சட்டத்தினை பயன்படுத்த மாட்டோம் என்று சர்வதேசத்திற்கு கூறிவிட்டு இங்கு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

இதேபோன்று வவுணதீவு பிரதேசத்தில் பிறந்த நாளுக்கு கேக்வெட்டியவர்களையும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்து வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் இந்த நாட்டில் இவ்வாறான செயற்பாடுகள் ஒருபோதும் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தாது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

 

இது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசென்று அவர் இது தொடர்பான நடவடிக்கையெடுக்காவிட்டால் அவர் நல்லிணக்கம் பேசும் ஜனாதிபதி நல்லிணக்கத்திற்கு மாறாக இறந்தவர்களை நினைவுகூருவோரை கைது செய்யும் பொலிஸாரின் செயற்பாடுகளை அவர் கண்டு மௌனமாக இருப்பாரானால் அவரின் செயற்பாடுகளை அவர் ஏற்றுக் கொள்கின்றார் என்றே பார்க்க வேண்டும்.

 

இராணுவத்துடன் இணைந்து கடந்த காலத்தில் தமிழ் மக்களை கொலைசெய்தவர்கள் வெருகல் பகுதியில் சிவப்ப மஞ்சல் கொடிகளைகட்டி நிகழ்வுகளை செய்யும் போது அவர்களுக்கு எந்த தடையும் விதிக்கப்படுவதில்லை.

 

எதிர்வரும் காலங்களில் ஆலயங்களில் கூட சிவப்பு, மஞ்சள் கொடிகளைக்கட்டி நிகழ்வுகளை செய்யும் போது அதுவும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றமாக சொல்வார்களா என்பது தெரியாது என தெரிவித்தார்.

மாவீரர் தின நினைவேந்தல் – மாணவன் உட்பட 7 பேர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது !

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள இளைஞர் உட்பட 7 பேர் கடந்த 2 நாட்களில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாவீரர் நினைவேந்தல் நிகழ்விற்கு வாகனங்கள், ஜெனரேட்டர் மற்றும் ஸ்பீக்கர்களை வாடகைக்கு எடுத்ததற்காக சிலர் கைது செய்யப்பட்டனர்,

 

மற்றவர்கள் நவம்பர் 27 அன்று சிவப்பு மற்றும் மஞ்சள் கொடிகள் மற்றும் ஒலிபெருக்கிகளை கொண்டு சென்றதற்காக கைது செய்யப்பட்டனர்.

 

இதில் பலர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் நாட்களில் மேலும் சிலரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் கூறியுள்ளார்.

 

பயங்கரவாத தடை சட்டத்தில் பயங்கரவாதம் என வரையறுக்கப்படாத வாகனங்களை வாடகைக்கு எடுப்பது கூட பயங்கரவாதமாக கூறப்பட்டுள்ளதாக என்றும் அம்பிகா சற்குணநாதன் குற்றம் சாட்டியுள்ளார்.

 

மேலும் நினைவு கூறுபவர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைப்பது, அரசாங்கத்தின் மீதான தமிழர்களின் அவநம்பிக்கையை மேலும் அதிகரிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.