உள்ளுராட்சி சபைகளில் தோல்வியுற்றால் தையிட்டி விகாரை விவகாரத்திலிருந்து ஒதுங்குவோம் ! பொன்னம்பலம் கஜேந்திரகுமார்
நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை நிராகரித்தால் தையிட்டி விகாரை விவகாரத்திலிருந்து ஒதுங்குவோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் யாழ் கொகக்குவிலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று ஏப்ரல் 18இல் தெரிவித்தார்.
நேற்று ஏப்ரல் 17இல் யாழுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி தமிழ், சிங்களக் கட்சிகள் தையிட்டி விகாரை விடயத்திலிருந்து விலத்திக்கொண்டால் அப்பிரச்சினையை தன்னால் இலகுவாகத் தீர்த்து வைக்க முடியும் எனத் தெரிவித்திருந்தார். ஜனாதிபதியின் இக்கருத்து குறிப்பாக பொன்னம்பலம் கஜேந்திரகுமாரின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை நோக்கி வைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் ஏப்ரல் 18இல் யாழ் கொக்குவில்லில் பத்திரிகையார் சந்திப்பை ஏற்பாடு செய்த பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தாங்கள் தையிட்டி விகாரை விவகாரத்திலிருந்து ஒதுங்குவதற்குத் தயார் எனத் தெரிவித்தார். அச்சந்தர்ப்பம் ஏற்படாமல் தடுப்பதற்கு தமிழ் மக்கள் ஜேவிபிக்கு வாக்களிக்காமல் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு வாக்களிக்க வேண்டும் எனத் தெரிவித்தார். ஜனாதிபதி அனுரகுமார திஸ்ஸநாயக்காவும் ஏனைய சிங்களத் தலைவர்கள் போன்ற மோசமான இனவாதியே எனவும் கஜேந்திரகுமார் குற்றம்சாட்டினார்.
‘வடக்கு கிழக்கில் மட்டுமல்ல நாடெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்துள்ளார்கள். பாராளுமன்றத் தேர்தலில் வாக்களித்துள்ளார்கள். உள்ளுராட்சி சபைகளிலும் அவர்கள் தேசிய மக்கள் சக்திக்கே வாக்களிப்பார்கள்’ என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஊடகச் சந்திப்பில் ஏப்ரல் 18இல் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் எமக்கு வாக்களித்த மக்களை நாங்கள் ஒரு போதும் கைவிடமாட்டோம் எனத் தெரிவித்தார். நாட்டில் இனவாதம் மதவாதம் இல்லாத ஒரே கட்சி தேசிய மக்கள் சக்தியே என அவர் வலியுறுத்தினார்.




