தையிட்டி விகாரை

தையிட்டி விகாரை

“எமது நிலம் எமக்கு வேண்டும்“ – மீண்டும் தையிட்டி !

“எமது நிலம் எமக்கு வேண்டும்“ – மீண்டும் தையிட்டி !

 

யாழ் தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிராக போராட்டம் பௌர்ணமி நாளான நேற்றையதினம் இடம்பெற்றது. காணி உரிமையாளர்கள், பொது மக்கள், அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். இப்போராட்டத்தில்இ கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு ”வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம்”, “எமது நிலம் எமக்கு வேண்டும்“, ”சட்டவிரோத விகாரையை உடனே அகற்று”, “சட்டவிரோத விகாரைக்கு காவல்துறை பாதுகாப்பு”, “காவல்துறை அராஜகம் ஒழிக“ போன்ற கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணம் வலி வடக்கு பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள விகாரை தொடர்பில் நேரில் சென்று ஆராயவுள்ளதாகவும் இதுவிடயத்தில் நியாயமான முறையில் தலையிட முடியும் என தான் நம்புவதாகவும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளமையும் கவனிக்கத்தக்கது.

தொடரும் தையிட்டி விவகாரம் சிறிதரனோடு கை கோர்க்கின்றார் மகிந்தவின் மதனவாசன் !

தொடரும் தையிட்டி விவகாரம் சிறிதரனோடு கை கோர்க்கின்றார் மகிந்தவின் மதனவாசன் !

யாழ்-தையிட்டி பகுதியில் விகாரை கட்டவென காணிகள் சுவீகரிக்கப்படவில்லை. ஆகவே அங்கு விகாரை கட்டியிருப்பது சட்ட விரோதமானது. இதனை புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் ஏற்றுக் கொள்வாரா?. காணி உரிமையாளர்களுக்கு அரசின் தீர்வு என்ன? என பாராளுமன்றில் எம்பி சிறிதரன் கேள்வி எழுப்பினார்.

புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி, இவ் விடயம் தொடர்பில் காணி அமைச்சு உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களிடம் தகவல்கள் பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. அதன்பின்னர் முழுமையான பதிலை வழங்குகின்றேன் என்று பதிலழித்தார்.

இதேவேளை இன நல்லிணத்திற்காக யாழ் தையிட்டி விகாரையை அகற்ற சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியும் ஆதரவு என்கிறார் அக்கட்சியின் கிளிநொச்சி மாவட்ட பிரதம அமைப்பாளர் ப.மதனவாசன்.

தையிட்டி விகாரையை இடிக்க வாரீர் – யாழ்.ஊடகவியலாளர்களிடம் பொலிஸார் 06 மணி நேர விசாரணை !

தையிட்டி விகாரையை இடிக்க வாரீர் – யாழ்.ஊடகவியலாளர்களிடம் பொலிஸார் 06 மணி நேர விசாரணை !

 

“தையிட்டி விகாரையை இடிக்க வாரீர் ” என முகநூலில் பகிரப்பட்ட பதிவு தொடர்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்களிடம் பலாலி பொலிஸார் சுமார் 06 மணி நேரம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வாக்கு மூலங்களை பெற்றுள்ளனர். அண்மையில் சமூக வலைத்தளங்களில், “தையிட்டி விகாரையை இடிக்க வாரீர் …” என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பெயரில் போலி முகநூல்களில் பதிவுகள் பகிரப்பட்டன.

குறித்த பதிவுகள் பகிரப்பட்டு சில மணிநேரங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறித்த பதிவு போலியானது என தனது சமூக ஊடகங்களில் பதிவிட்டதுடன், ஊடக சந்திப்பொன்றை நடாத்தி அவை போலியான விளம்பரங்கள் என அறிவித்திருந்தார். எனினும் கடந்த வாரம், “விகாரையை இடிக்க வாரீர் ” என போலி முகநூல்களில் விளம்பரப்படுத்தப்பட்ட விடயம் தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பத்திற்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் பலாலி பொலிஸார் வழக்கு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் அச்சுவேலி பகுதியை சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்களிடம் வாக்கு மூலம் பெறுவதற்காக பலாலி பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பிரிவுக்கு அழைத்த பொலிஸார், ஊடகவியலாளர்களை அங்கிருந்து உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள பலாலி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இரண்டு ஊடகவியலாளர்களின் தொலைபேசிகளை பெற்று சோதனையிட்டதுடன், அவர்களிடம் சுமார் 6 மணி நேரம் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வாக்கு மூலங்களை பெற்றுக்கொண்ட பின்னர், குறித்த வழக்கு விசாரணைகள் தொடர்பில் தாம் அழைக்கும் போது பொலிஸ் நிலையத்திற்கு சமூகம் அளிக்க வேண்டும் எனும் நிபந்தனையுடன் இருவரையும் பொலிஸார் விடுவித்துள்ளனர்.

அதேவேளை தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்த, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், நல்லூர் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் வாசுகி சுதாகரன் உள்ளிட்டோரை பலாலி பொலிஸார் வாக்கு மூலம் வழங்க என நேற்றைய தினம் வியாழக்கிழமை பலாலி பொலிஸ் நிலையத்தின் உப பிரிவுக்கு அழைத்து சுமார் 02 மணி நேரம் காத்திருக்க வைத்த பின்னரே வாக்கு மூலங்களை பெற்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தையிட்டி விகாரை இடிக்கப்பட வேண்டுமா ?’ ‘விகாரைக்கு அத்திவாரம் போடும் போதே தடுத்திருக்க வேண்டும் !’ பா உ ரவிகரன்

கேள்வி: ‘தையிட்டி விகாரை இடிக்கப்பட வேண்டுமா ?’ ‘விகாரைக்கு அத்திவாரம் போடும் போதே தடுத்திருக்க வேண்டும் !’ பா உ தி ரவிகரன் பதில்

 

தையிட்டி விகாரை இடிக்கப்பட வேண்டுமா? எனத் தேசம்நெற் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த பா உ துரைராசா ரவிகரன், “விகாரைக்கு அத்திவாரம் போடும் போதே அதனைத் தடுத்திருக்க வேண்டும்” எனத் தேசம்நெற்க்கு பதிலளித்தார். தான் யாரையும் குற்றம்சாட்டவில்லை என்றும் இதற்கு மேல் தான் ஏதும் சொல்லவிரும்பவில்லை என்றும் நேற்று தேசம்நெற்க்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் வன்னியில் வன இலாக்கா மற்றும் தொல்லியல் திணைக்களம் மக்களுடைய காணிகளை அபகரிக்கின்றது எனறும் 2009 இல் அவர்களிடம் இருந்த இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட ஏக்கர் காணிகள் தற்போது இரண்டு மடங்காக நான்கு லட்சத்துக்கு மேற்பட்ட ஏக்கர்களை கொண்டுள்ளனர் எனவும் தமிழரசுக் கட்சியின் பா உ ரவிகரன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில் தாங்கள் தொடர்ச்சியாக குருந்தூர்மலை புத்தர் விகாரை தொடர்பில் சட்டரீதியாகப் போராடியதாகவும் அதற்காக தனக்கு வன்னியில் உள்ள ஒவ்வொரு சட்டத்தரணியும் ஒத்துழைப்பு வழங்கியதாகவும் அவர்கள் பணத்துக்காக அல்லாமல் இலவசமாக வந்து வழக்குகளை வாதாடியதாகவும் சுட்டிக்காட்டினார்.

ஆனாலும் பா உ ரவிகரன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரோ ஏனைய சட்டத்தரணிகளோ தையிட்டி விவகாரத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கவி;ல்லை என்ற குற்றச்சாட்டை வைக்கவில்லை. போராடாமல் எதனையும் அடைய முடியாது என்பதை பா உ ரவிகரன் சுட்டிக்காட்டினார்.

கைமாறும் தையிட்டி விகாரை: இராணுவத்திடமிருந்து பௌத்த சாசன அமைச்சுக்கு !

கைமாறும் தையிட்டி விகாரை: இராணுவத்திடமிருந்து பௌத்த சாசன அமைச்சுக்கு !

யாழ். தையிட்டியில் தனியார் காணியொன்றில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரை விவகாரம் தேசிய ஐக்கியம் தொடர்பில் உணர்வுபூர்வமானதாக காணப்படுவதை கருத்தில் கொண்டு, இது தொடர்பில் காணப்படும் குழப்பங்களுக்கு தீர்வை காண்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக பௌத்தசாசன அமைச்சின் செயலாளர் ஏ.எம்.பி.எம்.பி.அத்தபத்து குறிப்பிட்டுள்ளார். இதன்படி குறித்த விகாரை தொடர்பில் இராணுவத்தினருடனும் சம்பந்தப்பட்ட அமைச்சுகளுடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அத்தபத்து, இராணுவம் தற்போது அந்த விகாரையை நிர்வகித்துவந்தாலும் அரசாங்கம் பௌத்த விவகாரங்களுக்கான ஆணையாளர் அலுவலகத்தின் கீழ் இந்த விகாரையை பதிவு செய்யவுள்ளது. பாதுகாப்பு அமைச்சு தன்னால் அதனை தொடர்ந்து நிர்வகிக்க முடியாது பௌத்த விவகாரங்களுக்கான ஆணையாளர் அலுவலகத்தின் கீழ் இந்த விகாரையை பதிவு செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

அத்துடன், இந்த பெயரில் விகாரை ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அங்கு நிலம் மட்டுமே உள்ளது. மேலும் இராணுவத்தினரும் கடற்படையினரும் இரண்டு பௌத்த விகாரைகளை நிர்வகிக்கின்றனர். இது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இராணுவத்தால் அதனை நிர்வகிக்க முடியாவிட்டால் அதற்கு தீர்வை காண்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

தையிட்டி எதிரொலி ! யாழில் 5 கிராமங்களில் பௌத்த பாடசாலைகள் உருவாக்கப்பட்டது ஏன்..? விகாரை கட்டப்பட்டது ஏன்..?

தையிட்டி எதிரொலி !

யாழில் 5 கிராமங்களில் பௌத்த பாடசாலைகள் உருவாக்கப்பட்டது ஏன்..? விகாரை கட்டப்பட்டது ஏன்..?

டென்மார்க் சமூக ஜனநாயகக் கட்சியின் பிரமுகர் தர்மு தர்மலிங்கத்துடன் ஒரு நேர்காணல் !

 

தையிட்டி விகாரை: பிச்சைக்காரன் புண்ணை குணப்படுத்த மாட்டான் பா உ அர்ச்சுனா !

தையிட்டி விகாரை: தமிழ் தலைவர்கள் சட்ட நடவடிக்கை எடுக்கத் தயக்கம் ! பிச்சைக்காரன் புண்ணை குணப்படுத்த மாட்டான் பா உ அர்ச்சுனா !

 

யாழ். தையிட்டி விகாரை இடித்து அகற்றக் கோரும் போராட்டம் சமூக வலைத்தளங்களில் செய்திகளில் பேசப்பட்ட அளவுக்கு மக்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. உடனடியாக அகற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் காணிகளை உரிமையாளர்களிடம் உடனடியாக கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி தையிட்டியில் நேற்று புதன்கிழமை இரண்டாவது நாளாகவும் பிசுபிசுத்துப் போனதொரு கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

”பௌத்தம் உன் மதம். வழிபடு. தையிட்டி என் மண். வழி விடு !”, ”சட்டவிரோத விகாரை கட்டுமானத்தை உடனடியாக அகற்று” , ”கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை நிறுத்து” போன்ற பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அத்துடன் போராட்டம் இடம்பெற்ற பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர். பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையை வழமை போல் வாக்குவாதம் ஏற்பட்டு முறுகலான நிலை தோற்றுவிக்கப்பட்டது.

இதேவேளை யாழ்ப்பாணம் – தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரையை அகற்ற முடியும் என அரகலயா போராட்டத்தில் முன்னின்ற மக்கள் போராட்ட முன்னணியின் உறுப்பினர் ராஜ்குமார் ரஜீவ்காந் போராட்டத்தில் கலந்துகொண்டு தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “இந்த விகாரையின் கட்டுமானம் நிறைவடைந்துள்ளது ஆகவே இந்த விகாரையை அகற்ற முடியாது என பலரும் பல்வேறு கருத்துக்ளை முன்வைத்து வருகின்றனர். ஆனால் தென்னிலங்கையில் இருந்த பல சட்டவிரோதமான விகாரைகள் வீதி அபிவிருத்தி அதிகார சபையினுடைய வழக்கின் மூலம் வீதி அபிவிருத்திக்காக அகற்றப்பட்டிருக்கின்றது.

எனவே அவர்களுக்கு ஒரு நீதி, இங்கிருக்கின்ற மக்களுக்கு ஒரு நீதி என்றால், சிங்களப் பேரினவாதத்தினுடைய ஆக்கிரமிப்புப் போக்கும் தமிழருக்கு எந்த ஒரு இடத்தையும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்ற நிலைமையும், தமிழ் மக்கள் எந்தவொரு இடத்திலும் தங்களின் பூரண இனச்சுதந்திரத்துடன் வாழ முடியாத ஒரு சூழ்நிலையியை ஏற்படுத்துகின்ற சிந்தனையை இது வெளிப்படுத்துகின்றது’’ எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தையிட்டி விகாரை விவகாரத்தை முன்னிலைப்படுத்தி இனவாத கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பி வரும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கூறி தேசப்பற்றுள்ள தேசிய அமைப்பின் உறுப்பினர் அஜித் ரணசிங்க தெரிவித்துள்ளதுடன் இதுதொடர்பாக அவர் பொலிசில் முறைப்பாடு ஒன்றினையும் பதிவு செய்துள்ளார் .

இதேவேளை நேற்றைய தினத்தில் தொடர்ந்த தையிட்டி விகாரை தொடர்பான போராட்டத்திலும் விகாரையை அகற்ற சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பில் எந்தவொரு பேச்சுக்களும் கலந்து கொண்ட தலைவர்களால் முன்னெடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த போராட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பா.உ இராமநாதன் அர்ச்சுனா, பிச்சைக்காரன் காயத்தை குணப்படுத்த மாட்டான். ஏனெனில் அப்போதா தான் அதை வைத்து பிச்சை எடுக்கலாம். அந்த பிச்சைக்காரன் போலத்தான் பல அரசியல்வாதிகள் தையிட்டி பிரச்சினையை தீர்க்காமல் வைத்திருந்தால் தான் தங்களால் அரசியல் செய்ய முடியும் என்பதற்காகவே அதனை தீர்க்காது தூண்டி விடுகின்றார்கள் என குற்றஞ்சுமத்தியுள்ளார்.

விகாரையை இடிக்க வாரீர் ! கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு எதிராக மல்லாக நீதிமன்றம் அழைப்பாணை

விகாரையை இடிக்க வாரீர் ! கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு எதிராக மல்லாக நீதிமன்றம் அழைப்பாணை

 

“ பொதுமக்களை திரட்டி பலாலி திஸ்ஸ மகாராம பௌத்த விகாரையினை சேதப்படுத்த சமூக ஊடகங்களில் தகவல் வெளியிட்டமை” தொடர்பில் பொலிஸாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் மல்லாகம் நீதிமன்றம் எதிர்வரும் 14 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு வரும்படி கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு பெப்ரவரி 11 ஆம் திகதி அழைப்பாணை அனுப்பியுள்ளது.

நீதிமன்ற அழைப்பாணை கிடைத்தமையை உறுதிப்படுத்திய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , தன் மீதான குற்றச்சாட்டை மறுக்கிறார். இவ் விவகாரம் தொடர்பில் கூறிய அவர், தான் ஜனாதிபதி அநுர கலந்து கொண்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ள தையிட்டி விகாரையை அகற்றி காணிகளை விடுவிக்கும்படியே கூறியதாகவும், விகாரையை இடிக்க வாரீர் என சமூக வலைத்தளங்களூடாக மக்களுக்கு அழைப்பு விடுக்க வில்லை எனவும் தெரிவித்தார்.

இது திட்டமிட்ட விசமப் பிரச்சாரம் எனவும், இவ் விடயம் தெரிந்ததும் தான் தனது உத்தியோக பூர்வ சமூக ஊடகங்கள் மூலமாக இதனை மறுத்ததாகவும் தெரிவித்தார். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தையிட்டு விகாரை உடைப்பை தொடக்கி வைத்தில் இருந்து அவருடன் சமீப காலத்தில் பயணிக்கும் எம்பிமார்களான சிவஞானம் சிறிதரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் என எல்லோரும் விகாரை உடைப்பை வழிமொழிந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தையிட்டியில் தனியார் காணிகள் சுவீகரிக்கப்பட்டு விகாரை அமைக்கப்பட்டது தொடர்பில் ஒரு பொலிஸ் முறைப்பாடோ அல்லது நீதிமன்றில் சட்ட நடவடிக்கைகளோ கஜேந்திர குமார் பொன்னம்பலம் உட்பட சட்டத்தரணிகளால் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால் பொலிஸார் தையிட்டி விகாரை தொடர்பில் விரைந்து சட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தையிட்டி விகாரை இடிக்கப்படக்கூடாது ! இடிக்கப்படமாட்டாது ! இன்னுமொரு இன மத கலவரத்துக்கு நெய்வார்க்கும் புலித்தோல் போர்த்த நரிகள் !

கடவுள் மனிதனைப் படைத்தானா அல்லது கடவுளை மனிதன் படைத்தானா என்றால் கடவுளை மனிதன் படைத்தான் என்பதற்கு தையிட்டி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. புத்தரா, சுத்தரா, யேசுவா, சிவனா, இல்லை தமிழ் கடவுளா, சிங்களக் கடவுளா, அல்லது கூறுகெட்ட கடவுளா என்றால் இந்த நாசமறுத்த மதங்களால் மனுசன் மிருகமானது தான் மிச்சம். மதங்கள் மனுசனின் மனிதாபிமானத்தின் கடைசிச்சொட்டு ஈவிரக்கத்தையும் வற்றச்செய்து மற்றையவனின் இதயத்தை பிளந்து தின்னும் வெறியோடு திரிகின்றனர்.

நாலு பேரை ரயரைப் போட்டு உயிரோடு கொழுத்தினால், அந்த மனிதக் கொழுப்பு எரிகின்ற வாசனையில் நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்கு ஒரு கூட்டம் தவிக்கின்றது. இந்த வாசனை இலங்கை மக்களுக்கொன்றும் புதிததல்ல. அதிகார வெறிகொண்ட சிங்கள, தமிழ் அரசியல்வாதிகள் கொலை அரசியலில் மிகக் கைதேர்ந்தவர்கள். இலங்கையின் வரலாற்றில் படுகொலைகள் அத்தனையும் அரசியல் தலைமைகளினால் ஊக்குவிக்கப்பட்டு, அரசியல் லாபங்களுக்காக மட்டுமே நடத்தப்பட்டன. 2009 ற்குப் பின் உயிர்கள் கொல்லப்படவில்லை, தங்களுடைய அரசியலை முன்னெடுக்க முடியவில்லை என்ற தவிப்பு குறும் தேசியவாத தமிழ், சிங்கள அரசியல் தலைவர்களிடம் தற்போது மேலோங்கி நிற்கின்றது. தமிழ், சிங்கள குறும்தேசியவாதத் தலைமைகள் என்னவிலை கொடுத்தும் தங்கள் இருப்பைத் தக்கவைப்பார்கள். அதற்கு அவர்களுக்கு இப்போதுள்ள ஒரே துருப்புச்சீட்டு தையிட்டி விகாரையும் ஒரு மத – இனக் கலவரமும்.

சிங்கள இனவாதிகளுக்கு எவ்விதத்திலும் குறையாதவர்கள் அன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி, ஜனநாயகத் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி. இவர்களுடைய சந்தர்ப்பவாத அரசியலுக்கு மிகச் சிறந்த எடுத்துகாட்டு, தாங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்று சொல்லிக் கொண்டே இவர்கள் விடுதலைப் புலிகளின் தலைவரை முதுகில் குத்தியவர்கள். அப்போது இவர்கள் வே பிரபாகரனின் துப்பாக்கிக்கு கட்டுப்பட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்தார்கள். 2009 யுத்தம் மிகத் தீவிரம் பெற்ற காலத்தில் இவர்கள் யாரும் நாட்டில் இல்லை. இவர்கள் எல்லோருக்கும், தமிழீழ விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்படப் போகின்றார்கள், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் கொல்லப்படுவார் என்ற விடயம் 2009 முற்பகுதியிலேயே தெரியப்படுத்தப்பட்டு விட்டது. இதனை அன்றைய பாராளுமன்ற உறுப்பினர் எம் கெ சிவாஜிலிங்கம் 2009 முற்பகுதியில் தேசம்நெற்க்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்து இருந்தார்.

இறுதி யுத்தம் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் கட்டுப்பாட்டில் இருந்த வேர்கள் புலனாய்வுத்துறையின் புலனாய்வுப் பகுப்பாளர் முல்லை மதி கூறுகையில்: இரா சம்பந்தன் வே, பிரபாகரனின் மறைவுச் செய்திக்காக எப்படிக் காந்திருந்தார் என்பதையும் பஸில் ராஜபக்சவோடு இடம்பெற்ற உரையாடலையும் குறிப்பிட்டிருந்தமை இங்கு கவனிக்கத்தக்கது.

பொன்னம்பலம் கஜேந்திரகுமார், செல்வராஜா கஜேந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் அப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் தலைவரும் அழிக்கப்படப்போகிறார்கள் என்பது இவர்கள் அனைவருக்கும் மிகத் தெளிவாக அறிவுறுத்தப்பட்டது. இருந்தும் தமிழீழ விடுதலைப் புலிகளையோ அதன் தலைவர்களையோ காப்பாற்ற இன்று தங்களை விடுதலைப் புலிகளாக சித்தரிக்கும் பொன்னம்பலம் கஜேந்திரகுமாரோ, செல்வம் அடைக்கலநாதனோ, சிவஞானம் சிறிதரனோ (அப்பொழுது இவர் பாராளுமன்ற உறுப்பினர் இல்லை.) இதற்காகத் துடிக்கவில்லை.

இவர்கள் யாழ் குடாநாட்டு கிணறுகளில் மலசலம் கலந்து மக்கள் நோய்வாய்ப்படுவது பற்றியும் எவ்வித கவலையும் கிடையாது. அந்தக் குடிநீருக்கும் மத்தியப்படுத்தப்பட்ட கழிவகற்றலுக்கும் ஆப்பு வைத்தவரே சிவஞானம் சிறிதரன் மற்றும் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் போன்ற பா உ க்கள். இவர்களுக்கு தையிட்டியில் விரல் விட்டு எண்ணக் கூடிய சிலரின் காணிகள் இழக்கப்பட்டது பற்றி எவ்வித அக்கறையும் கிடையாது. பா உ சிறிதரன் போன்றவர்களால் முண்டு கொடுத்து நிறுத்தப்பட்ட ரணில் விக்கிரமசிங்க – மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் தலைமையில் தான் இந்த விகாரைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இன்றைக்கு துடிக்கும் நீங்கள் அன்று அதனை நிறுத்துவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் 1000 விகாரைகள் கட்ட திட்டம் போட்ட சஜித் பிரேமதாஸாவை ஆதரித்த தமிழரசுக் கட்சியில் தான் எஸ் சிறிதரன் இன்றும் தொங்கிக் கொண்டுள்ளார்.

சென்றவாரம் இந்த விகாரை உடைப்பு போலித் தமிழ் தேசிய பா உ க்கள் சஜித் தலைமையிலான எதிர்க்கட்சியைச் சந்தித்து உள்ளது. தமிழ் – சிங்கள பகுதிகளில் உள்ள இனவாத சக்திகளுக்கு, இப்போது நாட்டு மக்களிடையே ஏற்பட்டு வருகின்ற புரிந்துணர்வும், ஒடுக்கப்பட்ட சமூகங்களிடையே ஏற்படுகின்ற நெருக்கமும் பெரும் பதற்றத்தையும் தங்களுடைய இருப்புக்கே ஆபத்து ஏற்பட்டு இருப்பதையும் மிகத் தெளிவாகக் காட்டியுள்ளது. அதனால் தற்போதுள்ள சுமூகநிலையைச் சீரழிக்க நாட்டில் ஒரு இனக்கலவரம் அவர்களுக்குத் தேவைப்படுகின்றது. அதனால் தான்: பொன்னம்பலம் கஜேந்திரகுமார், சிவஞானம் சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் தையிட்டி விகாரை உடைத்து அகற்றப்பட வேண்டும் என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லி வருகின்றனர். இவர்களுக்கு ஏற்றாற் போல் இவர்களின் பாராளுமன்ற நண்பன் உதயன்கம்பன்பில “தையிட்டியில் உள்ள திஸ்ஸ விகாரையில் தமிழர்களைக் கை வைக்க விடமாட்டோம்” என்று தெரிவித்துள்ளார். இவையெல்லாம் திட்டமிட்டு இனவாதத்தைக் கிளறி இரத்தக் களரியொன்றைக் காண வேண்டும் என இந்த அரசியல் வாதிகள் விடாமுயற்சியில் இறங்கி உள்ளதையே காட்டுகின்றது.

பா உ சிறிதரனின் தமிழரசுக் கட்சிக்கு தையிட்டி விகாரை அங்குரார்பணத்திற்கும் அழைப்பு விடுக்பபட்டிருந்தது. பொன்னம்பலம் கஜேந்திரகுமாரின் கட்சியில் சட்டத்தரணிகளுக்கா பஞ்சம், அப்படி இருக்கையில் நீதிமன்றத் தீர்ப்புக்க எதிராக விகாரை கட்டப்பட்டதாக சொல்லும் பொன்னம்பலம் கஜேந்திரகுமார், அந்த வழக்கு இலக்கத்தை ஏன் வெளியிடவில்லை.

தையிட்டியில் மக்களுடைய காணியில் அவர்களுடைய அனுமதியின்றி இராணுவம் புத்தவிகாரை அமைத்தது முற்றிலும் உண்மை. அதனை ஆரம்பத்திலேயே தடுத்திருக்க வேண்டும். ஆனால் தையிட்டி விகாரையை கட்டிய அரசாங்கத்துக்கு ஒரு தூணாக நின்றவர்களே தற்போது விகாரையை இடிக்கச் சொல்லி குரல் எழுப்புகின்றார்கள்.

மேலும் இவ்விகாரை, நயினா தீவு நாக விகாரையின் விகாராதிபதிக்கும் இராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாட்டினால் கட்டப்பட்ட விகாரையாகும். இந்த விகாரை அமைப்பதற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள ஒருவர் தனது 20 பரப்புக் காணியையும் அன்பளிப்புச் செய்துள்ளார். இராணுவம் இவ்வாறான தான்தோறித் தனங்களில் ஈடுபட்டால் அதனைச் சட்டத்தின் மூலம் கையாண்டிருக்க வேண்டும். நீதி மன்றத்துக்கூடாக தடையுத்தரவுகளைப் பெற்றிருக்க வேண்டும். மேல் நீதிமன்றத்துக்குச் சென்றிருக்க வேண்டும். பாராளுமன்றத்தில் போராடியிருக்க வேண்டும். ஆனால் இந்த தமிழ் தேசிய சட்டத்தரணிகள் இதுவரை சட்டரீதியாக ஒரு துரும்பையும் அசைக்கவில்லை. குறைந்தபட்சம் ஒரு பொலிஸ் முறைப்பாடு கூடப் பதிவு செய்யப்படவில்லை. ஊடகங்களுக்கு அறிக்கை விடுவதும் அவ்வப்போது விகாரைக்கு முன்னால் நின்று படம் எடுத்து போஸ்ற் போடுவதுமாகவே உள்ளனர்.

தங்களுடைய காணிகள் தங்களுக்கு வேண்டும் என்று கோருவதற்கு காணி உரிமையாளர்களுக்கு முழு உரிமையும் உண்டு. ஆனால் ஒரு விகாரை கட்டிமுடிக்கப்பட்ட நிலையில் அதனை உடைக்கக் கோருவது அல்லது அதனை அப்புறப்படுத்தக் கோருவது. ஒரு ஆரோக்கியமான முடிவல்ல. மேலும் இப்போராட்டம் அரசியல் வாதிகளுக்கு அழைப்புவிடுத்து தற்போது அரசியல்வாதிகளின் போராட்டமாக மாற்றப்பட்டுவிட்டது. குறிப்பாக பொன்னம்பலம் கஜேந்திரகுமார், சிவஞானம் சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான தையிட்டி விகாரையை உடைத்து அப்புறப்படுத்தும் போராட்டமாக மாற்றப்பட்டு விட்டது, இந்தப் போராட்டம் காணி உரிமையாளர்களின் கையில் இல்லை. இது ஆரம்பத்திலிருந்தே பொன்னம்பலம் கஜேந்திரகுமார் மற்றும் சிவஞானம் சிறிதரனின் இனக்கலவரத்தைத் தூண்டுவதற்கான போராட்டம். அதில் செல்வம் அடைக்கலநாதனும் தெற்கில் உதயகம்பன்பிலவும் இணைந்தகொண்டுள்ளனர்.

இந்த விகாரை கட்டப்பட்டதற்கும் சிவஞானம் சிறிதரனுக்கும் பொன்னம்பலம் கஜேந்திரகுமாருக்கும் இருக்கும் சம்பந்தம் கூட தேசிய மக்கள் சக்த்தி அரசாங்கத்துக்குக் கிடையாது. அவர்கள் மதம் என்பதை மக்களுக்கு போதையூட்டும் ஒரு நிறுவனமாகவே பார்க்கின்றனர். அதனால் தான் நாக விகாராதிபதியைக் கூட ஜனாதிபதி அனுர சென்று சந்திக்கவில்லை. நாக விகாராதிபதி அனுரவை நம்பமுடியாது என்றும் அவர் மத நம்பிக்கையற்றவர் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்த மிக முக்கியமான பெண் ஆளுமை மாவீரர்களின் தாய், போராளி தமிழ் கவி அம்மா மாவீலாறு அணை விளையாட்டாக மூடப்பட்டது எவ்விதம் வினையாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முடிவை நோக்கிச் சென்றது என்பதை மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதே போல் 2006 முதல் பொங்கு தமிழ் நடத்தி போருக்கு அழைத்தபோதும் புலம்பெயர் தமிழர்கள் பெரும்பாலும் யாழ்பாணத்து புலம்பெயர் தமிழ் தேசியவாதிகள் ஷெல் தங்கள் மீது விழாது என்பதை நன்றாகத் தெரிந்துகொண்டு யுத்த போதையேறி நின்றனர். எவ்வளவுக்கு அதிகமாக மக்கள் சாகின்றார்களோ அவ்வளவுக்கு சர்வதேச நாடுகள் தலையீடு செய்து தமிழர்களுக்கு தீர்வுகொண்டு வந்து தரும் என்று முட்டாள்தனமாக நம்பினர். தமிழர்களை வழிநடாத்திய முட்டாள்தனமான அரசியல் தான் தமிழர்களை இந்நிலைக்கு கொண்டுவந்து நிறுத்தியது. அதில் யாழ்ப்பாணத்து தமிழ் தலைமைகளுக்கு முக்கிய பங்குண்டு. ஆனால் நடந்துமடிந்த யுத்தத்தைப் பயன்படுத்தி நான் உட்பட யாழ்ப்பாணத்து மக்கள் தொகையில் மூன்றில் ஒன்று வெளிநாடு சென்றுவிட்டது. இன்னுமொரு மூன்றில் ஒன்று பொன்னம்பலம் கஜேந்திரகுமார், சிவஞானம் சிறிதரன் போன்று கொழும்பில் ஒரு வீடு யாழ்ப்பாணத்தில் ஒரு வீடு என்று வாழ்கிறது. ஆனால் இவர்களை நம்பினால் தையிட்டி குடும்பங்களுக்கு அவர்களுடைய ஆயுட்காலத்தில் காணி கிடைப்பதற்கான வாய்ப்பு கிடையாது.

அதனால் தையிட்டி உரிமையாளர்கள் முதலில் தற்போது புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள மக்கள் நலன்சார்ந்த அரசுக்கு தங்களுடைய பிரச்சினையை விளக்கி, ஆதாரங்களை வழங்கி, ஒரு நிரந்தரத் தீர்வுக்கு வரவேண்டும். அந்தத் தீர்வு இனிமேல் விகாரையை இடித்து காணியைத் தர வேண்டும் என்று கோருவதாக இருக்க முடியாது. ஏனெனில் அது இலங்கையில் இன ஐக்கியத்தை சீர்குலைப்பதுடன் எதிர்காலத்தில் தவறான முன்ணுதாரணமாக அமையும். தையிட்டி விகாரை தமிழ் மக்களின் இன ஐக்கியத்துக்கான சமிக்ஞ்யையாக அடையாளமாக மாற வேண்டும். விகாரைக்கு மிக அவசியமான காணியைத் தவிர ஏனைய காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதில் பெரும்பாலும் அனைத்து பௌத்தர்களும் உடன்படுகின்றனர். தமிழ் மக்களும் விதிவிலக்கல்ல. அவர்களும் விகாரையை உடைக்க வேண்டும் அப்புறப்படுத்த வேண்டும் என்று கேட்கும் அளவுக்கு தரம்தாழ்ந்துவிடவில்லை. இதனை வைத்து சுயநல அரசியலை முன்னெடுப்பவர்கள் இதிலிருந்து ஒதுங்கினால் மக்களே தங்களுடைய பிரச்சினையை சுமூகமான விழியில் தீர்த்துக் கொள்வார்கள். அதனால் விகாரை உடைக்கப்படக் கூடாது. உடைக்கப்பட மாட்டாது.

தமிழகம் ஒரு காலகட்டத்தில் பௌதத்திற்கு மாறிய போது தமிழகத்திற்கு அருகிலிருந்த வட இலங்கையிலும் பௌத்தம் பரவியது. இலங்கைக்கு பௌத்தத்தை கொண்டுவந்தவர்கள் தமிழர்களே. அதனால் வடபகுதியில் பௌத்த மத வரலாற்றுச் சான்றுகள் கிடைப்பது ஒன்றும் ஆச்சரியமானதல்ல. பௌத்தம் தமிழர்களுடைய மதம். அதன் பின்னரே அது சிங்களவர்களுடைய மதமானது. ஆனாலும் இந்து சமயமமும் பௌத்தமும் மிகுந்த உறவைக்கொண்ட சமயங்கள். இந்து சமய சாமிகளின் படங்கள் திருவுருவங்கள் இல்லாத பௌத்த விகாரைகள் இலங்கையில் இல்லை.

1980க்கள் வரை யாழ்ப்பாணத்தில் சிங்கள மக்கள் கணிசமான அளவில் வாழ்ந்தனர். அவர்களுடைய பேக்கரித் தொழில் மிகச் செழிப்பாக இருந்தது. யாழில் சிங்களவர்கள் படுகொலை செய்யப்பட்டனர், வடக்கைவிட்டு துரத்தப்பட்டனர். பின்னர் முஸ்லீம்கள் யாழ்ப்பாணத்தையும் வடக்கையும் விட்டு துரத்தப்பட்டனர். அவர்கள் தங்களுடைய காணி, நில புலங்களை விட்டுவிட்டுத்தான் சென்றனர். வன்னியில் அரச காணிகள் யாழ்ப்பாணத்தாருக்கு வழங்கப்பட்ட போது மலையகத்திலிருந்து வந்த காணியற்ற மக்களுக்கு யாழ்ப்பாண அதிகாரிகள் காணிகளை வழங்கவில்லை. இன்றும் அந்த மக்கள் காணி அற்றவர்களாகவே வாழ்கின்றனர். யாழ்ப்பாணத் தலைமைகள் இனவாதத்தைக் கக்கி அதிகாரத்தைக் கைப்பற்ற, வன்னி, மலையகம், கிழக்கு மக்கள் போராடி மாண்டனர். யாழ்பாணத்தார் வெளிநாடு சென்றனர். இந்த அரசியலை ஜி ஜி பொன்னம்பலம் செய்தார். இப்போது அவருடைய பேரன் பொன்னம்பலம் கஜேந்திரகுமாரும் செய்கின்றார்.

வெள்ளாளர் வாழும் இடங்களில் ஒடுக்கப்பட்டசமூகத்தவர் காணிகளை வாங்க அனுமதிப்பதில்லை. இன்றும் ஆலயங்களில் ஒடுக்கப்பட்ட சமூகத்தவர் சாமிக்கு எட்ட நிற்பதற்காக பல விதிமுறைகள் உள்ளது. இன்றும் யாழ் மண்ணில் ஒடுக்கப்படுகின்ற சமூகங்களின், மலையகத் தமிழர்களின் ஒடுக்குமுறைக்கு குரல் கொடுக்க ஒரு கஜேந்திரகுமார், ஒரு சிறிதரன், ஒரு அடைக்கலநாதன் கிடையாது. ஆனால் பௌத்த விகாரையை உடைக்க நான் முந்தி நீ மூந்தி என்று போட்டி போட்டுக்கொண்டு வருகின்றனர். ஒரு காலத்தில் கரவெட்டியில் உள்ள கன்பொல்ல போன்ற கிராமங்கள் உருவாகத் தான் இந்த வலதுசாரித் தமிழ் தேசியம் வழிகோலும்.

தையிட்டி விகாரையை இடித்தழிப்போம் – கஜா குழுவினருடன் கைகோர்த்தார் பா.உ சிறிதரன் !

தையிட்டி விகாரையை இடித்தழிப்போம் – கஜா குழுவினருடன் கைகோர்த்தார் பா.உ சிறிதரன் !

தையிட்டி விகாரை இடித்தழிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார். சட்டத்தின் அடிப்படையில் தான் முப்பது வருடங்களுக்கு மேலதிகமாக தம்புள்ளையில் இருந்த காளி கோயில் இடித்தழிக்கப்பட்டது என கூறுகிறார்கள். தற்போதைய ஜனாதிபதி அநுர சட்டம் அனைவருக்கும் சமமானது என கூறி வருகிறார். சட்டத்தின் அடிப்படையில் தையிட்டி விகாரை உடைக்கப்பட வேண்டும் எனவும் பா உ சிறிதரன் கூறியுள்ளார்.

பா.உ கஜேந்திரகுமார் உள்ளிட்ட அவருடைய சைக்கிள் கட்சியினர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் தமது அரசியலை உறுதி செய்ய மீள தையிட்டி விகாரையை கையிலெடுத்துள்ளனர் என குற்றச்சாட்டினை முன்வைக்கும் தேசம் ஜெயபாலன் தையிட்டி விகாரையை இடிக்க வேண்டும் என தமிழ்தேசிய தலைவர்கள் கூறுவது மீள ஓர் இனவாத தீயை கொழுந்து விட்டு எரிய வைத்து அதன் மூலம் அரசியல் இலாபம் ஈட்ட முனையும் செயல் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அண்மைய தேசம் திரை நேர்காணலில் கலந்து கொண்டிருந்த மூத்த அரசியல் ஆய்வாளர் சிவலிங்கம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்டோருக்கு மக்களின் பொருளாதார பிரச்சினைகள் கண்ணுக்கு தெரியாத நிலையில் தையிட்டி உள்ளிட்ட அரசியல் செய்யக்கூடிய பிரச்சினைகளில் தான் அதிக கவனம் செல்கிறது எனவும் இந்த குறுந்தேசியவாதிகள் எதிர்வரும் காலங்களிலும் மக்களால் நிராகரிக்கப்படுவர் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறான பின்னணியிலேயே தனிக்கட்டையாக பாராளுமன்றத்தில் உள்ள பா.உ கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தையிட்டி விகாரையை இடிக்க வேண்டும் என்ற கருத்துடன் கைகோர்த்திருக்கிறார் பா.உ சிறிதரன். ஏற்கனவே தமிழ் இளைஞர்கள் பலரை தேசியம் என்ற பெயரில் உசுப்பேற்றி வரும் பா.உ சிறிதரன் தையிட்டி விகாரையை வைத்து தனது அடுத்த கட்ட நகர்வை ஆரம்பித்திருக்கிறார்.

இதேவேளை விகாரை அமைக்கப்பட்டு முழுமையடையும் வரை அமைதியாக இருந்துவிட்டு விகாரை முழுமையடைந்ததும் அதனை இடித்தழிக்க வேண்டும் என தமிழ்தேசிய தலைவர்கள் கூறி மீள ஓர் வன்முறை கலாச்சாரத்தை ஆரம்பித்து வைக்கின்றனர் என இணக்க அரசியலை விரும்பும் தரப்பினர் கருத்து வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.