தமிழ் தேசிய கூட்டமைப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பு

வெடுக்குநாறிமலையில் பொலிஸார் அடாவடி – மட்டக்களப்பில் இன்று கவன ஈர்ப்பு போராட்டம் !

வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி தினத்தன்று பொலிஸார் மேற்கொண்ட அடாவடித்தனத்தை கண்டித்து மட்டக்களப்பில் இன்று கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமிழ் தேசிய உணர்வாளர்களின் அழைப்பின் அடிப்படையில் இந்த போராட்டம் காந்திபூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபி அருகில் நடைபெற்றது.

சிவராத்திரி தினத்தன்று வவுனியா வடக்கு வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளின் போது ஆலயத்திற்குள் நுழைந்த பொலிஸார் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரை கைது செய்ததுடன் மேலும், கடும் அடக்குமுறையினை பிரயோகித்திருந்தனர்.

இதனை கண்டிக்கும் முகமாகவே மட்டக்களப்பில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, “எங்கள் மண்ணில் எங்கள் மலையில் உங்களுக்கு உரிமையில்லை, சிவராத்திரி நாளிலும் சிங்கள அடக்குமுறை ” தமிழர்களின் வழிபடும் உரிமையினை தடுக்கும் அரசை கண்டிக்கின்றோம், ஆதிசிவன் கோயில் நிலத்தினை அழிக்காதே வெளியேறு,

வெடுக்குநாறி ஆதிசிவன் சிவராத்திரி பூசையை தடுத்த படையினரின் அராஜகத்தை கண்டிக்கின்றோம் போன்ற பல்வேறு கோசங்கள் கொண்ட பதாகைகளை தாங்கிவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின்

உறவுகளின் சங்கத்தினர், மதத்தலைவர்கள், தமிழ் தேசிய உணர்வாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.

“மஹிந்த ராஜபக்ஷ கூட்டமைப்பினருக்கு காண்பித்த இரக்கம் தான், இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு காரணமாக மாறியுள்ளது.” – சரத் வீரசேகர

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டவுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் தடை செய்யாமல், மஹிந்த ராஜபக்ஷ பாரிய தவறை இழைத்து விட்டார் என ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற குழு நிலை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவாகும். இந்தக்கட்சி சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டபோது, அவர்கள் முதன் முதலாக பிரபாகரன் முன்னிலையில் தான் சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்டார்கள்.

 

உண்மையில், மஹிந்த ராஜபக்ஷ பெரிய தவறொன்றை இழைத்துவிட்டார். ஹிட்லர் இறந்தவுடன், அவரது நாஜி கட்சி இல்லாது போனது.பொல் போட் இறந்தபின்னர் அவரது காம்பூச்சியா கட்சி இல்லாமல் செய்யப்பட்டது.

சதாம் உசைன் இறந்தபோதும், முபாரக் இறந்தபோதும் அவர்களது அரசியல் கட்சிகள் இல்லாது செய்யப்பட்டன. ஆனால், எல்.ரி.ரி.ஈ. எனும் உலகிலேயே மிகவும் மோசமான பயங்கரவாத அமைப்பு தோற்கடிக்கப்பட்ட பின்னர், அவர்களது அரசியல் கட்சியான ரி.என்.ஏ.வை நாம் தடை செய்யவில்லை. மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு காண்பித்த இரக்கம் தான், இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு காரணமாக மாறியுள்ளது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

“புலிகளிடமிருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பினரை பாதுகாத்ததும், துப்பாக்கி ஏந்தி இருந்த வடக்கு சிறார்களுக்கு பேனை வழங்கியது மஹிந்த தான்” – விமலவீர திஸாநாயக்க

மகிந்தவின் புண்ணியத்தால் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களுக்குகூட சுதந்திரமாக நடமாடமுடிகின்றது என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

புலிகளும், ஜே.விபியினரும்தான் இந்நாட்டை சீரழித்தனர். ராஜபக்சக்கள்தான் இந்நாட்டை மீட்டெடுத்தனர். அபிவிருத்தியில் புரட்சி செய்தனர். எல்லா வீதிகளும் ‘காபட்’ இடப்பட்டு புனரமைக்கப்பட்டன. கிராமிய வீதிகள் புனரமைக்கப்பட்டன. அனைவருக்கும் மின்சாரம் வழங்கப்பட்டது. பாடசாலைகள் கட்டியெழுப்பட்டன. இப்படி ராஜபக்ச யுகத்தில்தான் நாட்டுக்கு பாரிய அபிவிருத்திகள் இடம்பெற்றன. மஹிந்த ராஜபக்சவுக்கு முன் இருந்த தலைவர்கள் போரை முடிவுக்கு கொண்டுவரவில்லை.

 

எம்மை காப்பாற்றுவதற்கு எவரும் இருக்கவில்லை. கடவுளும் வரவில்லை.எமக்கு உயிர் தந்தது மஹிந்த ராஜபக்சதான். நாட்டை மீட்டெடுத்ததும் அவர்தான்.எனது கிராமத்தையும் பாதுகாத்து தந்தது மஹிந்ததான்.

அதனால் யார் என்ன கூறினாலும் நான் அவருக்கு சோரம்போவேன்.

தலதாமாளிகை தாக்கப்படும் போதும், எல்லை கிராமங்களில் தாக்குதல் நடக்கும்போதும் நாட்டை மீட்கயார் இருந்தது? அவ்வாறு மீட்ட மஹிந்த துரோகியா? எமக்கு மூச்சு தந்த ராஜபக்சக்கள் துரோகிகளா?

மரண பீதியுடன் வாழ்ந்தவர்களுக்கு உயிர் தந்த ராஜபக்சக்களை வீரர்கள் எனக் கூறிக்கொள்ளும் சிலர் துரோகிகள் ஆக்கியுள்ளனர்.

 

போர் காலத்தில் இந்த வீரர்கள் எங்கிருந்தார்கள் என்றே தெரியவில்லை.ராஜபக்சக்களுக்கு நான் கடன்பட்டுள்ளேன். சுனாமி அனர்த்தம் ஏற்பட்டபோதும் நாட்டை மீட்டது ராஜபக்சக்கள்தான். கொரோனாவால் மக்கள் செத்து மடியும்போது மக்களை பாதுகாத்தது ராஜபக்சக்கள், இப்படியானவர்கள் துரோகிகளா? ராஜபக்சக்கள் இல்லாவிட்டால் நானும் ஈழத்தில்தான் வாழவேண்டி வந்திருக்கும்.

 

மஹிந்தவின் புண்ணியத்தால்தான் சுமந்திரன் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஆணையிறவு, வவுனியா என எல்லா பகுதிகளிலும் இன்று சுதந்திரமாக நடமாடுகின்றனர். துப்பாக்கி ஏந்தி இருந்த வடக்கு சிறார்களுக்கு பேனை வழங்கியது மஹிந்த தான் என விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

“கௌதம சித்தார்த்தனின் போதனைகளை பறைசாற்ற வேண்டிய பௌத்த பிக்குகள் இனவாதத்தை பறைசாற்றி ஆவேசமாக செயற்படுகிறார்கள்.” – நாடாளுமன்றில் எஸ்.சிறிதரன் !

“ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வினை வழங்கினால் சர்வதேசத்தில் சாதிக்கும் ஈழத்தமிழர்கள் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள்.” என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (05) இடம்பெற்ற சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானத்தின் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

சட்டமா அதிபர் உட்பட உயர் அதிகாரிகளின் அழுத்தங்களினால் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிபதி டி.சரவணராஜா தனது குடும்பத்தாரின் பாதுகாப்பு கருதி பதவியை இராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். நீதிபதிக்கு விடுக்கப்பட்ட உயிர் அச்சுறுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன.

கிளிநொச்சி மாவட்ட வர்த்தக சங்கத்தினர், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தினர் உட்பட கிளிநொச்சி மாவட்ட வர்த்தக சங்கங்கள் பல இணைந்து கடந்த திங்கட்கிழமை எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட பிரதிநிதியிடம் வலியுறுத்தல் மனுவை சமர்ப்பித்துள்ளனர்.

சர்வதேச விசாரணைக்கு ஒருபோதும் இடமளிப்பதில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வதேச ஊடகத்துக்கு மிடுக்காக குறிப்பிட்டுள்ளமை அவதானத்துக்குரியது. உள்ளக விசாரணையில் சரியான மற்றும் நியாயமான நீதி கிடைக்காத காரணத்தால்தான் சர்வதேச விசாரணையை தொடர்ந்து கோருகிறோம் என்பதை அரச தலைவர் விளங்கிக்கொள்ள வேண்டும்.

ஜேர்மனிய நாட்டு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு ‘நாங்கள் என்ன இரண்டாம் தரப்பினரா (செகன்ட் கிளாஸ்) என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆத்திரமடைந்து பதிலளிக்கிறார்.

சர்வதேச நாடுகளிடம் கையேந்தும்போது இந்த இரண்டாம் தரப்பினரா என்ற நிலை ஏன் தோன்றவில்லை. அதே போல் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவற்கும், தமிழர்களை கொன்று குவிப்பதற்கும் உலக நாடுகளிடம் நிதி மற்றும் ஆயுதம் பெற கையேந்தும்போது இரண்டாம் தரப்பினரா என்ற எண்ணம் தோன்றவில்லையா?

நாட்டில் புரையோடிப் போயுள்ள பிரச்சினை என்ன? பிரச்சினையின் ஆணி வேர் என்ன? என்பதை அரச தலைவர்கள் ஆராயாமல் இருக்கும் வரை இந்த நாடு எவ்வாறு முன்னேற்றமடையும். நாட்டின் சுகாதாரத்துறை பாரிய நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. இலவச சுகாதாரத்துறையில் எதிர்காலம் தொடர்பில் அரச மருத்துவ சங்கத்தினர் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், அரசாங்கம்  எதிர்ப்பு அறிவிப்புக்களை மாத்திரம் வெளியிடுகிறதே தவிர பிரச்சினைகளுக்கு தீர்வு காணவில்லை.

கொழும்பில் உள்ள கனடா, பிரித்தானியா உட்பட சகல தூதுவராலயங்கள் மற்றும் உயர்ஸ்தானிகர் அலுவலகங்கள் முன்பாக இளைஞர்கள் நீண்ட வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். எந்த நாட்டுக்காவது செல்ல வேண்டும் என்பதே இளைஞர்களின் பிரதான எதிர்பார்ப்பாக உள்ளது. தமிழர்கள் மட்டுமல்ல, சிங்களவர்களும் முஸ்லிம்களும் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். குறிப்பாக, படித்த சமூகத்தினர் விரைவாக நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.

யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டோம், ஆசியாவின் ஆச்சரியம் என்று குறிப்பிட்டுக் கொண்டுவிட்டோம் என மார்தட்டிக்கொள்ளும் அரசாங்கம் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணவில்லை. மாறாக, இந்து ஆலயங்களை அழித்து அங்கு விகாரைகளை கட்டுவதற்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான மனநிலையில் எவ்வாறு முன்னேற முடியும்?

நாட்டின் தொழிற்துறை முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் பெரும்பாலான ஆடை தொழிற்சாலைகள் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டுள்ளன. பொருளாதார மீட்சி என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால், நாட்டின் பொருளாதார நிபுணர்கள் கூட நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.

வங்குரோத்து நிலைக்கு மத்தியிலும் இனவாத செயற்பாடுகள் முடிவுக்கு கொண்டுவரப்படவில்லை. கௌதம சித்தார்த்தனின் போதனைகளை பறைசாற்ற வேண்டிய பௌத்த பிக்குகள் இனவாதத்தை பறைசாற்றி ஆவேசமாக செயற்படுகிறார்கள். இனவாதத்தை முன்னிலைப்படுத்திக்கொண்டு செயற்பட்டால் எவர் ஆதரவு வழங்குவார்?

இந்த நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு தமிழர்களின் பங்களிப்பு இன்றியமையாதது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தமிழர்களின் நிலைப்பாட்டுக்கு மதிப்பளித்து நீதியான தீர்வை வழங்கினால் சர்வதேசத்தில் சாதிக்கும் தமிழர்கள் பொருளாதார முன்னேற்றத்துக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்றார்.

“சனல் 4 வெளியிட்ட ஆவணத்தை பயன்படுத்தி ராஜபக்சக்களையும், நாட்டின் இராணுவத்தையும் பழிவாங்க தமிழ்தேசிய கூட்டமைப்பு முயற்சி.”- ஜயந்த சமரவீர குற்றச்சாட்டு !

“இலங்கை விவகாரத்தை சர்வதேச மட்டத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்பதே  தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் பிரதான இலக்காகும். இதனை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சனல் 4 வெளியிட்டுள்ள ஆவணப்படம் ஊடாக அடைந்துக் கொள்ள  கூட்டமைப்பினர் முயற்சிக்கிறார்கள் இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.” என தேசிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்தார்.

எதுல்கோட்டை பகுதியில் உள்ள சுதந்திர தேசிய முன்னணியின் காரியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் ஊடக செயலாளராக பணி புரிந்த அன்ஷிப் அசாத் மௌலானா முன்னாள் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த டி சில்வா ஆகியோர் புகழிட கோரிக்கைக்காக நாட்டை சர்வதேச மட்டத்தில் நாட்டை காட்டிக் கொடுக்கிறார்கள்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் சனல் 4 வெளியிட்டுள்ள ஆவணப்படத்தை கொண்டு ஒரு தரப்பினர் ராஜபக்ஷர்களை பழிவாங்க முயற்சிக்கிறார்கள்.

ராஜபக்ஷர்களின் பலவீனமான அரச நிர்வாகம்,ஊழல் மோசடி என்பனவற்றால் இந்த நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் எமக்கும் ராஜபக்ஷர்கள் தொடர்பில் கடும் விமர்சனங்கள் காணப்படுகிறது.

ராஜபக்ஷர்களை பழிவாங்குவதாக குறிப்பிட்டுக் கொண்டு நாட்டின் புலனாய்வு பிரிவு மற்றும் இராணுவத்தை சர்வதேச மட்டத்தில் நெருக்கடிக்குள்ளாக்க ஒருதரப்பினர் முயற்சிக்கிறார்கள்.

புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் வழங்கிய நிதிக்கு அமைவாகவே சனல் 4 ஆரம்ப காலத்தில் இருந்து இலங்கைக்கு எதிராக செயற்படுகிறது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் காணொளி வெளியாகியுள்ளது.

சனல் 4 காணொளி வெளியிட்டவுடன் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன.தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் இதனையே வலியுறுத்தியுள்ளார்.

ஆரம்பமான மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின் போது பதில் உயர்ஸ்தானிகர் நாடா அல் நஷீப் ‘உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் குறித்து சர்வதேச பங்களிப்பு விசாரணை அவசியம்’ என்பதை வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை விவகாரத்தை சர்வதேச மட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் பிரதான இலக்காகும்.

அதை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சனல் 4 வெளியிட்டுள்ள ஆவணப்படம் ஊடாக அடைந்துக் கொள்ள  கூட்டமைப்பினர் முயற்சிக்கிறார்கள் இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றார்.

“புலிகளுக்காக செயற்படும் கூட்டமைப்பினர் சொல்வதை கவனத்திற்கொள்ள தேவையில்லை.” – நாடாளுமன்றில் சரத் வீரசேகர !

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் நோக்கத்திற்கேற்பவே செயற்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கூறும் விடயங்களை கவனத்திற்கொள்ள தேவையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(02.07.2023) இடம்பெற்ற தேசிய கடன் மறுசீரமைப்பு செயற்திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தமிழ்தேசிய கூட்டமைப்பு அனைத்து சந்தர்ப்பங்களிலும், எந்த தீர்மானம் எடுக்கப்பட்டாலும் அதற்கு எதிர்ப்பினையே வெளியிடும். கூட்டமைப்பு என்பது ஒரு தேசத்துரோக அமைப்பாகும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் அம்பாகும். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் இலக்கு நாட்டை பிளவடையச் செய்வதாகும். கூட்டமைப்பின் எம்.பி.க்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் முன்னிலையிலேயே பதவிப்பிரமாணம் செய்தனர்.

எனவே அவர்கள் கூறும் விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டிய தேவை கிடையாது என சரத் வீரசேகர தெரிவித்தார்.

“யாழ் மாநகரசபையை பொறுத்தவரை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கள் கோஸ்டி மோதலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றன.” – ஈ.பி.டி.பி குற்றச்சாட்டு !

“யாழ் மாநகரசபையை பொறுத்தவரை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கள் கோஸ்டி மோதலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றன.” என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட ஊடகப் பேச்சாளர் ஐயாத்துரை ஶ்ரீங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்

யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் பேதே அவர் இதனை  தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ் மாநகர சபையின் முதல்வர் தெரிவு இழுபறி நிலைக்கு பலரும் பலதரப்பட்ட கருத்துகள் கூறிவருகின்றனர். ஆனால் அதனை முன்னெடுக்கும் யாழ் மாநகரசபையில் அதிக ஆசனங்களை கொண்டள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு தான் மக்களின் மீது அக்கறை கொண்டு முயற்சிகளை மேற்கொண்டிருக்க வேண்டும்.

ஆனால் அவர்களுக்குள் இருந்த உட்பூசல்களால் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற போர்வைக்குள் தமிழரசுக் கட்சியின் பிடிக்குள் இருந்த கட்சிகள் இன்று தனித்தனியாக சென்றுள்ள நிலையில் அவர்களுக்குள் ஒருமித்த தெரிவு இருந்திருக்கவில்லை.

மாநகரின் மீது அவர்களுக்கு அக்கறை இருந்திருந்தால் எமது கட்சியுடன் அதிகார மட்டத்திலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனோ அல்லது அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவோ அக்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் சி.வி.கே சிவஞானமோ பேசியிருக்க வேண்டும்.

ஆனால் எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் பிரத்தியோக ஆலோசகருடன் தமது தெரிவான ஒருவரது பெயரை கூறி ஆதரிக்குமாறு அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனே பேசியிருந்தார்.

எமது கட்சி ஏற்கனவே தொடர்ந்து கூறிவருது போல மக்களின் நலன்கருதியதாக உள்ளூராட்சி மன்றங்களை யார் ஆட்சி செய்ய முன்வருகின்றார்களோ அவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தை கொண்டுசெல்ல ஆதரவு கொடுத்துவந்திருந்தோம்.

ஆனால் யாழ் மாநகரசபையை பொறுத்தவரை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கள் தொடர்ச்சியாக இருந்துவரும் கோஸ்டி பூசல்களே இன்றைய சூழ்நிலைக்கு காரணமாக அமைந்துள்ளது.

அதேநேரம் ஜனநாயகத்தில் மக்களுக்கு இருக்கின்ற கொஞ்ச நம்பிக்கையும் இவர்களது இவ்வாறான அரசியல் நாகரிகமற்ற கூட்டுச் சுயநலன்களால் கேள்விக்குறியாக வாய்ப்புள்ளது  முறைப்படி எமது தலைமையுடன் பேசியிருந்தால் யாழ் மாநகரின் முதல்வர் தெரிவில் இவ்வாறான இழுபறிநிலை ஏற்பட்டிருக்காது என்றார்.

நாம் தந்திரமாவே பிரிந்து நிற்கிறோம் – மாவை சேனாதிராஜா

இனப்பிரச்சினை, நில விடுவிப்பு உள்ளிட்ட விவகாரங்களில் அழுத்தங்களை பிரயோகிக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள அனைவரும் ஒன்றாகவே செயற்படுவோம் என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

கட்சியின் அரசியலமைப்பின்படி தமிழரசு கட்சியின் கீழ் தான், கூட்டமைபின் பிரதிநிதிகள் இருக்கின்றார்கள் என குறிப்பிட்டுள்ள மாவை சேனாதிராஜா, தேர்தலின் பின்னர் அனைவரும் ஒன்றிணைவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தேர்தலில் கூட்டமைப்பாக இல்லாமல் தனித்தனியாக போட்டியிட்டு சிறு வாக்குகளால் விகிதாசாரத்தில் வந்து ஆட்சி அமைப்பதை தவிர்க்கும் வகையிலேயே தந்திரமாக போட்டியிடுகின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற வேட்பாளர் அறிமுக நிகழ்வில் உரையாற்றிய மாவை சேனாதிராஜா, தேர்தலிற்காக நிதி ஒதுக்கப்பட்ட போதும் அதனை விடுவிக்காமல் இருப்பது குறித்து கடும் கரிசனையும் வெளியிட்டுள்ளார்.

“தேர்தலை ஒன்றாக எதிர்கொள்வதை ஏனைய பங்காளி கட்சிகளே விரும்பவில்லை.” – எம்.ஏ.சுமந்திரன்

உள்ளுராட்சித் தேர்தலில் தமிழ் கட்சிகளுடன் இணைந்து கூட்டாக தேர்தலில் களமிறங்க தமிழரசுக் கட்சி தயாராகவே இருந்தது என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பேசிய அவர், இருப்பினும் அதனை ஏனைய தமிழ்க் கட்சிகள் ஏற்றுக் கொள்ளவில்லை என குறிப்பிட்டார்.

மேலும் முடிவு எடுப்பதற்கு முன்னர் எட்டப்பட்ட ஒப்பந்தங்களை மற்ற கட்சிகள் மீறியதாகவும் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சாட்டினார்.

எவ்வாறாயினும் வடக்கிலும் கிழக்கிலும் தமிழரசு கட்சி பெருவாரியான வெற்றியை பெறும் என்றும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் இலங்கை தமிழரசு கட்சி நிர்வாகத்தை அமைத்திட அனைவரும் பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் எம்.ஏ.சுமந்திரன் கேட்டுக்கொண்டார்.

இதே நேரம் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி உள்ளூராட்சி தேர்தலை தனித்து எதிர்கொள்கின்ற பங்காளி கட்சிகள் எம்.ஏ சுமந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்து பிளவு பட செய்தார் என குற்றம் சாட்டி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

“நான் ஒரு போதும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காட்டிக் கொடுக்கவில்லை.” – எம்.ஏ. சுமந்திரன்

இருபது வருடமாக கூட இருந்தவர்களை நல்வழிப்படுத்த எடுத்த முயற்சியில் நாம் தோல்வி அடைந்து விட்டோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

 

சாவகச்சேரியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

2001 ஆம் ஆண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட போது அதற்கு போட்டியாக அரசுக்கு ஆதரவாக இன்னொரு கட்சி உருவாக்கப்பட்டது. அது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக பதிவும் செய்யப்பட்டது. அரசு கூலியாக இருந்தவர்கள் தான் அந்த கட்சியை பதிவு செய்தவர்கள். தங்களிடத்தில் எது இல்லையோ அதை தங்களுடைய பெயரிலேயே சேர்த்துக் கொண்டார்கள். ஜனநாயகமாக அவர்கள் செய்யப்படவில்லை, அந்த நேரத்திலேயே வீதி வீதியாக சந்தி சந்தியாக நின்று காட்டி கொடுத்துக் கொண்டிருந்தவர்கள்.

அரசு கூலிப்படையாக செயல்பட்டவர்கள் பதிவு செய்த அரசியல் கட்சிக்கு பேர் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி. அவ்வாறானனவர்கள் இன்றைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பை தாங்கள் பாதுகாக்கின்றோம் என்று நீலிக்கண்ணீர் வடிக்கின்றார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு போட்டியாக அரசு கைக்கூலியாக கட்சியை வைத்திருக்கின்ற அவர்கள் இன்றைக்கு அந்த கட்சியிலே போட்டியிட்டுக் கொண்டு அதற்குப் பெயர் கூட்டமைப்பு என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள்.

ஜனநாயகம் என்பது மறைந்து விட்டது என்பதை இப்போது ஏற்றுக் கொண்டவர்களாக அதை இல்லாத ஆக்கிவிட்டு சிறிய டீ ஒன்றை முன்னுக்கு வைத்துக் கொண்டு குறுகிப் போன ஜனநாயகத்தை வைத்துக்கொண்டு கட்சி நடத்துவதாக இன்றைக்கு தம்பட்டம் அடிக்கின்றார்கள்.

மக்களுக்கு இந்த தேர்தலிலே யார் எவர் என்பது நன்றாக தெரிந்திருக்கும். 2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மன்னார் மாவட்டத்திலே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சூசை தாசன் போட்டியிட்டு இருந்தார். சூசை தாசன் என்பவர் 77 ஆம் ஆண்டு போட்டியிட்டு பெரு வெற்றியீட்டியவர்.

அப்படிப்பட்ட ஒருவர் 2010 ஆம் ஆண்டு மன்னார் மாவட்டத்தில் தோல்வி அடைந்திருந்தார்.அந்த தோல்விக்கான காரணத்தை 2012 ஆம் ஆண்டு இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய மாநாடு மட்டக்களப்பில் நடைபெற்ற போது அவரே சொல்லியிருந்தார்.

அவர் பேசுகின்ற போது சொன்னார் நான் தோற்றமைக்கு காரணம் கேட்கின்றார்கள். நான் தோற்றதற்கு காரணம் நான் தூள் கடத்துவதில்லை, நான் ஆள் கடத்துவதில்லை, நான் கொலை செய்வதில்லை அதனால் தான் நான் தோற்கடிக்கப்பட்டிருக்கின்றேன் என்று சொன்னார்.

ஆனால் இன்றைக்கு தமிழரசு கட்சி மக்கள் முன்பாக ஒரு தூய்மையானதாக வந்து நிற்கின்றது. தூள் கடத்துபவர்கள் எங்கள் மத்தியில் இல்லை நீங்கள் தாராளமாக தமிழரசு கட்சிக்கு வாக்களிக்கலாம்.

இந்த தேர்தலில் எங்களுடைய கட்சி போட்டியாளர்களுக்கு நான் சொல்லுகின்ற விண்ணப்பம் எந்தவித போதை வஸ்துக்களையும் மக்களுக்கு விநியோகிக்க வேண்டாம், சாராயம் விநியோகிக்க வேண்டாம் அப்படி செய்கின்ற பலர் இருக்கின்றார்கள் அவர்கள் எல்லாம் இப்போது எங்களுடைய கட்சி இல்லை.

இப்போது வேட்பாளர்களாக இருக்கின்றவர்கள் மக்களுக்கு சாராயம் விநியோகிக்க வேண்டாம் தூய்மையான சாத்வீக வழியிலான ஒரு போராட்டத்தை தமிழரசுக் கட்சி முன்னெடுக்கினறது.

நெடுங்காலமாக இலங்கை தமிழரசு கட்சி சொல்லி வந்த கொள்கையை முன்வைத்து உங்களுடைய பிரதேசத்து மக்களுக்காக நீங்கள் போட்டியிடுங்கள் என்று அனைத்து வேட்பாளர்களிடமும் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

சம்பந்தரையும் என்னையும் குறை சொல்லுவது பலருக்கு கைவந்த கலையாக இருக்கின்றது அதைத்தான் இவர்களும் இப்போது கையில் எடுத்திருக்கின்றார்கள்.

சம்பந்தன் யார் ..?நான் யார்..? என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். நாங்கள் ஒரு காலமும் எங்களுக்காக போராடியவர்களை காட்டிக் கொடுத்தவர்கள் அல்ல, சந்தி சந்தியாக நின்று முகத்தில் சாக்கை போற்றி வைத்துக் கொண்டு தலையாட்டி காட்டி கொடுத்தவர்கள் அல்ல. அவர்களில் ஒரு தலைவருக்கு பழக்க தோஷமாக போய்விட்டது. இப்போது கூட்டத்திலும் தலை ஆடிக்கொண்டே இருக்கின்றது அது தலையாட்டிய பழக்கம்.

1980 ஆம் ஆண்டு இதனைச் சாதித்தோம், 1985இல் இதனைச் சாதித்தோம் 1987இல், 1989இல், 1994இல் 2001இல் 2004இல் இதனைச் தாதித்தோம் என வரலாற்றுப் பட்டியலிடுகின்றார். அதே பட்டியலில் எத்தனையாம் ஆண்டுகளில் யாரைப் போட்டுத் தள்ளினோம், எத்தனையாம் ஆண்டு அரச கூலிப்படையாக சேர்ந்து இயங்கினோம் என்பதனைக் கூற மறந்துவிட்டார்.

எங்கள் இருவருடைய சரித்திரத்தையும் நன்றாக துலாவி பார்க்கலாம் எந்த தருணத்திலையும் யாரையும் நாங்கள் காட்டிக் கொடுத்தோமா? அரசு கூலிப்படையாக செய்யப்பட்டோமா? என்பது தமிழ் மக்களுக்கு நன்றாகவே தெரியும் என தெரிவித்தார்.