தமிழரசுக் கட்சி

தமிழரசுக் கட்சி

தமிழ் தேசியத் தலைமைகளின் சட்டத்தரணிகளின் ஈகோ – அகம்பாவம் தான் தமிழரின் நிலைக்குக் காரணம் !

தமிழ் தேசியத் தலைமைகளின் சட்டத்தரணிகளின் ஈகோ – அகம்பாவம் தான் தமிழரின் நிலைக்குக் காரணம் ! தமிழரசுக் கட்சி ஆதரவாளர் இளைப்பாறிய பேராசிரியர் எஸ் சிவகுமார் மனம் திறந்து உரையாடுகின்றார்.

 

Watch Full Video : https://youtu.be/pOekfSbaCQo?si=MzNS1mhpjIOkFJrJ

ரெலோ முக்கியஸ்தர் விந்தனின் புதிய அரசியல் அவதாரம் !

ரெலோ முக்கியஸ்தர் விந்தனின் புதிய அரசியல் அவதாரம் !

தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோ அமைப்பின் முக்கியஸ்தரும் வடக்கு மாகாண முன்னாள் உறுப்பினருமான விந்தன் கனகரட்னம் தமிழரசுக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார். அவரும் அவரது மகனும் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ. வீ. கே. சிவஞானம் முன்னிலையில் மார்ச் 10 ஆம் திகதி தமிழரசுக் கட்சியில் இணைந்து உறுப்புரிமைகளையும் பெற்றுக் கெண்டுள்ளனர்.

ரெலோக்குள் நிலவிய உட்பூசல்கள் காரணமாகவே விந்தன் வெளியேறி தமிழரசுக் கட்சிக்குள் சரணடைந்துள்ளார் என்று கூறப்படுகிறது.

மார்ச் 23 இல் 2024 இல் வவனியாவில் நடந்த ரொலோவின் பொதுக்குழு கூட்டத்தில் செல்வம் அடைக்கலநாதன் அக்கட்சியின் தலைவராகவும் விந்தன் நிர்வாகச் செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். பின்னர் ஏற்பட்ட உட்கட்சி முறுகல்களை தொடர்ந்து விந்தன் கனகரட்ணம் பாராளுமன்றத் தேர்தலின் போது ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருந்தார். நிதிச் செயலாளர் சுரேன் குருசாமியையும் விமர்சித்து யாழ் ஊடக அமையத்தில் பேட்டியளித்திருந்தார். விந்தன் பாராளுமன்ற தேர்தலில் யாழ்மாவட்டத்தில் போட்டியிட தயாராக இருந்த போதும் அவருடைய பெயர் ரெலோவின் வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

அதேநேரம் ரெலோ கட்சி விந்தன் கனகரட்ணம் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து அவரை கட்சியில் இருந்து விலக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

அனுர அலை அடித்துக் கொண்டே இருக்கிறது – எச்சரிக்கிறார் சுமந்திரன் 

அனுர அலை அடித்துக் கொண்டே இருக்கிறது – எச்சரிக்கிறார் சுமந்திரன்

 

அனுர அலை இன்னும் குறையவில்லை. அதனை குறைத்து மதிப்பிட முடியாது. அத்துடன் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதில்லை என தமிழரசுக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளரும், பதில் பொதுச் செயலாளருமான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

அங்கு எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவிக்கையில், வடக்கு – கிழக்கு மாவட்டங்களின் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் இலங்கை தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடும். இம்முறை நாடு அனுர அலையில் உள்ளது. பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தனிப் பெரும்பான்மையை பெற்றுள்ளது. திருகோணமலையில், மட்டக்களப்பில் நாம் பெரும்பான்மை பெற முடியாது. வடக்கில் நாம் தான் பெரும்பான்மை. எனினும் மக்கள அநுர அலையில் சிக்கி ஜனாதிபதி தேர்தலைக் காட்டிலும் பாராளுன்ற தேர்தலில் அதிக வாக்குளை வழங்கியிருந்தார்கள். ஜனாதிபதித் தேர்தலில் நாம் ஆதரவு வழங்கிய ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் பிரேமதாச அவர்களே வடக்கு – கிழக்கில் பெரும்பான்மை பெற்றார்.

ஆனால் பாராளுமன்ற தேர்தலில் இந்த நிலை மாறியது. தற்போது அநுர அலை குறைந்து விட்டது என்கிறார்கள் சிலர். அப்படி கூற முடியாது. அநுர அலை தற்போதும் இருக்கிறது. அது குறைவடைய சில காலம் செல்லலாம். நாம் கவனமாக தேர்தலை கவனமாக அணுக வேண்டும் . நாமும் அநுர அலையோடு அள்ளுண்டு போக கூடாது. “ நாடு அநுரவோடு இருக்கட்டும். நமது ஊர் நம்மோடு. நாம் வீட்டோடு என செயற்பட வேண்டும்.” என்றார்.

தமிழரசுக்கட்சியில் இருந்து சிலர் நீக்கம் செய்யப்படவுள்ளனர்- எம்.ஏ.சுமந்திரன்

இலங்கை தமிழரசுக் கட்சியில் இருந்து சிலர் நீக்கப்படுவதுடன், சிலர் இடைநிறுத்தப்படுவர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்  தெரிவித்துள்ளார்.

இன்று (14) இடம்பெற்ற தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“கட்சிக்கு எதிராக போட்டியிட்டவர்களை உடனடியாக கட்சியிலிருந்து நீக்குவதற்கு பொதுச் செயலாளருக்கு அதிகாரம் இருக்கிறது என மத்திய குழு ஏற்றுக் கொண்டிருக்கின்றது. அதனை பொதுச்செயலாளர் எதிர்வரும் நாட்களில் செய்வார். வேறு சிலர் கட்சிக்கும், கட்சியினுடைய வேட்பாளருக்கு எதிராகவும் செயற்பட்டமை தொடர்பிலும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும். அந்த ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் வரை அவர்கள் கட்சியின் செயற்பாடுகளில் இருந்து இடை நிறுத்தப்படுவார்கள்.

கடந்த காலத்தில் அரசியல் உருவாக்கம் சம்பந்தமான விடயங்களில் தமிழரசு கட்சி தீர்க்கமான நிலைப்பாடுகளை எடுத்திருக்கின்றது. சில வரைவுகள் செய்யப்பட்டு இருக்கின்றன. சில வரைவுகளோடு நாங்கள் இணங்கி இருக்கின்றோம்.ஆகவே அது எங்களுடைய நிலைப்பாடு.

அதனைத் தொடர்ந்து கோட்டாபய ராஜபக்சவினுடைய காலத்தில் அவர் நியமித்த குழுவுக்கு முன்பாகவும் நாங்கள் சென்று எங்களுடைய நிலைப்பாட்டை எழுத்து மூலமாக கொடுத்திருக்கிறோம். ஆகவே அது எங்கள் கட்சியினுடைய நிலைப்பாடு.

ஆகவே அவ்வாறான நிலைப்பாட்டோடு ஒத்து வருகின்றவர்கள் இருந்தால் எந்த ஆட்சேபனையும் கிடையாது. ஆனால் வேறு சிலர் எங்களுடைய கட்சிக்கு போட்டியாக வேண்டுமென்றே வெவ்வேறு வரைவுகளை செய்து சில குழப்பங்களை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

அவ்வாறான குழப்பங்களை அந்த காலப்பகுதியில் செய்தவர்களோடு, அவர்களுடைய வரைவுக்கு இணங்கி செல்ல வேண்டிய அவசியம் நமக்கு கிடையாது.

தமிழரசு கட்சி தமிழர்களுடைய பிரதான கட்சி. வடக்கு கிழக்கில் சகல மாவட்டங்களில் இருந்தும் பிரதிநிதிகளை தெரிவு செய்திருக்கின்ற ஒரே ஒரு கட்சி இலங்கை தமிழரசு கட்சி.

ஆகவே மக்கள் கொடுத்த அந்த ஆணையை மீறி செயற்பட மாட்டோம். மற்றவர்கள் எங்களோடு எங்களுடைய நிலைப்பாட்டோடு இணைந்து செயல்படுவதற்கு வருவார்களாக இருந்தால் எமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியலை சுமந்திரனுக்கு வழங்கக் கோரிக்கை!

நொவெம்பர் 16, 2024

மருத்துவர் ப.சத்தியலிங்கம்
பதில் பொதுச் செயலாளர்
இலங்கைத் தமிழரசுக் கட்சி
வவுனியா.

தேசியப் பட்டியல் இருக்கையை சனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனுக்கு வழங்குமாறு வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்!

வணக்கம் !

நடந்து முடிந்த தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு எதிராக (இதஅக), அச்சு மற்றும் இலத்திரினியல் ஊடகங்களும் போலித் தேசியம் பேசிய கட்சிகளும் மிகக் கடுமையான பரப்புரையை மேற்கொண்டன. குறிப்பாக எம்.ஏ. சுமந்தின் அவர்களுக்கு எதிராக கீழ்த்தமான பரப்புரையை மேற்கொண்டன. “தமிழரசுக் கட்சிக்குப் போட்டாலும் சுமந்திரனுக்கு வாக்களிக்க வேண்டாம்” என்றும் பரப்புரை செய்யப்பட்டது.
இப்படியான பரப்புரையையும் தாண்டி இதஅக 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இருந்தும் இதஅக யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் தனது பிரநித்துவத்தை இழந்துள்ளது. இதனால் இதஅகட்சியின் வெற்றியைக் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் இதஅக க்கு கிடைத்த மொத்த வாக்குகள் 63,327 ஆகும். மேலதிகமாக 3,000 வாக்குகள் கிடைத்திருந்தால் இன்னுமொரு இடம் கிடைத்திருக்கும். நியமனம் மறுக்கப்பட்டதும் சுயேட்சையாகக் களம் இறங்கிய இருவர் இதற்கு முழுக் காரணம் ஆகும்.
இதஅக இன் அடிப்படை வேட்கையான தேசியம், தாயகம், தன்னாட்சியுரிமை என்ற கோட்பாடுகளை மட்டக்களப்பு மாவட்டத் தமிழ்மக்கள் மட்டுமே எண்பித் துள்ளார்கள். மொத்தம் 96,975 (33.78%) வாக்குகளைப் பெற்று 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

நல்லாட்சிக் காலத்தில் (2015 – 2019) வரைவு வடிவில் ஒரு அரசியல் யாப்பு வரையப்பட்டது. அதனை அன்றைய பிரதமர் இரணில் விக்கிரமசிங்க வேறு சில ஆவணங்களுடன் அரசியலமைப்புச் சபையில் சனவரி 11, 2019 அன்று சமர்ப்பித்தார். இந்த ஆவணம் ஒரு விவாதப் பத்திரம் என அழைக்கப்பட்டாலும் – அது ஒரு புதிய அரசியலமைப்பின் பூர்வாங்க வரைவு என்று அழைக்கப்பட்டாலும்- அது கிட்டத்தட்ட விரிவான அரசியலமைப்புத் திட்டமாகும்.

இந்தத் திட்டம் தற்போதைய 1978 அரசியலமைப்பின் கட்டமைப்பு மற்றும் தன்மையில் இருந்து விலகிக் காணப்பட்டது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி முறை அகற்றப்படுவது அதன் மையப்புள்ளியாகும். இந்த அரசியலமைப்புத் திட்டத்தை உருவாக்குவதில் இருவர் முக்கிய பங்கு வகித்திருந்தனர். ஒருவர் கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன மற்றவர் சனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஆவார்கள்.

தேசிய மக்கள் சக்தி தனது தேர்தல் அறிக்கையில் “புதிய அரசியலமைப்பொன்றுக்கான வரைவு தயாரிக்கப்படுவதோடுஇ அது பொதுமக்களிடம் சமர்ப்பிக்கப்பட்டு உரையாடலுக்கு இலக்காக்கப்பட்ட பின்னர் அவசியமான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு, பொது வாக்கெடுப்புக்கு மக்கள் முன் வைக்கப்படும்” எனக் கூறியுள்ளது. சனாதிபதி அனுர குமார திசநாயக்க தேர்தல் பரப்புரைக் காலத்தில் நல்லாட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட அரசியல்யாப்பினை முன்னெடுக்கப் போவதாகச் சொல்லியுள்ளார்.

எனவே சட்டப் புலமை வாய்ந்த, அரசியலமைப்பு உருவாக்கத்தில் பட்டறிவும் தேர்ச்சியும் பெற்ற ஒருவர் நாடாளுமன்றத்துக்குத் தேவைப்படுகிறார். ஏற்கனவே நல்லாட்சிக் காலத்தில் வரையப்பட்ட அரசியல்யாப்பு வரைவை எழுதியதில் பெரும் பங்காற்றிய சனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அவர்களே இதற்குப் பொருத்தமானவர் என்பதில் எவருக்கும் எந்த அய்யமும் இருக்காது.

இதஅக க்கு கிடைத்த தேசியப் பட்டியல் இருக்கை ஒன்றின் மூலம் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பைத் தவறவிட்ட முன்னாள் நா.உறுப்பினரும் சனாதிபதி சட்டத்தரணியுமான சுமந்திரன்இ நாடாளுமன்றம் செல்லமாட்டேன் எனக் கூறியுள்ளார். இருந்தும் கட்சியின் மத்திய குழுவே தேசியப் பட்டியல் இருக்கைகளைத் தீர்மானிக்கும் என்றும் அதற்குத் தான் கட்டுப்படுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

எனவே இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு கிடைத்துள்ள தேசியப் பட்டியல் இருக்கையை சுமந்திரன் அவர்களுக்கு வழங்குமாறு வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

மிக்க அன்புடன்

வே. தங்கவேலு
தலைவர்

தம்பிராசா வசந்தகுமார்
பொதுச் செயலாளர்

 

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி நிதியத்தை உருவாக்க கூடிய ஒரே அணி தமிழரசுக்கட்சி தான் – எம்.ஏ.சுமந்திரன்

ஜனாதிபதி அநுர தலைமையிலான அரசாங்கம் ஒருமாதகாலத்துக்குள்ளேயே சறுக்குவதற்கு ஆரம்பித்துள்ளது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சின் யாழ்.தேர்தல் மாவட்ட வேட்பாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் பாராளுமன்ற தேர்தலில் உங்கள் கட்சிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு என்ன? எனும் தொனிப்பொருளில் வி.எஸ்.சிவகரன் தலைமையில் மக்கள் மன்றம் நேற்றைய தினம் (9) யாழ். கலைத்தூது மண்டபத்தில் நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கைத் தமிழரசுக் கட்சி பழம்பெரும் கட்சியாகும். தற்போது மாற்றம் தேவை என்று கூறுபவர்கள் பழம்பெரும் கட்சியை விட்டுவிட்டு புதிய கட்சிக்கு வாக்களித்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கின்றார்கள். அது உண்மையான மாற்றம் அல்ல.

அடையாளம் மாற்றாத அரசியல் மாற்றமே உண்மையான மாற்றமாகும். நாட்டில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு தேசம் என்கிற அடையாளத்தினை வழங்கியது எமது கட்சியாகும். அதன் காரணத்தினால் தான் எமது கட்சியின் ஸ்தாபகரை தந்தை செல்வா என்று அழைக்கின்றார்கள்.

தமிழ் மக்களின் அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்படுவதற்கு சமஷ்டி அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்பதை ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்தி வருகின்றோம். அவ்வாறான நிலையில் ஏனைய கட்சிகள் தற்போது தான் சமஷ்டி பற்றி பேசுகின்றார்கள். அவ்வாறான நிலையில் நீண்டகாலமாக சமஷ்டியை வலியுறுத்தும் எமக்கு வாக்களிப்பதில் என்ன தவறுள்ளது.

அதேநேரம், தமிழரசுக் கட்சி பொருத்தமான மாற்றங்களை செய்துகொண்டுதான் வருகிறது. உதாரணமாக, யாழ்.தேர்தல் மாவட்டத்தினை எடுத்துக்கொண்டால் ஒன்பது வேட்பாளர்களில் இருவரைத் தவிர ஏனைய எழுவரும் பாராளுமன்ற தேர்தல் களத்துக்கு புதியவர்கள்.

அதேபோன்று அவர்களில் இரண்டு பெண் வேட்பாளர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வழக்கமாக, பெண் வேட்பாளர்கள் ஆணை மையப்படுத்திய வகையில் தான் தெரிவு செய்வார்கள். ஆனால் இம்முறை உண்மையான செயற்பாட்டாளர்களை நாம் அடையாளம் கண்டு நிறுத்தியிருக்கின்றோம்.

அதேவேளை, நாட்டில் மாற்றத்தினை ஏற்படுத்துவதாகக் கூறிக்கொண்டு ஆட்சிப்பீடம் ஏறியுள்ள ஜனாதிபதி பதவியேற்று ஒருமாதத்துக்குள்ளேயே தனது செயற்பாடுகளில் இருந்து சறுக்க ஆரம்பித்துவிட்டார். மதுபான சாலைகளுக்கான சிபார்சுக்கடிதங்களை வழங்கிய அரசியல்வாதிகள், அனுமதிப்பத்திரங்களைப் பெற்றவர்களின் பட்டியலை அவர் தற்போது வரையில் வெளிப்படுத்தவில்லை.

ஜனாதிபதி அநுர, புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகளை ஏற்கனவே எமது பங்கேற்புடன் உருவாக்கப்பட்ட இடைக்கால அறிக்கையினை அடிப்படையாக வைத்து ஆரம்பிக்கவுள்ளதாக எழுத்துமூலமாகவே தனது விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கியுள்ளார்.

இடைக்கால அறிக்கையை நாம் தயாரித்து அதனை வெளியிடுவதற்கு தயாரானபோது, அப்போது அநுரகுமார எம்மிடத்தில் வருகை தந்து கூறினார்… இந்திய – இலங்கை ஒப்பந்தத்துக்கு எதிராகவும், மாகாண சபை முறைமைக்கு எதிராகவும் ஆயுதம் ஏந்தியவர்கள் நாங்கள். ஆகவே இடைக்கால அறிக்கையின் உள்ளடக்கம் சம்பந்தமாக நாம் கட்சிக்குள் ஆராய வேண்டும் என்று எனக்கும் சம்பந்தனுக்கும் கூறினார்.

அதனையடுத்து, அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவிடத்தில் அவரை நாங்கள் அழைத்துச் சென்று அவரது கூற்றில் நியாயம் உள்ளது. கால அவகாசத்தினை வழங்குவோம் என்று கூறினோம். ஒருமாத கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் இடைக்கால அறிக்கையை ஏற்றுக்கொள்வதாக அநுர குறிப்பிட்டார்.

அரசாங்கம் சறுக்க ஆரம்பித்துள்ளது. அதனை கையாள வேண்டியுள்ளது. இடைக்கால அறிக்கையை முன்னோக்கி நகர்த்த வேண்டியுள்ளது. வடக்கு, கிழக்கு அபிவிருத்தி நிதியத்தை உருவாக்கும் செயற்பாட்டை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது. இதற்காக பலமான அணியொன்றை வடக்கு, கிழக்கில் இருந்து தமிழ் மக்கள் அனுப்ப வேண்டும். அந்த அணியானது தமிழரசுக் கட்சியாகவே இருக்க வேண்டும் என்றார்.

 

சமஷ்டியாட்சி முறைமையிலான புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கும் ஜனாதிபதி தமிழ் தரப்புக்கு உத்தரவாதமளித்துள்ளார். – உதயகம்பன்பில காட்டம் !

இலங்கை தமிழரசுக் கட்சி பொதுத்தேர்தலின் பின்னர் தேசிய மக்கள் சக்தியுடன் இணையும். எம். ஏ. சுமந்திரனுக்கு வெளிவிவகாரத்துறை அமைச்சு பதவியை வழங்கவும், சமஷ்டியாட்சி முறைமையிலான புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கும் ஜனாதிபதி தமிழ் தரப்புக்கு உத்தரவாதமளித்துள்ளார். நாட்டுக்கு எதிராக இச்செயற்பாடுகளுக்கு இடமளிக்க முடியுமா? என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் வெள்ளிக்கிழமை (01) இடம்பெற்ற சர்வஜன சக்தியின் தொகுதி அமைப்பாளர்களுடனான கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,
பொதுத்தேர்தலின் பின்னர் இலங்கை தமிழரசுக் கட்சி தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்துடன் ஒன்றிணையும். தமிழ் தரப்புக்களை இணைத்துக் கொண்டு பயணிக்குமாறு மேற்குலக நாடுகள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளதை அவதானிக்க முடிகிறது.

இலங்கை தமிழரசுக் கட்சி அரசாங்கத்துடன் ஒன்றிணைவது அவர்களின் அரசியல் உரிமை. அதனை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள இணக்கப்பாட்டுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் என்னவென்பதை ஆராய வேண்டும்.

ஒற்றையாட்சி முறைமையிலான அரசியலமைப்பை நீக்கி, சமஷ்டியாட்சி முறைமையிலான புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும். 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஏற்றுக் கொண்ட 30 .1 தீர்மானத்தை மீளமுல்படுத்த வேண்டும் என்ற இரண்டு பிரதான நிபந்தனைகளை இலங்கை தமிழரசுக் கட்சி விதித்துள்ளது. இவ்விரு நிபந்தனைகளையும் ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினரான எம்.ஏ. சுமந்திரனுக்கு தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தில் வெளிவிவகாரத்துறை அமைச்சு பதவியை வழங்க இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. சுமந்திரனுக்கு வெளிவிவகார அமைச்சு பதவியை வழங்குவதில் தனிப்பட்ட ரீதியில் எனக்கு எவ்வித எதிர்ப்பும் கிடையாது. ஆனால் அது நாட்டின் ஒற்றையாட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடாது.

2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30.1 தீர்மானத்தை நிராகரித்தது. இந்த தீர்மானத்தில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்க பரிந்துரைக்கப்பட்டிருந்தது. 2020 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் இந்த பிரேரணையில் இருந்து விலகியது.

30.1 தீர்மானத்தை மீண்டும் அமுல்படுத்த இலங்கை தமிழரசுக் கட்சி நிபந்தனை விதித்துள்ள நிலையில் இராணுவத்தினருக்கும், பொலிஸ் அதிகாரிகளுக்கும் எதிராக சாட்சியம் திரட்டுவதற்காகவே குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தின் குற்றவாளிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ரவி செனவிரத்ன மற்றும் சானி அபேசேகர ஆகியோரை பாதுகாப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. நாட்டுக்கு எதிரான இச்செயற்பாடுகளுக்கு எவ்வாறு இடமளிப்பது என்றார்.

தமிழரசுக் கட்சியை புலியரசுக் கட்சியாக்கும், ‘றோ – புலிகளின்’ நாடகம் அரங்கேற முன்னரே அம்பலம்!

எழுபது ஆண்டு வரலாற்றைக் கொண்ட தமிழரசுக் கட்சி, நடாத்திய ஒரேயொரு அரையும் குறையுமான ஜனநாயகத் தேர்தலோடு கட்சியின் அதிகாரத்தை புலத்தில் வாழும் புலிகள் கைப்பற்றமுனைந்துள்ளனர். தமிழரசுக் கட்சித் தேர்தலுக்கு முன்னரேயே கட்சி பிளவுபடும் என்பதையும் எம் ஏ சுமந்திரன் தேர்தலில் தோற்றால் வெளியேற்றப்படுவார் என்பதையும் தேசம்நெற் எதிர்வு கூறியிருந்தது. இதனை உறுதிப்படுத்தும் பல விடயங்கள் தேர்தல் நடந்தது முதல் தற்போது வரை நடந்தேறிவருகின்றது. எம் ஏ சுமந்திரனின் பின்னணியில் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களின் உறுப்புரிமைகள் பற்றி யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலையில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் மட்டும் இதனை உறுதிப்படுத்தவில்லை. புலத்து புலிகள் குறிப்பாக ‘றோ’ புலிகள் சற்று மிடுக்காகவே உறும ஆரம்பித்துள்ளன.

கனடா, லண்டன், சுவிஸ் நாடுகளில் புலத்துப் புலிகள் தமிழரசுக் கட்சியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான அதிரடி முயற்சிகளில் இறங்கியுள்ளனர். மிக விரைவில் ஏனைய நாடுகளிலும் தமிழரசுக் கட்சியின் கிளைகள் ஆரம்பிக்க இவர்கள் திட்டமிட்டுள்ளனர். தாயகத்தின் வடக்கு – கிழக்கிலும் இதற்கான வேலைத்திட்டங்கள் முடக்கிவிடப்படவுள்ளது என தேசம்நெற் க்குத் தெரியவருகின்றது. இதற்கு மணி கட்டுவது போல் மார்ச் 10 ஆம் திகதி ஒன்றுகூடல் ஒன்றுக்கு தமிழரசுக் கட்சியின் பெயரில் ‘ரோ புலிகள்’ அழைப்பு விடுத்துள்ளனர்.

யார் இந்த ‘றோ’ புலிகள்:

முன்னாள் ரிஆர்ஓ பொறுப்பாளர் ரெஜி, அதனைத் தொடர்ந்து இறுதி யுத்தத்தில் இருந்து தப்பித்து வந்ததாகவும், இல்லை விநாயகதத்pன் குடும்பம் இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைந்து பின்னர் அவர்கள் புலனாய்வுக்காக விடுவிக்கப்பட்டதாக சொல்லப்படும் விநாயகம் – சங்கீதன் அணியினரும் இணைந்து பிரித்தானியாவில் வரலாற்று மையம் என்ற ஒரு அமைப்பை 2009 இறுதி யுத்தத்திற்குப் பின்னர் உருவாக்கி இருந்தனர். இவர்கள் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் பிரித்தானிய தமிழ் போறம் என்ற பிரிஎப் க்கு எதிராக போட்டியாக மாவீரர் தினத்தை நடத்தியும் இருந்தனர். வெளிநாடுகளில் புலிகளை ஒருங்கிணைத்து செயற்பட ஒரு திட்டத்தை இவர்கள் தயாரிக்க முயன்ற போதும் அது தொலைபேசி உரையாடல்கள் ஸ்கைப் மீற்றிங்குகளுடன் முடிந்து போய்விட்டது.

அதற்குப் பின் அண்மைக்காலமாக வரலாற்று மையத்தை பின்புலமாகக் கொண்ட ‘நிலா – திவாகரன்’ அணி இந்திய உளவுப் பிரிவான ‘றோ’ தமிழீழம் பெற்றுத் தரும் என்று டெல்லியிலும் தமிழகத்திலும் மாநாடுகளை நடத்தி அதுபற்றிய சந்திப்பு ஒன்றை இவ்வாண்டு ஜனவரி 28இல் நோத் ஹரோவில் ஏற்பாடு செய்திருந்தனர். அச்சந்திப்பிலும் அவர்களுடைய ‘அரச அறிவியல்’ தெளிவின்படி ‘றோ’ தமிழீழம் பெற்றுத்தரும் என்று அடித்துச் சொன்னார்கள். மோடியின் கோசலத்தின் தாக்கம் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை அவர்களிலும், அவர்கள் வெளியிட்ட முஸ்லீம் எதிர்ப்பு மாநாட்டு அறிக்கையிலும் தெளிவாக பார்க்கக் கூடியதாக இருந்தது.

மீண்டும் லண்டனில் மார்ச் 10இல் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழரசுக் கட்சியின் ஒன்றுகூடல் அழைப்பிதழை ‘நிலா – திவாகரன்’ அணியினரே ஏற்பாடு செய்துள்ளனர். இவர்கள் வெளியிட்ட முதலாவது ஒன்றுகூடல் அழைப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தராகச் செயற்பட்ட போஸின் தொடர்பிலக்கமும் இருந்தது.

அது தொடர்பில் தேசம்நெற் நேற்று பெப்ரவரி 25இல் போஸ் உடன் தொடர்பு கொண்டு, “இலங்கையில் தமிழரசுக் கட்சி மீது வழக்குகள் தொடரப்பட்டு, தெரிவு செய்யப்பட்ட தலைவர் சிறீதரனின் தலைமைப் பதவியே கேள்விக்குள்ளாகி உள்ள நிலையில் எவ்வாறு தமிழரசுக் கட்சி லண்டனில் ஒரு ஒன்றுகூடலை ஏற்பாடு செய்ய முடியும் ?” என்று கேட்ட போது, “அதே கேள்வி தான் தன்னிடமும் உள்ளது” எனத் தெரிவித்த போஸ் “தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்று தான் நாங்கள் இயங்கினோமே அல்லாமல் தமிழரசுக் கட்சிக்கு என்று இங்கு எந்தக் கட்டமைப்பும் இல்லை” என்றும் “அவ்வாறு தமிழரசுக் கட்சியின் பெயரில் அழைப்பு விடுவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை” என்றும் தெரிவித்தார்.

அவ்வாறானால் உங்களுடைய பெயர் எவ்வாறு அழைப்பிதழில் உள்ளது எனக் கேட்டதற்கு நிலாவும் சிறிவாஸ் என்பவரும் தன்னோடு போனில் தொடர்பு கொண்டு இது பற்றி உரையாடியதாகவும் “அவ்வாறான ஒரு சந்திப்பு செய்யத்தான் வேண்டும் ஆனால் அதற்கு இது நேரமில்லை. வழக்குகள் முடிந்து தாயகத்தில் கட்சி செயற்பட ஆரம்பிக்கும் போதே அதனை மேற்கொள்ள முடியும்” என்று தான் தெரிவித்ததாக போஸ் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் தன்னுடைய உடன்பாடில்லாமலேயே அவர்கள் தன்னுடைய தொடர்பிலக்கத்தை வெளியிட்டதற்கு நிலாவோடு தொடர்பு கொண்டு கண்டித்ததாகவும் தன்னுடைய பெயரை உடனடியாக நீக்க வேண்டும் என்று கோரியதாகவும் தெரிவித்தார். அதன்படி பெப்ரவரி 25இல் வெளியிட்ட புதிய அழைப்பிதழில் போஸின் பெயர் நீக்கப்பட்டு இருந்தது.

அந்த அழைப்பிதழில் இருந்த மற்றைய இருவர்: சிறிவாஸ் மற்றும் கேதீஸ். சிறிவாஸ் தமிழரசுக் கட்சியின் செயலாளராகச் செயற்பட்ட ஆவரங்கால் சின்னத்துரையின் மகன் ஆவார். தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கிய போது தேர்தலில் போட்டியிட தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னத்தை பயன்படுத்த முயன்றனர். ஆனால் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி ஆனந்தசங்கரி தமிழீழ விடுதலைப் புலிகளை ஏகபிரதிநிதிகள் என்று ஏற்கமறுத்த முரண்பாட்டினால் தமிழர் விடுதலைக் கூட்டணியையும் உதயசூரியன் சின்னத்தையும் வழங்க மறுத்துவிட்டார். அதனைத் தொடர்ந்து லண்டனிலிருந்த ஆவரங்கால் சின்னத்துரையை தாயகத்துக்கு அழைத்து தமிழரசுக்கட்சியையும் அதன் வீட்டுச் சின்னத்தையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் நோக்கங்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்தினர்.

சின்னத்துரை சிறிவாஸ் தமிழீழு விடுதலைப் புலிகளின் நல்ல விசுவாசியாகவும் அவர்களின் அரசியல் செயற்பாடுகிளிலும் முன்னின்றவர். தற்போது தமிழரசுக் கட்சி என்ற பெயரில் அழைப்பிதல் வெளியிட்டுள்ளார். அக்கூட்டத்தில் தேசம்நெற் ஊடகவியலாளராகக் கலந்துகொள்ள முடியுமா? என்று கேட்டபோது “சமஸ்டிக் கொள்கையை ஏற்று கட்சியின் விதிமுறைகளை ஏற்றுக்கொள்பவர்கள் கட்சியின் உறுப்பினர்களானால் மட்டுமே அந்த ஒன்று கூடலில் கலந்துகொள்ள முடியும்” எனத் தெரிவித்தார். “அப்படியானால் நீங்கள் தமிழீழக் கொள்கையை விட்டுவிட்டீர்களா?” என்று கேட்டேன். அதற்குப் பதிலளித்த அவர் “யுத்தம் தீவிரமாக நடந்த காலகட்டத்தில் தமிழீழம் கிடைக்க வேண்டும் என்று விரும்பினேன். இப்போது அதற்கு சாத்தியமில்லை என்ற நிலைக்கு வந்துவிட்டேன். சமஸ்டிக் கொள்கையை ஏற்றுக்கொள்பவர்கள் யாரானாலும் தமிழரசுக் கட்சியில் இணையலாம்” என்றார்.

“நீதி மன்றம் கட்சியின் செயற்பாடுகளை முடக்கி விட்டுள்ள நிலையில் நீங்கள் ஏன் அவசரப்பட்டு இந்த ஒன்றுகூடலை நடத்துகிறீர்கள் ?” என்று கேட்ட போது, “லண்டனில் கட்சி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு எந்தத் தடையும் இல்லை” எனத் தெரிவித்தார். “தமிழரசுக் கட்சியை புலத்தில் உள்ள புலிகள் கைப்பற்றுவதற்கான சதித்திட்டமா இது ?” எனத் தேசம்நெற் கேட்டபோது அப்படியல்ல என்றவர், “புலிகள் சமஸ்டிக்கொள்கையை ஏற்றுக்கொண்டு வரவிரும்புகிறார்கள். அவர்களை நாங்கள் உள்வாங்குவோம்” என்றார். அது போல், “ரொலோ மற்றும் புளொட் அமைப்புகளும் தங்கள் அமைப்புகளை விட்டுவிட்டு தமிழரசுக் கட்சியில் இணையலாம்” என்றார். அப்படியானால் “தமிழரசுக் கட்சி இனி புலி அரசுக்கட்சியாகி விடுமா? வெளிநாட்டு கிளைகளில் இருந்தும் கட்சியின் மத்திய குழுவுக்கு உறுப்பினர்கள் அனுப்பப்டுவார்களா?” என்று கேட்டதற்கு “சமஸ்டிக்கு உடன்படும் புலிகள் தமிழரசுக் கட்சியில் இணையலாம். லண்டனில் இருந்து ஐவர் மத்திய குழுவுக்கு அனுப்பப்படுவார்கள் அவர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை இருக்கும்” என்றார் சின்னத்துரை சிறிவாஸ்.

சின்னத்துரை சிறிவாஸ் மேலும் தெரிவிக்கையில் தமிழரசுக் கட்சியின் தேர்தல் முடிவுகளின் பின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட சிவஞானம் சிறிதரன் மற்றும் எம் ஏ சிறிதரனுடன் பேசியதாகவும் அவர்கள் இருவரும் ஊடகங்கள் குறிப்பிடுவது போல் அல்லாமல் இணைந்து பயணிக்கவே விரும்புவதாகவும் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் போடப்பட்ட வழக்குகளுக்குப் பின்னால் எம் ஏ சுமந்திரன் இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். அப்படியானால் இந்தக் குழப்பத்திற்குப் பின் யார் உள்ளனர் என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்க சின்னத்துரை சிறிவாஸ் மறுத்துவிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில் “எம் ஏ சுமந்திரன் அளவுக்கு கட்சிக்குள் தகுதியானவர்கள் யாரும் இல்லை. சுமந்திரனை வெளியேற்றும் நோக்கத்தில் இந்த ஒன்றுகூடல் ஏற்பாடு செய்யப்படவில்லை” எனத் தெரிவித்தார். “ஆனால் எம் ஏ சுமந்திரனை புலத்து புலிகள் நேற்று பெப்ரவரி 25இல் ஏற்பாடு செய்த எழுச்சிநாள் கூட்டத்தில் ‘தேசியத் துரோகி’ என்று அறிவித்துள்ளனரே ?” என்று கேட்ட போது, “புலத்து புலிகள் அவ்வாறு கூறவில்லை. சிலர் அக்கருத்துடன் உள்ளனர். இலங்கையில் உள்ள கட்சியின் சில உறுப்பினர்களே அதனை எழுச்சி மாநாட்டில் கூறியுள்ளனர்” என்றார்.

“தமிழரசுக் கட்சிக்குள் புலிகளை உள்வாங்குகிறீர்கள் அதே சமயம், எம் ஏ சுமந்திரன் அளவுக்கு கட்சிக்குள் தகுதியுள்ளவர் இல்லை என்கிறீர்கள்? இதுவென்ன விசித்திர அரசியல்?” எனத் தேசம்நெற் கேட்டபோது ஊடகங்கள் உண்மையான விடயங்களை அறிந்திருக்வில்லை எனத் தெரிவித்தார் சின்னத்துரை சிறிவாஸ். ஊடகங்கள் உண்மையை அறியவில்லையா அல்லது சிறிவாஸ் புலிகளின் ‘டபிள் ஏஜென்டா’ என்பது விரைவில் தெரியவரும்.

தமிழரசுக் கட்சியில் ஏற்பட்டுள்ள இன்றைய குழப்பங்களுக்கு மாவை சேனாதிராஜாவின் பதவிமோகமே காரணம் என்று பெயர் குறிப்பிடவிரும்பாத மற்றுமொரு தமிழரசுக் கட்சி ஆதரவாளர் தெரிவித்தார். அதே சமயம் எம் ஏ சுமந்திரன் மற்றவர்களை அனைத்துச் செல்வதில்லை என்றும் அவரிடம் ஆளுமையும் திறமையும் இருந்த போதும் அவரது எதேட்சதிகாரம் ஆபத்தானது என மற்றுமொருவர் தெரிவித்தார். அவர் சிறிதரனிடம் மற்றவர்களை அனைத்துச் செல்லும் பண்பு இருப்பதாகவும் அது முக்கியமானதும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

இந்த தமிழரசுக் கட்சியின் ஒன்றுகூடல் அழைப்பிதழில் இருந்த மற்றையவர் கேதீஸ், வரலாற்று மையத்திலிருந்த ஒரு ‘றோ புலி’. இவர் ‘நிலா – திவாகரன்’ அணியின் ‘றோ – தமிழீழம் எடுத்துத் தரும்’ என்று நம்புகின்ற ஒரு தூண். அவர்கள் ஏற்பாடு செய்த ‘மாறிவரும் உலக ஒழுங்கில் ஈழத்தமிழர்களும் இந்தியாவும் மேற்குலகமும்’ என்ற ஜனவரி 28 நடந்த சந்திப்பின் ஏற்பாட்டாளர்களில் ஒருவர். இவர்களின் ‘றோ – தமிழீழம்’ கதையாடலில் இலங்கைப் புலனாய்வுப் பிரிவால் உருவாக்கப்பட்ட முன்னாள் போராளிகள் கட்சியும் இணைந்துள்ளது. தன்னையொரு வல்லரசாக ஆக்கிக்கொண்ட இந்தியாவுக்கே கதைசொல்லி தமிழீழம் வாங்கலாம் என்று நம்பிய ஆர்வக் கோளாறுகளுக்கு, தமிழரசுக் கட்சியைக் கைப்பற்றி விடலாம் என்ற எண்ணம் ஏற்பட்டதில் எந்தத் தவறும் இருக்கவில்லை. இந்த றோ – புலிகள் விக்கினேஸ்வரனுக்கு காவடி எடுத்தது அனைவருக்கும் தெரியும். அதே காலகட்டத்தில் புலிகளின் அரசியல் ஆலோசகராக இருந்து தற்போது றோ வின் பராமரிப்பில் தமிழ்நாட்டில் உள்ள சீன எதிர்ப்பு ஆய்வாளர் மு திருநாவுக்கரசு எழுதிய வட்டுக்கோட்டை தீர்மானம் 2 என்று ஒரு காவடியையும் எடுத்தனர். அது தொடர்பான நூல் ஒன்றை தமிழ் தேசிய பற்றாளர்களான சிவஞானம் சிறிதரன், சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோரைக் கொண்டு வெளியிட்டனர். காலத்துக்கு காலம் இந்த ஆர்வக்கோளாறுகளின் குறும்புகள் தமிழ் மக்களின் அரசியலை மலினப்படுத்துவதாக அமைகின்றது.

2009 வரை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் தமிழீழம் பெற்றுத் தருவார் என்று நம்பிய அவர்களின் ‘அரச அறிவியல்’ தெளிவை நாங்கள் குறைத்துமதிப்பிடவில்லை. ஆனால் ‘மதியுரைஞர் பாலசிங்கம்’ அவர்களை சிஐஏ ஏஜென்ட் என்றும் அவருக் ‘அரச அறிவியல்’ போதாது என்பதும் கொஞ்சம் ரூ மச். ஆனால் மோடி ஜீ யின் கோசலம் பருகி வளர்த்த ‘அரச அறிவியல்’படி ‘றோ தமிழீழம் பெற்றுத் தரும்’ என்று ஜனவரி 28இல் ஒற்றைக் காலில் நின்று சன்னதம் ஆடிவிட்டு 28 நாள் கழிந்து. தமிழீழத்தை கைவிட்டு தமிழரசுக் கட்சியின் சமஸ்டியை ஏற்றுக்கொள்ளுங்கள், கட்சியில் சேருங்கள் என்று அழைப்பு விடும் அந்தர் பல்டி அடிப்பதற்கு றோ புலிகளால் மட்டுமே முடியும்.

தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் போய், தமிழர்களின் தாகம் றோத் தமிழீழம் ஆகி இப்போது தமிழர்களின் தாகம் சமஸ்டி என்று தொடங்கின இடத்திலேயே வந்து நிற்கிறது.