ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

இந்நாட்டில் கிரிக்கெட்டை முகாமைத்துவம் செய்வதில் அதற்கு அரசாங்கம் அதிகம் தலையிடாமல் இருப்பதே எமது நோக்கமாகும். – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டை அரசியலுக்கு அப்பாற்பட்டு பேணுவதே தமது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

2030ஆம் ஆண்டு இலங்கையின் கிரிக்கட் எங்கு இருக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வை தமக்கு இருப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, அதனால்தான் இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் 1.5 பில்லியன் ரூபாவை பாடசாலை கிரிக்கெட்டின் அபிவிருத்திக்காக ஒதுக்கியதாகவும், எதிர்காலத்தில் அதனை வருடாந்தம் 02 பில்லியன் வரை அதிகரிக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த நிதி நிர்வாகத்தையும், பாடசாலை கிரிக்கெட்டின் அபிவிருத்தியையும் சுயாதீன நிதியம் ஒன்றிடம் ஒப்படைக்க எதிர்பார்ப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, சகல செயற்பாடுகளையும் வெளிப்படைத் தன்மையுடன் முன்னெடுத்து எதிர்பார்த்த இலக்குகளை அடைவதே அதன் எதிர்பார்ப்பாகும் என்றும் தெரிவித்தார்.

அத்துடன், கிரிக்கெட் விளையாட்டு தொடர்பில் எதிர்காலத்தில் கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டத்தின் மூலம் இடைக்கால குழுக்கள் மற்றும் அமைச்சரின் அதிகாரங்கள் நீக்கப்படும் என குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில், விளையாட்டானது வணிகமயமாக்கப்படும் என்றால் அது அரசியலில் இருந்து விடுபட வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.

நாட்டில் புதிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதன் மூலம் சுபீட்சமான நாடாக மாறுவதற்கான திட்டங்களை அரசாங்கம் ஏற்கனவே நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும், கிரிக்கெட் போன்ற ஏனைய துறைகளிலும் சிறந்து விளங்கும் நாடாக இலங்கை மீண்டும் மாற வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

கொழும்பு கோல்ட்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் நேற்று (08) பிற்பகல் நடைபெற்ற கொழும்பு கோல்ட்ஸ் விளையாட்டுக் கழகத்தின் 150ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டார்.

150ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நினைவுப் பலகையை திரை நீக்கம் செய்துவைத்த ஜனாதிபதி, பின்னர் விளையாட்டு சங்க உறுப்பினர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

1996 உலகக் கிண்ணத்தை வென்ற உறுப்பினர்களுக்கும் மற்றும் 2014 பந்துவீச்சு 20 (T20) உலகக் கிண்ணத்தை வென்ற அணிக்கும் கோல்ட்ஸ் விளையாட்டுக் கழகத்தின் அங்கத்துவம் இதன்போது வழங்கப்பட்டது.

மேலும் பல வருடங்களாக கோல்ட்ஸ் விளையாட்டுக் கழகத்துக்கு பங்களிப்புச் செய்த உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பரிசுகளையும் வழங்கி வைத்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கோல்ட்ஸ் விளையாட்டுக் கழகத்தின் வாழ்நாள் அங்கத்துவம் அதன் தலைவர் நிஷாந்த ரணதுங்கவினால் வழங்கப்பட்டது.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்தின் 150ஆவது ஆண்டு விழாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

கோல்ட்ஸ் விளையாட்டுக் கழகம் இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அங்கமாக மாறியுள்ளது. இங்கிலாந்தில் கிரிக்கெட் தொடங்கிய காலத்திலிருந்தே, அணிகள் இணைந்து விளையாட்டுக் கழகங்களை உருவாக்கின. மாலுமிகள் வரும்போதும், அவர்களும் தற்காலிக கிரிக்கெட் அணியை உருவாக்கினர். மலாய் படைப்பிரிவின் படைமுகாமில் தங்கியிருந்த வீரர்கள் கோல்ட்ஸ் என்ற அவர்களின் கிரிக்கெட் அணியை உருவாக்கினர்.

ஒருமுறை கோல்ஸ் மற்றும் றோயல் கல்லூரி, புனித தோமஸ் மற்றும் வெஸ்லி கல்லூரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின் பின்னர், சிங்கள விளையாட்டுக் கழகம் என்ற பெயரில் மற்றொரு கழகத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டது.

அதே நேரத்தில் தமிழ் யூனியன் உருவாக்கப்பட்டது. இதன் விளைவாக, இன அடிப்படையில் பல விளையாட்டுக் கழகங்கள் உருவாகின. இவை மலாய், பறங்கியர், சிங்களம், தமிழ் ஆகிய வார்த்தைகளால் மட்டுமே பெயரிடப்பட்டிருந்தாலும், அரசியல் கட்சிகளைப் போலல்லாமல் அனைத்து இன மக்களும் இதில் ஒன்றிணைந்து செயற்பட்டனர்.

துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான அரசியல் கட்சிகளில் இதனை கண்டுகொள்ள முடிவதில்லை. அதனால்தான் நாம் இன்று இந்தப் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளோம். எவ்வாறாயினும், உங்களது பங்களிப்பு இலங்கையின் விளையாட்டு வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன்.

இலங்கையின் கிரிக்கட் ஆரம்பத்தை எடுத்துக்கொண்டால், பிரித்தானியர்கள் சிலர் இன்றுள்ள விதிகள் எதுவுமின்றி வெறும் மட்டையால் பந்து விளையாடிய காலத்திலிருந்து இன்று வரை கிரிக்கெட்டின் பரிணாமத்தை நீங்கள் அனைவரும் பார்த்திருப்பீர்கள். நாங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை பார்த்திருக்கிறோம். அந்தக் காலத்தை கடந்திருக்கிறோம். இவ்வாறு நோக்கும்போது, கிரிக்கெட் வேகமாக மாறும் விளையாட்டு. நவீன தொழில்நுட்பத்துடன் தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களில் ஏற்பட்ட மாற்றத்தின் விளைவாக, விளையாட்டும் இப்போது மாறி வருகிறது.

இந்த ஆண்டு வரவு செலவுத்திட்ட விவாதத்திலும் கிரிக்கெட் முக்கிய இடம் பிடித்திருப்பதை பார்த்தோம். இம்முறை வரவு செலவுத் திட்ட விவாதம் முக்கியமாக கிரிக்கெட் தொடர்பிலேயே இடம்பெற்றது. வரவு செலவுத் திட்டம் பற்றி அல்ல, அதாவது அரசாங்கத்தையும் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளையும் விமர்சிக்க எதிர்க்கட்சிகளுக்கு எதுவும் இருக்கவில்லை.

இதேவேளை, முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சருக்குப் பதிலாக புதிய அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்டார். கிரிக்கெட்டின் முன்னைய நிலைமையை எவ்வாறு மீட்டெடுப்பது என்பது குறித்து அமைச்சர் தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் (ICC) கலந்துரையாடி வருகிறார். அவை அனைத்தும் விரைவில் நிவர்த்தி செய்யப்பட்டு, எமக்கு மீண்டும் உலகத்துடன் செயற்பட கிடைக்க வேண்டும் என்று நாம் பிரார்த்திப்போம்.

2030இல் இலங்கையின் கிரிக்கெட் எங்கு இருக்க வேண்டும் என்ற இலக்கு எனக்கு உள்ளது. எனவேதான் இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் பாடசாலை மட்ட கிரிக்கெட் வளர்ச்சிக்காக 1.5 பில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டுக்கு மட்டுமன்றி இந்த இலக்கு நிறைவேறும் வரை இந்த நிதியை வழங்குவோம். இதனை வருடத்துக்கு 02 பில்லியன் வரை அதிகரிக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நாட்டில் கிரிக்கெட்டை முகாமைத்துவம் செய்வதில் அதற்கு அரசாங்கம் அதிகம் தலையிடாமல் இருப்பதே எமது நோக்கமாகும். மேலும், எதிர்காலத்தில் கொண்டு வரப்படும் புதிய சட்டங்கள் மூலம் இடைக்கால குழுக்கள் மற்றும் அமைச்சரின் அதிகாரங்கள் நீக்கப்படும்.

இந்த நிதி நிர்வாகத்தையும் பாடசாலை கிரிக்கெட்டின் வளர்ச்சியையும் ஒரு சுயாதீன நிதியத்திற்கு நாம் ஒப்படைப்போம். மீதமுள்ள பகுதி நிர்வாக சபைக்கு உள்ள வளர்ச்சித் திட்டங்களுக்கு வழங்கப்படும். விளையாட்டுத்துறையை மேம்படுத்த அமைச்சுக்கு அதிகாரம் உள்ளது.

மைதானங்கள், உபகரணங்கள் என எதற்கு இந்த நிதி செலவிடப்பட்டாலும் அது மூலதனச் செலவில் குறிப்பிடப்படும். எனவே, நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் உள்ள பாடசாலை கிரிக்கெட் முன்னேற்றம் அடைந்து வருகிறது என்பதே அதன் அர்த்தம். அதன் பின்னர் எமக்கு மாகாண மட்டத்தில் கிரிக்கெட்டை முன்னேற்ற முடியும்.

நாம் தொடர்ந்து கிரிக்கெட் வீரர்களை உருவாக்க வேண்டும். இந்த நிதியை கிரிக்கெட் வீரர்களை உருவாக்கவே நாம் பயன்படுத்துகிறோம். ஆண் பிள்ளைகள் மாத்திரமன்றி, பெண் பிள்ளைகளும் கிரிக்கெட் விளையாடுகிறார்கள். இதன் மூலம் நாட்டின் கிரிக்கெட் விளையாட்டை ஒரு குறிப்பிட்ட தரத்திற்கு கொண்டு வருவோம்.

மேல் மாகாணத்தில் கிரிக்கெட் பற்றிப் பேசும்போது கொழும்பில் உள்ள சில பாடசாலைகளைத் தவிர பாதுக்க, கிரிந்திவெல, அகலவத்தை போன்ற பகுதிகளில் கிரிக்கெட் எந்த வகையிலும் வளர்ச்சியடையவில்லை. எனவே, அனைத்து பாடசாலைகளுக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்பு இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.

கிரிக்கெட் ஒரு வளர்ந்து வரும் விளையாட்டு. எல்லா ஆட்டத்திலும் எங்களால் வெற்றி பெற முடியாது. ஆனால் அவற்றில் சிலவற்றை நம்மால் வெல்ல முடியும்.

எனவே இதற்காக பணத்தை செலவிட தயாராக உள்ளோம். அத்துடன், தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டு வளாகத்தை விளையாட்டுப் பல்கலைக்கழகமாக அபிவிருத்தி செய்வதற்கும் நாங்கள் செயற்பட்டு வருகின்றோம். அதற்காக நாம் கிரிக்கெட் நிர்வாக சபையை இணைத்துக் கொள்ளவுள்ளோம்.

நாட்டில் புதிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும், வளமான தேசமாக மாற்றவும் அவசியமான திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். பொருளாதாரத்தில் மட்டுமன்றி பாடசாலைகளில் கிரிக்கெட் போன்ற ஏனைய துறைகளிலும் சிறந்து விளங்கும் நாடாக நாம் திகழ்வதை உறுதி செய்வோம். பொருளாதாரம் என்பது பணம். விளையாட்டு வணிகமயமாக்கப்பட்டால் நாமும் அதற்குள் நுழைவோம்.

மேலும், விளையாட்டை வணிகமயமாக்கினால், அதை அரசியல் தலையீடு இல்லாமல் பேணிக் கொள்வோம் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க, அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, பிரசன்ன ரணதுங்க, மேல் மாகாண ஆளுநர் மார்ஷல் ஒஃப் தி ஏர்ஃபோர்ஸ் ரொஷான் குணதிலக்க, தற்போதைய மற்றும் முன்னாள் சிரேஷ்ட கிரிக்கட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் கழக அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிதிகள் பலர் கலந்துகொண்டனர்.

“நமக்காக அன்றி எதிர்கால சந்ததியினருக்காகவே நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும்.” – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

“நமக்காக அன்றி எதிர்கால சந்ததியினருக்காகவே நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும்.” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

ஆனால் எதிர்க்கட்சிகள் தம்மைப் பற்றி மாத்திரமே சிந்திப்பதாகவும், அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதே சிறந்த வழி எனவும், அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு பெறும் அனுபவத்தின் அடிப்படையில் அடுத்த தேர்தலில் அரசாங்க அதிகாரத்தைப் பெற முயற்சிக்கலாம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மாத்தளை மாவட்ட பிரதேச அரசியல் பிரதிநிதிகளுடன் நேற்று சனிக்கிழமை (25) பிற்பகல் மாத்தளை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டார்.

மாத்தளை மாவட்ட பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தொழிலாளர் காங்கிரஸின் உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டதுடன், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடினர். சில பிரச்சினைகளுக்கு அதே இடத்தில் தீர்வுகளை வழங்கவும் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார்.

கடந்த காலங்களில் எதிர்கொண்ட பொருளாதார சவாலுக்கு முகங்கொடுத்து எவரும் நாட்டை பொறுப்பேற்க முன்வரவில்லை எனவும், ஆளும் கட்சியின் வேண்டுகோளுக்கு இணங்க, தான் அந்த சவாலை ஏற்றுக்கொண்டதாகவும், அனைத்து அரசியல் கட்சிகளும் தமக்கு வழங்கிய ஆதரவை நன்றியுடன் நினைவுகூருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்..

அவ்வாறு ஏற்றுக்கொண்ட நாட்டை சரியான திசையில் கொண்டு சென்று பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடிந்ததாக குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து 5 வருடங்கள் சென்றாலும் மீட்க முடியாது என எதிர்கட்சி அரசியல்வாதிகள் கூறினாலும், 16 மாத குறுகிய காலத்தில் நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்டெடுக்க முடிந்ததாகவும் தெரிவித்தார்.

இந்தப் பொருளாதார நெருக்கடியின் போது எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் அரசாங்கத்திற்கு ஆதரவளித்திருந்தால் ஒரு சில மாதங்களுக்கு முன்னரே நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்டெடுக்க முடிந்திருக்கும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தை பாராட்டிய பிரதேச அரசியல் பிரதிநிதிகள், எதிர்காலத்தில் இந்த வேலைத்திட்டங்களுக்கு பூரண ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்தனர்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,

2021 முதலில் ஒரு நாடு என்ற வகையில் பொருளாதார சிக்கலை எதிர்கொண்டோம். 2022இல், இது ஒரு நெருக்கடியாக மாறியது. நாட்டின் அனைத்து விவகாரங்களும் முடங்கியது. நாடு பணத்தை இழந்தது. வருமானம் இல்லாமலானது. அதே நேரத்தில், அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் நிறுத்தப்பட்டன. நாம் வங்குரோத்து அடைந்த நாடாக மாறியதால், வெளிநாடுகளின் உதவியையும் இழந்தோம்.

அந்த சவாலான நேரத்தில் நாட்டைப் பொறுப்பேற்க யாரும் முன்வரவில்லை. நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்போம் என்று சொன்னவர்கள் கைவிட்டுச் செல்லும்பொது, அந்தப் பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டேன். அதன்போது, அரசியல் வேறுபாடின்றி அனைத்துக் கட்சிகளும் எனக்கு உதவின. எவ்வாறாயினும், நாங்கள் ஒன்றிணைந்து இந்த சவாலை எதிர்கொண்டு நாட்டை முன்னோக்கி கொண்டு சென்றோம்.

நான் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட போது, வீழ்ச்சியடைந்துள்ள இந்தப் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப 04 – 05 வருடங்கள் ஆகும் என்று பலர் கூறினார்கள். இதற்குத் தீர்வு இல்லை என்று பலர் நாட்டை விட்டு வெளியேறிச் சென்றனர். நாங்கள் தற்போது சர்வதேச நாணய நிதியத்துடனும் ஏனைய நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

அதன்படி, இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு வங்குரோத்து என்ற முத்திரையில் இருந்து விடுபடும் என நான் எதிர்பார்க்கிறேன். இந்த நடவடிக்கைகளுக்காக எங்களுக்கு 16 மாதங்கள் தேவைப்பட்டன. எதிர்க்கட்சிகள் எங்களை ஆதரித்திருந்தால் இன்னும் இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்னரே இதை நிறைவேற்றியிருக்கலாம்.

நாம் கடினமான பயணத்தையே மேற்கொண்டோம். எவ்வாறாயினும் அடுத்த வருடம் முதல் அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா கொடுப்பனவை வழங்க முடிந்துள்ளது. இவ்வாறு செய்ய முடியும் என்று யாரும் நினைக்கவில்லை. மேலும், சமுர்த்தியைப் போன்று மூன்று மடங்கு அஸ்வெசும கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டது. இவை கடினமான நேரத்திலே செய்யப்பட்டன. மேலும், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான திட்டங்களின் மேம்பாட்டிற்காக பணத்தை வழங்க நாங்கள் எதிர்பார்த்துள்ளோம்.

நான் அத்தோடு நிற்கவில்லை. இந்நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு முடிந்த அளவு நிவாரணங்களை வழங்கவே நான் முயற்சிக்கிறேன். அதற்காக நாட்டில் மிகப்பெரிய விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. நவீனமயமாக்கலின் முதல் படி உரிமையாகும். இதன்படி காணி கட்டளைச் சட்டத்தின் கீழ் அனுமதிப்பத்திரம் பெற்றவர்களுக்கு முழு உரிமைகொண்ட காணி உறுதிப்பத்திரம் வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்தச் செயற்பாடுகளை மாவட்ட அபிவிருத்திக் குழுக்களிடம் ஒப்படைக்குமாறு பணிப்புரை வழங்கியுள்ளேன். இந்தத் திட்டத்திற்கு அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன். இது யாராலும் செய்ய முடியாத காரியம். ஏனையவர்கள் வெறுமனே கதை பேசினார்கள். ஆனால் நாங்கள் அனைவரும் இணைந்து இவற்றை நடைமுறைப்படுத்தினோம்.

இந்த நாட்டின் இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க வேண்டும். எமக்காக அல்ல, நம் குழந்தைகளுக்காக, குழந்தைகளின் குழந்தைகளுக்காக ஒரு நல்ல நாட்டை உருவாக்க வேண்டும். நாம் அவர்களுக்காக இந்த நாட்டைக் கட்டியெழுப்புவோம். ஆனால் எதிர்க்கட்சிகள் தங்களைப் பற்றி மாத்திரமே கவலைப்படுகிறார்கள். எவ்வாறு ஆட்சியைப் பிடிப்பது என்று சிந்திக்கிறார்கள். அதிகாரத்தைப் பெறுவதற்கான சிறந்த வழி எங்களுடன் இணைவதே என்று நான் அவர்களுக்குக் கூறுகின்றேன். எங்கள் அனுபவத்தைப் பெற்று அடுத்த முறை ஆட்சியைப் பிடிக்க முயற்சிக்குமாறு நான் அவர்களிடம் கூறுகிறேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்பி முன்னோக்கிச் செல்வோம்” என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க, மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் கமகே, பாராளுமன்ற உறுப்பினர் ஜனக பண்டார தென்னகோன், மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நாலக பண்டார கோட்டேகொட, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, மத்திய மாகாண சபைத் தலைவர் எல். டி.நிமலசிறி உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

2 மில்லியன் ஏக்கர் காணிகளை விவசாயிகளுக்கு முழு உரிமத்துடன் வழங்க அரசாங்கம் தீர்மானம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

விவசாயத்துறையை மேம்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கையாக சுமார் 2 மில்லியன் ஏக்கர் காணிகளை, அந்தக் காணிகளை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழு உரிமத்துடன் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் நேற்று சனிக்கிழமை (18) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தெற்காசிய பிராந்தியத்தில் வளர்ந்து வரும் பொருளாதார சக்தியைப் பயன்படுத்த பிராந்திய நாடுகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமாகும். ஆசியாவை நோக்கி நிகழும் பொருளாதார இடப்பெயர்வு குறித்து நாம் அவதானம் செலுத்த வேண்டும். மாலைதீவின் புதிய ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்சுவுடனான இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் இலங்கை மற்றும் மாலைதீவுடன் இணைந்து சுற்றுலா வலயமொன்றை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இலங்கையின் புதிய பொருளாதார மறுசீரமைப்புகள் குறித்து அவதானம் செலுத்தியிருக்கின்றோம். போட்டித்தன்மை கொண்ட மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம், பசுமைப் பொருளாதாரம், வலுசக்தி மாற்றம் ஆகியவற்றை ஏற்படுத்துவது முக்கியத்துவமுடையதாகும்.

இலங்கையை பிராந்திய பொருட்கள் பரிமாற்ற மையமாக மாற்றுவது முக்கியத்துவமுடையதாகும். அதிக வருமானம் ஈட்டும் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது, விவசாயத்தை நவீனமயமாக்குவது, காணி உரிமை தொடர்பான மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பாகவும் அவதானம் செலுத்த வேண்டும்.

விவசாயத்துறையை மேம்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கையாக சுமார் 02 மில்லியன் ஏக்கர் காணிகளை, அந்தக் காணிகளை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழு உரிமத்துடன் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  அத்துடன், பாரியளவிலான நவீன விவசாய தொழில் முயற்சிகளை உருவாக்குவதற்கு அரச மற்றும் தனியார் துறைகள் இணைந்து சில திட்டங்களை செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவுக்கு பிரவேசித்தல் உள்ளிட்ட தொழில்நுட்பத் துறையின் முன்னேற்றத்துக்காக அரசாங்கம் ஏற்கனவே நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. பாரிய பொருளாதார மத்திய நிலையத்தை உருவாக்குவதன் மூலம் தமிழ்நாடு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் ஏற்படக்கூடிய தொழில்மயமாக்கல் குறித்தும் அவதானம் செலுத்த முடியும்.

அதேபோன்று, பங்களாதேஷ், மியன்மார், கம்போடியா, லாவோஸ், கிழக்கு மற்றும் மேற்கு ஆபிரிக்க பிராந்திய நாடுகளில் உள்ள புதிய முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்ந்து அந்த நாடுகளிலும் முதலீடு செய்ய இலங்கை தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இலங்கை, இந்தியா மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகள் கூட்டாக இணைந்து பிராந்தியத்தில் சுற்றுலாத்துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்காக நேபாளத்தையும் ஒன்றிணைக்க முடியும்.

மேலும், வங்காள விரிகுடாவை சூழவுள்ள நாடுகளுக்கிடையில் சுற்றுலா வலயத்தை உருவாக்கும் திட்டம் காணப்படுகிறது. கெரீபியன் தீவுகளை விட இது மிகப்பெரிய மாற்றீடாக அமையும். பிராந்திய விரிவான பொருளாதார பங்காளித்துவத்தில் இணைவதற்கு இலங்கை தற்போது விண்ணப்பித்துள்ளது. இந்தியா மற்றும் பங்களாதேஷுடன் பரந்த பொருளாதார பங்காளித்துவத்தை ஏற்படுத்துவது உட்பட இலங்கையில் தற்போது மேற்கொள்ளப்படும் வர்த்தக பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒப்பந்தங்கள் குறித்தும் இளம் தொழில்முனைவோர் கவனம் செலுத்த வேண்டும்.

பிராந்தியத்தில் உள்ள பொருளாதார ஆற்றல்கள் குறித்து நம்பிக்கையுடன் இருக்கின்றோம். எதிர்பார்க்கப்படும் பிராந்திய பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்காக தீவிரமாக பங்களிக்க வேண்டும் என்று இளம் தொழில்முனைவோரிடம் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

“நாட்டில் டிஜிட்டல் மயமாக்கலுக்குள் பிரவேசிக்கும் வாய்ப்பு செல்வந்தர் முதல் வறியவர் வரை அனைவருக்கும் வேண்டும்.” – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

“நாட்டில் டிஜிட்டல் மயமாக்கலுக்குள் பிரவேசிக்கும் வாய்ப்பு செல்வந்தர் முதல் வறியவர் வரை அனைவருக்கும் கிடைக்க வேண்டும்” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஷங்ரீலா ஹோட்டலில் அண்மையில் நடைபெற்ற தேசிய தகவல் தொழில்நுட்ப மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்

“ மனித மூலதனத்தை போன்றே டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளைப் பெற்றுக்கொள்வதும் சவாலாகியுள்ளது. அதேபோல் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் குறைந்தளவான வளங்களுடனேயே நாம் டிஜிட்டல் வசதிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

அதனால் தனியார் துறையினரின் தனிப்பட்ட முதலீடுகள் வாயிலாக உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும். அதற்கமைய டிஜிட்டல் வசதிகள் தொடர்பிலான எமது கொள்கை மேற்படி விடயத்தை மையப்படுத்தியதாக நடைமுறைப்படுத்தப்படும்.

அதேபோல் மேல் மாகாணத்தின் கம்பஹா, கொழும்பு, களுத்துறை மாவட்டங்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்த வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாக உள்ளது.

அதன் பின்னர் அதிக சனத்தொகை கொண்ட பகுதிகள் மற்றும் நகரங்களை நோக்கி நகர வேண்டும். அதேபோல் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளை விநியோகிப்பவர்களும் முதலீடுகளை எதிர்பார்த்துள்ளனர்.

அதேபோல் முதலீடுகளை முன்னோக்கி கொண்டுச் செல்லும் இயலுமை அரசாங்கத்திடம் உள்ளது.அதனால் தற்போதுள்ளதை விடவும் மாறுபட்ட நிதித்துறை ஒன்று எமக்கு அவசியப்படுகிறது. செல்வந்தர்கள் மற்றும் வறியவர்களுக்கு இடையில் டிஜிட்டல் தொடர்பாடல் ஒன்று இருக்க முடியாது.

அதனை நாம் நனவாக்கி கொள்வது எவ்வாறு என்பதை சிந்திக்க வேண்டும். அந்த வகையில் நாட்டின் டிஜிட்டல் மயமாக்கலுக்குள்பிரவேசிக்கும் இயலுமை சகலருக்கும் கிட்ட வேண்டும்” இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் மருத்துவ பட்டங்களை இலங்கையில் ஏற்றுக்கொள்ளும் வகையில் புதிய சட்டம் !

முதல் 1,000 சர்வதேச தரவரிசைக்குள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் மருத்துவ பட்டங்களை இலங்கையில் ஏற்றுக்கொள்ளும் வகையில் தேவையான சட்ட ஏற்பாடுகளை இயற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சுகாதார அமைச்சர் இணைந்து இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்திருந்தனர்.

சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் மருத்துவப் பட்டப்படிப்புகளின் அங்கீகாரத்தின் அடிப்படையில் தரநிலைகள் மற்றும் அளவுகோல்களை உள்ளடக்கிய தேசிய கொள்கையை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட பிரதமரின் செயலாளர் தலைமையிலான குழு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் தற்போதைய தேவைகளுக்கு ஏற்றவாறு மருத்துவ ஆணையின் விதிகளை திருத்துவதற்கு உரிய பரிந்துரைகளை வழங்க வேண்டும்.

“உள்நாட்டுப் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள சர்வதேசத்தை நாட வேண்டிய அவசியம் இல்லை.” – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

உள்நாட்டுப் பிரச்சினைகளை நாட்டுக்குள்ளேயே தீர்த்துக்கொள்ள சர்வதேசத்தை நாட வேண்டிய அவசியம் இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

மட்டக்களப்பு சென் மைக்கல் கல்லூரியின் 150 ஆவது ஆண்டு பூர்த்தி விழா நிகழ்வில் நேற்று (07) கலந்துகொண்டிருந்த போதே அதிபர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இன மற்றும் மதப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் ஒரு நாடு என்ற வகையில் முன்னோக்கிச் செல்ல முடியாது என்பதால், விரைவில் அதற்குரிய தீர்வுகளை காண்பதற்காக அனைத்து தலைவர்களுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தவிருப்பதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

வேறுபாடுகளை முன் நிறுத்தி மோதல்களை ஏற்படுத்திக் கொண்டதால் நாடு என்ற வகையில் இலங்கை சரிவை சந்திக்க நேரிட்டதென சுட்டிக்காட்டிய அதிபர், அரசியல் ரீதியான வேறுபாடுகளும் இலங்கையை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளதென சுட்டிக்காட்டினார்.

நாட்டின் பொருளாதாரம் முழுமையாக சரிவடைந்ததால் கடந்த வருடத்தில் நாட்டு மக்கள் முகம்கொடுத்த நெருக்கடிகளை நினைவுகூர்ந்த அதிபர், அனைத்து வேறுபாடுகளையும் விடுத்து நாட்டுக்காக அனைவரும் ஒன்றுபட்டு பயணிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

உள்நாட்டு பிரச்சினைகளை நாட்டுக்குள்ளேயே தீர்த்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அதிபர் அதற்காக சர்வதேசத்தை நாட வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்தார்.

நீதிபதி சரவணராஜா பதவி விலகிய விவகாரம் – ஜனாதிபதி ரணில் விடுத்துள்ள உத்தரவு !

குருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளை மேற்கொண்ட முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா பதவி விலகியமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

 

தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக காவல்துறையினருக்கு அல்லது நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு நீதவான் ஒருபோதும் அறிவிக்காத காரணத்தினால் ஜனாதபதி இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.

எனவே, இந்த சம்பவத்திற்கான மூல காரணத்தை உடனடியாக ஆராயுமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க, நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோருடன் சம்பவம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதுடன், இதற்கு முன்னர் மரண அச்சுறுத்தல்கள் தொடர்பில் நீதவான் முறைப்பாடு செய்யவில்லை என தெரியவந்துள்ளது.

கடந்த 24ஆம் திகதி வெளிநாடு சென்ற நீதவான், தனது பதவி விலகல் கடிதத்தை செப்டெம்பர் 23ஆம் திகதி நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்துள்ளார் என ஜனாதிபதி செயலக தரப்பினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ரணில் தமிழ் மக்களுக்கு ஒன்றும் செய்ய மாட்டார்  என்கிறார்கள். ஆனால் நாங்கள்  அவரை நம்புகின்றோம்.” – சி.வி விக்னேஸ்வரன்

“ரணில் தமிழ் மக்களுக்கு ஒன்றும் செய்ய மாட்டார்  என்கிறார்கள். ஆனால் நாங்கள்  அவரை நம்புகின்றோம்.” என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

அவரது இல்லத்தில் கடந்த வியாழக்கிழமை (28) இடம்பெற்ற 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

தமிழ் மக்களின் இருப்புக்களை தக்கவைத்துக்கொள்வதற்கு 13வது திருத்தம் செயற்படுத்தப்பட வேண்டும். இதனை கருத்தில் கொண்டு மாகாண சபைகளிடமிருந்து மத்திக்குப் பறிக்கப்பட்ட அதிகாரங்களை மீள மாகாணத்துக்கு வழங்குவது தொடர்பிலும் நியதிச் சட்டங்களை உருவாக்குவது தொடர்பிலும் ஜனாதிபதியுடன் பல சுற்றுச் சந்திப்புக்களை மேற்கொண்டோம்.

நாம் சந்திப்புகளில் ஈடுபட்டபோது ரணில் தமிழ் மக்களுக்கு ஒன்றும் செய்ய மாட்டார் என சிலர் கூறினர். ஆனால், நாங்கள் சில விடயங்களை அவர் ஊடாக செய்விக்கலாம் என்ற நம்பிக்கையுடன் இணைந்து செயற்பட்டு வருகிறோம்.

இறுதியாக இடம்பெற்ற ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் பறிக்கப்பட்ட மாகாண அதிகாரங்களை அவ்வாறு மீள வழங்குவது தொடர்பிலும் நியதிச் சட்டங்களை உருவாக்குவது தொடர்பிலும் நிபுணர் குழு ஒன்றை அமைப்பதற்கு ஜனாதிபதி சம்மதித்தார்.

ஜனாதிபதி வெளிநாடு சென்ற நிலையில், இக்குழுவை நியமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன் அவரின் பொறுப்பை செயற்படுத்துபவர்களும் குழுவை நியமிக்கவில்லை.

13ஆவது திருத்தம் தொடர்பில் இந்தியாவும் கரிசனையாக உள்ள நிலையில், அதனை நடைமுறைப்படுத்துவதற்கு இந்தியாவும் தங்களாலான அழுத்தத்தை வழங்க வேண்டும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிலையான அரசாங்கம் ஒன்றின் ஜனாதிபதியாக இல்லாத நிலையில் சில விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தென்னிலங்கையைச் சேர்ந்த சிலர் முட்டுக்கட்டை போடுகிறார்கள்.

அவ்வாறு முட்டுக்கட்டை போடுபவர்களுடன்  மாகாண அதிகாரங்களை மாகாணத்துக்கு வழங்குவது தொடர்பில் பேசியிருக்கிறோம். இனிமேலும் பேசவுள்ளோம்.

ஆகவே, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் மக்களுக்கு செய்வாரா, செய்ய மாட்டாரா என்ற விவாதங்களை தாண்டி, தமிழ் மக்களின் இருப்புக்களை தக்கவைத்துக்கொள்வதற்காக பறிக்கப்பட்ட அதிகாரங்களையாவது அவர் மூலம் பெறுவதற்குரிய நடவடிக்கைகளை தொடர்வோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

“இலங்கையில் அரச சார்பற்ற வைத்திய பீடத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம்.” – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

“இலங்கையில் அரச சார்பற்ற வைத்திய பீடத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம்.” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அதற்காக அதிகளவில் வைத்தியர்களை உருவாக்குவதற்கு வைத்திய பீடங்களையும் பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க வேண்டியது அவசியம் என்றும் அரசாங்கத்தினால் நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் வைத்திய காப்புறுதி பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஜோசப் பிரேசர் வைத்தியசாலையில் நேற்று (08) நடைபெற்ற நூற்றாண்டு விழாவிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு மேலும் பேசிய அவர்,

“ஜோசப் பிரேசர் வைத்தியசாலை என்பதை விட நூற்றாண்டை கடந்துள்ள நிறுவனம் என்று கூற முடியும்.  பிரேசர்கள் ஸ்கொட்லாந்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற தலைமுறையை சேர்ந்தவர்கள்.  அங்கிருந்துதான் ஜோசப் பிரேசரும் இலங்கை வந்தார்.

பிரித்தானியர்கள் இலங்கைக்கு தேயிலை தொழிலை அறிமுகப்படுத்திய காலத்தில் அவர் ஒரு தோட்ட உரிமையாளராக இருந்தார். இலங்கைத் தேயிலைத் தோட்டங்களுக்கு மத்தியில் பிடகந்த தோட்டத்தை மையமாகக் கொண்டு தோட்டத் தொழிலை நடத்திச் சென்றார். இறுதியாக அவர் இலங்கையிலேயே உயிர் நீத்தார்.  ஏனைய தோட்ட உரிமையாளர்களுக்கு மாறாக அவரும் அவரது மனைவியாரும் இலங்கையில் ஓர் அடையாளத்தை பதித்துவிட்டு சென்றனர்.

இந்நாட்டுக்கு அவர் சேவையாற்றியுள்ள அதேநேரம் நாட்டை கட்டியெழுப்பவும் பங்களிப்புச் செய்துள்ளார். பெருந்தோட்டத் தொழிலில் இலாபம் ஈட்டிய ஏனைய நூற்றுக்கணக்கான தோட்ட உரிமையாளர்களுக்கு மத்தியில் அவரும் அவரது குடும்பத்தினரும் இந்த நாட்டிற்காக ஜோசப் பிரேசர் வைத்தியச்சாலையை விட்டுச் சென்றுள்ளனர்.

உண்மையில், இந்த மருத்துவமனை நிறுவப்பட்டபோது, இந்த பகுதி வளர்ச்சியடைந்திருக்கவில்லை. வீடுகளும் அதிகளவில் இருக்கவில்லை என்பதால் அரச ஊழியர்கள் அனைவரையும் இவ்விடத்தில் தங்க வைப்பதற்கான முயற்சிகளும் காணப்பட்டன.

அதேபோல் பொலிஸ் நிலையமொன்றை ஆரம்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டது. இறுதியாக ஜோசப் பிரேசர் வைத்தியச்சாலை ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர் வேறு முயற்சிகள் காணப்படவில்லை.

எனது பாட்டனார் பாட்டிக்கு சிரிபா வீதியில் காணியொன்றை வாங்கிக் கொடுத்திருந்தார்.  அங்கு எனது அம்மா அடிக்கடிச் சென்று வருவதை கண்டிருக்கிறேன். 1950 களில் அது வெற்று இடமாக காணப்பட்டது. இந்த வீதியில் இரண்டு அல்லது மூன்று வீடுகளை மாத்திரமே காணக்கூடியதாக இருக்கும்.

இவ்வாறானதொரு வைத்தியசாலை இல்லாததையிட்டு ஆண்கள் பொறாமை கொள்வர். ஆண்களுக்கு இவ்வாறானதொரு வைத்தியசாலை இதுவரையில் கிடைக்கவில்லை. மறுமுனையில் அது பெண்களுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வாய்ப்பு என்பதோடு, நானும் நோயாளர்களை பார்க்க பல தடவைகள் இந்த வைத்தியசாலைக்குச் சென்றுள்ளேன். எவ்வாறாயினும் இவ்வாறானதொரு வைத்தியசாலை எமக்கு கிடைத்திருப்பதையிட்டு நாம் அனைவரும் மகிழ்ச்சியடைய வேண்டும்.

இந்த நிறுவனம் நன்றாக பராமரிக்கப்பட வேண்டும். இதை ஏற்றுக்கொள்வதற்கு வைத்தியசாலையின் தலைவர் சுமலை விட பொருத்தமான எவரும் இருக்க முடியாது.  ஜோசப் பிரேசர் வைத்தியசாலை ஆரம்பிக்கப்பட்டது முதல் இதுவரையில் சிறந்த முறையில் பராமரித்து வருகிறார். நம்மிடம் உள்ள வளங்களை கொண்டு என்ன செய்ய முடியும் என்பதற்கு அவர் சிறந்த உதாரணமாவார்.

இலங்கையில் உள்ள இவ்வாறான வைத்தியசாலைகள் எதிர்காலத்தில் இலங்கையர்களுக்கு மட்டுமன்றி வெளிநாட்டினருக்கும் தேவையான சேவைகளை வழங்க முடியும். இதன் வடிவமைப்பைப் பார்க்கும் போது, இது ஹோட்டலா, வைத்தியசாலையா என்று கேள்வி எழும். நீங்கள் இங்கு வந்து பார்க்கும் போது நோயாளர்களை பார்க்க வந்திருக்கிறோமா, வார இறுதி விடுமுறையை கழிக்க வந்திருக்கிறோமா என்ற கேள்வி ஏற்படும். வைத்தியசாலையில் சேவைகள் இவ்வகையிலேயே உயர் தரத்தில் காணப்பட வேண்டும்.

இந்நாட்டுக்கு வெளிநாட்டு நோயாளர்களை மருத்துவ தேவைக்காக வரவழைப்பதற்கு மருத்துவ சுற்றுலாத்துறை மற்றும் சுகாதார சேவைகள் என்பன உயர் தரத்தில் காணப்பட வேண்டும். அவ்வாறான சேவைக்கு இந்த வைத்தியசாலையே உதாரணமாகும். எமது சுகாதார கொள்கை தொடர்பில் நாம் மீளச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்நாட்டி வைத்தியசாலை கட்டமைப்பு அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகள் என பிளவுபட்டு காணப்படுகின்றன.   பெருமளவான வைத்தியர்கள் நாட்டை விட்டுச் செல்கிறார்கள்.

அதனால் நாட்டிற்குள் அதிகளவில் வைத்தியர்களை உருவாக்க வேண்டியுள்ளது.  அதற்கமைய முதலாவது அரச சார்பற்ற வைத்திய பீடத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம்.

தெற்காசியாவின் தொழில்நுட்ப நிறுவனமான (SAITM) இனை மொறட்டுவ வைத்தியசாலைக்கு கையளித்துள்ளோம். அதேபோல் இன்னும் பல மருத்துவ பல்கலைக்கழகங்களை நாட்டில் ஆரம்பிக்க முடியும் என நம்புகிறோம். வைத்தியர்களை அதிகளவில் உருவாக்குவதற்கு அதனை தவிர மாற்று வழிகள் எவையும் இல்லை.

இலங்கை வைத்தியர்கள் இல்லாமல் ஐக்கிய இராச்சியம் தனது வைத்தியசாலைகளை நடத்திச் செல்வதில் நெருக்கடியை எதிர்கொள்கிறது. அதனால் பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இந்தியாவுடன் சேர்ந்து, நாங்கள்  ஐக்கிய இராச்சியத்தின் வைத்தியசாலை கட்டமைப்பை நாமும் நடத்திச் செல்கிறோம் என்று கூறினால் தவறாகாது.

உதவி பெறும் நாடாக மட்டுமன்றி, உதவி வழங்கும் நாடாகவும் இலங்கை மாற வேண்டும். மேலும், அரச மற்றும் தனியார் துறைகள் இணைந்து செயற்படுவதற்கான செயற்றிட்டங்களை நாம் தயாரித்துள்ளோம்.

அரசாங்கத்தினால் நாட்டு பிரஜைகளுக்கு மருத்துவக் காப்புறுதி பெற்றுக்கொடுக்கப்படவுள்ளது.  அப்போது சிகிச்சைக்காக தனியார் வைத்தியசாலைக்குச் செல்வதா அரச வைத்தியசாலையை நாடுவதா என்பதை மக்கள் தீர்மானிப்பர்.

இந்த நாட்களில் நானும் ஒரு வைத்தியரை போலவே செயற்படுகிறேன். மரணத்தின் இறுதி தருவாயிலிருக்கும் நோயாளியை சுமந்துச் செல்லும் அதேநேரம் அவருக்கு சிகிச்சையளித்து காப்பாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறேன்.

திறந்த பொருளாதார கட்டமைப்பின் கீழ் நாடு நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. அதனால் தனியார் நிறுவனங்களும் அபிவிருத்தி அடையலாம். அவ்வாறு இல்லாவிட்டால் நாட்டுக்கு முன்னேற்றம் கிட்டாது.

அதன்படி இலங்கையில் தேயிலை செய்கைக்கு அப்பால் சென்ற ஒருவராக ஜோசப் பிரேசரை கூறலாம். இலங்கையில் கோப்பிக்கான கேள்வி குறைந்து, தேயிலை செய்கை அதிகரித்த காலத்தில் அவரும் முன்னேறி நாட்டிற்கும் ஒரு வைத்தியசாலையை விட்டுச் சென்றுள்ளார். தற்காலத்தில் சுமல் பெரேரா போன்றவர்களுடன் இணைந்து இந்தத் துறையை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும்.” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ரணில் விக்ரமசிங்கவுக்கு உயிர் அச்சுறுத்தல் – 19 வயதுடைய நபர் கைது !

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் தமது பேஸ்புக் கணக்கில் பதிவிட்டிருந்த இளைஞர் ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவர் எப்பாவல, மெடியாவ பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய ஒருவரென தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் வியாழக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தம்புத்தேகம மற்றும் எப்பாவல பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.