2 மில்லியன் ஏக்கர் காணிகளை விவசாயிகளுக்கு முழு உரிமத்துடன் வழங்க அரசாங்கம் தீர்மானம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

விவசாயத்துறையை மேம்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கையாக சுமார் 2 மில்லியன் ஏக்கர் காணிகளை, அந்தக் காணிகளை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழு உரிமத்துடன் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் நேற்று சனிக்கிழமை (18) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தெற்காசிய பிராந்தியத்தில் வளர்ந்து வரும் பொருளாதார சக்தியைப் பயன்படுத்த பிராந்திய நாடுகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமாகும். ஆசியாவை நோக்கி நிகழும் பொருளாதார இடப்பெயர்வு குறித்து நாம் அவதானம் செலுத்த வேண்டும். மாலைதீவின் புதிய ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்சுவுடனான இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் இலங்கை மற்றும் மாலைதீவுடன் இணைந்து சுற்றுலா வலயமொன்றை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இலங்கையின் புதிய பொருளாதார மறுசீரமைப்புகள் குறித்து அவதானம் செலுத்தியிருக்கின்றோம். போட்டித்தன்மை கொண்ட மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம், பசுமைப் பொருளாதாரம், வலுசக்தி மாற்றம் ஆகியவற்றை ஏற்படுத்துவது முக்கியத்துவமுடையதாகும்.

இலங்கையை பிராந்திய பொருட்கள் பரிமாற்ற மையமாக மாற்றுவது முக்கியத்துவமுடையதாகும். அதிக வருமானம் ஈட்டும் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது, விவசாயத்தை நவீனமயமாக்குவது, காணி உரிமை தொடர்பான மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பாகவும் அவதானம் செலுத்த வேண்டும்.

விவசாயத்துறையை மேம்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கையாக சுமார் 02 மில்லியன் ஏக்கர் காணிகளை, அந்தக் காணிகளை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழு உரிமத்துடன் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  அத்துடன், பாரியளவிலான நவீன விவசாய தொழில் முயற்சிகளை உருவாக்குவதற்கு அரச மற்றும் தனியார் துறைகள் இணைந்து சில திட்டங்களை செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவுக்கு பிரவேசித்தல் உள்ளிட்ட தொழில்நுட்பத் துறையின் முன்னேற்றத்துக்காக அரசாங்கம் ஏற்கனவே நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. பாரிய பொருளாதார மத்திய நிலையத்தை உருவாக்குவதன் மூலம் தமிழ்நாடு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் ஏற்படக்கூடிய தொழில்மயமாக்கல் குறித்தும் அவதானம் செலுத்த முடியும்.

அதேபோன்று, பங்களாதேஷ், மியன்மார், கம்போடியா, லாவோஸ், கிழக்கு மற்றும் மேற்கு ஆபிரிக்க பிராந்திய நாடுகளில் உள்ள புதிய முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்ந்து அந்த நாடுகளிலும் முதலீடு செய்ய இலங்கை தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இலங்கை, இந்தியா மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகள் கூட்டாக இணைந்து பிராந்தியத்தில் சுற்றுலாத்துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்காக நேபாளத்தையும் ஒன்றிணைக்க முடியும்.

மேலும், வங்காள விரிகுடாவை சூழவுள்ள நாடுகளுக்கிடையில் சுற்றுலா வலயத்தை உருவாக்கும் திட்டம் காணப்படுகிறது. கெரீபியன் தீவுகளை விட இது மிகப்பெரிய மாற்றீடாக அமையும். பிராந்திய விரிவான பொருளாதார பங்காளித்துவத்தில் இணைவதற்கு இலங்கை தற்போது விண்ணப்பித்துள்ளது. இந்தியா மற்றும் பங்களாதேஷுடன் பரந்த பொருளாதார பங்காளித்துவத்தை ஏற்படுத்துவது உட்பட இலங்கையில் தற்போது மேற்கொள்ளப்படும் வர்த்தக பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒப்பந்தங்கள் குறித்தும் இளம் தொழில்முனைவோர் கவனம் செலுத்த வேண்டும்.

பிராந்தியத்தில் உள்ள பொருளாதார ஆற்றல்கள் குறித்து நம்பிக்கையுடன் இருக்கின்றோம். எதிர்பார்க்கப்படும் பிராந்திய பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்காக தீவிரமாக பங்களிக்க வேண்டும் என்று இளம் தொழில்முனைவோரிடம் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *