சேனன்

சேனன்

இலக்கியச் சந்திப்புக்கள் : தொடரும் குழப்பமும்- குழுவாதமும் !

பாரிஸில் இலக்கியச் சந்திப்பு மார்ச் 30 மற்றும் 31 தினங்களில் நடைபெற்றது. வழமை போன்று விமர்சனங்களுக்கு எவ்வித குறையும் இருக்கவில்லை. இலக்கியச் சந்திப்பு அதன் ஆரம்பம் முதலே ஜனநாயக மறுப்புக்கு எதிராகவும், சாதியத்துக்கு எதிரானதாகவும் மாற்றுக் கருத்துக்களுக்கான குரலாகவும் நீண்டகாலமாக ஒலித்து வருகின்றது. அதே சமயம் முரண்பாடுகளுக்கு எவ்வித பஞ்சமும் இலக்கியச் சந்திப்புக்களில் இருக்கவில்லை. இந்த இலக்கியச் சந்திப்பிலும் கூட.

“இலக்கியத்தின் பெயரில் இலக்கியமற்றோர்” என்ற தலைப்பில் எழுத்தாளர் சேனன் தேசம்நெற் இல் ஒரு கட்டுரையை எழுதி இருந்தார். இலக்கியச் சந்திப்பினைத் தொடர்ந்து எழுத்தாளர் மௌரூப் பௌசர், இலக்கியச் சந்திப்பின் முக்கிய செயற்பாட்டாளரான உமா ஷானிகாவை நோக்கி சில பாரதூரமான குற்றம்சாட்டும் கேள்விகளை எழுப்பி உள்ளார். 01. இலக்கிய சந்திப்பில், உங்களுடன் சேர்ந்தியங்கும் நபர்கள் மீதும், அவர்களின் தோழமைகள் மீதும் பாலியல் குற்றாச்சாட்டுக்கள் உள்ளனவே?
02. இலக்கிய சந்திப்பின் நிகழ்ச்சி நிரல் யாரால்? எப்படித் தீர்மானிக்கப்படுகிறது?
03. இலக்கிய சந்திப்பினை வழி நடாத்தும் ஒரு பிரிவினர் பல கொலைகளுக்கும் ஆட்கடத்தலுக்கும் காரணமாக இருந்த கோதா கொலைக்குழுவின் பகுதியினராக உள்ளார்களே?
என்று இலக்கியச் சந்திப்புக்களில் நீண்டகாலம் தொடர்ந்து செயற்பட்ட எழுத்தாளர் பௌசர் கனதியான பல கேள்விகளை எழுப்பி உள்ளார். இலக்கியச் சந்திப்பு நபர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டுகள், கொலைகள் ஆட்கடத்தல்கள் பற்றிய குற்றச்சாட்டுக்கள் மிகப் பாரதூரமானவை.

இக்குற்றச்சாட்டுக்கள் பிள்ளையான் என்று அறியப்பட்ட இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தான் மீதான அரசியல் குற்றச்சாட்டுக்களின் வெளிப்பாடாகவே வைக்கப்படுகின்றது என்பதிலும் எவ்வித இரகசியமும் இல்லை. இக்குற்றச்சாட்டுகனை பௌசர் எழுப்பக் காரணம் இலக்கியச் சந்திப்பின் முக்கிய செயற்பாட்டாளர் ஸ்ராலின் ஞானம் இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தனின் ஆலோசகராக ஆரம்பம் முதலே கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வருகின்றார். சந்தரகாந்தனின் இரு நூல்களுக்கும் பின்னணயில் இவரும் இருந்துள்ளார் என்றும் நம்பப்படுகின்றது. இவை எதனையுமே ஸ்ராலின் ஞானம் இரகசியமாகச் செய்யவில்லை. மிக வெளிப்படையாகவே சந்திரகாந்தனின் ஆலோசகராக செயற்படுகின்றார்.

இந்த இலக்கியச் சந்திப்பில் நிர்மலா ராஜசிங்கம் மற்றும் சின்னத்துரை ராஜேஸ்குமார் ஆகியோரும் மிக முக்கிய செயற்பாட்டாளர்களாக உள்ளனர். பௌசருடைய சேனனுடைய குற்றச்சாட்டுகள் இவர்களை நோக்கியும் விரிந்துள்ளது. அதற்குள் செல்வதற்கு முன்,

31ம் நாள் நடைபெற்ற இலக்கியச் சந்திப்பு சாதியப் பிரச்சினை தொடர்பான உரையாடல் களமாக அமைந்தது. தலித்மேம்பாட்டு முன்னணியின் தலைவர் தேவதாசன் தலைமையில் இடம்பெற்றது. சாதியப் பிரச்சினையின் வரலாற்றுப் பின்னனியையும் பல சம்பவங்களையும் தொகுத்து வழங்கினார் அந்நிகழ்வுக்குத் தலைமை தாங்கிய தேவதாசன்.

தேவதாசனின் கருத்துக்களுக்கு வலுச் சேர்க்கும் வகையில் உரையாற்றிய சுவிஸிலிருந்து வந்து கலந்துகொண்ட பொதிகை ஜெயா “தன்னுடைய பெண் பிள்ளைகளுக்கு திருமணம் பேசிய போது 14 சம்பந்தங்கள் ‘உங்களுடைய சாதிக்குள் தாங்கள் திருமணம் செய்யத் தயாரில்லை’ என்று சொல்லி மறுத்ததைச் சுட்டிக்காட்டினார். “அப்படியானால் நீங்கள் உங்கள் சாதிய படிநிலையில் கீழுள்ள சமூகத்திற்குள் மணம் முடிப்பீர்களா?” என்று சபையிலிருந்து ஒரு கேள்வி எழும்பிய போது “நிச்சயமாக அதற்கு எந்தத் தடையும் இல்லை எனப் பொதிகை ஜெயா தெரிவித்தார்.

இந்தக் காலத்தில், இந்த நேரத்தில் இந்தக் கள ஆய்வு எதற்கு? என்ற உப்புச்சப்பற்ற கேள்வியை முன் வைத்த நெய்தல் நாடான், சாதியம் என்பது புரையோடிப் போயிருந்தாலும் இன்று பிரதான பிரச்சினையாக இருப்பது இன ஒடுக்குமுறை என்ற அடிப்படையில் தன் கருத்தை முன்வைத்தார். சாதியமில்லை என்று அல்லது சாதியம் தணிந்து கொண்டிருக்கின்றது என்பதெல்லாம் ஒரு சாதிமான் அரசியல் அல்லது தங்களையும் உயர்சாதியினராக மேலுயர்த்தும் அரசியல் போக்கின் வெளிப்பாடே. இந்த உப்புச்சப்பற்ற கேள்விக்கே பதிலளித்து அவர்களை மௌனிக்க வைக்காமல் அவர்களை ஒரு பெரிய எதிரிகளாக கட்டமைக்கும் வகையில் சந்திப்பு திசை திரும்பியது.

இந்த இலக்கியச் சந்திப்பில் அங்கிள்ஸ் அன் அன்ரிகள் மதிக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரனை அரசியல் குருவாக ஏற்ற யோகு அருணகிரி தலைமையில் தான் இந்த நெய்தல் நாடான், கார்வண்ணன் மற்றுமொரு நண்பர் என நால்வரும் அங்கு வந்திருந்தனர். இவர்களது கேள்வி ஆரம்பம் முதல் இறுதிவரை இலக்கியச் சந்திப்பில் இலக்கியம் பற்றி கதைக்காமல் ஏன் சாதியம் பற்றி மட்டும் கதைக்கிறீர்கள்? என்பது ஒன்றே.”நீங்கள் சாதிய அரசியல் செய்கிறீர்கள்” என்ற பதிலையும் அவர்கள் வைத்திருந்தனர். கேள்வியையும் கேட்டு உங்களை கஸ்டப்படுத்தக் கூடாது என்று அவர்களே பதிலும் சொல்லி விட்டார்கள். அதற்கு ஏன் இலக்கியச் சந்திப்பு அவ்வளவு குழப்பம் அடைந்தது என்பது தெரியவில்லை.

“சாதியம் புரையோடிப் போய் இருக்கிறது. அதனால் சாதிய அரசியலை முன்னெடுக்கிறோம். தமிழ் தேசியம் சாத்தியமாக வேண்டும் என்றால் சாதியம் இல்லாத பிரதேசவாதம் இல்லாத தமிழ் சமூகம் உருவாக்கப்பட வேண்டும்” தோழர்களே!!! என்று ஒரு ஸ்ரேற்றமன்றை விட்டுட்டு போக வேண்டியது தானே. அதைவிட்டு விட்டு தலித் மேம்பாட்டு முன்னணித் தலைவர் தேவதாசனுக்கு கூட்டம் எப்பிடி நடத்துவது என்று உயர்சாதி வெள்ளாள மேட்டுக்குடி ஆங்கிலீஸ் தெரிந்த நிர்மலாவும் ராகவுனும் கிளாஸ் எடுக்க வேண்டிய தேவையே இல்லையே. புலிகள் மிகப் பலமாக இருந்த காலத்திலேயே பல கூட்டங்களை நடத்திய தேவதாஸனுக்கு கூட்டம் நடத்த தெரியாதா? கூட்டத்தை நிர்மலா ராஜசிங்கம் குழப்பிய அளவுக்கு வேறு யாரும் குழப்பியதாகத் தெரியவில்லை. இலக்கியச் சந்திப்பில் கேள்வி கேட்பது எப்படி ஒரு பாரிய குற்றமானது?

அதனைத் தொடர்ந்து கருத்து வெளியிட்ட அரசியல் விமர்சகர் கார்வண்ணா “அச்சுவேலி தன்னுடைய ஊர் என்றும் அங்கு இராணுவத்தைக் கூட்டி வந்து தேர் இழுக்க வைத்தது சாதியப் பிரச்சினையால் அல்ல” என்று சடைந்தார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களிடையே உள்ள முரண்பாட்டால் லண்டனில் இருந்து நாடு திரும்பிய சகோதரர் அரசோடு தனக்குள்ள உறவை நிரூபிக்கவே ஜேபிசி இயந்திரத்தை கொண்டு வந்து தேர் இழுத்ததாகத் தெரிவித்தார். மேலும் ஆலயத்தின் பின்பக்கமாக உள்ள வெள்ளாளர் யுத்தகாதலத்தில் பள்ளர் சமூகத்தை அழைத்து அவர்களுக்கான உதவிகளை வழங்கியதாகவும் கார்வண்ணன் சுட்டிக்காட்டினார்.

இலக்கியச் சந்திப்பு என்பது ஜனநாயக மறுப்பு, சாதிய மறுப்பு ஆகியவற்றுக்கு எதிரான ஒரு செயல் வடிவம் எனத் தெரிவித்தார் எழுத்தாளர் சரவணன். இலங்கையில் சாதியம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டு யாழ்ப்பாணத்தில் உள்ள சாதியப் பிரச்சினைகளைப் பற்றி மட்டும் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். பொதுமைப்படுத்தல்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்றார் சரவணன்.

பாஸ்கரன் “சாதிப்பிரச்சினை மெருகூட்டப்பட்டு வருகின்றது. சாதிப் பிரச்சினையை அழிக்க வேண்டும் என்றால் மதத்தை அழிக்க வேண்டும். மதத்தை அழிக்க நான் தாயர். நீங்கள் தயாரா?” என்றவர் சாதிய பிரச்சினை என்பது அரசியலுக்காகத் தூண்டப்படுவதாகத் தெரிவித்தார்.

விஜி கருத்துத் தெரிவிக்கையில் சாதியம் இருக்கு ஆனா இல்லை. இருக்கு ஆனா குறைய. இருக்கு ஆனா … புகலிடத்தில சாதியில்லை. நீங்க பதினொரு மாப்பிளையா பார்த்தீங்கள்? என்று நளினமாக தன் கருத்தை முன் வைத்தார்.

நீங்கள் என்ன சாதிய உணர்வை வைத்திருக்கின்றீர்கள் என்பது உங்கள் உரையாடல்களிலேயே வருகின்றது. எந்த சாதிக்கு எந்த சாதி உதவுகின்றது என்பதையெல்லாம் மிகத் தெளிவாகவே சொல்கின்றீர்கள் என்று சுட்டிக்காட்டினார் தலித் மேம்பாட்டு முன்னணியின் முக்கிய செயற்பாட்டாளர் அசுரா.

ஒடுக்கப்பட்ட சமூகங்களில் உள்ளவர்கள் பொதுவாக தங்களுடைய சாதியை தங்களுடைய பிள்ளைகளுக்கு சொல்வதில்லை. ஆனால் ஒடுக்குகின்ற சமூகம் தங்களுடைய பிள்ளைகளுக்கு தங்களுடைய சாதியைத் தெளிவாக ஊட்டி வளர்த்துள்ளனர் என உமா ஷானிகா தெரிவித்தாரர். அவர் மேலும் கூறுகையில் போராட்ட காலத்தில் சாதி இருக்கவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்த உமா தென்னியானின் ‘ஏதனங்கள்’ அதனை உறுதிப்படுத்துவதாகத் தெரிவித்தார்.

புலம்பெயர்ந்த சமூகத்திலிருந்து அனுப்பப்படுகின்ற பணம் சாதியத்தை இன்னமும் வளர்க்கவே பயன்படுகின்றது. வட மராட்சியில் இன்னமும் பல ஆலயங்கள் அனைவருக்குமமாக திறந்துவிடப்படவில்லை. ஆலயங்கள் கட்டப்படுகின்றதேயல்லாமல் தொழிற்சாலைகள் அமைக்கப்படுவதில்லை என்றார் இளங்கோவன்.

வடமராட்சியில் உள்ள பொலிகண்டிச் சுடலையில் மூன்று சாதிக்கும் மூன்று இடங்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதைச் சுட்டிக்காட்டிய ஒருவர் அதனை சுவிஸ் வந்த பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்குக் கொண்டு சென்றதாகவும் தெரிவித்தார். அதற்கு அப்பாராளுமன்ற உறுப்பினர் அதுவொரு பாத்தி தான் போட்டு இருக்கின்றது என்று கூறியதை அங்கு சுட்டிக்காட்டினார்.

நிர்மலா ராஜசிங்கம் சாதியம் இன்னமும் ஆக்ரோசமாக இருக்கின்றது என்பதை வலுப்படுத்தும் வகையில் சுண்ணாகம் சூறாவத்தை, புத்தூர், அச்சுவேலிச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டி பாஸ்கரனுக்கு பதிலளித்தார். ஆனால் பாஸ்கரனை நோக்கிப் பதிலளித்த நிர்மலா, பாஸ்கரன் பதிலளிக்க முன்வந்ததை சபைநாகரீகம் தெரியவில்லை என்று நையாண்டி பண்ணிணார். அதற்கு மீளவும் பதிலளித்த பாஸ்கரன் நீங்கள் அரசியல் நோக்கத்திற்காகவே சாதியத்தை முன்வைப்பதாக மீண்டும் குற்றம்சாட்டினார்.

சாதிப் பிரச்சினை என்பது குண்டியில் பச்சை மட்டை அடிபோட்டு தீர்க்கிற பிரச்சினையில்லை. இது ஒவ்வொருத்தருடைய மூளையில இருக்கிற பிரச்சினை என்றார் முத்துசிறி. இங்கு இருப்பது சாதிய சமூகங்கள். தங்களுக்குள் அகமணமுறையைக் கொண்டிருக்கின்ற சமூகங்கள். அங்கு போராட்டத் தேசியத்துக்குப் பதிலாக அங்கு இருப்பது சமரசத் தேசியம். அதற்கு சாதியம் அவசியமானது என்ற முத்து சிறி ஒடுக்குமுறை தீவிரமாகும் போது அணிசேர்தல்கள் இயற்கையாக நிகழும் என்று கூறிக்கொண்டு சாதிய அரசியல் செய்வதாகக் குற்றம்சாட்டிய இளைஞர்களைப் பார்த்து ஏன் ரீ குடிக்கவில்லை என்று கேட்டு அமர்ந்தார்.

இது பற்றி அங்கு கருத்துத் தெரிவித்த இன்னுமொருவர், தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பது சுதந்திரத்துக்குப் பின் ஒரு எழுபது ஆண்டுப் போராட்டம். ஆனால் சாதியம் என்பது நான்காயிரம் வருடங்களாக அடக்கி ஒடுக்கி இன்னமும் அவன், இவன் என்று இன்னமும் பேசிக்கொண்டு வெட்கக் கேடன நிலையில் தான் நாங்கள் உள்ளோம். இன்றைக்கும் கொல்லன்கலட்டி, வண்ணார்பண்ணை, அம்பட்டன் பாலம் என்ற சாதியப் பெயர்களோடு தான் ஊர்கள் உள்ளது. முதலில் நாங்கள் இதனை உடைக்க வேண்டும் என்றார் அவர்.

இறுதியாக தனது கருத்தை வெளியிட்ட ஸ்ராலின் ஞானம் இந்த யாழ்ப்பாணத்தோட மட்டக்களப்பை இணைக்கச் சொல்லியா கேட்கின்றீர்கள் என்ற கேள்வியை எழுப்பி அரங்கை விட்டு வெளியேறினார்.

கூட்டத்தின் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நிர்மலா ராஜசிங்கம், சின்னத்துரை ராகவன் இருவருமே கூட்டத்தை தமது அதிகாரப் பிடிக்குள் வைத்திருப்பதற்கான அத்தனை செயற்பாடுகளையும் மேற்கொண்டதுடன் சின்னத்துரை ராஜேஸ்குமார், யோகு அருணகிரியுடனும் அவரின் நண்பர்களுடனும் சண்டைக்குத் தயாராய் விறுக்கென்று எழுந்ததும் ஷோபாசக்தி அவரைத் தடுப்பதும் வீடியோக்களிலும் பதிவாகியுள்ளது.

எப்போதும் கொள்கை அடிப்படையில் இல்லாமல் குழவாத மனப்பான்மையோடு செயற்படும் நிர்மலா ராஜசிங்கம் சின்னத்துரை ராஜேஸ்குமார், இருவரதும் அரசியல் பயணம் தனிநபர் வழிபாடு மற்றும் குழவாத மனப்பான்மையோடு தான் இருந்தது. தொண்ணுறுக்களின் பின் அரசியல் பற்றி அறிய விளைந்த யோகு அருணகிரி போன்றவர்களுக்கு இருந்த ஒரே அரசியல் தெரிவு தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டுமே. அந்தக் காலகட்டத்தில் வேறெந்த அரசியல் இயக்கங்களும் இருக்கவில்லை.

ஆனால் 1980க்களில் நிர்மலா ராஜசிங்கம், சின்னத்துரை ராஜேஸ்குமார் போன்றோர் விடுதலைப் போராட்டத்தில் தங்களை இணைத்துக்கொண்ட போது அவர்களுக்கு இடதுசாரி அமைப்புகளில் இணைந்து அவ்வமைப்புகளை வலுப்படுத்தவும் முற்போக்கான பாத்திரம் வகிக்கவும் வாய்ப்புகள் இருந்தது. ஆயினும் அவர்கள் பிரபாகரனை வைத்துக்கொண்டு தாங்கள் அரசியல் நடத்தாலாம் என்ற குறுக்குச் சிந்தனையில் பிரபாகரனோடு தங்களை இணைத்துக்கொண்டனர். இவர்கள் தங்களை முன்நிறுத்துவதற்கு அப்பால், ஒரு போதும் இடதுசாரிச் சிந்தனையையோ முற்போக்கான பாத்திரத்தையோ கொண்டிருக்கவில்லை.

இன்றும் இவர்களது அடையாளம் என்பது இவர்கள் புலிகளில் இருந்ததும், அதில் இருந்து வெளியேறியதும் வெளியேற்றப்பட்டதும் இவருடைய சகோதரி ராஜினி திரணகம புலிகளால் படுகொலை செய்யப்பட்டதும் தான். இவர்கள் அமைப்பு ரீதியாகவோ அல்லது கருத்தியல் ரீதியாகவோ இதுவரை எதனையும் சாதிக்கத் தவறிவிட்டனர். காலத்துக்குக் காலம் தங்கள் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை வெளிப்படுத்தவும் தயங்குவதில்லை. ரிபிசி வானொலி நிலையம் உடைப்பு, தேசம்நெற் யை மூடும்படி கோரி கையெழுத்துப் போராட்டம், குழவாத செயற்பாடுகள் மற்றும் சமூகங்களிடையே முரண்பாடுகளைத் தூண்டிவிடுவது, முதலாளித்துவத்தின் சார்பில் மார்க்ஸிய விரோதக் கருத்துக்களைப் பரப்புவுது என இவர்களுடைய சமூக விரோதச் செயற்பாடுகள் நீண்டுகொண்டே செல்கின்றது. நடந்து முடிந்த இலக்கியச் சந்திப்பிலும் இவர்கள் தாங்கள் யார் என்பதை உறுதிப்படுத்தத் தயங்கவில்லை.

சின்னத்துரை ராஜேஸ்குமார் அரங்கம் இணையத்துக்கு இலக்கியச் சந்திப்பு பற்றி எழுதிய கட்டுரையில்: “டெலோன் மாதவன் என்ற இரண்டாம் தலைமுறையை சேர்ந்த பிரான்ஸ் நாட்டு அறிஞர் பேச அழைக்கப்பட்டிருந்தார். அவர் புவியியலில் டாக்டர் பட்டம் பெற்றவர்” என்று புகழாரம் சூட்டி எழுதியுள்ளார். காரணம் அவர் தாங்கள் வைத்துள்ள கருத்தை ஆதரிக்கும் வகையில் ஆய்வை மேற்கொண்டு விட்டார் என்பதற்காக. ஆனால் உலகமே 21ம் நூற்றாண்டின்படி மிகச் சிறந்த சிந்தனையாளர் என்று மதிப்பவர் பற்றி நிர்மலா ராஜசிங்கம் வருமாறு கூறுகின்றார்: “கார்ள் மாக்ஸ் வந்து ஒரு பச்சைப் படுமோசமான ஒரு ஆணாதிக்கவாதி. குடிச்சுப் போட்டு கானுக்குள் விழுந்து கிடந்து, வந்து வேலைகாரப் பெண்மணியை… !”.

டெலோன் மாதவன் அறிஞன் கார்ல் மார்க்ஸ் …? இவருக்கு ஷோபா சக்தி வக்காலத்து வேறு.

ஒரு முதலாளித்துவ ஊடகம் கூட செய்யத்துணியாத அளவுக்கு 21ம் நூற்றாண்டின் ஒரு சிந்தனையாளனை இவ்வளவுக்கு நடத்தைப் படுகொலை செய்யும் நீங்கள் சாதாரண எழுத்தாளர்களை மனிதர்களை இவ்வாறு தானே அவமதித்து வருகின்றீர்கள். உங்களுக்கு யாரையும் கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள எந்தத் திராணியும் இல்லை. உடனடியாக அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை அவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தத் தயங்குவதேயில்லை.

தற்போது மௌரூப் பௌசர் கேட்கின்றார், உங்கள் தோழமைகள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது, கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது என்று. கார்ள் மார்க்ஸ் (1818 – 1883) உடைய காலம் அவர் பிறந்து 200 ஆண்டுகளைத் தாண்டிவிட்டது. அவர் மீது நீங்கள் வைத்த குற்றச்சாட்டுகள் உண்மையா? இல்லையா? முதலாளித்துவ ஊடகங்களின் பரப்புரையா என்பதே விவாதத்திற்குரியது. இப்போது உங்கள் மீது வைத்துள்ள குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன? கார்ள் மாக்ஸின் தனிநபர் ஒழுக்கம் பற்றி கேள்வி எழுப்பும் உங்களதும் உங்கள் இணையரதும் உங்கள் சார்ந்த தோழமைகளதும் தனிநபர் ஒழுக்கம் பற்றி என்ன சொல்லப் போகின்றீர்கள்? உங்கள் இணையரை கானிலிருந்து தூக்கிய பலர் ஐரோப்பாவில் குறிப்பாக லண்டனில் உள்ளனர்.

தயவு செய்து கருத்தியல் ரீதியாக மோதுங்கள். சுஜிகூலோடு இரவில் ரிக்ரொக்கில் சல்லாபித்துவிட்டு, மதியம் லாச்சப்பலில் அவரை தமிழ் தேசியத்தை போர்த்துக்கொண்டு அடித்தது போல் ரீல் விடுவதை ஒழுக்கசீலர்களான நிர்மலா – ராஜேஸ்குமார் நிறுத்த வேண்டும். புலம்பெயர் தேசத்தில் பா உ சுமந்திரனை துரோகி என்று தூசணங்களால் வசைபாடி தாக்க முற்பட்ட அதே புலிக்குட்டிகள் தான் சுஜிகூலையும் தாக்குகிறார்கள் என்ற அடிப்படையைப் புரிந்துகொள்ளாதவர்கள் தான் யோகு அருணகிரி போன்ற அடிப்பொடிகள். நீங்கள் பழம் தின்று கொட்டைபோட்ட அன்ரி அங்கிள்ஸ் தான் அவர்களுக்கு நிலாச்சோறு ஊட்டி கதையளக்க வேண்டும். இதெல்லாம் அவர்களுக்குப் புரிய முதல் அவர்களுக்கோ உங்களுக்கோ டெமென்சியா வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

கார்ள் மார்க்ஸ் மனித முரண்பாடுகளுக்கு பொருளாதாரப் பிரச்சினையே மிக முக்கியமானது என்ற கருதுகோலை முன்வைக்கின்றார். உபரியே அனைத்து அநியாயங்களுக்கும் அடிப்படை என்பதை மிகத் தெளிவாக அறுதியிட்டு கூறுகின்றார். இதனை அவர் முதலாளித்துவம் முழுமையடைய முன்னரேயே பல்தேசிய நிறுவனங்கள் என்ற கருத்தாக்கம் உருவாவதற்கு முன்னரே வரையறுத்துள்ளார். சாதியக் கட்டமைப்புகளை பொருளாதாரத்தால் மட்டும் தீர்த்துவிட முடியாது என்பது பின்நாட்களில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதற்காக நிர்மலா ராஜசிங்கம் தனிமனித ஒழக்கம் பற்றி அண்ணாந்து படுத்துக்கொண்டு துப்பியதன் மூலம் தன்னையாரென்று மீண்டுமொருமுறை அம்பலப்படுத்தி உள்ளார்.

சாதிகள் இல்லாத தமிழ் தேசியத்தை கட்டமைத்துவிட்டோமென்று எந்த ஒடுக்கும் சாதியைச் சேர்ந்த கனவான்கள் ஓங்கிக் கத்தினாலும் கதறினாலும் அதற்கு எந்த ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் தாங்களும் தாளம் போட்டாலும் ஜால்ரா போட்டாலும் கனன்றுகொண்டிருக்கும் சாதியம் நிச்சயம் இவர்களைச் சுடும். ஆனால் நிர்மலா – ராகவன் போன்ற உயர்சாதி மேட்டுக்குடிகளை வைத்துக்கொண்டு ஜனநாயகத்துக்கான சாதியத்துகு எதிரான எதையும் சாதித்துவிட முடியாது.

“இலக்கியத்தின் பெயரில் இலக்கியமற்றோர்” – சேனன்

‘இலக்கியச் சந்திப்பு’ என்ற பெயரில் ஐரோப்பாவில் இருந்து சிலர் இயங்கி வருகிறார்கள். இவர்கள் ஒரு சிறு குழு – இருப்பினும் ‘சக்தி வாய்ந்த குழு’. ஏனெனில் இவர்களில் பலர் இலங்கை அரச ஆதரவாளர்கள் – கொடூரங்கள் செய்த அதிகார சக்திகளின் நெருங்கிய நட்புகள். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் இலக்கியம் செய்வதில்லை. தனது சொந்த தேவைகளுக்காக இந்தச் சந்திப்பை பாவித்துக் கொள்ளும் ஷோபாசக்தி தவிர்ந்து யாரும் எதுவும் இலக்கிய -தத்துவ பங்களிப்பு செய்ததாக எனக்குத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் அந்த சாதனைகளை கூறுங்கள். இவர்கள் மத்தியல் தத்துவார்த்த தெளிவு உள்ளவர் என ஒருவரைக்கூட குறிப்பிட முடியாது. பல ஆண்டுகளாக வெற்று அலட்டல்களை மட்டுமே இவர்கள் செய்து வருகிறார்கள். இந்தக் கூட்டத்துக்கு அழைக்கப்படும் பலருக்கும் உண்மை விபரங்கள் சொல்லப்படுவதில்லை. அரசியற் பின்னணி தெரியாது கலந்து கொண்டு சிலர் சிக்கலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

 

நிதானமான உரையாடல் – அறிவு பூர்வமான விவாதம் என்பதெல்லாம் இவர்களுக்கு ஒருபோதும் சாத்தியமில்லை. அதற்கான எந்த ஒரு ஆதாரத்தையும் யாரும் தந்துவிட முடியாது. வன்முறை மிரட்டல்கள் மற்றும் அவதூறுகள் மட்டுமே இவர்களின் வரலாறாக மிஞ்சி நிற்கிறது.

 

வன்முறை எனச் சொன்னதும் – வெறும் வார்த்தையில் வன்முறை என நினைக்க வேண்டாம். இலங்கையில் நடந்த பல கொடூரங்களை நியாயப் படுத்தல் – மற்றும் – கண்டும் காணாது விடல் – மறைத்தல் – போன்ற நடவடிக்கைகளைத் தொடர்ந்து செய்து வருகிறார்கள். இதன் புதிய உச்சக் கட்டமாக இலங்கையில் நடந்த ஏப்ரல் படுகொலை பின்னணி வரலாற்றைத் திரிக்கும் வேலையில் இறங்கி இருக்கிறார்கள்.

 

பாலியல் வன்முறை முதற்கொண்டு பல்வேறு பாரிய குற்றச் சாட்டுகளை எதிர் கொண்டு வருபவர் பிள்ளையான் எனபப்டும் முன்னாள் போராளியும், இலங்கை பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன். இவற்றில் பல குற்றச் சாட்டுகளுக்கு ஏராளமான சாட்சிகள் ஆதாரங்கள் இன்று வெளிவந்துள்ளன. குறிப்பாக ஏப்ரல் படுகொலை சார்பாக இவரின் தொடர்பு பற்றி சர்வதேச ஊடகங்கள் ஸ்தாபனங்கள் உட்பட பலர் தகவல்களை வெளியிட்டுள்ளனர். இந்த வரலாற்றைத் திரிபு செய்யும் நடவடிக்கையின் பகுதியாகப் பிள்ளையானின் ‘பிரச்சாரக் குழு’ ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளது. இவரை நல்லவர் வல்லவர் அறிவின் சிகரம் என்றெல்லாம் புலம்பித் தள்ளும் குடுப்பம்தான் இலங்கியச் சந்திப்பை ஒழுங்கு செய்வதிலும் ஈடுபட்டு வருகிறது. கேட்டால் அதுக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை என இவர்கள் சொல்லக் கூடும். அந்தப் பேச்சு ஒளித்து நின்று குத்தும் நடவடிக்கை. விமர்சனத்தோடு ஒன்றுபடும் களப்போறல்ல இலக்கிய சந்திப்பு. தவிர பிள்ளையான் மேலிருக்கும் விமர்சனம் என்பது தள்ளி வைத்து விட்டு போகக் கூடியதல்ல. அதை மறைத்து இலக்கிய அல்லது வேறுவகை ‘கூட்டுகள்’ போடுவது அரசியல் கேவலம்.

 

பிரச்ச்சார தளத்தை நேரடியாக கட்டும் வலிமை இவர்களிடம் கிடையாது. இலக்கிய சந்திப்பு என்ற போர்வையின் பின் இருந்து கொண்டு அரச ஆதரவு அரசியலை மறைமுகமாக செய்வது இந்த சந்திப்பு குழுவுக்கு ஒன்றும் புதிதல்ல. இலங்கை யுத்தம் முடித்தமைக்கு ராஜபக்சவுக்கு நன்றி சொன்னது. ஓடிய இரகுத்தம் ஆற முதல் இலக்கிய சந்திப்பை இலங்கைக்கு எடுத்துச் சென்று கொண்டாடியது. யுத்த மறுப்பு செய்ய மறுத்தது மட்டுமின்றி – யுத்த மறுப்பு செய்தோரை பாசிச ஆதரவாளர் என அவதூறு செய்தது. புலிகள் கொன்று குவிக்கப்பட வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தோடு படுகொலையை நியாயப் படுத்தியது. பின்பு கொலைகளை தமிழ் மக்கள் மறந்துவிட வேண்டும் என பிரச்சாரம் செய்தது. கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிரான சமீபத்து போராட்டங்கள் எதையுமே ஆதரிக்க மறுத்தது. என நாம் அடுக்கிக் கொண்டு போக முடியும்.

 

இவ்வளவு கேவலமான அரசியல் பின்னனி உள்ள இவர்கள் இலங்கை அரச ஆதரவு நிலைப்பாடு என நேரடியாக ஏன் சொல்வதில்லை? தம்மை முற்போக்கு நபர்கள் எனக் காட்டிக் கொள்வதன் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் – மற்றும் -சிந்தனையாளர்/இலக்கியச் செயற்பாட்டாளர்/பல்கலைக்கழக புத்தி ஜீவிகள் மத்தியில் சில ஆதரவை பெறுவது – அதன் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் தமது இருப்பை தக்க வைப்பது என்பதும் இவர்களில் பலரதும் நோக்கம். நேரடியாக தமது அரசியல் நிலைப்பாட்டை வாதிக்கும் மன பலம் – மன சுத்தி இவர்களில் யாருக்கும் கிடையாது. பொய்ப் பெயர்களின் பின் இருந்து இயங்குவது – தொலை பேசி மற்றும் தனியார் உரையாடல்களில் குசு குசுப்பது – எவ்வித ஆதாரமும் அற்ற அவதூறுகளைச் செய்வது என்ற வரலாறுதான் இவர்கள் பலரதும் வரலாறு.

 

சந்திரகாந்தன் பெயரில் இம்மாதம் வெளியான (மார்ச்) ‘ஈஸ்டர் படுகொலை இன , மத நல்லிணக்கம் – அறிதலும் புரிதலும் ‘ என்ற நூல் முற்று முழுதான பொய் பிரச்சார நூல். இதை விமர்சித்த அத்தாஸ் பிவரும் புள்ளியை சுட்டிக் காட்டி இருப்பது கவனத்துக்கு உரியது

 

‘…ஈஸ்டர் தாக்குதல் இஸ்லாத்திற்காகப் புரியப்பட்ட ஒன்று என்பதுடன் அவ்வாறான தாக்குதல்கள் இஸ்லாத்தைப் பின்பற்றும் முஸ்லிம்களால் மேலும் செய்யப்பட முடியும் என்ற வக்கிரப் போக்கு இந்த நூலின் முன் அட்டை சஹ்ரானின் புகைப்படத்தின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது . மேலும் முக்கியமாக நூல் விபரக் குறிப்பில் நூல் அச்சிடப்பட்ட அச்சகத்தின் விரபங்கள் எதுவும் குறிப்பிடப் பட்டிருக்கவில்லை …இந்நூலின் சுமார் 200 பக்கங்களுக்கு மேல் வாசிக்க அவசியப்படவில்லை . ஏனெனில் , இணையத்தளங்களில் உள்ள இஸ்லாமியத் தீவிரவாத இயக்கங்களின் விபரம் , இஸ்லாமியத் தீவிரவாத இயக்கங்களினால் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச ரீதியான தாக்குதல்கள் எனக் குறிப்படப்படும் பல விடயங்கள் அப்படியே பிரதியிடப்பட்டுள்ளன…’ (“சந்திரகாந்தனின் ஈஸ்டர் படுகொலையும் மரத்தில் மாடு கட்டுதலும்” – அத்தாஸ் – அக்கரைப்பற்று – தேசம் (thesamnet.co.uk))

இஸ்லாமுக்கு எதிரான – ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் பற்றிய உண்மை எதுவுமற்ற – தாக்குதல் செய்தவர்களை காப்பாற்றும் – இந்த நூலை போற்றிப் புகழ்பவர்கள் அதை என்ன நோக்கில் செய்கிறார்கள் என்பதை ஊகிப்பது கடினமில்லை. இந்தத் தக்குதலளால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சிலர் சந்திரகாந்தன் கையால் இந்தப் புத்தக பிரதியை பெற்றுக் கொள்ளும் தலைவிதிக்கு திணிக்கப் பட்டிருப்பது மேலும் கேவலம்.

 

ஒரு காலத்தில் – புலிகள் மற்றய இயக்கங்களைத் தாக்கிய காலத்தில் – மற்ற இயக்கம் சார் புலி எதிர்ப்பு சக்திகள் ஓன்று கூட்டும் இடமாக இருந்தது இலக்கியச் சந்திப்பு. அத்தருனத்தில் அடக்குமுறை சார் நபர்கள் கருத்துக்கள் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாக்கக்கப்படக் கூடிய சூழல் இருந்தது. உயிர் பயக் கெடுதி இருத்த போதிலும் இதைப் பலர் துணிந்து செய்தனர் என்பது மிகையில்லை. இன்று அது தூரத்து வரலாறு. அதிகாரத்துடன் ஏதோ ஒருவகையில் இணைந்து தம்மையும் நிறுவனப் படுத்திக் கொண்ட ‘புள்ளிகள்’ பலருக்கும் அத்தகய ‘கடும் விமர்சன’ போக்கு இன்று தேவை இல்லை. பெண்ணியம் – தேசம் – சாதிய ஒடுக்குமுறை – ஆகிய அனைத்துமே இன்று இவர்கள் தமது சொந்த நலன்களுக்காக பாவிக்கும் ஆயுதங்கள் என குறுகி நிற்கிறது. இஸ்லாமிய வெறுப்பு ஊறிக் கிடப்பது பற்றி எவரும் கண்டுகொள்வதில்லை. இந்த லட்சணத்தில் இன உறவு பற்றி பேசப் போகிறார்களாம். அதைப் பல மேடைகளில் ராஜபக்ச பேசி நாம் கேட்டு இருக்கிறோம். நீங்களும் ஒப்பிக்கத் தேவை இல்லை.

 

தமிழீழ விடுதலைப் புலிகளை எதிர்த்தல் – அதனால் தாம் முற்போக்கு என காட்டுதல் ஆகிய ஒற்றை நோக்கை தாண்ட முடியாத இந்த குழுவுக்கு வெளியில்தான் இலக்கியம் இயங்கி வருகிறது.

 

ஷோபாவின் ‘இச்சா’ அசலா? நகலா? குற்றச்சாட்டுகள் வலுக்கின்றது!!! ஷோபா: “ஓ..அப்படியா!” சேனன்: “போலித் தனங்களை உடைப்பது அத்தியாவசியம்!”

தமிழ் இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட எழுத்தாளர் ஷோபாசக்தியின் நாவல் ‘இச்சா’ அவருடைய மூலப் பிரதி அல்ல என்ற குற்றச்சாட்டு தமிழ் இலக்கிய பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகின்றது. இக்குற்றச்சாட்டு தொடர்பாக தேசம்நெற் ஷோபாசக்தியயைத் தொடர்புகொண்ட போது “ஓ..அப்படியா!” என்று இதுபற்றி எதனையும் அறியாதவராக இக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் தேசம்நெற் உடன் உரையாட மறுத்துவிட்டார். ‘இச்சா’ நாவலின் அசல் பிரதியாகக் கருதப்படும் ‘சித்தார்த்தனின் விநோதச் சம்பவங்கள்’ நாவலைப் படைத்த சேனன் இக்குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தியதுடன் “போலித் தனங்களை உடைப்பது அத்தியாவசியம்!” என தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

ஈழத்து படைப்பாளிகளில் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரே தமிழக இலக்கியச் சூழலில் அறியப்பட்டவர்களாக உள்ளனர். அந்த வகையில் ஷோபசகத்திஇ சேனன் இருவருமே குறிப்பிடத்தக்கவர்கள். அதிலும் ஷோபாசக்தி பல நாவல்களை வெளியிட்டு தனக்கென ஒரு இலக்கிய ரசிகர் வட்டத்தையே கட்டமைத்து வைத்துள்ளவர். இந்நிலையில் ‘இச்சா’ நாவல் இன்னுமொரு சக படைப்பாளியின் மூலத்தை தழுவிய பிரதி என்ற குற்றச்சாட்டு பலருக்கும் அதிர்ச்சித் தகவலாக அவர்களைச் சென்றடைந்து கொண்டுள்ளது.

‘இச்சா’ நாவல் ஆசிரியர் ஷோபாசக்தி மீதான தழுவல் மற்றும் பிரதி பண்ணுதல் போன்ற குற்றச்சாட்டுகள் தமிழ் இலக்கியச் சூழலுக்கு ஒன்றும் புதிதல்ல. தமிழ் சினிமாவில் தொடங்கி இலக்கியம் வரை இது எவ்வித கூச்சநாச்சமும் இன்றி செய்யப்படுகின்றது. இன்று பல்கலைக்கழகங்களில் கூட மாணவர்கள் முதல் பேராசிரியர்கள் வரை ஆய்வுகளைத் தழுவி பிரதி செய்து வெளியிட்டு பட்டம்பெற்றுச் செல்கின்றனர். இந்தியாவிலும் சர்வதேச நாடுகளிலும் இவ்வாறான இரண்டாம்தர ஆக்கங்களை வெளியிடுவதற்கென்றே ஜேர்னல்கள் இருக்கின்றன. தங்களுடைய இரண்டாம்தரமான ஆக்கங்களுடன் சில நூறு டொலர்களை வழங்கினால் இந்த ஆக்கங்கள் இவ்வாறான இரண்டாம் தரமான ஜேர்னல்களில் வெளியாகும். அதனை தங்களுடைய பதவி உயர்வுகளுக்குஇ சம்பள உயர்வுகளுக்கு விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் பயன்படுத்துவார்கள். ஆனால் அவர்கள் இதுபற்றி வெளியில் பெரிதாக அலட்டிக்கொள்ள மாட்டார்கள் ஏனென்றால் பொடுக்கேடு வெளிச்சத்திற்கு வந்துவிடும் என்பதால். ஆனால் இலக்கியவாதிகள் இதனை ஒரு பொட்டுக்கேடு என்றோ, கேடுகட்டத்தனம் என்றோ எண்ணுவதில்லை. அவ்வளவிற்கு தமிழ் சினிமாவும் இலக்கியச் சூழலும் தரம் தாழ்ந்துள்ளது.

உதாரணத்திற்கு ஈழத்தில் வெளிவந்த ‘புதுசு’ சஞ்சிகையில் பவானி என்ற ஒரு பெண் எழுத்தாளர் ‘இனம்காணல்’ என்ற ஒரு சிறுகதையை எழுதி இருந்தார். பவானி இலக்கிய உலகில் அறியப்படாத ஒரு அறிமுக எழுத்தாளர். புதுசு சஞ்சிகை வெளிவருவது நின்றே தசாப்தங்கள் ஆகிவிட்டது. ஆனால் அச்சஞ்சிகை எழுத்தாளர்களில் ஒருவராக இருந்த அ இரவி என்பவர் ஈழத்து இலக்கிய உலகில் ஓரளவு அறியப்பட்டவர். ‘ஒரு பேப்பர்’இ ‘ஐபிசி’ வானோலி ஊடாகவும் பிரபல்யமானவராக இருந்தவர். இந்த அ இரவி பாவானியின் ‘இனம்காணல்’ சிறுகதையைத் தழுவி பிரதி பண்ணி ‘நாச்சியார் திருமொழி’ என்ற பெயரில் அச்சிறுகதையை தமிழகத்தில் இருந்து வெளிவரும் தீராதநதி என்ற இலக்கிய சஞ்சிகையில் வெளியிட்டார். இவ்வாறு தமிழ் இலக்கிய வரலாற்றில் பல இலக்கியத் திருட்டுக்களும் நடந்தேறியுள்ளது.

அறிவுசார் உடமைகளின் திருட்டு என்பது தமிழ் இலக்கியச் சூழலில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு விடயமாக சர்வசாதாரணமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுவருகின்றது. இது தமிழ் படைப்புலகத்தின் படைப்புச் செயற்பாடுகளை மிகவும் பலவீனப்படுத்துவதுடன் பாதிக்கப்படும் படைப்பாளிகளையும் இருட்டடிப்புச் செய்கின்றது. தனது வயிற்றுப் பசிக்காக திருடுபவர்களை மிகப்பெரும் பாதகர்களாக நோக்கும் சமூகம் இவ்வாறான அறிவுசார் உடமைகளின் திருட்டை கண்டும்காணமல் இருப்பது மிகப்பெரும் தவறு.

அந்த வகையில் ஷோபாசக்தியின் ‘இச்சா’ நாவலின் பிரச்சினையில் அதன் அடி – முடி யயைத் தேடிக் கண்டுபிடிப்பது தமிழ் படைப்புலகத்தின் படைப்பாக்கத்திற்கு மிகவும் அவசியமானது. ஷோபாசக்தியின் ‘இச்சா’ நாவலுக்கும் சேனனின் ‘சித்தார்த்தனின் விநோதச் சம்பவங்கள்’ நாவலுக்கும் இடையே உள்ள ஒற்றுமை பற்றி ‘இச்சா’ நாவல் வெளிவந்த காலத்திலேயே அறிந்திருந்தேன். ஆயினும் அக்காலப்பகுதியில் சேனனின் ‘சித்தார்த்தனின் விநோதச் சம்பவங்கள்’ நாவல் வெளிவந்திருக்கவில்லை என்பதால் அந்நாவல் வெளிவரும்வரை அது பற்றிய விமர்சனங்களிற்காக காத்திருந்தேன்.

நாவல் வெளிவந்த விடயம் சேனனின் முகநூலில் ஓகஸ்ட் 17ம் திகதி பதிவிடப்பட்டு இருந்தது. தமிழகத்தில் இந்நாவலை எங்கும் வாங்க முடியும் என சேனன் தனது பதிவில் குறிப்பிட்டு இருந்தார். அதற்குப் பின் ஒரு வாரகாலத்தின் பின் ஓகஸ்ட் 26இல் வே ராம சாமி என்ற தமிழகத்தைச் சேர்ந்த மிகவும் அறியப்படாத ஒரு எழுத்தாளர் சேனனையும் அறிந்திராத ஒரு எழுத்தாளர் வருமாறு தனது பதிவில் குறிப்பிடுகின்றார்:

“சேனன் என்பார் யார் என்று தெரியவில்லை ..

ஒரு மிகப்பெரிய ஒப்புமை வியப்பு என்னவெனில் அண்மையில் வெளிவந்த ‘இச்சா’ நாவலும் இதுவும் வடிவம்இ சம்பவங்கள் எல்லாம் ஒன்னு போல இருக்கு ..

கேப்டன் ஆலா (இச்சா )
கேப்டன் அல்லி (‘சித்தார்த்தனின்’) ரெண்டு பேரும் ஒரே ஆளா?

‘இச்சா’வில் கேப்டன் ஆலாவுக்கான நிகழ்வுகள் சேனனின் நாவலில் சாதனாஇ அல்லி இருவருக்குமாக
இருக்கிறது ..”

சேனனின் ‘சித்தார்த்தனின் விநோதச் சம்பவங்கள்’ நூலின் மூலப்பிரதி நான் அறிந்த சிலரிடம் மேலதிக வாசிப்பிற்காகவும் அவர்களுடைய கருத்துக்களை உள்வாங்கி மேலும் செழுமைப்படுத்துவதற்காகவும் வழங்கப்பட்டு இருந்தது. அவர்கள் மூலமாகவே இந்த இலக்கியத் திருட்டு முதன்முதலில் மார்ச் மாதம் அளவில் கசியத் தொடங்கியது. இது தொடர்பாக இலக்கிய ஆர்வலரும் தற்போது புலனாய்வாளருமாகியுள்ள அருண் அம்பலவாணர் தனது முகநூல் பதிவில் “சேனன் தனது நாவல் பிரதியை எடிட் பண்ணவோ என்னவோ தனக்கும் ஷோபா சக்திக்கும் உறவினரான ஒரு பெண் ஏஜெண்டிடம் அனுப்பியிருக்கிறார். அந்த ஏஜெண்ட் அதனை “கொரில்லா” வுக்கு படிக்க கொடுக்க கொரில்லா அதனை அரக்கப்பரக்க “இச்சா”வாக சந்தைக்கு விட்டு விட்டாராம்” என்று குறிப்பிட்டுள்ளார். அருண் அம்பலவாணர் குறிப்பிடும் பெண் வேறு யாருமல்ல ஷோபசக்தியின் சகோதரி. இவர் சேனனுக்கும் சகோதரியானவர். ஷோபாசகத்தியும் சேனனும் நண்பர்கள் மட்டுமல்ல தீவகத்தைச் சார்ந்த நெருங்கிய உறவினர்களும் கூட.

இக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக தேசம்நெற் சார்பில் ஷோசக்தியுடன் முகநூல் உட்பெட்டியூடாகத் தொடர்புகொண்டு விசாரிக்க முற்பட்டு எனது கேள்வியயை அனுப்பி வைத்தேன்: ‘வணக்கம் சோபாசக்தி உங்களுடைய ‘இச்சா’ நாவல் தொடர்பாக சில குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றது. இக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக உங்களோடு உரையாட விரும்புகிறேன்’. அதற்கு குறுகிய நேரத்திலேயே ஷோபாசக்தியிடம் இருந்து பின்வரும் பதில் வந்தது: “என் எல்லாப் புத்தகங்கள் குறித்துமே நிறையக் குற்றச்சாட்டுகள் உள்ளன. எனவே இதெல்லாம் எனக்குப் பழகிப்போய்விட்டன. என்னோடு நீங்கள் உரையாடி ஒன்றும் ஆகப் போவதில்லை. தகவலுக்கு நன்றி”. ஒரு ஊடகவியலாளனாக நான் பல விடயங்கள் தொடர்பாக ஷோபாசக்தியுடன் தொடர்பு கொண்டிருக்கிறேன். பெரும்பாலும் ஷோபாசக்தி எந்த விடயத்திற்கும் தயங்காமல் தனது கருத்தை வெளிப்படுத்துபவர். பல சில்லறை விடயங்களுக்கே பதிலளிக்கத் தயங்காதவர். ஆனால் இக்குற்றச்சாட்டு தொடர்பில் தேசம்நெற் உடன் உரையாட அவர் மறுத்துவிட்டார்.

தேசம்நெற் சார்பில் நானும் விடுவதாக இல்லை: “சேனனின் ‘சித்தார்த்தனின் விநோதச் சம்பவங்கள்’ என்ற நாவலைப் பிரதி பண்ணியே உங்களுடைய நாவல் ‘இச்சா’ எழுதப்பட்டதாக சொல்லப்படுகின்றது. மேலும் சேனன் தன்னுடைய நாவலை உங்கள சகோதரிக்கு திருத்தத்திற்குக் கொடுத்ததாகவும் அதிலிருந்தே நீங்கள் இதனைப் பிரதி செய்ததாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. ஒரு பொறுப்புள்ள படைப்பாளியாக இதற்கு பதிலளிக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உள்ளதல்லவா?” என்று மற்றுமொரு கேள்வியயை உட்பெட்டியில் அனுப்பி வைத்தேன். அதற்கும் பதில் விரைவிலேயே கிடைத்தது. ஷோபாசக்தியின் பதில்: “ஓ..அப்படியா! குற்றச்சாட்டு எங்கே பதிவாகியுள்ளது?” என்ற கேள்வியாக அது அமைந்தது. ‘கொரில்லா’ ‘பொக்ஸ்’ இனுள் நின்று கண்ணை மூடிக்கொண்டு பால் குடிப்பது என்பது இதைத்தானா?

இக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக சேனனிடம் தேசம்நெற் கேள்வி எழுப்பியது. அதற்கு சேனன் “இரு நாவல்களையும் படித்த நண்பர்கள் சொல்லித்தான் இச்சா நாவலைப் படித்தேன். அதிர்ச்சியாக இருந்தது. ஒற்றுமை – வேற்றுமை பற்றி படித்தவர்கள்தான் மேலும் சொல்ல வேண்டும். இப்போதுதான் எனது நாவல் விற்க ஆரம்பித்திருகிறார்கள். சற்றுப் பொறுத்திருங்கள். மேலும் பலர் படிக்கட்டும். அந்த வாக்கு மூலங்களில் இருந்து பேசுவதுதான் நியாயம். ஆனால் தமிழ் கலை இலக்கிய உலகில் இன்று புரையோடிக் கிடக்கும் பல்வேறு போலித் தனங்களை உடைப்பது அத்தியாவசியம் – எதிர்காலத்தில் நல்ல இலக்கியம் உருவாக அது அவசியம்” எனத் தெரிவித்தார்.

இப்பொழுது மெல்ல எழுந்துவரும் இந்த இலக்கியச் சர்ச்சை இன்னும் சில வாரங்களில் தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் என்பதில் ஐயமில்லை. மேலும் ஷோபாசக்தியின் ஏனைய படைப்புகளும் கேள்விக்கு உள்ளாக்கப்படலாம். சேனனின் ‘சித்தார்த்தனின் விநோதச் சம்பவங்கள்’ நாவல் யுத்தத்தைத் தொடர்ந்து கருக்கொள்ள ஆரம்பித்தது. மலேசிய இலக்கிய ஆர்வலர் நவீன் வெளியிட்ட சஞ்சிகையிலும் இந்நாவலின் சில கதைகள் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது. சேனனின் நாவல் வெளிவருவதற்கு முன்னமே தனது நாவல் வெளிவரவேண்டும் என்பதில் ஷோபாசக்தி காட்டிய ஆர்வத்தை பலரும்சுட்டிக்காட்டுகின்றனர். அருண் அம்பலவாணர் தனது பதிவிலும் அதனைச் சுட்டிக்காட்டி உள்ளார்.

இக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஷோபசக்தி பொறுப்புடன் பதிலளிப்பது மிகவும் அவசியம். இவை எழுந்தமான குற்றச்சாட்டுகள் அல்ல. ஷோபாசக்தியின் படைப்பாற்றலை கேள்விக்கு உள்ளாக்குகின்ற விடயம். இதுவரை ஷோபாசக்தியின் படைப்பாற்றல் மீது யாரும் இவ்வாறான ஒரு குற்றச்சாட்டை வைத்ததில்லை. அவருடைய அரசியல் மீது, அவர் தன்னைச் சுற்றிக் கட்டமைத்த தலித்திய விம்பத்தின் மீது பல குற்றச்சாட்டுகள் இருந்தமையும் அக்குற்றச்சாட்டுகள் தற்போது அவரை அம்பலப்படுத்தி வருவதும் கண்கூடு. தற்போது முதற்தடவையாக அவருடைய படைப்பாற்றல் கேள்விக்கு உட்படுத்தப்பட்டு இருக்கின்றது. ஷோபாசக்தி படைப்பாற்றல் உள்ள எழுத்தாளர் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. அவருடைய படைப்பாற்றல் என்பது புனைவு, இரசனை என்பனவற்றுக்குள் மட்டுப்படுத்தப்பட்டது என்பதும் அவர் நாவலின் கட்டமைப்பு மற்றும் கருஉருவாக்கத்தில் தழுவலையும் பிரதிகளையும் வைத்தே படைப்புகளை உருவாக்குகின்றார் என்ற குற்றச்சாட்டுகளை அவ்வளவு இலகுவில் கடந்து போய்விட முடியாது என்பதை அடுத்துவரும் வாரங்கள் அவருக்கு உணர்த்தும் என்றே கருதுகிறேன்.