சுமந்திரன்

சுமந்திரன்

“புலிகளிடமிருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பினரை பாதுகாத்ததும், துப்பாக்கி ஏந்தி இருந்த வடக்கு சிறார்களுக்கு பேனை வழங்கியது மஹிந்த தான்” – விமலவீர திஸாநாயக்க

மகிந்தவின் புண்ணியத்தால் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களுக்குகூட சுதந்திரமாக நடமாடமுடிகின்றது என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

புலிகளும், ஜே.விபியினரும்தான் இந்நாட்டை சீரழித்தனர். ராஜபக்சக்கள்தான் இந்நாட்டை மீட்டெடுத்தனர். அபிவிருத்தியில் புரட்சி செய்தனர். எல்லா வீதிகளும் ‘காபட்’ இடப்பட்டு புனரமைக்கப்பட்டன. கிராமிய வீதிகள் புனரமைக்கப்பட்டன. அனைவருக்கும் மின்சாரம் வழங்கப்பட்டது. பாடசாலைகள் கட்டியெழுப்பட்டன. இப்படி ராஜபக்ச யுகத்தில்தான் நாட்டுக்கு பாரிய அபிவிருத்திகள் இடம்பெற்றன. மஹிந்த ராஜபக்சவுக்கு முன் இருந்த தலைவர்கள் போரை முடிவுக்கு கொண்டுவரவில்லை.

 

எம்மை காப்பாற்றுவதற்கு எவரும் இருக்கவில்லை. கடவுளும் வரவில்லை.எமக்கு உயிர் தந்தது மஹிந்த ராஜபக்சதான். நாட்டை மீட்டெடுத்ததும் அவர்தான்.எனது கிராமத்தையும் பாதுகாத்து தந்தது மஹிந்ததான்.

அதனால் யார் என்ன கூறினாலும் நான் அவருக்கு சோரம்போவேன்.

தலதாமாளிகை தாக்கப்படும் போதும், எல்லை கிராமங்களில் தாக்குதல் நடக்கும்போதும் நாட்டை மீட்கயார் இருந்தது? அவ்வாறு மீட்ட மஹிந்த துரோகியா? எமக்கு மூச்சு தந்த ராஜபக்சக்கள் துரோகிகளா?

மரண பீதியுடன் வாழ்ந்தவர்களுக்கு உயிர் தந்த ராஜபக்சக்களை வீரர்கள் எனக் கூறிக்கொள்ளும் சிலர் துரோகிகள் ஆக்கியுள்ளனர்.

 

போர் காலத்தில் இந்த வீரர்கள் எங்கிருந்தார்கள் என்றே தெரியவில்லை.ராஜபக்சக்களுக்கு நான் கடன்பட்டுள்ளேன். சுனாமி அனர்த்தம் ஏற்பட்டபோதும் நாட்டை மீட்டது ராஜபக்சக்கள்தான். கொரோனாவால் மக்கள் செத்து மடியும்போது மக்களை பாதுகாத்தது ராஜபக்சக்கள், இப்படியானவர்கள் துரோகிகளா? ராஜபக்சக்கள் இல்லாவிட்டால் நானும் ஈழத்தில்தான் வாழவேண்டி வந்திருக்கும்.

 

மஹிந்தவின் புண்ணியத்தால்தான் சுமந்திரன் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஆணையிறவு, வவுனியா என எல்லா பகுதிகளிலும் இன்று சுதந்திரமாக நடமாடுகின்றனர். துப்பாக்கி ஏந்தி இருந்த வடக்கு சிறார்களுக்கு பேனை வழங்கியது மஹிந்த தான் என விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

“இலங்கையில் நடைபெற்றதும் பாலஸ்தீனில் நடப்பதும் ஒன்றுதான்.” -எம்.ஏ,சுமந்திரன்

”இலங்கையில் நடந்த போரும், தற்போது இஸ்ரேல்-பாலஸ்தீனத்திற்கு இடையே இடம்பெற்றுவரும் போரும் ஒன்றுதான்” என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ,சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல்- பாலஸ்தீனத்திற்கு இடையே இடம்பெற்று வரும் போர் குறித்து இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”இஸ்ரேல்-பாலஸ்தீனத்திற்கு இடையிலான இப்பேரானது அரசியல் மோதலாகும்.
இதனை அரசியல்ரீதியாக தான் தீர்க்க முற்பட வேண்டும்.  உலகில் பல மோல்கள் இடம்பெற்று வருகின்றன. மக்களுக்கிடையிலும், தேசங்களுக்கிடையிலும் பல மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.

இலங்கையில் இடம்பெற்றதும் அரசியல் ரீதியான மோதலாகும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அரசியல் மோலுக்கு இராணுவ நடவடிக்கைகள் தீர்வாக அமையாது என்று பாலஸ்தீன இஸ்ரேல் மோதல் தொடர்பாக கருத்து வெளியிட்டிருந்தார்.

ஆனால், அவர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் இந்நாட்டில் அரசியல் மோதல் இடம்பெற்றபோது, இராணுவத்தின் ஊடாகவே தீர்வு வழங்கப்பட்டது. வன்முறைகள் ஒருபோதும் தீர்வாகாது” இவ்வாறு சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சட்டத்தரணிகள் சங்கம் எம்.ஏ. சுமந்திரனுக்கு பயந்து போயிருக்கிறதா..? – சரத்வீரசேகரக கேள்வி..!

நீதிமன்றத்தை அச்சுறுத்தியதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டை முழுமையாக நிராகரித்துள்ள பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரத் வீரசேகர, சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கு கடிதமொன்றையும் அனுப்பிவைத்துள்ளார்.

நாடாளுமன்றத்துக்குள் நடந்துகொள்ளும் முறைமை தனக்கு நன்றாகத் தெரியும் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

குண்டர்களால் பௌத்த உரிமை நாசமாக்கப்படுகின்றது. அவற்றை வடக்குக்கு சென்று பார்த்துவருமாறு சட்டத்தரணிகள் சங்கத்துக்கு அறிவுறுத்தியுள்ளார்.

 

பௌத்த உரிமைகளை நாசமாக்கும் பிரிவினைவாத குண்டர்களுக்காக முன்னிலையாகுவதற்கு முன்னர், இரண்டொரு தடவைகள் சிந்தித்துப் பார்க்குமாறும் சட்டத்தரணிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

‘நாங்கள் அனைவரும் நீதிமன்றத்தை மதிக்கிறோம்’ என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் சுமந்திரன், உயர்நீதிமன்றம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கு சட்டத்தரணிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையா, அவருக்குப் பயந்து தானா? எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

 

இலங்கையின் நீதித்துறை குறித்து வெளியிடப்பட்ட அவமானகரமான மற்றும் அருவருப்பான அறிக்கைகள் தொடர்பில், தானாக முன்வந்து ஜெனீவா சென்று கண்டித்ததாகவும் சரத் வீரசேகர அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

“கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு முறைப்படி செய்யப்படுவதாக தெரியவில்லை.” – சுமந்திரன்

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு நாங்கள் அவதானித்தபடி குறித்த முறைப்படி செய்யப்படுவதாக தெரியவில்லை என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்  சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மனித புதைகுழி அகழப்படும் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு  மனித புதைகுழி அகழப்படுவதை பார்வையிட்ட பின்னர் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஒரு சர்வதேச நிபுணத்துவத்தின் அடிப்படையில் இது செய்யப்படவில்லை.

பல சான்றுகள் காணாமல்போவதற்கான  ஆபத்துக்கள் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

இது ஒரு முக்கியமான சாட்சியமாக காணப்படுகின்றது.போர்க்காலத்தில் இடம்பெற்ற சம்பவமாக இது இருக்கவேண்டும் , இராணுவசீருடையை ஒத்த அல்லது தமிழீழ சீருடையை போன்ற பல காணப்படுகின்றன,

விசேடமாக பெண்போராளிகளுடைய உடல்களாக இவை இருக்கவேண்டும்,

தற்போது ஆண் ஒருவரினது உடலும் காணப்படுவதாக சந்தேகிக்கப்படுகின்றது,

எனவே ஐந்துக்கும் மேற்பட்ட உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டுள்ளது போல தென்படுகின்ற போது அதனை மிகவும் அவதானமாக அந்த விடயத்தில் நிபுணத்துவம் உள்ளவர்களுடன் சேர்ந்து செய்யவேண்டும்.

அப்படி செய்யாமல் இதனை அந்த அந்த நேரத்திற்கு ஏற்ப செய்வது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமில்லை,

சர்வதேச நிபுணத்துவத்தின் மேற்பார்வையில் இது செய்யப்படவேண்டும்.என அவர் தெரிவித்துள்ளார்

“அரசாங்கத்தினால் மக்களின் ஊழியர் சேமலாப நிதியம் திருடப்படுகின்றது.”- நாடாளுமன்றத்தில் சுமந்திரன் !

இலங்கை அரசாங்கத்தினால் மக்களின் ஊழியர் சேமலாப நிதியமானது திருடப்படுவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற தேசிய கடன் மறுசீரமைப்பு செயற்திட்டம் குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

அவர் மேலும் தெரிவிக்கையில்..;

“அரசாங்கத்தினால் மக்களின் ஊழியர் சேமலாப நிதியம் திருடப்படுகின்றது. காலங்காலமாக பல்வேறு முறைகளில் மக்களின் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தில் மோசடிகள் இடம்பெற்று வருகின்றன.

 

ஏனெனில் பெரும்பாலான மக்கள் நடுத்தர வர்கத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். இதனால் அவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக குரல் எழுப்ப முடியாத நிலையில் உள்ளனர்.

 

அனைத்து வெளிநாட்டு முதலீடுகளையும் அம்பலப்படுத்தும் அரசாங்கம் ஏன் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் குறித்த விடயங்களை அம்பலப்படுத்துவதில்லை? குறிப்பாக தேசிய கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் அரசாங்கம் ஒட்டுமொத்த மக்களையும் ஏமாற்றியுள்ளது.

 

அதுமட்டுமல்லாது ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தை தமது இறுதி கால சேமிப்பாக கருதும் தோட்டத் தொழிலாளர்களுக்கு இந்த தேசிய கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையானது நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும்.

இதனை அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஏற்றுக்கொள்வாரா? தேசிய கடன் மறுசீரமைக்கப்படும் என சர்வதேசத்துக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்து விட்டு மக்களை தவறாக வழிநடத்துவது மற்றிலும் தவறான விடயமாகும்” என தெரிவித்துள்ளார்

நீண்ட காலத்திற்கு பிறகு வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வழிபாடுகள் மீண்டும் ஆரம்பம்!

வெடுக்குநாரிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் நீண்ட காலத்திற்கு பிறகு பூஜை வழிபாடுகள் ஆரம்பமாகி உள்ளது.

வவுனியா வடக்கு ஒலுமடு கிராமசேவகர் பிரிவில் இந்த வரலாற்று சிறப்புமிக்க ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் உள்ளது.

இந்த ஆலயத்தில் வழிபாடு செய்வதற்கு இடையூறாக தொல்பொருள் திணைக்களம் மற்றும் காவல்துறை என்பன நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்த நிலையில், நீண்ட காலமாக பூஜைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தது.

பின்னர், கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆலயத்தில் இருந்த விக்கிரகங்கள் இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டிருந்தது.

மீண்டும் கடந்த 24 ஆம் திகதி வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கில் அதிபர் சட்டத்தரணி M.A சுமந்திரன் ஆலயம் சார்பாக முன்னிலையாகியிருந்தார்.

இந்தநிலையில், அடியார்கள் வழிபாட்டுக்கு செல்வது மற்றும் ஆலய வழிபாடுகளை நடத்துவது என்பவற்றிற்கு அரச உத்தியோகஸ்தர்கள் எவரும் தடைவிதிக்க முடியாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக உச்ச நீதிமன்றில் மனு தாக்கல் – சுமந்திரன் அறிவிப்பு !

இழுவை மடி சட்டத்தை உடன் அமுல்படுத்துமாறும் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் – வடமராட்சியில் கடற்தொழிலாளர்கள் சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக அனுஷ்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்திய கடற் தொழிலாளர்களின் அத்துமீறல் மற்றும் கடற் தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வடமராட்சி – சுப்பர்மடம் பகுதியில் கடந்த நான்கு நாட்களாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்திற்கு நீதிமன்றம் தடைவித்திருந்த நிலையில், நேற்று மாலை பொலிஸாரினால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். இந்நிலையில், இன்றைய தினம் வடமராட்சி – சுப்பரமடம் பகுதியில் சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக அனுஷ்டித்த கடற் தொழிலாளர்கள், உயிரிழந்த மீனவர்களுக்கும் அஞ்சலியும் செலுத்தினர்.

மேலும், நூற்றுக்கணக்கான கடற் தொழிலாளர்கள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் கஜேந்திரன் ஆகியோரும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது உரையாற்றிய சுமந்திரன். கடற் தொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படாமல் தொடர்ந்தும் நீடித்துக் கொண்டிருக்கிறது. இது குறித்த சட்டங்களை உடனடியாக நடைமுறைப்படத்த வேண்டும் என்று தெரிவித்ததுடன், நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்போவதாகவும் தெரிவித்தார்

தமிழர்களுக்கு தேவை இந்தியாவா ..? சீனாவா..? – எம்.ஏ.சுமந்திரன் நிலைப்பாடு என்ன.!

“சீனர்களின் செல்வாக்கை வடக்கு கிழக்கில் நாம் விரும்பவில்லை.”  என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் கலைத்தூது மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற கருத்தாடல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கே அவர் தொடர்ந்தும் பேசுகையில்,

இங்கே சிலர் கேட்கின்றனர் சீனாவை ஏன் எமக்கு ஆதரவாக சேர்க்க கூடாது என்கின்றனர். இதற்கு நான் பகிரங்கமாகவே கூறுகின்றேன் சீனர்களின் செல்வாக்கை வடக்கு கிழக்கில் நாம் இரு காரணங்களிற்காக விரும்பவில்லை. அதில் ஒன்று எமது அரசியல் விடிவிற்காக நாம் செய்யும் போராட்டம் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைக் கோட்பாட்டில் தங்கியுள்ளது. இது இரண்டுமே சீனாவிற்கு தெரியாது என்பதாகும்.

இரண்டாவது விடயம் இலங்கை தென் சீனக் கடலில் தீவாக இருந்திருந்தால் சீனாவின் கடலில் இருந்திருந்தால் அதனை அந்த பிராந்தியத்தின் நியாயமான கரிசணையாக அது இருந்திருக்கும். ஆனால் இலங்கை இந்தியாவின் அருகில் உள்ள ஓர் தீவு. இந்தியாவின் நியாயமான பாதுகாப்பு கரிசணையை நாம் உள் வாங்கியிருக்கின்றோம். அதுவும் இந்தியாவிற்கு மிக அண்மையில் உள்ள பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை நாம் விரும்பவில்லை. ஏனெனில் சீனா இந்தியாவின் நட்பு நாடு அல்ல.

இதைச் சொல்லித்தான் சீனர்களின் இந்து சமுத்திரத்தின் ஆதிக்கத்தில் மிகவும் கரிசணை கொண்டுள்ள அமெரிக்காவுடனும் பேசினோம், இந்தியாவுடனும் பேசினோம். அதாவது உலக வல்லரசும், பிராந்திய வல்லரசும் இதனை விரும்பவில்லை. இதன்போதே வடக்கு கிழக்கில் சீனா நிலைகொள்ளாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி இரு நாட்டிடமும் உண்டு. அதற்கு நாங்கள் கேட்கின்றோம் அந்த இடத்தில் இருப்பது நாங்கள் எனவே சட்ட அதிகாரம் எங்களிடம் இருந்தால், அது நாங்கள் கேட்கும் வடிவில் கொடுக்கப்படுமாக இருந்தால் எங்கள் நிலம் மீதான சட்ட அதிகாரம் எங்கள் கைகளில் இருக்குமானால் நீங்கள் அந்தப் பயத்தைகொள்ளத் தேவையில்லை என்கின்றோம்.

சட்டம், ஒழுங்கு எங்களுடைய கையில் இருக்குமானால் இவை தொடர்பில் அவர்கள் பயம்கொள்ளத் தேவையில்லை என்றோம். அநேகமாக எல்லா நாடும் தமது நலனிலேயே செயல்படுவார்கள் அதில் வியப்பில்லை. சிலவேளை ஒரு பிரதேசத்தில் குழப்பம் இருந்தால்தான் அங்கே தமது தலையீட்டை தொடர முடியும் என்ற எண்ணம் இருக்கலாம் நாம் கூறியுள்ளோம் இங்கே தொடர்ச்சியாக குழப்பநிலை இருந்தால் இலங்கை அரசிடமே நில அதிகாரம், பாதுகாப்பு அதிகாரம் எல்லாம் இருக்கப்போகின்றது. அது உங்களிற்கும் சாதகம் இல்லை. இதனை தீர்த்து வைத்தால் மட்டுமே உங்களிற்கு சாதகம் என்றோம். தற்போதும் சந்திப்புக்கள் தொடர்கின்றது இவை படம் எடுத்து முகநூலில் போடும் சந்திப்பு அல்ல. அப்படியும் இடம்பெறுகின்றது. இதே நேரம் ஜனவரியில் முக்கிய விடயங்கள் இடம்பெறவுள்ளது இடம்மெறும்போது தெரியும் என்றார்.

“இலங்கையை சர்வதேச நீதிமன்றுக்கு செல்ல விடாது தடுத்த துரோகிகள் அதனை மக்களிடம் மறைக்கும் முயற்சியிலும் ஈடுபடுகின்றனர்.”- சுமந்திரன், சாணக்கியன் தொடர்பில் கஜேந்திரன் !

“இலங்கையை சர்வதேச நீதிமன்றுக்கு செல்ல விடாது தடுத்த துரோகிகள் அதனை மக்களிடம் மறைக்கும் முயற்சியிலும் ஈடுபடுகின்றனர்.” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

அம்பாறை – பாண்டிருப்பு பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை(3.04.2021) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது,

இந்தியாவின் எடுபிடிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பினை வைத்து மைத்திரியை வெல்ல வைத்தார்கள். இதனால் ரணில் மைத்திரி நல்லாட்சி வருகின்றது. இது அவர்களுக்கு வேண்டப்பட்ட ஆட்சி. இந்த அரசின் 5 ஆண்டு காலப்பகுதியில் எவ்வித உள்ளக விசாரணையும் நடத்தப்படவில்லை. சுமந்திரன் தற்போது கூறுகின்றார் – உள்ளக விசாரணை தான் வேண்டும்.

காரணம் இந்த நாட்டில் தான் நாம் சேர்ந்து வாழ வேண்டும். ஆகவே இந்த நாட்டில் குற்றங்கள் நடந்திருந்தால் அவை விசாரிக்கப்பட வேண்டும். விசாரிக்கப்படுவது தான் நாட்டிற்கு நல்லது. ஆகவே தான் இந்த தீர்மானத்தை வரவேற்றதாக குறிப்பிடுகின்றார். ஆனால் 2015 ஆண்டு ராஜபக்சவினை தேர்தலில் வீழ்த்தி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வோம் எனக் கூறினார்கள்.

இதனை நம்பி சகல மக்களும் விழுந்தடித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றித்திற்கு அவரை(ராஜபக்ச) கொண்டுசெல்ல வேண்டும் என்பதற்காக மைத்திரிக்கு வாக்களித்தார்கள்.

இதன் பிறகு 2019 வரை இந்த ஆட்சியில் ஏன் உள்ளக விசாரணையை வலியுறுத்தவில்லை என்பதை கேட்க விரும்புகின்றேன். நம்பிக்கை இருக்கின்றது எனக் கூறி கால நீடிப்பினை தானே வழங்கி கொண்டிருந்தீர்கள். உங்களுடைய நோக்கம் குற்றங்கள் விசாரிக்கப்படுவதற்கல்ல. உங்களுடைய நோக்கம் குற்றங்கள் நடைபெற வேண்டும். அந்த குற்றங்களை வைத்துக்கொண்டு சர்வதேச நாடுகள் ஆவணங்களை தயார் செய்ய வேண்டும். மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கம் அவர்களுக்கு இல்லை.

சுமந்திரனிடம் 2015 தொடக்கம் 2019 வரை ஜெனிவாவில் இலங்கையை எந்த அளவில் மீட்டு கொண்டு வந்தீர்கள் என கேட்கின்றேன். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இலங்கையை கொண்டு செல்லுவம் வாய்ப்பு சுமந்திரன், சாணக்கியன், சம்பந்தன் ஆகியோரினால் வழிநடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற கூட்டமைப்பினால் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.

அங்கே டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன், பிள்ளையான், வியாழேந்திரன், திலீபன் போன்றோர் பேரினவாத கட்சியின் முகவர்கள். இதில் பிள்ளையான், டக்ளஸ் தேவானந்தா போன்றவர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

அவர்கள் அரசாங்கத்தோடு இருப்பவர்கள். ஏனைய 13 பேரில் அறுதிப்பெரும்பான்மையுடன் உள்ள கூட்டமைப்பினர் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் 46:1 தீர்மானத்தை நிறைவேற்றுங்கள் எனக் கூறியதன் மூலம் அது உள்ளக விசாரணையை வலியுறுத்தி இருக்கின்றது.

உள்ளக விசாரணையை வரவேற்பதாக இவர்கள் கேட்டுக்கொண்டதனால் தான் இந்த தீர்மானம் நிறைவேறி இருக்கின்றது. இதனால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு செல்லும் வாய்ப்பு இவர்களின் செயற்பாட்டினால் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது.

ஆகவே இந்த துரோக செயலுக்கு சாணக்கியனும் சுமந்திரனும் கூட்டாக மிகத் தீவிரமாக செயல்பட்டது மட்டுமல்லாமல், அவர்கள் அந்த துரோகத்தை மறைக்கும் செயற்பாட்டிலும் ஈடுபட்டுள்ளனர் என்பதை மக்கள் மத்தியில் நான் தெளிவு படுத்த விரும்புகின்றேன்.”என்றார்.

எந்த மோசமான ஆட்சியாளர்களை வீழ்த்தினோமோ, அவர்கள் அதை விட அதிக பலத்துடன் ஆட்சிக்கு வந்துள்ளனர்! – சுமந்திரன்

19ஆவது திருத்தத்தை ஒழித்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பு அதனை எதிர்க்குமென கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்தை மேம்படுத்தவே நாங்கள் 19ஆவது திருத்தத்தை உருவாக்கினோம். தற்போதைய அரசு இதனை ஒழிக்க முயல்கிறதென அவர் தெரிவித்துள்ளார்.

வடமராட்சியில் தனது அலுவலகத்தை திறந்து வைத்த பின் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அங்கு மேலும் பேசிய அவர்,

எந்த மோசமான ஆட்சியாளர்களை வீழ்த்தினோமோ, அவர்கள் அதை விட அதிக பலத்துடன் ஆட்சிக்கு வந்துள்ளனர்.

19ஆவது திருத்தத்தை அகற்றுவது நாட்டை மோசமான ஜனநாயக பாதையிலே கொண்டு செல்லும் வழி . இது நாட்டுக்கு கேடு, ஜனநாயக விரோதச்செயல், இதை நாங்கள் எதிர்ப்போம் என்பதை அரசுக்கு சொல்லி வைக்க விரும்புகிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.