சிறீதரன்

சிறீதரன்

தனிக்கட்டை தேசியவாதிகளின் அரசியல் தீர்வு குறித்து பேச்சுவார்த்தை ! 

தனிக்கட்டை தேசியவாதிகளின் அரசியல் தீர்வு குறித்து பேச்சுவார்த்தை !

 

கடந்த தேர்தலில் வாக்கு வங்கியை இழந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி எட்டு ஆசனங்களைக் கொண்டுள்ள தமிழரசுக் கட்சியை காகம் திட்டுவது போல் திட்டிக்கொண்டே அக்கட்சியில் தனிக்கட்டையாகவும் கறுப்பாடாகவும் உள்ள பா உ சிவஞானம் சிறிதரனை கிளப்பி தங்கள் பக்கம் தருப்ப முயற்சி எடுத்து வருகின்றனர். இது தொடர்பில் சில பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றுள்ளது. வாக்கு வங்கியை இழந்து தனிக்கட்டையாகிப் போன செல்வம் அடைக்கலநாதனின் ஜனநாயக தேசியக் கூட்டமைப்பும் தனிக்கட்டையாக இல்லாமல் மற்றைய தனிக்கட்டைகளோடு கட்டுண்ட கட்டுமரமாகாலாம் என நினைக்கிகன்றார். பொன்னம்பலம் கஜேந்திரகுமார் இவர்களோடு தனித் தனியா கதைத்துவிட்டார்.

 

வரும் ஜனவரி 25இல் கட்சிகளோடு சந்திக்கப் போவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தனித்தனியாகச் சந்திப்பதோ கட்சியாகச் சந்திப்பதோ ஒரு விடயமேயல்ல. இவர்கள் யாழ் மக்களால் ஓரம்கட்டப்பட்டவர்கள். ஆனால் எட்டு ஆசனங்களைக் கொண்டுள்ள தமிழரசுக் கட்சி இவர்களோடு கதைக்கப் போய் இவர்களை வளர்த்துவிடுகின்ற வேலையை செய்ய விரும்புமா என்பது என்பது சந்தேகமே. குறிப்பாக தமிழரசுக் கட்சியின் நாணயக் கயிற்றை கையில் வைத்துள்ள சுமந்திரன் ஒளிவுமறைவில்லாமல் தடாலடியாக இந்த அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் தாங்கள் முன்நகர்த்திய பாதையிலேயே தொடருவோம் என்பதை மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளார். மீறுபவர்கள் கட்சியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்றும் எம் ஏ சுமந்திரன் கூறியுள்ளார்.

 

இந்தப் பின்னணியில் ஜனவரி 25 இல் தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து இணக்கப்பாடை எட்ட சந்திக்க உள்ளதாகச் சொல்வதே ஒரு ஏமாற்று நாடகம். தமிழரசுக் கட்சியில் அக்கட்சியின் கறுப்பு ஆடாக உள்ள பா உ எஸ் சிறிதரன் மட்டுமெ வருவார், தனிக்கட்டையாக. கட்சியின் முக்கியஸ்தர்கள் யாரும் வருவதற்கில்லை. இதையெல்லாம் தெரிந்து கணக்குப் பார்த்தே மலையகத் தமிழரின் வாக்குரிமையைப் பறிக்கத் துணைபோன சட்டப் பரம்பரையில் வந்த பொன்னம்பலம் கஜேந்திரகுமார் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். அரசியல் தீர்வு குறித்த பொன்னம்பலம் கஜேந்திரகுமாரின் காய்நகர்த்தல் ஒரு அங்குலம் தன்னும் நகருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

மாவீரர் தின நிகழ்வுகளுக்காக பாராளுமன்ற குழு கூட்டத்தின் திகதியை மாற்றிய அனுர அரசு – நன்றி கூறிய சிறீதரன் எம்.பி !

மாவீரர் நினைவேந்தல்களுக்கு தேசிய மக்கள் சக்தி அரசு இதுவரை எந்த தடங்கல்களும் ஏற்படுத்தாதமை வரவேற்கத்தக்கதென, யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தின் புதிய அமர்வு குறித்து ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது; பொதுவாக ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் மாவீரர் நினைவேந்தல்களுக்கு இடையூறு ஏற்படுத்தியே வந்துள்ளன.ஆனால், தேசிய மக்கள் சக்தி அரசு இடையூறு ஏற்படுத்தாதது மாத்திமன்றி 26ஆம் 27ஆம் திகதிகளில் நடத்தப்படவிருந்த பாராளுமன்ற அலுவல்கள் குழுக் கூட்டத்துக்கான திகதியையும் 25ஆம் திகதி மாற்றியமைத்திருக்கிறது.

26ஆம் 27ஆம் திகதிகளில் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள் இருப்பதை நான், சுட்டிக்காட்டியதை அடுத்தே அரசு, 25ஆம் திகதிக்கு அக்கூட்டத்தை மாற்றியமைத்தது.

தமிழர்களின் உணர்வுபூர்வமான நிகழ்வுகளில் அரசு கரிசனை கொள்வது திருப்தி தருகின்றது. அந்தக் கரிசனையுடனேயே இராணுவ முகாம்களாக மாறியுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை விட்டு இராணுவத்தினரை வெளியேற்றினால், அது அரசின் முன்னேற்றகரமான, முன்னுதாரணமான நடவடிக்கையாக அமையும். குறிப்பாக முள்ளியவளை, கோப்பாய், கொடிகாமம், ஏறாவில் போன்ற இடங்களில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை விட்டு, இராணுவத்தினரை வெளியேற்றினால், அது நிச்சயம் மக்கள் மனங்களில் அரசு குறித்த சாதகமான நிலைப்பாட்டையே ஏற்படுத்தும். மக்கள் தங்கள் மனக் கவலைகளை ஆற்றுவதற்கான இடமல்லவா அது?

எனவே, இந்தக் காலகட்டங்களில் துயிலும் இல்லங்களில் இருந்து படையினரை அரசு விலக்கிக் கொள்ள வேண்டுமென, வேண்டுகோள் விடுக்கின்றோம். மாவீரர் நினைவேந்தலில் அரசின் செயற்பாடுகள் திருப்தி தருவதாகவே உள்ளன. அதுமாத்திரமல்ல சபாநாயகரின் தெரிவின் பின்னர் அவரை வாழ்த்துவதற்கு கட்சித் தலைவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவது வழமை. நேற்றைய 10 ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வில் சபாநாயகரை வாழ்த்துவதற்கு எனக்கு சந்தர்ப்பம் தரப்படவில்லை.

ஆனால், இதன் பின்னர் எனக்கு அனுமதி கொடுக்கப்படாமைக்கான காரணத்தைக் கூறி அமைச்சர் பிமல் ரணட்நாயக்க எனக்கு வருத்தம் தெரிவித்தார். அந்தவகையில் ஆளுங்கட்சியினரின் செயற்பாடுகள் முன்னனுதாரமாக உள்ளன.

தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழு தலைவராக சிவஞானம் சிறிதரன் – தேசியப்பட்டியலில் சத்தியலிங்கம்!

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழு தலைவராக சிவஞானம் சிறிதரன் தெரிவுசெய்யப்பட்டார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் வவுனியா ஈரற்பெரியகுளத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (17) காலை நடைபெற்றது. இதன்போது இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கட்சியின் பேச்சாளர் பதவி தொடர்பாக பாராளுமன்ற முதலாவது அமர்வின் பின்னர் தீர்மானிக்கப்படவுள்ளதாக சிறிதரன் இதன்போது தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் தேசியபட்டியல் ஆசனத்தை வைத்தியர் ப.சத்தியலிங்கத்திற்கு வழங்க கட்சியின் அரசியற்குழு தீர்மானித்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.

“மக்கள் ஆணையை மனதார ஏற்று, எனது அறவழி அரசியற் பயணத்தை உறுதியோடு தொடர்வேன்.” – சிறீதரன்

நடைபெற்று முடிந்த பாராளுமன்றப் பொதுத் தேர்தலில், தங்கள் வாக்குகளால் எனக்கு ஆணை வழங்கிய யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றிகள். மக்கள் ஆணையை மனதார ஏற்று, எனது அறவழி அரசியற் பயணத்தை உறுதியோடு தொடர்வேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலில் வெற்றிபெற்றதன் பின்னர், இன்றைய தினம் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அவரது செய்திக் குறிப்பில் மேலும் உள்ளதாவது, கடந்த 15 வருடகால அரசியற் பயணத்தில் என் ஆத்ம பலமாகவும், அரசியற் பலமாகவும் தம் உடனிருப்பை வழங்கி, கொள்கையின்பாற்பட்ட பயணத்தின் பங்குதாரர்களாக இருந்த உங்கள் ஒவ்வொருவரது கரங்களையும் நன்றியோடு பற்றிக்கொள்கிறேன்.

திட்டமிட்டு பின்னப்பட்ட சதிவலைகளின் உள்ளிருந்தவாறே, தமிழ்த்தேசியத்தின் இருப்புக்காய் போராடத் தலைப்பட்ட என்னையும், எனது பாதையையும் எமது மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்ற நிறைவே, எனது அரசியற் பணியையும் பயணத்தையும் இன்னும் வலுவூட்டும்.

என்னுள் நானாக இருந்து என்னை இயக்கும் எங்கள் தேசத்தில் விதையுண்ட ஆத்மாக்களின் அரூப பலத்தோடு, என் மக்களுக்கான தமிழ்த்தேசியப் பயணத்தை தடையற்றுத் தொடர்வேன்.

நிலையிழக்க வைத்த அலைகளின் நடுவே தமிழ்த்தேசியக் கொள்கைக்கு கிடைத்த இந்த வெற்றி கார்த்திகையின் கனதியை உறுதி செய்யட்டும் – என்றுள்ளது.

மதுபானசாலைளுக்கு ஆதரவு வழங்கியதை நான் உறுதி செய்தால் அரசியலில் இருந்து விலகுவேன் – சிறீதரன்

மதுபானத்திற்கான அனுமதி கொடுத்தமையை உறுதிப்படுத்தினால் நான் பாராளுமன்றம் தெரிவு செய்த பின்பும் அரசியலிருந்து விலகுவேன். போலிப் பிரச்சாரத்திற்கு எதிராக மக்கள் விழிப்படைய வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

 

கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழரசுக்கட்சியின் முதன்மை வேட்பாளராக களம் இறங்கியுள்ள நிலையில் பிரச்சாரங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் அது பலருக்கு குடைச்சலை ஏற்டுத்தியுள்ளது.

 

தமிரசுக்கட்சி தலைவராக ஜனநாயக ரீதியில் போட்டியில் வெற்றி பெற்றிருந்தேன். தலைவராக தெரிவு செய்த என்னை எமது கட்சிக்குள் வழக்குக்போட்டு செயற்படாது தடுத்தனர். மக்கள் இது தொடர்பாக செய்தி சொல்ல முற்படுகின்றனர்.

 

நாங்கள் செல்லும் இடங்களிலும் சொல்கின்றனர். எமது கட்சிக்குள் உள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சேறு பூசும் முயற்சியில் இங்குள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருடன் சேர்ந்து இன்னொருவரும் சேர்ந்து எனக்கு எதிராக சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இது தொடர்பாக மக்களுக்கு தெளிவூட்ட வேண்டிய நிலையுள்ளது. மக்களுக்கு சொல்லி வருகின்றேன் நான் கிளிநொச்சியிலிருந்து யாருக்காவது பார் அனுமதிப்பத்திரத்திற்கு சிபார்சு செய்திருந்தால் அதனை உறுதிப்படுத்தினால் அரசியலிருந்து என்னை விலக்கி விடுங்கள்.

 

அதை எல்லாம் செய்ய முடியாதவர் ஏற்கனவே கிளிநொச்சியிலிருந்து பார் தொடர்பான விபரங்களை யாரோ ஒருவர் தேடி எடுத்திருக்கிறார். அதனை ஒருவர் என்னுடைய கடிதத்தலைப்பை பயன்படுத்தி போலியாக நான் அனுமதி கோரியதாக தெரிவித்து காட்டியிருக்கிறார்.

 

அதிலே சித்தார்த்தனுடைய பெயரும் குறிப்பிட்டிருக்கிறது. என்னுடைய கடித தலைப்பில் நான் கோரிக்கை விடுத்ததாக தெரிவித்து சித்தார்த்தனுடைய பெயர் எப்படி வரும் இதன் மூலம் மக்கள் விளங்கிக்கொள்வார்கள். பொலிஸ் நிலையத்தில் உரியவருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளேன்.

 

மக்களிடம் ஒன்றை சொல்கிறேன் மக்கள் என்னை நம்புங்கள் மதுபானத்திற்கான அனுமதி கொடுத்தமையை உறுதிப்படுத்தினால் நான் பாராளுமன்றம் தெரிவு செய்த பின்பும் அரசியலிருந்து விலகுவேன் என தெரிவித்தார்.

சிறிதரன் தமிழரசுக் கட்சியோடு கலியாணம் சங்கோடு கள்ளக் காதல்! மாவடி ஏ ஆர் சிறிதரன்

சிறிதரன் தமிழரசுக் கட்சியோடு கலியாணம் சங்கோடு கள்ளக் காதல்! மாவடி ஏ ஆர் சிறிதரன்.

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் கள நிலைமைகள் தொடர்பில் அரசியல் ஆய்வாளர், நாடகக் கலைஞர் மாவடி ஏ ஆர் சிறிதரனுடன் நேர்காணல்

“சிறீதரனும் நானும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் – வெற்றிபெறுவோம்.” – மத்திய குழு கூட்டத்தின் முடிவில் சுமந்திரன் !

பெண் வேட்பாளர்களை அடையாளம் காணுவது கடினமாக உள்ளதுடன் நாளையும் வேட்பாளர் தெரிவு முடிவு பெறாது என தமிழரசுக்கட்சியின் ஊடக பேச்சாளர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

இன்று சனிக்கிழமை (05) தமிழரசுக்கட்சியின் வேட்பாளர் நியமன குழு இன்று வவுனியாவில் கூடிய நிலையில் அதன் நிறைவில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
தேர்தல் நியமன குழுவானது இன்று வவுனியாவில் கூடி மாவட்டம் மாவட்டமாக ஆராய்ந்து இருக்கின்றோம்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் எவ்வாறானவர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பதும் எந்தெந்த இடங்களிலிருந்து வேட்பாளர்கள் வரவேண்டும் குறிப்பாக இன்றைய நிலையில் மாற்றத்தை இளைஞர் யுவதிகள், படித்தவர்கள் வரவேண்டும் என பெருவாரியான எதிர்பார்ப்போடு இருக்கின்றனர். அதற்கு இடம் கொடுத்து எந்த விதமாக இந்த வேட்பாளர்களை நியமிப்பது தொடர்பில் பல சிந்தனைகள் இன்று பரிமாறப்பட்டன.

எனினும் நாங்கள் இன்றைய தினம் எந்த மாவட்டம் தொடர்பிலும் ஒரு தீர்மானம் எடுக்கவில்லை.

எனினும் நாங்கள் கடந்த முறை மத்திய செயற்குழுவிற்குப் பின்னர் அறிவித்ததை போலத் திருகோணமலை மாவட்டம் அம்பாறை தேர்தல் மாவட்டம் சம்பந்தமாக விசேட கரிசனை ஒன்று இருக்கின்றது.

இந்த இரு மாவட்டங்களிலும் ஒரு தமிழ் பிரதிநிதியையே பெற்றுக் கொள்ள முடியும். எனவே தமிழ் கட்சிகள் எதிர் எதிராகப் போட்டியிட்டால் அம்பாறை மாவட்டத்தில் கடந்த முறை ஒரு பிரதிநிதித்துவம் இல்லாமல் போனதைப் போல இம்முறையும் அந்த மாவட்டத்திலும் திருகோணமலையிலும் இவ்வாறான ஒரு சாத்தியக்கூறு இருப்பதன் காரணத்தினால் அது குறித்து சில நடவடிக்கைகளை நாங்கள் எடுக்க வேண்டி இருக்கின்றது.

இந்த விடயத்தில் திருகோணமலை கத்தோலிக்க ஆயர் மிக முனைப்பாகப் பல கட்சிகளோடு பேசி சில நகர்வுகளைச் செய்திருக்கின்றார். அவரை சந்திப்பதற்காக நாங்கள் சிலர் செல்கின்றோம். அந்த விடயத்தை நாங்கள் வெற்றிகரமாக முடிப்போமாக இருந்தால் எங்களுடைய மத்திய செயற்குழு தீர்மானம் மற்றும் அரசியல் குழு தீர்மானம் இன்றும் நாங்கள் எடுத்த தீர்மானத்தின் பிரகாரம் தமிழரசு கட்சியினுடைய பெயரிலும் சின்னத்திலும் தான் நாங்கள் ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் போட்டியிடுவோம்.

ஆனால் திருகோணமலையிலும் அம்பாறையிலும் மற்ற கட்சி உறுப்பினர்களையும் உள்வாங்கி ஒரு போட்டி இல்லாமல் தேர்தலை சந்திப்பதற்கான விடயங்கள் ஆராயப்படுகின்றன. அதனை நாங்கள் செய்து முடித்த பின்னர் நாளை மீண்டும் சந்தித்து வேட்பாளராக விண்ணப்பித்தவர்கள் உடைய பெயர்களை ஆராய்ந்து தீர்மானங்களை எடுப்போம்.

எனினும் நாங்கள் நாளையும் இறுதி தீர்மானம் எடுப்போம் என்று கூற முடியாது. நாங்கள் எதிர்பார்க்கின்ற மாதிரியான வேட்பாளர்கள் சில இடங்களில் முன் வரவில்லை.

இதேவேளை பெண்கள் பல இடங்களில் முன்வரவில்லை. பள்ளம் மேடு காடு எங்குத் தேடியும் பெண்கள் கிடைக்காமல் இருக்கிறார்கள். பெண்கள் பல குறைபாடுகளைக் கூறுகின்றார்கள். அவர்களுக்கான நியமனங்களை நாங்கள் கொடுப்பதில்லை என்று. ஆனால் நாங்கள் அவர்களுக்குச் சந்தர்ப்பத்தை வழங்கத் தயாராக இருக்கின்ற போதிலும் வராத ஒரு சூழ்நிலை இருக்கின்றது. எனவே பெண்களுக்கும் பெண்கள் அமைப்புகளுக்கும் ஒரு விசேட கோரிக்கையாக நாங்கள் முன்வைக்கின்றோம். தேர்தலில் வெல்லக்கூடிய எங்களோடு சேர்ந்து பயணிக்கக் கூடிய பெண்களைத் தயவு செய்து முன்மொழிவியுங்கள்.

அவர்களுக்கான இடங்களை வழங்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். இந்த தடவை அவ்வாறான ஒரு புதிய பரிமாணத்திலே மக்களுடைய எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்கின்ற வகையிலே பல புதிய ஆற்றல் உள்ள இளைய தலைமுறைகளுக்கு வாய்ப்பளித்து நிச்சயமாக இடம் கொடுப்போம். அதற்கான தேடலையும் நாங்கள் செய்து வண்ணம் இருக்கிறோம்.

யாழ் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினராக இருந்த சிவனேசனுக்கு இம்முறை வேட்பாளர் நியமனம் கொடுப்பதில் ஏதேனும் சிக்கல் இருப்பதாக ஊடகங்களில் பல கருத்துக்கள் வெளி வந்திருக்கின்றனவே என ஊடகவியலாளர் கேட்டபோது,

எங்களுடைய மத்திய செயற்குழு கூட்டத்திலே ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது மீளவும் இன்று உறுதி செய்யப்பட்டது. ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்து அதற்குப் பின்னர் தேர்தலிலே தோற்றவர்கள் இந்த தடவை சந்தர்ப்பத்தை வழங்காமல் புதியவர்களை உள்வாங்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. எனவே அந்த பிரிவுக்குள் பலர் அடங்குவார்கள். ஆனால் சிறிதரணை பொறுத்தவரை அதற்குள் வர மாட்டார்.

எனினும் இன்றைய கூட்டத்தில் நான் கூறியிருந்தேன் கட்சியினுடைய தீர்மானத்தை மீறி ஜனாதிபதி தேர்தலிலே கட்சியின் தீர்மானத்தை எதிர்த்து பிரசாரம் செய்த காரணத்தினால் அவருக்கு நியமனம் கொடுக்கக் கூடாது என்பதற்கு அப்பால் அவராகவே ஒதுங்கி இருந்தால் நல்லது என தெரிவித்திருந்தேன். எனினும் ஸ்ரீதரன் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் போட்டியிடுவார்.

என்னையும் அவரையும் யாழ் மாவட்டத்தில் கட்டாயமாகப் போட்டியிட வேண்டும் என சகல நியமன குழு உறுப்பினர்களும் கூறி இருந்தார்கள். அதற்கு அமைவாக நாங்கள் இருவரும் யாழ் மாவட்டத்திலே போட்டியிடுவோம். வெற்றியும் அடைவோம் என்று எதிர்பார்க்கின்றோம்.

எங்கள் இருவருக்கும் இது நான்காவது பாராளுமன்றம் எனினும் இன்னும் ஏழு பேரை நியமிக்க வேண்டும். மிகவும் ஆர்வமாக இளையவர்களுக்கும் புதியவர்களுக்கும் இடம் கொடுப்பதற்கு நாங்கள் கருத்தாகக் கொண்டுள்ளோம் என தெரிவித்தார்.

சிறிதரன் வென்றால் “தமிழ் தேசியம் வென்றுவிட்டது !” சுமந்திரன் வென்றால் “துரோகத்தால் துரோகிகளால் தமிழ் தேசியம் தோற்கடிக்கப்பட்டது !”

 

சிறிதரனா ? சுமந்திரனா ? : நாளைய செய்தித் தலைப்பு: சிறிதரன் வென்றால் “தமிழ் தேசியம் வென்றுவிட்டது !” சுமந்திரன் வென்றால் “துரோகத்தால் துரோகிகளால் தமிழ் தேசியம் தோற்கடிக்கப்பட்டது !”

 

 

நாளை ஜனவரி 21 தமிழரசக் கட்சியின் தலைவராக யார் தெரிவு செய்யப்படப் போகின்றார் என்பது பெரும்பாலும் தெரியவரும். இதற்கான தமிழரசுக் கட்சி அங்கத்தவர்களின் வாக்கெடுப்பு ஞாயிற்றுக்கிழமை நாளை திருகோணமலையில் இடம்பெற இருக்கின்றது. அதற்கு கட்சியின் அங்கந்தவர்கள் 325 பேர்வரை வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருந்து கிழக்கில் உள்ள திருகோணமலைக்குச் செல்கின்றனர். வாக்கெடுப்பு எண்ணிக்கை நிறைவில் வெற்றி தோல்வி அறிவிக்கப்படும் போது அசம்பாவிதங்களும் ஏற்படும் அளவுக்கு நிலைமை பதட்டமானதாக இருப்பதாக தேசம்நெற்க்கு கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. தலைமைத்துவத்துக்கு போட்டியிடும் இருவருமே தேர்தல் முடிவுகளை ஏற்று மற்றையவருடன் கட்சியின் நன்மைகருதி இணைந்து பயணிப்போம் எனத் தெரிவித்து இருந்த போதும் தமிழரசுக் கட்சியின் நாளைய தேர்தல் தமிழரசுக்கட்சிக்குள் ஒரு பாரிய பிளவை ஏற்படுத்தும் என்று தேசம்நெற்க்குத் தெரியவருகின்றது.

இலங்கையில் உள்ள எந்தவொரு கட்சிக்காவது ஜனநாயகப் பாரம்பரியம் இருக்கின்றதா என்றால் எடுத்த எடுப்பிலேயே இல்லை என்று சொல்லி விடலாம். கட்சிக்குத் தலைவரானால் சாகும்வரை அவரே தலைவராக இருந்துவிடுவார். இதற்கு தமிழ் கட்சிகளும் தமிழரசுக் கட்சியும் விதிவிலக்கல்ல. தமிழரசுக்கட்சி வரலாற்றில் தேர்தல் மூலம் ஒருவரைத் தெரிவது இதுவே முதற்தடவை. ஏகமனதாக, ஏகோபித்த முடிவு, ஏக பிரதிநிதித்துவம் என்று இன்னொரு பக்கம் இருக்கின்றதை ஏற்றுக்கொள்ளாத சமூகமும் கட்சிகளுமாக நாம் எங்களை பன்மைத்துவத்தின் விரோதிகளாக பழக்கிக் கொண்டுவிட்டோம். அப்படிப் பார்க்கின்ற போது தமிழரசுக்கட்சியின் தலைமைக்கான தேர்தல் ஜனநாயகத்தின் பார்வையில் மிகப்பெரும் பாச்சல் என்றே சொல்லலாம். ஆனால் என்ன இந்தத் தேர்தலினால் தமிழ் மக்களுக்கு ஏதும் நன்மை ஏற்பட வாய்ப்பு இருக்கின்றதா என்பதே தற்போதுள்ள கேள்வி.

 

இலங்கைத் தமிழர்களுடைய இனப்பிரச்சினைக்கான தீர்வில் தமிழரசுக் கட்சி அது ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இன்றுவரை ஒரு இம்மியளவு முன்னேற்றத்தை நோக்கியும் நகரவில்லை. எழுபதுக்களில் தங்களுடைய வீழ்ந்துபோன வாக்கு வங்கியைத் தக்க வைக்க வே பிரபாகரன் போன்ற இளைஞர்களை உசுப்பேத்தி தமிழீழக் கோரிகையை வைத்து, அந்த இளைஞர்களாலேயே மரணத்தையும் தழுவினர். அந்த இளைஞர்களும் ஆளுக்கு ஆள் சகோதரப்படுகொலை செய்து தங்களைத் தாங்களே அழித்தனர். அன்று தப்பித்த இரா சம்பந்தன் ஒருவாறு இறுதியில் வே பிரபாகரனை பொறியில் வீழ்த்தி மீண்டும் தமிழ் தேசியத்தின் ஒற்றைத் தலைவரானார். அன்று மரணத்தில் இருந்து தப்பிய இன்னும் சிலரும் குட்டிக் குட்டித் தலைவர்களாகினர். இப்போது ஒரு காலத்தில் தமிழ் மக்களின் ஏகபோக பிரதிநிதியான தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு ஒரு போட்டி வந்துவிட்டது.

 

இத்தேர்தல் முடிவுகளில் இலங்கைத் தமிழர்களின் நலன்கள் பாதுகாக்கப்படுகின்றதோ இல்லையோ புலம்பெயர் தமிழ் – புலித் தேசியவாதிகளின் அரசியல் நலன்கள் பேணப்பட வேண்டும், இலங்கை அரசியலில் தங்களுடைய ஆதிக்கம் இருக்க வேண்டும் என்பதில் புலம்பெயர் சக்திகள் மிகத் தீவிரமாகச் செயற்படுகின்றனர். புலம்பெயர் புலித் தேசியவாதிகளைப் பொறுத்தவரை ஏ சுமந்திரன் தீண்டத்தகாத ஒரு மனிதர். அதற்கு சுமந்திரனுடைய அரசியல் நிலைப்பாடு மட்டுமல்ல சுமந்திரனுடைய அறிவும் ஆளுமையும் அவர்களுக்கு மிகுந்த அச்சத்தை கொடுக்கின்றது. தமிழரசுக் கட்சிக்கு சுமந்திரன் தலைவரானால் தமிழ் தேசிய அரசியலில் புலம்பெயர் விசிலடிச்சான் குஞ்சுகளின் குரல்களுக்கு இடமிருக்காது. மிகத் தீவிர புலித்தேசியத்தின் குரல்களுக்கு தமிழரசுக் கட்சியில் இடமிருக்காது.

 

அதனால் என்ன விதப்பட்டும் எஸ் சிறீதரனை வெல்ல வைப்பதில் அவர்கள் மிகத் தீவிரமாக உள்ளனர். எஸ் சிறிதரன் தமிழரசுக் கட்சிக்கு தலைவரானால் புலத்தில் உள்ள விசிலடிச்சான் குஞ்சுகள் எல்லாம் அவருக்கு அரசியல் வகுப்பும் ஆங்கில வகுப்பும் எடுப்பார்கள். தன்னுடைய வங்கிக் கணக்கை அவர்களிடம் கொடுத்துவிட்டு அவர்கள் சொல்வதை எல்லாம் கிளிப்பிள்ளை மாதிரி எஸ் சிறிதரன் கேட்பார் என்ற நம்பிக்கை புலம்பெயர் விசிலடிச்சான் குஞ்சுகளிடம் நிறையவே உள்ளது. அவ்வாறு லண்டனுக்கு மகனையும் அனுப்பி வைத்துள்ளார் எஸ் சிறிதரன்.

 

ஏ சுமந்திரனும் எஸ் சிறிதரனும் 2010இல் ஒரே காலகட்டத்தில் அரசியலுக்குச் சென்றவர்கள். இன்றுவரை பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். கல்வி, கேள்வி ஞானம், அரசியல் அறிவு, உள்ளுர் சர்வதேச தொடர்புகள் என்று பார்க்கின்ற போது ஏ சுமந்திரன் பலமானவராக உள்ளார். மக்கள் மட்டத்தில் புலம்பெயர் நாடுகளில் எஸ் சிறிதரன் பலமாக உள்ளார். இலங்கைத் தமிழ் மக்களைப் பொறுத்தவரை குறிப்பாக வடக்கு – கிழக்கில் வாழும் தமிழர்களைப் பொறுத்தவரை இவர்களில் யாரும் இதுவரை அவர்களுக்காக எதனையும் குறிப்பாக சாதித்துவிடவில்லை. ஏ சுமந்திரன் சில அரசியல் கைதிகளை தனது தொழில் ரீதியில் விடுதலைபெறக் காரணமாக இருந்ததைத் தவிர.

 

ஆனால் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு எஸ் சிறிதரன் தெரிவு செய்யப்பட்டால் அந்தக் கட்சியில் தொடர்ந்து செயற்பட ஏ சுமந்திரன் அனுமதிக்கப்பட மாட்டார். அதனை புலம்பெயர் விசிலடிச்சான் குஞ்சுகள் அனுமதிக்காது. மேலும் ஆளுமையுள்ள சுமந்திரன் தொடர்ந்தும் கட்சியில் இருப்பது எஸ் சிறிதரனின் தலைமைத்துவத்தை எப்போதும் நெருக்கடிக்கு உள்ளாக்கும். அடுத்த ஆண்டு நாடு பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்கின்ற போது விரும்பு வாக்குகளுக்காக இருவரும் கடுமையாக மோத வேண்டிவரும். அது ஏ சுமந்திரனுக்கு மிக நெருக்கடியாக அமையும். அதனால் ஏ சுமந்திரன் தமிழரசுக்கட்சித் தேர்தலில் தோல்வியடைந்தால் பிரிந்துசெல்வதற்கான வாய்ப்பே அதிகம் உள்ளது.

 

மாறாக, எஸ் சிறிதரன் தோற்கடிக்கப்பட்டால் அவர் தொடர்ந்தும் தமிழரசுக் கட்சியில் இருப்பாரா அல்லது பிரிந்து செல்வாரா அல்லது கட்சி தாவுவாரா என்பது அவருக்கு கிடைக்கும் வாக்குகளின் எண்ணிக்கையிலும் புலம்பெயர் புலித் தேசியவாதிகளின் நிலைப்பாட்டிலும் தங்கியுள்ளது. சிறிதரன் தேர்தலில் தோற்றுப் போனாலும் தமிழரசுக்கட்சியில் தொடர்ந்தும் இருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளது. கிளிநொச்சியில் உள்ள பலமான அந்த வாக்கு வங்கியை அவர் இழப்பதற்கு துணிய வாய்புகள் குறைவு. ஏற்கனவே எம் சந்திரகுமாருடைய சமத்துவக் கட்சி அவருடைய வாக்கு வங்கியை உடைத்து வளர்ந்து வருகின்ற நிலையில் எஸ் சிறிதரன் தமிழரசுக் கட்சியை உடைத்து வெளியேறினால் அடுத்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் அவருடைய வெற்றிவாய்ப்பை உறுதிப்படுத்துவது கடினமானதாக அமையும்.

 

தேசம்நெற்க்கு கிடைக்கின்ற தகவல்களின்படி புலம்பெயர் நாடுகளிலும் தாயகத்திலும் தங்களை உயர்சாதியினராகக் கருதுபவர்கள் மத்தியில்; எஸ் சிறிதரனுக்கு செல்வாக்கு உள்ள போதிலும் ஒடுக்கப்பட்ட வன்னியில் வாழும் மலையக மக்கள் மத்தியில் அவருக்கு குறிப்பிடத்தக்க செல்வாக்கு இல்லை. அதைவிடவும் சாணக்கியன் உட்பட தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலும் ஏ சுமந்திரனுக்கே ஆதரவைத் தெரிவித்துள்ளனர். 325 வரையான கட்சி உறுப்பினர்கள் மத்தியிலும் ஏ சுமந்திரனுக்கே ஆதரவு இருப்பதாக சொல்லப்படுகின்றது. எஸ் சிறிதரன் செல்வாக்கு ஆனையிறவுக்கும் கிளிநொச்சிக்கும் அப்பால் உள்ளதா என்பதும் கேள்விக்குறியே.

 

இன்னும் சில மணி நேரங்களில் தேர்தல் முடிவுகள் வெளிவரும்.

நாளைய செய்தித் தலைப்பு:

சிறிதரன் வென்றால் “தமிழ் தேசியம் வென்றுவிட்டது !”

சுமந்திரன் வென்றால் “துரோகத்தால் துரோகிகளால் தமிழ் தேசியம் தோற்கடிக்கப்பட்டது !”

தமிழர்களிடம் தாம் இந்நாட்டு பிரஜைகள் என்ற உணர்வு இதுவரை ஏற்படவில்லை !- பாராளுமன்ற முதலாவது அமர்வில் சிறீதரன்.

இன்றைய அரசாங்கம் அறுதிப் பெரும்பான்மையோடு, தங்களுக்கு ஒரு பெரும்பான்மை பலம் இருப்பதாக கருதிக் கொண்டு ஒரு மிகக்கூடிய மமதையோடு  செயற்பட முனைவார்களானால் மீண்டும் இந்த நாடு ஒரு இனவாத ரீதியான சகதிக்குள் தள்ளப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் கடந்த 20.08.2020 காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியிருந்தது. இதன்போது கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், நாட்டின் ஒரு முக்கியமான பிரச்சினை தொடர்பில் நாட்டின் தலைவர் பேசாமல் விட்டமையானது நாட்டின் ஒரு துரதிஷ்ட நிலையாக எம்மால் பார்க்கப்படுகிறது.

இந்த நாட்டில் வாழ்கின்ற இரு தேசிய இனங்கள் சிங்கள தேசிய இனமும், தமிழ் தேசிய இனமும். தமிழ் தேசிய இனம் கடந்த 70, 80 ஆண்டுகளாக இந்த மண்ணிலே பல இனப்படுகொலைகளுக்கும், அழிவுகளுக்கும் உள்ளாக்கப்பட்ட ஒரு இனம்.அதனால் தான் அவர்கள் ஒரு நீண்ட கால போராட்டத்திற்குள் தங்களுடைய வாழ்க்கையை அர்ப்பணித்திருந்தார்கள்.

அவ்வாறு அர்ப்பணிக்கப்பட்ட அவர்களது வாழ்க்கையிலே இன்று போராட்ட வடிவங்கள் மௌனிக்கப்பட்டிருந்தாலும் இந்த நாட்டினுடைய பிரஜைகள் தாங்கள், தாங்கள் இந்த நாட்டிற்கு உரியவர்கள் என்ற எண்ணம் அவர்களிடம் இன்னமும் உருவாகாமல் இருப்பது இந்த நாட்டிலே கொண்டு வரப்படுகின்ற பல்வேறுபட்ட சட்டங்களும், சிங்கள மக்களுடைய மனோ நிலைகளும், அவர்களை வழிநடத்துகின்ற சிங்கள தலைவர்களின் எண்ணங்களுமே இன்னும் இந்த நாட்டை வேறுபட்ட நிலைக்குள் வைத்திருக்கிறது.

குறிப்பாக இன்றைய அரசாங்கம் அறுதிப் பெரும்பான்மையோடு, தங்களுக்கு ஒரு பெரும்பான்மை பலம் இருப்பதாக கருதிக் கொண்டு ஒரு மிகக்கூடிய மமதையோடு இதனை நடத்த முனைவார்களானால் மீண்டும் இந்த நாடு ஒரு இனவாத ரீதியான சகதிக்குள் தள்ளப்படும் என்பதற்கு வரலாறு அவர்களுக்கு ஒரு பாடத்தை கற்றுக் கொடுக்கவேண்டும் என்பதல்ல.

ஏனென்றால் நீண்ட நெடும் வரலாற்று பாடங்களை அவர்கள் கற்றுக் கொண்டவர்கள். இந்த ஒரே தீவினுள் இரண்டு தேசிய இன மக்கள் வசிக்கின்ற போதும் அவர்கள் தமக்குரிய அரசியலையும் பொருளாதாரத்தையும் வெவ்வேறு அடிப்படையில் கொண்டுள்ளனர்.

இந்த உண்மைகளை அனுசரித்து ஏற்கனவே நடந்திருந்தால் இலங்கை பொருளாதாரத்தின் அபிவிருத்தியை எட்டுவதில் எவ்வித பிரச்சினைகளையும் கொண்டிருக்க மாட்டாது என குறிப்பிட்டுள்ளார்.

நான் துரோகி எனில் எனக்கு வாக்களிக்க வேண்டாம் – யாழில் சிறீதரன்

இரணைமடு குடிநீர்தான் பிரச்சனை என்றால் என்னை நிராகரியுங்கள் தோல்வியை எதிர்கொள்ள நான் தயாரென  தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளரான சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (02.08.2020) யாழ்ப்பாணம் கிட்டுப் பூங்காவில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இரணைமடு குளத்தின் தண்ணீரை யாழ்ப்பாணத்திற்கு வழங்க முடியாதென நான் கூறியதாக ஊடங்களில் வெளிவந்துள்ள செய்திகள் தொடர்பில் விளக்கமளிக்க வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது.   இரணைமடு தொடர்பில் இப்போது யாழ்ப்பாணத்தை தளமாக கொண்டியங்கும் தொலைக்காட்சி என் பெயரைக் குறிப்பிடாமல் எனக்கு எதிராக இரணைமடு நீரை தர மறுத்தவர் யார்? மறக்க மாட்டார்கள் யாழ்ப்பாண மக்கள் என்று கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் ஒன்றை பிரசுரித்து வருகிறார்கள். இதன் விளக்கம் இல்லாமல் குறுகிய வட்டத்துக்குள் அவர்கள் நிற்கிறார்கள்.

கிளிநொச்சியில் தண்ணீர் இல்லை குடிக்க, விவசாயம் செய்ய தண்ணீர் இல்லாத நிலையில் யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டால் இங்கே ஒரு விரோதத்தை கட்டி வளர்க்கலாம் இதனை அரசாங்கம் திட்டமிட்டு செய்தது .இதனையே சிலர்  அரசியலாக காவிச் செல்கின்றார்கள்.நான் யாருக்கும் தண்ணீர் தரமாட்டேன் என்று சொல்லவில்லை. நியாயத்தை சொன்னேன்.

குடிநீர் பிரச்சனையை தீர்க்க நாங்கள் முக்கியமான முயற்சிகளை செய்தோம். பாலியாறு எப்போதும் கடலுக்கு தண்ணீர் போகின்ற ஆறு, மண்டைக்கல்லாறு,குடமுறுட்டி போன்ற ஆறுகளாலும் கடலுக்கு தண்ணீர் போகிறது எத்தனையோ வளங்கள் உள்ளது.

நிலத்தடி நீரையும் நன்னீராக்கி 24 மணிநேரமும் குடிதண்ணீர் வழங்கக் கூடிய திட்டங்கள் கொண்டுவரப்பட்டது. எனினும் இவை குண்டுவெடிப்பு, ஜனாதிபதி தேர்தல், கொரோனா போன்றவற்றால் இத்திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இது தான் இதன் உண்மை.

இதன் பிறகும் இரணைமடு தண்ணீரை தரவில்லை என்று நீங்கள் எண்ணினால் நான் துரோகி என நினைத்தால், என் மீது நம்பிக்கை இல்லை என்றால் தயவு செய்து எனக்கு வாக்களிக்க வேண்டாம். தோல்வியை நான் ஏற்கத்தயாராக உள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.