சித்தார்த்தன்.

சித்தார்த்தன்.

போராளி துரோகியானதும், போராளி பயங்கரவாதியானதும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முடிவு ! பிள்ளையான், கருணா, சுரேஸ், சித்தார்த்தன், டக்ளஸ் கைது செய்யப்படலாம் !

போராளி துரோகியானதும், போராளி பயங்கரவாதியானதும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முடிவு ! பிள்ளையான், கருணா, சுரேஸ், சித்தார்த்தன், டக்ளஸ் கைது செய்யப்படலாம் !

மண்டையன் குழு தலைவராக செயற்பட்ட என்று குற்றம்சாட்டப்பட்ட ஈபிஆர்எல்எப் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஐபிகேஎப் காலத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுக்காக கைதாகலாம் என என்பிபி யாழ் எம்பிகள் மூலம் தகவல்களை கசிய விட்டுள்ளனர். அத்துடன் ஈபிடிபி தலைவர் டக்களஸ் தேவாநந்தா சட்டவிரோத கட்டிடங்களை கையகப்படுத்தியமை தொடர்பிலும், மகேஸ்வரி நிதியத்தின் மூலமான மண் ஊழல் மற்றும் ஊடகவியலாளர்கள் நிமலராஜன் மயில்வாகனம் கொலை வழக்கிலும் கைதாகலாம் எனக் கூறப்படுகிறது. கிழக்கில் துணைவேந்தர் ரவீந்திரநாத் சிவசுப்பிரமணியம் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் பிள்ளையான் கைதாகியது போன்று வடக்கிலும் கைதுகள் தொடரலாம் எனக் கூறப்படுகிறது.

யார் இந்த மண்டையன் குழு என்றால் இந்திய இராணுவத்தோடு சேர்ந்தியங்கிய ஒரு துணை இராணுவக் குழுவாகும். இந்தக் குழுவுக்கு தற்போதைய ஈபிஆர்எல்எப் தலைவராக இருக்கும் சுரேஸ் பிரேமச்சந்திரன் எனக் கூறப்படுகிறது. இந்திய இலங்கை உடன்படிக்கையை எதிர்த்த விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவானவர்கள் அல்லது அவ்வமைப்பைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படுவோர் மண்டையன் குழுவால் கடத்தப்பட்டார்கள். அசோக்கா ஹோட்டலில் வைத்து கடுமையான சித்திரவதைகள் செய்யப்பட்டார்கள். கொலை செய்யப்பட்டார்கள். மண்டையன் குழுவிடம் சிக்கியவர்களை அவர்கள் கொலை செய்யும் பாணி மிகக் கொடூரமானது எனக் கூறப்படுகிறது. உடம்பில் இருந்து தலையை துண்டித்து, தலைவேறாக முண்டம் வேறாக வீதிகளில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அக்காலத்தில் யாழ் நகரத்திற்கு தனியார் வகுப்புகளுக்கு செல்லும் போது தலை அறுக்கப்பட்ட முண்டங்களையும் தலைகளையும் வீதிகளில் கண்டு தாம் வேதனையும் கோபமும் கொண்டதாக பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த ஊடகவியலாளர் ஒருவர் தேசம்நெற்றுக்கு தெரிவித்தார்.

இவ்வாறு தலையை துண்டித்து கொலை செய்யும் பாணியை கடைப்பிடித்ததாலேயே இவர்கள் மண்டையன் குழு என அழைக்கப்பட்டார்கள். மற்றும் மண்டையன் குழுவினர் பேனாக்குச்சிகளை காதுகளில் அடைத்தும், சோடாப்போத்தல்களை மலவாசல் ஊடாக செலுத்தியும் சித்திரவதைகளை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது .

இவ்வாறான ஒரு சித்திரவதையில் உயிராபத்தான நிலையில் யாழ்ப்பாண ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஒரு இளைஞனின் வயிற்றுப் பகுதியிலிருந்து சோடாப்போத்தல் ஒன்று அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டமை 1988 களில் பெரும் பேசு பொருளாக இருந்தது. இந்த சம்பவத்தை முரசொலி பத்திரிகையில் அதன் ஆசிரியர் திருச்செல்வம் எழுதியிருந்தார். அதனால் ஆத்திரமடைந்த மண்டையன் குழுவினர் நல்லூரில் இருந்த பத்திரிகையாசிரியர் திருச்செல்வத்தின் மகனான கடத்திச் சென்றனர். சென் ஜோன்ஸ் மாணவனான அகிலன் கடுமையான சித்திரவதைகளுக்குள்ளாக்கப்பட்டு சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

இன்று வரை இந்த வழக்கால் சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு கனடா செல்வதற்கான பயணத்தடையை கனேடிய அரசாங்கம் விதித்துள்ளது. ஏனெனில் கொலை செய்யப்பட்ட அகிலனின் குடும்பம் அதாவது தந்தையான திருச்செல்வம் கனடாவில் தான் வாழ்கிறார். அகிலனின் தந்தை தனது மகனின் கொலைக்கு நீதி கேட்டு தற்போது வரை போராடி வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் மண்டையன் குழு ஊடகங்கள் மீதான தனது ஒடுக்குமுறையையும் கட்டவிழ்த்து விட்டிருந்தது. குறிப்பாக உதயன் பத்திரிகை நிறுவனம் தாக்கி எரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. அதை விடவும் மண்டையன் குழு கட்டாய ஆட்ச்சேர்ப்பிலும் ஈடுபட்டனர். மேலும் 1989 ஆண்டு காலப்பகுதியில் யாழில் வர்த்தகர்களிடம் இவர்கள் மிரட்டி கப்பம் கேட்டு பெற்றதாகவும் கூறப்படுகிறது.

சுரேஸ் பிரேமச்சந்திரன் தனது தந்தையை கொலை செய்ய முயன்றதாகவும், தந்தை தலைமறைவாக, தனது மூத்த இரு சகோதர்களை கடத்தி அசோக்கா ஹோட்டலில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாக எம்பி இராமநாதன் அர்ச்சனா குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்கு நேற்றைய தினம் யாழ் ஊடக மையத்தில் பேட்டியளித்த சுரேஸ் பிரேமச்சந்திரன் இது வெறுமனே தனிநபர் தாக்குதல் என்றார். என்பிபி அரசாங்கம் தன்னை நோக்கி கேள்வி கேட்கும் தமிழர்களின் பிரதிநிதிகள் மீது சேறு பூசவென சில ஊடகங்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் விலைக்கு வாங்கியுள்ளது. அவர்கள் ஊடாக தமிழ் மக்களிற்காக குரல் கொடுக்கும் அரசியல் வாதிகள் மீது சேறு பூசல்கள் நடப்பதாக கூறி மறைமுகமாக இது ஒரு அரசியல் என்று கடந்து சென்றார்.

சுரேஸ் பிரேமச்சந்திரன் மீதான குற்றச்சாட்டுக்கள் போன்றே ஈபிஆர்எல்எப் இலிருந்து பிரிந்த ஈபிடிபி தலைவர் டக்ளஸ் தேவாநந்தா மீதும் கடத்தல், கப்பம், காணமல் ஆக்கப்படல், சட்டவிரோத கட்டட அபகரிப்பு, ஊழல் மற்றும் கொலைக் குற்றச்சாட்டுக்கள் மக்களால் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இவரும் விரைவில் கைதாகலாம் என என்பிபி பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் கூறியுள்ளார்.

மண்டையன் குழுவாக இந்திய இராணுவத்தின் துணை இராணுவக்குழுவாக இயங்கியது சுரேஸ் பிரேமச்சந்திரன் அல்ல ராசிக் குழுவென்றும் மற்றுமொரு தகவல் தெரிவிக்கின்றது. ஆனால் பழி சுரேஸ் பிரேமச்சந்திரன் மீது வீழ்ந்துவிட்டது. ராசிக் குழுவினர் பின்னர் இலங்கை இராணுவத்தின் அங்கமாக மாறி, படுகொலை செய்யப்பட்ட போது இலங்கை இராணுவத்தின் மேஜராக மரணித்தார். இதே வரலாறு புளொட் மோகன் என்பவருக்கும் உண்டு.

அதேபோன்று டக்ளஸ் தேவாநந்தாவின் ஈபிடிபி, புளொட், பிள்ளையான் மற்றும் கருணா குழுவில் இருந்தவர்களில் சிலர் இலங்கை இராணுவத்தின் துணைப்படையாக இயங்கினர். இலங்கை இராணுவத்தின் துணை இராணுவக் குழுவாக வெவ்வேறு காலகட்டங்களில் செயற்பட்டனர் என்ற குற்றச்சாட்டுக்கள் உண்டு. பிரபாகரன் உயிருடனிருந்திருந்தால் அவர் இலங்கையில் அல்லது இந்தியாவில் சிறையில் தான் இருந்திருக்க நேரிட்டிருக்கும் என்பதே யதார்த்தம்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து இயக்கங்களும் கடத்தில், கப்பம், படுகொலை, சகோதரப் படுகொலைகளில் ஈடுபட்டவர்களே. இவர்கள் அனைவரது கரங்களிலும் இரத்தக் கறைகள் உள்ளது. பிரபாகரனும் விதிவிலக்கல்ல. ஒரு தரப்பின் போராளிகள் மற்றைய தரப்பின் துரோகிகள். பயங்கரவாதிகள். இந்த முரணுக்கு இன்னமும் முற்றுப்புள்ளி வைக்கப்பட வில்லை.

1986 மே ரெலோ தமிழீழ விடுதலை இயக்கம் அழிக்கப்பட்டதோடு தமிழீழ விடுதலைப் போராட்டம் தமிழீழ விடுதலைப் புலிகளால் மொத்த குத்தகைக்கு எடுக்கப்பட்டது. ஏனைய போராளிக் குழுக்கள் தேடி அழிக்கப்பட்ட போது அவர்கள் எதிரியான சிறிலங்கா இராணுவத்தினரிடமே சரணடைந்தனர். பழிவாங்கல்களில் ஈடுபட்டனர். 2009 இல் ஏனைய இயக்கங்கள் போல் புலிகளின் தலைமையும் அவர்களோடு அப்பாவி மக்களும் பேரழிவைச் சந்தித்தனர். முதல் கோணல் முற்றிலும் கோணலாகியது.

கடந்த காலத்து அனைத்து அநீதிகளுக்கும் நீதி கிடைக்க வேண்டும். அது வெற்று அரசியல் கோஷமாக இல்லாமல் பழிக்குப் பழிவாங்கும் மனோநிலையைக் கடந்து நிரந்தர சமாதானத்துக்கான வாயில்களைத் திறக்க வேண்டும். கடந்த காலத் தலைவர்கள் காலாவதியாகி நீண்டகாலமாகி விட்டது. அவர்கள் உண்மைகளை வெளிப்படுத்தி அரசியலில் இருந்து ஒதுங்குவதே மேல். இது ஆயுதமேந்திய தமிழ் தமிழ் தலைமைகளுக்கு மட்டுமல்ல ஆயுதமே ஏந்தாத மக்கள் மீது எவ்வித கரசரனயுமமற்ற இந்த ஆயுதமேந்தியவர்களின் மீது சவாரி செய்யும் தமிழரசுக் கட்சி, தமிழ் காங்கிரஸ் கட்சிக்கும் மிகப் பொருந்தும். உங்களுடைய பருப்புகள் இனி வேகாது. இனி புதிய விதி செய்ய வேண்டும். தமிழ் மக்கள் மத்தியிலிருந்து புதிய அரசியல் தலைமுறை உருவாக வேண்டும்.

 

அர்சுனாவின் பாராமன்ற ஆசனம் பறிபோக வாய்ப்பு ! சித்தார்தன் பா உ ஆக வாய்ப்பு !

அர்சுனாவின் பாராமன்ற ஆசனம் பறிபோக வாய்ப்பு ! சித்தார்தன் பா உ ஆக வாய்ப்பு !

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்புரமை தொடர்பில் போடப்பட்டுள்ள பொதுநல வழக்கு பா உ அர்ச்சுனாவுக்கு எதிராக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவர் தன்னுடைய வேலையை ராஜினாமாச் செய்யாமல் தேர்தலில் போட்டியிட்டமையால் அது விதிமுறைகளுக்கு முரணாணது எனக் கருதப்படுகின்றது. அந்த அடிப்படையிலேயே அர்ச்சுனா இவ்வழக்கில் உறுப்புரிமையை இழப்பார் எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது. அர்ச்சுனா தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்த போது அவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டு இருந்தார். ஆனால் அது அவர் பணியிலிருந்து நீக்கப்படவில்லை.

இதற்கிடையே தான் தனது பா உ பதவியை தனக்கு அடுத்து அதிக வாக்குகள் பெற்ற கௌசல்யா நரேனுக்கு வழங்கப் போவதாக ஒரு பதிவை அர்ச்சுனா வெளியிட்டார். அதனை சில ஊடகங்கள் அர்ச்சுனா பாராளுமன்ற உறுப்புரிமையிலிருந்து நீங்கி விட்டதாகவும் செய்திகள் வெளியிட்டு இருந்தன.

பா உ அர்ச்சுனாவுக்கு எதிரான பொதுநல வழக்கு அர்ச்சுனாவுக்கு எதிராக அமைந்தால் அவர் பாராளுமன்ற உறுப்புரிமையை இழப்பது மட்டுமல்ல அவருடைய சுயேட்சைக் குழுவும் முடக்கபடும். ஏனெனல் அச்சுயேட்சைக்குழுவின் தலைவராக இராமநாதன் அர்ச்சுனாவே உள்ளார். அதனால் கௌசல்யா நரேனுக்கு அந்த உறுப்புரிமை வழங்கப்பட மாட்டாது.

அவ்வாறான நிலை ஏற்பட்டால் அதற்கு அடுத்தநிலையில் உள்ள கட்சிக்கே அந்த உறுப்புரிமை வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அப்படியானால் ஜனநாயத் தேசியக் கூட்டமைப்பில் உள்ள புளொட் தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கே அந்த உறுப்புரிமை செல்வதற்கான வாய்ப்பு உள்ளது.

“பிரச்சினை இருக்கு ஆனா இல்ல. அவை விசயம் தெரியாம (தென்மராட்சியாருக்கு கொஞ்சம் அறிவு குறைவு) பெரிசாக்கி கதைக்கினம்” புளொட் தலைவர் த சித்தார்த்தன்

 

வடக்கின் சுகாதார நிலைகள் பற்றிக் கேட்டறிய நேற்று யூலை 18 சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரண யாழ் விஜயம் மேற்கொண்டிருந்தார் அங்கு அவரைச் சந்தித்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் புளொட் தலைவர் சித்தார்த்தன், தமிழரசுக் கட்சி சார்பில் எஸ் சிறிதரன், சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் ராமநாதன் அங்கஜன் ஆகியோர் கலந்துகொண்டனர். ஆனால் இவர்கள் வடக்கில் மக்களுக்கு சுகாதாரப் பிரச்சினைகளோ, பாதிப்போ இருப்பதாக எதுவும் குறிப்பிடவில்லை.

 

மாறாக புளொட் தலைவர் சித்தார்த்தன் ஆங்கிலத்தில் குறிப்பிடுகின்ற போது ரமேஸ் பத்திரணவின் தந்தைக்கு புகழாரம் சூட்டியதோடு தங்களுடைய பிரதேசத்துக்கு வந்ததற்கும் நன்றியும் தெரிவித்தார். தென்மராட்சி மக்களும் மற்றவர்களும் ஏதோ விசயம் தெரியாமல் கொஞ்சம் எல்லாத்தையும் பெருப்பித்துப் போட்டினம். பிரச்சினை இருக்குத் தான். ஆனா பிரச்சினை இல்லை” என்று மிகத் தெளிவாக மிக உறுதியாக சிரித்து சில்லெடுத்தார். இலங்கையில் உள்ள முதகெலும்பற்ற பிரயோசனமற்ற ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்று பெயரெடுத்த சித்தார்த்தனுக்கு ஊன்றுகொலாக பா உ சிறிதரனும் அங்கு வந்திருந்தார். பக்கத்தில் உள்ள தென்மராட்சி மக்களின் குரலுக்கு செவிமடுக்காத எஸ் சிறிதரன், லண்டனில் தனது மகனை படிப்பிக்கும் கோயில்காரரின் தேருக்கு லண்டனுக்கு காவடி எடுக்கின்றார். பா உ எஸ் சிறிதரன் லண்டன் வந்தால் அவருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் போராட்டம் ஒன்றை நடத்த லண்டனில் வாழும் தென்மராட்சி மக்களும் அவர்களின் நண்பர்களும் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சிபேதமில்லாமல் தென்மராட்சி மக்களதும் தமிழ் மக்களதும் முதகில் குத்திவிட்டதாக கிளிநொச்சியில் வாழும் மனிதஉரிமைப் பாதுகாவலர், செயற்பாட்டாளர் த கிருஷ்ணன் தேசம்நெற்க்கு யூலை 18 வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார். பா உ க்கள் எஸ் சிறிதரன், எம் சுமந்திரன், த சித்தார்த்தன், ராமநாதன் அங்கஜன், செல்வம் அடைக்கலநாதன், செல்வராஜா கஜேந்திரன் ஆகியோரும் அவர்களது கட்சிகளும் தாங்களுக்கு தமிழ் மக்களது அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சினைகளில் அக்கறையில்லை என்பதை மிகத் தெளிவாகக் காட்டிவிட்டார்கள் என த கிருஷ்ணன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

யாழ்ப்பாண வைத்தியசாலை ஐரோப்பிய வைத்தியசாலைகளின் தரத்தில் இருப்பதாக ரமேஸ் பத்திரண தெரிவித்ததை வேடிக்கையாகக் கேட்டுக்கொண்டிருந்தனர். இப்பாராளுமன்ற உறுப்பினர்களுக்கோ அவர்களது குடும்பத்தினருக்கோ இனிமேல் வயிற்றுவலி வந்தால், பாம்பு கடித்தால், பல்லுக் கொதித்தால், நெஞ்சு நொந்தால், பிள்ளைப்பேறு என்றால் அருகில் உள்ள ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டும். அந்த டொக்டர் கையெழுத்துப் போட்டுவிட்டு ப்ரைவேட்டுக்கு போயிருந்தால், அவர் வரும்வரை இவர்கள் காத்திருக்க வேண்டும். அப்படி வந்து பார்த்து சரிவராது என்று சொன்னால் நீங்கள் யாழ்ப்பாணம் போதனா வைதியசாலைக்கு கொண்டு போய் உயிர் தப்பி வந்து சொல்லுங்கோ. “பிரச்சினை இருக்கு ஆனா இல்ல. தென்மராட்சியாருக்கு கொஞ்சம் அறிவு குறைவு அவை விசயம் தெரியாம கதைக்கினம்” என்று புளொட் சித்தார்த்தனும் சிறிதரனும் அங்கஜனும் சொல்றதை நாங்களும் ஏற்றுக்கொள்வோம்.

முதல்ல பென்ஸ்காரை குவிச்சு வைத்துக்கொண்டு சைக்கிள் சின்னத்தில தமிழ் தேசியம் பேசிய பொன்னம்பலம் கஜேந்திரகுமாரை ஐரோப்பிய தரத்தில் இருக்கிற யாழ் தேசிய மருத்துவ மனையில் அனுமதித்து சிகிச்சை அளியுங்கள். இனிமேல் வடக்கில இருக்கின்ற ஒரு பாரளுமன்ற உறுப்பினரும் அரசாங்க வைத்தியசாலையைத் தவிர வேறு தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்லக்கூடாது. உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு எதற்கு உரிமை இருக்கிறதோ அதுதான் உங்களுக்கும்.