சரத் வீரசேகர

சரத் வீரசேகர

“நான் மாகாண சபை தேர்தல் முறைக்கு எதிரானவனே தவிர தமிழ் மக்களுக்கு எதிரானவன் அல்ல.” – யாழில் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர !

“நான் மாகாண சபை தேர்தல் முறைக்கு எதிரானவனே தவிர தமிழ் மக்களுக்கு எதிரானவன் அல்ல.” என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் – மருதங்கேணியில் புதிதாக அமைக்கப்பட்ட காவல் நிலையத்தை திறந்து வைத்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் சரத் வீரசேகர இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று வடக்கில் இரண்டு காவல் நிலையத்தை திறப்பதற்காக நான் வந்துள்ளேன் மல்லாவி மற்றும் மருதங்கேணி பகுதியில் பொது மக்களின் பிரச்சினையை தீர்க்கும் முகமாக இரண்டு காவல் நிலையங்களை திறந்து இருக்கின்றேன்.

தற்பொழுது நாடு பூராகவும் 494 காவல் நிலையங்கள் காணப்படுகின்றன. அதற்கு மேலதிகமாக இன்னும் 190 காவல் நிலையங்களை புதிதாக அமைக்க உள்ளோம்.

அந்த வேலைத் திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் வடபகுதியில் இரண்டு புதிய காவல் நிலையங்கள் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளன அத்தோடு பொதுமக்கள் தூர இடங்களுக்குச் சென்று தமது காவல்துறை சேவையினை பெற்றுக் கொள்வதை நிறுத்த இதனை செய்துள்ளோம்.

தற்பொழுது நான் பொதுமக்களிடம் உரையாடும் போது பொதுமக்கள் தமது பிரச்சினைகளை கூறும் போது இந்த பிரச்சனை எனக்கு கூறினார்கள் அதற்கு ஒரு தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி கிழக்கு பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தல் தொடர்பில் பல குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் இங்கே வேலையில்லாப் பிரச்சினை தான் இந்த மணல் கடத்தலுக்கு காரணமாக இருக்கின்றது எனவே கல்வி கற்று வேலையற்றுள்ளோர் மற்றும் இதன் காரணமாக கல்வியை இடையே நிறுத்தி வேலையில்லாது உள்ளோருக்கு வேலை வாய்ப்பினை பெற்றுக் கொடுப்பதன் மூலம் இந்த சட்டவிரோத மணல் கடத்தலை தடுத்து நிறுத்த முடியும் .

இங்கே உள்ள இளைஞர் யுவதிகளுக்கான வேலை வாய்ப்பினை வழங்குமிடத்து வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் சட்டவிரோத மணல் கடத்தலை கட்டுப்படுத்த முடியும் எனவே அமைச்சர் டக்லஸ் உடன் இணைந்து இந்த பகுதியில் இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பினை வழங்குவதற்காக நான் யோசித்துள்ளேன்.

அத்தோடு அவ்வாறு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்குவதன் மூலம் அந்த இளைஞர் யுவதிகள் சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபடமாட்டார்கள் எனினும் அவ்வாறு சட்டவிரோதமான மணல் கடத்தலில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளேன்.

அத்தோடு புங்குடுதீவு பகுதியில் வெகு விரைவில் புதிதாக காவல் நிலையம் ஒன்றும் அமைக்கப்பட்ட உள்ளது இன்று ஆரம்பித்து இருக்கின்ற வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக அது அமைக்கப்படும்.

மாகாண சபை முறைக்கு சரத் வீரசேகர ஆகிய நான் எதிரானவன் அன்றும் எதிர்த்தேன் இன்றும் எதிர்க்கிறேன் நாளையும் அதே கருத்தை தான் கொண்டுள்ளேன் அது இந்தியாவால் எமக்கு பலவந்தமாக திணிக்கப்பட்ட ஒன்று.

மாகாண சபைமுறைமை என்பது ஒரு தேவையற்ற ஒரு விடயமாகும் ஒன்பது மாகாணசபைகள் காணப்படும்போது அந்த 9 மாகாண சபைக்கும் தனியான நிர்வாகம் காணப்படும் மத்திய அரசு என்பது தனியாக செயற்பட வேண்டி வரும் ஆனால் மத்திய அரசாங்கம் என்பது ஒன்று தான். ஒன்பது மாகாணத்திற்கும் தனியான நிர்வாகம் இருக்க முடியாது.

ஆனால் அரசாங்கம் மாகாணசபை முறை வேண்டும் என தீர்மானிக்குமானால் அந்த தீர்மானத்தினை நான் எதிர்க்கப் போவதில்லை இந்த பிரதேசத்தில் மாகாணசபை இல்லாது போய் கடந்து மூன்று வருடம் ஆகிவிட்டது தற்பொழுது அபிவிருத்தி தடைப்பட்டுள்ளது. கடந்தமுறை ஆட்சியில் இருந்த முதலமைச்சர் விக்னேஸ்வரன் மத்திய அரசாங்கத்தால் அபிவிருத்திக்கென ஒதுக்கப்பட்ட நிதியில் அரைவாசி நிதியினை பயன்படுத்தாது திறை சேரிக்கு திருப்பி அனுப்பியுள்ளார். இந்த நிலைமைதான் இங்கே காணப்படுகின்றது.

ஆகவே மாகாண சபை என்பது மக்களுக்கு பிரயோசனமான ஒரு விடயமாக அமைய வேண்டும்.

எனினும் வடக்கு மக்கள் மாகாண சபையினை விரும்புகின்றார்கள் அது ஒரு அரசியல் காரணமாக இருக்கலாம் ஆனால் சரத் வீரசேகர ஆகிய நான் தனிப்பட்ட ரீதியில் மாகாணசபை முறைமைக்கு எதிரானவன்.

அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடத்த தீர்மானித்தால் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு ஏற்றவாறு நான் செயற்படத் தயாராக உள்ளேன். எனினும் நான் தமிழ் மக்களுக்கு எதிரானவன் அல்ல அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடத்த விரும்பினால் அதை நடத்தலாம் ஆனால் தனிப்பட்ட ரீதியில் நான் மாகாண சபைக்கு எதிரானவன் என தெரிவித்துள்ளார்.

தடை செய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புகளின் செயற்பாடுகளுடன் தொடர்புபட்ட எவரேனும் இலங்கையில் செயற்பட்டால் உடன் கைது !

தடை செய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புகளின் செயற்பாடுகளுடன் தொடர்புபட்ட எவரேனும் இலங்கையில் செயற்பட்டாலோ அல்லது இலங்கைக்கு வருகை தந்தாலோ அவர்கள் உடனடியாகக் கைதுசெய்யப்படுவார்கள் என்று அரசு அறிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு கொண்டுள்ளமை, இஸ்லாமிய பயங்கரவாத கொள்கையை பரப்புகின்றமை மற்றும் அவர்களுக்காக நிதி சேகரிப்பில் ஈடுபடுகின்றமை போன்ற காரணங்களால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது என அரசு தெரிவித்துள்ளது.

நீண்டகாலமாக இலங்கை விவகாரங்களில் கண்காணித்து செயற்பட்டு வருகின்ற புலம்பெயர் தமிழ் அமைப்புகளையும் தனிப்பட்ட முஸ்லிம் மற்றும் தமிழ் உறுப்பினர்கள் உட்பட 400 இற்கும் அதிகமானவர்களின் பெயர்களையும் இலங்கை அரசு  தடை செய்துள்ளது.

இந்தத் தடைக்கான காரணம் குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, அமைச்சரவை இணைப்பேச்சாளர் உதய கம்மன்பில ஆகியோர் அரசின் நிலைப்பாட்டை மேற்கண்டவாறு ஊடகங்களுக்கு அறிவித்துள்ளனர்.

“எம்.ஏ.சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படைப் பாதுகாப்பை நானே நீக்கினேன்” – காரணத்தை கூறினார் அமைச்சர் சரத் வீரசேகர

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படைப் பாதுகாப்பை நானே நீக்கினேன்” என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்குமான தமிழ்பேசும் சமூகத்தின் நீதிக்கான பேரணி பல்வேறு தடைகளைத் தாண்டி நேற்றுமுன்தினம் மாலை பொலிகண்டியில் வெற்றியுடன் நிறைவடைந்தது.

இந்தப் பேரணியின் ஆரம்பத்தில் இருந்து நிறைவு வரைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் த.கலையரசன் ஆகியோர் முன்னின்று செயற்பட்டனர். இவர்களில் சுமந்திரனின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப் படை நேற்றுமுன்தினம் இரவு திடீரென மீளப்பெறப்பட்டிருந்தது.

இந்தநிலையில், ஹிரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர சுமந்திரனுக்கு வழங்கப்பட்ட எஸ்.டி.எவ். பாதுகாப்பை தாமே நீக்கினார் எனவும், எதற்காக நீக்கப்பட்டது எனவும் தெரிவித்தார்.

“தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களால் சுமந்திரனுக்கு கொலை அச்சுறுத்தல் இருக்கின்றது என்றபடியால் அவருக்கு எஸ்.டி.எவ். பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. உண்மையில் சுமந்திரனுக்கு அவ்வாறான அச்சுறுத்தல் இருக்குமானால் அவரால் இவ்வாறான பேரணியில் கலந்துகொண்டிருக்க முடியாது. எனவே, அவருக்கு எஸ்.டி.எவ். பாதுகாப்பு எதற்கு?” என்று அவர் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கேள்வி எழுப்பினார்.

2014ஆம் ஆண்டிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை படுகொலை செய்ய மூன்று தடவைகள் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.

இந்தச் சம்பவங்கள் தொடர்பில் சிங்களப் பாதாள உலகக் கோஷ்டியினர், தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் என 30 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

மேற்படி சம்பவங்கள் தொடர்பில் தற்போதும் 6 இற்கும் அதிகமான வழக்குகள் நடைபெற்று வருகின்றன. அத்துடன் சந்தேகநபர்கள் பலர் சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“வடக்கு – கிழக்கு இணைந்த தனிப்பிராந்தியமாக இருக்க வேண்டும் என்ற கூட்டமைப்பின் யோசனையை அரசு குப்பையில் வீச வேண்டும்” – அரசிடம் சரத் வீரசேகர வேண்டுகோள் !

“வடக்கு – கிழக்கு இணைந்த தனிப்பிராந்தியமாக இருக்க வேண்டும் என்ற கூட்டமைப்பின் யோசனையை அரசு குப்பையில் வீச வேண்டும்” என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் உள்ளூராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சருமான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

புதிய அரசமைப்பில் மத்திய மற்றும் பிராந்தியங்களின் ஐக்கியத்தைக் கொண்டதாக அரசு முறைமை அமைய வேண்டும். அதில் ஒரு பிராந்தியமாக தமிழ் பேசும் மக்களின் பிரதான வாழிடமான வடக்கு – கிழக்கு இருத்தல் வேண்டும் என்று புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான நிபுணர்கள் குழுவுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமர்ப்பித்துள்ள யோசனைத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்தேசிய கூட்டமைப்பினுடைய இந்த யோசனை தொடர்பாக குறிப்பிடும் போதே  அமைச்சர் சரத் வீரசேகர மேலும் தெரிவித்ததாவது:-

“தமிழீழ விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டாலும் அவர்களை உயிர்ப்பிக்கும் வகையிலும், அவர்களின் கனவை நனவாக்கும் வகையிலுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றனர்.

மாகாண சபை முறைமை மூலம் தனி இராஜ்ஜியத்தை நடத்தலாம் என்ற எண்ணத்துடனேயே கூட்டமைப்பினர் உள்ளனர். அதிலும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் தாயக பூமி என்ற மமதையுடனும், அந்த இரு மாகாணங்களையும் இணைக்க வேண்டும் என்ற நப்பாசையுடனும் கூட்டமைப்பினர் உள்ளனர்.

இலங்கையில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான விடுதலைப்புலிகளின் தமிழீழக் கனவுடன் தொடர்ந்து செயற்பட்டுவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான நிபுணர்கள் குழுவுக்குச் சமர்ப்பித்துள்ள யோசனைகளில் வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைந்த தனிப்பிராந்தியமாக இருக்க வேண்டும் என்ற யோசனையை அரசு தூக்கிக் குப்பையில் வீச வேண்டும்.

இதன்காரணமாகவே மாகாண சபை முறைமைக்கு முடிவுகட்ட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நான் உறுதியாக உள்ளேன். அதுதான் மாகாண சபைத் தேர்தல் வேண்டாம் என்று வலியுறுத்தி வருகின்றேன்” – என்றார்.

“கூட்டமைப்பையும் தடை செய்திருக்க வேண்டுமென அமைச்சர் சரத் வீரசேகர கூறிய கருத்துக்கு சரத்வீரசேகர மன்னிப்பு கேட்க வேண்டும்” – சாள்ஸ் நிர்மலநாதன்

விடுதலைப் புலிகளை ஒழித்தபோதே கூட்டமைப்பையும் தடை செய்திருக்க வேண்டுமென அமைச்சர் சரத் வீரசேகர கூறிய கருத்து பாரதூரமானது. எனவே, அவர் சபையில் மன்னிப்புக்கோர வேண்டும் என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

நேற்று (03.12.2020) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் அமைச்சர் சரத் வீரசேகர “கூட்டமைப்பு தொடர்ந்தும் இயங்க பிரதமரின் கருணையே காரணம்.அக்கட்சி விடுதலைப் புலிகளுக்கு சார்பாக செயற்பட்டால் கட்சி தடைசெய்யப்படும்”எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்பாக இவ்வாறு வெளியிட்ட கருத்தினால், சபையில் கடுமையான வாத பிரதிவாதங்கள் நடைபெற்றன.

இதன்போதே சாள்ஸ் நிர்மலநாதன், சரத் வீரசேகரவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சபை அமர்வில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, ஹிட்லர் போன்று மஹிந்த செயற்பட்டிருந்தால் ஒருவரும் இருந்திருக்க மாட்டார்கள். விடுதலைப் புலிகளை ஒழித்தபோதே இவர்களையும் ஒழித்திருக்க வேண்டும் என கூறிய கருத்து பாரதூரமானது. ஆகவே அவர் சபையில் மன்னிப்புக்கோர வேண்டும்.

அத்துடன், அரசாங்கத்தின் சில செயற்பாடுகளினாலேயே இனவாதம் வளர்ந்து வருகிறது. தமிழ் மக்கள் முகம்கொடுக்கின்ற பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து, உரிய நிரந்தர தீர்வை வழங்குங்கள் என அவர் குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் சரத் வீரசேகர, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தொடர்ச்சியாக பிரிவினைவாத கருத்துக்களை வெளியிட்டு வருகின்றமையினாலேயே இவ்வாறு கூறினேன் என சபையில் குறிப்பிட்டார்.