சரத் வீரசேகர

சரத் வீரசேகர

“வடக்கு – கிழக்கு இணைந்த தனிப்பிராந்தியமாக இருக்க வேண்டும் என்ற கூட்டமைப்பின் யோசனையை அரசு குப்பையில் வீச வேண்டும்” – அரசிடம் சரத் வீரசேகர வேண்டுகோள் !

“வடக்கு – கிழக்கு இணைந்த தனிப்பிராந்தியமாக இருக்க வேண்டும் என்ற கூட்டமைப்பின் யோசனையை அரசு குப்பையில் வீச வேண்டும்” என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் உள்ளூராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சருமான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

புதிய அரசமைப்பில் மத்திய மற்றும் பிராந்தியங்களின் ஐக்கியத்தைக் கொண்டதாக அரசு முறைமை அமைய வேண்டும். அதில் ஒரு பிராந்தியமாக தமிழ் பேசும் மக்களின் பிரதான வாழிடமான வடக்கு – கிழக்கு இருத்தல் வேண்டும் என்று புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான நிபுணர்கள் குழுவுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமர்ப்பித்துள்ள யோசனைத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்தேசிய கூட்டமைப்பினுடைய இந்த யோசனை தொடர்பாக குறிப்பிடும் போதே  அமைச்சர் சரத் வீரசேகர மேலும் தெரிவித்ததாவது:-

“தமிழீழ விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டாலும் அவர்களை உயிர்ப்பிக்கும் வகையிலும், அவர்களின் கனவை நனவாக்கும் வகையிலுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றனர்.

மாகாண சபை முறைமை மூலம் தனி இராஜ்ஜியத்தை நடத்தலாம் என்ற எண்ணத்துடனேயே கூட்டமைப்பினர் உள்ளனர். அதிலும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் தாயக பூமி என்ற மமதையுடனும், அந்த இரு மாகாணங்களையும் இணைக்க வேண்டும் என்ற நப்பாசையுடனும் கூட்டமைப்பினர் உள்ளனர்.

இலங்கையில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான விடுதலைப்புலிகளின் தமிழீழக் கனவுடன் தொடர்ந்து செயற்பட்டுவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான நிபுணர்கள் குழுவுக்குச் சமர்ப்பித்துள்ள யோசனைகளில் வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைந்த தனிப்பிராந்தியமாக இருக்க வேண்டும் என்ற யோசனையை அரசு தூக்கிக் குப்பையில் வீச வேண்டும்.

இதன்காரணமாகவே மாகாண சபை முறைமைக்கு முடிவுகட்ட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நான் உறுதியாக உள்ளேன். அதுதான் மாகாண சபைத் தேர்தல் வேண்டாம் என்று வலியுறுத்தி வருகின்றேன்” – என்றார்.

“கூட்டமைப்பையும் தடை செய்திருக்க வேண்டுமென அமைச்சர் சரத் வீரசேகர கூறிய கருத்துக்கு சரத்வீரசேகர மன்னிப்பு கேட்க வேண்டும்” – சாள்ஸ் நிர்மலநாதன்

விடுதலைப் புலிகளை ஒழித்தபோதே கூட்டமைப்பையும் தடை செய்திருக்க வேண்டுமென அமைச்சர் சரத் வீரசேகர கூறிய கருத்து பாரதூரமானது. எனவே, அவர் சபையில் மன்னிப்புக்கோர வேண்டும் என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

நேற்று (03.12.2020) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் அமைச்சர் சரத் வீரசேகர “கூட்டமைப்பு தொடர்ந்தும் இயங்க பிரதமரின் கருணையே காரணம்.அக்கட்சி விடுதலைப் புலிகளுக்கு சார்பாக செயற்பட்டால் கட்சி தடைசெய்யப்படும்”எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்பாக இவ்வாறு வெளியிட்ட கருத்தினால், சபையில் கடுமையான வாத பிரதிவாதங்கள் நடைபெற்றன.

இதன்போதே சாள்ஸ் நிர்மலநாதன், சரத் வீரசேகரவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சபை அமர்வில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, ஹிட்லர் போன்று மஹிந்த செயற்பட்டிருந்தால் ஒருவரும் இருந்திருக்க மாட்டார்கள். விடுதலைப் புலிகளை ஒழித்தபோதே இவர்களையும் ஒழித்திருக்க வேண்டும் என கூறிய கருத்து பாரதூரமானது. ஆகவே அவர் சபையில் மன்னிப்புக்கோர வேண்டும்.

அத்துடன், அரசாங்கத்தின் சில செயற்பாடுகளினாலேயே இனவாதம் வளர்ந்து வருகிறது. தமிழ் மக்கள் முகம்கொடுக்கின்ற பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து, உரிய நிரந்தர தீர்வை வழங்குங்கள் என அவர் குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் சரத் வீரசேகர, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தொடர்ச்சியாக பிரிவினைவாத கருத்துக்களை வெளியிட்டு வருகின்றமையினாலேயே இவ்வாறு கூறினேன் என சபையில் குறிப்பிட்டார்.