சரத் வீரசேகர

சரத் வீரசேகர

“நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க சிங்கள இனம் செய்த தியாகங்களை இன்னொரு இனத்துக்காக விட்டுக்கொடுக்க முடியாது.” – சரத் வீரசேகர

” நாட்டில் அதிகார பகிர்வுக்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை.” என நாடளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் தொழில்நுட்ப அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் மற்றும் அதிகார பகிர்வு தொட்பில் பாராளுமன்றத்தில் நேற்று அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

13ஆவது திருத்தத்தை இந்தியா பலவந்தமான முறையில் அமுல்படுத்தியது. இலங்கையர்கள் அதனை கோரவில்லை.

மக்களின் எதிர்ப்பிற்கு மத்தியில் தான் 13 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது. அப்போதைய ஜனாதிபதி ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தி, அதிகாரத்தை பிரயோகித்து அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நிறைவேற்றினார் . ஆகவே 13 ஆவது திருத்தத்திற்கும், நாட்டு மக்களுக்கும் இடையில் தொடர்பில்லை.

அதிகார பகிர்வுக்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை. அதிகார பரவலாக்கம் குறித்து அவதானம் செலுத்தலாம். ஒற்றையாட்சி நாட்டில் அதிகார பகிர்வுக்கு இடமில்லை. சமஷ்டியாட்சி நாடுகளில் மாத்திரம் தான் அதிகார பகிர்வு சாத்தியமாகும்.

நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க சிங்கள இனம் உயிர் தியாகம் செய்துள்ளது. சோழர், பாண்டியன் மற்றும் ஆங்கிலேயர்களிடம் இருந்து நாட்டை பாதுகாக்க சிங்களவர்கள் போராடினார்கள். தியாகம் செய்தார்கள். ஆகவே அதிகார பகிர்வு என்ற சொற்பதம் ஊடாக நாட்டை பிளவுப்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது.

விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனும் இந்த நோக்கத்துடன் செயற்பட்டார்.

ஒருமைப்பாட்டை பாதுகாக்க 29 ஆயிரம் இராணுவத்தினர் உயிர் தியாகம் செய்தார்கள்.

பாதுகாக்கப்பட்ட ஒருமைப்பாட்டை ஒவ்வொருவரின் தேவைக்காக மலினப்படுத்த முடியாது. மாகாண சபைக்கு முழுமையாக எதிர்ப்பை தொடர்ந்து வெளிப்படுத்துவேன்.

மாகாண சபை என்பது வெள்ளை யானை. ஒவ்வொரு இனத்தவரின் தேவைக்காக நாட்டை பிளவுப்படுத்த முடியாது, இலங்கையர்கள் என்ற அடிப்படையில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் மாத்திரமே நாட்டை முன்னேற்ற முடியும்” என்றார்.

 

“இங்கு தமிழர்களுக்கு பிரச்சினைகளே இல்லை. அவர்களே பிரச்சினைகளை உருவாக்குகிறார்கள்.”- சரத் வீரசேகர

நாட்டில் தமிழ் மக்களுக்கென்று பிரச்சினைகள் எதுவும் இல்லை என்றும் அவர்கள் தாமாகவே பிரச்சினைகளைத் தேடுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

எனவே, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்று வெளிவரும் செய்திகளை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

தேசிய பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பில் தமிழ் மக்களுடன் அரசு விரைவில் பேச்சை ஆரம்பிப்போம் என உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்களிடம் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் தெரிவித்திருந்தனர். அதேவேளை, தொடர்ச்சியாகத் தமிழ் மக்களை ஏமாற்றாமல், பேச்சுக்களை இதயசுத்தியுடன் அரசு நடத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியிருந்தார்.

இந்த மூன்று தலைவர்களினதும் கருத்துக்களுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே சரத் வீரசேகர மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

மூவின மக்களுக்கும் பொதுவான பிரச்சினைகள் இருப்பதாகவும் அந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். தேசிய பேரவையில் இணையாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசியல் தீர்வைக் காணும் பேச்சை அரசாங்கம் இதயசுத்தியுடன் நடத்த வேண்டும் என எவ்வாறு கோரமுடியும் என்றும் கேள்வியெழுப்பினார்.

தமிழ் மக்களுக்கு நாட்டில் சுதந்திரம் காணப்படும் நிலையில், சிங்கள மக்களுக்கு எதிராகவும், பௌத்த மதத்துக்கு எதிராகவும்தான் தமிழ் மக்கள் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

அமெரிக்காவின் அழுத்தங்களுக்காக எமது கொள்கைகளை விட்டுக்கொடுக்க முடியாது – சரத் வீரசேகர

இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் தேவைக்கமைய எமது வெளிவிவகார கொள்கையினை மாற்றியமைக்க முடியாது என ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

சீன கண்காணிப்பு கப்பல் உளவு பார்ப்பதற்காக ஹாம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தருகிறது என இந்தியா குறிப்பிடுவது அடிப்படையற்றது என்றும் தெரிவித்தார்.

இந்தியாவை உளவு பார்ப்பதற்கு சீனாவின் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தர வேண்டிய தேவை கிடையாது என்றும் சரத் வீரசேகர சுட்டிக்காட்டினார்.

இதேவேளை இந்த கப்பலுக்கான அனுமதியை முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் வழங்கிய நிலையில் அதனை தற்போதைய அமைச்சர் அலி சப்ரி ரத்து செய்வது இலங்கையின் வெளிவிவகார கொள்கையினை மலினப்படுத்தும் என குறிப்பிட்டார்.

கப்பல் விவகாரத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் எவ்வாறான அழுத்தங்களை பிரயோகித்தாலும் அவர்களுக்காக வெளிவிவகார கொள்கையினை மாற்றியமைக்க முடியாது என சரத் வீரசேகர தெரிவித்தார்.

“ஆசிரியர்கள் மீது சரத் வீரசேகர அடக்குமுறையை கையாள முயற்சிக்கின்றார்.” – ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு !

“சரத் வீரசேகர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிபர்கள், ஆசிரியர்கள் மீது விசாரணை என்ற பெயரில் குறுக்குவழியில் அடக்குமுறையை கையாள முயற்சிக்கின்றார்.” என இலங்கை  ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

அதிபர் – ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வுகேட்டு கொழும்பில் போராட்டம் நடத்திய பலரை பொலிஸார் நாளை மறுதினம் விசாரணைக்கு அழைத்திருப்பதாக கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட இலங்கை  ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ( Joseph Stalin )தெரிவித்தார்.

“அதிபர் – ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வுகேட்டு கடந்த ஓகஸ்ட் மாதம் 04 ஆம் திகதி கொழும்பில் பாரிய வாகனத் தொடரணி ஒன்றை முன்னெடுத்திருந்தோம். அதன்போது பொலிஸாரினால் 44 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். அதன்பின் அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்கள்.

இந்த பேரணியில் தங்களது சொந்த வாகனங்களையே ஆசிரியர்களும் அதிபர்களும் பயன்படுத்தியிருக்கின்ற நிலையில், வாகனங்களின் உரிமையாளர்களுக்கு பொலிஸார் கொழும்பு கோட்டையிலுள்ள நிலையத்தினால் விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது ஜனநாயகவிரோத செயற்பாடாகும்.

ஆர்ப்பாட்டம் செய்ய முழு சுதந்திரமும் இருப்பதாக இலங்கை அரசாங்கம் கூறிவருகிறது. மறுபக்கத்தில் இலங்கை  பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிபர்கள், ஆசிரியர்கள் மீது விசாரணை என்ற பெயரில் குறுக்குவழியில் அடக்குமுறையை கையாள முயற்சிக்கின்றார்.

இந்த செயற்பாட்டிற்கு எதிராக எழும்படி மனித உரிமை அமைப்புக்கள் என பலரிடமும் கேட்கின்றோம். அதேபோல அடுத்தமாதம் 15ஆம் திகதி தென்மாகாண பாடசாலைகளை திறப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. எனினும் அதற்கு முன்னர் ஆசிரியர்கள், அதிபரிகளின் சம்பளப் பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வை அறிவிக்க வேண்டும். எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“ஆசிரியர்கள் மீது கை வைக்கப்போவதில்லை.” – பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர

ஆசிரியர்கள் மீதும் கை வைத்ததில்லை என்றும் இனிமேலும் கை வைக்கப்போவதில்லை என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற குடிவரவுகுடியகல்வு சட்டத்தின் ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் “நாட்டில் இப்போது பல்வேறு தரப்பினர் ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர். இவ்வாறான ஆர்ப்பட்டங்களால் பொலிஸ் அதிகாரியொருவர் விரல்கள் இரண்டை இழந்துள்ளார்.

ஆனால் எதிர்க்கட்சியினர் இதுவரையில் குறித்த விடயம் தொடர்பாக கண்டணத்தையோ அல்லது கவலையையோ வெளியிடவில்லை. நல்லாட்சி காலத்தில் நீர் தாரைப் பிரயோகம், கண்ணீர் புகைத்தாக்குதல், தடியடி பிரயோகம் என்பன நடத்தப்பட்டது.

ஆனால் நாங்கள் ஒரு ஆசிரியர் மீதும் கை வைத்ததில்லை, கை வைக்கப் போவதும் இல்லை. ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய எங்களை தாக்கினாலும் பொறுமையாக இருக்குமாறே பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

“அதிகாரம் கையிலிருந்த போது அரசியலமைப்பை மீறியே பல சந்தர்ப்பங்களில் ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டார்.” – சரத் வீரசேகர குற்றச்சாட்டு !

“அதிகாரம் கையிலிருந்த போது அரசியலமைப்பை மீறியே பல சந்தர்ப்பங்களில் ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டார்.” என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று பங்கரவாதத் தடுப்பு சட்டம் தொடர்பில்  ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த விசேட கூற்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் பதிலளிக்கையில்,

ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவிருந்த காலப்பகுதியில் எப்.சி.ஐ.டியை உருவாக்கி அரசியலமைப்பை மீறியிருந்தார். ஊழல் ஒழிப்பு பிரிவை உருவாக்கிய சந்தர்ப்பத்திலும் அவர் அரசியலமைப்பை மீறியிருந்தார்.

ஆகவே, நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை பற்றி பேசுவதற்கு ரணில் விக்கிரமசிங்கவுக்கு எவ்வித தார்மீக உரிமையும் இல்லை. ரிஷாட் பதியுதீன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் பல்வேறு தொடர்புகளை கொண்டிருந்த குற்றச்சாட்டுகளின் பிரகாரமே கைது செய்யப்பட்டிருந்தார்.

அவரது விவகாரம் தற்போது சட்ட மாஅதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஹரின் பெர்ணான்டோ எம்.பியை கைதுசெய்வதற்கு எவ்வித தயார்படுத்தல்களும் இருக்கவில்லை. ஆனால், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியை தெரியுமென அவர் கூறியிருந்தார்.

பிரதான சூத்திரதாரி யாரென தெரியுமாக இருந்தால் தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அந்த தகவல்களை வழங்குவது அவரது கடமையாகும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, பிரதமராக இருந்தபோது பல சந்தர்ப்பங்களில் அரசியலமைப்பை முழுமையாக மீறியே செயற்பட்டுள்ளார்.

அதனால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் பற்றி பேசுவதற்கு அவருக்கு எவ்வித தார்மீக உரிமையும் கிடையாது. என்றார்.

“இஸ்லாமிய அடிப்படைவாத செயற்பாடுகளை இல்லாதொழிக்க நாட்டு மக்கள் பாதுகாப்பு தரப்பினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.” – அட்மிரல் சரத் வீரசேகர

“இஸ்லாமிய அடிப்படைவாத செயற்பாடுகளை இல்லாதொழிக்க நாட்டு மக்கள் பாதுகாப்பு தரப்பினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.” என பொதுமக்கள் பாதுகாப்பு அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஐ.எஸ்.ஐ.எஸ்.அடிப்படைவாதம், வாஹப் வாதம், சல்பி வாதம் என மதம் மற்றும் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட அடிப்படைவாதம் காணப்படுகிறது.
உருவ வழிபாட்டுக்கு இவர்கள் முழுமையாக எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார்கள்.  தங்களின் மத கொள்கையினை பரப்புவதற்கு பிற மதங்களை கொல்வது சரி என்ற நிலைப்பாட்டில் உள்ளார்கள்.

அடிப்படைவாதத்தை இல்லாதொழிக்க அரசாங்கம் சிறந்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பு அத்தியாவசியமானது. பாதுகாப்பு தரப்பினராலும், புலனாய்வுபிரிவினராலும் மாத்திரம் அடிப்படைவாதத்தை இல்லாதொழித்து தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது.

அடிப்படைவாதம் தொடர்பில் நாட்டு மக்கள் பாதுகாப்பு தரப்பினருக்கு உரிய தகவல்களை வழங்க வேண்டும். தீவிர மத கொள்கையினை உடையவர்கள் ஒரு கட்டத்தில் அடிப்படைவாதிகளாக மாற்றமடைகிறார்கள். இறுதியில் பயங்கரவாதிகளாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் இவ்வாறான பின்னணியில் நடத்தப்பட்டது.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன்னிலைப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. அடிப்படைவாத தாக்குதல்கள் நாட்டில் எதிர்காலத்தில் இடம்பெறாத அளவிற்கு கடினமான பல தீர்மானங்களை எடுக்க நேரிட்டுள்ளது.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான விசாரணை அறிக்கை குறித்து எதிர்தரப்பினர் மாறுப்பட்ட பல கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள். குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் அறிந்திருந்தால் அதனை பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவிக்குமாறு குறிப்பிட்டோம்.

ஆனால் எதிர்த்தரப்பினர் இதுவரையில் எவ்வித முறைப்பாடுகளையும் முன்வைக்கவில்லை. ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையினையும் அரசியல் தேவைக்காக எதிர்க்கட்சியினர் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.” என்றார்.

“நான் மாகாண சபை தேர்தல் முறைக்கு எதிரானவனே தவிர தமிழ் மக்களுக்கு எதிரானவன் அல்ல.” – யாழில் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர !

“நான் மாகாண சபை தேர்தல் முறைக்கு எதிரானவனே தவிர தமிழ் மக்களுக்கு எதிரானவன் அல்ல.” என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் – மருதங்கேணியில் புதிதாக அமைக்கப்பட்ட காவல் நிலையத்தை திறந்து வைத்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் சரத் வீரசேகர இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று வடக்கில் இரண்டு காவல் நிலையத்தை திறப்பதற்காக நான் வந்துள்ளேன் மல்லாவி மற்றும் மருதங்கேணி பகுதியில் பொது மக்களின் பிரச்சினையை தீர்க்கும் முகமாக இரண்டு காவல் நிலையங்களை திறந்து இருக்கின்றேன்.

தற்பொழுது நாடு பூராகவும் 494 காவல் நிலையங்கள் காணப்படுகின்றன. அதற்கு மேலதிகமாக இன்னும் 190 காவல் நிலையங்களை புதிதாக அமைக்க உள்ளோம்.

அந்த வேலைத் திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் வடபகுதியில் இரண்டு புதிய காவல் நிலையங்கள் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளன அத்தோடு பொதுமக்கள் தூர இடங்களுக்குச் சென்று தமது காவல்துறை சேவையினை பெற்றுக் கொள்வதை நிறுத்த இதனை செய்துள்ளோம்.

தற்பொழுது நான் பொதுமக்களிடம் உரையாடும் போது பொதுமக்கள் தமது பிரச்சினைகளை கூறும் போது இந்த பிரச்சனை எனக்கு கூறினார்கள் அதற்கு ஒரு தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி கிழக்கு பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தல் தொடர்பில் பல குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் இங்கே வேலையில்லாப் பிரச்சினை தான் இந்த மணல் கடத்தலுக்கு காரணமாக இருக்கின்றது எனவே கல்வி கற்று வேலையற்றுள்ளோர் மற்றும் இதன் காரணமாக கல்வியை இடையே நிறுத்தி வேலையில்லாது உள்ளோருக்கு வேலை வாய்ப்பினை பெற்றுக் கொடுப்பதன் மூலம் இந்த சட்டவிரோத மணல் கடத்தலை தடுத்து நிறுத்த முடியும் .

இங்கே உள்ள இளைஞர் யுவதிகளுக்கான வேலை வாய்ப்பினை வழங்குமிடத்து வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் சட்டவிரோத மணல் கடத்தலை கட்டுப்படுத்த முடியும் எனவே அமைச்சர் டக்லஸ் உடன் இணைந்து இந்த பகுதியில் இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பினை வழங்குவதற்காக நான் யோசித்துள்ளேன்.

அத்தோடு அவ்வாறு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்குவதன் மூலம் அந்த இளைஞர் யுவதிகள் சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபடமாட்டார்கள் எனினும் அவ்வாறு சட்டவிரோதமான மணல் கடத்தலில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளேன்.

அத்தோடு புங்குடுதீவு பகுதியில் வெகு விரைவில் புதிதாக காவல் நிலையம் ஒன்றும் அமைக்கப்பட்ட உள்ளது இன்று ஆரம்பித்து இருக்கின்ற வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக அது அமைக்கப்படும்.

மாகாண சபை முறைக்கு சரத் வீரசேகர ஆகிய நான் எதிரானவன் அன்றும் எதிர்த்தேன் இன்றும் எதிர்க்கிறேன் நாளையும் அதே கருத்தை தான் கொண்டுள்ளேன் அது இந்தியாவால் எமக்கு பலவந்தமாக திணிக்கப்பட்ட ஒன்று.

மாகாண சபைமுறைமை என்பது ஒரு தேவையற்ற ஒரு விடயமாகும் ஒன்பது மாகாணசபைகள் காணப்படும்போது அந்த 9 மாகாண சபைக்கும் தனியான நிர்வாகம் காணப்படும் மத்திய அரசு என்பது தனியாக செயற்பட வேண்டி வரும் ஆனால் மத்திய அரசாங்கம் என்பது ஒன்று தான். ஒன்பது மாகாணத்திற்கும் தனியான நிர்வாகம் இருக்க முடியாது.

ஆனால் அரசாங்கம் மாகாணசபை முறை வேண்டும் என தீர்மானிக்குமானால் அந்த தீர்மானத்தினை நான் எதிர்க்கப் போவதில்லை இந்த பிரதேசத்தில் மாகாணசபை இல்லாது போய் கடந்து மூன்று வருடம் ஆகிவிட்டது தற்பொழுது அபிவிருத்தி தடைப்பட்டுள்ளது. கடந்தமுறை ஆட்சியில் இருந்த முதலமைச்சர் விக்னேஸ்வரன் மத்திய அரசாங்கத்தால் அபிவிருத்திக்கென ஒதுக்கப்பட்ட நிதியில் அரைவாசி நிதியினை பயன்படுத்தாது திறை சேரிக்கு திருப்பி அனுப்பியுள்ளார். இந்த நிலைமைதான் இங்கே காணப்படுகின்றது.

ஆகவே மாகாண சபை என்பது மக்களுக்கு பிரயோசனமான ஒரு விடயமாக அமைய வேண்டும்.

எனினும் வடக்கு மக்கள் மாகாண சபையினை விரும்புகின்றார்கள் அது ஒரு அரசியல் காரணமாக இருக்கலாம் ஆனால் சரத் வீரசேகர ஆகிய நான் தனிப்பட்ட ரீதியில் மாகாணசபை முறைமைக்கு எதிரானவன்.

அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடத்த தீர்மானித்தால் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு ஏற்றவாறு நான் செயற்படத் தயாராக உள்ளேன். எனினும் நான் தமிழ் மக்களுக்கு எதிரானவன் அல்ல அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடத்த விரும்பினால் அதை நடத்தலாம் ஆனால் தனிப்பட்ட ரீதியில் நான் மாகாண சபைக்கு எதிரானவன் என தெரிவித்துள்ளார்.

தடை செய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புகளின் செயற்பாடுகளுடன் தொடர்புபட்ட எவரேனும் இலங்கையில் செயற்பட்டால் உடன் கைது !

தடை செய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புகளின் செயற்பாடுகளுடன் தொடர்புபட்ட எவரேனும் இலங்கையில் செயற்பட்டாலோ அல்லது இலங்கைக்கு வருகை தந்தாலோ அவர்கள் உடனடியாகக் கைதுசெய்யப்படுவார்கள் என்று அரசு அறிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு கொண்டுள்ளமை, இஸ்லாமிய பயங்கரவாத கொள்கையை பரப்புகின்றமை மற்றும் அவர்களுக்காக நிதி சேகரிப்பில் ஈடுபடுகின்றமை போன்ற காரணங்களால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது என அரசு தெரிவித்துள்ளது.

நீண்டகாலமாக இலங்கை விவகாரங்களில் கண்காணித்து செயற்பட்டு வருகின்ற புலம்பெயர் தமிழ் அமைப்புகளையும் தனிப்பட்ட முஸ்லிம் மற்றும் தமிழ் உறுப்பினர்கள் உட்பட 400 இற்கும் அதிகமானவர்களின் பெயர்களையும் இலங்கை அரசு  தடை செய்துள்ளது.

இந்தத் தடைக்கான காரணம் குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, அமைச்சரவை இணைப்பேச்சாளர் உதய கம்மன்பில ஆகியோர் அரசின் நிலைப்பாட்டை மேற்கண்டவாறு ஊடகங்களுக்கு அறிவித்துள்ளனர்.

“எம்.ஏ.சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படைப் பாதுகாப்பை நானே நீக்கினேன்” – காரணத்தை கூறினார் அமைச்சர் சரத் வீரசேகர

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படைப் பாதுகாப்பை நானே நீக்கினேன்” என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்குமான தமிழ்பேசும் சமூகத்தின் நீதிக்கான பேரணி பல்வேறு தடைகளைத் தாண்டி நேற்றுமுன்தினம் மாலை பொலிகண்டியில் வெற்றியுடன் நிறைவடைந்தது.

இந்தப் பேரணியின் ஆரம்பத்தில் இருந்து நிறைவு வரைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் த.கலையரசன் ஆகியோர் முன்னின்று செயற்பட்டனர். இவர்களில் சுமந்திரனின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப் படை நேற்றுமுன்தினம் இரவு திடீரென மீளப்பெறப்பட்டிருந்தது.

இந்தநிலையில், ஹிரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர சுமந்திரனுக்கு வழங்கப்பட்ட எஸ்.டி.எவ். பாதுகாப்பை தாமே நீக்கினார் எனவும், எதற்காக நீக்கப்பட்டது எனவும் தெரிவித்தார்.

“தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களால் சுமந்திரனுக்கு கொலை அச்சுறுத்தல் இருக்கின்றது என்றபடியால் அவருக்கு எஸ்.டி.எவ். பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. உண்மையில் சுமந்திரனுக்கு அவ்வாறான அச்சுறுத்தல் இருக்குமானால் அவரால் இவ்வாறான பேரணியில் கலந்துகொண்டிருக்க முடியாது. எனவே, அவருக்கு எஸ்.டி.எவ். பாதுகாப்பு எதற்கு?” என்று அவர் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கேள்வி எழுப்பினார்.

2014ஆம் ஆண்டிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை படுகொலை செய்ய மூன்று தடவைகள் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.

இந்தச் சம்பவங்கள் தொடர்பில் சிங்களப் பாதாள உலகக் கோஷ்டியினர், தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் என 30 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

மேற்படி சம்பவங்கள் தொடர்பில் தற்போதும் 6 இற்கும் அதிகமான வழக்குகள் நடைபெற்று வருகின்றன. அத்துடன் சந்தேகநபர்கள் பலர் சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.