சரத் வீரசேகர

சரத் வீரசேகர

“பலாலியைச் சுற்றியுள்ள காணிகளை மக்களுக்கு கொடுப்பது அபாயகரமானது.” – சரத் வீரசேகர

யாழ்ப்பாணம் பலாலியைச் சுற்றியுள்ள காணிகளை விடுவிக்க முன் ஆலோசனை பெறவேண்டும் என சரத் வீரசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர இந்த கோரிக்கை விடுத்துள்ளார்.

பலாலியைச் சூழவுள்ள காணிகளை பொது மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கு முன்னர் பாதுகாப்புப் படைத் தலைவர்களிடம் ஆலோசனை பெறுமாறு கோரியுள்ளார்.

அவ்வாறு ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளாமல் குறித்த பகுதிகளில் உள்ள காணிகளை பகிர்ந்தளிப்பது அபாயகரமானது எனவும் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

 

“விடுதலைப்புலிகளின் கைப்பொம்மையாக கனடா செயற்படுகிறது.” – சரத் வீரசேகர காட்டம் !

“விடுதலைப்புலிகளின் கைப்பொம்மையாக கனடா செயற்படுகிறது.” என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

 

முன்னாள் ஜனாதிபதிகளான  மஹிந்தராஜபக்ச,கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் மீது பொருளாதாரத் தடையை கனடா விதித்துள்ளமைக்கு கடும் கண்டனங்களை தெரிவித்த போதே  முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் மீது கனடா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. மேலும், சுனில் ரத்நாயக்க, சந்தன ஹெட்டியாராச்சி ஆகியோருக்கு எதிராகவும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இலங்கையில் நடைபெற்றது சிவில் யுத்தமென கனடா கூறுகிறது. ஆனால் இலங்கையில் நடைபெற்றது சிவில் யுத்தமல்ல.

முன்னாள் ஜனாதிபதிகளான  மஹிந்தவும், கோட்டாவும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக எந்தவிதமான குற்றச்சாட்டுக்களும் தனிப்பட்டவகையில் அவர்களுக்கு இல்லாத நிலையில் எந்த அடிப்படையில் தடை விதிக்கப்பட்டது.

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டமைக்கான ஆதாரங்கள் இருக்கிறதா? பிரிவினைவாதிகளை சந்தோஷப்படுத்துவதற்காக இந்தத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.

சுனில் ரத்னாயக்கவுக்குக் கிடைக்கப்பெற்ற பொதுமன்னிப்பை எதிர்க்கும் கனடா, முன்னாள் விடுதலைப் புலிக உறுப்பினர்களை பொதுமன்னிப்பில் விடுவிக்கும்போது மாத்திரம் ஏன் எதிர்ப்பதில்லை. எதற்காக இந்த இரட்டை நிலைப்பாடு?

மனித உரிமை மீறலை கனடா செய்திருக்கிறது. எனவே மனித உரிமை மீறல் தொடர்பில் பேச கனடாவுக்கு அருகதை இல்லை. சர்வதேச ரீதியில் தடைச் செய்யப்பட்ட பயங்கரவாதிகளின் கைப்பொம்மையாகக் கனடா இருப்பதாக வரலாற்றில் பதியப்படும் எனவும் தெரிவித்தார்.

“சமஷ்டி கட்டமைப்பை நாட்டில் கொண்டுவர ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை.” – சரத் வீரசேகர

13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தி, சமஷ்டி கட்டமைப்பை நாட்டில் கொண்டுவரும் தமிழ்க் கட்சிகளின் முயற்சிகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

“வீடொன்று பற்றியெறியும்போது சுருட்டை பற்றவைத்ததைப் போன்று, இன்று சில தமிழ்க் கட்சிகளும் புலம் பெயர் தமிழ் அமைப்புக்களும் ஒரு சில சர்வதேச நாடுகளும் செயற்பட்டு வருகின்றன.

நாடு இன்று பொருளாதாரப் பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ள நிலையில், நாட்டை துண்டாட, நாட்டில் சமஷ்டியை ஏற்படுத்த அவர்கள் முயற்சித்து வருகிறார்கள். 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதிக்கு அழுத்தங்களை பிரயோகித்து வருகிறார்கள். இந்து – லங்கா ஒப்பந்தத்திற்கு இணங்க, வடக்கையும் கிழக்கையும் ஒன்றிணைத்து ஒருவருடத்திற்குள் சர்வஜன வாக்கெடுப்பொன்றுக்கு செல்ல வேண்டும் என்றே கூறப்பட்டிருந்தது. அது 13 ஆவது திருத்தசட்டம் கிடையாது.

அத்தோடு, இந்த ஒப்பந்தத்தில் அதிகாரத்தை பரவலாக்கல் தொடர்பாகக் கூறப்படவில்லை. அப்படியிருக்கையில், எவ்வாறு 13 ஆவது திருத்தச்சட்டம் வந்தது? இது இந்தியாவின் தேவைக்காக எம்மீது சுமத்தப்பட்ட ஒன்றாகும்.

இந்த சிறிய நாடு 9 மாகாணங்களாக பிரிந்து செயற்பட வேண்டிய அவசியம் கிடையாது. அமெரிக்காவில் 50 மாநிலங்கள் உள்ளன. அங்கு மேற்கு வெர்ஜீனியா மாநிலமானது இலங்கைளவு பரப்பளவைக் கொண்ட மாநிலமாகும். அதேபோன்று அமெரிக்காவின் அலஸ்கா மாநிலமானது இலங்கையை விட பாரிய மாநிலமாகும்.

இப்படியான மாநிலங்களைக் கொண்ட ஒரு நாட்டில்தான் சமஷ்டி முறைமை தேவைப்படுகிறது. அதைவிடுத்து இலங்கை போன்றதொரு சிறிய நாட்டை சமஷ்டியாக்க முற்படுவதானது, இலங்கையை பிரிக்கவேயாகும். இலங்கையென்பது ஒற்றையாட்சி முறைமைக்கொண்ட நாடாகும்.

69 இலட்சம் மக்கள் வாக்களித்து, எமக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மையை மக்கள் வழங்கியிருப்பதானது, நாட்டில் சமஷ்டியை ஏற்படுத்துவதற்கல்ல. மாறாக ஒற்றையாட்சியை பாதுகாத்து நாட்டை முன்னேற்றவே என்பதை அனைவரும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

எனவே, 13 ஐ அமுல்படுத்தி, நாட்டில் சமஷ்டியை ஏற்படுத்தும் தமிழ்க் கட்சிகளின் முயற்சிகளுக்கு நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். 13 ஐ நாம் இப்போதும் நடைமுறைப்படுத்தி தான் வைத்துள்ளோம். ஆனால், பொலிஸ் – காணி அதிகாரங்களை வழங்கி ஐக்கிய இலங்கையை பிரிக்க நாம் என்றும் இடமளிக்கப் போவதில்லை.’ எனத் தெரிவித்துள்ளார்.

“நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க சிங்கள இனம் செய்த தியாகங்களை இன்னொரு இனத்துக்காக விட்டுக்கொடுக்க முடியாது.” – சரத் வீரசேகர

” நாட்டில் அதிகார பகிர்வுக்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை.” என நாடளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் தொழில்நுட்ப அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் மற்றும் அதிகார பகிர்வு தொட்பில் பாராளுமன்றத்தில் நேற்று அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

13ஆவது திருத்தத்தை இந்தியா பலவந்தமான முறையில் அமுல்படுத்தியது. இலங்கையர்கள் அதனை கோரவில்லை.

மக்களின் எதிர்ப்பிற்கு மத்தியில் தான் 13 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது. அப்போதைய ஜனாதிபதி ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தி, அதிகாரத்தை பிரயோகித்து அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நிறைவேற்றினார் . ஆகவே 13 ஆவது திருத்தத்திற்கும், நாட்டு மக்களுக்கும் இடையில் தொடர்பில்லை.

அதிகார பகிர்வுக்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை. அதிகார பரவலாக்கம் குறித்து அவதானம் செலுத்தலாம். ஒற்றையாட்சி நாட்டில் அதிகார பகிர்வுக்கு இடமில்லை. சமஷ்டியாட்சி நாடுகளில் மாத்திரம் தான் அதிகார பகிர்வு சாத்தியமாகும்.

நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க சிங்கள இனம் உயிர் தியாகம் செய்துள்ளது. சோழர், பாண்டியன் மற்றும் ஆங்கிலேயர்களிடம் இருந்து நாட்டை பாதுகாக்க சிங்களவர்கள் போராடினார்கள். தியாகம் செய்தார்கள். ஆகவே அதிகார பகிர்வு என்ற சொற்பதம் ஊடாக நாட்டை பிளவுப்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது.

விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனும் இந்த நோக்கத்துடன் செயற்பட்டார்.

ஒருமைப்பாட்டை பாதுகாக்க 29 ஆயிரம் இராணுவத்தினர் உயிர் தியாகம் செய்தார்கள்.

பாதுகாக்கப்பட்ட ஒருமைப்பாட்டை ஒவ்வொருவரின் தேவைக்காக மலினப்படுத்த முடியாது. மாகாண சபைக்கு முழுமையாக எதிர்ப்பை தொடர்ந்து வெளிப்படுத்துவேன்.

மாகாண சபை என்பது வெள்ளை யானை. ஒவ்வொரு இனத்தவரின் தேவைக்காக நாட்டை பிளவுப்படுத்த முடியாது, இலங்கையர்கள் என்ற அடிப்படையில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் மாத்திரமே நாட்டை முன்னேற்ற முடியும்” என்றார்.

 

“இங்கு தமிழர்களுக்கு பிரச்சினைகளே இல்லை. அவர்களே பிரச்சினைகளை உருவாக்குகிறார்கள்.”- சரத் வீரசேகர

நாட்டில் தமிழ் மக்களுக்கென்று பிரச்சினைகள் எதுவும் இல்லை என்றும் அவர்கள் தாமாகவே பிரச்சினைகளைத் தேடுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

எனவே, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்று வெளிவரும் செய்திகளை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

தேசிய பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பில் தமிழ் மக்களுடன் அரசு விரைவில் பேச்சை ஆரம்பிப்போம் என உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்களிடம் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் தெரிவித்திருந்தனர். அதேவேளை, தொடர்ச்சியாகத் தமிழ் மக்களை ஏமாற்றாமல், பேச்சுக்களை இதயசுத்தியுடன் அரசு நடத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியிருந்தார்.

இந்த மூன்று தலைவர்களினதும் கருத்துக்களுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே சரத் வீரசேகர மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

மூவின மக்களுக்கும் பொதுவான பிரச்சினைகள் இருப்பதாகவும் அந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். தேசிய பேரவையில் இணையாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசியல் தீர்வைக் காணும் பேச்சை அரசாங்கம் இதயசுத்தியுடன் நடத்த வேண்டும் என எவ்வாறு கோரமுடியும் என்றும் கேள்வியெழுப்பினார்.

தமிழ் மக்களுக்கு நாட்டில் சுதந்திரம் காணப்படும் நிலையில், சிங்கள மக்களுக்கு எதிராகவும், பௌத்த மதத்துக்கு எதிராகவும்தான் தமிழ் மக்கள் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

அமெரிக்காவின் அழுத்தங்களுக்காக எமது கொள்கைகளை விட்டுக்கொடுக்க முடியாது – சரத் வீரசேகர

இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் தேவைக்கமைய எமது வெளிவிவகார கொள்கையினை மாற்றியமைக்க முடியாது என ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

சீன கண்காணிப்பு கப்பல் உளவு பார்ப்பதற்காக ஹாம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தருகிறது என இந்தியா குறிப்பிடுவது அடிப்படையற்றது என்றும் தெரிவித்தார்.

இந்தியாவை உளவு பார்ப்பதற்கு சீனாவின் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தர வேண்டிய தேவை கிடையாது என்றும் சரத் வீரசேகர சுட்டிக்காட்டினார்.

இதேவேளை இந்த கப்பலுக்கான அனுமதியை முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் வழங்கிய நிலையில் அதனை தற்போதைய அமைச்சர் அலி சப்ரி ரத்து செய்வது இலங்கையின் வெளிவிவகார கொள்கையினை மலினப்படுத்தும் என குறிப்பிட்டார்.

கப்பல் விவகாரத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் எவ்வாறான அழுத்தங்களை பிரயோகித்தாலும் அவர்களுக்காக வெளிவிவகார கொள்கையினை மாற்றியமைக்க முடியாது என சரத் வீரசேகர தெரிவித்தார்.

“ஆசிரியர்கள் மீது சரத் வீரசேகர அடக்குமுறையை கையாள முயற்சிக்கின்றார்.” – ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு !

“சரத் வீரசேகர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிபர்கள், ஆசிரியர்கள் மீது விசாரணை என்ற பெயரில் குறுக்குவழியில் அடக்குமுறையை கையாள முயற்சிக்கின்றார்.” என இலங்கை  ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

அதிபர் – ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வுகேட்டு கொழும்பில் போராட்டம் நடத்திய பலரை பொலிஸார் நாளை மறுதினம் விசாரணைக்கு அழைத்திருப்பதாக கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட இலங்கை  ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ( Joseph Stalin )தெரிவித்தார்.

“அதிபர் – ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வுகேட்டு கடந்த ஓகஸ்ட் மாதம் 04 ஆம் திகதி கொழும்பில் பாரிய வாகனத் தொடரணி ஒன்றை முன்னெடுத்திருந்தோம். அதன்போது பொலிஸாரினால் 44 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். அதன்பின் அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்கள்.

இந்த பேரணியில் தங்களது சொந்த வாகனங்களையே ஆசிரியர்களும் அதிபர்களும் பயன்படுத்தியிருக்கின்ற நிலையில், வாகனங்களின் உரிமையாளர்களுக்கு பொலிஸார் கொழும்பு கோட்டையிலுள்ள நிலையத்தினால் விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது ஜனநாயகவிரோத செயற்பாடாகும்.

ஆர்ப்பாட்டம் செய்ய முழு சுதந்திரமும் இருப்பதாக இலங்கை அரசாங்கம் கூறிவருகிறது. மறுபக்கத்தில் இலங்கை  பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிபர்கள், ஆசிரியர்கள் மீது விசாரணை என்ற பெயரில் குறுக்குவழியில் அடக்குமுறையை கையாள முயற்சிக்கின்றார்.

இந்த செயற்பாட்டிற்கு எதிராக எழும்படி மனித உரிமை அமைப்புக்கள் என பலரிடமும் கேட்கின்றோம். அதேபோல அடுத்தமாதம் 15ஆம் திகதி தென்மாகாண பாடசாலைகளை திறப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. எனினும் அதற்கு முன்னர் ஆசிரியர்கள், அதிபரிகளின் சம்பளப் பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வை அறிவிக்க வேண்டும். எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“ஆசிரியர்கள் மீது கை வைக்கப்போவதில்லை.” – பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர

ஆசிரியர்கள் மீதும் கை வைத்ததில்லை என்றும் இனிமேலும் கை வைக்கப்போவதில்லை என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற குடிவரவுகுடியகல்வு சட்டத்தின் ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் “நாட்டில் இப்போது பல்வேறு தரப்பினர் ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர். இவ்வாறான ஆர்ப்பட்டங்களால் பொலிஸ் அதிகாரியொருவர் விரல்கள் இரண்டை இழந்துள்ளார்.

ஆனால் எதிர்க்கட்சியினர் இதுவரையில் குறித்த விடயம் தொடர்பாக கண்டணத்தையோ அல்லது கவலையையோ வெளியிடவில்லை. நல்லாட்சி காலத்தில் நீர் தாரைப் பிரயோகம், கண்ணீர் புகைத்தாக்குதல், தடியடி பிரயோகம் என்பன நடத்தப்பட்டது.

ஆனால் நாங்கள் ஒரு ஆசிரியர் மீதும் கை வைத்ததில்லை, கை வைக்கப் போவதும் இல்லை. ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய எங்களை தாக்கினாலும் பொறுமையாக இருக்குமாறே பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

“அதிகாரம் கையிலிருந்த போது அரசியலமைப்பை மீறியே பல சந்தர்ப்பங்களில் ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டார்.” – சரத் வீரசேகர குற்றச்சாட்டு !

“அதிகாரம் கையிலிருந்த போது அரசியலமைப்பை மீறியே பல சந்தர்ப்பங்களில் ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டார்.” என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று பங்கரவாதத் தடுப்பு சட்டம் தொடர்பில்  ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த விசேட கூற்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் பதிலளிக்கையில்,

ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவிருந்த காலப்பகுதியில் எப்.சி.ஐ.டியை உருவாக்கி அரசியலமைப்பை மீறியிருந்தார். ஊழல் ஒழிப்பு பிரிவை உருவாக்கிய சந்தர்ப்பத்திலும் அவர் அரசியலமைப்பை மீறியிருந்தார்.

ஆகவே, நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை பற்றி பேசுவதற்கு ரணில் விக்கிரமசிங்கவுக்கு எவ்வித தார்மீக உரிமையும் இல்லை. ரிஷாட் பதியுதீன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் பல்வேறு தொடர்புகளை கொண்டிருந்த குற்றச்சாட்டுகளின் பிரகாரமே கைது செய்யப்பட்டிருந்தார்.

அவரது விவகாரம் தற்போது சட்ட மாஅதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஹரின் பெர்ணான்டோ எம்.பியை கைதுசெய்வதற்கு எவ்வித தயார்படுத்தல்களும் இருக்கவில்லை. ஆனால், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியை தெரியுமென அவர் கூறியிருந்தார்.

பிரதான சூத்திரதாரி யாரென தெரியுமாக இருந்தால் தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அந்த தகவல்களை வழங்குவது அவரது கடமையாகும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, பிரதமராக இருந்தபோது பல சந்தர்ப்பங்களில் அரசியலமைப்பை முழுமையாக மீறியே செயற்பட்டுள்ளார்.

அதனால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் பற்றி பேசுவதற்கு அவருக்கு எவ்வித தார்மீக உரிமையும் கிடையாது. என்றார்.

“இஸ்லாமிய அடிப்படைவாத செயற்பாடுகளை இல்லாதொழிக்க நாட்டு மக்கள் பாதுகாப்பு தரப்பினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.” – அட்மிரல் சரத் வீரசேகர

“இஸ்லாமிய அடிப்படைவாத செயற்பாடுகளை இல்லாதொழிக்க நாட்டு மக்கள் பாதுகாப்பு தரப்பினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.” என பொதுமக்கள் பாதுகாப்பு அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஐ.எஸ்.ஐ.எஸ்.அடிப்படைவாதம், வாஹப் வாதம், சல்பி வாதம் என மதம் மற்றும் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட அடிப்படைவாதம் காணப்படுகிறது.
உருவ வழிபாட்டுக்கு இவர்கள் முழுமையாக எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார்கள்.  தங்களின் மத கொள்கையினை பரப்புவதற்கு பிற மதங்களை கொல்வது சரி என்ற நிலைப்பாட்டில் உள்ளார்கள்.

அடிப்படைவாதத்தை இல்லாதொழிக்க அரசாங்கம் சிறந்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பு அத்தியாவசியமானது. பாதுகாப்பு தரப்பினராலும், புலனாய்வுபிரிவினராலும் மாத்திரம் அடிப்படைவாதத்தை இல்லாதொழித்து தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது.

அடிப்படைவாதம் தொடர்பில் நாட்டு மக்கள் பாதுகாப்பு தரப்பினருக்கு உரிய தகவல்களை வழங்க வேண்டும். தீவிர மத கொள்கையினை உடையவர்கள் ஒரு கட்டத்தில் அடிப்படைவாதிகளாக மாற்றமடைகிறார்கள். இறுதியில் பயங்கரவாதிகளாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் இவ்வாறான பின்னணியில் நடத்தப்பட்டது.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன்னிலைப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. அடிப்படைவாத தாக்குதல்கள் நாட்டில் எதிர்காலத்தில் இடம்பெறாத அளவிற்கு கடினமான பல தீர்மானங்களை எடுக்க நேரிட்டுள்ளது.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான விசாரணை அறிக்கை குறித்து எதிர்தரப்பினர் மாறுப்பட்ட பல கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள். குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் அறிந்திருந்தால் அதனை பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவிக்குமாறு குறிப்பிட்டோம்.

ஆனால் எதிர்த்தரப்பினர் இதுவரையில் எவ்வித முறைப்பாடுகளையும் முன்வைக்கவில்லை. ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையினையும் அரசியல் தேவைக்காக எதிர்க்கட்சியினர் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.” என்றார்.