காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்

3000 நாட்களை தொட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டமும் அதன் அரசியலும் – மேலுமொரு தாய் மரணம் ! 

3000 நாட்களை தொட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டமும் அதன் அரசியலும் – மேலுமொரு தாய் மரணம் !

 

வவுனியாவில் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் சுழற்சிமுறை போராட்டம் 3000ஆவது நாளை நேற்று எட்டியது. வவுனியா தபால் திணைக்களத்துக்கு அருகில் 3000ஆவது நாளாக போராட்டம் மேற்கொள்ளும் கொட்டகைக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உருவப்படத்தை தாங்கியவாறும், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளைத் தாங்கியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வெவ்வேறு நாடுகளாலும் வெவ்வேறு குழுக்களாலும் தத்தம் அரசியல் நலன்களுக்காக பயன்படுத்தப்படும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர் போராட்டங்கள் பாதிக்கப்பட்ட குடும்ப உறவுகளுக்கு எவ்வித நன்மையையும் பெற்றுக்கொடுக்கத் தவறிவிட்டது. மேலும் இப்போராட்டங்கள் பரவலாக அரசியல் மயப்படுத்தப்பட்டதால் தமிழ்கவி மற்றும் அனந்தி சசிதரன் போன்ற பாதிக்கப்பட்டவர்கள் இந்த அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொண்டுள்ளனர்.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தேர்தல் கால பிரச்சாரங்களில், காணாமல் ஆக்கப்படுதலின் வலியை நானும் உணர்ந்துள்ளதாகவும், நாங்கள் ஆட்சியமைக்கும் போது காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்துக்கான தீர்வை வழங்குவதாகவும் குறிப்பிட்டிருந்தார். அதன் அடிப்படையில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் காணாமலாக்கப்பட்டவர்கள் தான் என்றும் நட்டஈடு வழங்குவது தொடர்பிலும் குறிப்பிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

காணாமலாக்கப்பட்ட குடும்பங்களின் சில உறவுகள் தங்களுடைய பிரச்சினையை ஐநாவில் வெளிப்படுத்த அழைக்கப்பட்டதாகவும் அவ்வாறு சென்றவர்கள் அங்கேயே தங்கி விட்டதால் இவர்களை ஐநாவுக்கு அழைத்த மனித உரிமைச் செயற்பாட்டாளர் மரியதாஸ் பொஸ்கோ ஐநா கூட்டத் தொடரில் ஜனவரி 16இல் கிட்டத்தட்ட பயங்கரவாதத் தடைச்சட்டத்தை பயன்படுத்தி கைது செய்யப்பட்டது போல் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

மனித உரிமைச் செயற்பாட்டாளர் மரயதாஸ் பொஸ்கோ கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பது தொடர்பில் தமிழ் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களிடையே மிகுந்த பிளவு ஏற்பட்டுள்ளது. ஒரு தரப்பினர் மரியதாஸ் பொஸ்கோ தனது மனித உரிமைச் செயற்பாடுகள வைத்து வெளிநாடுகளுக்கு அழைத்து வந்து பணம் சேர்த்தார். என்கின்றனர்.

மற்றைய தரப்பினர், கடந்த 27 ஆண்டுகளாக தன்னுடைய வாழ்க்கையை தமிழ் மக்களின் மனித உரிமைகளுக்காக அர்ப்பணித்த ஒருவரை தங்களுடைய சுயநலன்களுக்காகக் காட்டிக்கொடுத்துவிட்டனர் என்று குற்றம்சாட்டுகின்றனர். ஐநா மனித உரிமை அரங்கில் வைத்து சட்டவிரோதமாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார், அவருடைய குற்றங்கள் நிரூபிக்கப்படும் வரை அவர் நிரபராதி என்ற அடிப்படை விதிமுறைகூட மரியதாஸ் பொஸ்கோ விடயத்தில் கடைப்பிடிக்கப்படவில்லை என்பதை யாரும் இதுவரை கேள்விக்கு உட்படுத்துவதாக இல்லை.

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் அமைப்புகள் சர்வதேசக் கொடிகளை ஏந்தி, காஸாவில் பாலஸ்தீனியர்களின் படுகொலைக்கு உதவிய சர்வதேச நாடுகள் தங்களுக்கு நியாயம் பெற்றுத்தர வேண்டும் என்று கோருகின்றன. சர்வதேச நாடுகள் உள்ளிட்ட கலப்புப் பொறிமுறையை முன்மொழிந்த அமெரிக்கா நேற்று ஆரம்பித்த ஐநா மனித உரிமைக் கூட்டத்தொடரிலிருந்து விலகியுள்ளது. தமிழ் மக்கள் சார்பில் ஐநாவுக்கு பேச்சாளர்களை அழைத்து வருகின்ற மனித உரிமைச் செயற்பாட்டாளர் மரியதாஸ் பொஸ்கோ கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.மார்ச் 23 இலங்கை அரசு உள்ளகப் பொறிமுறைக்கு மட்டுமே அழுத்தம் கொடுக்கும்.

இதனிடையே காணாமலாக்கப்பட்ட தனது மகனை தேடிவந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார். வவுனியா தோனிக்கல்லினை சேர்ந்த 79 வயதுடைய தாயே உயிரிழந்துள்ளார்.

இவரின் மகன் 2009ம் ஆண்டு இறுதி யுத்தத்திலே காணாமல் ஆக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதேவேளை இறுதி போரில் இழந்த தமது உறவுகளை தேடி போராட்டம் நடாத்தி வந்த நூற்றுக்கும் அதிகமான பெற்றோர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர்.

தீர்வுகள் ஏதுமின்றி எட்டு ஆண்டுகளை பூர்த்தி செய்த காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் போராட்டம் !

தீர்வுகள் ஏதுமின்றி எட்டு ஆண்டுகளை பூர்த்தி செய்த காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் போராட்டம் !

 

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் நேற்றைய தினம் 20.02.2025 கிளிநொச்சி – கந்தசுவாமி ஆலயம் மூன்றிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு ஏ 9 வீதியூடாக டிப்போசந்தி வரை நடைபெற்றுள்ளது.காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் தொடர் போராட்டம் ஆரம்பமாகி நேற்றுடன் எட்டு ஆண்டுகள் நிறைவு பெறுகின்ற நிலையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தீச்சட்டி ஏந்தியவாறு தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி பல்வேறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதேவேளை அதிகளவு புலனாய்வாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டதாகவும் அறிய முடிகிறது.

காணாமல் ஆக்கப்பட்டோர் இல்லை அரசு – மீட்டுத்தரக்கோரி சுதந்திர தினத்தை கரி நாளாக பிரகடனம் செய்து மக்கள் போராட அழைப்பு !

காணாமல் ஆக்கப்பட்டோர் இல்லை அரசு – மீட்டுத்தரக்கோரி சுதந்திர தினத்தை கரி நாளாக பிரகடனம் செய்து மக்கள் போராட அழைப்பு !

இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினத்தினை கறுப்பு நாளாக நினைவு கூர்ந்து தமிழ் மக்களின் வலிகளையும் உணர்வுகளையும் சர்வதேசத்திற்கு மட்டுமல்ல அனுர அரசுக்கும் எடுத்துக்கூறுவதற்கு அணிதிரளுமாறு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

கடந்த எட்டு ஆண்டுகளுக்கு அதிகமாக தொடரும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதிவேண்டிய போராட்டத்தை முன்னெடுத்த உறவுகளின் அன்னையர்கள் 300 இற்கும் அதிகமானோர் தமது அபிலாசைகளை எட்டாது இறந்துள்ளனர் என தெரிவித்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கம், நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால் எமது மக்களுக்கு இன்னமும் அதன் பலாபலன்கள் கிடைக்கவில்லை. இவ்வாறான பின்னணியில் வரவுள்ள இலங்கையின் 77 ஆவது சுதந்திர நாளை கரி நாளாக அனுஸ்டிக்க அழைப்பு விடுக்கின்றோம் என தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ‘ வீரகேசரி ‘ நாளிழுக்கு வழங்கிய செவ்வியில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் “காணாமல் போனவர்கள் இன்னும் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா..? என வீரகேசரி வார இதழின் ஊடகவியலாளர் ஒருவரால் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் , அவர்கள் காணாமல் போனதில் இருந்து ஒன்றரை தசாப்தங்களுக்கு மேலாகிவிட்டதாகவும் , அவர்கள் திரும்பி வருவார்கள் என நம்ப முடியாது எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இம்முறை தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணவும் அது சார்ந்த வழக்குகளை விசாரிக்கவும் சட்டத்தின் முன் நிறுத்தவும் உறுதியளித்துள்ளோம் . காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என யாருக்கும் தெரியாது. பாதிக்கப்பட்ட மக்களின் உடல் காயங்களுக்கு மருந்து போடலாம் . ஆனால் உள்ளக்காயங்களுக்கு மருந்துபோட இயலாது. போர் முடிவடைந்து 15 வருடங்களாகிறது. எனவே காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இனியும் வருவார்கள் என நம்பமுடியாது என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்திருந்ததும் கவனிக்கத்தக்கது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது பிரச்சினையை சர்வதேச அரசுகளும் பயன்படுத்துவதாகவும், அதற்காகப் போராடுபவர்களுக்கு நிதியும் அரசியல் பின்னணியும் உள்ளதாகவும் பல்வேறு விமர்சனங்கள் உள்ளன.

“வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் திரும்பி வரமாட்டார்கள். இந்த உறவுகளை வைத்து அரசியல் செய்வது மோசமானது” முன்னாள் போராளி, மாவீரர்களின் தாய் தமிழ்கவி

“வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் திரும்பி வரமாட்டார்கள். இந்த உறவுகளை வைத்து அரசியல் செய்வது மோசமானது” முன்னாள் போராளி, மாவீரர்களின் தாய் தமிழ்கவி

“வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் திரும்பி வரமாட்டார்கள் என்பது நன்கு தெரிந்திருந்தம் அவர்களை வைத்து அரசியல் செய்வது மிகமோசமான அரசியல்” என முன்னாள் போராளியும் மாவீரர்களின் தாயுமான தமிழ்கவி தேசம்நெற்க்குத் தெரிவித்தார். தன்னுடைய பிள்ளையும்தான் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டது எனத் தெரிவித்த தமிழ்கவி “அவர்கள் யாரும் திரும்பி வரப்போவதில்லை” என்பது அந்த உறவுகள் அனைவருக்கும் தெரியும். இதனை அரசியலாக்குபவர்களிடம் நான் செல்வதில்லை” என்றும் தெரிவித்தார்.

 

கடந்த வாரம் கடற்தொழிலமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் “காணாமல் ஆக்கப்பட்டவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள்தான்” என்ற அடிப்படையில் வெளியிட்ட கருத்துக்கு எதிராகவும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் அமைப்பு கண்டனக் குரல் எழுப்பி இருந்தது.

 

ஆனால் தொடர்ச்சியாக இதனை ஒரு அரசியல் வியாபாரமக்குவது பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எவ்விதத்திலும் நன்மை பயக்கப்போவதில்லை என்ற குரல்களும் தற்போது எழ ஆரம்பித்துள்ளது.

 

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் இன்று பல்வேறு பிரிவுகளாக சுயேட்சைக்குழக்கள் போல் சிதறிப்போயிருப்பதாக வலிந்து காணாமலாக்கப்பட்டவரின் மனைவியும் தமிழ் அரசியல் பரப்பில் நன்கு அறியப்பட்டவருமான அனந்தி சசிதரன் முன்னைய உரையாடல் ஒன்றில் சுட்டிக்காட்டியிருந்தார். பாதிக்கப்பட்ட இப்பெண்கள் அரசியல் கட்சிகளாலும் வெளிநாட்டு சக்திகளாலும் முகாமைத்துவப்படுத்தப்பட்டு திட்டமிட்ட அடிப்படையில் வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுவதாகவும் அனந்தி சசிதரன் குற்றம்சாட்டினார்.

 

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் என்பது தற்போது என்ஜிஓ போலாகி அவர்களுடைய போராட்டமும் ஒரு புரொஜக்ற் ஆகிவிட்டது என்கிறார் மற்றுமொரு வலிந்து காணாமலாக்கப்பட்டவரின் தாயார். “இவர்கள் டிசம்பர் ஏழில் ஊடக மையத்திற்கு வந்து ஒருவர் மாறி ஒருவர் உள்ளகப் பொறிமுறை வேண்டாம் சர்வதேசம் தான் வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்கின்றனரே. ஏன் ?” என்று அத்தாயார் கேள்வி எழுப்பினார்.

 

“நியாயத்தை யார் வேண்டுமானாலும் விசாரித்து வழங்கலாம் தானே? அதென்ன வெள்ளைத் தோல் உள்ளவன் வந்து விசாரித்தால் தான் எங்கள் பிள்ளைகளின் ஆத்மா சாந்தி அடையும். எங்களின் ஆத்மா சாந்தி அடையும். என்று ஒற்றைக்காலில் நிற்கின்றனர்”. அப்படியானால் ஐஎன்ஜிஓ – சர்வதேச என்ஜிஓ இவர்களை இயக்குகின்றதா?” என்ற கேள்வியும் தவிர்க்க முடியாது என்கிறார் தன்னை அடையாளப்படுத்த விரும்பாத வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவரின் தாயார்.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு தீர்வை பெற்றுக்கொடுப்போம். – கிளிநொச்சியில் சஜித் பிரேமதாச!

“மாகாண சபைகளுக்கான முழுமையான அதிகாரங்கள் வழங்கப்படும்” என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

 

கிளிநொசியில் அமைந்துள்ள சமத்துவக் கட்சியின் ஆதரவு சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ‘சமத்துவக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்திக்திக்கு ஆதரவளித்தமை ஆரோக்கியமாக உள்ளது. வடக்கில் அபிவிருத்திகள் செய்யப்பட வேண்டி உள்ளது. இதனால் பல எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்ய முடியும்.

அவ்வாறு பல திட்டங்களை செய்ய நாம் திட்டமிட்டுள்ளோம். மாகாண சபைகளுக்கான முழுமையான அதிகாரங்கள் வழங்கப்படும்.

வாழ்வாதரம் உள்ளிட்ட பல திட்டங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும். அதற்காக சிறப்பு அலுவலகங்கள் 5 மாவட்டங்களிலும் நிறுவ உள்ளோம்.

அதே போன்று ஒவ்வொறு பிரேதேச செயலக பிரிவுகளிலும் அபிவிருத்தி நிலையங்கள் நிறுவப்படும். இங்கு உள்ள மக்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு பல பிரச்சினைகள் உள்ளன.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு தீர்வை பெற்றுக்கொடுப்போம். அத்துடன், ஏனைய பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற்றுக்கொடுபோம். அதற்காகவே இந்த அலுவலகங்களை, மாவட்டம் மற்றும் பிரதேச செயலக ரீதியில் நிறுவ உள்ளோம்.

 

நானும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவன் என்ற அடிப்படையில் தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாடு எனக்கு உள்ளது.

 

கிளிநொச்சி மாவட்டத்தில் 4 பிரதேச செயலாளர் பிரிவுகள் உள்ளது. அந்த நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஒவ்வொரு தொழிற்பேட்டைகள் உருவாக்கப்படும்.

 

அதே போன்று நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஒவ்வொரு IT நிறுவனங்கள் நிறுவப்படும். அதன் மூலம் தொழில்வாய்ப்புக்களை உருவாக்கி கொடுக்கப்படும்”இவ்வாறு சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணை !

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் 243 பேரிடம் காணாமல் போனோர் பற்றிய அலுவலக அதிகாாிகள் (OMP) விசாரணைகளை மேற்கொண்டுள்ளனா்.

காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தினரால் கிளிநொச்சி மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 243 பேரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.

நேற்றையதினம் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 128 பேரிடமும், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் 17 பேரிடமும் விசாரணை மேற்கொண்டிருந்தது.

அதனையடுத்து, இன்றைய தினம் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த 50 பேரிடமும், கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த 48 பேரிடமும் விசாரணை முன்னெடுக்கப்பட்டது.

கண்டாவளை பிரதேச செயலகத்தில் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் மகேஸ் கட்டுலந்த தலைமையில் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15000 – ஆறுமாதங்களுக்கு தீர்வு என்கிறார் சட்டத்தரணி மகேஷ் கட்டுலந்த!

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவரின் உறவுகளுக்கு 6 மாத காலத்திற்குள் நீதி வழங்கப்படும் என காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் தலைவர் சட்டத்தரணி மகேஷ் கட்டுலந்த தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம், காணாமல் போனவர்கள் தொடர்பான முதல் கட்ட விசாரணைகளை எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் நிறைவு செய்துவிடும் என அவர் தெரிவித்துள்ளார்.

முதல் கட்ட விசாரணைகள் நிறைவடைந்தவுடன், காணாமல் போனவர்களின் சான்றிதழ்கள், அல்லது இறப்புச் சான்றிதழ்களைப் பெறத் தயாராக இருக்கும் அவர்களின் உறவினர்களுக்கு உரிய சான்றிதழ்கள் வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

 

அத்துடன் கொடுப்பனவுகளைப் பெற விரும்பும் உறவினர்கள், காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில், இழப்பீடுகளுக்கான அலுவலகத்தின் மூலம் உரிய கொடுப்பனவுகளைப் பெறுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், நாட்டில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 988 காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் !

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் ஆரம்பித்து 2300 ஆவது நாளான இன்று அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் உள்ள கொட்டகையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்போது கருத்துத் தெரிவித்த போராட்டக்காரர்கள், உணவு, மருந்து, சமையல் எரிவாயு, உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இப்போது சர்வதேச நாணய நிதியத்தின் கடனுடன், தமிழர்களின் நிலத்தில் இனப்படுகொலை நடவடிக்கைகளை துரிதப்படுத்துகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவிக்கு பின்னர், இலங்கை இராணுவமும் பௌத்த பிக்குகளும் சட்டவிரோதமாக தமிழர்களிடமிருந்து நிலங்களை அபகரித்து, பௌத்த சிங்களவர்கள் வசிக்காத தமிழர்களின் தாயகம் முழுவதும் மகா சங்க சிங்கள பௌத்த சின்னங்களை கட்டியுள்ளனர்.

குறித்த கடன் பண்டைய இந்து கோவில்களை அழிக்க பண பலத்தை வழங்கியதுடன், அழிக்கப்பட்ட கோவில்கள் சிங்கள இனவாத பௌத்த சின்னங்களால் மாற்றப்பட்டன.

இந்த பௌத்த சின்னம் தமிழர்களால் வெறுக்கப்படுகிறது, ஏனெனில் இந்த சின்னம் இன அழிப்பு மற்றும் தமிழ் தாயகத்தில் தெற்கிலிருந்து சிங்களவர்களின் குடியேற்றத்தை குறிக்கிறது.

தமிழர்களின் தாயகத்தில் இலங்கை இராணுவத்தின் பிரசன்னம் சர்வதேச நாணய நிதியத்தின் கடனினால் மேலும் ஊக்குவிக்கப்பட்டதுடன், தமிழ் இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள்களை ஊக்குவித்து, எதிர்கால தமிழ்ச் சந்ததியை அழிக்கின்றது என அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

மே மாதத்திற்கு திகதியிடப்பட்டது விடுதலைப்புலிகளின் எழிலன் உட்பட இறுதிக்கட்ட போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான வழக்கு!

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது இலங்கை இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டிருந்த விடுதலைப்புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளராக செயற்பட்ட எழிலன் உட்பட ஏனையோரை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு வவுனியா மேல்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

எனினும் இன்றைய தினம் நீதிபதி வருகைதராமையினால் குறித்த வழக்கு மீண்டும் திகதியிடப்பட்டது. விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளராக செயற்பட்ட எழிலன் உட்பட இறுதிக்கட்ட போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக சரணடைந்த குடும்ப அங்கத்தவர்கள் சார்பில் ஆட்கொணர்வு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த மனுமீதான தீர்ப்பினை வவுனியா மேல்நீதிமன்றம் கடந்தமாதம் வழங்கியது. அதில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இராணுவத்திடம் சரணடைந்தனர் என்பதற்குரிய ஆதாரங்கள் இருப்பதில் மன்று திருப்தியடைந்தது.

எனவே அத்தகைய நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதுடன், அப்படி முடியாது போனால் அதற்கான காரணங்களை நீதிமன்றில் இன்றைய தினம் விளக்கமளிக்குமாறும் வழக்கு திகதியிடப்பட்டது.

எனினும் இன்றைய தினம் நீதிபதி மன்றுக்கு சமூகமளிக்காமையினால் குறித்த வழக்கு எதிர்வரும் மே மாதத்திற்கு திகதியிடப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

அத்துடன் இன்றைய தினம் இராணுவம் சார்பாக சட்டத்தரணி ஒருவரே மன்றுக்கு சமூகமாகியிருந்ததுடன், வேறு எவரும் நீதிமன்றத்திற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.