“வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் திரும்பி வரமாட்டார்கள். இந்த உறவுகளை வைத்து அரசியல் செய்வது மோசமானது” முன்னாள் போராளி, மாவீரர்களின் தாய் தமிழ்கவி

“வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் திரும்பி வரமாட்டார்கள். இந்த உறவுகளை வைத்து அரசியல் செய்வது மோசமானது” முன்னாள் போராளி, மாவீரர்களின் தாய் தமிழ்கவி

“வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் திரும்பி வரமாட்டார்கள் என்பது நன்கு தெரிந்திருந்தம் அவர்களை வைத்து அரசியல் செய்வது மிகமோசமான அரசியல்” என முன்னாள் போராளியும் மாவீரர்களின் தாயுமான தமிழ்கவி தேசம்நெற்க்குத் தெரிவித்தார். தன்னுடைய பிள்ளையும்தான் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டது எனத் தெரிவித்த தமிழ்கவி “அவர்கள் யாரும் திரும்பி வரப்போவதில்லை” என்பது அந்த உறவுகள் அனைவருக்கும் தெரியும். இதனை அரசியலாக்குபவர்களிடம் நான் செல்வதில்லை” என்றும் தெரிவித்தார்.

 

கடந்த வாரம் கடற்தொழிலமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் “காணாமல் ஆக்கப்பட்டவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள்தான்” என்ற அடிப்படையில் வெளியிட்ட கருத்துக்கு எதிராகவும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் அமைப்பு கண்டனக் குரல் எழுப்பி இருந்தது.

 

ஆனால் தொடர்ச்சியாக இதனை ஒரு அரசியல் வியாபாரமக்குவது பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எவ்விதத்திலும் நன்மை பயக்கப்போவதில்லை என்ற குரல்களும் தற்போது எழ ஆரம்பித்துள்ளது.

 

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் இன்று பல்வேறு பிரிவுகளாக சுயேட்சைக்குழக்கள் போல் சிதறிப்போயிருப்பதாக வலிந்து காணாமலாக்கப்பட்டவரின் மனைவியும் தமிழ் அரசியல் பரப்பில் நன்கு அறியப்பட்டவருமான அனந்தி சசிதரன் முன்னைய உரையாடல் ஒன்றில் சுட்டிக்காட்டியிருந்தார். பாதிக்கப்பட்ட இப்பெண்கள் அரசியல் கட்சிகளாலும் வெளிநாட்டு சக்திகளாலும் முகாமைத்துவப்படுத்தப்பட்டு திட்டமிட்ட அடிப்படையில் வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுவதாகவும் அனந்தி சசிதரன் குற்றம்சாட்டினார்.

 

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் என்பது தற்போது என்ஜிஓ போலாகி அவர்களுடைய போராட்டமும் ஒரு புரொஜக்ற் ஆகிவிட்டது என்கிறார் மற்றுமொரு வலிந்து காணாமலாக்கப்பட்டவரின் தாயார். “இவர்கள் டிசம்பர் ஏழில் ஊடக மையத்திற்கு வந்து ஒருவர் மாறி ஒருவர் உள்ளகப் பொறிமுறை வேண்டாம் சர்வதேசம் தான் வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்கின்றனரே. ஏன் ?” என்று அத்தாயார் கேள்வி எழுப்பினார்.

 

“நியாயத்தை யார் வேண்டுமானாலும் விசாரித்து வழங்கலாம் தானே? அதென்ன வெள்ளைத் தோல் உள்ளவன் வந்து விசாரித்தால் தான் எங்கள் பிள்ளைகளின் ஆத்மா சாந்தி அடையும். எங்களின் ஆத்மா சாந்தி அடையும். என்று ஒற்றைக்காலில் நிற்கின்றனர்”. அப்படியானால் ஐஎன்ஜிஓ – சர்வதேச என்ஜிஓ இவர்களை இயக்குகின்றதா?” என்ற கேள்வியும் தவிர்க்க முடியாது என்கிறார் தன்னை அடையாளப்படுத்த விரும்பாத வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவரின் தாயார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *