புலிகளுக்குள்ளும் மேட்டுக்குடி மனோநிலை இருந்தது. கிழக்குப் போராளிகள் கீழாக நடத்தப்பட்டனர் ! யாழ் மேட்டுக்குடி மனோநிலை இன்றும் தலைவரித்தாடுகின்றது !
இடதுசாரிச் சிந்தனையாளரர், அரசியல், சமூக செயற்பாட்டாளர் நல்லதம்பி ஜெயபாலன்
புலிகளுக்குள்ளும் மேட்டுக்குடி மனோநிலை இருந்தது. கிழக்குப் போராளிகள் கீழாக நடத்தப்பட்டனர் ! யாழ் மேட்டுக்குடி மனோநிலை இன்றும் தலைவரித்தாடுகின்றது !
இடதுசாரிச் சிந்தனையாளரர், அரசியல், சமூக செயற்பாட்டாளர் நல்லதம்பி ஜெயபாலன்
பிள்ளையானின் எதிர்காலம் கேள்விக் குறியாகின்றது ? விதியா? சதியா ? ரிஎம்விபி இன் அடுத்த தலைவர் கருணா அம்மானா ?
அண்மையில் கருணா அம்மான் விசாரிக்கப்பட்ட நிலையில் பிள்ளையான் கைது இடம்பெற்றுள்ளது. கருணா – பிள்ளையான் – வியாழேந்திரன் இணைந்த கிழக்கு முன்னணி உதயம்பெற்றுள்ளது. இந்தப் பின்னணியில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் தாக்குதல் சம்பவங்கள் நடந்த காலகட்டங்களில் கருணா இலங்கையில் இருக்கவில்லை. அத்தோடு தமிழீழ விடுதலைப் புலிகளும் புலம்பெயர் தமிழர்களும் பிள்ளையானையே குறிவைத்து பிரச்சாரம் செய்வதாக பிள்ளையானின் நெருங்கிய நண்பரொருவர் தேசம்நெற்குத் தெரிவித்தார். உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில் தனக்கு மாற்றுக் கருத்து இல்லை எனத் தெரிவிக்கும் அவர், கைது செய்யப்பட்ட காலகட்டம் தங்களுடைய அரசியல் செயல்பாட்டை முடக்கவே மேற்கொள்ளப்படுவதாகக் குற்றம்சாட்டுகின்றார்.
தமிழீழ விடுதலைப் புலிகளிலிருந்து பிரிந்த பிள்ளையானின் அரசியல் அஸ்தமனமாகின்றது என்ற கணிப்புகள் பரவலாகத் எதிர்வு கூறப்படுகின்றது. இக்கைதுக்கு சில மாதங்களுக்கு முன் இவற்றையெல்லாம் மீறி வருவேன் என்று பிள்ளையான் தேசம்நெற்க்குத் தெரிவித்திருந்த போதும் பிள்ளையானின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே உள்ளது.
யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த பேராசிரியர் சிவசுப்பிரமணியம் இரவீந்திரன் கடத்தப்படுவதற்கு முன் கிழக்குப் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி கிழக்கைச் சேர்ந்த பால சுகுமாரன் கடத்தப்பட்டு இருந்தார். தற்போது லண்டனில் உள்ள பால சுகுமாரனுடன் இது தொடர்பில் உரையாடுவதற்குத் தொடர்பு கொண்ட போதும் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.
இந்தக் கடத்தல் நாடகங்களுக்குப் பின்னால் பிரதேசவாதம் தலைதூக்கியிருந்த காலகட்டம் அது. தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து கருணா அம்மான் 2004 யூலை இறுதிப் பகுதியில் வெளியேறியாதிலிருந்து கிழக்குப் பல்கலைக்கழகமும் வடக்கு – கிழக்கு பிரதேசவாதச் சிக்கலுக்கு உள்ளாகியது. கிழக்கு பல்கலைக்கழகத்தில் கருணாவுக்கு ஆதரவாக சில பேராசிரியர்கள் திரும்பினர். ஆனால் வடக்கைச் சேர்ந்தவர்கள் அணிசேரா நிலையை எடுக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. அவர்களுடைய குடும்பங்கள் வடக்கில் இருந்தது.
2004 இல் கருணா அம்மானுக்கு ஆதரவாக கிழக்கு பல்கலைக்கழகத்தில் போராட்டங்களை மேற்கொண்ட கிழக்கு பல்கலைக்கழக விவசாய பீடாதிபதி தம்பையா திருச்செல்வம் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். 2004 மார்ச் 24ஆம் திகதி மட்/கல்லடியிலுள்ள அவரது வீட்டில் இருந்தபோது சுமார் மலை 8.30 மணியளவில் ஆயுதமேந்திய இரு இளைஞர்களால் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
2004ஆம் ஆண்டின் பாராளுமன்ற தேர்தலுக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரான இராஜன் சத்தியமூர்த்தி அவர்கள் மட்டக்களப்பு மக்களின் பெருமதிப்புக்குரியவர். மார்ச் மாதம் 30ஆம் திகதி அதிகாலை 07.40 மணிக்கு அவர் தன்னுடைய பூசையறையில் முருகன் படத்தில் முன்னால் நின்று தீபம் ஏற்றி சாம்பிராணி கொளுத்தி வழிபாடு செய்து கொண்டிருக்கையில் புலிகளால் சாராமரியாகச் சுடப்பட்டு கொல்லப்பட்டார்.
இந்நிலையில்தான் 2004, 63 வயதான மட்டக்களப்பு அரசாங்க அதிபர் இரத்தினம் மௌனகுருசாமி, தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்னரான மார்ச் 27ல் மட்/ பிள்ளையாரடியில் வைத்து கைத்துப்பாக்கி ஏந்திய புலிகளால் சுடப்பட்டார். எனினும் அதிஷ்ட வசமாக அவருடைய உயிர் காப்பாற்றப்பட்டது.
இந்த வடக்கு – கிழக்கு பிளவின் போட்டியில் நடந்த மற்றுமொரு முக்கிய படுகொலை தமிழரசுக் கட்சியின் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை. 2005 கிறிஸ்மஸ் தினமான டிசம்பர் 25இல் இவர் படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பில் பிள்ளையான் குற்றம்சாட்டப்பட்டு கொலைக் குற்றச்சாட்டு நிருபிக்கப்படாத நிலையில் பிள்ளையான் விடுவிக்கப்பட்டார்.
இதனையடுத்து 2006இல் கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் இரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டார். சம்பவம் தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். பிள்ளையானை கைது செய்து தண்டிப்போம் என்பதை தேசிய மக்கள் சக்தி அரசு பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னரேயே அறிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் 08 மட்டக்களப்பில் வைத்து அவர் கைது செய்யப்பட்டு தற்போது பிள்ளையான் கொழும்பிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏட்டிக்குப் போட்டியான கொலைக் கலாச்சாரம் புலிகள் உட்பட்ட தமிழ் ஆயுதக் குழுக்களிடம் மலிந்து காணப்பட்டது. யாழ்ப்பாணத்தில் வளர்ந்த சகோதரப் படுகொலைக் கலாச்சாரம் தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து கருணா அம்மான் வெளியேறியதும் கிழக்கிலும் பரவியது. யாழ்ப்பாணத்தில் பாடசாலை அதிபர்களே ஏட்டிக்கு போட்டியாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் நடந்தேறியுள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டம் படுமொசமான கொலைக் கலாச்சாரத்தை தன்னகத்தே கொண்டிருந்தது.
இதற்கு பிள்ளையான் என அறியப்பட்ட சிவநேசதுரை சந்திரகாந்தன் விதிவிலக்கல்ல. இவர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் என்பதோடு, கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அவர் கைதாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.
பிள்ளையான் மீது ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியாமல் போனாலும் பிள்ளையான் மீதுள்ள நீண்ட குற்றச்சாட்டுகளின் பட்டியலில் இருந்து விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தாங்கள் அரசியலுக்கு வந்த 2008க்குப் பின் தாங்கள் வன்முறையில் ஈடுபடவவில்லை எனத் தேசம்நெற்க்குத் தெரிவித்து இருந்தார். ஆனால் நடைமுறையில் 2008க்கு முன்னும் பின்னும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்கள் பல உள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசு தற்போது அடுத்தடுத்த முன்னாள் அமைச்சர்கள், முதலமைச்சர், பொலிஸ் தலைமைப் பொறுப்பாளர் என எவ்வித வேறுபாடுமின்றி சட்டத்தை மிகத் தீவிரமாக அமுல்படுத்த முயற்சிப்பதால் பிள்ளையான் இந்தக் கிடுக்குப் பிடியிலிருந்து தப்புவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றே கருதப்படுகின்றது.
இந்த வடக்கு – கிழக்கு முரண்பாட்டில் யாழ் மையவாதம் எப்போதும் ஏனையவர்கள் மீது பழியைப் போட்டு தப்பிவிடுகின்ற போக்கே இன்னமும் தொடர்கின்றது. தற்போது புலம்பெயர் தமிழர்களின் பழிவாங்கும் உணர்வு பிள்ளையானையே மையம் கொண்டுள்ளது. மேலும் தேசிய மக்கள் சக்தி வெற்றியை நழுவவிட்ட ஒரே மாவட்டம் மட்டக்களப்பு. அந்த வகையில் பிள்ளையான் ஒரு இளகிய இரும்பு. தூக்கித் தூக்கி அடிப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே சமயம் பிள்ளையான் கொலைகள் மற்றும் வன்முறைகள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரிக்கப்படுவதும் அவை நிரூபிக்கப்படும் பட்சத்தில் தண்டிக்கப்படுவதும் மிக அவசியம்.
பிள்ளையான் தற்போது கிடுக்குப் பிடியில் மாட்டியுள்ளதால் கருணா அம்மானின் தலைமைத்துவத்திற்கு கதவுகள் திறந்துவிடப்படும் வாய்ப்பு உள்ளது. பிள்ளையானுக்கு விழுந்த வாக்குகளுக்குப் பின் யாழ் மையவாத எதிர்ப்பு பலமாக இருப்பதை தமிழ் தேசியவாதிகள் உணர்ந்து தமிழ் சமூகம் ஒரு பல்லின சமூகம் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். பிள்ளையானின் மீது அனைத்து பழிகளையும் போட்டுவிட்டு நாங்கள் சுத்தமான சுவாமிப்பிள்ளைகளாக காட்டிக்கொள்ள முடியாது. கிழக்கை ஆதரித்தமைக்காக கிழக்கின் ஆளுமைகள் பலர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அவையும் விசாரிக்கப்பட வேண்டும்.
வெள்ளைக்கார அடேல் அன்ரிக்கு; அடேல் பிரித்தானியாவுக்கு முதல் நானே விசாரணையை தொடங்கினேன் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா !
இராணுவத் தளபதிகளுக்கு தடையுத்தரவு கொண்டு வந்தது போல் வெள்ளைக்கார அடேல் பாலசிங்கத்துக்கும் தடையுத்தரவு வழங்கப்பட வேண்டும் என பெரும்பான்மைச் சமூகப் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர். பிரித்தானியாவின் தடையுத்தரவு இலங்கையில் தங்களால் மேற்கொள்ளப்படும் இன நல்லிணக்க முயற்சிகளைப் பலவீனப்படுத்தும் என தேசிய மக்கள் சக்தி மட்டத்தில் கருத்துக்கள் வெளிப்பட்டுள்ளன.
மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருந்தால் இராணுவத்தினராக இருந்தாலும் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதிகள் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக பிரித்தானியா விதித்துள்ள பயணத்தடை குறித்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போது வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் பொன்சேகா மேலும் கருத்து வெளியிட்ட போது, ஜகத் ஜயசூரிய, வசந்த கரண்ணாகொட ஆகியோர் போர்க்களத்தின் முன்வரிசையில் நின்று போரிட்டவர்கள் அல்லர். பின்வரிசையில் நின்றவர்கள். போர்க்களத்தின் பின்வரிசையில் ஏதேனும் தவறுகள் நிகழ்ந்திருந்தால் அதனை விசாரிக்க வேண்டும். நான் இராணுவத் தளபதியாக இருந்த காலத்திலேயே ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்திருந்தேன். நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் இவர்களில் இருவரைப் பற்றி நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் விமர்சித்துள்ளேன். அதேபோன்றே போர்க்களத்தின் முன்னரங்கில் நின்று போரிட்ட சவேந்திர சில்வா எதுவித தவறும் செய்யவில்லை என்று உறுதிபட என்னால் கூறமுடியும் என தெரிவித்தார்.
இதற்கிடையே கிழக்கு தமிழ் கூட்டணி அமைக்கப்பட்டதன் தாக்கத்தினாலேயே பிரித்தானியா தனக்கு எதிராக தடையுத்தரவைப் பிறப்பித்ததாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதியான கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.
தடையுத்தரவை பெற்ற இராணுவத்தளபதிகள் சார்பில் கருத்து வெளியிட்டவர்கள் பிரித்தானியா காஸாவில் பெண்களையும் குழந்தைகளையும் வகைதொகையில்லாமல் கொன்று குவித்துவிட்டு இலங்கையில் நாடகம் போடுகின்றார்கள் எனத் தெரிவித்துள்ளனர். இராணுவத் தளபதிகளுக்கு எதிரான பிரித்தானியாவின் தடைகளைப் பயன்படுத்தி சிங்கள – தமிழ் அமைப்புகன் இனவாதத்தைத் தூண்டிவிட்டு ஜேவிபி இன் ஆட்சியைக் கவிழ்க்கலாம் உள்ளுராட்சித் தேர்தலில் வெற்றி பெறலாம் எனக் கணிக்கின்றன.
இனவாதத்தை தூண்டும் கருணா அம்மான் எச்சரிக்கிறார் முன்னாள் போராளி !
கிழக்கு தமிழ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதையடுத்து எனக்கு பிரித்தானிய அரசாங்கம் தடை விதித்தமை ஒரு அரசியல் நாடகம் என்கிறார் கருணா அம்மான். கிழக்கு மாகாண சபையை தவறவிடுவோமாக இருந்தால் முஸ்லிம் தலைவர்களுடைய ஆதிக்கம் அதிகரிக்கும். அதேநேரம் தமிழர்களுடைய நிலப் பிரதேசங்கள் அபகரிக்கப்பட்டு இருப்பே கேள்விக்குறியாகும் என்று முன்னாள் பிரதி அமைச்சரான கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் கிழக்கு தமிழர் கூட்டணியின் கல்குடா தொகுதிக்கான வேட்பாளர் அறிமுக விழாவில் தெரிவித்தார்.
அங்கு மேலும் உரையாற்றிய கருணா அம்மான், புலம்பெயர்ந்து வாழ்கின்ற படித்தவர்கள், புத்திஜீவிகள், வர்த்தகர்கள் சிந்திப்பதில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பை முதலில் தோற்கடிக்க வேண்டும். அவர்கள் போலித் தேசியத்தை பேசிக்கொண்டு மக்களை ஏமாற்றி இலஞ்சம் ஊழல் எல்லாவற்றையும் செய்கின்றனர். உண்மையில் போராளிகளாக இருந்தவர்கள், மாவீரர் குடும்பங்களாக இருந்து வந்தவர்கள் தான் எங்கள் மக்களை ஆளவேண்டும். அவர்களுக்குத் தான் இந்த உரிமையும் மக்களை நடத்தும் திறமையும் இருக்கின்றது.
நாங்கள் கூட்டமைப்பை உருவாக்கியது உலகம் முழுக்க பேசும் பொருளாக பார்க்கப்படுகிறது. அண்மையில் பிரித்தானியா அரசாங்கம் கருணா அம்மானாகிய எனக்கு தடை விதித்தது. நாங்கள் என்ன பிச்சை எடுக்கப்போறோமா? இவ்வளவு நாளும் இல்லாத தடை எதற்காக இப்போது விதிக்கின்றனர்? இது ஒரு அரசியலுக்கான நாடகம் தான். கிழக்கு மாகாண சபையை தவறவிடுவோமாக இருந்தால் முஸ்லிம் தலைவர்களுடைய ஆதிக்கம் வளர்ச்சியடைந்து தமிழர்களுடைய நிலப் பிரதேசங்கள் குட்டிச்சுவராகி இருப்பே கேள்விக்குறியாகும் என்றார்.
இதேவேளை அண்மையில் தேசம் திரை நேர்காணலில் கருத்து வெளியிட்டிருந்த முன்னாள் ஈபிஆர்எல்எப் போராளி சோலையூரான் , கருணா அம்மான் , பிள்ளையான் ஆகியோரின் கூட்டணி மீள ஓர் இனவாத அரசியலையும் முஸ்லீம்கள் மீதான வெறுப்பு உணர்வையும் விதைத்து அரசியல் செய்ய முற்படுவதாக குற்றஞ்சாட்டியிருந்ததுடன் இதேநபர்கள் கிழக்கில் செய்த படுகொலைகள் ஏராளமானவை எனவும் குற்றஞ்சாட்டினார் . அத்துடன் உங்களால் இத்தனை பெரிய படுகொலைகளை செய்த ரணிலுடனும் , மகிந்தவுடனும் கூட்டணி அமைக்க முடியுமானால் எங்களுடன் கூடவே வாழும் முஸ்லீம்களுடன் பேசுவதில் என்ன சிக்கல் இருக்கப்போகிறது எனவும் சோலையூரான் கேள்வி எழுப்பியுள்ளார் .
நமது தேசிய நல்லிணக்க செயன்முறையை பிரித்தானியா சிக்கலாக்கியுள்ளது – இலங்கை வெளிவிவகார அமைச்சு !
நான்கு இலங்கையர்கள் மீது பிரித்தானிய அரசாங்கம் விதித்த தடையானது ‘ ஒருதலைபட்ச ‘ நடவடிக்கை எனவும் , இலங்கையின் தேசிய நல்லிணக்க செயல்முறையை இது பாதிக்கும் எனவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் விஜித ஹேரத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐக்கிய இராச்சியம் தடைவிதித்த 4 இலங்கையர்களில் மூவர் இலங்கை ஆயுதப் படைகளின் முன்னாள் இராணுவத் தளபதிகளாவர். இதற்குப் பொறுப்பானவர்களுக்குத் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காகத் நமது தேர்தல் பிரச்சாரத்தின் போது செய்யப்பட்ட உறுதிமொழியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாடுகளின் இத்தகைய ஒருதலைபட்ச நடவடிக்கைகள் இலங்கையில் நடைபெற்று வரும் தேசிய நல்லிணக்க செயன்முறைக்கு உதவாததுடன், அதற்கு மாறாக செயன்முறையை மேலும் சிக்கலாக்குகிறது. பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான உள்நாட்டு வழிமுறைகளை வலுப்படுத்தும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. கடந்த கால மனித உரிமை மீறல்கள் உள்நாட்டு பொறுப்புக்கூறல் வழிமுறைகள்மூலம் கையாளப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
4.4: இலங்கை அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் , இலங்கைக்கான ஐக்கிய இராச்சியத்தின் உயர் ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக்கிடம் நேற்றையதினம் இது தொடர்பில் தெரிவித்தார் .
4.5: இதேவேளை, இலங்கையின் முன்னாள் இராணுவத் தலைவர்கள் உள்ளிட்ட நான்கு பேருக்கு பிரித்தானிய அரசாங்கம் விதித்துள்ள தடைகளை நீக்குவதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
4.6: மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்று கோருகின்ற பிரித்தானியாவே மனித உரிமைகளைப் போட்டு மிதித்து காஸாவில் இனப்படுகொலைக்கு உதவியளித்து வருகின்றது. இலங்கையின் 30 ஆண்டு கால யுத்தம் எண்ணற்ற போர்க்குற்றங்களுக்கு வித்திட்டது. அதில் சம்பந்தப்பட்ட இலங்கை இராணுவம் , விடுதலைப் புலிகள் மற்றும் ஆயுதக்குழுக்கள் மிக மோசமான யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டிருந்தன. ஆனால் இப்போர்க்குற்றங்கள் தண்டிக்கப்படுவதில்லை என்பது பெரும்பாலும் எழுதப்படாத ஒரு சட்டமாகவே சர்வதேச சமூகத்தில் இருந்து வருகின்றது.
4.7: ஈராக், அப்கானிஸ்தான், உக்ரைன் – அமெரிக்கா, பிரித்தானியா, இஸ்ரேல், ரஷ்யா என எந்த நாட்டு இராணுவமும் தங்கள் நாட்டு இராணுவத்தை இதுவரை தண்டிக்கவில்லை. இலங்கையும் தண்டிக்கப் போவதில்லை. இதுவே யதார்த்தம். இதில் அண்மைய எதிர்காலத்தில் மாற்றம் ஏற்படப் போவதுமில்லை. மீண்டுமொரு யுத்தக் குற்றம் நிகழாத அளவுக்கு அரசியலை முன்னெடுப்பதே சிறந்த வழி.
போர்க் குற்றவாளிகள் மீது பிரித்தானியா விதித்த தடையை வரவேற்கும் எம்பி சிறிதரன் ! வருத்தப்படும் முன்னாள் எம்பி அலிசப்ரி !
இலங்கையில் இறுதி உள்நாட்டு போர் முனைப்படைந்த காலங்களில் 58 வது படையணியின் தளபதியாக விளங்கிய சவேந்திர சில்வா, புலிகளில் இருந்து விலகிய விநாயகமூர்த்தி முரளீதரன், முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூர்யா, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகோடா ஆகியோர் மீது அண்மையில் பிரித்தானியா தடை விதித்துள்ளது.
இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள தமிழரசுக் கட்சி எம்.பி சிறிதரன், இலங்கையில் தமிழர்கள் மீதான இன அழிப்பு யுத்தத்தில் ஈடுபட்ட இலங்கை ஆயுதப்படையின் முன்னணி தலைவர்கள் மற்றும் கருணா குழுவின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் மீது பிரித்தானியா விதித்துள்ள தடை, ஈழத் தமிழர்களின் நீதிக்கான தேடலின் நம்பிக்கைக் கீற்று என்றார். அத்துடன் அந்த அறிவிப்பை தாம் வரவேற்பதாகவும் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி, பிரிவினைவாத புலம்பெயர்ந்தோர் முன்னர் எப்போதும் இல்லாத அளவிற்கு மிகவும் சுறுசுறுப்பாகவும், மூலோபாயரீதியாகவும், விடாமுயற்சியுடனும் உள்ளனர் என்பதை பிரிட்டனின் தடை அறிவிப்புகள் வெளிப்படுத்துகிறது. உலகின் மிகக்கொடுரமான பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றை தோற்கடித்து, பல தசாப்தங்களாக இரத்தக்களறியை எதிர்கொண்ட எமது தேசத்திற்கு அமைதியையும் ஸ்திரதன்மையையும், கொண்டுவருவதற்கு பொறுப்பானவர்களின் பாதுகாப்பையும் கண்ணியத்தையும் அரசியல் நோக்கத்திற்காக இலாபத்திற்காக ஆபத்தான முறையில் சமரசம் செய்துவருகின்றோம் என்பது எனக்கு உண்மையிலேயே கவலையளிக்கின்றது என தெரிவித்துள்ளார்.
கருணா அம்மான் இலங்கை போர்க்குற்றவாளிகள் நான்கு பேருக்கு பிரித்தானியா தடை !
2009 ஆம் ஆண்டு முடிவடைந்த இலங்கை உள்நாட்டுப் போரின் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கையின் முன்னாள் மூத்த இராணுவத் தளபதிகள் மூவருக்கும் மற்றும் ஒரு முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளிலிருந்து பிரிந்து சென்ற தளபதி ஒருவர் மீதும் என பிரித்தானியா நேற்று திங்கட்கிழமை 24 ஆம் திகதி மார்ச் தடைகளை விதித்துள்ளது.
அந்த வகையில் தடை செய்யப்பட்ட நால்வரும் பிரித்தானியாவுக்கு பயணம் செய்வதற்கான தடைகள் மற்றும் சொத்து முடக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகோடா மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூர்யா ஆகியோர் மீது இத்தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கும் இத்தடை போடப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளிற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் பேச்சு வார்த்தைகள் இடம்பெற்ற வேளையில் கருணா விடுதலைப் புலிகளில் அமைப்பிலிருந்து பிரிந்து சென்றிருந்தார். பின்னர் போர் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலத்தில் கருணா இலங்கை இராணுவத்திற்காகப் பணியாற்றும் ஒரு துணை ராணுவக் குழுவை வழிநடத்தினார்.
அரசாங்கப் படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் போராளிகளுக்கும் இடையிலான 26 ஆண்டுகாலப் போரில் 80,000 – 100,000 பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளது. ஆனால் போரில் கொல்லப்பட்ட போராளிகள் உட்பட மக்களின் எண்ணிக்கை அதிகம் என கூறப்படுகிறது.
போர் முடிவடைந்து நீண்ட காலத்திற்குப் பிறகும், இலங்கையின் இராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகள் மீது நீதிக்கு புறம்பான கொலைகள், சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறை உள்ளிட்ட போர்க்குற்றங்கள், வலிந்து காணாமல் ஆக்குதல், கடத்தல்கள் மற்றும் சித்திரவதைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அதேநேரம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் போரில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீதும் போர்க்குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளது.
இலங்கை அரசு தொடர்ந்தும் போர்க்குற்றச்சாட்டுக்களை மறுத்து வருகிறது. தமிழ் மக்களின் நீண்டகால கோரிக்கையான சர்வதேச விசாரணைக்கும் ஒத்துழைப்பை வழங்க இலங்கை தயாராக இல்லை. அதேநேரம் இலங்கை அரசு இவ் விவகாரத்தில் உள்நாட்டு பொறிமுறைக்குள் விசாரணை நடத்த தயாராக உள்ளதாக கூறி வருகிறது. தமிழ்மக்களைப் பொறுத்தவரை உள்ளக விசாரணையில் தமக்கு நம்பிக்கை இல்லை என்று சர்வதேச விசாரணையையே கோருகிறார்கள்.
பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் லாம்மி ஒரு அறிக்கையில், “இலங்கையில் மனித உரிமைகளுக்கு இங்கிலாந்து அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது, உள்நாட்டுப் போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு பொறுப்புக்கூறலைக் கோருவது உட்பட, அவை இன்றும் சமூகங்களில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன” என்று கூறியுள்ளார்.
பிரித்தானியா இலங்கையில் உள்நாட்டுப் போரில் போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு தடை விதித்ததை தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என 15 வருடங்களாக போராடியவர்களுக்கு கிடைத்த வெற்றியாக கொண்டாடுகிறார்கள். மறுபக்கம் என்பிபி அரசாங்கம் தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.