ஓம் சரவணபவ

ஓம் சரவணபவ

லைக்கா சாமியார் ஐந்து மில்லியன் பவுண்கள் பிணையில் விடுதலை! “நானோ லைக்காவோ சாமியாரை பிணை எடுக்கவில்லை” லைக்கா துணைத் தலைவர் பிரேம்! : காணொலி

பாலியல் துஸ்பிரயோகம் மற்றும் பாலியல் பலாத்காரம் ஆகிய காரணங்களுக்காக குற்றம்சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்த ஓம் சரவணபவ என்ற ஆசாமி புலிக்கள் முரளிகிருஸ்ணன் செப்ரம்பர் பிற்பகுதியில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஐந்து மில்லியன் பவுண்கள் பெறுமதியான வீட்டை பிணை வைத்தே இந்தப் போலி ஆசாமியை லைக்கா நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரேமநாதன் சிவசாமி என்றழைக்கப்படும் பிரேம் பிணைமீட்டுள்ளார். இது தொடர்பாக ஒக்ரோபர் 21 லைக்கா துணைத் தலைவரோடு தொடர்பை ஏற்படுத்த முயன்ற போதும் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆனால் இச்செய்தி இவ்வழக்கு சம்பந்தப்பட்ட சட்டக்குழுவினூடாக தேசம்நெற்க்கு கிடைக்கப்பெற்றது. மேலும் லைக்கா நிறுவனர் சுபாஸ்கரனின் குடும்பத்திற்கு நெருக்கமானவர்களும் இச்செய்தியை உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஆனால் இது பற்றிய தேசம்திரை காணொலி வெளியான சில மணி நேரங்களில் தேசம்நெற்றை தொடர்புகொண்ட லைக்கா மோபைல் துணைத் தலைவர் பிரேம் “நானோ லைக்காவோ சாமியைப் பிணை மீட்கவில்லை என்று அறுதியிட்டுத் தெரிவித்திருந்தார். அப்படியானால் உங்களின் பினாமிகளுடாக பிணை எடுத்தீர்களா என்று கேட்டபோது அவ்வாறு செய்ய வேண்டிய அவசியம் தனக்கு இல்லை எனப் பிரேம் சினந்தார். தங்களுக்கு வேறு நெருக்கடிகள் விடயமாக அவசரமாக இயங்கிக் கொண்டிருக்கின்ற போது எங்கள் ஊடகம் தங்களை தொடர்ந்தும் தொந்தரவு பண்ணுவதாக குற்றம் சாட்டினார். தங்கள் சட்டத்தரணிகள் குழுவினுடாக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் தமிழர்கள் என்பதால் தான் நேரடியாகத் தொடர்பு கொண்டதாக பிரேம் இந்த உரையாடலில் தெரிவித்தார். ஈழத் தமிழ் பெண்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்வதாகக் குற்றம்சாட்டப்பட்ட ஒருவருக்கு நீங்கள் எதற்காக ஆதரவு வழங்குகின்றீர்கள் அவர் சம்பந்தப்பட்ட சட்ட விடயங்களுக்கு ஏன் ஆதரவளிக்கின்றீர்கள் என்று கேட்ட போது, தங்களுக்கு இதற்கெல்லாம் நேரமில்லை என்றும் அதனுடன் தங்களுக்கு சம்பந்தம் இல்லை என்றும் லைக்கா மோபைல் துணைத் தலைவர் பிரேம் தெரிவித்தார்.

லைக்கா மோபைல் துணைத் தலைவர் பிரேம் உரையாடலை நிறுத்திய சில நிமிடங்களிலேயே இச்செய்தி வெளியான யூரியூப் சனல் இடைநிறுத்தப்பட்டது. இச்செயலைக் கண்டிக்கும் வகையில் வெவ்வேறு சமூக வலைத்தளங்களில் இந்த லைக்கா சாமியார் தன் ஆண்குறியை வெளியே எடுத்து உருவுகின்ற வீடியோக்கள் வெளியிடப்பட்டு இருந்தது. கணணிக் காட்சி உரையாடலில் லைக்கா சாமியார் தன் ஆண்குறியை தன் கைகளால் உருவுவதும் உரையாடுவதும் அவருடைய முகபாவனைகளோடு வெளியாகி உள்ளது.

ஆனால் இவ்வாறான, குழந்தைகளை இளம் பெண்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்யும் பேர்வழிகளுக்கு ஆதரவாகச் செயற்படும் புல்லுருவிகளும் ஈனர்களும் சமூக வலைத்தளங்களில் தாராளமாக வலம் வருகின்றனர்.

கேரளாவில் மோசடிப் பேர்வழியாக அறியப்பட்ட புலிக்கள் முரளிகிருஸ்ணன் எப்படி லைக்கா சாமியானார் என்பதும் லைக்காவின் லைக்குகளை வாங்கினார் என்பதும் ‘பணம் – பக்தி – பாலியல் ஓம் சரவணபவ!’ என்ற தலைப்பில் தேசம்திரை காணொலியாகி வெளி வந்திருந்தது. அதனைத் தொடர்ந்து லைக்கா மோபைல் துணைத் தலைவரை யூலை நடுப்பகுதியில் சந்தித்து மேற்கொண்ட பதிவு ‘போலிச்சாமியார் ஓம் சரவணபவவிற்கு முண்டுகொடுக்கவில்லை’ என அவர் தெரிவித்த கருத்தைத் தாங்கி வெளிவந்திருந்தது.

“கூடியிருந்து விஸ்கி அடித்த லைக்கா குழுமம், லைக்கா சாமியாருக்கு முன் கூடி, அவர் காலைக் கழுவிய தண்ணியை அடிக்க, அவர் அப்படி என்னத்தைத்தான் காட்டினார் ?” என வினவுகின்றார் கற்பக விநாயகர் அடியவர் எம் ஜி கிருஸ்ணன். ஈழத் தமிழ் பெண்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சாமியாரை ஐந்து மில்லியன் பவுண்கள் பிணை செலுத்தி வெளியே எடுத்துள்ளார் லைக்காவின் துணைத் தலைவர் பிரேம். பிரேம் தன்னுடைய மனைவி சாமியாரில் மிகுந்த பக்தியுடையவர் எனத் தெரிவித்து இருந்தார். பிரேம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தவர். அச்சமயத்திலேயே தெய்வதீஸ்வரி செல்வேந்திரனால் லைக்கா குழுமத்தினருக்கு சாமியார் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தார். மருத்துவ சிகிச்சையின் பயனாக பிரேம் குணமடைந்த போதும், சாமியின் காலைக் கழுவிக்கு குடித்தால் தான் புற்றுநோய் குணமானது என பிரேம் குடும்பத்தினர் நம்புகின்றனர். அது தேசம் ஜெயபாலன் பிரேமுடன் உரையாடியதில் வெளிப்பட்டு இருந்தது. ஈழத் தமிழ் பெண்களை சாமியால் பாலியல் துஸ்பிரயோகம் செய்ததை அச்சந்திப்பில் பிரேம் கண்டிக்கவில்லை. ஆனால் சாமியாரை லைக்காவோடு தொடர்புபடுத்துவது பற்றியே விசனம் தெரிவித்து இருந்தார்.

சாமியாரின் வழக்குடன் தனக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் தானோ லைக்காவோ அவருக்காக வாதாடவோ அவருடைய வழக்குச் செலவுகளை ஏற்கவோ இல்லை என அறுதியிட்டுத் தெரிவித்து இருந்தார். ஆனால் தற்போது லைக்காவின் துணைத் தலைவர் பிரேம் ஐந்து மில்லியன் பவுண் பிணையில் சாமியாரை வெளியே எடுத்துள்ளார் எனத் தெரிய வருகின்றது. சாமியாருக்கு கட்டப்பட்ட கோவிலுக்கான நிதியையும் இவரே வழங்கியுள்ளதாகவும் தெரியவருகின்றது.

பணம் – பக்தி – பாலியல் ஆகிய மூன்று அம்சங்களும் ஒருங்கிணைவது சமூகச் சீரழிவுக்கு வழிகோலுகின்றது. இவ்வாறான அயோக்கியர்களுக்கு லைக்கா போன்ற அமைப்புகளும் ஆலயங்களும் உறுதுணையாக இருப்பது மிக ஆபத்தான நிலையைத் தோற்றுவித்துள்ளது. புலம்பெயர் நாடுகளில் உள்ள பணம் படைத்த வர்த்தகப் புள்ளிகள் தங்களிடம் பணம் இருப்பதால் தங்களை தட்டிக் கேட்க யாராலும் முடியாது என்ற தோரணையுடன் ரவுடிகளாகச் செயற்படுகின்றனர். தங்கள் கைகளில் ஊடகங்களையும், அடியாட்களையும், மொட்டைக்கடிதம் எழுதுபவர்களையும் வைத்துக்கொண்டு இவர்கள் எதிர்கால சமூகத்தையே சீரழித்து வருகின்றனர். தவறணை நடத்துவது அதற்கு ஆட்களை வரவழைக்க போதைப்பொருள் விற்பனைகளை மறைமுகமாக அனுமதிப்பது என இந்தக் கூட்டத்தின் அடாவடித்தனங்கள் சொல்லில் அடங்கா.

இதனைத் தட்டிக்கேட்டால் தங்கள் ஏவலாளிகளைக் கொண்டு முகநூலை முடக்குவது, குடும்பத்தை இழுத்து மொட்டைக்கடிதம் எழுதுவது, ஒருபடி மேலே சென்று இணையத்தை ஊடுருவி – ஹக் பண்ணி முடக்குவது எனப் பல்வேறு அடாவடித்தனங்களைச் செய்கின்றனர். இவ்வாறான அநியாயங்களுக்கு தேசம்நெற் மற்றும் தேசம்திரை ஊடகங்கள் தொடர்ந்தும் முகம்கொடுத்து வருகின்றன.

லைக்கா சாமியாரை சட்டத்துக்கு முன் நிறுத்த வேண்டும் என்பதில் மிகத் தீவிரமாக ஈடுபட்டவர்களில் ஈழபதீஸ்வரர் ஆலயத்தின் உறுப்பினர் ஆர் ஜெயதேவன் குறிப்பிடத்தக்கவர். லைக்கா சாமியாருக்கு எதிராக சாட்சியம் அளித்த சிலர் பின்நாட்களில் வெளி அழுத்தங்கள் காரணமாகவும், அவர்களுக்கு எதிரான மொட்டை கடிதங்கள் அழுத்தங்கள் காரணமாகவும் சாட்சியமளிக்க பின் வாங்கினர். நீண்ட காலமாக லைக்கா சாமிக்கு பிணை மறுக்கப்பட்டதற்கும் அவருடைய பிணைக்கு மிகப் பெரும் நிதி பிணையாகக் கோரப்பட்டதற்கும் இதுவே காரணம். ஆர் ஜெயதேவன் இந்த வழக்குத் தொடர்பில் லைக்கா சாமியாருக்கு எதிராக உறுதியாக நின்றதாகவும் தேசம்நெற்க்கு கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பாலியல் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டப்பட்ட பின்னும்இ தங்கள் குடும்பத்தினர் அந்த ஆசாமியின் கோவிலுக்குச் சென்று வருவதாகத் தெரிவித்த லைக்கா பிரேம் தான் கோவிலுக்குச் செல்வதால் சாமியை ஆதரிப்பதாக குற்றம்சாட்ட முடியாது எனத் தெரிவித்தார். தற்போது சாமியார் மீது குற்றம்சாட்டுகின்றவர்கள் சாமியின் அடியார்களாக இருந்ததாகவும் லைக்கா பிரேம் தெரிவித்தார். சாமியாரின் சுயரூபம் தெரியாதவரை அவருக்கு அடியாராக இருந்தமை சரி என்று கொண்டாலும் சாமி ஆண்குறியை உசார்ப்படுத்தும் விடியோக்கள் வெளியான பின்னரும் ஏன் இவர்கள் அங்கு செல்கின்றனர் லைக்கா சாமியின் லிங்க பூஜையின் சிறப்பு என்ன என்பது மார்ச் 15 2024 ஹரோ நீதிமன்றில் தெரியவரும்.

குற்றம்சாட்டப்பட்ட நிரூபிக்கப்பட்ட பின்னும் தெய்வதீஸ்வரி செல்வேந்திரன் மற்றும் திருமதி பிரேம் போன்ற சில பெண்கள் இவ்வாறான குற்றவாளிகளுக்கு தொடர்ந்தும் துணை போவது ஆச்சரியமாக உள்ளது. குறிப்பாக லைக்கா குடும்பத்தினர் இன்னமும் பாலியல் குற்றவாளியான புலிக்கள் முரளிகிருஸ்ணனின் காலைக் கழுவி தீர்த்தம் குடிக்க ஆசைப்படுவது ஏன்? இனிமேல் லைக்கா காட் வாங்கினால் லைக்கா சாமியின் தீர்த்தம் இலவசமாகக் கிடைக்குமோ?

போலிச் சாமியார் ஓம் சரவணபவாவுக்கு முண்டுகொடுக்கவில்லை! – தனிமனிதர்களின் நம்பிக்கைகளுக்கு நிறுவனங்கள் பொறுப்பல்ல

வர்த்தக ரீதியில் தென்னிந்திய சினிமாவை கட்டுப்படுத்தும் நிலைக்கு உயர்ந்துள்ள லைக்காமோபைல் நிறுவனத்துக்கு எதிரான தீவிர செய்திப் பிரச்சாரங்கள் தமிழகத்தில் முடக்கிவிடப்பட்டுள்ளது. அதன் எதிரொலிகள் புலம்பெயர் தேசங்களிலும் கேட்கின்றது. “லைக்காமோபைல் நிறுவனத்துக்கும் போலிச் சாமியார் ஓம் சரவணபவவிற்கும் எவ்விதமான அமைப்பு ரீதியான தொடர்புகளும் கிடையாது. வியாபார ரீதியாக லைக்காவுக்கு ஓம் சரவணபவவினால் எவ்வித நன்மையும் கிடையாது. ஓம் சரவணபவவுடன் கறுப்பு பணத்தைக் கூட வெள்ளையாக்க முடியாது. லைக்காவின் நிதிப் புரள்வோடு ஒப்பிடுகையில் ஓம் சரவணபவவின் அறக்கட்டளைக் கணக்கு ஒரு பொருட்டானதேயல்ல.
சமூக வலைத்தளங்களில் போலிச் சாமியார் எப்படி லைக்காவுடன் பேசப்பட்டார்?
லைக்காமோபைல் நிறுவனத்தின் துணை நிறைவேற்று பொறுப்பாளரான பிரேம் என்றழைக்கப்படும் பிரேமநாதன் சிவசாமி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிருக்காகப் போராடிய காலகட்டத்தில் பிரேமின் நண்பர்களால் முரளிகிருஸ்ணன் புலிக்கள் பிரேமுக்கு அறிமுகப்படுத்தப்பட்டதாக பிரேமின் குடும்ப நண்பர் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். பிரேமின் வீட்டினுள் ஓம் சரவணபவ நுழைந்தார். பிரேம் யார் என்பதையும் பிரேமின் நோயையும் நன்கு அறிந்து வைத்திருந்த ஓம் சரவணபவ திறம்பட தனது காய்களை நகர்த்தி ஆடினார். சுவாமி தனது வித்தைகளை செவ்வனே பயன்படுத்தி பிரேம் குடும்பத்தை குறிப்பாக பிரேமின் மனைவியை ஆன்மீகத்துக்குள் இழுத்தார். இத்தம்பதியர் ஹரோ ஓம் சரவணபவ ஆலயத்தில் அம்மனுக்கான ஒரு இடத்தைக் கட்டிக்கொடுத்தனர். அவர்கள் அதனைத் தங்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.
பிரேம் ஊடாக சுபாஸ்கரனின் தொடர்பும் கிடைத்தது. சுபாஸ்கரனும் சுவாமிகளின் தீர்த்தம் பெற்றார்.
அதேசமயம் என்புமச்சை சிகிச்சை மூலம் பிரேம் நோயில் இருந்து குணமடைந்தார். இருந்தாலும் நோய்வாய்ப்பட்ட காலத்தில் ஓம் சரவணபவ தலையிட்டதால் அன்று அவர் காட்டிய பரிவான கரிசனைக்கு பிரேம் தம்பதியர் நன்றியுடையவர்களாக உள்ளனர். ஓம் சரவணபவ என்ற இந்த முரளிகிருஸ்ணன் புலிக்கள் இவ்வாறான பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள செல்வந்தர்களை அணுகி அவர்களை வென்றெடுப்பதில் பெரும் கில்லாடி. அந்த வலையில் வீழந்துள்ளதே தெரியாமல் உள்ள பல நூற்றுக்கணக்கானோரில் பிரேம் தம்பதியினரும் அடங்குகின்றனர்.
இது தொடர்பாக இவ்வழக்கோடு தொடர்புடைய சட்டவல்லுநர் ஒருவர் கூறுகையில், பிரேம் தம்பதியினரின் நிலையைத் தன்னால் உணரக்கூடியதாக இருப்பதாகத் தெரிவித்தர். தானும் இவ்வாறு ஓம் சரவணபவவின் கரிசனையில் மயங்கி பல்லாயிரம் பவுண்களை இழந்துவிட்டதாகத் தெரிவித்தார்.
பிரேமின் குடும்ப நண்பர் மேலும் தெரிவிக்கையில், பிரேமின் மனைவி இப்போதும் அந்த ஆலயத்துக்குச் சென்று தாங்கள் கட்டிய அம்மன் சன்னிதானத்தில் அமைதியாக இருந்து கும்பிட்டு வருகின்றார். இந்த தனிமனித நம்பிக்கைகள், பலவீனங்கள் ஒவ்வொரு மனிதர்களிடமும் உண்டு என அவர் தெரிவித்தார்.
இதன் பின்னணியிலேயே லைக்காமோபைல் நிறுவனத்தை ஓம் சரவணபவவுடன் தொடர்புபடுத்தி தங்கள் வியாபாரப் போட்டிகளுக்காகச் செய்வதாக அந்நிறுவனத்தின் முக்கியஸ்தர் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.
லைக்காமோபைல் ஒன்றும் சுத்தமான சுவாமிப்பிள்ளைகள் கிடையாது. கூகிள், ஸ்ரார்பக், டொனால்ட் ரம் போல் வரிசெலுத்தாமல் டிமிக்கி விகிறார்கள் என்ற குற்றச்சாட்டு இவர்கள் மீது நீண்டகாலமாகவே உள்ளது. மேலும் தமிழ் கோப்பிரேட் நிறுவனமான லைக்காமோபைல் ஏனைய கோப்பிரேட் நிறுவனங்கள் போன்று லாபத்திற்காக எதனையும் தியாகம் செய்ய தயாராக இருப்பவர்களாகவே உள்ளனர். ஆனால் ஓம் சரவணபவவின் பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுகளுக்கும் லைக்காமோபைல் நிறுவனத்துக்கும் தொடர்புகளும் கிடையாது எனத் தெரியவருகின்றது.
இவ்விடயம் தொடர்பாக பிரேம் சிவசாமியிடம் கேள்வி எழுப்பிய போது: “ஓம் சரவணபவ – முரளிகிருஸ்ணன் புலிக்கள் குற்றவாளியா இல்லையா என்பதை பிரித்தானியாவின் சட்டத்திடமே விட்டுவிடுவோம். நானோ எனது நிறுவனமோ அவரைக் காப்பாற்ற எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. அவருக்கு எவ்வித சட்ட உதவிகளையும் செய்து கொடுக்கவில்லை” எனத் தெரிவித்தார். “அவர் குற்றம் செய்திருந்தால் அவரை இந்நாட்டு நீதிமன்றம் தண்டிக்கும்” என்றும் தெரிவித்தார். பிரேம் தேசம்நெற்க்கு மேலும் தெரிவிக்கையில் ஓம் சரவணபவ ரஸ்டிகளிடமே ஒரு மில்லியனுக்கும் அதிகமான நிதியுள்ளது. அவர்களுக்கு நான் சட்ட உதிவியோ நிதியுதவியோ செய்ய வேண்டியதில்லை” என்றும் தெரிவித்தார்.
பிரேம் மேலும் குறிப்பிடுகையில் “தேசம்நெற் இல் வெளியான சில தகவல்கள் தவறானது என்றும் எழுத்தமைப்பு ஆரோக்கியமானதாக அமையவில்லை” என்றும் தெரிவித்தார்.
ஓம் சரவணபவவுக்கு எதிராக பாலியல் வல்லுறவு, பாலியல் பலாத்காரம், பாலியல் துஸ்பிரயோகம் ஆகிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இரு பெண்கள் ஓம் சரவணபவவுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகளை வைத்ததைத் தொடர்ந்து லண்டனில் உள்ள தமிழர்கள் ஓம் சரவணபவவுக்கு எதிராகவும் சார்பாகவும் பிளவடைந்துள்ளனர்.
இவ்வழக்கு டிசதம்பர் 5 முதல் ஒரு வாரத்திற்கு நடைபெறவுள்ளது. அதுவரை ஓம் சரவணபவவிற்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது. ஓம் சரவணபவ தன்னை பிணையில் விடுவிக்கக்கோரி மேற்கொண்ட விண்ணப்பம் யூலை 24 இல் விசாரணைக்கு வருகின்றது.

பணம் – பக்தி – பாலியல்: ஓம் சரவணபவ! பல மில்லியன் பவுண்கள் என்ன ஆகும்? சமூக வலைத்தளங்களில் முறைப்பாடு செய்யப்பட்டு நீக்கப்பட்ட செய்தியின் எழுத்துரு!

‘ஓம் சரவணபவ’ என்ற லண்டன் மதக்குழுமத்தைப் பற்றிய தேசம்திரை வெளியிட்ட காணொலியை ஓம் சரவணபவவும் அவர்களுக்கு துணைபோகும் வர்த்தக நிறுவனமும் (நிறுவனங்களும்) சேர்ந்து முடக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு இரு தடவைகள் காணொலியை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கி உள்ளனர். அக்காணொலியின் எழுத்து வடிவவே இது. சில ஆண்டுகளுக்கு முன் இதே பாணயில் லண்டனில் வெளியான தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரச்சார ஊடகமான ‘ஒரு பேப்பர்’ லைக்கா நிறுவனரை விமர்சித்ததற்காக அதன் பிரதிகள் கடைகளில் இருந்து எடுக்கப்பட்டு எரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது ‘ஆதவன் தொலைக்காட்சி’ நடாத்தி வரும் லைக்கா நிறுவனமும் அதன் ஸ்தாபகரும் ஊடகங்களுக்கு எதிராகந் நடந்துகொண்டதோடு ஓரு பேப்பர் ஊடகவியலாளரையும் மிரட்டி இருந்தனர். தற்போது ஓம் சரவணகவ பற்றிய செய்திகளை தேசம்திரை வெளியிட்டதையடுத்து அச்செய்தியை வெளியிடாமல் தடுப்பதில் மக்கள் விரோத பாலியல் குற்றங்களுக்கு துணைபோவோர் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். உண்மைகள் உறங்குவதில்லை என்ற தாரக மந்திரத்தோடு இயங்கும் தேசம்நெற் இவ்வாறான பூச்சாண்டிகளுக்கு அஞ்சப் போவதில்லை எனத் தெரிவிக்கின்றது. உண்மையே நிலைக்கும் என்று அவர்கள் ஆணித்தரமாக நம்புகின்றனர்.

சமூக வலைத்தளத்திலிருந்து மக்கள் விரோத பாலியல் குற்றங்களுக்கு துணைபோகும் வியாபார நிறுவனம் அல்லது நிறுவனங்களால் நீக்கப்பட்ட ஓம் சரவணபவ பற்றிய செய்தியின் எழுத்து வடிவம்:

இன்றைய பொருளாதாரக் கொள்கைகளை இரு நுறு ஆண்டுகளுக்கு முன் விமர்சித்து, அதற்குத் துணைபோகின்ற ‘மதம் ஒரு அபின்’ என்றவர் அரசியல் பொருளாதாரச் சிந்தனையாளர் கார்ள் மார்க்ஸ். வறுமை – பக்தி – பட்டினியில் கிடந்தால் யேசுவைச் சந்திக்கலாம் என்று போதித்த கென்ய மதக் குழுத் தலைவர் போல் மக்கன்சி ன்தன்கே பல நூறு ஏழைகளை பட்டினி இருந்து சாவதற்குக் காரணமானார். இவ்வாண்டு ஏப்ரல் மாதம் பிற்பகுதியில் அவர் கைது செய்யப்பட்டார். தற்போது பிணை மறுக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளார். பொருளாதார வளர்ச்சியற்ற கல்வியில் வறுமைப்பட்ட சமூகத்தில் இவ்வாறான சம்பவங்கள் எதிர்பார்க்கக் கூடியதே.

ஆனால் இதற்கு முற்றிலும் மாறாக, பணம் – பக்தி – படுக்கையில் கடவுளை (தன்னை)ச் சந்திக்கச் சொன்னார் லோக்கல் (local) முருகக் கடவுள் ஓம் சரவணபவ என்று அறியப்பட்ட முரளிகிருஸ்ணன் புலிக்கள் (புலிக்கள் தெற்கு ஆசியாவில் பொதுவான ஒரு குடும்பப் பெயர்). இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றது லண்டனில் செழிப்பான செல்வந்தர்கள் மிக்க மேற்கு லண்டன் உள்ளாட்சிப் பிரிவுகளில். பாலியல் குற்றம் சுமத்தப்பட்ட ஓம் சரவணபவ, பிணை மறுக்கப்பட்ட நிலையில் டிசம்பர் 5இல் ஆரம்பிக்கப்படும் வழக்கின் முடிவு வரை தடுத்து சிறை வைக்கப்பட்டுள்ளார்.

யார் இந்த ஓம் சரவணபவ?

இந்திய கேரள மாநிலத்தின் பாலக்காட்டைச் சேர்ந்த முரளிகிருஸ்ணன் புலிக்கள் என்பவர் லண்டனில் ஓம் சரவணபவ என்றொரு மதக்குழுமத்தை உருவாக்கி உள்ளார். 1979 மே மாதம் பிறந்த, தற்போது 45 வயதுடைய முரளிகிருஸ்ணன் புலிக்கள் 2009இல் லண்டன் வந்து தன்னுடைய மதக்குழுமத்தை லண்டனிலும் ஸ்தாபித்துள்ளார். அதற்கு முன்னரேயே தென்னிந்தியாவில் இவர் பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகளில் சம்பந்தப்பட்டு துரத்தப்பட்டவர். இவர் லண்டனில் இருந்து கொண்டு இந்தியாவில் கடவுச்சீட்டு தொடர்பில் போட்ட விண்ணப்பத்திற்கு எதிராக கேரளா நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது. அதற்குக் காரணம் கேரளா பொலிஸ் பிரிவில் முடிவடையாத கிரிமினல் வழக்கு ஒன்று இவருக்கு உள்ளது. இந்தப் பின்னணியில் தற்போது ‘விஸிற்றர் விசாவில் – visitor visa’ லண்டனில் வாழும் முரளிகிருஸ்ணனுக்கு பிரித்தானிய உள்துறை அமைச்சும் விசா மறுத்து இருந்தது. ஆனால் லண்டனில் அவரைச் சுற்றியிருந்த செல்வந்தர்களின் அணைவால் அவர் விசாவைப் புதுப்பித்துக் கொண்டு இருந்தார்.

யார் இவரை லண்டனில் காலூன்றச் செய்தது?

பாலியல் மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு துரத்தப்பட்ட ‘ஜீலேபிசாமி ‘ என்று அறியப்பட்ட முரளிகிருஸ்ணனுக்கு அடைக்கலம் வாழங்கியவர் பிற்காலங்களில் தேவா அம்மா ஆகிய தெய்வதீஸ்வரி செல்வேந்திரன். தெய்வதீஸ்வரியின் முன்னாள் கணவர் கிழக்கு லண்டனில் பெற்றோல் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர். பணவசதி உள்ளவர். ஹரோவில் ஒரு ப்ரன்சைஸியாக தபாலகம் ஒன்றையும் நடத்தி வருபவர். பணவசதி படைத்த தெய்வதீஸ்வரி ஜீலேபி சாமியுடைய பக்தையாகி கேரளா சென்று தரிசனம் பெற்று வருபவர். தெய்வதீஸ்வரி தற்போது விவாகரத்து ஆன போதும் இன்றும் முன்னாள் கணவர் செல்வேந்திரனின் பெயரையே பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. தேவா அம்மா முரளிகிருஸ்ணனுடைய பக்தி மார்க்கத்தில் தன்னுடைய மகள் கௌசல்யாவையும் இணைத்துக்கொண்டுள்ளார். மகளின் கணவரும் இந்த மதக்குழுமத்தில் இணைந்துகொண்டார்.

இவர்களால் உருவாக்கப்பட்டது தான் ஓம் சரவணபவ சேவா ரஸ்ட். இது பிரித்தானிய பொது அமைப்புகளின் ஆணைக்குழவின் கீழ் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் நான்கு ரஸ்டிகள் உள்ளனர் அவர்கள்: முரளிகிருஸ்ணன் புலிக்கள் (ஓம் சரவணபவ), தெய்வதீஸ்வரி செல்வேந்திரன் (தேவா அம்மா), கௌசிகா செல்வேந்திரன் (தேவா அம்;மாவின் மகள்), பேராசிரியர் ராம்நாத் நாராணயசாமி (தேவா அம்மாவின் மருமகன்)

கோவிட் பெருநோய் காலத்தில் ஆலயங்கள் பூட்டப்பட்டு ஆலயங்களின் வருமானம் வீழ்ச்சியடையை ஓம் சரவணபவ சேவா ரஸ்டின் வருமானம் எகிறி 2021இல் ஒரு மில்லியனைத் தாண்டியது. இது உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்பட்ட கணக்கு அறிக்கை. இந்த ரஸ்டின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் கணக்காளர் ஒருவர் இது பற்றிக் குறிப்பிடுகையில் இதற்குள் வராத பணம் இதனைக் காட்டிலும் பத்து மடங்கு இருக்கும் எனத் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அதாவது பத்து மில்லியன் பவுண்கள் இந்தக் குழுமத்திடம் இருப்பதாகக் கணிப்பிட்டார்.

ஏன் ஓம் சரவணபவனிடம் செல்கின்றனர்?

ஆரம்பத்தில் யாருக்கும் ஓம் சரவணபவனுடைய பின்னணி தெரிந்திருக்கவில்லை. ஓம் சரவணபவனிடம் மற்றவர்களைக் கவருகின்ற ஒரு ஆளுமை இருப்பதாகக் குறிப்பிடுகின்றார், தனியனாக தன்னுடைய இரு விசேட தேவைகளுடைய பிள்ளைகளையும் வளர்த்து வரும் ஆன்மீக ஈடுபாடுடைய ஒருவர், அவர் மேலும் குறிப்பிடுகையில் அவர் பேச்சாற்றலுடையவராகவும் மற்றையவர்களோடு பேசுகின்ற போதே அவர்களை மதிப்பீடு செய்து பேசக்கூடியவராக இருப்பதாகவும் குறிப்பிட்டார். இவற்றுக்கும் மேலாக எவ்வாறோ மற்றையவர்களின் மனப்பதிவுகளை வாசிக்கவும் செய்கின்றார் என்கிறார், ஓம்சரவணபவ தன்னுடைய கடந்த காலம் பற்றிக் மிகத்துல்லியமாகக் குறிப்பிட்டதாக தேசம்நெற் இடம் அவர் தெரிவித்தார். இது போன்ற காரணங்களாலும் பெரும்பாலானவர்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்வதாலும் இழுத்தங்களுடன் வாழ்வதாலும் அவர் மீது ஈர்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார். தான் ஈர்க்கப்பட்டதற்கு தன்னுடைய நெருக்கடிகளும் தனக்கிருந்த அழுத்தங்களும் கூடக் காரணம் என்றவர் அவரிடம் இருந்த சில திறமைகளை அவர் மிகச் சாதுரியமாகப் பயன்படுத்துவதாகத் தெரிவித்தார். பல பெண்கள் அவரிடம் செல்வதற்கு அவர்கள் முகம் கொடுக்கும் குடும்ப நெருக்கடிகளும் மன அழுத்தங்களுமே காரணம் என்கிறார் அவர்.

ஏன் செல்வந்தர்கள் விட்டில் பூச்சிகளாக ஓம் சரவணபவனிடம் வீழ்ந்தனர்?

பணம், அது இல்லாதவர்களுக்கு, பணம் குறைவாக உள்ளவர்களுக்கு அதனை அடைவது அவசியமானது. அது உந்துதலைக் கொடுக்கும். அதனை அடைவது ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தும். ஆனால் பணம் படைத்தவர்களுக்கு பணம் பெருக்குவது கிளர்ச்சியையோ மகிழ்ச்சியையோ குறிப்பிடத்தக்க அளவில் ஏற்படுத்துவதில்லை. அதனால் அவர்கள் அந்தக் கிளர்ச்சியையும் மகிழ்ச்சியையும் வெளியே தேடுவார்கள். போதைப்பொருள் (drugs), கம்பிளிங் (gambling), சொப்பிங் (shopping), பார்டியிங் (partying) என்று அதில் ஆன்மீகமும் ஒன்று. ஆனால் இவர்கள் தங்களுக்குள்ள பண அந்தஸ்தை பயன்படுத்தியே அக்கிளர்ச்சியைத் தேடுவார்கள். அதன் மூலம் ஒரு சமூக அங்கிகாரத்தையும் அந்தஸ்தையும் விரும்புவார்கள். இந்தச் செல்வந்தர்களின் இந்தப் பலவீனத்தை ‘ஓம் சரவணபவ’ முதலீடாக்கியது. ‘ஓம் சரவணபவ’ மட்டுமல்ல சுவாமி பிரேமானந்தா, நித்தியானந்தா, மேல்மருவத்தூர் அம்மா சாமி, சற்குரு ஜக்கி முதல் ஆலயங்களில் உள்ள ஐயர்கள் வரை எல்லோரும் இந்தச் செல்வந்தர்களில் அல்லது செல்வந்தர்களாக தங்களை பாவனை செய்ய விரும்புபவர்களை இந்த ரெக்னிக்கை வைத்துத் தான் வீழ்த்துகிறார்கள்.

இதனையே ஓம் சரவணபவ மிகக் கச்சிதமாக பயன்படுத்தினார். உங்களுக்கு என்ன தெரியும் என்பது முக்கியமல்ல உங்களுக்கு யாரைத் தெரியும் என்பது தான் முக்கியம். லண்டனில் கும்பிடுவதற்கு சாமியில்லாமல் கேரளாவரை சென்று தரிசனம் பெற்ற தெய்வதீஸ்வரியை கணக்குப் பண்ணி வளைத்துப் போட்டார் ஓம் சரவணபவ. ஒரு வர்த்தகப் பிரமுகரின் மனைவியாக இருந்தவரின் நட்புவட்டம் குசெலினிகளாக இருக்க வாய்ப்பில்லை. தெய்வதீஸ்வரி ‘நான் பெற்ற இன்பம் பெறுக செல்வந்தர்காள்! என்று லண்டனில் உள்ள தமிழ் வர்த்தகப் புள்ளிகளுக்கு ஓம் சரவணபவாவை அறிமுகப்படுத்தினார். சாமியை வீட்டுக்கு அழைத்து புஜை நடத்துவது செல்வந்தக் குடும்பங்களின் மத்தியில் அவர்களின் அந்தஸ்தை உயர்த்தியது.

கிளேஹோலில் (Clayhall) நடந்த இவ்வாறான பூஜையில் ஒரு குடும்பத்தினரைக் கொண்டு இறக்கிவிட்ட ரக்ஸி றைவர் (taxi driver) தேசம்நெற் க்கு தெரிவிக்கையில் ஓம் சரவணபவவை வீட்டுக்கு அழைத்த குடும்பத்தினர் அவருக்கு 2,500 பவுண்கள் வழங்கியவையாம். அந்தப் பூஜைக்கு வந்திருந்த குடும்பங்கள் 500, 1000 பவுண்கள் என்ற வழங்கியவையாம் என்றார். அன்றைய இரு மணிநேரத்தில் ஓம் சரவணபவவின் கலெக்சன் 10,000 பவுண்கள் என்றும் தெரிவித்தார். ‘சுவாமியின்’ காலைக் கழுவிக் குடித்ததற்கு கட்டணம் 10,000 பவுண்கள்.

லண்டனின் பெரும் வர்த்தகப் புள்ளிகள் சாமியின் வலையில் வீழ்ந்தனர். லைக்கா மோபைல் நிறுவனத்தின் முக்கியஸ்தர் பிரேம், சம்பல் நிறுவனத்தின் உரிமையாளர் சுரேன், மற்றும் வர்த்தக உரிமையாளர்கள், கணக்காளர்கள், மருத்துவர்கள் என்று பணத்தை வைத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த பலர் ஓம் சரணவபவ வுக்கு ‘ஓ’ போட்டனர். அவர்களுடைய துணைவியரும் அவர்களோடு சேர்ந்து ‘ஓ’ போட்டனர். அவருடைய காலைக்கழவிக் குடித்தனர். தாங்கள் குடித்தது காணாது என்று அவரை புங்குடு தீவு, நயினா தீவு என்று இலங்கைக்கு கூட்டிச் சென்று அங்குள்ளவர்களுக்கும் குடித்துக் காட்டி அவர்களையும் அந்தக் கால் கழுவிய தண்ணியைக் குடிக்க வைத்தனர்.

எவ்வாறு ஓம் சரவணபவ நிர்வாணமானார்?

ஓம் சரவணபவ ஹரோவில் உள்ள பிரிஸ்டன் ரோட்டில் கடை விரித்தார். ஆச்சிரமம், கோயில் கட்டினார். படுக்கையும் விரித்தார்.

பக்தைகள் ஆச்சிரமத்தில் கூடிய நேரம் செலவழித்தனர். கணவன்மாருக் கதைப்பதற்கு நேரமும் பொறுமையும் இல்லை. சாமிக்கு வேலையா வெட்டியா காலை நீட்டிக்கொண்டு நல்லா கதை கேட்டார். அவர்களுக்கு கதை விட்டார். முருகப்பெருமானோடு ஐக்கியமாக்கினார் ஓம் சரவணபவ! யாமிருக்கப் பயமேன்!! சில குடும்ங்களையும் பிரித்து மேய்ந்தார் என்று தற்போது குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

“களவு செய்துவிட்டு அதனைவிட்டுவிட்டால் பிடிபடுவது கஸ்டம் என்பது வர்த்கர்கள் நன்கு அறிந்த தொழில் ரகசியம். ஓம் சரவணபவவிற்கு ஓவர் கொன்பிடன். அல்லது அவரும் செல்வம் – செல்வாக்கு – செக்ஸ் என்ற போதைகளுக்கு அடிமையானார். இப்போது சாமிவேசம் குறைந்து சுயரூபம் வெளிவரத் தொடங்கியது. அவருடைய நடவடிக்கைகள் எல்லை மீறியது” என்கிறார் எட்ச்வெயரைச் சேர்ந்த ரரின் சொக்கலிங்கம்.
“மிகக் கீழானவர்களை விமர்சிக்க தமிழர்கள் ஒரு மோசமான சொல்லாடல் வைத்துள்ளனர். ‘சாப்பிட்ட கோப்பையிலேயே பேழ்கிறான்’. அது தான் ஓம் சரவணபவ மாட்டக் காரணம். பெரும்புள்ளிகளின் குடும்பங்களிலேயே, அக்குடும்பப் பெண்களிலேயே, அவர்களின் பிள்ளைகளிலேயே கை வைத்தார் ஓம் சரவணபவ. அப்போது தான் அவருக்கு ஏழரைச் சனி ஆரம்பித்தது. மற்றவர்களுக்கு நடக்கும் போது கண்டும் காணாமல் இருந்தவர்கள் தங்கள் குடும்பங்களில் என்றதும் பதறினர். அதே சமயம் தங்கள் குடும்ப உறுப்பினர்களது பெயர் வெளிவராமல் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுத்தனர்” என்றும் அவர் தெரிவித்தார்.

ஓம் சரவணபவாவுடன் லைக்காவுக்கு என்ன சம்பந்தம்?

ஓம் சரவணபவா பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாதவர்களின் ஆன்மீக குரு. அந்த வலையில் லைக்கா சுபாஸ்கரனின் வலது கரமான பிரேம் மற்றைய செல்வந்தர்கள் போல் வீழ்ந்தார். தன்னுடைய வீட்டுக்கும் ஓம் சரவணபவவை அழைத்து காலைக் கழுவிக்கு குடித்தார். மற்றைய செல்வந்தர்கள் போல் தன்னுடைய வங்கிக் கணக்கும் இரட்டிப்பாகும் புண்ணியம் கூரையை பிய்த்துகொண்டு வளரும் செய்த பாவம் செய்கின்ற பாவம் செய்யப் போகும் பாவம் எல்லாவற்றிலும் இருந்தும் விடுதலை கிடைக்கும் என்று மற்றவர்களைப் போல் தானும் நம்பினார். அது மட்டுமல்லா சுபாஸ்கரனும் ஓம் சரவணபவ சுவாமியை தன் வீட்டுக்கும் அழைத்து அதையே செய்தார். விஸ்கி அடித்த கூட்டம் சரவணபவனின் கால் கழுவிய தண்ணி அடித்தது.

இப்போது இந்த வழக்கு விடயத்தில் லைக்கா தொடர்ந்தும் மௌனமாகவே உள்ளது. இது பற்றி பேராசிரியர் பெக்கோ என்ற புனைப்பெயரில் எழுதிவருபவர் நகைச்சுவையாக வருமாறு குறிப்பிட்டார்: “ஓம் சரவணபவ சுவாமியின் வழக்கை சுபாஸ்கரன் சுவாமியும் பிரேம் சுவாமியும் நடத்துவதாக முன்னாள் போட்டியாளரான லெப்ரா பாஸ்கரன் சுவாமி ஐபிசி ஊடாக கசியவிடுவதாக ஒரு தகவல். லைக்காவின் அபிமானி கண்ணன் சுவமி அதிர்வில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதகமாக லைக்காவைக் காப்பாற்ற நாலுவரி போட ஹரோ ஜெ சுவாமி பொங்கி எழ லண்டனில் சுவாமிகளின் மோதல் உக்கிரமடைந்துவிட்டது. இதுக்குள் தேவா அம்மா இடையாள சைக்கிளோடி ஆட்டையைப் போட்டுவிட்டா என்று ஜெவாலு சாமி பீலிங்கில தண்ணி அடிக்கிறார். சுவாமியின் கால் கழுவின தண்ணியல்ல.”

அடுத்தது என்ன?

ஓம் சரவணபவனினால் பாதிக்கப்பட்ட பெண்கள் குறைந்தது மூவர் முரளிகிருஸ்ணன் புலிக்கள்க்கு எதிராக குற்றம்சுமத்தியுள்ளனர். பாலியல் வல்லுறவு, பாலியல் பலாத்காரம், பாலியல் துன்புறுத்தல் போன்ற குற்றச்சாட்டுக்கள் முரளிகிருஸ்ணன் புலிக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. இவர்களின் அடையாளங்கள் வெளிப்படுத்தப்படாமல் இருப்பதற்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டும் உள்ளது.
யூன் 12ம் திகதி ஈலிங் மஜிஸ்ரேட் நீதி மன்றத்தில் முரளிகிருஸ்ணன் புலிக்கள் முன்னிலைப்படுத்தப்பட்டு குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டது. அவருக்கு பிணையும் மறுக்கப்பட்டது.

அதற்கு ஒரு மாதத்திற்குப் பின் யூலை 10 ஹரோ கிறவுண் கோர்ட்டில் முரளிகிருஸ்ணன் புலிக்களின் பிணை மீதான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அவருக்கு பிணை மறுக்கப்பட்டது. முரளிகிருஸ்ணன் புலிக்கள் அரச தரப்பின் சாட்சியங்களை தொந்தரவு செய்வார் என்ற அச்சத்தின் அடிப்படையிலும் பிணை மறுக்கப்பட்டிருக்கலாம் என ஓம் சரவணபவ வின் முன்னாள் பக்தர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

முரளிகிருஸ்ணன் புலிக்களின் வழக்கு டிசம்பர் 5 முதல் ஆறு நாட்கள் நடைபெறுவதற்கு திகதியிடப்பட்டுள்ளது. இவ்வழக்கில் முரளிகிருஸ்ணன் புலிக்கள் விடுதலையாவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருப்பதாகவும் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டால் தண்டனைக்காலம் முடிவடைந்ததும் இந்தியாவுக்கே திருப்பி அனுப்பப்படுவார் என்றும் சட்டவல்லுனர் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

முரளிகிருஸ்ணன் புலிக்கள் பிணை மறுக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பது அவருடைய வழக்கில் பல்வேறு நெருக்கடிகளையும் ஏற்படுத்தி இருக்கும் ஏனெனில் பொது அமைப்புகளின் ஆணைக்குழுவுக்கு வழங்கிய கணக்கறிக்கையில் அவர்களுடைய பெரும்பாலான சொத்துக்கள் பணம் அல்லது இலகுவில் பணமாக்கக் கூடியதாகவே உள்ளது. மேலும் கணக்கறிக்கைக்கு புறம்பான பெருமளவு நிதியும் வெளியே உள்ளது. இவற்றில் பெருமளவு பங்கை தேவா அம்மா என்ற தெய்வதீஸ்வரியே கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். இந்த வழக்குக்கான செலவை யார் செலவு செய்கின்றார்கள் என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. ஓம் சரவணபவ சேவா ரஸ்ட் செலவழிக்கின்றதா அல்லது லைக்கா போன்ற பக்தர்கள் செலவு செய்கின்றார்களா? ஓம் சரவணபவவின் கணக்குக்கு உட்பட்ட உட்படாத பல மில்லியன் அசையும் அசையா சொத்துக்களுக்கு என்ன நடக்கும்? இவ்வாண்டு முடிவுக்குள் பல முடிச்சுகள் அவிழும். பல முடிச்சவிக்கிகளும் வெளித் தெரிவார்கள்.

லண்டனில் தமிழர்கள் மத்தியில் இவ்வாண்டு நீதிமன்றம் வந்த பாலியல் குற்றச்சாட்டு வழக்குகள் லண்டனின் செல்வச் செழிப்பு மிக்க பகுதிகளான ஹரோ பார்னற் பகுதியில் இருந்தே வந்துள்ளது. தற்போது ஓம் சரவணபவ சுவாமியும் அவ்விடத்திலேயே கோயில் ஆச்சிரமம் வைத்து வாழ்பவர். பிரேமகுமார் ஆனந்தராஜா, சுப்பிரமணியம் சதானந்தன் ஆகியோர் ஏற்கனவே பாலியல் குற்றங்களுக்கு தண்டனை பெற்றவர்கள். யாழ் இந்ததுக்கல்லூரி பழைய மாணவர்கள் பள்ளி நண்பர்கள். அப்பிரதேசத்திலேயே வாழ்ந்தவர்கள். பிரேமகுமார் ஆனந்தராஜா குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட பின்பும் அவருக்கு நற்சான்றிதழ் வழங்கிய ஆன்மீக கனவான்களும் கனவாட்டிகளும் இந்தப் பிரதேசத்திலேயே வாழ்கின்றனர்.

இப்பகுதியில் இன்னும் சில ஆன்மீக வாதிகள், கலைஞர்கள் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் இருப்பதாகவும் அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் வைத்தால் தங்களையே தூற்றுவார்கள் என்பதால் பல இளம்பெண்கள் தங்கள் மௌனத்தை கலைக்கத் தயங்குவதாகவும் தேசம்நெற்க்கு தெரியவருகின்றது.

பாலியல் குற்றவாளி பிரேமகுமார் ஆனந்தராஜாவுக்கு 42 பேர் நற்சான்றிதழ் வழங்கியமை ஏற்கனவே தேசம்நெற் இல் அம்பலப்படுத்தப்பட்டது. தற்போது முரளிகிருஸ்ணன் புலிக்கள்க்கும் ஆதரவாக பலர் செயற்பட்டு வருகின்றனர். தங்களுடைய தேவைகளை லாபங்களைக் கருதாமல் அனைத்து வகையான பாலியல் சுரண்டல்கள், பாலியல் துஸ்பிரயோகங்களுக்கும் எதிரான எண்ணம் அனைவரிடமும் ஏற்பட வேண்டும்.