ஐக்கிய நாடுகள் சபை

ஐக்கிய நாடுகள் சபை

இலங்கையில் 10 குடும்பங்களில் 4 குடும்பங்கள் நாளாந்த உணவுக்கு திண்டாடுகின்றன – ஐக்கிய நாடுகள் சபை

பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை படிப்படியாக மீண்டுவருகின்ற போதிலும், நாடளாவிய ரீதியில் 10 குடும்பங்களில் 4 குடும்பங்கள் தமது அன்றாட வாழ்வாதார மற்றும் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கு பல்வேறுபட்ட மாற்று வழிமுறைகளைக் கையாண்டு வரும் நிலை தொடர்வதாக ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத்திட்டம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இலங்கை அண்மைக்காலமாக காலநிலைமாற்ற சவால்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும், அதிகரித்த வெப்பநிலை மற்றும் உயர்வான வெப்பம் என்பன மக்களின் ஆரோக்கியத்திலும், விவசாய நடவடிக்கைகளிலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகவும் உலக உணவுத்திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.

தொடரும் இஸ்ரேலின் தாக்குதல் – காசாவில் இருந்து சுமார் 1.9 மில்லியன் பேர் இடம்பெயர்வு !

இஸ்ரேல் மற்றும் காஸா இடையே போர் ஆரம்பமானதில் இருந்து காஸாவை சேர்ந்த பத்தில் ஒன்பது பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

பலஸ்தீன எல்லை பகுதியில் உள்ள ஐநா-வின் OCHA அமைப்பு தலைவர் andrea di domenico காசாவில் சுமார் 1.9 மில்லியன் பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்று தெரிவித்தார்.

1.7 மில்லியன் பேர் இடம்பெயர வாய்ப்புள்ளதாக கணித்திருந்த போதிலும், கடந்த ஆண்டு ஒக்டோபரில் இருந்து இதுவரை காசா எல்லையில் பத்தில் ஒன்பது பேர் குறைந்தபட்சம் ஒருமுறையேனும் இடம்பெயர்ந்து இருக்கலாம் என்று கணித்துள்ளதாக தெரிவித்தார்.

இஸ்ரேல் போர் காரணமாக காசா இரண்டாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக வடக்கில் சுமார் 3 முதல் 3.5 லட்சம் பேர் வரை சிக்கிக் கொண்டு தெற்கிற்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீனத்திற்கு நிரந்தர உறுப்புரிமை பற்றி பரிசீலிக்க வேண்டும் – ஐ.நாவில் தீர்மானம் !

ஐக்கியநாடுகள் சபையில்  பாலஸ்தீனத்திற்கு நிரந்தர உறுப்புரிமை  வழங்குவது குறித்து  ஐக்கியநாடுகள்பாதுகாப்பு சபை பரிசீலிக்கவேண்டும் என கோரும் தீர்மானத்தை ஐக்கியநாடுகள் சபை நிறைவேற்றியுள்ளது.

பாலஸ்தீனத்திற்கு தற்போதைய பார்வையாளர் நிலையிலிருந்து மேலும் பல உரிமைகளையும் சலுகைகளையும் இந்த தீர்மானம் வழங்கியுள்ளது.

143 நாடுகள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன.

2012 முதல் பாலஸ்தீனத்திற்கு ஐநாவில் பார்வையாளர் அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நிரந்தர உறுப்புரிமை வழங்குவது குறித்து  பாதுகாப்பு சபை மாத்திரமே தீர்மானிக்க முடியும்.

பாலஸ்தீனத்திற்கு நிரந்தர உறுப்புரிமையை வழங்கும் தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்கா சமீபத்தில் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியிருந்தது.

எனினும் நேற்றைய தீர்மானம் பாலஸ்தீனத்திற்கான அங்கீகாரத்தை வழங்கும் விதத்தில் அமைந்துள்ளது.

இந்த தீர்மானத்தை பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூட் அப்பாஸ் வரவேற்றுள்ளார்.

ஐக்கியநாடுகள் பயங்கரவாத நாட்டை தனது பக்கத்திற்கு வரவேற்றுள்ளது என ஐநாவிற்கான இஸ்ரேலிய தூதுவர் தெரிவித்துள்ளார்.

உலகில் இடம்பெயரும் உயிரினங்களில் ஐந்தில் ஒரு பகுதி அழிந்து போகும் அபாயத்தில் !

காலநிலை மாற்றம் மற்றும் மனித செயற்பாடுகளின் விளைவாக உலகில் இடம்பெயரும் உயிரினங்களில் ஐந்தில் ஒரு பகுதி அழிந்து போகும் அபாயத்தில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின்  இடம்பெயரும் மிருகங்கள் பற்றிய அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும்  100 கோடி  விலங்குகள் பாலைவனங்கள், சமவெளிகள் அல்லது பெருங்கடல்கள் வழியாக இனப்பெருக்கம் மற்றும்  உணவுகளை தேடி  இடம்பெயர்வை மேற்கொள்கின்றன.

இந்நிலையில், இடம்பெயரும் உயிரினங்களின் மீது திணிக்கப்படும் நீடிக்க முடியாத அழுத்தங்கள் அவற்றின் எண்ணிக்கையை குறைவடைய செய்வதோடு, உணவு விநியோகத்தை சீர்குலைத்து வாழ்வாதாரத்தை அச்சுறுத்துகிறது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிக்கையில் மேலும் ,

1979 ஆம் ஆண்டு  ஐக்கிய நாடுகள் சபையின் இடம்பெயரும் விலங்குகளை பாதுகப்பதற்கான மாநாட்டில் 1,189 இனங்கள் இருப்பதாக பட்டியலிடப்பட்டது. அதில்  44 சதவீதம் குறைவடைந்துள்ளதோடு, 22  சதவீதம் முற்றிலும் அழிந்துவிடும்.

இந்த தரவினை  1970 முதல் 5,000 க்கும் மேற்பட்ட உயிரினங்களின் எண்ணிக்கையை ஒருங்கிணைக்கும் இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (IUCN) மற்றும் உலகளாவிய உயிரியல் பன்முகத்தன்மையின் நிலையைக் குறிக்கும் லிவிங் பிளானட் இன்டெக்ஸ் (எல்பிஐ)  வழங்கிய மதிப்பீடுகள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

வேட்டையாடுதல், மீன்பிடித்தல் மற்றும் பிற வகையான அதீத சுரண்டல் உள்ளிட்ட செயல்பாடுகளால், மனிதர்கள் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளனர், இதனால், ஐக்கிய நாடுகள் சபையின் பட்டியலில் உள்ள 70 சதவீதமான  உயிரினங்கள் பாதிப்படைகின்றன.

வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்களால் வறட்சி அல்லது காட்டுத் தீ போன்றவை வானிலையில் பாதிப்பை ஏற்படுத்திதுகிறது.இதன் காரணமாக  இடம்பெயர்வு காலத்தை சீர்குலைக்கிறது.

இதேவேளை , வாழ்விடங்கள் அழிந்து வருவதால் 75 சதவீதமான உயிரினங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இது தனிமைப்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் கட்டமைப்புக்கு இடையே அதிக இணைப்பு தேவை என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

அணைகள், குழாய்கள் அல்லது காற்றாலைகள் போன்ற உள்கட்டமைப்பை நிறுவும் போது வாழ்விடங்கள் மற்றும் இடம்பெயர்வு பாதைகளை சீர்குலைப்பதைத் தவிர்க்குமாறு அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

புதிய உலகளாவிய உயிர்ப்பல்வகைமை ஒப்பந்தத்தின் கீழ் 2030 ஆம் ஆண்டிற்குள் உலகின் 30 சதவீதமான நிலம் மற்றும் கடல் பிரதேசங்களை இயற்கைக்காக ஒதுக்கி வைப்பதற்கான 2022 ஆம் ஆண்டு உறுதிமொழியை மதிக்குமாறு வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் மக்கள் கைது – ஐ.நா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கவலை !

இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் மக்கள் கைது செய்யப்படுவது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா ஆகியன கவலை வெளியிட்டுள்ளன.

இந்த வாரம் மட்டக்களப்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 10 பேர் கைது செய்யப்பட்டனர். யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கான நினைவேந்தலை நடத்தியமைக்காக அல்லது அதில் கலந்து கொண்டமைக்காக அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்தநிலையில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற சமீபத்திய கைதுகள் குறித்து தமது தரப்பு கவலையடைவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இது, மனித உரிமைகளை மீறும் செயற்பாடு எனவும், குறித்த சட்டம் ரத்து செய்யப்படும் என குறிப்பிட்ட அரசாங்கத்தின் வாக்குறுதிக்கு முரணானது எனவும் ஐக்கிய நாடுகள் சபை தங்களது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

இதேவேளை, அரசாங்கம் உறுதியளித்த வகையில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் இடம்பெறும் கைது நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

சர்வதேச தரநிலை மற்றும் மனித உரிமை விதிகளுக்கு அமைய குறித்த சட்டம் மாற்றப்பட வேண்டும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளவர்களின் கருத்துச் சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடை சட்டம் தொடர்ந்தும் பயன்படுத்தப்படுவது கவலையளிப்பதாகவும் அவர் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

உத்தேச நிகழ்நிலை காப்பு சட்டமூலம் சர்வதேச தரங்கள் மற்றும் சட்டத்திற்கு இணங்கவில்லை – ஐ.நா விசேட பிரதிநிதிகள்

ஔிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டமூலம் மற்றும் உத்தேச நிகழ்நிலை காப்பு சட்டமூலம் என்பன தொடர்பில் அதீத கவனம் செலுத்தப்பட்டு ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதிகள் மூவரால் அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.

 

இந்த இரு சட்டமூலங்களும் சர்வதேச தரங்கள் மற்றும் சட்டத்திற்கு இணங்கவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

ஐக்கிய நாடுகள் சபையின் கருத்து வௌியிடுவதற்கான சுதந்திரத்தின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்கான விசேட பிரதிநிதி Irene Khan, அமைதியான முறையில் ஒன்றுகூடுதல் மற்றும் செயற்படுதலுக்கான உரிமைகளை பாதுகாப்பதற்கான விசேட பிரதிநிதி Clement Nyaletsossi Voule மற்றும் தனியார் உரிமைகள் தொடர்பான விசேட பிரதிநிதி Ana Brian Nougrères ஆகியோரால் இந்த அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.

 

மனித உரிமைகள் தொடர்பிலான உலகளாவிய பிரகடனம், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச பிரகடனத்தினால் பாதுகாக்கப்பட்ட தனிநபருக்கான உரிமைகள், கருத்து வௌியிடுவதற்கு காணப்படும் உரிமை மற்றும் அமைதியாக ஒன்றுகூடுதலுக்கான உரிமை என்பன இந்த இரண்டு சட்டமூலங்களாலும் மீறப்படுவதாக

அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

மேற்கூறப்பட்ட இரு உலகளாவிய பிரகடனங்களிலும் இலங்கை கைச்சாத்திட்டுள்ளதாக ஐ.நா விசேட பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

 

உத்தேச நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தில் கூறப்பட்டுள்ள பல விடயங்கள், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான உலகளாவிய பிரடனங்களின் மூலம் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை நிறைவேற்றவில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

 

உத்தேச சட்டமூலங்களின் ஊடாக நிகழ்நிலையில் கருத்து வௌியிடுவதற்கான உரிமை மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதுடன், கடுமையாக அரசாங்கத்தை விமர்சிக்கும் ஊடகவியலாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக தடைகளும் அச்சுறுத்தல்களும் விடுக்கப்படக்கூடும் என ஐ.நா விசேட பிரதிநிதிகளின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இலங்கையில் வாழும் அனைத்து தரப்பினர் மற்றும் புலம்பெயர் தமிழர்களை இலக்கு வைத்து இந்த சடடமூலங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவை வெவ்வேறு துறைகளை சேர்ந்தோர் கருத்து வௌியிடுவதற்கு காணப்படும் உரிமை மீது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

உத்தேச ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் சட்டமூலத்திற்கமைய ஆணைக்குழுவை நியமிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டால், அரசாங்கம் தொடர்பில் பக்கசார்பற்ற முறையில் செயற்படும் ஊடக நிறுவனங்களை தண்டிக்கவோ அல்லது உரிமத்தை இரத்து செய்யவோ நாட்டின் நிர்வாக அதிகாரிகளுக்கு வாய்ப்பு கிடைக்குமென ஐ.நா விசேட பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

இந்த ண்காணிப்பு செயற்பாடு சுதந்திரமான மற்றும் அழுத்தங்களுக்கு உட்படாத அமைப்பாக இருக்க வேண்டும் எனவும் அதில் அரசியல் தொடர்புகள் இருக்கக்கூடாது எனவும் அவர்கள் தமது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர்.

 

இந்த இரு சட்டமூலங்க​ளையும் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது பொதுமக்களின் கருத்தைக் கேட்டறிந்த பின்னர் முறையாக மறுபரிசீலனை செய்ய வேண்டுமென ஐ.நா விசேட பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

காஸாவில் 22 இலட்சம் பேருக்கு உணவு தேவைப்படுகிறது – ஐ.நா

காஸாவில் 22 இலட்சம் பேருக்கு உணவு தேவைப்படுவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

 

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி பாலஸ்தீனத்தின் காஸாவில் இருந்து ஹமாஸ் படையினா் இஸ்ரேல் மீது எதிர்பாராத திடீர் தாக்குதல் நடத்தினா்.

 

இதில் இஸ்ரேலை சோ்ந்த சுமாா் 1,200 போ் உயிரிழந்தனா். மேலும், இஸ்ரேலில் இருந்து சுமாா் 200-க்கும் மேற்பட்டவா்களை பணயக்கைதிகளாக ஹமாஸ் படையினா் பிடித்துச்சென்றனா்.

 

இதைத் தொடா்ந்து, காஸா மீது இஸ்ரேல் கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது.

 

காஸாவில் உள்ள மருத்துவமனைகளை இலக்கு வைத்து இஸ்ரேல் இராணுவம் தற்போது தாக்குதல் மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே தற்காலிக போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன.

 

இந்நிலையில், காஸா நிலவரம் குறித்து தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்து வரும் நிலையில், ஐ.நா. உணவு அமைப்பு, காஸாவில் தற்போது 22 இலட்சம் பேருக்கு உணவு தேவைப்படுவதாக தெரிவித்துள்ளது.

 

மேலும், அங்கு மக்கள் உணவு, எரிபொருள் இன்றி தவிப்பதாகவும் அவர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளது.

 

தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், மருத்துவமனைகள் செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தீவிர சிகிச்சை பெற்று வந்த குழந்தைகள் எகிப்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

 

மருத்துவமனையை ஹமாஸ் அமைப்பினர் தங்களது செயற்பாட்டிற்காக பயன்படுத்தி வந்ததாக குற்றம்சாட்டி வரும் இஸ்ரேல் இராணுவம், மருத்துவமனைகளில் சோதனை நடத்தி வருகிறது.

 

இரண்டு மூன்று சுரங்கங்கள் மருத்துவமனையுடன் இணைக்கப்பட்டுள்ளதை கண்டுபிடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

பாடசாலை மாணவர்களின் கற்றல் நடவடிக்கையின் போது தொலைபேசி தேவையே இல்லை – ஐ.நாடுகள் சபை வெளியிட்டுள்ள எச்சரிக்கை!

மாணவர்களின் கற்றல் நடவடிக்கையின் போது கையடக்கத் தொலைபேசி மாணவர்களின் கற்றல் நடவடிக்கையின் போது கையடக்கத் தொலைபேசிபயன்பாட்டை தவிர்க்க வேண்டும் என ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

ஸ்மார்ட் தொலைபேசிகளின் திரையை நீண்ட நேரம் பார்ப்பதன் மூலம் குழந்தைகளின் உணர்ச்சி ஸ்திரத்தன்மை முறிவு ஏற்படுவதாக ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு கூறியுள்ளது.

இந்த காரணிகளின் அடிப்படையில் ஸ்மார்ட் தொலைபேசிகளை பாடசாலைகளில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று குறித்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

அதிக நேரம் கையடக்கத் தொலைபேசிகளைப் பார்ப்பது குழந்தைகளின் மனநலத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக யுனெஸ்கோ சுட்டிக்காட்டுகிறது.

அதன்படி, பாடசாலைகளில்; கையடக்க தொலைபேசிகளின் பயன்பாட்டை தடை செய்ய வேண்டும் என்று ஐநா வலியுறுத்தியுள்ளது.

மேலும் புதிய விடயங்கள் எப்போதும் சிறந்தவை அல்ல என்றும், கொள்கை வகுப்பாளர்கள் சிந்திக்காமல் கல்வியில் ‘டிஜிட்டல் தொழில்நுட்பத்தை’ பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறியுள்ளது.

கோவிட்-19 காலப்பகுதியில் ஆன்லைன் தொழில்நுட்பம் மூலம் கற்பிப்பது பயனுள்ளதாக இருந்தாலும், வகுப்பறையில் கற்பிக்கும் முறையால் உருவாகும் குழந்தைக்கும் ஆசிரியருக்கும் இடையிலான நெருங்கிய உறவு ஒரு மாணவருக்கு மிகவும் முக்கியமானது என்று யுனெஸ்கோ கூறுகிறது.

எவ்வாறாயினும், இந்த காரணிகளைக் கருத்தில் கொண்டு, கல்வி முறைமைகளில் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

சனத்தொகையில் இந்தியா உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக மாறும் – ஐ.நா கணிப்பு!

இந்த ஆண்டின் நடுப்பகுதியில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக மாறும் என ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன.

சீனாவின் 1,425.7 மில்லியனுக்கு எதிராக இந்தியாவின் மக்கள்தொகை 1,428.6 மில்லியனை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தமது அண்டை நாடான சீனாவை விட இந்தியா 2.9 மில்லியன் மக்களைக் கொண்டிருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த இரு நாடுகளினது சனத்தொகை, 70 ஆண்டுகளுக்கும் மேலாக உலக சனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கை கொண்டுள்ளது.

எவ்வாறாயினும், 2011 க்குப் பிறகு நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு இல்லாததால், இந்தியாவின் மக்கள்தொகை எண்ணிக்கை ஒரு கணிப்பாகும்.

மேலும், தங்கள் மதிப்பீட்டில் சீனாவின் இரண்டு சிறப்பு நிர்வாகப் பகுதிகளான ஹொங்கொங் மற்றும் மக்காவ் மற்றும் தாய்வானின் மக்கள் தொகை கணக்கிடப்படவில்லை என்று ஐ.நா. கூறுகிறது.

எனினும், தாய்வான் தனது சொந்த அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களுடன் சீன நிலப்பரப்பில் இருந்து வேறுபட்டதாகக் கருதுகிறது.

கடந்த வருடம் நவம்பரில், உலக மக்கள் தொகை 8 பில்லியனைத் தாண்டியது. எனினும், வளர்ச்சி முன்பு போல் வேகமாக இல்லை என்றும், 1950க்குப் பிறகு இப்போது மிகக் குறைந்த வேகத்தில் இருப்பதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். எவ்வாறாயினும், இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் தங்கள் கருவுறுதல் விகிதத்தில் சரிவைக் கண்டுள்ளதாக ஐ. நா. தரவுகள் குறிப்பிடுகின்றன.

இலங்கை உட்பட உலக நாடுகளின் கல்வி இலக்குகளை எட்டுவதற்கு 97 பில்லியன் டொலர்கள் பற்றாக்குறை – ஐக்கிய நாடுகள் சபை

2030ஆம் ஆண்டு இலங்கை உட்பட உலக நாடுகளின் கல்வி இலக்குகளை எட்டுவதற்கு 97 பில்லியன் டொலர்கள் பற்றாக்குறையாக உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

2030 ஆம் ஆண்டில் அனைவருக்கும் நியாயமான மற்றும் தரமான கல்வியை வழங்குவதே ஐக்கிய நாடுகள் சபையின் 4 வது இலக்கு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு அல்லது யுனெஸ்கோ இதற்கு 3 டிரில்லியன் டொலர் நிதி தேவை என்று மதிப்பிட்டுள்ளது.

கிழக்கு மற்றும் தெற்காசியா நாடுகளில் கல்வித் தரம் குறைவாக இருந்த போதிலும் இலங்கை முன்னணியில் இருப்பதாக உலக அமைப்பு கூறுகிறது.

2030ஆம் ஆண்டில் இலங்கையின் இடைநிலைக் கல்வி நிலை 81 சதவீதமாக இருக்கும் என்றும் அந்த அறிக்கைகள் கூறுகின்றன.

மத்திய, கிழக்கு, தெற்கு மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில், இடைநிலைக் கல்விக்குத் தகுதியானவர்களில் 60% பேர் பாடசாலைக்கு செல்வதில்லை, இருபது சதவீதம் பேர் ஆரம்பக் கல்வியைப் பெறவில்லை.

அதற்காக 70 பில்லியன் டொலர்கள் ஒதுக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.