என் செல்வராஜா

என் செல்வராஜா

“நினைவுகளே எங்கள் கேடயம்!” என் செல்வராஜாவின் கனவு மெய்ப்பட வேண்டும்!

கல்வியின் மகுடுமாகச் சித்தரிக்கப்பட்டு விருகின்ற யாழ்ப்பாணத்தில் 2024இல் நொத்தேர்ன் யுனிவர்சிற்றி என்ற கல்வி நிறுவனத்தின் விளம்பரத்துக்காக நடத்தப்பட்ட சினிமாக் கலைஞர்களின் நட்சத்திரக் கேளிக்கை நிகழ்ச்சி இளைஞர்களின் இச்சைகளைத் தூண்டும் கவர்ச்சி நடனத்திற்குள் கல்வியை கலப்படம் செய்தது. இதனை துரிதமாக பின்னோக்கிச் சுழற்றினால் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் 1974; ஜனவரியில், பல கோடி செலவில் ஏற்பாடு செய்யப்பட்ட நட்சத்திர கேளிக்கை விழாவுக்கு முற்றிலும் முரணான தமிழ் மக்களின் அடுத்த 50 ஆண்டுகாலத்தை தீர்மானிக்கின்ற நிகழ்வொன்று யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்தது. தமிழர்களின் அடுத்த 50 ஆண்டு அரசியலுக்கு வித்திட்ட நிகழ்வுகளில் இந்த நிகழ்வும் மிக மிக முக்கியமானது. அந்நிகழ்வு தான் யாழ்ப்பாணத்தில் 1974 ஜனவரியில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்சி மாநாடு. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாடு பற்றியும் அது ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றியும் ஆங்காங்கே சில பதிவுகள் வந்த போதும், ஓரளவுக்காவது அந்நிகழ்வை ஆராய்ந்த ஒரு குறிப்பிடத்தக்க பதிவு இதுவரை வெளிவந்திருக்கவில்லை.

இவ்வாறான வரலாற்று ஆவணங்களை பெரும் ஆய்வுகளுக்கூடாக வெளிக்கொணர வேண்டியது அப்பிரதேசங்களில் உள்ள பல்கலைக்கழகங்களின் பணி. ஒரு கல்விச் சமூகத்தின் மகுடமாக விளங்கும் பல்கலைக்கழகங்கள் தாங்கள் வாழும் சமூகத்தின் அரசியல், பொருளாதார, சமூக முன்னேற்றத்தை நோக்கிச் ஆய்வுகளை மேற்கொண்டு பட்டதாரி மாணவர்களை அம்மாற்றத்திற்கு முன்னோடிகளாக உருவாக்கி அந்த சமூகத்திற்கு வழங்க வேண்டும். இன்று தமிழ் சமூகம் 30 ஆண்டுகள் போராட்டம், யுத்தம் என்பனவற்றிலிருந்து விடுபட்டு யுதமில்லாத சூழ்நிலைக்குள் வாழ ஆரம்பித்து 15 ஆண்டுகள் ஆகின்றது. ஆனால் வடக்கில் உள்ள யாழ் பல்கலைக்கழகம் தன்னுடைய சமூகம் சார்ந்து என்ன செய்துள்ளது? குறிப்பாக யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடம் தமிழ் மக்களின் மொழி, கலை, இலக்கியம், பண்பாடு, மரபுகள் பற்றி எத்தனை ஆய்வறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்? இவை தொடர்பில் எத்தனை நூல்கள் யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து வெளிவந்துள்ளன? வடக்கில் மதுபானம், போதைவஸ்துக்கு அடிமையாதல் மிக அதிகமாக உள்ளது. வீதி விபத்துக்கள் அதிகமாக உள்ளது. சமூகப் பிறழ்வுகள் அதிகரித்துள்ளது. இளவயதுத் திருமணங்கள் அதிகரித்துள்ளது. கல்வித் தரம் வீழ்ச்சி அடைந்துகொண்டுள்ளது. தமிழ் மக்களுடைய வரலாறுகள் மறைந்துகொண்டிருக்கின்றது. இவைகள் பற்றி என்ன ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளது? இவற்றைத் தடுக்கும் விழிமுறைகள் பற்றி எத்தனை ஆய்வுகள் செய்யப்பட்டது? அவை பற்றிய கருத்தரங்குகள் நடைபெற்றதா? இவற்றினைப் பற்றி தமிழ் அரசியல் தலைமைகளுக்கு அறிவுறுத்தப்பட்டதா?

இவை தொடர்பில் யாழ் பல்கலைக்கழகத்தின் குறிப்பாக கலைப்பீடத்தின் பீடாதிபதி என்ன செய்கின்றார்? பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் என்ன செய்கின்றனர்? எத்தனை ஆய்வறிக்கைகள், புத்தகங்களை இவர்கள் கடந்த 15 ஆண்டுகளில் வெளியிட்டுள்ளனர்? தங்கள் பேராசிரியர் பதவி உயர்விற்காக இந்திய பல்கலைக்கழகங்களில் பணம்கொடுத்து எழுதி அங்கேயே பணம் கொடுத்து ஆய்வுகளை வெளியிடும் போலிச் சஞ்சிகைகளில் வெளியிட்டதைத் தவிர இவர்கள் என்னத்தைச் செய்தார்கள்? இப்பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்களுக்கு, பேராசிரியர்களுக்கு, பீடாதிபதிகளுக்கு இதனைச் செய்வதற்காகவே இலங்கைப் பல்கலைக்கழக மானியத்துறை, கோடிக்கணக்கான நிதியைச் செலவிடுகின்றது. இதற்காகவே விரிவுரையாளர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் பல லட்சம் ஊதியம் வழங்கப்படுகின்றது. ஆனால் யாழ் கல்விச் சமூகத்தின் மகுடமான பல்கலைக்கழகம் இதை எதையுமே செய்யவில்லை. யாழ் பல்கலைக்கழகம் பள்ளிக்கூடம் தான் நடத்துகின்றது.

1981இல் யாழ்ப்பாணப் பொது நூலகம் எரிக்கப்பட்டது, இலங்கைத் தமிழர்களின் வரலாற்றில் மிக முக்கியமான மற்றுமொரு நிகழ்வு. ஆனால் அந்நூலகம் எரிக்கப்பட்டு நாற்பது ஆண்டுகளில் அந்நூலகம் எப்போது எரிக்கப்பட்டது, அதனுடன் சம்பந்தப்பட்ட அரசியல் தலைமகளின் செயற்பாடுகள் பற்றிய பல உண்மைகள் மறைக்கப்பட்டு விட்டது. அதனை மீண்டும் ஆதாரங்களுடன் தேடிப் பதிவிட்டு அந்நூலகம் எரிக்கப்பட்டதற்குப் பின்னாளிருந்த அரசியல் தலைவர்களை ஆதாரமான பதிவுகளோடு நிறுத்தி இரு ஆவணங்கள் வெளியானது. “யாழ்ப்பாணப் பொதுநூலகம்: ஒரு வரலாற்றுத் தொகுப்பு” என்ற நூலிலும் அதனைத் தொடர்ந்து “Raising from the ashes“ என்ற தேசம் வெளியீடாக வந்த நூலிலும் இப்பதிவுகள் இடம்பெற்றது.

இவ்வாறு நூற்றுக்கு மேற்பட்ட தொகுப்புகளையும், நூல்களையும் வெளியிட்டதுடன் ஆயிரக்கணக்கான நூல்களையும் ஆவணங்களையும் தன் சேகரிப்பில் வைத்துள்ளவர் தேசம் சஞ்சிகையால் ‘நூலகவியலாளர்’ என்று கௌரவிக்கப்பட்ட என் செல்வராஜா. ஈழத்தமிழர்கள் மத்தியில் இந்த கௌரவத்துக்கு உரியவர் இவர் மட்டுமே. வேறுயாராவது அவ்வாறு அதனைப் பயன்படுத்துவார்களானால் அது அவர்களுடைய அறியாமையே. தன்னுடைய பதின்ம வயது முதல் நூல்களும் நூலகமுமாக வாழ்ந்தவர் என் செல்வராஜா என்றால் அது மிகையல்ல. எமது இதயங்கள் ‘லப்’, ‘டப்’, ‘லப்’, ‘டப்’ என்று அடித்தால் நூலகவியலாளர் செல்வராஜாவின் இதயம் மட்டும் ‘வா’, ‘சி’, ‘வா’, ‘சி’ என்று தான் அடிக்கும். இதனை அவர் புலம்பெயர்ந்து வாழ்கின்ற நாடுகளில் உள்ள ஆங்கிலேய நூலகங்கள் கூட அறிந்து கௌரவித்துள்ளன. அவருக்கு கிடைத்துள்ள கௌரவங்களை பட்டியல் இடுவது இக்கட்டுரையின் நோக்கமல்ல. ஈழத் தமிழ் சமூகத்தின் மனநிலையை சற்றுத் தட்டி எழுப்புவதே இக்கட்டுரையின் நோக்கம். இக்கட்டுரை நூலகவியலாளர் என் செல்வராஜாவை தெரியாதவர்களுக்கு அவரை அறிமுகப்படுத்துவதல்ல.

நூலகவியலாளர் என் செலவராஜாவுக்கும் எனக்குமான உறவு எனது எழுத்துக்களுக்கும் எனக்குமான உறவுவரை நீண்டது. தந்தையும் தனயனுமாக, நல்ல நண்பர்களாக, நல்ல எதிரிகளாக நட்பும் பகையும் கொண்டது. நாங்கள் இருவருமே எதிரும் புதிருமான சமூக அரசியல் முகாம்களைச் சேர்;ந்தவர்கள். முரண்படுவோம் என்பதில் உடன்பாடுடையவர்கள். தமிழ் சமூகத்தில் மிகத் தட்டுப்பாடான கிடைத்தற்கரிய ஒரு உறவுமுறை. முரண்படுவதற்காக உடன்பாடு.

நூலகவியலாளர் என் செல்வராஜா ஒரு கடைந்தெடுத்த நல்லதொரு தமிழ் தேசியவாதி. அதனை முழுமையாக நம்பியவர். நம்புகிறவர். அதனையே நம்புபவர். ஆனால் தமிழ் தேசியவாதிகளாக தங்களைக் காட்டிக்கொள்கின்ற அரசியல்வாதிகள், வியாபாரிகள், கோயில் வியாபாரிகள், கல்வியியலாளர்கள் போன்று இவர் தன்னுடைய தேவைகளுக்காக தமிழ் தேசியத்தை போர்த்துக்கொண்டவரல்ல. அதனால் இவருடைய முதுகெலும்பிலும் சற்று கூடுதலான தமிழ் தேசியம் உள்ளது. அதனால் வளைந்துகொடுக்க அது இடம்கொடுப்பதில்லை. இதனால் போலித் தமிழ் தேசியவாதிகளும் இவருக்கு முன் புன்சிரிப்பைத் தவழவிட்டாலும் இவருடன் நீண்டதூரம், நீண்ட காலம் பயணிப்பதில்லை. நூலகவியலாளர் என் செல்வராஜாவின் தமிழ் நூல்கள் பற்றியும் நூலகம் பற்றியும் ஒரு காதால் கேட்டு மற்றைய காதால் விட்டுவிடுவார்கள். ஆக மிஞ்சிப் போனால் கூட்டத்திற்குக் கூப்பிட்டு ஐந்து பவுணுக்கு பொன்னாடை போர்த்தி ஒரு படம் எடுத்துவிட்டு அனுப்பி விடுவார்கள்.

1963இல் அமெரிக்க சிவில் உரிமைப் போராளி மார்டின் லூர்தர் கிங்க்கின் ‘எனக்கு ஒரு கனவு உண்டு…’ என்ற உரை ஒடுக்கப்பட்ட ஆபிரிக்க அமெரிக்கர்களைத் தட்டி எழச் செய்தது. அவ்வாறே நூலகவியலாளர் என் செல்வராஜாவுக்கு ஒரு கனவு இருக்கின்றது. ‘தமிழர்களுக்கு என்றொரு ஆவணக்காப்பகம்’ தான் என் செல்வராஜாவுடைய கனவு. இந்தக் கனவுக்காக அவர் சில பத்து ஆண்டுகளாக அயராது உழைக்கின்றார். ஆனால் இதுவரை அவருடைய கனவு மெய்ப்படுவதற்கான எவ்வித சமிக்ஞைகளும் தெரியவில்லை. வர்த்தகர்கள், கோயில்காரர்கள், முதலீட்டாளர்கள், சாதாரணர்கள் எனப் பலரோடும் பேசியும் அவருடைய கனவு ஒரு கையேட்டிற்குள்ளேயே குறுக்கப்பட்டுவிட்டது. இன்னும் கொஞ்சக்காலம் போனால் நூலகவியலாளர் என் செல்வராஜா லைப்ரொபிரினியா (librophrenia) வால் பாதிக்கப்பட்டுவிட்டார் என்று சொல்லிவிடுவார்கள்.

யாழில் பெப்பரவரி 9 நடைபெற்ற இசைக் கலைஞர்களின் நிகழ்வுகளுக்கு பல கோடிகள் செவிடப்பட்டது. அமெரிக்க பங்குச் சந்தையைக் கலக்கிய தமிழர் சில செக்கன்களில் பலநூறு கோடிகளை இழந்தது பற்றி விதந்துரைக்கின்றார், தென்னிந்திய சினிமாவின் ஈழத் தயாரிப்பாளர் படங்களுக்கு பல நூறு கோடிகளை கொட்டுகின்றார், ஹொட்டலியர்கள் பல பத்துக் கோடிகளை அள்ளி வீசுகின்றனர், இவர்கள் வரிசையில் இன்னும் பல பல கோடிகளை விசுக்க இன்னும் பலர் வரிசையில் காத்துக்கிடக்கின்றனர். கோயில் கடைக்காரர்கள் பல கோடிகளை வாரி இறைக்கின்றனர். இவர்களெல்லோருமே தங்களின் பரம்பரையே செலவழிப்தற்கு தேவையான சொத்திலும் அதிகமான சொத்துக்கள் தங்களிடம் உள்ளது என்றும் தாயகத்தை வைத்து தாங்கள் உழைக்கத் தேவையில்லை என்றும் கூறுகின்றனர். உண்மையாகவா?

அப்படியானால் நீங்கள் ஏன் நீண்ட காலப் போக்கில் ‘ஈழத் தமிழ் மக்களின் வரலாற்றை என்றென்றைக்கும் காக்கும் ஒரு ஆவணக் காப்பகத்தை புலம்பெயர் தேசமொன்றில் உருவாக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது? யாழ் நூலகம் அழிக்கப்பட்டு எமது வரலாற்று ஆவணங்கள் அழிக்கப்பட்டது போன்ற நிலை எதிர்காலத்திலும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே புலம்பெயர் தேசமொன்றில் ‘தமிழ் ஆவணக்காப்பகம்’ ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்கிறார் நூலகவியலாளர் என் செல்வராஜா. அவருடைய நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுத் தொகுப்புக்கு “நினைவுகளே எங்கள் கேடயம்” என்று பெயரிட்டுள்ளார். இந்தத் தலைப்புக்கு பின்னுள்ள ஆழமான கருத்தாக்கத்தை ஈழத்தமிழர்கள் நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு மனித ஆளுமையின் உருவாக்கத்தில் அவனுடைய வரலாறு மிக முக்கியமானது. வுரலாற்று ஆவணங்கள் மட்டுமே எங்கள் நினைவுகளை பாதுகாக்கும் கேடயங்கள். அவற்றை இத்தலைமுறையில் பாதுகாக்கத் தவறினால் ஈழத்தமிழர்களின் கடந்த 50 வருடகால போராட்ட வரலாறு தனிமனிதர்களின் இறுதித் தீயோடு அதுவும் சங்கமமாகி விடும்.

நூலகவியலாளர் என் லெ;வராஜாவினை போலித் தேசியவாதிகள் கருத்தில் கொள்ளாததை விட்டுவிடலாம் ஆனால் தேசியத்தை உண்மையில் நம்புகின்ற விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரும் கூட நூலகவியலாளர் என் செல்வராஜாவை திட்டமிட்டு புறக்கணிப்பது தமிழ் தேசியத்தின் மிகமோசமன குழறுபடி. அப்படிப்பட்ட தமிழ் தேசியவாதிகள் யார்? தமிழ் தேசியம் என்றால் என்ன? அந்த தமிழ் தேசியத்தை யார் முன்நிறுத்துகின்றனர் என்ற விவாதம் எப்போதும் இருக்கத்தான் போகின்றது. அதற்குள் இக்கட்டுரையை நான் நுழைய அனுமதிக்கவில்லை.

ஏற்கனவே இக்கட்டுரையில் குறிப்பிட்டது போல கடந்த 50 ஆண்டுகளில் நூல்களுக்கும் நூலகங்களுக்கும் உள்வாழ்ந்தவர் நூலகவியலாளர் என் செல்வராஜா. ஈழத்தமிழ் நூல்கள் அல்லது நூலகம் பற்றி பேசுகின்ற ஆய்வாளர்கள் எழுத்தாளர்கள் என் செல்வராஜாவை கண்டுகொண்டிருக்காவிட்டால் அது அவர்களுடைய ஆய்வின் எழுத்தின் மிகப்பெரிய பலவீனம். பல்கலைக்கழக துறைசார் ஆய்வுகளை மேற்கொள்பவர்களுக்கு அவர்களின் வழிகாட்டிகள் அத்துறைசார் ஆளுமைகளின் நூல்கள், ஆய்வுக்கட்டுரைகளை உள்ளடக்குமாறு நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கும் என்பதனை பலகலைக்கழகம் சென்ற அல்லது துறைசார் ஆய்வுகளை மேற்கொண்ட எவரும் அறிந்திருப்பர்.

தற்போது மிகப்பெரு முயற்சியில் ஒரு மெய்நிகர் (ஒன்லை லைப்ரரி) உருவாக்கப்பட்டுள்ளது. உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய மிக முக்கிய பணி;. ஈழத்தமிழர்களுடைய வரலாற்றில் மிகவும் போற்றப்பட வேண்டிய ஒரு செயற்பாடு. அதிலுள்ள ஒவ்வொருவருடைய பணியும் உழைப்பும் மிகப்பயனுள்ளது. ஒரு அறிவியல் அமைப்பானது நீண்டகாலத்தில் வளர்ச்சியை நோக்கிச் செல்ல வேண்டுமானால் அது தொடர்ந்தும் அறிவியல் சார்ந்தவர்களை இணைத்துக்கொண்டு அவர்களையும் உள்வாங்கி பயணிக்க வேண்டும். யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடம் போல் திறமையானவர்கள் உள்ளே நுழைவிடாது அந்நிறுவனத்தை குட்டிச் சுவராக்குவது அழகல்ல.

ஆம் ‘நூலகம் பவுண்டேசன்’ என்ற இந்த மெய்நிகர் நூலகம் நூலகவியலாளர் என் செல்வராஜாவின் ஐம்பது ஆண்டுகள் விதைத்த கருத்துக்களின் மேல் கட்டப்பட்டிருந்த போதும் அந்நூலகத்தில் அவர் உள்வாங்கப்படாதது, நூலகம் பவுண்டேசனின் மிகப்பெரும் பலவீனம். வடக்கிலும் கிழக்கிலும் மெய்யான இரு நூலகங்களின் உருவாக்கத்தில் அதன் வளர்ச்சியில் ஒரு தூணாக நின்றவரை இந்த மெய்நிகர் நூலகம் உள்வாங்காதது ஏன்? அதன் பின்னணியில் உள்ள அரசியல் என்ன?

இது தான் தமிழ் சமூகத்தின் சாபக்கேடு. தமிழ் மக்கள் ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும். ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற கூக்குரல்கள் எனக்கு நினைவு தெரிந்த காலம் முதல் கேட்டுக்கொண்டே உள்ளது. இந்த வெற்றுக் கூக்குரல்களை நான் ஒரு போதும் பொருட்டிலும் எடுப்பதில்லை. இந்தக் கூக்குரல்கள் அர்த்தமற்றவை. ஏனெனில் ஒரு சமூகம் முன்னோக்கி நகர்வதற்கு முரண்பாடுகள் அவசியம். அவை பகைமுரண்பாடுகள் இல்லாமல் மக்களின் பொதுநன்மை கருதி சமூகத்தை முன்தள்ளிச் செல்லும்வரை அந்த முரண்பாடுகள் ஆரோக்கியமானவையே. ஆனால் நூலகவியலாளர் என் செல்வராஜா ஏன் மெய்நிகர் நூலகம் பவுண்டேசனுக்குள் உள்வாங்ககப்படவில்லை என்பது மிகவும் சின்னத்தனமானது.

மெய்நிகர் நூலகம் பவுண்டேசன் உருவாக்கத்திற்கு தமிழ் தேசியம் ஒரு கணிசமான தொகையினை பத்மநாப ஐயரிடம் வழங்கி இருந்தது. இந்த நூலகத்திட்டத்திற்கு சசீவன், கோபி உட்பட கணணித்துறையில் தீவிர ஈடுபாடுடைய சில இளைஞர்கள் ஈடுபட்டு வந்தனர். இவர்களின் இந்த முயற்சியே மெய்நிகர் நூலகத்தின் வளர்ச்சி. இன்று இந்நூலகத்தில் சில பத்துப்பேர் பணியாற்றுகின்றனர். நினைத்தற்கரிய காரியங்களை இவர்கள் சாதித்துள்ளனர். ஆனால் இந்நூலகத்தினை ஆளுமை செய்வதில் இன்றும் பத்மநாப ஐயரின் செல்வாக்கு கணிசமானது. அதற்கு முக்கிய காரணம் அந்நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கான நிதியை அவரே பல வகையிலும் கொண்டுவந்து சேர்க்கின்றார். என் செல்வராஜாவின் வேண்டுகோளுக்கு இணங்க ஈவிலிங்ரத்தினம் இன்ஸ்ரிரியூற்றின் நூல்களைக் கணணிப்படுத்துவதற்கான செலவீனத்தை லிற்றில் எய்ட்டே பொறுப்பெடுத்தது. அதற்கான கோரிக்கையை பத்மநாப ஐயரே என்னிடம் கேட்டிருந்தார்.

பத்மநாப ஐயர் பல்வேறு முரண்பாடுகளோடும் நீண்டகாலமாக பகையாகவும் நட்பாகவும் உள்ள கண்ணியமான மனிதர். தனக்காக என்றொரு வாழ்க்கை இல்லாமல் புத்தகங்களோடு வாழ்பவர். அவர் வீட்டில் தடக்கி வீழ்ந்தால், நிச்சயமாக புத்தகத்தில் தான் தடக்கி விழ வேண்டும். வாழ்க்கையின் இறுதிக் காலத்தில் உள்ள அவரின் பின் அவருடைய புத்தகங்களுக்கு என்ன ஆகும் என்பது அவருக்கும் தெரியுமா தெரியாது. ஆனால் பத்மநாப ஐயர் கேள்விஞானி மட்டுமே. அவர் ஒரு புத்தகத்தையாவது முழுமையாக வாசித்திருப்பாரா என்பது தெரியாது. ஆனால் அவர் எழுத்தாளர்களையும் வாசகனையும் அவர்களுக்குத் தேவையான புத்தகங்களுடன் இணைத்துவிடுவதில் மிகச் சிறந்த மனிதர். அவர் என் செல்வராஜா போன்று தன்னை ஈழத்துடன் மட்டும் மட்டுப்படுத்திக் கொள்ளாதவர். அதனால் அவருக்கு தமிழகத்தில் உள்ள எழுத்தாளர்கள் பதிப்பாளர்களுடனும் நெருங்கிய தொடர்பு உண்டும். அந்த வகையில் பத்மநாப ஐயர் எழுத்தாளர்களுடன், வாசகர்களுடன் புத்தகங்களை இணைத்து விடுகின்ற ஒரு சிறந்த நூல்முகவர்.

இந்த இரு ஆளுமைகளுமே தமிழ் தேசியவாதிகள் தான். இந்த இரு ஆளுமைகளுமே ஒரே இலக்கை நோக்கியே நீண்ட தூரம் பயணித்துள்ளனர். தற்போது இருவருமே வாழ்க்கையின் கடைப்பக்கதில் பயணிக்கின்றனர். இவர்கள் இருவருடைய உழைப்பும் தமிழ் மக்களின் ஆவணங்களை பாதுகாக்கின்ற பணிக்கு மிக அவசியமானது. இவர்களிடையே சில தனிமனித முரண்பாடுகள் இருந்தாலும், இவ்விரு ஆளுமைகளிடையேயும் பொது உடன்பாடுகளே அதிகம். தனிமனித முரண்பாடுகளைக் களைந்து தமிழ் தேசியத்தின் தமிழர்களின் வரலாற்று ஆவணங்களை பேணிப்பாதுகாக்கின்ற மெய்நிகரான நூலகம் பவுண்டேசனில் இணைந்து செயற்பட வேண்டும். துறைசார் திறமையும் ஆளுமையும் உடையவர்கள் தமிழ் மக்களின் படைப்புகளையும் ஆவணங்களையும் பேணிப்பாதுகாக்கின்ற செயற்பாடுகளில் இணைந்து செயற்படுவதன் மூலம் சினெர்ஜியை – மேல்கூட்டுத்திறனை உருவாக்க வேண்டும்.

வரும் ஞாயிறு பெப்ரவரி 18 இல் திரள் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள என் செல்வராஜாவின் “நினைவுகளே எங்கள் கேடயம்!” என்ற யாழ்ப்பாணத்தில் நான்காவது உலகத் தமிழாரய்ச்சிமன்ற நிகழ்வுகளில் நடைபெற்றது என்ன என்ற ஆவணங்களின் தொகுப்பு நூல் வெளியீடு லண்டனில் நோர்த்ஹோலில் நடைபெற உள்ளது. ஈழத்தமிழர்களுடைய வரலாறு அழிந்து போய்விடாமல் தூசி தட்டி எடுத்து ஆவணமாக்கும் நூலகவியலாளர் என் செல்வராஜாவின் தமிழர்களுக்கு என்றொரு ஆவணக்காப்பகம் வேண்டும் என்ற கனவை நாம் ஒவ்வொருவரும் காணும்போது மட்டுமே ஈழத்தமிழர்களுடைய வரலாறுகள் அதன் உண்மைத்தன்மையின் அடிப்படையில் பாதுகாப்பதற்கான காலம் கனியும்.

லண்டன் சைவ மாநாடு ஒரு பார்வை

ஒரு சமூகம் புலம்பெயர்ந்து செல்லும் போது அந்த சமூகத்தினுடைய கலாச்சார பாரம்பரியங்களையும் அது சுமந்தே செல்கின்றது. ஒருவருடைய அடையாளம் என்பது இந்த சமய, கலாச்சார விழுமியங்களும் இணைந்தது தான். புலம்பெயர்ந்த தமிழர்கள் எங்கே தங்கள் அடையாளத்தை இழந்து அடையாளமற்ற மனிதர்களாக உலகில் உருவாகிவிடுவமோ என்ற அச்சத்தில் புலம்பெயர்ந்த மண்ணில் தங்கள் சமய, கலாச்சார விழுமியங்களை இறுக்கிப் பிடித்தனர். இது தங்கள் அடையாளத்தை இழந்துவிடுவோம் என்ற அச்ச உணர்வினால் உந்தப்பட்டதன் விளைவு. ஆயிரத்து தொளாயிரத்து எண்பதுக்களில் பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் பிரித்தானியாவில் தங்களுக்கான வழிபாட்டுத்தலங்களை நிறுவ முயன்றனர்.

தாயகத்தில் வீடுகளில் சாமியறை என்றொன்னு இருக்கும். ஆனால் புலம்பெயர் தேசத்தில் சாமிக்கு ஒரு அறையை ஒதுக்க பொருளாதாரம் இடம்கொடாது. சாமிக்கு ஒதுக்கும் அறையை வாடகைக்கு விட்டால் நாலு காசு வரும் என்ற நிலையே புலம்பெயர் தேசத்தில் உள்ளது. அதனால் பெரும்பாலும் படிகளுக்கு கீழே, அல்லது கொரிடோரில் ஒரு தட்டை அடித்து அதில் சாமியை வைத்துவிடுவார்கள். ஆரம்பநாட்களில் வானில் சாமிப்படத்தை கொண்டுவந்து வானை வடக்கு நோக்கி ரிவேர்ஸ் பண்ணிவிட்டு பூசைகள் நடத்திய கதைகளும் உண்டு. மோபைல் கோயில்கள். காலங்கள் உருண்டோட வருமானம் போதாததாலட கிறிஸ்தவ தேவாலங்கள் தமது கட்டிடங்களை விற்க ஆரம்பித்தன. தவறணைகளும் நட்டத்தில் ஓட ஆரம்பித்ததால் அவற்றை விற்க ஆரம்பித்தன. ஒன்றோடு ஒன்று முற்றிலும் முரண்பட்ட இந்த சமூக நிறுவனங்களுக்கு மக்கள் கூடுவதற்கான அனுமதி இருப்பதால் அவற்றை வாங்கி கோயில்களைக் கட்டுவது ஒரு ரென்ட்டாகி விட்டது. இவ்வாறு கோயில்கள் உருவாகி லண்டனில் தற்சமயம் நாற்பது கோயில்கள் வரை உள்ளன. அவற்றில் ஈஸ்ற்ஹாம் முருகன் கோயில், ஈஸ்ற்ஹாம் மகாலட்சுமி கோயில் இரண்டும் மட்டும் இலங்கைத் தமிழர்களின் கட்டுப்பாட்டில் இல்லை.

ஈஸ்ற்ஹாம் முருகன் கோயில் தவிர்ந்த ஏனைய தமிழ் கோயில்களில் சாமி வெளிவீதி சுற்றுவதற்கே இடமில்லை. திருவிழா காலங்களில் மட்டும் உள்ளுராட்சிமன்றில் அனுமதி பெற்று சாமி வீதிக்கு வரும். இவ்வாலயங்கள் அனைத்தும் திருவிழாக்களை எப்படியாவது செய்துவிடுவார்கள். இல்லையேல் ஆலயத்தினது வருமானமும் கௌரவமும் பாதிக்கப்படும். இந்த நாற்பது ஆலயங்களுமே பெரும்பாலும் திட்டமிடல் இல்லாமல் வாய்க்கின்ற இடத்தை எடுத்து கோயிலாக்கப்பட்டுள்ளது. அதனால் இவ்வாலயங்கள் குடிமனையான இடங்களிலேயே உள்ளன. அதலால் இவ்வாலங்களில் பெரும்தொகையானவர்கள் கூடுவதற்கான வசதிகள் மட்டுப்படுத்தப்பட்டே இருக்கும். மேலும் குடியிருப்பாளர்களுக்கும் இவ்வாலயங்களுக்கும் இடையே முரண்பாடுகள் அடிக்கடி ஏற்படும். தங்கள் பகுதிகளில் கார் நிறுத்துவதில் நெருக்கடி, அதீத சனநடமாட்டம், சத்தம் என குற்றச்சாட்டுகள் எழும்.

இப்பின்னணியில் லண்டன் திருக்கோயில்களின் ஒன்றியம் தனது 22வது வருடாந்த மாநாட்டை நடாத்த வழமை போல் யூன் 18, 19ம் திகதிகளில் ஏற்பாடு செய்துள்ளது. அரசியல் வாதிகள், நடிகர்கள், பாடகர்கள், தேவாரம் திருவாசகம் பாடுபவர்கள், சொற்பொழிவாளர்கள் என்று ஒரு பல்சுவை மசாலா நிகழ்வாக அது இடம்பெறும். ஆனால் கடந்த 22 ஆண்டுகளில் லண்டன் ஆலயங்கள் குறிப்பிடத்தக்கதாக எதையும் சாதித்து இருக்கின்றனவா என்றால் . இவ்வாலயங்கள் இருக்கின்றது என்பதனைக் உறுதிப்படுத்துவதற்காகவும் தாங்களும் இவ்வாறானதொரு நிகழ்ச்சியை நாடாத்துகின்றோம் என்று காட்டுவதற்கு அப்பால் இவ்வாலயங்கள் என்ன செய்கின்றன என்பது அவ்வாலயங்களின் நிர்வாகத்திற்கே வெளிச்சம்.

தனித்தனி ஆலயங்களாக ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம், வோல்தம்ஸ்ரோ கற்பக விநாயகர் ஆலயம் என்பன தாயக உறவுகளுக்கு கணிசமான உதவிகளை மேற்கொண்டு வருகின்றன. மற்றும்படி ஏனைய ஆலயங்கள் அவ்வாறான உதவிகளைப் பெயரளவில் மட்டுமே மேற்கொள்கின்றன. இவ்வுதவிகள் கூட தாயகத்தின் வாழ்நிலை முன்னேற்றத்தில் மாற்றங்களைக் கொண்டு வருகின்றதா என்றால் அதுவும் கேள்விக்குறியே.

வெறும் பேச்சுக்காக தமிழும் சைவமும் ஒன்றென்று முழங்கும் திருக்கோயில்கள் ஒன்றியம் தமிழுக்கோ சைவத்துக்கோ கடந்த கால்நூற்றாண்டில் என்ன செய்தார்கள் என்ற மதிப்பீட்டைச் செய்ய வேண்டும். ஒரு சுப்பர்மாக்கற் நடத்துவது போலவே லண்டனில் உள்ள இந்த ஆலயங்கள் செயற்படுகின்றன.

இவர்களுடைய வருடாந்த நிகழ்வு கூட ஒரு கலை நிகழ்ச்சி என்பதற்கு அப்பால் செல்வதில்லை. புலம்பெயர் மண்ணில் தமிழையோ சைவத்தையோ எப்படி வழக்கப் போகின்றனர் என்ற எந்தத் திட்டமிடலும் சிந்தனையும் இல்லை. அதற்கான பார்வையும் இவர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை.

லண்டனில் உள்ள ஆலயங்கள் அவைகள் தனிநபர்களுடைய ஆலயங்களாக இருந்தாலென்ன பொது ஆலயங்களாக இருந்தாலென்ன அவற்றிடம் தூரநோக்கு இருப்பதாகத் தெரியவில்லை. ஏதோ கோயிலை நடத்துகிறோம் திருவிழாச் செய்கின்றோம் என்பதோடு சரி. அடுத்த தலைமுறைக்கு எமது வரலாற்றை எவ்வாறு கைமாற்றப் போகின்றோம் என்பது பற்றி அவர்களிடம் எவ்வித சிந்தனையும் இல்லை. இன்று வரையும் தமிழுக்கும் சைவத்துக்குமான ஒரு ஆவணக்காப்பகமோ ஆய்வு நிறுவனமோ கிடையாது.

ஆலயங்கள், புலம்பெயர்ந்த அடுத்த தலைமுறையினர் மத்தியில் தமிழ் மற்றும் சைவம் பற்றிய எவ்வித விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தவில்லை. இது விடயமாக நூலகவியலாளர் என் செல்வராஜா பலரையும் அணுகி இருந்தார். தனது கருத்துக்களையும் தெரியப்படுத்தி இருந்தார். அவர் ஒரு தனி மனிதனாக 20,000க்கும் அதிகமான இலங்கைத் தமிழ் நூல்களைத் தொகுத்து தனது சொந்த முயற்சியிலும் உழைப்பிலும் அவற்றை வெளியிட்டுவிருகின்றார். நாற்பது ஆண்டுகளுக்கு முன் தீக்கிரையான யாழ்ப்பாணப் பொது நூலகம் எப்போது தீக்கிரையானது என்பதே திரிபுபடுத்தப்பட்ட நிலையில் 1981 மே 31இல் தீக்கிரையான யாழ்ப்பாணப் பொது நூலகத்தின் வரலாற்றை தனி மனிதனாக தமிழிலும் ஆங்கிலத்திலும் தொகுத்து வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு ஆலயமும் ஒரு நூலகத்தை வைத்திருக்காவிட்டாலும் இந்தத் திருக்கோயில்கள் ஒன்றியம் ஒரு ஆவணக்காப்பகத்தை உருவாக்கி தமிழினதும் சைவத்தினதும் வரலாற்றை பாதுகாக்க வேண்டும். மேலும் அடுத்த தலைமுறையினருக்கு எமது வரலாற்றை கைமாற்றுவதற்கான காத்திரமான ஆய்வு செய்யப்பட்ட தரமான நூல்கள் கொண்டுவரப்பட வேண்டும். ஆனால் அதற்கான எவ்வித முயற்சிகளிலும் இத்திருக்கோயில்கள் ஒன்றியம் ஈடுபடவில்லை.

இப்பொழுது முதுமையை எட்டும் இந்தத் திருக்கோயில்களின் உறுப்பினர்கள் தற்போது அவர்களது அந்திம காலத்தை நெருங்குகின்றனர். இவர்களுக்குப் பின் இவர்களுடைய வாரிசுகள் யாரும் இந்த காளாஞ்சிக் கெடுபிடிக்கு வரப்போவதில்லை. அடையாளம் இல்லாத சிலர் தங்களிடம் உள்ள டாம்பீகத்தை பறைசாற்ற கோயில்களுக்கு வருவார்களேயல்லாமல் அடுத்த தலைமுறையினரில் கோயில்களின் எதிர்காலம் கேள்விக்குறியே. ஏற்கனவே லண்டனுக்கு வெளியே உள்ள கோயில்கள் ஒன்றிரண்டு நாளாந்த செலவுகளை ஈடுசெய்ய முடியாமல் திண்டாடுகின்றன. மேலும் தற்போதைய விலைவாசி உயர்வு பொருளாதார வீழ்ச்சியும் ஆலயங்களின் வருமானத்தையும் கணிசமான அளவு பாதிக்கும்.

இந்நிலையில் வெளியில் இருந்து பல்லாயிரங்களைக் கொட்டி ஏற்பாடு செய்யப்படும் இந்த வருடாந்த நிகழ்வுகள் அது முடிந்த சில நிமிடங்களிலேயே அர்த்தமற்றதாகிவிடும். இந்நிகழ்வுகள் சைவத்தையும் தமிழையும் விஞ்ஞானபூர்வமாக ஆய்வுசெய்யும் மாநாடுகளாகவும் அம்மாநாட்டின் அறிக்கைகள் ஆவணங்களாகவும் கொண்டுவரப்பட்டு இருந்தால் இம்மாநாடுகள் மிகக் கனதியானவையாக இருந்திருக்கும்.

இத்திருக்கோயில்கள் ஒன்றியத்தால் அதனைப் பற்றிச் சிந்திப்பதற்கான வாய்ப்பே இல்லை. அதற்கு முக்கிய காரணம் இந்த ஆலயங்களில் ஆளுமை செலுத்துபவர்களிடம் அதற்கான அறிவுநிலையோ சிந்தனையோ கிடையாது. தலைப்பாகையைக் கட்டி காளாஞ்சி வாங்குவதற்கு அப்பால் அவர்கள் இதுவரை சிந்திக்கவில்லை.

இவர்களது குறுகிய சிந்தனைகளை வைத்து தங்களை சைவப் பெரியார்கள் எனச் சொல்லிக்கொள்ளும் ஆறுதிருமுருகன், கம்பவாருதி போன்றோர் வெளிநாடுகளுக்கும் வந்து வசூல் செய்துகொண்டு திரும்புகின்றனர். ஆறுதிருமுருகனின் திருவிளையாடல்கள் “யாழ் பல்கலைக்கழகம்: ஒரு பார்வை” என்ற நூலில் விரிவாக தொகுக்கப்பட்டு உள்ளது. புலம்பெயர்ந்த தமிழர்களை குறைத்து மதிப்பிட்டதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனே அடுத்த மாவீரர் உரையில் அவர்களைப் புகழ வேண்டியதாகிவிட்டது. அப்படியிருக்கு “வாராதே வரவல்லாய்” என்று கம்பவாருதி ஜெயராஜ் மல்லிகையில் எழுதிய கட்டுரைக்கு “வம்பவாரிசு ஆருக்கு வைக்கிறார் ஆப்பு”, “ஒரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சு” என்ற தலைப்பில் தேசம் சஞ்சிகையில் 2004இல் கட்டுரைகள் வெளிவந்தன. இவர்கள் சமூக மேம்பாட்டிற்காக தாயகத்தில் குறிப்பிடத்தக்க சேவைகள் எதனையும் வழங்கவில்லை.

சில மாதங்களுக்கு முன் ஜெயராஜ் சக்தி தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலிலும் புலம்பெயர்ந்தவர்களின் குடும்ப உறவுகள் மிகச் சிதைந்து இருப்பதாக கம்பவாருதி ஜெயராஜ் குறிப்பிடுகின்றார். அதில் உண்மையில்லாமல் இல்லை. ஆனால் ஜெயராஜ் வாழ்கின்ற தாயகத்தில் கல்வி மிகக்கீழ் நிலைக்குச் சென்றுள்ளது, இளவயதுத் திருமணங்கள் அதிகரித்து விட்டது, அதன் தொடர்ச்சியாக குடும்ப உறவுகள் சிதைந்து வருகின்றது, திருமணமாகாமலேயே குழந்தைகள் தாய்மை அடைகின்றனர், திருமணத்திற்கு அப்பாலான உறவுகளும் அதிகரித்து வருகின்றது. அப்படிப்பட்ட மண்ணில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களை ஊக்கப்படுத்தும் ஒரு உரைக்கு கம்பவாருதி ஜெயராஜ் குழவிற்கு ஒரு லட்சம் செலவாகும் என நிதி திரட்டப்பட்டது. இப்போது கிளிநொச்சியில் கலைக்கூடம் அமைக்கவும் நிதி திரட்டப்படுகின்றது. இதே போல் ஆறுதிருமுருகனும் அடிக்கடி அடிக்கல் நாட்டுகிறார் கட்டிடங்கள் கட்டுகின்றனர். ஆனால் அதனைப் பயன்படுத்த வேண்டிய இளைய தலைமுறை பற்றி இவர்களிடம் எவ்வித பார்வையும் இல்லை. அடிக்கல் நாட்டுவது, கட்டிடம் கட்டுவது, அதன் பின் அது தேடுவாரற்று கிடக்கும். இதுதான் அண்மைக்காலமாக நடைபெற்று வருகின்றது. புலத்தில் இருந்து வசூலிக்கப்படும், திரட்டப்படும் வழங்கப்படும் நிதி பெரும்பாலும் இதுவரை விழலுக்கு இறைத்த நீராகவே ஆனது. ஒரு வகையில் ஆறுதிருமுருகன், கம்பவாருதி ஜெயராஜ் போன்றவர்களை வளர்க்கவும் தாயகத்தில் சமூகச் சீரழிவிற்குமே புலம்பெயர் பணம் பெரும்பாலும் பயன்பட்டது.

பிரபல்யமானவர்கள் என்பதற்காக அவர்களுக்கு வாரி இறைப்பதினால் சமூகத்திற்கு எந்தப்பலனும் கிடைப்பதில்லை. ஆளுக்கொரு பிரபலத்தை கொண்டு திரிந்து எமது சமூகப் பிரச்சினையை தீர்க்க முடியாது. இவைகளையுணர்ந்து நீண்டகால நோக்கில் சிந்தித்துச் செயற்பட அனைவரும் முன்வர வேண்டும். தற்போது தங்கள் கடைசிக்காலத்திலாவது, தங்கள் பெயர் சொல்லும் வகையில் காலத்தால் அழியாமல் இருக்க தமிழுக்கும் சைவத்துக்கும் பிரித்தானியாவில் ஒரு ஆவணக்காப்பகத்தை அமைக்க இத்திருக்கோயில்களின் ஒன்றியம் முன்வரவேண்டும்.

 

லிற்றில் நூலகத் திறப்பும் நூலகர்களுக்கான பாராட்டும்!!!

யாழ் பொதுசனநூலகத்தின் ஓய்வு பெற்ற பிரதம நூலகர் ச தனபாலசிங்கம் அவர்களினதும் சுன்னாகம் பொதுநூலகப் பிரதம நூலகர் ஜெயலட்சுமி சுதர்சன் அவர்களினதும் நூலக சேவையை கௌரவிக்கும் நிகழ்வு லிற்றில் நூலகத் திறப்பு நிகழ்வு இற்று சிறப்பாக இடம்பெற்றது. இன்று மார்ச் 13ம் திகதி கிளிநொச்சி திருநகரில் உள்ள லிற்றில் எய்ட் மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் மாணவர்கள், ஆசிரியர்கள், சிந்தனையாளர்கள் என 200 வரையானவர்கள் கலந்துகொண்டனர்.

லிற்றில் நூலகம் திருநகரைச் சுற்றியுள்ள பத்துவரையான கிராம மக்களிடம் வாசிப்பு பழக்கத்தை தூண்டும் நோக்கோடு ஆரம்பிக்கப்படுவதாக லிற்றில் எய்ட் நிறுவனத்தின் ஸ்தாபகர் த ஜெயபாலன் தெரிவிக்கின்றார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களோடு பொதுநூலகமாக ஆரம்பிக்கப்படுகின்ற இந்நூலகம் காலக் கிராமத்தில் வர்த்தகம், கணணி மற்றும் தையல் கலைக்கான நூலகமாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்பதே எமது நீண்டகாலத் திட்டம் எனவும் த ஜெயபாலன் தெரிவித்தார்.

தமிழ் பிரதேசங்களின் கல்வி வீழ்ச்சிக்கு பிரதான காரணங்களில் ஒன்றாக இருப்பது வாசிப்பை எம்மவர்கள் கைவிட்டது எனத் தெரிவித்த லிற்றில் எய்ட் இன் இயக்குநர் – இணைப்பாளர் ஹம்சகௌரி சிவஜோதி வாசிப்பு பழக்கத்தை தூண்டுவதன் மூலம் மாணவர்களின் சிந்திக்கும் ஆற்றலைத் தூண்ட முடியும் என்றும் அதனால் சிறார்களின் வாசிப்புப் பழக்கத்தில் தாங்கள் கூடுதல் கவனம் எடுக்க உள்ளதாகவும் அதற்காகா மாதாந்த வாசிப்பு வட்டம் ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். லிற்றில் நூலகத்திற்கான பயிற்சி நூலகராக கே இவாஞ்சலி பொறுப்பேற்றுள்ளார்.

லிற்றில் நூலகத்திற்கான திட்டம் நீண்டகாலமாக இருந்த போதும் அதற்கு செயல்வடிவம் கொடுத்தது அமரர் இராசமணி பாக்கியநாதனின் பிள்ளைகளே. உலகின் வெவ்வேறு பாகங்களில் அவர்கள் வாழ்ந்த போதும் தாயக மக்களின் எதிர்கால வாழ்வில் அக்கறைகொண்டு இந்நூலகத் திட்டத்திற்காக எட்டு இலட்சம் ரூபாய்கள் வரை வழங்கி உள்ளனர். நூலக அறையை வடிவமைப்பதுஇ அதற்கான தளபாடங்களை பெற்றுக்கொள்வதுஇ நூல்களைப் பெற்றுக்கொள்வது என்பனவற்றோடு பத்திரிகை வாசிப்புக்கான குடில் ஒன்றும் உருவாக்கப்பட்டு உள்ளது. பத்திரிகை வாசிக்க வருபவர்கள் நூலகத்திச் செயற்பாடுகளை பாதிக்காமல் இருப்பதற்காகவும் இடவசதிக்காகவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

லிற்றில் நூலகத்தை அமரர் இராசமணி பாக்கியநாதனின் முத்த புதல்வர் ஸ்ரீகுமார் பாக்கியநாதன் திறந்து வைத்தார். தற்போது மலேசியாவில் வாழ்கின்ற தொழிலதிபரான இவரோடு இவரது சகோதர சகோதரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொள்கின்றனர். லண்டனில் இருந்து லிற்றில் எய்ட் இன் தலைவர் கதிரமலை நந்தகுமார் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தனராகக் கலந்துகொண்டார். லிற்றில் எய்ட் தலைவர் க நந்தகுமார் லிற்றில் எய்ட் இன் செயற்திட்டங்களை பார்வையிடுவதுடன் லிற்றில் எய்ட்இன் மேற்பார்வையில் இயங்கும் முல்லைத்தீவில் உள்ள கற்சிலைமடுவின் குழந்தைகள் அமைப்பின் செயற்திட்டங்களையும் பார்வையிடுவார்.

இந்நூலகத் திறப்பு விழா நிகழ்வு ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர் சி இதயராசா தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் அ கேதீஸ்வரன் கலந்துகொண்டார். எழுத்தாளர் கருணாகரன் “ஏன் புத்தகங்கள்? எதற்காக வாசிப்பு?” என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினார். இந்நிகழ்வில் லிற்றில் எய்ட் மாணவர்களின் தயாரிப்பில் ஒரு குறும் நாடகமும் அரங்கேற்றப்பட்டது.
2009 மார்ச் 19இல் லண்டனில் உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்பட்ட லிற்றில் எய்ட் அமைப்பு அதற்கு முன்பிருந்தே தனது உதவிப் பணிகளை கடந்த 13 ஆண்டுகளுக்கு மோலாக மேற்கொண்டு வருகின்றது.

லிற்றில் எய்ட் இன் இந்த லிற்றில் நூலகத் திட்டத்தை மிகவும் வரவேற்ற நூலகவியலாளர் என் செல்வராஜா இந்நூலகம் கிளிநொச்சி – வன்னி மண்ணின் ஒரு சிறப்பு நூலகமாக வளரவேண்டும் என்று வாழ்த்தினார். அவர் வாழ்த்தியதோடு மட்டுமல்லாமல் நூலகப் பயிற்சிகளையும் ஆலோசணைகளையும் தொடர்ச்சியாக வழங்கிவருவதோடு நூல்களைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளுக்கும் உதவி வருகின்றார்.

ஸ்கொட்லாதில் உள்ள ‘புக் அப்ரோட்’ அமைப்போடு இணைந்து பல லட்ச்சக்கணக்கான குறிப்பாக சிறார்களுக்கான ஆங்கில நூல்களை குறிப்பாக தமிழ் பிரதேசங்களுக்கு கொண்டுவர முயற்சி எடுத்தவர் நூலகவியலாளர் என் செல்வராஜா. அப்பணியில் அவரோடு லிற்றில் எய்ட் இணைந்து பயணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. தற்போது சுகவீனமாக உள்ள அவர் பூரண சுகமடைந்து தனது நூலக சேவையைத் தொடர இயற்கை அன்னையை வேண்டுகின்றோம் என லிற்றில் எய்ட் சார்பில் அதன் இணைப்பாளர் ஹம்சகௌரி சிவஜோதி தெரிவித்தார்.

தெற்கில் நூல்களை வாரி வழங்கும் தமிழ் நேசகன்! : சந்தரெசி சுதுசிங்ஹ

என் செல்வராஜா ஒரு நூலகம்! தற்போது தெற்கில் அவரின் பெயரில் ஒரு நூலகம் உருவாகின்றது!

இலங்கையர்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்த பல்வேறு முயற்சிகள் பற்றி பத்திரிகைகளில் வெளிவந்து மறைந்த போதும் இலைமறை காயாக சில உறவுகள் தமிழ் – சிங்கள மக்கள் மத்தியில் மலர்ந்து நறுமணம் கமழ்கின்றது. 1981 மே 31 இரவு யாழ் நூலகம் எரிக்கப்பட்ட துன்பியல் நிகழ்வினால் தெற்கில் இன்றும் பலர் மனவேதனையிலும் வெப்பிகாரத்திலும் இருப்பதை நாம் புறந்தள்ளிவிட முடியாது. அப்படிப்பட்டவர்கள் இணைந்து நூலகவியலாளர் என் செல்வராஜாவின் வாழ்நாள் சேவையை கௌரவிக்கும் வகையில் அவருடைய பெயரில் தெற்கில் ஒரு சிறு நூலகம் அமைக்க முன்முயற்சிகள் எடுக்கப்படுகின்றனர். நூலகவியலாளர் என் செல்வராஜா பற்றி சந்தரெசி சுதுசிங்ஹ The Colombo Post என்ற இணையத்தில் வெளியிட்ட பதிவின் தமிழாக்கம் தேசம்நெற் இல் பிரசுரிக்கப்படுகின்றது.
._._._._._.

தெற்கில் நூல்களை வாரி வழங்கும் தமிழ் நேசகன்!

இந்தியா மீதுள்ள எனது பற்றை தகர்த்து என்னை தன் வசப்படுத்தி இந்திய நட்பை காட்டிலும் யாழ்ப்பாண உறவு பாலத்தை கட்ட வேண்டும் என்று மனதுக்குள் ஒலிக்கிறது. அந்த உறவை நினைக்கையில் விட்டுக்கொடுக்க முடியாத உணர்வு ஏற்படுகிறது. எனது உண்மையான உணர்வை மறைத்து மனதை அடக்கி வைக்க எனக்கு இஷ்டம் இல்லை. எனக்கு அவர் மீது காதல் தோன்றுகிறது? எவ்விடத்திலும் துணிச்சலுடன் அதை எடுத்துக்கூற தயங்கமாட்டேன். உறவு என்பது காதலை தவிர வேறு என்ன? அப்படிப்பட்ட நேசத்திற்குரிய மனிதரைப் பற்றிய பாசக் கதைதான்.

இக்கதையின் நாயகனை பற்றி கலாநிதி உருத்திரமூர்த்தி சேரன் என்னிடம் கூறினார். இடைவிடாது கேட்கும் கேள்விகளுக்கு பதில்களை கூறுவதும் அப்பதில்கள் உயிரோட்டம் கொண்டிருப்பதும் அவரது தனித்துமே. அப்படி ஒரு விடைக்காக அறிமுகப்படுத்திய மனிதர் தான் பல்லாயிரம் கேள்வி கனைகளுக்கு பதிலாக
இருப்பவர் தான் நடராஜா செல்வராஜா அவர்கள்.

செல்வராஜா என்பவர் இலங்கையில் மட்டுமல்லாமல் உலக நூலக வரலாற்றில் மிளிரும் தாரகை. அறிவு, மனிதநேயம் நிறைந்த படைப்பே இத்தாரகை. அவ்வப்போது எனக்கு தேவையான தகவல்களை இந்த பதில் கூறும் மனிதரிடம் பெற்றுக்கொண்டேன். இவர் இலங்கை திருநாட்டுக்கு மட்டுமல்லாது முழு ஆசிய பிராந்தியத்திற்குமே பெருமைக்குரிய சின்னமாக விளங்குகிறார். பிரித்தானிய வழங்கும் IPRA (பொதுமக்கள் தொடர்புக்கான விருது) என்ற விருதை பெற்ற முதலாவது இலங்கையாராகவும் ஆசிய இனமாகவும் இவர் கொண்டாடப்படுவதே இதற்கு காரணம். இவர் சர்வதேச அங்கீகாரம் பெற்ற நூல்களின் பட்டியலை தயாரித்தவரும் மனிதநேயம் கொண்ட மனிதர்களுக்கு முற்போக்கான பதிலும் இவரே.

நடராஜா செல்வராஜா:

அண்மை காலத்தில் இவர் வடக்கிலும் தெற்கிலும் நூலகங்களின் தொடர்பினை ஏற்படுத்தி கொடுத்த இவர் தன் தலையாய கடமையாக அதனைச் செய்தார். ‘வெள்ளவத்தையில் இந்த நூலகத்திற்குச் செல்லுங்கள், இதோ அந்த நிறுவனத்தின் தொலைபேசி இலக்கம், யாழ்ப்பாணத்தில் இதோ இந்த இடத்தில் தகவல்களை பெறலாம்’ என்று தங்கையை போல என்னை வழிநடத்திய இவர் யாழ்ப்பாண காதலின் இன்னுமொரு மைல்கல்லாக நிற்கின்றார்.

அண்மையில் நான் ‘புத்தகமும் நானும்’ என்ற நிகழ்ச்சியின் நெறியாளர் மஹிந்த தசநாயக்க பற்றி ஒரு குறிப்பை எழுதினேன். அதை பார்த்துவிட்டு அண்ணன் செல்வராஜா என்னையும் மஹிந்த அண்ணாவையும் அழைத்து சுவாரசியமான ஒரு கதையைச் சொன்னார்.

‘நான் உங்களுக்கு புத்தகங்களை தருகிறேன். ஆனால் அவற்றை வடக்கிலோ மலையகத்திலோ இருக்கும் தமிழ பிள்ளைகளுக்கு கொடுப்பதற்கு அல்ல. இங்குள்ள சிங்கள பிள்ளைகளுக்குத் தான் நான் அவற்றை கொடுக்கின்றேன் என்றார்’. அந்த பதில் எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர் ஆணித்தனமாக அதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். எங்கள் கேள்வி ஏக்கங்களுக்கு இவ்வாறு விளக்கம் கொடுத்தார்.

‘இதுதான் விஷயம். நான் “Book Abroad” நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக இலங்கைக்கு பெரும் எண்ணிக்கையான நூல்களை அனுப்புகிறேன். கொல்களன் கணக்கில் அனுப்புகிறேன். நாங்கள் வடக்கில் பிள்ளைகளுக்கு அவற்றை பகிர்ந்தளிக்கின்றோம். அதேபோல மலையகச் சிறுவர்களுக்கும் அனுப்புகிறோம். ஆனால் ஒன்றை மறந்துவிட்டோம் அதுதான், வடக்கிலுள்ள பிள்ளைகளுக்கு வெளிநாட்டிலிருந்து கொடையாளர்களிடமிருந்தும் இன்னும் பல வழிகளிலும் இப்படி புத்தகங்கள் கிடைத்தாலும் சிங்கள பிள்ளைகளுக்கு அரசாங்கமோ வேறு நிறுவனங்களோ இப்படி புத்தகங்களை வழங்குவதில்லை என்ற விடயம். அதனால் தான் சொல்கிறேன், இப்புத்தகங்களை பின்தங்கிய கிராம புறங்களைச் சேர்ந்த சிங்கள பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டுமென்று. நான் அனுப்புகின்ற புத்தகங்கள் தற்போது யாழ்ப்பாணத்தில் இருக்கின்றன. அவற்றை நான் தருகிறேன். அதேபோல ஆங்கில புத்தங்களுக்கு மேலதிகமாக சிங்கள புத்தகங்களை வாங்க நான் பணம் தருகின்றேன்’. இப்படி கூறிய அவரை கௌரவிக்கும் முகமாக நாங்கள் பின்தங்கிய கிராமங்களை தேடிச் சென்று புத்தகங்களை பெற்றுக்கொடுக்க பணியாற்றுவோம்.

நாங்கள் எப்போதும் நூலக வசதிகளே இல்லாத பாடசாலையைத் தேடிப் பிடித்து நூலகமொன்றை உருவாக்குவதற்கு முயற்சிப்போம். நன்றியுணர்வை வெளிப்படுத்துவதற்காக அவரது பெயரை ‘நடராஜா செல்வராஜா’ அந்நூலகத்திற்கு சூட்ட முடியுமென்றால் அதுவே இச்சமூகத்திற்கு சிறந்த ஒரு செய்தியாக அமையக்கூடும். வடக்கில் நூலகங்களுக்கு தீ வைத்த இருண்ட நினைவுகள் இருக்கும் தருவாயில், வடக்கிலிருந்து தெற்கிலுள்ள சிங்கள பிள்ளைகளுக்காக இதுபோன்ற கருணை காட்டுவதன் மூலம் வெளிப்படுத்தப்படுவது என்னவெனில், அவர்களுக்கும் எமக்கும் எவ்வித இடைவெளியும் இல்லை என்பதையும், எம்மிடையே பிரிவினை, மோதல் இருப்பதாக கூறிவரும் பலருக்கு அது தவறான புரிதல் என்பதை உணர்த்தும். தற்போது நாம் அதற்காக உழைக்கின்றோம்.

நன்றாக சிங்களத்தில் உரையாற்றும் இவருக்கு தென்னிலங்ககையில் பலர் இருக்கின்றார்கள். நீர்கொழும்பு விவேகானந்தா வித்தியாலயத்தில் (இன்றைய விஜயரத்தினம் மகா வித்தியாலயம்) கல்வி பயின்ற இவர் இலங்கை நூலக விஞ்ஞான சங்கத்தில் டிப்ளோமா பெற்றவராவார். ‘தங்கை, நம் இரு சமூககங்களுக்கும் இடையில் எந்த பிரச்சினையும் கிடையாது சிங்கள, தமிழ் என்று அரசியல் வாதிகளுக்குத் தான் பிரச்சினை உள்ளது’ அப்படித்தான் அவர் சுருக்கமாக கூறுவார். எனது யாழ்ப்பாண மக்கள் நமக்கும் தென்னிலங்கை மக்களுக்கும் இடையில் குரோதம் இருப்பதாக என்னிடம் ஒருபோதும் கூறியதில்லை.

‘தங்கை தாங்கள் என் மூத்த மகளை விட ஒரு வயது இளையவர்.. உங்களை போன்றவர்கள் இந்த நிலத்திற்கு பெறுமதிமிக்கவர்கள்’. அவர்களது அன்பில் நாம் எம்மை காணுகிறோம். செல்வராஜா என்ற மனிதர் இந்நாட்டில் வடக்கு தெற்கு பிரிவினையை மறந்து அனைவரும் ஒன்றாக சேர்ந்து வாசிக்க கூடிய ஒரு புத்தகம் போன்றவர். நாங்கள் அப்புத்தகத்தை வாசிக்கின்றோம். இப்புத்தகம் நாட்டின் தமிழ் சிங்கள அனைவராலும் அன்போடு நேசிக்கும் புத்தகமாக அமையுமென நம்புகின்றோம்.

நான் யாழ்ப்பாண நேசகி,
சந்தரெசி சுதுசிங்ஹ
மாத்தறையிலிருந்து
sandaraseepriyathma@gmail.com