உலக வங்கி

உலக வங்கி

2026 ஆம் ஆண்டில் இலங்கையின் வறுமை விகிதம் 22 சதவீதத்தை விட அதிகரிக்கும் – உலக வங்கி

2026 ஆம் ஆண்டில் இலங்கையின் வறுமை விகிதம் 22 சதவீதத்தை விட அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
உலக வங்கி அண்மையில் விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கையின் பொருளாதாரம் இந்த ஆண்டு 2.2 வீத மிதமான வளர்ச்சியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், 2022ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் பின்னர் நாடு இன்னும் அதிக அளவிலான வறுமை மற்றும் வருமான சமத்துவமின்மையை எதிர்கொள்வதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் வறுமை விகிதங்கள் தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக அதிகரித்துள்ளதாகவும், 2023ஆம் ஆண்டில் 25.9 வீதமான மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 2026ஆம் ஆண்டில் நாட்டின் வறுமை விகிதம் 22 சதவீதத்தை விட அதிகரிக்கும் என்றும் உலக வங்கியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் தொடரும் வறுமை – உலகவங்கி

2024 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மைக்கான அறிகுறிகளைக் காட்டுவதுடன் 2.2% மிதமான பொருளாதார வளர்ச்சியை காட்டுவதாக உலக வங்கி கணித்துள்ளது.

 

2022ஆம் ஆண்டு இலங்கை எதிர்நோக்கிய பாரிய பொருளாதார வீழ்ச்சியின் பின்னரே இந்த நிலைமையை காண முடிவதாக உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

 

எனினும், நாட்டில் இன்னும் உயர் வறுமை, வருமான சமத்துவமின்மை மற்றும் தொழிலாளர் சந்தை பிரச்சினைகள் காணப்படுவதாக உலக வங்கியின் சமீபத்திய ஈராண்டு வளர்ச்சி மதிப்பீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச வருமானத்தில் இருந்து கடனுக்காக அதிக வட்டியை செலுத்தும் நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு முதலிடம்!

உலக வங்கியின் அபிவிருத்திக் குறிகாட்டிகளுக்கு அமைய, அரச வருமானத்தில் இருந்து கடனுக்காக அதிக வட்டியை செலுத்தும் நாடு இலங்கையே என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது .

 

2000 ஆம் ஆண்டில், இலங்கை அரசாங்கம் அதன் வருமானத்திலிருந்து, கடனுக்காக 33 சதவீத வட்டியை செலுத்தியது. அதன்படி, அந்த ஆண்டில் கடனுக்காக வட்டி செலுத்தும் நாடுகளில் இலங்கை ஐந்தாவது இடத்தில் இருந்தது.

உலக வங்கியின் அபிவிருத்திக் குறிகாட்டிகளுக்கு அமைய, அரச வருமானத்தில் இருந்து கடனுக்காக அதிக வட்டியை செலுத்தும் நாடு இலங்கையே என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது

 

2000 ஆம் ஆண்டில், இலங்கை அரசாங்கம் அதன் வருமானத்திலிருந்து, கடனுக்காக 33 சதவீத வட்டியை செலுத்தியது. அதன்படி, அந்த ஆண்டில் கடனுக்காக வட்டி செலுத்தும் நாடுகளில் இலங்கை ஐந்தாவது இடத்தில் இருந்தது.

2010 ஆம் ஆண்டு, கடனுக்காக அதிக வட்டி செலுத்தும் நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தில் காணப்பட்டது. அந்த ஆண்டில் செலுத்திய வட்டியானது அரச வருமானத்தில், 42 சதவீதமாகும்.

பின்னர் இலங்கை தமது அரச வருமானத்தில், 2020ஆம் ஆண்டில் 71 சதவீதத்தையும், 2023ஆம் ஆண்டு 77 சதவீதத்தையும் கடனுக்கான வட்டியாக செலுத்தியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை 2020 ஆம் ஆண்டில், அரச வருமனாத்திலிருந்து, கடனுக்கு அதிக வட்டி செலுத்தும் நாடுகளில் லெபனான் முதலாம் இடத்தில் காணப்பட்டது. அது அரச வருமானத்தில், 95 சதவீதமாக காணப்பட்டது.

இந்த நிலையில் 2000 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை கடனுக்காக அதிக வட்டியை செலுத்தும் நாடாக இலங்கை காணப்படுவதாக பேராசிரியர் வசந்த அத்துக்கோரல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச நாணய நிதியத்தை மீறி எங்களால் செயற்படமுடியாது – அரசாங்கம் திட்டவட்டம் !

சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகிய கடன் வழங்குநர்களுடன் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டைத் தவிர்த்து, நாட்டின் பொருளாதாரத்தை ஒரு தினத்திற்கும் முன்னெடுத்துச் செல்ல முடியாது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற போதே, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,

“சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத் திட்டத்தை செயல்படுத்தாவிட்டால், யார் அரசாங்கத்தை நிர்வகித்தாலும் எந்த ஜனாதிபதி நாட்டை ஆண்டாலும் அரசாங்கத்தின் ஆயுட்காலம் இரண்டு வாரங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டு விடும். தடம் புரண்டிருந்த நாட்டின் பொருளாதாரத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் கடந்த வருடத்தில் மீள நிவர்த்தி செய்துள்ளது. பிறந்துள்ள புதிய வருடம் தீர்க்கமான ஒரு வருடமாகும்.

 

தற்போது நிலவும் பொருளாதார சவால் 2027 ஆம் ஆண்டு வரை தொடரும். சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத் திட்டம் 2027 ஆம் ஆண்டு நிறைவு பெறும் வரை சட்டப்படி செயற்பட்டாலே நெருக்கடியை நிவர்த்தி செய்ய முடியும்.

சர்வதேச இணக்கப்பாட்டுடனான சட்டங்கள் மற்றும் நிதி முறைமைக்கு இணங்க நாடு என்ற ரீதியில் நாம் நிதி சந்தைக்கு சென்று பிணைமுறியை விநியோகித்து கடனைக் கோரினாலும் 2027 ஆம் ஆண்டு எமக்கு 1500 மில்லியன் டொலர்களை மட்டுமே கடனாகப் பெற்றுக் கொள்ள முடியும்.

2027 ஆம் ஆண்டு வரை மூன்று, நான்கு வருடங்களுக்கு இந்த சவால்கள் தொடரும்.

பெருமளவு இறக்குமதியிலேயே தங்கியுள்ள பொருளாதாரத்தை கொண்டுள்ள எமது நாடு எரிபொருள், உரம், மருந்து, இரசாயன பொருட்கள், அரிசி, மா, சீனி, கிழங்கு, வெங்காயம், பருப்பு, மிளகாய் உள்ளிட்ட நுகர்வு பொருட்கள் மற்றும் இயந்திரங்கள், வாகனங்கள் போன்றவற்றையும் இறக்குமதி செய்தே ஆக வேண்டும்.

அவற்றை இறக்குமதி செய்வதற்காக அரசாங்கத்தின் கையிருப்பின் அடிப்படையில் கடன் பத்திரத்தை விநியோகிப்பது அவசியம். இந்த பொருட்களைக் கொள்வனவு செய்யாமல் இரண்டு வாரங்களையும் எம்மால் முன்னெடுத்துச் செல்ல முடியாது.” என்றார்.

உலக வங்கியின் நிதியுதவி திட்டத்தின் கீழ் மருந்துகளை கொள்வனவு செய்ய நடவடிக்கை !

உலக வங்கியின் நிதியுதவி திட்டத்தின் கீழ் ஆரம்ப வைத்தியசாலைகளில் தற்போது பற்றாக்குறையாக காணப்படும் மருந்துகளை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உலக வங்கி செயற்திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஜயசுந்தர பண்டார தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஆரம்ப வைத்தியசாலைகளில் தற்போது பற்றாக்குறையாக காணப்படும் மருந்துகளை உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் விரைவில் கொள்வனவு செய்து, குறித்த வைத்தியசாலைகளுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது.

மூன்று மாதங்களுக்கு தேவையான மருந்துகளை இவ்வாறு கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும்  சுகாதார அமைச்சின் ஆரம்ப சுகாதார சேவைகளின் கட்டமைப்பை வலுப்படுத்துவதோடு,  இவ்வாறு கொள்வனவு செய்யப்படும்  மருந்துகள் விரைவில் சுகாதார அமைச்சுக்கு ஒப்படைக்கப்படவுள்ளது.

ஆரம்ப வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மருந்துகளுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. இதனிடையே நாடளாவிய ரீதியில்  அமைந்துள்ள பல் வைத்திய நிலையங்களுக்கு அவசியமான  மருந்துகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த சேவைகளை வழமைக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இரட்டிப்பாக அதிகரித்துள்ள இலங்கையின் வறுமை வீதம் !

இலங்கையின் வறுமை வீதம் இரட்டிப்பாக அதிகரித்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

உலக வங்கியின் ஈராண்டுகளுக்கான அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலக வங்கியினால் வௌியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையின் பிரகாரம் 2021ஆம் ஆண்டு முதல் இலங்கையின் வறுமை வீதம் தொடர்ச்சியாக அதிகரித்து செல்கின்றது.

நாட்டின் வறுமை நிலை 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 13.1 வீதத்திலிருந்து 25 வீதம் வரை அதிகரித்துள்ளது.

2022ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த சனத்தொகையில் மேலும் 2.5 மில்லியன் பேர் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக உலக வங்கியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உணவு பாதுகாப்பின்மையை எதிர்நோக்கியுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 2021 ஆம் ஆண்டில் 7.4 வீதமாக பதிவானதுடன், அந்த எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டில் 9.4 வீதமாக அதிகரித்துள்ளதாக உலக வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த குடும்பங்கள், பொருளாதார நெருக்கடியுடன் ஏற்பட்ட உணவு பாதுகாப்பின்மை பிரச்சினையினால் சுகாதாரம் மற்றும் கல்விக்காக செலவிடும் செலவுகளை குறைத்துக்கொண்டுள்ளதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குடும்பங்களின் வாழ்வாதார வழிமுறைகள் அற்றுப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் எதிர்வரும் சில வருடங்களுக்குள் வறுமை நிலை 25 வீதத்தையும் கடந்துசெல்லும் என உலக வங்கி எதிர்வுகூறியுள்ளது.

2023 – 2024 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குள் நாட்டில் முன்னெடுக்கப்படவுள்ள பொருளாதார மறுசீரமைப்பின் ஊடாக நாட்டின் வறுமை நிலை மேலும் அதிகரித்துச் செல்லுமெனவும் உலக வங்கி எதிர்வுகூறியுள்ளது.

உணவுப் பணவீக்கம் அதிகமுள்ள முதன்மை நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கம்!

உணவுப் பொருட்களின் விலையேற்றம் அதிகம் உள்ள 10 உலக நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்பட்டுள்ளது.

உலக வங்கியால் தொகுக்கப்பட்ட பட்டியலில் பல வாரங்களாக தொடர்ந்து இடம்பெற்று வந்த இலங்கை, புதிய தரவில் நீக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கும் உணவுப் பாதுகாப்பு மற்றும் பணவீக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது,

இதன் காரணமாக இலங்கை அதிக உணவுப் பணவீக்கம் உள்ள நாடுகளின் பட்டியலில் இல்லை என உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.

உலக வங்கி தனது சமீபத்திய மதிப்பீட்டில், லெபனான் நாட்டிலேயே அதிக உணவு விலை பணவீக்கம் காணப்படுவதாக கூறியுள்ளது.

261 சதவீதத்துடன் லெபனான் தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. மேலும் சிம்பாப்வே மற்றும் அர்ஜென்டினா முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன.

ஒரே ஆண்டில் வேலையை இழந்த 5 இலட்சம் இலங்கையர்கள் !

2022 ஆம் ஆண்டில் இலங்கையில் குறைந்தது 5 இலட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது

அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என்றும், கைத்தொழில் மற்றும் சேவைத் துறைகளைச் சேர்ந்தவர்கள் எனவும் உலக வங்கி கூறுகிறது.

இலங்கையில் ஏற்கனவே வறுமைக் கோட்டுக்கு கீழுள்ளவர்கள் என வகைப்படுத்தப்பட்டவர்களின் வாழ்க்கைச் செலவில் 65% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக வங்கிக் குழுமத்தின் தெற்காசியப் பிராந்தியத்திற்கான பிரதித் தலைவர் மார்டின் ரைஸர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், வறுமை கோட்டு வரம்புக்கு அப்பாற்பட்டவர்களின் வாழ்க்கைச் செலவில் 57 சதவீதம் அதிகரித்துள்ளது. இது அனைத்து இலங்கையர்களுக்கும் குறிப்பிடத்தக்க நலன் இழப்பை எடுத்துக்காட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார்

நாட்டின் நெருக்கடி நிலை பற்றிய ஒரு கட்டுரையில், இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு பல ஆண்டுகளாக தவறான பொருளாதார நிர்வாகம், பலவீனமான நிர்வாகம், மோசமான கொள்கை தேர்வுகள் மற்றும் கொவிட் 19 தொற்றுநோய் மற்றும் ரஷ்யாவின் யுக்ரைன் ஆக்கிரமிப்பு போன்ற வெளிப்புற நிகழ்வுகளின் தாக்கங்கள் காரணமாக இருப்பதாக ரைஸர் கூறினார்.

நெருக்கடியின் ஆழம் இலங்கைக்கு புதிய அபிவிருத்தி மாதிரி தேவை என்பதை தெளிவுபடுத்தியுள்ளதாக ரைஸர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், மீட்புக்கான பாதை சவாலானது என்றும், தேவையான நிதி சீரமைப்பு நடவடிக்கைகள் வலிமிகுந்ததாக இருக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.

இலங்கையின் கடன்கொடுநர்களிடமிருந்து கடன் நிவாரணம் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களின் புதிய நிதியுதவி ஆகியவை, மக்கள் பொறுமையை இழக்காமல் இருப்பதையும் மாற்றத்திற்கான வாய்ப்பை இழக்காமல் இருப்பதையும் உறுதிப்படுத்துவது அவசரமானது என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விரைவான கடன்மறுசீரமைப்பு தேவை – உலக வங்கி!

இலங்கை உள்ளிட்ட ஏனைய நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளுக்கு விரைவான கடன் மறுசீரமைப்பு தேவை என உலக வங்கியின் தலைவர் டேவிட் மெல்பாஸ் தெரிவித்துள்ளார்.

பெங்களுரில் இடம்பெற்ற ஜி20 நாடுகளின் மாநாட்டில் கலந்துக் கொண்டு கருத்துரைத்த அவர், இலங்கையின் கடனை விரைவாக மறுசீரமைக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

சாம்பியா புரிந்துணர்வு ஒப்பந்தம், கானா உத்தியோகப்பூர்வ கடனாளிகள் குழு, எத்தியோப்பியா மறுசீரமைப்பு மற்றும் இலங்கையின் நிதி உறுதிப்பாடுகள் போன்ற தீர்வுகளை அடைய அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு உடன்பாடு ஏற்பட்டால் அடுத்த சில மாதங்களில் குறித்த செயற்பாடுகளை முன்னெடுக்கலாம் என்றும் அதற்கான செயன்முறையை கண்டறிய வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடும் பணவீக்கம், வட்டி விகித உயர்வு என 2023-ம் ஆண்டில் உலக பொருளாதாரம் பெரும் அடி வாங்கும் !

2023-ம் ஆண்டில் உலக பொருளாதார வளர்ச்சி 1.7 சதவீதமாக குறையும் என உலக வங்கி கணித்துள்ளது. இது கடந்த ஆண்டின் ஜூன் மாதத்தில் கணிக்கப்பட்ட 3 சதவீத வளர்ச்சி என்பதை விட குறைவாகும். மேலும் கடந்த 30 ஆண்டுகளில் 3-வது முறையாக உலக பொருளாதார வளர்ச்சி மிக குறைந்த அளவை எட்டியுள்ளது.

கடும் பணவீக்கம், வட்டி விகித உயர்வு, முதலீடு குறைவு, ரஷியா-உக்ரைன் போரால் ஏற்பட்ட நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உலக பொருளாதாரம் மெதுவாகவே வளர்ந்து வருவதாக உலக பொருளாதார வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக பொருளாதாரம் 2023 மற்றும் 2024-ம் ஆண்டுகளில் முறையே 1.7 மற்றும் 2.7 சதவீதமாக வளர்ச்சி அடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக காலநிலை மாற்றம் உள்ளிட்ட காரணிகளால் உலக பொருளாதாரத்திற்கு ஏற்படும் இடர்பாடுகளை களைவதற்கு மக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.