உலக வங்கி

உலக வங்கி

கிளிநொச்சி சேவைச் சந்தை கடைகள் தங்களுக்கே வழங்கப்பட வேண்டும் – புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் வெளியாருக்கு அல்ல ! கிளியில் மக்கள் போராட்டம்

கிளிநொச்சி சேவைச் சந்தை கடைகள் தங்களுக்கே வழங்கப்பட வேண்டும் – புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் வெளியாருக்கு அல்ல ! கிளியில் மக்கள் போராட்டம்

 

நேற்றைய தினம் கிளிநொச்சி சேவைச் சந்தை வர்த்தகர்கள் தமது கடைகளை பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். போரால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட வர்த்தகர்களை மேலும் பாதிப்பிற்குள்ளாக்கும் வகையில் பிரதேச சபையின் நடவடிக்கைகள் அமைந்திருப்பதாக குற்றம் சாட்டியே வர்த்தகர்கள் கொட்டும் மழையிலும் போராடினர்.

போராட்டத்திற்கு தலைமை தாங்கிய வர்த்தகர் பிராந்திய உள்ளூராட்சி ஆணையாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போதும் அவர் வர்த்தகர்கள் போராடும் இடத்திற்கு வரவில்லை. ஏற்கனவே பிரதேச சபையால் மூன்று கட்டங்கள் கிளிநொச்சி வர்த்தகர்களுக்கு கட்டி வழங்கப்பட்டிருந்தது.

தற்போது உலக வங்கி அனுசரனையில் நாலாவது கட்டடம் கட்டப்பட்டுள்ளது. எட்டு கடைத்தொகுதிகளை உள்ளடக்கிய நான்காவது கட்டடத்தை கேள்வி கூறல் அதாவது ரென்டர் மூலம் வழங்குவதற்கு பிரதேச சபை பத்திரிகை மூலம் விளம்பரப்படுத்தியுள்ளது. இந்த விடயத்தினால் கொதிப்படைந்த வர்த்தகர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இதேமாதிரியானவொரு பிரச்சினையே சாவகச்சேரி சந்தையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கடைகளை கேள்வி கோரல் மூலம் சாவகச்சேரி பிரதேச சபை நடவடிக்கைகளை எடுத்த போது எழுந்தது.

சாவகச்சேரி வர்த்தகர்கள் முன்வைத்த குற்றச்சாட்டு என்னவென்றால் கடைகளை கேள்விக் கோரலுக்கு விடும் போது வெளிமாவட்ட வர்த்தகர்களும் கடைகளை எடுக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது. அதைத்தவிர வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழுபவர்கள் தமது உறவினர்கள் பெயரில் பெருந்தொகை பணத்தை கொடுத்து கடைகளை கேள்விக் கோரல் மூலம் எடுப்பதாகவும் கூறப்பட்டது. வெளிநாட்டு பணத்திற்கு ஈடுகொடுத்து உள்ளூர் வர்த்தகர்கள் கடைகளை கேள்விக் கோரல் மூலம் பெற முடியாத நிலை காணப்படுவதாகவும் கூறப்பட்டது.

கிளிநொச்சி சேவைச் சந்தை வர்த்தகர்களின் போராட்டம் தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நேற்றைய பாராளுமன்ற அமர்பில் குறிப்பிட்டிருந்தார்.

பாடசாலை கல்வியை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடல் !

நாட்டின் பாடசாலை கல்வியை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் உலக வங்கியின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று பிரதமர்  ஹரிணி அமரசூரிய தலைமையில் அண்மையில் கல்வி அமைச்சில் இடம்பெற்றது.

கடந்த பல வருடங்களாக பாடசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலைகளை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் விசேடமாக பாடசாலை மாணவர்களின் சுகாதாரத்தை கட்டியெழுப்புதல் தொடர்பில் பிரதமர் இதன்போது தனது விசேட அவதானத்தை செலுத்தினார்.

அத்துடன் நாட்டின் இரண்டாம் நிலைக் கல்வியை முன்னிட்டு தகவல் தொழில்நுட்பத் துறையை மேம்படுத்துவது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

கல்வி உயர் கல்வி பிரதியமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன கல்வி உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ உள்ளிட்ட அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.

வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் பொருளாதார முன்னேற்றத்தை உறுதிப்படுத்துவது தொடர்பில் உலக வங்கி கவனம்!

இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி குறித்த கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் உலக வங்கியின் தலைவர் அஜே பங்கா (Ajay Banga) ஆகியோருக்கு இடையில் நேற்று புதன்கிழமை (27) ஜனாதிபதி அலுவலகத்தில் இணையத் தொடர்பாடல் முறையூடாக இடம்பெற்றது.

 

இதன்போது, புதிய தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கம் மற்றும் எதிர்கால அபிவிருத்தி சவால்களை வெற்றி கொள்ள இலங்கைக்கு வழங்க வேண்டிய ஒத்துழைப்புக்கள் குறித்து அஜே பங்கா (Ajay Banga) கருத்து தெரிவித்ததோடு, சுகாதாரம், சமூக பாதுகாப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்தி உள்ளிட்ட துறைகளில் புதிய வேலைத்திட்டங்களை செயற்படுத்த நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

 

பொருளாதார கொள்கைகள், நிதி, போட்டித்தன்மை, முதலீடு,நிறுவன மேம்பாடு மற்றும் வறுமை ஒழிப்பு உள்ளிட்ட விடயங்களில் தற்போதும் உலக வங்கி இலங்கைக்கு உதவிகளை வழங்கி வருகின்ற நிலையில், எதிர்காலத்தில் விவசாய அபிவிருத்து, நீர் முகாமைத்துவம்,பாதுகாப்பு,சுற்றாடல் நிலைத்தன்மை, சமூக மேம்பாடு, உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு மற்றும் டிஜிட்டல் பரிமாற்றம் ஆகியவற்றுக்கும் ஒத்துழைப்பு வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.

 

குறிப்பாக, கிராமிய பகுதிகளில் வறுமையை ஒழிப்பதற்கு அரசாங்கம் காட்டும் அக்கறை குறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, வலுசக்தி துறையின் முதலீடுகளை அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தியிருப்பதாகவும், சுற்றுலாத் துறை, கடல்சார் தொழில்துறை, அரச நிறுவனங்கள் மற்றும் வலுசக்தி துறைகளை பலப்படுத்தி அரச வருமானத்தை அதிகரித்துக்கொள்ள எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.

 

அதேபோல் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் பொருளாதார முன்னேற்றத்தை உறுதிப்படுத்தல், குறிப்பாக கல்வி, சுகாதாரம், மனிதவள அபிவிருத்தி தொடர்பில் விளக்கமளித்த ஜனாதிபதி, இந்த பகுதிகளில் காணப்படும் தொழிற்படையின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கல்வி மற்றும் தொழில் கல்வித் துறைகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

 

2025 ஜூலை 25 ஆம் திகதி திறக்கப்படவிருக்கும் 20 தெற்காசிய கூட்டு அலுவலகங்களின் அனுசரணை நாடாக இலங்கையும் தெரிவு செய்யப்பட்டிருப்பதாக கூறிய உலக வங்கியின் தலைவர் உலக வங்கிக் குழுமத்தின் கீழ் காணப்படும் மீள் கட்டியெழுப்பல் மற்றும் அவிருத்திக்கான சர்வதேச வங்கி (IBRD), சர்வதேச அபிவிருத்தி வங்கி (IDA), சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம் (IFC) மற்றும் பலதரப்பு முதலீட்டு பிணைகளுக்கான முகவர் நிறுவனம் (MIGA) உள்ளிட்ட நிறுவனங்களுடனான ஒருங்கிணைப்புச் செயற்பாடுகள் மேற்படி அலுவலகத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ மற்றும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும உள்ளிட்டவர்களும் இதன்போது கலந்துகொண்டனர்.

2026 ஆம் ஆண்டில் இலங்கையின் வறுமை விகிதம் 22 சதவீதத்தை விட அதிகரிக்கும் – உலக வங்கி

2026 ஆம் ஆண்டில் இலங்கையின் வறுமை விகிதம் 22 சதவீதத்தை விட அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
உலக வங்கி அண்மையில் விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கையின் பொருளாதாரம் இந்த ஆண்டு 2.2 வீத மிதமான வளர்ச்சியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், 2022ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் பின்னர் நாடு இன்னும் அதிக அளவிலான வறுமை மற்றும் வருமான சமத்துவமின்மையை எதிர்கொள்வதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் வறுமை விகிதங்கள் தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக அதிகரித்துள்ளதாகவும், 2023ஆம் ஆண்டில் 25.9 வீதமான மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 2026ஆம் ஆண்டில் நாட்டின் வறுமை விகிதம் 22 சதவீதத்தை விட அதிகரிக்கும் என்றும் உலக வங்கியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் தொடரும் வறுமை – உலகவங்கி

2024 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மைக்கான அறிகுறிகளைக் காட்டுவதுடன் 2.2% மிதமான பொருளாதார வளர்ச்சியை காட்டுவதாக உலக வங்கி கணித்துள்ளது.

 

2022ஆம் ஆண்டு இலங்கை எதிர்நோக்கிய பாரிய பொருளாதார வீழ்ச்சியின் பின்னரே இந்த நிலைமையை காண முடிவதாக உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

 

எனினும், நாட்டில் இன்னும் உயர் வறுமை, வருமான சமத்துவமின்மை மற்றும் தொழிலாளர் சந்தை பிரச்சினைகள் காணப்படுவதாக உலக வங்கியின் சமீபத்திய ஈராண்டு வளர்ச்சி மதிப்பீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச வருமானத்தில் இருந்து கடனுக்காக அதிக வட்டியை செலுத்தும் நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு முதலிடம்!

உலக வங்கியின் அபிவிருத்திக் குறிகாட்டிகளுக்கு அமைய, அரச வருமானத்தில் இருந்து கடனுக்காக அதிக வட்டியை செலுத்தும் நாடு இலங்கையே என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது .

 

2000 ஆம் ஆண்டில், இலங்கை அரசாங்கம் அதன் வருமானத்திலிருந்து, கடனுக்காக 33 சதவீத வட்டியை செலுத்தியது. அதன்படி, அந்த ஆண்டில் கடனுக்காக வட்டி செலுத்தும் நாடுகளில் இலங்கை ஐந்தாவது இடத்தில் இருந்தது.

உலக வங்கியின் அபிவிருத்திக் குறிகாட்டிகளுக்கு அமைய, அரச வருமானத்தில் இருந்து கடனுக்காக அதிக வட்டியை செலுத்தும் நாடு இலங்கையே என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது

 

2000 ஆம் ஆண்டில், இலங்கை அரசாங்கம் அதன் வருமானத்திலிருந்து, கடனுக்காக 33 சதவீத வட்டியை செலுத்தியது. அதன்படி, அந்த ஆண்டில் கடனுக்காக வட்டி செலுத்தும் நாடுகளில் இலங்கை ஐந்தாவது இடத்தில் இருந்தது.

2010 ஆம் ஆண்டு, கடனுக்காக அதிக வட்டி செலுத்தும் நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தில் காணப்பட்டது. அந்த ஆண்டில் செலுத்திய வட்டியானது அரச வருமானத்தில், 42 சதவீதமாகும்.

பின்னர் இலங்கை தமது அரச வருமானத்தில், 2020ஆம் ஆண்டில் 71 சதவீதத்தையும், 2023ஆம் ஆண்டு 77 சதவீதத்தையும் கடனுக்கான வட்டியாக செலுத்தியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை 2020 ஆம் ஆண்டில், அரச வருமனாத்திலிருந்து, கடனுக்கு அதிக வட்டி செலுத்தும் நாடுகளில் லெபனான் முதலாம் இடத்தில் காணப்பட்டது. அது அரச வருமானத்தில், 95 சதவீதமாக காணப்பட்டது.

இந்த நிலையில் 2000 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை கடனுக்காக அதிக வட்டியை செலுத்தும் நாடாக இலங்கை காணப்படுவதாக பேராசிரியர் வசந்த அத்துக்கோரல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச நாணய நிதியத்தை மீறி எங்களால் செயற்படமுடியாது – அரசாங்கம் திட்டவட்டம் !

சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகிய கடன் வழங்குநர்களுடன் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டைத் தவிர்த்து, நாட்டின் பொருளாதாரத்தை ஒரு தினத்திற்கும் முன்னெடுத்துச் செல்ல முடியாது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற போதே, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,

“சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத் திட்டத்தை செயல்படுத்தாவிட்டால், யார் அரசாங்கத்தை நிர்வகித்தாலும் எந்த ஜனாதிபதி நாட்டை ஆண்டாலும் அரசாங்கத்தின் ஆயுட்காலம் இரண்டு வாரங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டு விடும். தடம் புரண்டிருந்த நாட்டின் பொருளாதாரத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் கடந்த வருடத்தில் மீள நிவர்த்தி செய்துள்ளது. பிறந்துள்ள புதிய வருடம் தீர்க்கமான ஒரு வருடமாகும்.

 

தற்போது நிலவும் பொருளாதார சவால் 2027 ஆம் ஆண்டு வரை தொடரும். சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத் திட்டம் 2027 ஆம் ஆண்டு நிறைவு பெறும் வரை சட்டப்படி செயற்பட்டாலே நெருக்கடியை நிவர்த்தி செய்ய முடியும்.

சர்வதேச இணக்கப்பாட்டுடனான சட்டங்கள் மற்றும் நிதி முறைமைக்கு இணங்க நாடு என்ற ரீதியில் நாம் நிதி சந்தைக்கு சென்று பிணைமுறியை விநியோகித்து கடனைக் கோரினாலும் 2027 ஆம் ஆண்டு எமக்கு 1500 மில்லியன் டொலர்களை மட்டுமே கடனாகப் பெற்றுக் கொள்ள முடியும்.

2027 ஆம் ஆண்டு வரை மூன்று, நான்கு வருடங்களுக்கு இந்த சவால்கள் தொடரும்.

பெருமளவு இறக்குமதியிலேயே தங்கியுள்ள பொருளாதாரத்தை கொண்டுள்ள எமது நாடு எரிபொருள், உரம், மருந்து, இரசாயன பொருட்கள், அரிசி, மா, சீனி, கிழங்கு, வெங்காயம், பருப்பு, மிளகாய் உள்ளிட்ட நுகர்வு பொருட்கள் மற்றும் இயந்திரங்கள், வாகனங்கள் போன்றவற்றையும் இறக்குமதி செய்தே ஆக வேண்டும்.

அவற்றை இறக்குமதி செய்வதற்காக அரசாங்கத்தின் கையிருப்பின் அடிப்படையில் கடன் பத்திரத்தை விநியோகிப்பது அவசியம். இந்த பொருட்களைக் கொள்வனவு செய்யாமல் இரண்டு வாரங்களையும் எம்மால் முன்னெடுத்துச் செல்ல முடியாது.” என்றார்.

உலக வங்கியின் நிதியுதவி திட்டத்தின் கீழ் மருந்துகளை கொள்வனவு செய்ய நடவடிக்கை !

உலக வங்கியின் நிதியுதவி திட்டத்தின் கீழ் ஆரம்ப வைத்தியசாலைகளில் தற்போது பற்றாக்குறையாக காணப்படும் மருந்துகளை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உலக வங்கி செயற்திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஜயசுந்தர பண்டார தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஆரம்ப வைத்தியசாலைகளில் தற்போது பற்றாக்குறையாக காணப்படும் மருந்துகளை உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் விரைவில் கொள்வனவு செய்து, குறித்த வைத்தியசாலைகளுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது.

மூன்று மாதங்களுக்கு தேவையான மருந்துகளை இவ்வாறு கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும்  சுகாதார அமைச்சின் ஆரம்ப சுகாதார சேவைகளின் கட்டமைப்பை வலுப்படுத்துவதோடு,  இவ்வாறு கொள்வனவு செய்யப்படும்  மருந்துகள் விரைவில் சுகாதார அமைச்சுக்கு ஒப்படைக்கப்படவுள்ளது.

ஆரம்ப வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மருந்துகளுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. இதனிடையே நாடளாவிய ரீதியில்  அமைந்துள்ள பல் வைத்திய நிலையங்களுக்கு அவசியமான  மருந்துகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த சேவைகளை வழமைக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இரட்டிப்பாக அதிகரித்துள்ள இலங்கையின் வறுமை வீதம் !

இலங்கையின் வறுமை வீதம் இரட்டிப்பாக அதிகரித்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

உலக வங்கியின் ஈராண்டுகளுக்கான அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலக வங்கியினால் வௌியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையின் பிரகாரம் 2021ஆம் ஆண்டு முதல் இலங்கையின் வறுமை வீதம் தொடர்ச்சியாக அதிகரித்து செல்கின்றது.

நாட்டின் வறுமை நிலை 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 13.1 வீதத்திலிருந்து 25 வீதம் வரை அதிகரித்துள்ளது.

2022ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த சனத்தொகையில் மேலும் 2.5 மில்லியன் பேர் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக உலக வங்கியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உணவு பாதுகாப்பின்மையை எதிர்நோக்கியுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 2021 ஆம் ஆண்டில் 7.4 வீதமாக பதிவானதுடன், அந்த எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டில் 9.4 வீதமாக அதிகரித்துள்ளதாக உலக வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த குடும்பங்கள், பொருளாதார நெருக்கடியுடன் ஏற்பட்ட உணவு பாதுகாப்பின்மை பிரச்சினையினால் சுகாதாரம் மற்றும் கல்விக்காக செலவிடும் செலவுகளை குறைத்துக்கொண்டுள்ளதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குடும்பங்களின் வாழ்வாதார வழிமுறைகள் அற்றுப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் எதிர்வரும் சில வருடங்களுக்குள் வறுமை நிலை 25 வீதத்தையும் கடந்துசெல்லும் என உலக வங்கி எதிர்வுகூறியுள்ளது.

2023 – 2024 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குள் நாட்டில் முன்னெடுக்கப்படவுள்ள பொருளாதார மறுசீரமைப்பின் ஊடாக நாட்டின் வறுமை நிலை மேலும் அதிகரித்துச் செல்லுமெனவும் உலக வங்கி எதிர்வுகூறியுள்ளது.

உணவுப் பணவீக்கம் அதிகமுள்ள முதன்மை நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கம்!

உணவுப் பொருட்களின் விலையேற்றம் அதிகம் உள்ள 10 உலக நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்பட்டுள்ளது.

உலக வங்கியால் தொகுக்கப்பட்ட பட்டியலில் பல வாரங்களாக தொடர்ந்து இடம்பெற்று வந்த இலங்கை, புதிய தரவில் நீக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கும் உணவுப் பாதுகாப்பு மற்றும் பணவீக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது,

இதன் காரணமாக இலங்கை அதிக உணவுப் பணவீக்கம் உள்ள நாடுகளின் பட்டியலில் இல்லை என உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.

உலக வங்கி தனது சமீபத்திய மதிப்பீட்டில், லெபனான் நாட்டிலேயே அதிக உணவு விலை பணவீக்கம் காணப்படுவதாக கூறியுள்ளது.

261 சதவீதத்துடன் லெபனான் தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. மேலும் சிம்பாப்வே மற்றும் அர்ஜென்டினா முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன.