ஈஸ்டர் தாக்குதல்

ஈஸ்டர் தாக்குதல்

இலங்கையில் ஒரு பொறுப்பற்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவும் ஜே.வி.பியும் ஈஸ்டர் தாக்குதலை அரசியலாக்க பார்க்கிறார்கள் – பிள்ளையான்

உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பை உலகளாவிய ரீதியில் கையாண்ட அமெரிக்கா, அவுஸ்திரேலியா. பொலிஸார் இதனை சரியாக கணித்து ஆராய்ந்து நடந்ததை கண்டுபிடித்து அறிக்கையை சமர்ப்பித்து விட்டு வெளியேறி விட்டார்கள். ஆனால், இலங்கையில் ஒரு பொறுப்பற்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவும் ஜே.வி.பி போன்ற கட்சிகளும் தற்போது இதனை கையில் எடுத்து அரசியலாக்கப் பார்க்கிறார்கள். மதங்களைப் பின்பற்றுவது சம்பந்தமான ஒரு அறிவு ரீதியாக ஒழுங்குபடுத்தலை எதிர்காலத்தில் உண்டாக்குவதன் மூலம் மதத்தின் பெயரால் இவ்வாறான குண்டு வெடிப்புகளை தவிர்க்க முடியும் என இராஜாங்க கிராமிய வீதி அபிவிருத்தி அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

 

மட்டக்களப்பில் ஞாயிற்றுக்கிழமை (21) மாலை மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,

 

உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலின் போது ஒரே நேரத்தில் பல இடங்களில் குண்டு வெடிப்பை தற்போது அரசியலாக்க பார்க்கிறார்கள் இவர்கள் ஆழமான அறிவை தேடி பார்க்க வேண்டும் இதனை அரசியல் சாயம் பூச முயல்கிறார்கள் எல்லா மதங்களிலும் கடும் போக்கானவர்கள் இருக்கிறார்கள். உலகளாவிய ரீதியில் தடை செய்யப்பட்ட பல இயக்கங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அதில் ஒரு கூராகத்தான் ஐ எஸ் ஐ எஸ். தீவிரவாதமும் இருந்தது. பல நாடுகளிலும் பயிற்சி எடுத்த காத்தான்குடியைச் சேர்ந்த சஹரானும் அவரது குழுவினரும் இருந்தனர். இதனை உலகளாவிய ரீதியில் கையாண்ட அமெரிக்கா ஆஸ்திரேலியா பொலிசார் இதனை சரியாக கனித்து ஆராய்ந்து அவர்கள் அறிக்கையை சமர்ப்பித்து விட்டு வெளியேறி விட்டார்கள் ஏனென்றால் அவர்கள் சரியாக நடந்ததை கண்டுபிடித்து விட்டார்கள்.

 

இவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்போது இவ்வாறான சம்பவங்கள் இனிமேலும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற அச்சம் நமக்கு உள்ளது. இதற்காக தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும். மதத்தின் பெயரால் நூறாண்டுகளுக்கு மேல் இயங்கும் இந்த வகாபாதத்தை முறியடிப்பது இலகுவான விடயம் அல்ல இதனை முறியடிப்பதற்கு அதி தொழில்நுட்பம் கூடிய பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்கப்பட வேண்டும்.

 

நாட்டில் ஏனைய மதத்தவரையும் மதித்து நடக்க வேண்டும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடு இலங்கை போன்ற நாட்டில் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்தால் ஏனைய நாடுகளைப் போல் இலங்கையும் அபிவிருத்தி இலக்கை அடைய முடியும் என அவர் தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்சவினால் நான் ஏமாற்றப்பட்டேன் – கர்தினால் மல்கம் ரஞ்சித்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்;வினால் நான் ஏமாற்றப்பட்டேன் என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

 

2019 ஜனாதிபதிதேர்தலில் கோட்டாபய ராஜபக்சவிற்கு கத்தோலிக்க திருச்சபை ஆதரவளிக்குமளவிற்கு நிலைமை காணப்பட்டபோதிலும் பின்னர் ஏமாற்றப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

செய்தியாளர் மாநாட்டில் கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

தான்அதிகாரத்திற்கு வந்ததும் 2019 உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதாக கோட்டாபய ராஜபக்ச உறுதியளித்தார் எனினும் அது இடம்பெறவில்லை என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

 

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த ஆணைக்குழுவின் அறிக்கையை பெற்றுக்கொண்ட பின்னர் கோட்டாபய ராஜபக்ச விசாரணைகளை காலவரையறையின்றி பிற்போட்டார் என மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

 

ஒரு கட்டத்தில் நாங்கள் ஏமாற்றப்பட்டோம் பதவியிலிருந்து அகற்றப்பட்ட ஜனாதிபதி என்னை ஏமாற்றினார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

2019 உயிர்த்த ஞாயிறுதாக்குதலின் பாரதூரதன்மையை அனைத்து கட்சிகளும் தலைமைகளும் உணர்ந்து இதுகுறித்து விசாரணைகளை மேற்கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

“இலக்கியத்தின் பெயரில் இலக்கியமற்றோர்” – சேனன்

‘இலக்கியச் சந்திப்பு’ என்ற பெயரில் ஐரோப்பாவில் இருந்து சிலர் இயங்கி வருகிறார்கள். இவர்கள் ஒரு சிறு குழு – இருப்பினும் ‘சக்தி வாய்ந்த குழு’. ஏனெனில் இவர்களில் பலர் இலங்கை அரச ஆதரவாளர்கள் – கொடூரங்கள் செய்த அதிகார சக்திகளின் நெருங்கிய நட்புகள். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் இலக்கியம் செய்வதில்லை. தனது சொந்த தேவைகளுக்காக இந்தச் சந்திப்பை பாவித்துக் கொள்ளும் ஷோபாசக்தி தவிர்ந்து யாரும் எதுவும் இலக்கிய -தத்துவ பங்களிப்பு செய்ததாக எனக்குத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் அந்த சாதனைகளை கூறுங்கள். இவர்கள் மத்தியல் தத்துவார்த்த தெளிவு உள்ளவர் என ஒருவரைக்கூட குறிப்பிட முடியாது. பல ஆண்டுகளாக வெற்று அலட்டல்களை மட்டுமே இவர்கள் செய்து வருகிறார்கள். இந்தக் கூட்டத்துக்கு அழைக்கப்படும் பலருக்கும் உண்மை விபரங்கள் சொல்லப்படுவதில்லை. அரசியற் பின்னணி தெரியாது கலந்து கொண்டு சிலர் சிக்கலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

 

நிதானமான உரையாடல் – அறிவு பூர்வமான விவாதம் என்பதெல்லாம் இவர்களுக்கு ஒருபோதும் சாத்தியமில்லை. அதற்கான எந்த ஒரு ஆதாரத்தையும் யாரும் தந்துவிட முடியாது. வன்முறை மிரட்டல்கள் மற்றும் அவதூறுகள் மட்டுமே இவர்களின் வரலாறாக மிஞ்சி நிற்கிறது.

 

வன்முறை எனச் சொன்னதும் – வெறும் வார்த்தையில் வன்முறை என நினைக்க வேண்டாம். இலங்கையில் நடந்த பல கொடூரங்களை நியாயப் படுத்தல் – மற்றும் – கண்டும் காணாது விடல் – மறைத்தல் – போன்ற நடவடிக்கைகளைத் தொடர்ந்து செய்து வருகிறார்கள். இதன் புதிய உச்சக் கட்டமாக இலங்கையில் நடந்த ஏப்ரல் படுகொலை பின்னணி வரலாற்றைத் திரிக்கும் வேலையில் இறங்கி இருக்கிறார்கள்.

 

பாலியல் வன்முறை முதற்கொண்டு பல்வேறு பாரிய குற்றச் சாட்டுகளை எதிர் கொண்டு வருபவர் பிள்ளையான் எனபப்டும் முன்னாள் போராளியும், இலங்கை பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன். இவற்றில் பல குற்றச் சாட்டுகளுக்கு ஏராளமான சாட்சிகள் ஆதாரங்கள் இன்று வெளிவந்துள்ளன. குறிப்பாக ஏப்ரல் படுகொலை சார்பாக இவரின் தொடர்பு பற்றி சர்வதேச ஊடகங்கள் ஸ்தாபனங்கள் உட்பட பலர் தகவல்களை வெளியிட்டுள்ளனர். இந்த வரலாற்றைத் திரிபு செய்யும் நடவடிக்கையின் பகுதியாகப் பிள்ளையானின் ‘பிரச்சாரக் குழு’ ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளது. இவரை நல்லவர் வல்லவர் அறிவின் சிகரம் என்றெல்லாம் புலம்பித் தள்ளும் குடுப்பம்தான் இலங்கியச் சந்திப்பை ஒழுங்கு செய்வதிலும் ஈடுபட்டு வருகிறது. கேட்டால் அதுக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை என இவர்கள் சொல்லக் கூடும். அந்தப் பேச்சு ஒளித்து நின்று குத்தும் நடவடிக்கை. விமர்சனத்தோடு ஒன்றுபடும் களப்போறல்ல இலக்கிய சந்திப்பு. தவிர பிள்ளையான் மேலிருக்கும் விமர்சனம் என்பது தள்ளி வைத்து விட்டு போகக் கூடியதல்ல. அதை மறைத்து இலக்கிய அல்லது வேறுவகை ‘கூட்டுகள்’ போடுவது அரசியல் கேவலம்.

 

பிரச்ச்சார தளத்தை நேரடியாக கட்டும் வலிமை இவர்களிடம் கிடையாது. இலக்கிய சந்திப்பு என்ற போர்வையின் பின் இருந்து கொண்டு அரச ஆதரவு அரசியலை மறைமுகமாக செய்வது இந்த சந்திப்பு குழுவுக்கு ஒன்றும் புதிதல்ல. இலங்கை யுத்தம் முடித்தமைக்கு ராஜபக்சவுக்கு நன்றி சொன்னது. ஓடிய இரகுத்தம் ஆற முதல் இலக்கிய சந்திப்பை இலங்கைக்கு எடுத்துச் சென்று கொண்டாடியது. யுத்த மறுப்பு செய்ய மறுத்தது மட்டுமின்றி – யுத்த மறுப்பு செய்தோரை பாசிச ஆதரவாளர் என அவதூறு செய்தது. புலிகள் கொன்று குவிக்கப்பட வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தோடு படுகொலையை நியாயப் படுத்தியது. பின்பு கொலைகளை தமிழ் மக்கள் மறந்துவிட வேண்டும் என பிரச்சாரம் செய்தது. கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிரான சமீபத்து போராட்டங்கள் எதையுமே ஆதரிக்க மறுத்தது. என நாம் அடுக்கிக் கொண்டு போக முடியும்.

 

இவ்வளவு கேவலமான அரசியல் பின்னனி உள்ள இவர்கள் இலங்கை அரச ஆதரவு நிலைப்பாடு என நேரடியாக ஏன் சொல்வதில்லை? தம்மை முற்போக்கு நபர்கள் எனக் காட்டிக் கொள்வதன் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் – மற்றும் -சிந்தனையாளர்/இலக்கியச் செயற்பாட்டாளர்/பல்கலைக்கழக புத்தி ஜீவிகள் மத்தியில் சில ஆதரவை பெறுவது – அதன் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் தமது இருப்பை தக்க வைப்பது என்பதும் இவர்களில் பலரதும் நோக்கம். நேரடியாக தமது அரசியல் நிலைப்பாட்டை வாதிக்கும் மன பலம் – மன சுத்தி இவர்களில் யாருக்கும் கிடையாது. பொய்ப் பெயர்களின் பின் இருந்து இயங்குவது – தொலை பேசி மற்றும் தனியார் உரையாடல்களில் குசு குசுப்பது – எவ்வித ஆதாரமும் அற்ற அவதூறுகளைச் செய்வது என்ற வரலாறுதான் இவர்கள் பலரதும் வரலாறு.

 

சந்திரகாந்தன் பெயரில் இம்மாதம் வெளியான (மார்ச்) ‘ஈஸ்டர் படுகொலை இன , மத நல்லிணக்கம் – அறிதலும் புரிதலும் ‘ என்ற நூல் முற்று முழுதான பொய் பிரச்சார நூல். இதை விமர்சித்த அத்தாஸ் பிவரும் புள்ளியை சுட்டிக் காட்டி இருப்பது கவனத்துக்கு உரியது

 

‘…ஈஸ்டர் தாக்குதல் இஸ்லாத்திற்காகப் புரியப்பட்ட ஒன்று என்பதுடன் அவ்வாறான தாக்குதல்கள் இஸ்லாத்தைப் பின்பற்றும் முஸ்லிம்களால் மேலும் செய்யப்பட முடியும் என்ற வக்கிரப் போக்கு இந்த நூலின் முன் அட்டை சஹ்ரானின் புகைப்படத்தின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது . மேலும் முக்கியமாக நூல் விபரக் குறிப்பில் நூல் அச்சிடப்பட்ட அச்சகத்தின் விரபங்கள் எதுவும் குறிப்பிடப் பட்டிருக்கவில்லை …இந்நூலின் சுமார் 200 பக்கங்களுக்கு மேல் வாசிக்க அவசியப்படவில்லை . ஏனெனில் , இணையத்தளங்களில் உள்ள இஸ்லாமியத் தீவிரவாத இயக்கங்களின் விபரம் , இஸ்லாமியத் தீவிரவாத இயக்கங்களினால் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச ரீதியான தாக்குதல்கள் எனக் குறிப்படப்படும் பல விடயங்கள் அப்படியே பிரதியிடப்பட்டுள்ளன…’ (“சந்திரகாந்தனின் ஈஸ்டர் படுகொலையும் மரத்தில் மாடு கட்டுதலும்” – அத்தாஸ் – அக்கரைப்பற்று – தேசம் (thesamnet.co.uk))

இஸ்லாமுக்கு எதிரான – ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் பற்றிய உண்மை எதுவுமற்ற – தாக்குதல் செய்தவர்களை காப்பாற்றும் – இந்த நூலை போற்றிப் புகழ்பவர்கள் அதை என்ன நோக்கில் செய்கிறார்கள் என்பதை ஊகிப்பது கடினமில்லை. இந்தத் தக்குதலளால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சிலர் சந்திரகாந்தன் கையால் இந்தப் புத்தக பிரதியை பெற்றுக் கொள்ளும் தலைவிதிக்கு திணிக்கப் பட்டிருப்பது மேலும் கேவலம்.

 

ஒரு காலத்தில் – புலிகள் மற்றய இயக்கங்களைத் தாக்கிய காலத்தில் – மற்ற இயக்கம் சார் புலி எதிர்ப்பு சக்திகள் ஓன்று கூட்டும் இடமாக இருந்தது இலக்கியச் சந்திப்பு. அத்தருனத்தில் அடக்குமுறை சார் நபர்கள் கருத்துக்கள் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாக்கக்கப்படக் கூடிய சூழல் இருந்தது. உயிர் பயக் கெடுதி இருத்த போதிலும் இதைப் பலர் துணிந்து செய்தனர் என்பது மிகையில்லை. இன்று அது தூரத்து வரலாறு. அதிகாரத்துடன் ஏதோ ஒருவகையில் இணைந்து தம்மையும் நிறுவனப் படுத்திக் கொண்ட ‘புள்ளிகள்’ பலருக்கும் அத்தகய ‘கடும் விமர்சன’ போக்கு இன்று தேவை இல்லை. பெண்ணியம் – தேசம் – சாதிய ஒடுக்குமுறை – ஆகிய அனைத்துமே இன்று இவர்கள் தமது சொந்த நலன்களுக்காக பாவிக்கும் ஆயுதங்கள் என குறுகி நிற்கிறது. இஸ்லாமிய வெறுப்பு ஊறிக் கிடப்பது பற்றி எவரும் கண்டுகொள்வதில்லை. இந்த லட்சணத்தில் இன உறவு பற்றி பேசப் போகிறார்களாம். அதைப் பல மேடைகளில் ராஜபக்ச பேசி நாம் கேட்டு இருக்கிறோம். நீங்களும் ஒப்பிக்கத் தேவை இல்லை.

 

தமிழீழ விடுதலைப் புலிகளை எதிர்த்தல் – அதனால் தாம் முற்போக்கு என காட்டுதல் ஆகிய ஒற்றை நோக்கை தாண்ட முடியாத இந்த குழுவுக்கு வெளியில்தான் இலக்கியம் இயங்கி வருகிறது.

 

“சந்திரகாந்தனின் ஈஸ்டர் படுகொலையும் மரத்தில் மாடு கட்டுதலும்” – அத்தாஸ் – அக்கரைப்பற்று

சர்வதேச ரீதியாக அதிர்வலையை ஏற்படுத்திய ஈஸ்டர் தீவிரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சிவ . சந்திரகாந்தன் நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார் . அந்த நூலின் பெயர் ‘ ஈஸ்டர் படுகொலை இன , மத நல்லிணக்கம் – அறிதலும் புரிதலும் ‘ ஆகும் . இந்த நூல் 23.03.2024 ஆம் திகதி மட்டக்களப்பில் வெளியீட்டு வைக்கப்பட்டது . இவரது இந்த முயற்சி பாராட்டுதலுக்குரியதாகும் .

இவருக்குப் பாராட்டுத் தெரிவித்துவிட்டு பின்னர் ஏன் ‘ சந்திரகாந்தனின் ஈஸ்டர் படுகொலையும் மரத்தில் மாடு கட்டுதலும் ‘ என்று தலைப்பிடப்பட்டுள்ளது என்ற கேள்வி வாசகர்களுக்கு எழக்கூடும் . இவரது நூலும் அந்த மாதிரித்தான் உள்ளது . ஈஸ்டர் படுகொலை தொடர்பில் தலைப்பிட்டுவிட்டு இணையத்தள செய்திகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளார் . இந்த நூலைப் பொறுத்தவரை தகவல் மூலமற்ற செய்திகளும் பல குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன . குறிப்பாக இந்த நூலின் பின்னால் அதிகார சக்திகளின் மறைகரங்கள் உள்ளதா என்ற கேள்வி எழுகின்றது . ஏனெனில் , ஈஸ்டர் தீவிரவாதத் தாக்குதல் இடம்பெற்ற போது சஹ்ரானின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைத் தொலைபேசியில் வைத்திருந்தமைக்காக பல நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கைது  செய்யப்பட்டு பல மாதங்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர் . ஆனால் அவ்வாறான எதுவித கெடுபிடிகளும் இல்லாமல் சர்வதேச ரீதியாகப் பிரகடனப்படுத்தப்பட்ட சஹ்ரான் எனும் தீவிரவாதியின் புகைப்படத்தை முன் அட்டையில் இட்டு இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.  இங்குள்ள கேள்வி என்னவெனில் , பாதுகாப்புத் தரப்பினர் முஸ்லிம்களைக் கைது செய்தமை போன்று ஏன் பிள்ளையானைக் கைது செய்யவில்லை என்பதுடன் அவருக்கு எதிராக ஏன் எதுவித சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதாகும் . மேலும் சஹ்ரானின் இப் புகைப்படத்தை இவர் இஸ்லாமிய மதத்திற்கும் அதனைப் பின்பற்றும் முஸ்லிம்களுக்கும் எதிரான குறியீடாகப் பயன்படுத்தியுள்ளார் . ஈஸ்டர் தாக்குதல் இஸ்லாத்திற்காகப் புரியப்பட்ட ஒன்று என்பதுடன் அவ்வாறான தாக்குதல்கள் இஸ்லாத்தைப் பின்பற்றும் முஸ்லிம்களால் மேலும் செய்யப்பட முடியும் என்ற வக்கிரப் போக்கு இந்த நூலின் முன் அட்டை சஹ்ரானின் புகைப்படத்தின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது . மேலும் முக்கியமாக நூல் விபரக் குறிப்பில் நூல் அச்சிடப்பட்ட அச்சகத்தின் விரபங்கள் எதுவும் குறிப்பிடப் பட்டிருக்கவில்லை . அவை மறைக்கப்பட்டுள்ளன . குறிப்பாக அச்சு மற்றும் வெளியீட்டுக் கட்டளைச் சட்டம் பிரிவு 02 இன் படி இது குற்றச் செயல் என்பதுடன் பிரிவு 03. இக் குற்றத்திற்கான தண்டனையும் குறிப்பிடுகின்றது .

இந்நூலானது குறித்த சட்டத்தை மீறி வெளியிடப்பட்டுள்ளது . குறிப்பாக இந்நூலானது மிகப்பெரிய பொய்யொன்றைப் பதிவு செய்துள்ளது . பக்கம் 30 இல் ” இரண்டாம் தடவை மேற்கொள்ளப்பட்ட உடற் கூற்றியல் மரபணுப் பரிசோதனையில் ( DNA ) புலஸ்தினியின் மரணம் உறுதி செய்யப்பட்டது ” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது . இது திட்டமிட்ட பொய்ப் பிரச்சாரமாகவே அமைகின்றது . ஏனெனில் , புலஸ்தினி மகேந்திரன் ( சாரா ஜாஸ்மின் ) எனும் பெண் 26.04.2019 ஆம் திகதி சாய்ந்தமருது பாதுகாப்பு வீட்டில் உயிரிழந்தாரா என்பது தொடர்பில் இலங்கை அரசாங்கத்தினால் 03 பரிசோதனைகள் நடத்தப்பட்டன . இதில் முதல் பரிசோதனையில் இவரது மரணம் உறுதிப்படுத்தப்படவில்லை . இரண்டாவது பரிசோதனையிலும் இவரது மரணம் உறுதிப்படுத்தப்படவில்லை . சுமார் 04 வருடங்களின் பின் 06.04.2023 ஆம் திகதி வெளியிடப்பட்ட மூன்றாவது பரிசோதனை அறிக்கையிலேயே குறித்த பெண் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது . உண்மை இவ்வாறு இருக்க இவர் , இரண்டாவது பரிசோதனையில் புலஸ்தினி மகேந்திரனின் மரணம் உறுதிப்படுத்தப்பட்டது என்று எழுதியுள்ளமை ஏன் ? மேலும் பக்கம் 32 இல் ” நேரடியாக எதிர்வினையை சிங்கள பௌத்த மக்கள் மீது தொடுத்தால் அதனால் ஏற்படும் விளைவுகள் சிறுபான்மை முஸ்லிம்களைப் பொறுத்தவரை பாரதூரமாக இருக்கும் . அதனால் எதிர்கொள்ளும் கட்டமைப்பு ஐ.எஸ் குழுவினரிடம் இல்லை . இதனால் பௌத்த விகாரைகள் தடுக்கப்பட்டு சிங்கள மக்கள் ஒன்று கூடும் தேவாலயங்கள் குறிவைக்கப்பட்டன ” என்ற கருத்தைப் பதிவு செய்துள்ளார். இத்தகவல் இருட்டடிப்புச் செய்யப்பட்ட பொய்யாகும் . ஏனெனில் , கொச்சிக்கடை அந்தோனியர் தேவாலயத்தில் இறந்தவர்களில் கணிசமானவர்கள் தமிழ் பேசும் கிறிஸ்தவர்கள். மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இறந்தவர்கள் அனைவரும் தமிழ் கிறிஸ்தவர்கள் . அதேபோன்றுதான் நீர்கொழும்பு கட்டுவாப்பீட்டி தேவாலயமுமாகும் . இம் மூன்று தேவாலயங்களில் இறந்தவர்களில் கணிசமானவர்கள் தமிழ் பேசும் மக்களாக உள்ளமையை மறைத்து சிங்கள் மக்கள் ஒன்று கூடும் தேவாலயங்கள் குறிவைக்கப்பட்டன என்ற கருத்தைக் குறிப்பிடுகின்றார் . ஆனால் தொலைக்காட்சிகளில் பேசும் பேசும் போது இஸ்லாமியத் தீவிரவாதிகள் திட்டமிட்டு தமிழ் மக்களை அல்லது கிறிஸ்தவர்களைப் படுகொலை செய்துள்ளார்கள் என்று பேசி வருகின்றார். ஆக இவரின் இரண்டு கருத்துக்களும் ஒன்றுக்கொன்று முரண்பாடுடையதாக உள்ளது . இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயம் என்னவெனில் , ஈஸ்டர் தாக்குதலைத் தொடர்ந்து முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வியாபார நிலையங்கள் மீதான எரிப்புக்களையும் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களையும் உயிரழிப்புக்களையும் செய்தவர்கள் யார் ? அவர்கள் அத்தனை பேரும் கிறிஸ்தவர்களா ? மேலும் சீயோன் தேவாலய சபையின் பிரதம ஊழியரான றொசான் மகேசன் என்பரின் நேர்காணல் ஒன்று இந்த நூலில் பிரசுரிக்கப்பட்டுள்ளது . பக்கம் 48 இல் அவர் இவ்வாறு குறிப்பிடுகின்றார் . சீயோன் தேவாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலினால் ஏற்பட்ட தீயை அணைக்க தீ அணைப்புப் படையினர் அழைக்கப்பட்டனர்.

* 45 நிமிசம் நெருப்பு பத்திக் கொண்டே இருந்துச்சு . தீயணைப்புப் படை வாரதுக்கு எப்படியும் 15 – 17 நிமிசம் போயிருச்சு . நான் அந்த சி.சி.டியில் கவனிச்சனான் . 17 நிமிசத்துக்குப் பிறகு தான் அவங்க வந்ததும் அவர்களுக்குத் தண்ணீரக் குழாய்களைப் பூட்டத் தெரியவில்லை. இதெல்லாம் இழுத்திட்டு போற நேரம் ஒரு 35 நிமிசம் ஆச்சுது . அப்ப எங்கட பிள்ளைகள் தான் அந்தக் குழாய்களையும் பூட்டிக் குடுக்கக்கூட உதவியிருக்காங்க ” எனக் குறிப்பிடுகின்றார் . இவரின் நேர்காணலில் இருந்து எழும் கேள்வி என்னவெனில் , சியோன் தேவாலயத்திற்குத் தீயணைக்க வந்தவர்களுக்கு தண்ணீரக் குழாய்களைப் பூட்டத் தெரியாமல் போனமை ஏன் என்பதாகும் . இவர்கள் உண்மையில் தீயணைப்புப் படையினரா அல்லது வேற்று நபர்களா ? மேலும் இவர் குறித்த நேர்காணலின் இறுதியில் பக்கம் 49 இல் ” முஸ்லிம்களுக்குத் தெரியும் , அவர்களுக்குத் தெரியாம இது நடக்கல்ல ” என்பதைத் தொடர்ந்து மூன்று தடவைகள் சொன்னதாகத் தொடர்ந்து மூன்று தடவைகள் இந்நூலில் பதியப்பட்டுள்ளன . இங்குள்ள கேள்வி என்னவெனில் , சீயோன் தேவாலய சபையின் பிரதம ஊழியரான றொசான் மகேசன் குறிப்பிடும் முஸ்லிம்கள் யார் ? எல்லா முஸ்லிம்களும் ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதலை அறிந்திருந்தார்களா அல்லது குறித்த முஸ்லிம் நபர்கள் மாத்திரம் ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதலை முன்கூட்டியே அறிந்திருந்தார்களா ? அவர் உறுதியாகக் குறிப்பிடும் அந்த முஸ்லிம் நபர்கள் யார் ? ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முன்கூட்டியே அறிந்து அதனை மறைத்த குற்றத்தைப் புரிந்த முஸ்லிம் நபர்களுக்கு எதிராக ஏன் இவர் இதுவரை சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை அத்துடன் அல்லது கோரவில்லை ? மேலும் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முன்கூட்டியே அறிந்த முஸ்லிம் நபர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்காமல் மறைத்த குற்றத்திற்கு பிரதம ஊழியரான றொசான் மகேசனும் உள்ளாக்கப்படுவாரா ? றொசான் மகேசனின் கருத்தானது மிகவும் பாராதூரமான குற்றச்சாட்டாக உள்ளது . முஸ்லிம்கள் முன்கூட்டியே அறிந்திருந்தார்கள் என்று குறிப்பிடுவதானது கிறிஸ்தவர்கள் கொல்லப்படுவதை முஸ்லிம்கள் விரும்பியிருந்தார்கள் என்பதாக அரத்தம் கொள்ளப்படுவதுடன் முஸ்லிம்கள் ஈஸ்டர் படுகொலையைத் தடுக்க விரும்பவில்லை என்பதாக அமைகின்றது . இதன் மறுதலை முஸ்லிம்கள் . மாற்று மதத்தினர் கொல்லப்படுவதை ஆதரிக்கின்றவர்களாக உள்ளனர் . உண்மையில் மதிப்புக்குரிய றொசான் மகேசன் இக்கருத்தைக் கூறினாரா அல்லது இந்நூலின் ஆசிரியர் சந்திரகாந்தன்இக்கருத்தைப் பதிவு செய்துள்ளாரா ? நிச்சயமாக இக்கருத்தானது கத்தோலிக்க கிறிஸ்தவ முஸ்லிம்களுக்கு இடையிலான நல்லுறவினைச் சிதைக்கும் ஆபத்தைக் கொண்டுள்ளது . இவ்வாறான ஒரு நிலையை உருவாக்குவதற்காக இக்கருத்து திட்டமிட்டுப் பதியப்பட்டுள்ளதா என்ற பல கேள்விகள் உள்ளன .

மேலும் இந்நூலின் 121 ஆம் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது ” இந்தியாவில் உள்ள ஹெச்.ஜி. ரசூல் என்ற எழுத்தாளர் பின்வருமாறு கூறுகின்றார் . இந்த வஹாபி குழுவினர் உயர்ந்தது எது ? புத்த சாசனமா ? அல்லது குரானா ? என இலங்கையில் பிரச்சாரம் செய்து புத்த பிக்குகளிடமும் பொதுபலசேனாவிடமும் சமய வெறியை ஊட்டுவதற்குக் காரணமாக அமைந்த அண்மைக்கால வரலாறு நாம் அறிந்ததே ” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது . இதில் ஒரு சில உண்மைகள் இருந்தாலும் நூறு வீத உண்மையாகக் கொள்ள முடியாது . இங்கு பாரிய இருட்டடிப்பொன்று செய்யப்பட்டுள்ளது . பௌத்த பிக்குகளுக்கும் பொதுபலசேனா அமைப்பிற்கும் மத வெறி ஏற்படக் காரணம் வஹாபிசக் குழுவினர் என்ற கருத்தானது பொதுபலசேனா இயக்கம் இயல்பிலேயே சாந்தமான அமைதி போதிக்கும் அமைப்பு என்பதும் அதற்கு மதவெறி வருவதற்குக் காரணம் வஹாபிசக் குழுவினர் தான் என்பதாகவும் உள்ளது . எனினும் வரலாற்றை எடுத்து நோக்கினால் , 30 வருட யுத்த காலத்தில் பொதுபலசேனாவைப் போன்று பல பௌத்த அமைப்புக்கள் உருவாகியிருந்தன . அவை தமிழர் தொடர்பில் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை என்ற நிலைப்பாடு தமிழர்களிடம் உண்டு . குறிப்பாக தனிச் சிங்கள் மொழிச் சட்டம் போன்ற மொழி வெறி பிடித்தமைக்கும் கிறிஸ்தவ மிசனறிகளுக்கு எதிரான தாக்குதல்களின் போது மதவெறி பிடித்தமைக்கும் காரணம் இந்த வஹாபிச குழுவினர் அல்ல . 1900 ஆண்டளவில் கிறிஸ்தவ மிசனறிகளுக்கு எதிராகவும் கிறிஸ்தவர்களுக்கும் எதிராகவும் பௌத்த தேசிவாத அமைப்புக்கள் தாக்குதல்களை நடத்தியுள்ளன . அவ்வாறான தாக்குதல்களுக்கு கிறிஸ்தவ மிசநெறிகளின் அடிப்படைவாதமே காரணம் என்று குற்றம் சுமத்த முடியுமா ? ஒருபோதும் இல்லை . அது தவறான வாதமாகும் . – இலங்கையைப் பொறுத்தவரை சிங்கள பௌத்த தேசியவாதம் நன்கு கட்டமைக்கப்பட்ட ஒன்றாக இருந்து வருகின்றது . ஆரம்பத்தில் அதன் எதிரியாக கிறிஸ்தவர்கள் இருந்தார்கள் . 1915 சிங்கள முஸ்லிம் கலவரத்தின் போது முஸ்லிம்களின் வர்த்தகம் மறைமுகக் காரணியாக இருந்தது . பின்னர் 1956 களில் சிங்கள மொழி பௌத்த மத மறுலர்ச்சியாக மாறியது . பின்னர் 1970 களில் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தின் போது அது பௌத்த இனவாதமாக வடிவம் கொண்டது . குறிப்பாக 2009 யுத்தத்தின் பின்னர் முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்த பேரினவாதமாக அது வடிவம் கொண்டுள்ளது . பொதுபலசேனா போன்ற பௌத்த இயக்கங்களின் உருவாக்கம் அதன் ஸ்தீரம் என்பது பூகோள மற்றும் தேசிய அரசியல் சக்திகளின் மறைகரம் என சர்வதேச ரீதியாக அறியப்பட்ட கலாநிதிகள் பேராசிரியர்கள் மிகப் பெரிய ஆய்வுகளை வெளியிட்டுள்ள நிலையில் வராற்றை இருட்டடிப்புச் செய்து மொட்டைத் தலைக்கும் முழங்காலும் முடிச்சுப் போடும் இதுபோன்ற பல கதைகள் இந்நூலில் அதிகம் உள்ளன .

எனினும் இந்நூலில் பக்கம் 121 – 122 இல் மிக முக்கிய விடயம் ஒன்றைப் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர் சந்திரகாந்தன் . சிங்கள மக்களை மையப்படுத்தி ஏன் இந்த தஃவா தேவைப்பட்டது ? இந்த தஃவா அமைப்பை முன்னெடுத்தவர்கள் தமிழக தவ்ஹீத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் . தமிழ் நாட்டில் உள்ள எல்லா இந்துக்களுக்கும் இஸ்லாத்தைச் சொல்லிவிட்டு அவர்கள் இலங்கைக்கு வந்துவிட்டார்களா ? இலங்கை போன்ற பல்லின சமூகங்கள் . பல மதங்கள் உள்ள நாட்டில் இந்த அணுகுமுறை என்ன விபரீதத்தை தரப்போகின்றது என்ற விமர்சனங்களை நாம் எளிதில் புறந்தள்ளிவிட முடியாது என்கின்றார்.

 

இவ்விடயம் மிகவும் முக்கியத்துவத்துடன் முஸ்லிம்களால்  அணுகப்பட வேண்டியதாகும் . தீவிரப் போக்குள்ள தவ்ஹீத் நபர்கள் தொடர்பில் முஸ்லிம் சமுதாயம் மிகவும் அவதானமாக நடந்து கொள்ளவேண்டிய அபாயக் கட்டத்தில் உள்ளது . குறிப்பாக இலங்கையில் உள்ள ஒரு சில தவ்ஹித் அமைப்புக்களுக்கும் படையினருக்கும் இடையில் தொடர்பு இருந்ததா என்பது தொடர்பில் ஈஸ்டர் தாக்குதலை விசாரணை செய்த பாராளுமன்ற விசேட குழு பல இடங்களில் கேள்வி எழுப்பியுள்ளது .

இலங்கையில் இவ்வாறான குற்றச்சாட்டுக்கு உள்ளான தவ்ஹீத் இயக்கங்களின் மூலவேர் இந்தியா குறிப்பாக தமிழ் நாட்டில் செயற்பட்டுவரும் சில தவ்ஹீத் இயக்கங்களாகும் . இங்குள்ள முக்கிய கேள்வி என்னவெனில் , இலங்கையில் உள்ள ஒரு சில தவ்ஹீத் இயக்கங்களுக்கும் படையினருக்கும் தொடர்பிருப்பதாக எழுப்பப்பட்ட கேள்விகளும் சந்தேகங்களும் தமிழ் நாட்டுத் தவ்ஹீத் இயக்கங்கள் மீதும் எழுத்துள்ளன . மேலும் குறித்த தவ்ஹீத் இயக்கங்களால் இந்தியாவிலும் இலங்கையிலும் மத நல்லிணக்கம் உருவானதை விடவும் இனக் குரோதமும் மத முரண்பாடுகளுமே அதிகம் வளர்ந்துள்ளன . ஆக இவ் அமைப்புக்களின் செயற்பாடுகளின் பின்னணியில் ஏதாவது மறை கரங்கள் உள்ளனவா என்ற கேள்வி உள்ளதுடன் இவர்கள் மத நல்லிணக்கத்தைக் காட்டிலும் இனங்களுக்கும் மதங்களுக்குமிடையில் முரண்பாடான விடயங்களையே தூக்கிப் பிடிப்பவர்கள் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகி வருகின்றமை ஏன் ? மேலும் இந்நூலின் பக்கம் 125 இல் தப்லீக் ஜமாஅத் எனும் தலைப்பு இடப்பட்டு அது தொடர்பில் பல விடயங்கள் எழுதப்பட்டுள்ளன . பக்கம் 126 இல் குறிப்பிடப்பட்ட முக்கிய விடயங்கள் பின்வருமாறு ” சாதாரண முஸ்லிம்களை மதவாதிகளாக மாற்றுவதில் பெரும்பங்கை இவர்களே வகிக்கின்றனர் . உயிரைக் கொடுப்பவர்களுக்கு சுவர்க்கத்தில் பெரிய அந்தஸ்து உள்ளது . அப்படியாக உயிரைக் கொடுத்து ஷஹீத் ஆகும் போது நேரடியாக மரணித்தவுடன் சுவர்க்கம் கிடைக்கும் . அப்படியானவர்களுக்கு மரணத்தின் பின்னர் எவ்வித விசாரணைகளும் கிடையாது . அவர்களுக்கு சுவரக்கத்தில் வாழ்வதற்கு 72 கன்னிகள் கிடைப்பார்கள் என்பதாக கற்பிப்பதன் மூலமாக அல்லாஹ்வின் பாதையில் செல்வது என்பதன் முழு அர்த்தங்களையும் புரிந்து கொள்வர் என இந்த தப்லீக் ஜமாஅத் பிரச்சாரங்களுக்குள் உள்வாங்கப்பட்டு பக்தி மயமானவர்களாக மாறுகின்ற இளைஞர்கள் ‘ பீஸபீலில்லாஹ் ‘ என்பதன் முழு அர்த்தமான ஜிஹாத் மற்றும் ஷஹித் போன்றவற்றை நோக்கி செல்லக் கூடிய நிலமைக்கு இட்டுச் செல்லப்படுவார்கள் . இந்த தப்லீக் ஜமாஅத்தினர் ஒருபோதும் ஜிஹாத்துக்குச் செல்லுங்கள் . இஸ்லாமிய ஆட்சியை உருவாக்குங்கள் என்கின்ற வஹாபிச பிரச்சாரங்களை நேரடியாக மேற்கொள்வதில்லை . சஹ்ரானின் தந்தையார் முகம்மது ஹாசிம் , தப்லீக் பணிகளில் இணைந்து பங்காற்றியவர் என்பது கவனம் கொள்ளத்தக்கது ” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது .

பல்வேறு இஸ்லாமிய இயக்கங்கள் தொடர்பிலும் நபர்கள் தொடர்பிலும் ஈஸ்டர் தாக்குதலுக்கு ஈடான குற்றச்சாட்டுக்களை முன்வைத்த இந்த நூல் , பக்கம் 146 இல் அப்துல் ரவூப் மௌலவி என்பவர் தொடர்பில் புகழ்மாலை சூடியுள்ளது . ” அப்துர் ரவூப் மௌலவி அவர்கள் தனது வசிப்பிடமான ஐந்தாம் குறிச்சி , ஆதம்போடி ஹாஜியார் ஒழுங்கையிலிருந்து முஅத்தினார் வீதியூடாக தனது தந்தையின் பத்ரிய்யாப் பள்ளிக்குச் செல்லும் காட்சி ஒரு தனியழகாகும் . இந்திய அத்தரின் நறுமணம் மௌலவி அவர்கள் வருவதற்கு முன்பாகவே அவ்வீதிகளில் பரவத் தொடங்கிவிடும் . தென்றல் தவழ்ந்து வரும் அந்த இனிய மாலைப் பொழுதுகளில் தூரத்தே வருவோரையும் சுண்டி இழுக்கும் வாசணை அப்துல் ரவூப் மௌலவி வருகின்றார் என்ற செய்தியைச் சொல்லிவிடும் ” என்று புகழ்ந்துள்ளது . இங்கு சுட்டிக்காட்ட வேண்டிய விடயம் என்னவெனில் , சந்திரகாந்தனின் இந்த நிலைப்பாட்டையே இந்தியத் தூதரும் பொதுபலசேனாவும் கொண்டுள்ளதாக அறியப்படுகின்றது . இந்தியத் தூதர் சிறிகோபால் பாக்லே 02.10.2022 ஆம் திகதி அப்துல் ரவூப் மௌலவி குழுவினருடன் பிரத்தியேக சந்திப்பொன்றினை மேற்கொண்டிருந்தார் . இது இவரது கிழக்கு மாகாண விஜயத்தின் ஓர் அங்கமாக இருந்தது . அதேபோன்று 21.01.2022 ஆம் திகதி அப்துல் ரவூப் மௌலவி குழுவினருக்கும் கலபொட அத்த ஞானசார தேரருக்கும் இடையிலான சந்திப்பு இராஜகிரியவில் இடம்பெற்றது . கலபொட அத்த ஞானசார தேரர் ஏனைய எல்லா இஸ்லாமிய இயக்கங்களை எதிர்ப்பதுடன் சூபிக்கொள்கை ஆதரிக்கின்றார் . அதேபோன்றே சந்திரகாந்தனும் ஏனைய இஸ்லாமிய இயக்கங்கள் மீது இந்நூலில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளடன் அப்துல் ரவுப் மௌலவியை மாத்திரம் ஆதரிக்கின்றமையில் ஏதாவது திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரல் உண்டா ? மேலும் முக்கியமாக ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் இந்நூலின் ஆசிரியரான சந்திரகாந்தன் மீது அவரது பிரத்தியேகச் செயலாளராகப் பல வருடங்கள் பணிபுரிந்து வந்த ஹன்சீர் அசாத் மௌலானா என்பவர் பாரிய குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார் . இக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஆவணம் 05.09.2023 ஆம் திகதி சனல் 04 தொலைக்காட்சியினால் வெளியிடப்பட்டது . எனினும் இக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பதிலளிக்காமல் சந்திரகாந்தன் நழுவிச் சென்றுள்ளார் . ஈஸ்டர் படுகொலை தொடர்பில் 329 பக்கங்களில் நூலை எழுதிய சந்திரகாந்தன் , தன்மீதான குற்றச்சாட்டுக்களுக்கு பதில் வழங்க ஆகக் குறைந்தது ஒரு பக்கத்தைக் கூட ஒதுக்காமல் விட்டுள்ளமை மிகப் பெரிய அபத்தமாகும் . பக்கம் 324 இல் முடிவுரை எனக் குறிப்பட்டதுடன் அதில் இவ்வாறு குறிப்பிடுகின்றார் . ” குறித்த நூல் அச்சுக்குப் போகத் தயாராகிக் கொண்டிருந்த வேளையில் குறித்த ஈஸ்டர் தாக்குதல் பற்றிய புதிய புரளி கலந்த செய்தியொன்று வெளிவந்தது . அதாவது சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகிய என்னையும் குறித்த தாக்குதலுடன் தொடர்புபடுத்தி அப்புரளியானது சர்வதேச ஊடகமான லண்டனைத் தளமாகக் கொண்டிருக்கும் சனல் 04 தொலைக்காட்சியில் 05.09.2023 அன்று ஒளிபரப்பாகியுள்ளது ” என தன் மீதான குற்றச்சாட்டு தொடர்பில் வெறும் 15 வரிகளில் எழுதியுள்ளமை இந்நூலை வாங்கிய அனைவரையும் ஏமாற்றியதாகவே அமையக் கூடும் .

இந்நூலின் இறுதியாக அவர் இவ்வாறு குறிப்பிடுகின்றார் . ” இந்நூலினை ஊன்றி படிக்கின்ற போது சனல் 4 ஊடாக என்மேல் பரப்பப்பட்டுள்ள என்மீதான புரளிகள் எவ்வளவு அபத்தமானவை என்பதை வாசகர்களாகிய ஒவ்வொருவரும் நன்கே புரித்துகொள்வார்கள் என்று நம்புகின்றேன் . அதையும் தாண்டிய ஏதாவது சந்தேகங்கள் உங்கள் மனதில் இருந்தால் சஹ்ரான் தலைமையிலான ஈஸ்டர் தாக்குதல்தாரிகள் தமது தாக்குதலுக்கு தயாரான போது ஒருமித்து நின்று சத்தியப்பிரமாணம் செய்த காணொளி அதனைத் தீரத்து வைக்கும் என்று நம்புகிறேன் ” என நூலை முடித்துள்ளார் . இந்நூல் தொடர்பில் குறிப்பிட்டுச் சொன்னால் , இந்நூலின் சுமார் 200 பக்கங்களுக்கு மேல் வாசிக்க அவசியப்படவில்லை . ஏனெனில் , இணையத்தளங்களில் உள்ள இஸ்லாமியத் தீவிரவாத இயக்கங்களின் விபரம் , இஸ்லாமியத் தீவிரவாத இயக்கங்களினால் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச ரீதியான தாக்குதல்கள் எனக் குறிப்படப்படும் பல் விடயங்கள் அப்படியே பிரதியிடப்பட்டுள்ளன . அச் செய்திகள் தொடர்பில் தகவல் மூலங்களும் இடப்படவில்லை . இந்நூலை வாசிப்பதற்கு முன்பு இருந்த ஈர்ப்பும் அவதானிப்பும் வாசித்து முடித்த பின் அப்படியே இல்லாமற் போய்விட்டது . உண்மையைச் சொல்லப்போனால் இந்த நூலை வாசித்து முடித்த போது மரத்தில் மாடு கட்டிய நகைச்சுவை தான் என் ஞாபகத்திற்கு வந்தது . உங்களுக்கும் மரத்தில் மாடு கட்டிய நகைச் சுவை தெரிந்தால் சிரித்துவிட்டுச் செல்லுங்கள் . தெரியாவிட்டால் இந்த நூலை வாசித்துப் பாருங்கள் .

“ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக இதுவரை நடத்தப்பட்ட அனைத்து விசாரணைகளும் தவறானவை என்பதோடு, அநீதியானவை.” – நாடாளுமன்றத்தில் பகீர் கிளப்பிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கோட்டாபய ராஜபக்ஷவிடமும் இரகசியமான ஆவணங்கள் கையளிக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

“இரண்டு நாட்களுக்கு முன்னர், பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பு ஆலோசகர் பேராசிரியர் ரோஹான் குணரத்ன, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தும் விசாரணைக் குழுக்களுக்கு வெளிப்படுத்த முடியாத, மிகவும் இரகசியமான அறிக்கைகள் தங்களிடம் உள்ளதாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த அறிக்கைகளை எந்தக் காரணம் கொண்டும் வெளியிட முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, நான் நியமித்த ஜனாதிபதி ஆணைக்குழுவானது, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அறிக்கையை கையளிக்கும்போது, தனியான ஒரு பைலை, கையளித்தனர்.

 

இந்த பைலை சட்டமா அதிபருக்கோ, புலனாய்வுப் பிரிவினருக்கோ, சி.ஐ.டியினருக்கோ, பொலிஸாருக்கோ வழங்காமல், தனிப்பட்ட ரீதியாக வைத்துக் கொள்ளுமாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

ரோஹான் குணரத்ன இரகசியமான அறிக்கைகள் தங்களிடம் உள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், கோட்டாபய ராஜபக்ஷவிடமும் இரகசியமான பைல் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

 

எனவே, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக இதுவரை நடத்தப்பட்ட அனைத்து விசாரணைகளும் தவறானவை என்பதோடு, அநீதியானவை என்பதை இங்கே நான் கூறிக்கொள்கிறேன்.

 

சனல் 4 வெளியிட்டுள்ள காணொளி தொடர்பாக, நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நியமிப்பது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவரின் நிலைப்பாட்டில்தான் நானும் உள்ளேன்.

 

இந்த நாடாளுமன்றில் இதற்கு முன்னரும் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது.

 

இதில், எனக்கு எதிரானவர்கள் மட்டும்தான் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டார்கள்.

 

வன்மத்துடன், பழி வாங்கும் நோக்கத்துடன் தான் இந்த தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.எஸ். அமைப்பைச்சேர்ந்தவர்கள் இன்றும் இலங்கையில் இருந்தால் பிள்ளையான் அதனை வெளிப்படுதல் வேண்டும் – நாடாளுமன்றத்தில் ஏல்.எல்.எம். அதாவுல்லாஹ் !

ஐ.எஸ். அமைப்பைச்சேர்ந்தவர்கள் இன்றும் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் தெரிவிக்கும் விடயம் உண்மையாக இருந்தால் அவர் அவ்வாறானவர்களை இனம்காட்ட வேண்டும். அவ்வாறு இல்லாமல் இல்லாத விடயங்களை தெரிவித்து குழப்பங்களை ஏற்படுத்த இடமளிக்க முடியாது என ஏல்.எல்.எம். அதாவுல்லாஹ் தெரிவித்தார்.

 

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (22) நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

 

ஈஸ்டர் குண்டு தாக்குதலின் சூத்திரதாரி யாராக இருந்தாலும் அவர் கண்டறியப்படவேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும். எங்களால் நீதியை பெற்றுக்கொடுக்க முடியாவிட்டாலும் இறைவனின் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது.

 

அத்துடன் ஈஸ்டர் தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்னர் ஐ.எஸ். பயிற்சி பெற்றவர்கள் நாட்டில் இருப்பதாக அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் அன்று தெரிவித்தபோது அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க தவறியதால் பாரியதொரு அழிவு ஏற்பட்டுள்ளது. அதேநேரம் தற்போதும் நாட்டில் ஐ.எஸ் அமைப்பைச்சேர்ந்தவர்கள் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் தெரிவித்திருக்கிறார்.

 

சந்திரகாந்தன் இந்த அரசாங்கத்தில் இருப்பவர். அப்படியானால் இது தொடர்பில் அவர் வெளிப்படுத்தி, அப்படியானவர்களை இனம்காட்ட வேண்டும். அவ்வாறு இல்லாமல் இல்லாத விடயங்களை தெரிவித்து குழப்பங்களை ஏற்படுத்த இடமளிக்க முடியாது என்றார்.

“ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள தமது மக்களையே கூட கொல்லத்தயங்க மாட்டார்கள் என்பதையே ஈஸ்டர் தாக்குதல் காட்டுகின்றது.” – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

“ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள தமது மக்களையே கூட கொள்ளத்தயங்க மாட்டார்கள் என்பதையே ஈஸ்டர் தாக்குதல் காட்டுகின்றது.” என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் தற்போதைய அரசாங்கமே உள்ளது என வெளிக்கொணரப்பட்டுள்ள விடயங்கள் என்பது எங்களுக்கு ஒன்றும் புதிதல்ல.  இது ஒரு ஆச்சரியமான விடயமும் அல்ல. சனல் 4 காணொளியில் உள்ள விடயங்களை அடிப்படையாகக் கொண்டு தாக்குதலின்போது இடம்பெற்ற உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் காரணமாக நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள சிங்கள மக்களும் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.

எவ்வாறாயினும் ஆட்சிப்பீடம் ஏறுவதற்கும், ஆட்சி அதிகாரங்களை தக்கவைத்துக்கொள்வதற்கும், அதனை வெற்றி கொள்வதற்கும் இராணுவத்தை பயன்படுத்தி இவர்கள் எந்தவொரு உச்சக்கட்டத்துக்கும் செல்வார்கள்.  தமது மக்களையும் இழப்பதற்கு தயார் என்பதை சரியான கோணத்தில் அறிந்துகொள்ள முயற்சித்தால் இந்த தாக்குதலின் பின்னணி குறித்த உண்மைகள் அனைத்தையும் சிங்கள மக்கள் விளங்கிக்கொள்வார்கள் என நான் நினைக்கிறேன்.

மேலும் நாட்டின் உள்ளக விசாரணைகள் மூலம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி மற்றும் தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் யார் என்பதை அறிந்து கொள்ள முடியுமா என்பது கேள்விக்குறியாகும்.  பாராளுமன்றத்தில் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அரசாங்கத்திற்கு ஆதரவாகவே பெரும்பான்மை காணப்படுகிறது.

இந்த பெரும்பான்மை, அரசாங்க தரப்பினரையே இன்று சனல் 4 நிறுவனம் குற்றவாளிகளாக அடையாளப்படுத்தியுள்ளது.  தாக்குதலின் பின்னணியில் ராஜபக்ஷ தரப்பினரே உள்ளனர் என்பதை இந்த காணொளி மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட ராஜபக்ஷ தரப்பினரே பாராளுமன்றத்தில் தெரிவுக் குழுவொன்றை அமைத்து விசாரணைகளை மேற்கொள்வது என்பது வேடிக்கையானது.

அதாவது குற்றவாளி ஒருவர் தன்னுடைய குற்றத்தையே தானே விசாரிப்பது போன்றது. இது போன்ற முட்டாள்தனமான விடயத்துக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றார்.

“முஸ்லிம் சமூகத்தைக் கருவறுக்வே ஈஸ்டர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.” – நாடாளுமன்றத்தில் ரிஷாட் !

ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றும் திட்டத்தில்தான் ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை, செனல்-4 தொலைக்காட்சி சாட்சியங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

 

செனல்-4 அதிர்வலைகள் குறித்து பாராளுமன்றத்தில் (05) உரையாற்றிய அவர் தெரிவித்ததாவது:

 

“மதங்களின் நம்பிக்கைகளைக் கொச்சைப்படுத்தி ஆட்சியைப் பிடிக்கவும் மற்றும் அதிகாரத்தில் நிலைக்கவும் முயன்ற தீயசக்திகளை மக்கள் புறந்தள்ளியுள்ளனர். இவர்களை சட்டத்தின் முன்னிறுத்தி அடையாளங்காட்டுவது அவசியம். புலனாய்வுப் பிரிவினரால் இக்குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாது. இவர்கள் விசாரணைகளை ஆரம்பித்தால், வேலியே பயிரை மேய்ந்த கதையாகிவிடும். எனவே, சர்வதேச விசாரணைகளூடாகவே ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகளைக் கண்டுபிடிக்க முடியும்.

 

முஸ்லிம் சமூகத்தைக் கருவறுத்து, அப்பாவிகளைச் சிறையிலடைத்து மற்றும் முஸ்லிம்களின் சொத்துக்கள் சூறையாடப்படவும் இந்தத் தாக்குதலையே இனவாதிகள் பயன்படுத்தினர். ஈஸ்டர் தாக்குதலை இயக்கிய சக்திகள் முஸ்லிம்களின் தலையில் பாரத்தையும் குற்றத்தையும் சுமத்தித் தப்பிக்கப் பார்த்தனர். ஆனால், சனல்-4 சகல விடயங்களையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது.

 

இந்தத் தாக்குதலால் முஸ்லிம் சமூகமே ஒட்டுமொத்தமாகப் பழிவாங்கப்பட்டது. என்னைச் சிறையிலடைத்தனர், எனது சகோதரரை சிறையிலடைத்து வழக்குத் தொடுத்தனர். ரியாஜ் பதியுதீன் மீது எவ்வித குற்றமும் இல்லையென நிரூபிக்கப்பட்டும் அவருக்கு எதிரான வழக்கு இன்னும் வாபஸ் பெறப்படவில்லை.

 

ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, அசாத் சாலி, ரியாஜ் பதியுதீன் மற்றும் ஹஜ்ஜுல் அக்பர் உள்ளிட்ட முஸ்லிம்களின் முன்னோடிகளையும், பிரபலங்களையும் சிறையிலடைத்து சீரழித்தனர். ஜாமிய்யா நளீமிய்யா மாணவன் அஹ்னாப் என்பவர் கவிதை எழுதியமைக்காக மாதக்கணக்கில் சிறையிலடைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார். இறுதியில், சர்வதேச பயங்கரவாதியென்ற முத்திரையும் அம்மாணவனுக்குச் சுமத்தப்பட்டது. குருநாகல் முதல் மினுவாங்கொடை வரையிலான முஸ்லிம்களின் சொத்துக்கள், வர்த்தக நிலையங்கள் சூறைாயடப்பட்டன. பௌசுல் அமீர் என்ற வர்த்தகர் அவரது நான்கு பிள்ளைகளுக்கும் முன்னால் அசிற் ஊற்றப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவற்றையெல்லாம் செய்து, இனவாதத்தை கொளுந்துவிட்டெரியச் செய்தது யார்? ஆட்சி, அதிகாரத்தைப் பிடிப்பதற்காக ஈஸ்டர் தாக்குதலைச் செய்வித்த சக்திகளே!

 

எனவே, இன்றும் மறைமுகமாக அதிகாரத்திலுள்ள இவர்களை புலனாய்வுத்துறையினரால் விசாரணை செய்ய முடியாது. சர்வதேச விசாரணைகளூடாகவே இவர்களுக்கு தண்டனை வழங்க முடியும்” என்றார்.

“என்னை ஜனாதிபதியாக்குவதற்கு இஸ்லாமிய தீவிரவாதிகள் குண்டுவெடிப்புகளை நடத்தியதாக கூறுவது அருவருப்பானது.” – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிருப்தி!

பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள சமீபத்திய காணொளி தமது பாரம்பரியத்தை கருமையாக்கும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்

நேற்று அதிகாலை வெளிவந்து பெரும் பரபரப்பை கிளப்பியுள்ள இந்தக் காணொளி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

“ஈஸ்டர் தாக்குதலுக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. உரிய தாக்குதலுக்கு தொடர்புடையவர்கள் குறித்த விசாரணைக்கு நானே உத்தரவிட்டேன்.

2005 இலிருந்து ராஜபக்சர்களின் பாரம்பரியத்தை கருமையாக்கும் நோக்கில் வெளியிடப்பட்டதே சனல் 4 காணொளி.

ராஜபக்சர்களுக்கு எதிராக குறித்த சனலில் ஒளிபரப்பப்பட்ட முந்தைய படங்களைப் போலவே இவையும் பொய்கள் ஆகும். என்னை ஜனாதிபதியாக அமர்த்துவதற்காக இஸ்லாமிய தீவிரவாதிகளின் குழு கொடிய குண்டுவெடிப்புகளை நடத்தியதாக கூறுவது முற்றிலும் அருவருப்பானது.

 

அரசியல் நிலைப்பாட்டில் இருந்து சிலர் என்மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும், நான் பொதுப் பதவியில் இருந்த போதெல்லாம் ரோமன் கத்தோலிக்க சமூகத்திற்கு தனிப்பட்ட முறையில் அனைத்து சேவைகளையும் செய்துள்ளேன் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அந்த அறிக்கையிலலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் புதிய மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் – பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் புதிய மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், தற்போதைய ஜனாதிபதியிடமிருந்தோ அல்லது அரசாங்கத்திடமிருந்தோ நீதியை எதிர்பார்க்க முடியாது என கொழும்பு பேராயர்  கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

“ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக முன்னெச்சரிக்கைகள் பலமுறை அளிக்கப்பட்டாலும், அது ஏன் பெரிதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை, தெஹிவளையில் தன்னைத் தானே வெடிக்கச் செய்த தற்கொலைக் குண்டுதாரி ஏன் அவ்வாறு செய்ய அனுமதிக்கப்பட்டார் என்பதைத் தீர்மானிக்க புதிய மற்றும் வெளிப்படையான விசாரணை தேவை. , இந்தோனேசியாவில் ISIS ஐ அழைத்து, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பொறுப்பேற்குமாறு கோரிய ‘ஜோனிக் ஜோனிக்’ யார் என்பதைத் தீர்மானிக்க, அவர் ஏன் கைது செய்யப்படவில்லை. இந்தக் கேள்விகளுக்கான பதில்களைக் கண்டறிய எங்களுக்கு ஒரு புதிய விசாரணை தேவை, “என்றார்.

“தற்போதைய ஜனாதிபதியிடமும் அரசாங்கத்திடமும் நீதியை எதிர்பார்க்க முடியாது என தோன்றுகிறது,”

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவை மேற்கோள்காட்டி, தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க இலங்கை மேற்கொண்ட முயற்சிகளுக்கு பாப்பரசர் பிரான்சிஸின் பூரண ஆசீர்வாதம் இருப்பதாக அப்போஸ்தலிக்க தூதுவர் பேராயர் பிரையன் உதய்க்வே தெரிவித்தார். .

கத்தோலிக்க திருச்சபை பௌத்த துறவிகள் மற்றும் பிற மதகுருமார்களை அவமதிப்பதில் நம்பிக்கை இல்லை என்றும், அவர்களை அவமதிக்கும் நபர்களுடன் பழகப் போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மதகுருமார்களை, குறிப்பாக பௌத்த பிக்குகளை அவமதிப்பதை நாங்கள் மன்னிக்க மாட்டோம். சமூக ஊடகங்களில் பிக்குகளை மீண்டும் மீண்டும் இழிவுபடுத்துவதற்கு கத்தோலிக்கர்கள் இருப்பதாக சிலர் கூறுகின்றனர், ஆனால் இதுபோன்ற பிரசாரங்களுக்கு தேவாலயம் பின்னால் இல்லை என நான் கூற விரும்புகிறேன், ”என்றார்.

“பிக்குகளை அவமதிப்பதை நாங்கள் மன்னிக்கமாட்டோம், இதுபோன்ற செயல்களைச் செய்பவர்களுடன்
பழகமாட்டோம். இலங்கையின் கலாசாரம் பௌத்தத்துடன் தொடர்புடையது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.