இஸ்ரேல் – பாலஸ்தீன்

இஸ்ரேல் – பாலஸ்தீன்

இஸ்ரேலை கண்டித்து கையெழுத்திட்ட இலங்கை!

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் இஸ்ரேலுக்குள் நுழைவதற்கு தடை விதித்துள்ள இஸ்ரேலை கண்டித்து 105 நாடுகள் கையெழுத்திட்ட கடிதத்தில் இலங்கை கையெழுத்திட்டுள்ளதாக ஐநாவுக்கான இலங்கை தூதுவர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

 

ஐநா பொதுச் செயலாளருக்கு ஆதரவளிக்கும் கடிதத்திற்கு அனுசரணை வழங்கிய சிலி தூதரகத்திடம் ஒக்டோபர் 11 ஆம் திகதி வெளியிடப்பட்ட கடிதத்தில் தமது பெயரையும் இணைத்துக்கொள்ள நியூயோர்க்கில் உள்ள இலங்கை நிரந்தர தூதரகம் (ஐ.நா.) கேட்டுக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இந்நிலையில், கையொப்பமிட்ட நாடுகளின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகம் ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் ஆளுமை அல்லாதவர் என்று அறிவித்திருந்தது.

 

மேலும் இஸ்ரேல் மீது ஈரானின் ஏவுகணை தாக்குதல்களை ஐநா செயலாளர் நாயகம் போதுமான அளவு விமர்சிக்கவில்லை என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சரும் குற்றம் சுமத்தியிருந்தார்.

 

இந்நிலையில், இஸ்ரேலின் நடவடிக்கையை கண்டிக்கும் கடிதத்தில் பிரேசில், இந்தோனேசியா, உகண்டா போன்ற உலகளாவிய தெற்கில் உள்ள பெரும்பாலான நாடுகளும், பிரான்ஸ், சுவீடன் சுவிட்சர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளும் கையெழுத்திட்டன.

 

இஸ்ரேலுக்கும் ஐ.நா.வுக்கும் இடையே பனிப்போர் அதிகரித்துள்ள பின்னணியில் இந்த கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.

பாலஸ்தீனத்தை தனி நாடாக அமைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம் – ஹமாஸ் அறிவிப்பு!

காசாவில்  இஸ்ரேல் படைகளால் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார்  கொல்லப்பட்டதை ஹமாஸ் அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

அத்துடன், இஸ்ரேல் படைகளைத் திரும்பப் பெறும் வரை காசாவில் சிறைபிடிக்கப்பட்டவர்கள் வீடு திரும்ப மாட்டார்கள் என ஹமாஸ் எச்சரித்துள்ளது

ஜெருசலேமைத் தலைநகராகக் கொண்டு, பாலஸ்தீனத்தை தனி நாடாக அமைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம் என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் (2023) அக்டோபர் மாதம் 7ஆம் திகதியன்று இடம்பெற்ற இஸ்ரேல் – ஹமாஸ் போரில் பெரும் புள்ளியாக செயல்பட்ட சின்வார், கடந்த புதன் கிழமை (16) பாலஸ்தீன காசா பகுதியில் இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் போது கொல்லப்பட்டார்.

யஹ்யா சின்வர் படுகொலைக்கு பின் ஹமாஸ் அமைப்பின் தலைவர் ஒருவர் தொலைக்காட்சி உரையில் பேசும்போது, “மறைந்த யஹ்யா சின்வர் உறுதியான, தைரியமான வீரர். சின்வர் தனது வாழ்நாள் முழுவதும் ஒரு புனித போராளியாகவே வாழ்ந்துள்ளார்.

 

நமது விடுதலைக்காக தனது உயிரை தியாகம் செய்துள்ளார். சின்வரின் மரணம் நமது குழுவை இன்னும் பலப்படுத்தும்.

காசா மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்தும் வரை மற்றும் முற்றுகையிடப்பட்ட பகுதியில் இருந்து தனது படைகளைத் திரும்பப் பெறும் வரை காசாவில் சிறைபிடிக்கப்பட்டவர்கள் வீடு திரும்ப மாட்டார்கள்.

ஜெருசலேமைத் தலைநகராகக் கொண்டு, பாலஸ்தீனத்தை தனி நாடாக அமைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம்” என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

 

காசா மீது தொடரும் இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற தாக்குதல்கள் – உணவு, குடிநீர் இன்றி இறக்கும் நிலையில் நான்கு லட்சம் பாலஸ்தீனியர்கள்!

இரண்டு வாரங்களாக மருந்து, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்களை இஸ்ரேல் ராணுவம் தடை செய்துள்ளது. இதனால் வடக்கு காசா வில் உள்ள 4,00,000 பாலஸ்தீனர்கள் பட்டினியில் தள்ளப் பட்டுள்ளனர். இதனால் அதிக மக்கள் உயிர்ப் பலியாகும் அபாயம் ஏற்பட்டுள் ளது என ஐரோப்பிய – மத்திய தரைக் கடல் மனித உரிமை கள் கண்காணிப்பு அமைப்பு எச்சரித்துள்ளது. வடக்கு காசாவில் சுமார் 2, 00,000 பாலஸ்தீனர்கள் பத்து நாட்களாக உணவு, குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர்.

பாலஸ்தீன் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை ஒரு வருடத்திற்குள் முடிவுக்கு கொண்டு வர பொதுச் சபையில் தீர்மானம் !

பாலஸ்தீனப் பகுதிகளை இஸ்ரேல் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதை 12 மாதங்களுக்குள் முடிவுக்குக் கொண்டுவர ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

இதில் 124 நாடுகளின் ஒப்பந்தத்துடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

இந்த பிரேரணைக்கு எதிராக 14 நாடுகள் வாக்களித்துள்ளதுடன், 43 நாடுகள் வாக்களிப்பில் இருந்து விலகியிருந்தன.

 

மேலும் கிழக்கு ஜெருசலேம் உள்ளிட்ட இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பாலஸ்தீனப் பகுதிகளில் இருந்து ராணுவத்தினர் வெளியேற வேண்டும் என்று சம்பந்தப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

சுமார் 40 ஆயிரத்தை தாண்டிய உயிரிழப்புகள் – ஐ.நா கவலை !

பலஸ்தீனம் மீது இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதையடுத்து காசாவின் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை கவலை வெளியிட்டுள்ளது.

பலஸ்தீன விடுதலை அமைப்பானது கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 7ம் திகதி, இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதில் 1500 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

இதுதான் தற்போது இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கான தொடக்கப்புள்ளியாக அமைந்தது. போரில் இதுவரை 41,000க்கும் அதிகமான காசா மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இது காசா மக்களின் மொத்த மக்கள் தொகையில் 1.7 சதவிகிதமாகும். அதேபோல 3.7% மக்கள் அதாவது 95,000 பேர் படுகாயமடைந்துள்ளனர். 23 லட்சம் மக்கள் போர் காரணமாக இடம் பெயர்ந்துள்ளனர்.

இந்நிலையில் பலஸ்தீனத்தில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் குறித்து ஐ.நா. “பலஸ்தீன போர் மூலம் இந்த உலகம் அப்பாவி மக்களை இழந்து வருகிறது” என்று கவலை வெளியிட்டுள்ளது.

மேலும் இந்த போர் நிருத்தத்திற்கு “ஐ.நா 24 மணி நேரமும் உழைத்து வருகிறது. இந்த உலகில் நாங்கள் பணியாற்ற மிகவும் பாதுகாப்பற்ற இடமாக இதைத்தான் கருதுகிறோம்.

இங்கு மக்கள் தங்கள் உயிரைப் பணயம் வைக்கின்றனர். எங்களின் 300 பணியாளர்களை நாங்கள் களத்தில் இறக்கியிருந்தோம். இன்று இதில் மூன்றில் இரண்டு பங்கு அளவிளான பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டள்ளது.

காசாவின் கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 40 பேர் பலி !

காசாவின்முக்கிய தெற்கு நகரமான கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 40 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த தாக்குதலானது இன்று (10) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் பல மாதங்களாக நீடித்து வருகின்ற நிலையில் காசா மீது இடைவிடாமல் நடத்தப்படும் தாக்குதல்களால் அங்கு வாழும் பலஸ்தீன மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், இன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 40 பேர் பரிதாபமாக உயிரிழந்ததுடன் 60 பேர் காயமடைந்துள்ளனர்.

இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளமையினால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இது குறித்து காசா பாதுகாப்பு படை அதிகாரி முகமது அல்-முகைர்  கருத்து தெரிவிக்கையில், “காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது அத்தோடு காணாமல் போன 15 பேரை மீட்பதற்காக எங்கள் குழுவினர் இன்னும் பணியாற்றி வருகின்றனர்.

20 முதல் 40 இற்கும் மேற்பட்ட கூடாரங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன இந்த போரின் மிக கொடூரமான படுகொலைகளில் இதுவும் ஒன்று” என அவர் தெரிவித்துள்ளார்.

 

அத்தோடு, கான் யூனிசில் தாக்குதலுக்கு அப்பாற்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட இடங்களில் இருந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் செயல்பட்டதாகவும் அவர்களைக் குறிவைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு மண்டலத்தில் இருந்த இந்த பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த தாக்குதலில் அப்பாவி மக்கள் உயிரிழப்பதைத் தடுக்க இஸ்ரேல் தேவையான நடவடிக்கைகளை எடுத்ததாகவும் அந்நாட்டின் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடரும் இஸ்ரேலின் தாக்குதல் – நசீரத்தில் ஐம்பது வரையானோர் பலி !

காசாவின் நசீரத் பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 49 பேர் உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து இரு தரப்பினரும் போரை துவங்கினர். கிட்டதட்ட 11 மாதங்களாக நடைபெற்று வரும் இந்த போரினால் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இறந்துள்ளனர். குறிப்பாக குழந்தைகளும், பெண்களும்தான் அதிகம் இறந்துள்ளனர். இதனிடையே போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டாலும், அனைத்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளன.

 

இஸ்ரேலின் பயங்கரமான தாக்குதல்களால் காசா முழுவதும் உருக்குலைந்துள்ளது. போரால் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு, நோய் தொற்று அபாயங்களும் ஏற்பட்டுள்ளன. இதனால் காசாவில் உள்ள 6.4 லட்சம் குழந்தைகளுக்காக, உலக சுகாதார அமைப்பு போலியோ சொட்டு முகாம் நடத்த முன்வந்தது.

 

அதற்காக இன்றுமுதல் 3 நாட்களுக்கு தினமும் 8 மணி நேர போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே உடன்பாடு எட்டப்பட்டது. இதனை முன்னிட்டு நேற்றைய தினமே பல இடங்களில் மாதிரி முகாம்கள் நடத்தப்பட்டன. சில குழந்தைகளுக்கு மருத்துவ அதிகாரிகள் போலியோ சொட்டு மருந்தும் வழங்கினர்.

 

தொடர்ந்து இன்று நடைபெறவிருந்த சொட்டு மருந்து முகாம்களுக்கு, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ மற்றும் சமூக நலப் பணியாளர்கள் தயாராக இருந்தனர். இச்சூழலில் காசாவில் இஸ்ரேல் படையினர் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த வான்வழித் தாக்குதலில், அகதிகள் முகாம்கள் அமைந்திருந்த பகுதிகளில் ஒன்றான நசீரத் பகுதியில் 19 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 9 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அடுத்தடுத்து நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால் ஒரே நாளிலில் பலி எண்ணிக்கை 49 ஆக உயர்ந்தது.

நான்கு பணயக்கைதிகளை உயிருடன் மீட்ட இஸ்ரேலிய படையினர் !

காசாவில் விசேட நடவடிக்கையொன்றை மேற்கொண்டு நான்கு பணயக்கைதிகளை இஸ்ரேலிய படையினர் உயிருடன் மீட்டுள்ளனா்.

அதேவேளை இந்த நடவடிக்கையின் போது 200க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்தாண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி, இஸ்ரேலிலிருந்து ஹமாஸ் அமைப்பினரால் கடத்திச் செல்லப்பட்ட பணயக் கைதிகளில், 4 பேரையே இஸ்ரேல் இராணுவம் இவ்வாறு உயிருடன் மீட்டுள்ளது.

கடந்த 8 மாதங்களுக்கு மேல் தொடரும் இஸ்ரேல் – ஹமாஸ் போரில், இஸ்ரேல் படையினரால் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய மீட்பு நடவடிக்கை இதுவென குறிப்பிடப்படுகின்றது.

எனினும், இந்த நடவடிக்கையின்போது, 200க்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒக்டோபர் 7 ஆம் திகதிக்கு பின்னர், இஸ்ரேல் மேற்கொண்ட மிகமோசமான தனியொரு தாக்குதல் இதுவென, ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

காசாவின் மத்தியிலுள்ள அல்நுசெய்ரட் பகுதியிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

பொதுமக்கள் வாழும் பகுதியிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், பணயக்கைதிகள் தொடர்மாடிக் குடியிருப்புகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்ததாகவும் இஸ்ரேலிய இராணுவத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையின் போது, இஸ்ரேலிய படையினர் கடும் தாக்குதலை எதிர்கொண்டதாகவும், இதனைதொடர்ந்து இஸ்ரேல் இராணுவம் வானிலிருந்தும் தரையிலிருந்தும் பதில் தாக்குதலை நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், இந்த தாக்குதலில், நூற்றுக்கும் மேற்பட்ட, பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளமை தங்களுக்கு தெரியும் என தெரிவித்துள்ள குறித்த அதிகாரி, அவர்களில் எத்தனை பேர் பயங்கரவாதிகள் என்பது தெரியாது எனவும், இஸ்ரேலின் விசேட படைப்பிரிவை சேர்ந்த ஒருவரும் இதில் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இஸ்ரேல் இராணுவம்,

மத்திய காஸாவிலிருந்து ஒரு பெண் உள்ளிட்ட 4 பிணைக் கைதிகளை தமது இராணுவம் மீட்டுள்ளதாகவும், மீட்கப்பட்ட அனைவரும் நோவா இசை விழாவிலிருந்து கடத்திச் செல்லப்பட்டவா்கள் எனவும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, சிக்கல் மிகுந்த நகரச் சூழலில், கடுமையான துப்பாக்கிச்சூடு தாக்குதல்களுக்கு இடையே, பகல் நேரத்தில் இந்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சா் யோவாவ் காலன்ட் தெரிவித்துள்ளார்.

இந்த மீட்பு நடவடிக்கை குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவிக்கையில்,

பயங்கரவாதத்துக்கு இஸ்ரேல் பணிந்துவிடவில்லை என்பதை இந்த மீட்பு நடவடிக்கை எடுத்துக் காட்டுவதாகவும், எஞ்சியுள்ள அனைத்து பிணைக் கைதிகளையும் இதேபோன்று மீட்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பாலஸ்தீன தேசத்திற்கு தற்போதைக்கு ஆதரவளிக்கும் நோக்கம் எதுவுமில்லை – அவுஸ்திரேலிய அரசாங்கம்

பாலஸ்தீன தேசத்திற்கு தற்போதைக்கு ஆதரவளிக்கும் நோக்கம் எதுவுமில்லை என அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது

 

பாலஸ்தீன அதிகாரசபையை சீர்திருத்தவேண்டும் பணயக்கைதிகள் விடுதலை ஆகியவற்றை வலியுறுத்துவதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

 

நோர்வே அயர்லாந்து ஸ்பெயின் போன்ற நாடுகளை பின்பற்றிஅவுஸ்திரேலியா பாலஸ்தீன தேசத்தைஅங்கீகரிக்கவேண்டும் என கிறீன்ஸ் கட்சியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

அவுஸ்திரேலிய இரண்டு தேசகொள்கைக்கு நீண்டகாலமாக ஆதரவுஅளித்து வந்துள்ளது என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் இந்த செயற்பாடு முன்னர் எப்போதையும் விட அவசியமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

 

பாலஸ்தீனியர்களிற்கு மேலதிக உரிமைகளை வழங்கும் இரண்டு தேசக்கொள்கைகயை அங்கீகரிக்கும் ஐக்கியநாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக அவுஸ்திரேலியா இந்த மாதம் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் வாக்களித்திருந்தது என தெரிவித்துள்ள பெனிவொங் எனினும் இதன் அர்த்தம் அவுஸ்திரேலியா ஓருதலைப்பட்சமாக பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கின்றது என்பதல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுக்கான இராணுவ உதவிகளை அமெரிக்கா உடன்நிறுத்தவேண்டும் – அமெரிக்கத்தூதரகத்தை சென்றடைவதற்தான் போராட்டம் நிறுத்தம்!

காஸாவில் போர்நிறுத்தத்தை வலியுறுத்தியும், இஸ்ரேலுக்கான இராணுவ உதவிகளை அமெரிக்கா உடன்நிறுத்தவேண்டும் எனக்கோரியும் வெள்ளிக்கிழமை (17) கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் பேரணி, அமெரிக்கத்தூதரகத்தை சென்றடைவதற்கு முன்பதாக பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டிருந்த பாதுகாப்புப்படையினரால் இடைநடுவே தடுத்துநிறுத்தப்பட்டது.

காஸாவில் இடம்பெற்றுவரும் படுகொலைகள் மற்றும் அமெரிக்காவினால் இஸ்ரேலுக்கு வழங்கப்பட்டுவரும் இராணுவ உதவிகள் தொடர்பில் எதிர்ப்பை வெளிப்படுத்தியும், இஸ்ரேல் – பலஸ்தீன மோதல் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என வலியுறுத்தியும் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தலைமை வகிக்கும் போர் எதிர்ப்புக்கான உலகளாவிய கூட்டணியினால் நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பில் பேரணியொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கொழும்பு விகாரமகாதேவி பூங்காவுக்கு அண்மையில் பி.ப 2.30 மணியளவில் ஆரம்பமான இப்பேரணி, சேர்.மார்க்கஸ் பெர்னாண்டோ மாவத்தை ஊடாக அமெரிக்கத்தூதரகத்தை நோக்கிப் பயணித்தது.

‘துப்பாக்கிகளுக்கு ஈடாக ரோஜாக்கள்’ எனும் மகுடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்பேரணியில் போர் எதிர்ப்புக்கான உலகளாவிய கூட்டணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌஸி, சர்வமதத்தலைவர்கள், சிவில் சமூகப்பிரதிநிதிகள், தொழிற்சங்கத்தலைவர்கள், சகல இன, மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பொதுமக்கள், சிறுவர்கள் என சுமார் 200 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

அவர்கள் ‘பலஸ்தீன விடுதலை’, ‘யுத்தம் வேண்டாம்’, ‘போரை நிறுத்துங்கள்’, ‘இஸ்ரேலுக்கு இராணுவ உதவி வழங்குவதை அமெரிக்கா நிறுத்தவேண்டும்’ என்பன உள்ளடங்கலாக போர்நிறுத்தத்தையும், பலஸ்தீன விடுதலையையும் வலியுறுத்தும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும், பலஸ்தீன மற்றும் இலங்கைக்கொடிகளையும் ஏந்தியிருந்தனர். அதுமாத்திரமன்றி பலர் பலஸ்தீனத்தை அடையாளப்படுத்தும் சால்வையை அணிந்திருந்ததுடன், சிறுமிகள் காஸாவில் கொல்லப்பட்ட அப்பாவி சிறுவர்களைக் அடையாளப்படுத்தும் வகையில் சிவப்புநிறம் தோய்ந்த (இரத்தம்) துணியினால் சுற்றப்பட்ட பொம்மையையும், மேலும் பலர் ரோஜாப்பூக்களையும் கைகளில் ஏந்தியிருந்தார்.

அத்தோடு பேரணியில் கலந்துகொண்டவர்கள் ‘எப்போது போர்நிறுத்தம்? – இப்போதே போர்நிறுத்தம்’, ‘அப்பாவிகளைக் கொல்வதை நிறுத்து’, ‘அமெரிக்காவே, இஸ்ரேலுக்கு உதவுவதை நிறுத்து’, ‘சிறுவர்களைக் கொல்லாதே’, ‘ஐக்கிய நாடுகளை சபையே, வேடிக்கை பார்க்காதே’, ‘முள்ளிவாய்க்காலில் அரங்கேறிய அவலம் பலஸ்தீனத்திலும் நிகழ இடமளிக்காதே’ என்பன உள்ளடங்கலாக காஸா மீதான தாக்குதல்கள் தொடர்பில் தமது எதிர்ப்பை வெளிக்காட்டும் வகையிலான கோஷங்களையும் எழுப்பினர்.

மழைக்கு மத்தியில் இவ்வாறு கோஷங்களை எழுப்பியவாறு சென்ற பேரணி சேர்.மார்க்கஸ் பெர்னாண்டோ மாவத்தையை அடைந்தபோது அங்கு பெரும் எண்ணிக்கையான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர். அவர்களைக் கடந்து பேரணியாகச்சென்ற மக்கள் ஆனந்த குமாரசுவாமி மாவத்தையை அடைந்தபோது அங்கு குவிக்கப்பட்டிருந்த பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், விமானப்படையினர் உள்ளிட்ட சகலரும் நடுவீதியில் இறங்கி, பேரணி முன்நோக்கி நகராதவண்ணம் மறித்து நின்றனர். திடீரென அவர்களின் பின்னாலிருந்து வந்த பௌத்த பிக்குகள் இடைநடுவே மறிக்கப்பட்டுநின்ற பேரணியுடன் இணைந்துகொண்டனர்.

அதனைத்தொடர்ந்து பேரணியின் முன்னரங்கில் நின்ற சர்வமதத்தலைவர்களுக்கும், பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலைத்தொடர்ந்து 6 பேரை மாத்திரம் அமெரிக்கத்தூதரகத்துக்கு அழைத்துச்செல்வதற்கு பொலிஸார் உடன்பட்டனர். அதன்படி பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவும், பௌத்த பிக்குகள் இருவரும், இந்து, இஸ்லாம் மற்றும் கத்தோலிக்க மதங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி தலா ஒரு மதத்தலைவரும் என மொத்தமாக அறுவர் பொலிஸாரால் ஜீப் ஒன்றில் ஏற்றப்பட்டு அமெரிக்கத்தூதரகத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். அவ்வாறு அழைத்துச்செல்லப்பட்ட பிரதிநிதிகள் போர்நிறுத்தத்தையும், இஸ்ரேலுக்கான இராணுவ உதவிகளை அமெரிக்கா உடன்நிறுத்தவேண்டும் எனவும் வலியுறுத்தி தூதரக அதிகாரிகளிடம் மகஜரொன்றைக் கையளித்தனர்.

அதேவேளை மக்கள் பேரணி ஆனந்த குமாரசுவாமி மாவத்தையில் இடைநடுவே நிறுத்தப்பட்டதை அடுத்து, போராட்டக்காரர்கள் சற்றுநேரம் அங்கு தரித்துநின்றவாறு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அதன்விளைவாக அவ்வீதியில் சொற்ப நேரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட போதிலும், பொலிஸாரின் தலையீட்டின் மூலம் அந்நெரிசல் சீராக்கப்பட்டது.