இஸ்ரேல் – பாலஸ்தீன்

இஸ்ரேல் – பாலஸ்தீன்

பாலஸ்தீனர்களுக்கு எதிரான இனப்படுகொலையை நிறுத்தக் கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

பாலஸ்தீனர்களுக்கு எதிரான இனப்படுகொலையை நிறுத்தக் கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

பாலஸ்தீன மக்களுக்கு அவர்களின் சுதந்திர நாட்டை விடுவிக்குமாறும் அந்நாட்டில் நடைபெறும் கொலைகளை நிறுத்துமாறும் கோரி இஸ்ரேலுக்கு எதிராக கொழும்பு தெவட்டகஹ ஜும்ஆப் பள்ளிவாசல் அருகில் அமைதியான ஆர்ப்பாட்டமொன்று கொழும்பில் இடம்பெற்றது.

 

8.2 இந்நிகழ்வில் பிரதி சபாநாயகர் வைத்தியர் றிஸ்வி சாலிஹ் கலந்து கொண்டிருந்தார். அங்கு அவர் கருத்து தெரிவிக்கையில், பாலஸ்தீன மக்களின் குழந்தைகளை தாய்மார்களை கொன்று குவிப்பதை தடுத்து நிறுத்தல் வேண்டும். இதற்காக இலங்கை உட்பட உலக நாடுகள் ஒன்றுபட்டு ஐ.நா. ஊடாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்தல் வேண்டும். இந்த நோன்பு மாதத்தில் அவர்கள் செய்யும் கொலைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தை பாலஸ்தீன சுதந்திர இயக்கம் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரமலான் நோன்புக் காலத்தில் இஸ்ரேல் மீண்டும் ஹாசாவில் வான்வெளி தாக்குதல் !

ரமலான் நோன்புக் காலத்தில் இஸ்ரேல் மீண்டும் ஹாசாவில் வான்வெளி தாக்குதல் !

 

இஸ்ரேல் ஹமாஸ் போராளிகளுக்கிடையிலான முதல் கட்ட போர்நிறுத்த ஒப்பந்த காலப்பகுதி முடிவடைந்து விட்டது. இரண்டாம் கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் மற்றும் கைதிகள் பரிமாற்றம் தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் இழுபறியில் உள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் நேற்று அதிகாலை 2:30 மணியளவில் மேற்கொண்ட வான்வெளி கொடூர தாக்குதலில் குழந்தைகள் உட்பட 300 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் இத்தாக்குதலில் ஹமாஸ் தலைவர் ஒருவரும் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்லாமியர்களின் புனித ரமலான் நோன்பு கடைப்பிடிக்கப்படும் இம்மாதத்தில் இஸ்ரேல் வேண்டுமென்றே இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

மேலும் கடந்த இரண்டு வாரங்களாக ஹாசா பகுதிக்குள் உணவு, மருந்து, எரிபொருள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்கள் செல்வதை இஸ்ரேல் முழுமையாக நிறுத்தி உள்ளது. ஐக்கிய நாடுகள் சபை உட்பட பல மனித உரிமைகள் அமைப்புக்கள் இத்தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றன. இஸ்ரேலை உடனடியாக போர் நிறுத்தத்திற்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளனர்.

சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் – ஏப்ரல் இறுதியில் விசாரணைகள் !

சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் – ஏப்ரல் இறுதியில் விசாரணைகள் !

 

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்பினருக்கு இடையேயான போரில் பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் குறித்து விசாரணைகள் மேற்கொள்வதற்கு சர்வதேச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஐக்கிய நாடுகள் சபை இவ்விடயம் தொடர்பாக ஆலோசனைகளை கோரும் தீர்மானத்தை அங்கீகரித்ததை தொடர்ந்து, இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, காசாவின் பெண்களிற்கு மருத்துவசதிகளை வழங்கும் கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் திட்டமிட்டு மேற்கொண்ட தாக்குதலை, இனப்படுகொலை நடவடிக்கைகளிற்கு சமனானது எனவும் பாலஸ்தீன பிரதேசங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கும் அவற்றை அழிப்பதற்கும் இஸ்ரேலிய படையினர் பாலியல் வன்முறையை ஒரு போர் ஆயுதமாக பயன்படுத்தினார்கள் எனவும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளில் பாலியல் மற்றும் பாலின வன்முறைகள் குறித்து ஐக்கிய நாடுகளின் சுயாதீன ஆணைக்குழு மேற்கொண்ட 49 பக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரேலை கண்டித்து கையெழுத்திட்ட இலங்கை!

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் இஸ்ரேலுக்குள் நுழைவதற்கு தடை விதித்துள்ள இஸ்ரேலை கண்டித்து 105 நாடுகள் கையெழுத்திட்ட கடிதத்தில் இலங்கை கையெழுத்திட்டுள்ளதாக ஐநாவுக்கான இலங்கை தூதுவர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

 

ஐநா பொதுச் செயலாளருக்கு ஆதரவளிக்கும் கடிதத்திற்கு அனுசரணை வழங்கிய சிலி தூதரகத்திடம் ஒக்டோபர் 11 ஆம் திகதி வெளியிடப்பட்ட கடிதத்தில் தமது பெயரையும் இணைத்துக்கொள்ள நியூயோர்க்கில் உள்ள இலங்கை நிரந்தர தூதரகம் (ஐ.நா.) கேட்டுக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இந்நிலையில், கையொப்பமிட்ட நாடுகளின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகம் ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் ஆளுமை அல்லாதவர் என்று அறிவித்திருந்தது.

 

மேலும் இஸ்ரேல் மீது ஈரானின் ஏவுகணை தாக்குதல்களை ஐநா செயலாளர் நாயகம் போதுமான அளவு விமர்சிக்கவில்லை என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சரும் குற்றம் சுமத்தியிருந்தார்.

 

இந்நிலையில், இஸ்ரேலின் நடவடிக்கையை கண்டிக்கும் கடிதத்தில் பிரேசில், இந்தோனேசியா, உகண்டா போன்ற உலகளாவிய தெற்கில் உள்ள பெரும்பாலான நாடுகளும், பிரான்ஸ், சுவீடன் சுவிட்சர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளும் கையெழுத்திட்டன.

 

இஸ்ரேலுக்கும் ஐ.நா.வுக்கும் இடையே பனிப்போர் அதிகரித்துள்ள பின்னணியில் இந்த கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.

பாலஸ்தீனத்தை தனி நாடாக அமைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம் – ஹமாஸ் அறிவிப்பு!

காசாவில்  இஸ்ரேல் படைகளால் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார்  கொல்லப்பட்டதை ஹமாஸ் அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

அத்துடன், இஸ்ரேல் படைகளைத் திரும்பப் பெறும் வரை காசாவில் சிறைபிடிக்கப்பட்டவர்கள் வீடு திரும்ப மாட்டார்கள் என ஹமாஸ் எச்சரித்துள்ளது

ஜெருசலேமைத் தலைநகராகக் கொண்டு, பாலஸ்தீனத்தை தனி நாடாக அமைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம் என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் (2023) அக்டோபர் மாதம் 7ஆம் திகதியன்று இடம்பெற்ற இஸ்ரேல் – ஹமாஸ் போரில் பெரும் புள்ளியாக செயல்பட்ட சின்வார், கடந்த புதன் கிழமை (16) பாலஸ்தீன காசா பகுதியில் இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் போது கொல்லப்பட்டார்.

யஹ்யா சின்வர் படுகொலைக்கு பின் ஹமாஸ் அமைப்பின் தலைவர் ஒருவர் தொலைக்காட்சி உரையில் பேசும்போது, “மறைந்த யஹ்யா சின்வர் உறுதியான, தைரியமான வீரர். சின்வர் தனது வாழ்நாள் முழுவதும் ஒரு புனித போராளியாகவே வாழ்ந்துள்ளார்.

 

நமது விடுதலைக்காக தனது உயிரை தியாகம் செய்துள்ளார். சின்வரின் மரணம் நமது குழுவை இன்னும் பலப்படுத்தும்.

காசா மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்தும் வரை மற்றும் முற்றுகையிடப்பட்ட பகுதியில் இருந்து தனது படைகளைத் திரும்பப் பெறும் வரை காசாவில் சிறைபிடிக்கப்பட்டவர்கள் வீடு திரும்ப மாட்டார்கள்.

ஜெருசலேமைத் தலைநகராகக் கொண்டு, பாலஸ்தீனத்தை தனி நாடாக அமைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம்” என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

 

காசா மீது தொடரும் இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற தாக்குதல்கள் – உணவு, குடிநீர் இன்றி இறக்கும் நிலையில் நான்கு லட்சம் பாலஸ்தீனியர்கள்!

இரண்டு வாரங்களாக மருந்து, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்களை இஸ்ரேல் ராணுவம் தடை செய்துள்ளது. இதனால் வடக்கு காசா வில் உள்ள 4,00,000 பாலஸ்தீனர்கள் பட்டினியில் தள்ளப் பட்டுள்ளனர். இதனால் அதிக மக்கள் உயிர்ப் பலியாகும் அபாயம் ஏற்பட்டுள் ளது என ஐரோப்பிய – மத்திய தரைக் கடல் மனித உரிமை கள் கண்காணிப்பு அமைப்பு எச்சரித்துள்ளது. வடக்கு காசாவில் சுமார் 2, 00,000 பாலஸ்தீனர்கள் பத்து நாட்களாக உணவு, குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர்.

பாலஸ்தீன் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை ஒரு வருடத்திற்குள் முடிவுக்கு கொண்டு வர பொதுச் சபையில் தீர்மானம் !

பாலஸ்தீனப் பகுதிகளை இஸ்ரேல் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதை 12 மாதங்களுக்குள் முடிவுக்குக் கொண்டுவர ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

இதில் 124 நாடுகளின் ஒப்பந்தத்துடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

இந்த பிரேரணைக்கு எதிராக 14 நாடுகள் வாக்களித்துள்ளதுடன், 43 நாடுகள் வாக்களிப்பில் இருந்து விலகியிருந்தன.

 

மேலும் கிழக்கு ஜெருசலேம் உள்ளிட்ட இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பாலஸ்தீனப் பகுதிகளில் இருந்து ராணுவத்தினர் வெளியேற வேண்டும் என்று சம்பந்தப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

சுமார் 40 ஆயிரத்தை தாண்டிய உயிரிழப்புகள் – ஐ.நா கவலை !

பலஸ்தீனம் மீது இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதையடுத்து காசாவின் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை கவலை வெளியிட்டுள்ளது.

பலஸ்தீன விடுதலை அமைப்பானது கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 7ம் திகதி, இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதில் 1500 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

இதுதான் தற்போது இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கான தொடக்கப்புள்ளியாக அமைந்தது. போரில் இதுவரை 41,000க்கும் அதிகமான காசா மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இது காசா மக்களின் மொத்த மக்கள் தொகையில் 1.7 சதவிகிதமாகும். அதேபோல 3.7% மக்கள் அதாவது 95,000 பேர் படுகாயமடைந்துள்ளனர். 23 லட்சம் மக்கள் போர் காரணமாக இடம் பெயர்ந்துள்ளனர்.

இந்நிலையில் பலஸ்தீனத்தில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் குறித்து ஐ.நா. “பலஸ்தீன போர் மூலம் இந்த உலகம் அப்பாவி மக்களை இழந்து வருகிறது” என்று கவலை வெளியிட்டுள்ளது.

மேலும் இந்த போர் நிருத்தத்திற்கு “ஐ.நா 24 மணி நேரமும் உழைத்து வருகிறது. இந்த உலகில் நாங்கள் பணியாற்ற மிகவும் பாதுகாப்பற்ற இடமாக இதைத்தான் கருதுகிறோம்.

இங்கு மக்கள் தங்கள் உயிரைப் பணயம் வைக்கின்றனர். எங்களின் 300 பணியாளர்களை நாங்கள் களத்தில் இறக்கியிருந்தோம். இன்று இதில் மூன்றில் இரண்டு பங்கு அளவிளான பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டள்ளது.

காசாவின் கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 40 பேர் பலி !

காசாவின்முக்கிய தெற்கு நகரமான கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 40 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த தாக்குதலானது இன்று (10) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் பல மாதங்களாக நீடித்து வருகின்ற நிலையில் காசா மீது இடைவிடாமல் நடத்தப்படும் தாக்குதல்களால் அங்கு வாழும் பலஸ்தீன மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், இன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 40 பேர் பரிதாபமாக உயிரிழந்ததுடன் 60 பேர் காயமடைந்துள்ளனர்.

இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளமையினால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இது குறித்து காசா பாதுகாப்பு படை அதிகாரி முகமது அல்-முகைர்  கருத்து தெரிவிக்கையில், “காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது அத்தோடு காணாமல் போன 15 பேரை மீட்பதற்காக எங்கள் குழுவினர் இன்னும் பணியாற்றி வருகின்றனர்.

20 முதல் 40 இற்கும் மேற்பட்ட கூடாரங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன இந்த போரின் மிக கொடூரமான படுகொலைகளில் இதுவும் ஒன்று” என அவர் தெரிவித்துள்ளார்.

 

அத்தோடு, கான் யூனிசில் தாக்குதலுக்கு அப்பாற்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட இடங்களில் இருந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் செயல்பட்டதாகவும் அவர்களைக் குறிவைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு மண்டலத்தில் இருந்த இந்த பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த தாக்குதலில் அப்பாவி மக்கள் உயிரிழப்பதைத் தடுக்க இஸ்ரேல் தேவையான நடவடிக்கைகளை எடுத்ததாகவும் அந்நாட்டின் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடரும் இஸ்ரேலின் தாக்குதல் – நசீரத்தில் ஐம்பது வரையானோர் பலி !

காசாவின் நசீரத் பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 49 பேர் உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து இரு தரப்பினரும் போரை துவங்கினர். கிட்டதட்ட 11 மாதங்களாக நடைபெற்று வரும் இந்த போரினால் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இறந்துள்ளனர். குறிப்பாக குழந்தைகளும், பெண்களும்தான் அதிகம் இறந்துள்ளனர். இதனிடையே போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டாலும், அனைத்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளன.

 

இஸ்ரேலின் பயங்கரமான தாக்குதல்களால் காசா முழுவதும் உருக்குலைந்துள்ளது. போரால் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு, நோய் தொற்று அபாயங்களும் ஏற்பட்டுள்ளன. இதனால் காசாவில் உள்ள 6.4 லட்சம் குழந்தைகளுக்காக, உலக சுகாதார அமைப்பு போலியோ சொட்டு முகாம் நடத்த முன்வந்தது.

 

அதற்காக இன்றுமுதல் 3 நாட்களுக்கு தினமும் 8 மணி நேர போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே உடன்பாடு எட்டப்பட்டது. இதனை முன்னிட்டு நேற்றைய தினமே பல இடங்களில் மாதிரி முகாம்கள் நடத்தப்பட்டன. சில குழந்தைகளுக்கு மருத்துவ அதிகாரிகள் போலியோ சொட்டு மருந்தும் வழங்கினர்.

 

தொடர்ந்து இன்று நடைபெறவிருந்த சொட்டு மருந்து முகாம்களுக்கு, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ மற்றும் சமூக நலப் பணியாளர்கள் தயாராக இருந்தனர். இச்சூழலில் காசாவில் இஸ்ரேல் படையினர் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த வான்வழித் தாக்குதலில், அகதிகள் முகாம்கள் அமைந்திருந்த பகுதிகளில் ஒன்றான நசீரத் பகுதியில் 19 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 9 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அடுத்தடுத்து நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால் ஒரே நாளிலில் பலி எண்ணிக்கை 49 ஆக உயர்ந்தது.