இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

ஜனாதிபதி அனுர குமாரவின் செயற்பாடுகள் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கரிசனை!

நாட்டில் பொது ஒழுங்கைப் பேணுவதற்காக இராணுவத்தினர், கடற்படையினர் மற்றும் விமானப்படையினருக்கு அழைப்புவிடுக்கும் வகையில், ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தனது கரிசனையை வெளிப்படுத்தியுள்ளது.

 

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள அளவுகோல்களுக்குப் புறம்பாகப் பிறப்பிக்கப்படக்கூடிய இத்தகைய கட்டளைகளால் மனித உரிமைகள் பாதுகாப்பில் எதிர்மறையான தாக்கம் ஏற்படக்கூடும் என அந்த ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

 

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12ஆவது பிரிவின் கீழ் 2024 செப்டெம்பர் 26ஆம் திகதியிடப்பட்டு வெளியிடப்பட்ட 2403/47ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியின் ஊடாக (முன்னைய அரசாங்கத்தினால் பிறப்பிக்கப்பட்ட இக்கட்டளை மாதாந்தம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. செப்டெம்பர் 24ஆம் திகதி முதல் ஒரு மாதகாலத்துக்கு இலங்கையின் ஒவ்வொரு நிர்வாக மாவட்டத்திலும் பொது ஒழுங்கைப் பேணுவதற்காக இலங்கை இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் அனைத்து உறுப்பினர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.

 

இதுகுறித்து, தமது கரிசனையை வெளிப்படுத்தியுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் உயர்நீதிமன்ற நீதியரசர் (ஓய்வுபெற்ற) எல்.ரீ.பி.தெஹிதெனிய, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பாக சுட்டிக்காட்டியுள்ளார்.

 

சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம் – முக்கிய சுகாதார சேவை அதிகாரிகளுக்கு HRCSL அழைப்பு!

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொழும்பிலுள்ள  தலைமைக்காரியாலத்தில் இடம்பெறவிருக்கும் விசேட கலந்துரையாடலுக்கு முக்கிய சுகாதார சேவை அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) தெரிவித்துள்ளது.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் தலைமையிலான குழுவினர் கடந்த 05.07.2024 அன்று அவதானிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

தமக்கான சேவைகளை பெற்றுகொள்வதில் பொதுமக்கள் இடர்பாடுகளை சந்திப்பதாக அலுவலகத்துக்கு கிடைத்த தொலைபேசி முறைப்பாடுகளுக்கு அமைய அக்களவிஜயம் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த களவிஜயத்தில் அவர்களால் பெற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமைகள்சார் பிரச்சினைகள் தொடர்பில் கடந்த 08.07.2024 ஆம் திகதி வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதேவேளை அந்த கலந்துரையாடலிற்கான அறிக்கை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமைக் காரியாலயத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் அதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக, மத்திய மற்றும் மாகாண சுகாதார சேவை அதிகாரிகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொழும்பிலுள்ள தலைமைக் காரியாலத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளளது.

எதிர்வரும் 30.07.2024 பிற்பகல் 1.30 மணிக்கு இடம்பெறவுள்ள குறித்த கலந்துரையாடலுக்கு வருமாறு பின்வருவோருக்கு அழைப்பு விடுத்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அதன்படி, செயலாளர் – சுகாதார அமைச்சு (Ministry of Health), கொழும்பு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் – சுகாதார அமைச்சு, கொழும்பு, மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் – வடக்கு மாகாணம், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் – வடக்கு மாகாணம், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் – யாழ்ப்பாணம், மருத்துவ அத்தியட்சகர் – சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

 

விஷ ஜந்து கடிக்குள்ளான நபருக்கு சிகிச்சை செய்ய யாருமில்லாத நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை – மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!

விஷ ஜந்து கடிக்குள்ளான தனது தந்தையை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு (Chavakachcheri Base Hospital) கொண்டு சென்ற வேளை அங்கு சிகிச்சை வழங்குவதற்கு யாரும் இருக்கவில்லை என நபர் ஒருவர் சமூக வலைதளத்தில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்நிலையில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் இது குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

குறித்த தகவலை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் (Sri Lanka Human Rights Commission) யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் கடந்த 17.07.2024 அன்று இரவு விஷ ஜந்து கடிக்குள்ளான தனது தந்தையினை சிகிச்சைக்காக கொண்டு சென்ற வேளையில் மருத்துவமனையில் இரவு மருத்துவர்களோ, தாதியர்களோ இருக்கவில்லை.

இந்நிலையில் யாரும் அங்கு இல்லாத காரணத்தினால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் செய்திகள் பிரசுரிக்கப்பட்டன.

செய்தி தொடர்பில் 1996 ஆம் ஆண்டு 21 இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் பிரிவு 14 இற்கு அமைய, ஆணைக்குழுவின் சொந்த பிரேரணையாக பதிவுசெய்யப்பட்டு சாவகச்சரி ஆதார வைத்திசாலையின் பதில் மருத்துவ அத்தியட்சகர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் யாழ்ப்பாணம், மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வடக்கு மாகாணம் ஆகியோரிடம் விளக்கம் கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

குறித்த விளக்க அறிக்கையை எதிர்வரும் 22.07.2024 இற்கு முன் சமர்ப்பிக்க பணிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளார்.

சிறைச்சாலைகளின் சுகாதார வசதிகள் மிகவும் மோசமான தரத்தில் உள்ளது – இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர்

சிறைச்சாலைகளின் சுகாதார வசதிகள் மிகவும் மோசமான தரத்தில் இருப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் விசனம் வெளியிட்டுள்ளார்.

மாத்தறை சிறைச்சாலையில் மூளைக்காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்ட 8 கைதிகள் ஏற்கனவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு மேலும் 8 கைதிகள் மத்தியில் மூளைக்காய்ச்சல் அறிகுறிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

 

இது குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள அம்பிகா சற்குணநாதன், சிறைச்சாலைகளின் சுகாதார வசதிகள் மிகவும் மோசமான தரத்திலேயே இருப்பதாகவும், எனவே ஏதேனும் நோய்த்தொற்றுப்பரவல் ஏற்படும்போது கைதிகள் பெரும் ஆபத்துக்கு உள்ளாவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

அதுமாத்திரமன்றி பெரும் எண்ணிக்கையான கைதுகள் மற்றும் தடுத்து வைப்புக்களின் ஊடாக சிறைச்சாலைகளில் சாதாரணமாகத் தடுத்து வைக்கப்படக்கூடிய கைதிகளின் எண்ணிக்கைக்கு அப்பால் சென்று இடநெருக்கடி ஏற்படுத்தப்படுவதாகவும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.

 

அத்தோடு கொரோனா தொற்றுப்பரவல் ஏற்பட்ட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளின் சுகாதார நலன்கள் உரியவாறு பேணப்படாமை மற்றும் அங்கு நிலவும் குறைபாடுகள் என்பன பற்றியும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் சுற்றி வளைப்பில் உயர் மட்டத்தில் இருப்பவர்கள் கைது செய்யப்படவில்லை – வேடிக்கையாகவுள்ளது என்கிறார் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் !

போதைப்பொருள் பயன்படுத்துபவர்களையும் போதைப்பொருள் இடைத்தரகர்களையும் இலக்கு வைத்து பொலிஸார் சுற்றிவளைப்புகளை மேற்கொள்வதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.

 

தற்போது முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் மீதான போர், வேடிக்கையான விடயமாக தோற்றமளிப்பதாக சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

 

கடந்த 5 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 10,000-இற்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

அத்துடன் 7.7 கிலோகிராம் ஹெரோயின், 3.8 கிலோகிராம் ஐஸ், 225.7 கிலோகிராம் மற்றும் 44,267 போதை வில்லைகள் கைப்பற்றப்பட்டதாகவும் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் தனது X தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

சமூகத்தில் புழக்கத்தில் காணப்படும் போதைப்பொருட்களின் அளவு மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டின் அதிகரிப்பு தொடர்பிலான அறிக்கைகளின் அடிப்படையில் செலவழித்த நேரம் மற்றும் பயன்படுத்திய வளங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது கைப்பற்றப்பட்டுள்ள போதைப்பொருட்களின் அளவு மிகக் குறைவு என அவர் தெரிவித்துள்ளார்.

 

இதனூடாக பொலிஸார் போதைப்பொருள் பயன்படுத்துபவர்களையும் போதைப்பொருள் இடைத்தரகர்களையும் இலக்கு வைத்தே சுற்றிவளைப்புகளை மேற்கொள்வதைக் காட்டுவதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.

 

இவர்கள் நடுத்தர மற்றும் உயர் மட்டத்தில் உள்ளவர்களை இலக்கு வைத்து சோதனை நடவடிக்கைளை முன்னெடுப்பார்களாயின் பாரிய அளவிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டிருக்கும் என சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

 

முக்கிய சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்களை திரட்ட கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் பொலிஸாரால் கூற முடியாது எனவும் இந்த தொடர்பிலான போர் பல வருடங்களுக்கு முன்னரே ஆரம்பித்ததிலிருந்து இவர்களிடம் தகவல் இருந்திருக்க வேண்டும் எனவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இலங்கையில் அடித்து துன்புறுத்தப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாகும் மனநோயாளிகள் -மனித உரிமைகள் ஆணைக்குழு அதிர்ச்சி அறிக்கை !

இலங்கையில் மன நோயாளிகள் மிகக் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்வதாக மனித உரிமைகள் ஆணைக்குழுஆ வெளியிட்டுள்ள அறிக்கையொன்று அதிர்ச்சியளிக்கும் வகையில் தெரிவிக்கிறது.

மன நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையின்போதான சில நடவடிக்கைகள் மற்றும் வசதிகள் இல்லாமை ‘சித்திரவதைக்கு ஒப்பாகும்’ என்றும் அந்த அறிக்கை சாடியுள்ளது.

 

மன நோயாளிகளின் மனித உரிமைகள் மீறப்படுவது தொடர்பில் தமது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, அவர்களின் நல்வாழ்வு தொடர்பு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

 

அதன் இடைக்கால அறிக்கை மற்றும் வழிகாட்டல்கள் சர்வதேச மனித உரிமைகள் தினமான கடந்த டிசம்பர் 10ஆம் திகதி வெளியானது.

 

அந்த இடைக்கால அறிக்கையில் மனநலம் தொடர்பில் நாட்டில் புதிய சட்டமொன்று இயற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

இலங்கையின் தேசிய மனநல நிறுவனத்தில் ஊழியர்களின் தவறான நடவடிக்கைகள் மற்றும் நிர்வாகம் தொடர்பில், அந்த ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற முக்கிய முறைப்பாடுகளை அடுத்தே அவர்களின் இந்த கவலையும் அறிக்கையும் வெளியாகியுள்ளது.

 

அவர்களது கண்டுபிடிப்பில் சில விடயங்கள் அதிர்ச்சியளிக்கக்கூடிய வகையில், நோயாளிகளை இழிவுபடுத்தும் வகையில் இருந்துள்ளது.

 

கண்காணிப்பு கமராக்கள் இல்லாத இடங்களில் ஊழியர்கள் நோயாளிகளை அடிப்பது போன்ற முறைப்பாடுகள் அந்த ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டிருந்தன. அதுமாத்திரமின்றி, ஊழியர் ஒருவரின் நடவடிக்கை காரணமாக நோயாளி ஒருவர் உயிரிழந்ததும் அவர்களது அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

தமக்கு அளிக்கப்பட்ட முறைப்பாடுகளை அடுத்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, மன நோயாளிகளின் நலன் மற்றும் சுதந்திரம் குறித்து முன்னெடுத்த உண்மையை கண்டறியும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்த அறிக்கை வந்துள்ளது.

 

இதையடுத்து, அந்த ஆணைக்குழு சுகாதார அமைச்சு, தேசிய மனநல நிறுவனம், இலங்கை பொலிஸ் மற்றும் சிறைச்சாலை திணைக்களம் ஆகியவற்றுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை விடுத்துள்ளது.

 

அதன்படி, சர்வதேச மருத்துவ தரம் மற்றும் அரசின் மனித உரிமைக் கடப்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில், மனநலச் சட்டம் ஒன்று இயற்றப்படுவதற்கு உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தனது வழிகாட்டு நெறிமுறைகளின் ஒரு பகுதியாக பரிந்துரை செய்துள்ளது.

 

11 பக்கங்கள் கொண்ட விரிவான இந்த ஆவணம் அந்த ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பின்னர் இது பொது வெளியிலும் வெளியானது.

 

”குறிப்பிடத்தக்க கவலைகள்’ என அந்த ஆணைக்குழு கூறுவது தொடர்பில், மன நல நோயாளிகளின் புனர்வாழ்வு காலத்தில் அரசு அவர்களின் நல்வாழ்வு பேணப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

அத்தோடு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு எழுப்பியுள்ள கவலைகளில் நோயாளிக்கான தண்ணீர் வசதிகள், உணவு, இடவசதி, வைத்தியசாலைகள் மற்றும் பராமரிப்பு மையங்களில் சிகிச்சை, அதை அளிப்பவர்களின் நடவடிக்கை ஆகிய விடயங்களை பிரதானமாக உள்ளடக்கியுள்ளது.

மன நோயாளிகளின் மனித உரிமைகள் தொடர்ச்சியாக மீறப்படுவது குறித்து, தனது ஆழ்ந்த கவலையை ஆணைக்குழு எழுப்பியுள்ளது.

அதேவேளை, பல சந்தர்ப்பங்களில் உரிய கல்வித்தகுதி இல்லாதவர்கள் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். ஆண் நோயாளிகள் தங்கியுள்ள பிரிவுகளில் பெருபான்மையாக பெண் தாதியரே உள்ளனர்.

அந்த சமயத்தில் நோயாளிகளின் பராமரிப்பு என்பது உரிய பயிற்சி இல்லாத உப சேவகர்கள் மூலமே செய்யப்படுகிறது.

எனவே, நோயாளிகளின் பராமரிப்பு எந்தளவுக்கு காத்திரமாக உள்ளது என்பது பற்றி கேள்வி எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி, பெரும்பாலான நேரங்களில் உபசேவகர்கள் நோயாளிகளை கையாள்வதில் நிலவும் வழிகாட்டல்களை ஏற்று நடக்க மறுக்கின்றனர்.

முறையாக நிர்வகிக்கப்படாத சிகிச்சைக்கு அப்பாற்பட்டு, மாற்று வைத்திய சிகிச்சைகள் அளிக்கப்படுவது குறித்தும் கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன. அப்படியான மாற்று சிகிச்சை முறைகள் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன.

அத்துடன், சிகிச்சை அளிப்பதிலுள்ள குறைபாடுகள் தொடரும் அதேவேளை, தேசிய மனநல நிறுவனத்தில் பல மருந்துகள் தரமில்லாமலும் இருந்துள்ளன. அந்த மருந்துகள் கையிருப்பில் இல்லாதபோது, சிகிச்சைக்கு மாற்று வழிமுறைகள் கையாளப்படுகின்றன. எனினும், உயர்தர மருந்துகள் கையிருப்பில் இல்லாத நிலையில், இப்படியான மாற்று வைத்திய வழிமுறைகளில் கூடுதலான பக்கவிளைவுகள் உள்ளன.

 

இவை மட்டுமின்றி, மனநல நோயாளிகளுக்கான வைத்திய சிகிச்சை கட்டணமும் கவலையை ஏற்படுத்தி நெருக்கடியை மேலும் அதிகரிக்கச் செய்கிறது என மேலும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

உயர்ந்த கட்டணம் காரணமாக வைத்தியசாலையில் இருந்து விடுவிக்கப்பட்ட நோயாளிகள் மருந்துகளை வாங்க சிரமப்படுவதால், அவர்கள் நோய்வாய்ப்பட்டு மீண்டும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறும் சூழல் ஏற்படுகிறது.

 

தண்ணீர் வசதி, சுகாதாரம் ஆகிய இரண்டும் முக்கியமான கவலைகளாக அந்த ஆணைக்குழுவால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

 

மன நோயாளிகள் அறியாமல் தமது உடைகள் மற்றும் படுக்கை விரிப்புகளை அழுக்காகிவிடக் கூடும். அதை உடனடியாக சுத்தம் செய்ய தடையில்லா தண்ணீர் விநியோகம் தேவை. இந்த ‘தொடர்ச்சியான தண்ணீர் விநியோகம்’ தேசிய மனநல நிறுவனத்தில் சீராக இல்லாதது மட்டுமின்றி, அவர்களின் தண்ணீரை சேமித்து வைக்க வசதியும் இல்லை. அது பல அசௌகரியங்களை ஏற்படுத்துகிறது. அதிலும் குறிப்பாக, தண்ணீர் விநியோகம் நிறுத்தப்படும் போது அது மேலும் சிக்கலாகிறது என அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.

 

தொடர்ச்சியாக, தண்ணீர் வசதி இல்லாததொரு சூழலுக்கு அப்பாற்பட்டு, நுளம்புக்கடியிலிருந்து நோயாளிகளைப் பாதுகாப்பதும் தேசிய மனநல நிறுவனத்தில் சவாலாக உள்ளது. தற்கொலை அபாயம் காரணமாக நுளம்புவலைகள் பயன்படுத்தப்படுவதில்லை.

 

“முன்னர் நுளம்பு மருந்து அடிப்பது போன்ற தொழில்நுட்பங்கள் கையாளப்பட்டாலும், இப்போது அப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. இது மட்டுமல்லாமல் தடையவியல் பிரிவில் மூட்டைப்பூச்சிகளின் இருப்பும் தொடரும் ஒரு பிரச்சனையாக உள்ளது”.

 

மனநோயாளிகளை சமாளிப்பதிலும் அவர்களுக்கு வைத்தியம் அளிப்பதிலும் மொழிப் பிரச்சினை ஒரு பெரும் தடங்கலாக உள்ளது. தேசிய மனநல நிறுவனத்திலுள்ள பெரும்பாலான ஊழியர்கள் தமிழ் பேசும் நோயாளிகளிடம் தொடர்பாடல்களை மேற்கொள்வதில் சவால்களை எதிர்கொள்கின்றனர் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கூறுகிறது. நோயாளிகள் என்ன கூறுகிறார்கள் என்பதை ஊழியர்கள் புரிந்துகொள்ள முயன்றாலும், தொடர்பாடல் பிரச்சினைகள் நிலவுகின்றன என்று கூறும் அந்த ஆணைக்குழு இப்போது வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் ஊழியர்களுக்கான தமிழ் மொழிப் பயிற்சி அளிப்பதையும் பரிந்துரை செய்துள்ளது.

தேசிய மனநல நிறுவனம் இதர நோயாளிகளிடம் உதவி கோரும் அதேவேளை, உபசேவகர்கள் ‘கூகிள் மொழிபெயர்ப்பு’ போன்ற தொழில்நுட்பங்களையும் பயன்படுத்துகின்றனர் எனவும் அந்த ஆணைக்குழு, “எனினும் நோயாளிகன் தேவைகளை துல்லியமாக அறிந்துகொள்ள அவர்களால் முடியுமா என்பது தெளிவாக இல்லை” என்றும் கூறியுள்ளது.

 

மன நோயாளிகளை கையாள்வதில் இப்படியான சவால்கள் இருக்கும் சூழலில், இலங்கையில் ’புதிய மனநல வைத்திய சட்டம்’ ஒன்று தேவை எனவும் அச்சட்டம் சர்வதேச தரத்துக்கு அமைவாக இருக்க வேண்டும் என்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. இந்த விடயம் இலங்கையின் சுகாதார அமைச்சுக்கான முன்னுரிமை வழிகாட்டலாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

அங்கொடையிலுள்ள தேசிய மனநல நிறுவனத்திலுள்ள நிர்வாகக் கட்டமைப்பு தொடர்பிலும் அந்த வழிகாட்டல்கள் கவனம் செலுத்தியுள்ளன.

 

இலங்கையிலேயே மனநல வைத்தியத்துக்கான மிகப்பெரிய மையமாக அங்கொட வைத்தியசாலை காணப்படுவதோடு, அங்கேயே அதிகளவானோர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுகின்றனர்.

 

தேசிய மனநல நிறுவனத்தில் நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தாருக்கு மேம்பட்ட உணவு வழங்கல் மற்றும் குறை தீர்க்கும் வழிமுறைகளை நடைமுறைப்படுத்துவது ஆகியவையும் மனித உரிமைகள் ஆணைக்குழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

 

அவர்கள் விடுத்துள்ள வழிகாட்டல்களின் ஒரு பகுதியாக அந்த வைத்தியசாலையில் பொலிஸ் காவல் மையம் ஒன்றையும், மனநோய் உள்ள சிறைக்கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சிறைக்காவலர்கள் அங்கொட வைத்தியசாலையில் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கூறியுள்ளது.

புதிய இணைய பாதுகாப்பு சட்டமூலம் குறித்த 07 பரிந்துரைகளை வெளியிட்டுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு !

அரசாங்கம் வெளியிட்டுள்ள புதிய இணைய பாதுகாப்பு சட்டமூலம் குறித்த 07 பரிந்துரைகள் அடங்கிய கடிதத்தை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலசுக்கு அனுப்பியுள்ளது.

மக்களின் இணையப் பாதுகாப்பை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை அங்கீகரித்த அதேவேளை, முன்மொழியப்பட்ட சட்டம் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவலை வெளியிட்டுள்ளது.

இணைய செயற்பாடுகள் தொடர்பாக புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன், இந்த சட்டமூலம் அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்துடன் இணைந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

1 துன்பத்தின் உணர்வுகள் அளவு வேறுபடலாம் என்பதனால் நபர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதாகக் கருதப்படும் அறிக்கைகளை குற்றமாக்குவதை இந்த சட்டமூலம் தவிர்க்க வேண்டும்.

2 முன்மொழியப்பட்ட சட்டமூலம் அதன் அரசியல் சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் நியமன பொறிமுறையின் மூலம் நியமிக்கப்பட வேண்டும்

3 நபர்களுக்கு எதிராக எடுக்கப்படும் பாதகமான முடிவுகளுக்கான நடைமுறைகளை வகுக்கும் சட்டமூலத்தில் உள்ள விதிகள், இயற்கை நீதியின் விதிகளுக்கு இணங்க, அவர்கள் கேட்கும் வாய்ப்பை வழங்குவதை உறுதிசெய்யும் வகையில் திருத்தப்பட வேண்டும்.

4 1883 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க தண்டனைச் சட்டத்தில் ஏற்கனவே காணப்பட்ட குற்றங்களைச் செய்ய மற்றவர்களைத் தூண்டும் ‘தடைசெய்யப்பட்ட அறிக்கைகள்’ தொடர்பாக விதிக்கப்பட்ட தண்டனைகளின் பகுத்தறிவு, நியாயத்தன்மை மற்றும் விகிதாச்சாரத்தின் அடிப்படையில் கணிசமாக திருத்தப்பட வேண்டும்.

5 இணைய பயனர்கள் அநாமதேயமாக இருக்கவும், பகடி, நையாண்டியில் ஈடுபடவும் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் விதத்தில், சாதாரணமான இணைய கணக்குகளை வகைப்படுத்துவதற்கான தெளிவான அளவுகோல்கள் சட்டமூலத்தில் சேர்க்கப்பட வேண்டும்.

6 பொலிஸ் விசாரணைகளுக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்களுக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படக்கூடாது, ஏனெனில் அவர்கள் பகிரங்கமாகப் பொறுப்பேற்காத தனிப்பட்ட நபர்களாக இருக்கலாம்.

7 இந்த சட்டமூலத்தை ஊடாக சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான புதிய குற்றத்தை அறிமுகப்படுத்தியதை வரவேற்கிறது மற்றும் அத்தகைய குற்றத்தை தனி சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்த நீதி மற்றும் குழந்தைகள் விவகாரங்கள் சம்பந்தப்பட்ட அமைச்சுடன் பணியாற்ற வேண்டும்

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் 11000 முறைப்பாடுகள் – மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட 11,000 இற்கும் அதிகமான முறைப்பாடுகளை உடனடியாக விசாரிப்பதற்கான வேலைத் திட்டத்தினை முன்னெடுத்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அத்துடன் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளில் சிலவற்றை பொதுச்சேவை ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு, தொழில் திணைக்களம், நுகர்வோர் விவகார அதிகார சபை ஆகியவற்றுக்கு அனுப்பிவைக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் இவ்வாறு அனுப்பிவைக்கப்படும் முறைப்பாடுகள் உரிய நிறுவனங்களால் சரியான முறையில் விசாரணை செய்யப்படுகின்றனவா எனக் கண்காணிக்கப்படுமென மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளரும், சட்டத்தரணியுமான நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

 

அத்துடன் கிடைக்கப்பெற்றுள்ள அனைத்து முறைப்பாடுகளையும் உடனடியாக விசாரணை செய்வதன் மூலம், மக்களுக்கான நீதியை நிலைநாட்ட முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு பொது மக்களிடமிருந்து சுமார் 11,000 முறைப்பாடுகள் !

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தனர்.

இதுவரையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு சுமார் 11,000 முறைப்பாடுகள் பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பணியாளர்கள் தட்டுப்பாடு காணப்படுவதாகவும் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

அதற்குரிய தீர்வுகளை விரைவில் பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இதன்போது, அரச அதிகாரிகள் மற்றும் பொலிஸாருக்கு அவசியமான வழிக்காட்டல் கோவை ஒன்றை விரைவில் பெற்றுத்தருமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி, அதனூடாக ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துவதற்கான இயலுமை தொடர்பிலும் எடுத்துரைத்தார்.

பாதிக்கப்பட்ட தரப்பினர் அரசாங்கத்தை நம்பவேண்டும் என்று நீங்கள் எவ்வாறு எதிர்பார்க்கின்றீர்கள்? – அமைச்சர் சப்ரியிடம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் கேள்வி !

தமிழ்ச் சமூகத்துக்கு எதிராக பல்வேறு மீறல்கள் இடம்பெற்றுவரும் பின்னணியில் ‘சமாதானத்தை கட்டியெழுப்புதல்’ என்பதால் நீங்கள் கருதுவது என்ன? என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுவரும் நிலையில், இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிஸுகொஷி ஹிடேகி, சுவிற்ஸர்லாந்து தூதுவர் மொமினிக் ஃபக்ளெர் மற்றும் தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் சன்டைல் எட்வின் ஸ்கால்க் ஆகியோருக்கும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் இடையிலான சந்திப்பொன்று கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இலங்கையில் சமாதானத்தை கட்டியெழுப்புவதை முன்னிறுத்தி இவ்வனைத்து தரப்புக்களுடனும் மிக நெருக்கமாக பணியாற்றுவதற்கான வழிமுறைகள் குறித்தும், இந்த இலக்கை அடைந்துகொள்வதில் இலங்கைக்கு வழங்கக்கூடிய உதவிகள் குறித்தும் இச்சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் அலி சப்ரி அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அப்பதிவை மேற்கோள் காட்டி, தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே அம்பிகா சற்குணநாதன் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

“அமைச்சரே, தமிழ்ச் சமூகத்துக்கு எதிராக பல்வேறு மீறல்கள் இடம்பெற்றுவரும் பின்னணியில் ‘சமாதானத்தைக் கட்டியெழுப்புதல்’ என்பதால் நீங்கள் கருதுவது என்ன என்று விளக்க முடியுமா? உண்மையைக் கண்டறியும் நோக்கில் கடந்த காலங்களில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் பரிந்துரைகள் எவையும் நடைமுறைப்படுத்தப்படாத நிலையில், பாதிக்கப்பட்ட தரப்பினர் அரசாங்கத்தை நம்பவேண்டும் என்று நீங்கள் எவ்வாறு எதிர்பார்க்கின்றீர்கள்?” என்றும் அவர் வினவியுள்ளார்.

மேலும், “நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்குரிய அடிப்படை நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் ஊடாக உங்களுடைய அரசாங்கம் அதன் நம்பகத்தன்மையை வெளிப்படுத்த வேண்டும் அல்லவா? பாதிக்கப்பட்ட தரப்பினரை மையப்படுத்திய எந்தவொரு செயன்முறை என்றாலும், அதுகுறித்து அவர்களுடன் கலந்துரையாடப்பட வேண்டும் அல்லவா?

சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான செயன்முறை செயற்திறன் மிக்கதாக அமைய வேண்டுமாயின், தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை முடிவுக்கு கொண்டுவருவது அவசியமல்லவா?” என்றும் அம்பிகா சற்குணநாதன் கேள்வி எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.