இலங்கை போதைப்பொருள் பாவனை

இலங்கை போதைப்பொருள் பாவனை

இலங்கையில் போதைப்பொருள் பாவனையால் ஒவ்வொரு ஆண்டும் 40000 பேர் வரை உயிரிழப்பு!

இந்த நாட்டில் போதைப்பொருள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 40,000 பேர் உயிரிழப்பதாக ஆபத்தான மருந்துகளின் தேசிய கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.

அவர்களில் புகையிலை பாவனையினால் சுமார் 20,000 பேரும், மது பாவனையினால் 18,000 பேரும்,மற்ற போதைப்பொருள் பாவனையினால் சுமார் 2,000 பேரும் உயிரிழப்பதாக தேசிய ஆபத்தான போதைப்பொருள் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் பாவனையில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது பெற்றோரின் பொறுப்பு என அதன் தலைவர் தெரிவித்தார்.

பாரிய போதைப்பொருள் கடத்தலுக்கு கடற்படை வீரர்கள் உதவி !

பாரிய போதைப்பொருள் வர்த்தகத்திற்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் கடற்படை அதிகாரிகள் இருவரை கடற்படையின் விசேட புலனாய்வுப் பிரிவினர் இன்று (30) கைது செய்துள்ளனர்.

இலங்கை கடற்படையின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட நீண்ட உள்ளக விசாரணையின் பின்னரே அவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த இரண்டு அதிகாரிகளும் கடற்படையின் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றியவர்கள் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த தொடரும் யுக்திய – ஒரு லட்சம் பேர் கைது !

பொலிஸாரால் நடைமுறைப்படுத்தப்பட்ட யுக்திய நடவடிக்கையின் ஆரம்பம் முதல் இதுவரை 111,074 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 4,472 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கைகளில் 41 கிலோ ஹெரோயின், 43 கிலோ ஐஸ் போதைப்பொருள், 03 லட்சம் போதை மாத்திரைகள் மற்றும் 1,500 மில்லியன் ரூபா சட்டவிரோத சொத்துக்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கொழும்பு மாவட்டத்தில் போதைப்பொருளுக்கு அடிமையானோரின் எண்ணிக்கை 11 லட்சமாக அதிகரிப்பு!

கொழும்பு மாவட்டத்தில் போதைப்பொருளுக்கு அடிமையானோரின் எண்ணிக்கை சுமார் பதினொரு இலட்சமாக அதிகரித்துள்ளதாக காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோன்  தெரிவித்துள்ளார்.

மேலும் போதைப்பொருள் விநியோகத்தை கட்டுப்படுத்துவது போன்றே போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “கொழும்பு மாவட்டத்தில் சுமார் 256 இடங்களில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்படுகிறது.

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக போதைப்பொருள் விற்பனையும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், போதைப்பொருள் வர்த்தகத்தையும் பயன்பாட்டையும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் காவல்துறையினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது” என காவல்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார்.

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 16 பெண்கள் உட்பட 660 பேர் கைது !

நாடளாவிய ரீதியில் நேற்று (25) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 16 பெண்கள் உட்பட 660 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

கைது செய்யப்பட்டவர்களில் 23 பேர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ள 3 பேரை புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

சந்தேக நபர்களிடமிருந்து 66 கிராம் ஹெரோயின், 232 கிராம் கஞ்சா , 167கிராம் ஐஸ் , 653 கிராம் கஞ்சா மற்றும் 20 கிராம் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

நச்சுத்தன்மை வாய்ந்த போதைப்பொருட்களை பயன்படுத்தும் இலங்கையின் 5 லட்சம் மக்கள்!

இலங்கையில் 5 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் நச்சுத்தன்மை வாய்ந்த போதைப்பொருட்களை பயன்படுத்துவதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.

 

இன்று (3) புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் ஷக்ய நாணயக்கார இதனை தெரிவித்தார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

இலங்கையில் 5 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பல்வேறு வகையான போதைப்பொருட்களை பயன்படுத்துகின்றனர். இது தவிர, புதிய வகையான போதை மாத்திரைகளும் சமூகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 30 ஆயிரம் பேர் இவ்வாறான போதை மாத்திரைகளை பயன்படுத்துகின்றனர்.

 

இந்நிலையில், இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் 25 வகையான இரசாயனப் பொருட்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஏனென்றால் அவற்றினால் புதிய வகையான போதை மாத்திரைகளை தயாரிக்க முடியும். எனவே இந்த இரசாயனப் பொருட்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுவதற்கு தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் அனமதி அவசியம் என்றார்.

 

போதைக்கு அடிமையானவர்களின் புனர்வாழ்வு தொடர்பான புதிய வேலைத்திட்டம் !

போதைக்கு அடிமையானவர்களின் புனர்வாழ்வு தொடர்பான புதிய வேலைத்திட்டம் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

மேலும், யுக்திய நடவடிக்கையில் போதைபொருள் கடத்தல்காரர்கள் முற்றாக ஒடுக்கப்படவில்லை எனவும், அவர்கள் அனைவரையும் மிகக் குறுகிய காலத்தில் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

இதேவேளை , போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள அழுத்தம் காரணமாக போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், சில குழுக்களுக்கும் இடையில் பாரிய முரண்பாடுகள் உருவாகியுள்ளதாகவும் இதனால் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் அதிகளவில் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இலங்கை சிறைச்சாலைகளில் 65 வீதமான போதைப்பொருள் குற்றவாளிகள் – 1500 சிறுவர்களும் உள்ளடக்கம்!

சிறைச்சாலையில் உள்ளவர்களில் 65 வீதமானவர்கள் போதைப்பொருள் பாவனை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் ஜகத் சந்தன வீரசிங்க தெரிவித்துள்ளார்.

காலி நாகொட பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட போது சிறைச்சாலை ஆணையாளர் திரு.ஜகத் சந்தன வீரசிங்க இதனை தெரிவித்தார்.

 

இதேவேளை போதைப்பொருள் குற்றங்களுக்காக 1000 முதல் 1500 வரையான சிறுவர்கள் சிறைச்சாலையில் உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இணையம் மற்றும் கையடக்க தொலைபேசிகள் ஊடாக போதைப்பொருள் கடத்தல் – 300க்கும் அதிகமானோர் கைது !

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இணையம் மற்றும் கையடக்க தொலைபேசிகள் ஊடாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 316 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் கொள்வனவுக்காக பணம் செலுத்தும் முறைமையாக கடத்தல்காரர்களால் இணையம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் அதிகம் பயன்படுத்தப்படுவதாக கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (31) நாடளாவிய ரீதியில் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

 

கைத்தொலைபேசியுடன் தொடர்புடைய 1964 வர்த்தக நிலையங்கள், 2131 அங்கீகரிக்கப்பட்ட தனியார் தொடர்பாடல் நிலையங்கள் மற்றும் 1202 இடங்களில் அடையாளம் காணப்பட்ட வர்த்தக வங்கிகள் தொடர்பில் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

31,000 போதை மாத்திரைகளுடன் மன்னாரில் இளைஞர் ஒருவர் கைது !

மன்னார் – சௌத்பார் பகுதியில் கைவிடப்பட்ட அட்டை பண்ணை ஒன்றில் இருந்து போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின்படி இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவரிடம் இருந்து 31,000 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.