இலங்கை கல்வி

இலங்கை கல்வி

தனியார் கல்விக்கும் இறுதிப் பரீட்சைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் கல்விச் சீர்திருத்தம் வர வேண்டும் !

தனியார் கல்விக்கும் இறுதிப் பரீட்சைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் கல்விச் சீர்திருத்தம் வர வேண்டும் !

தனியார் கல்விக்கும் இறுதிப் பரீட்சைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் கல்விச் சீர்திரத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என இலங்கை ஆசிரயர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. இலங்கை பிரித்தானியாவிலிருந்து 1948இல் சுதந்திரம் அடைந்த போதும் இன்றும் காலனித்துவ கல்விமுறையே இலங்கையில் உள்ளது. இலங்கை சுதத்திரம் அடைந்த பின் 1956இல் கொண்டுவரப்பட்ட ஆங்கிலத்துக்கு முன்னுரிமையற்ற கல்வி முறையால், இலங்கையில் தாய்மொழிகளான சிங்களமும் தமிழும் அபார வளர்ச்சியைக் கண்டன என இலங்கை முன்னாள் ராஜதந்திரி அய்யம்பிள்ளை தர்மகுலசிங்கம் தெரிவித்தார். தற்போதைய பரீட்சைகளை மட்டும் முன்னிலைப்படுத்தும் பிரித்தானியாவின் காலனித்துவ கல்வி முறையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் கோரியுள்ளது.

தென் மாகாணங்களில் பாடசாலை ஆசிரியர்கள் தனியார் கல்விநிலையங்களில் கற்பிப்பதற்கு தடைவிதித்து சுற்றுநிருபம் அனுப்பி வைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் தரம் ஒன்பது, ஒன்பதாம் வகுப்புக்கு கீழான மாணவர்களுக்கு தனியார் கல்வியை ஞாயிற்றுக் கிழமைகளில் நடத்தக் கூடாது என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அறிவித்துள்ளார்.

யாழில் மூன்று மாணவர்கள் உள்ள வீட்டில் தனியார் கல்விக்கு 50,000 ரூபாய் செலவிடப்படு வருவதாகவும் இலவசக் கல்வி என்பது பெயரளவில்தான் இருப்பதாகவும் முன்பள்ளிச் செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் என் சச்சிதானந்தன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். இதனை உறுதிப்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டுள்ள இலங்கை ஆசிரியர் சங்கம் சில குடும்பங்களில் அவர்களுடைய வருமானத்தின் 60 சதவீதம் தனியார் வகுப்புகளுக்குச் செலவிடப்படுவதாகத் தெரிவித்தார்.

இதுபற்றி கருத்து வெளியிட்ட வறணி ஆரம்பப் பள்ளி அதிபர் தனியார் கல்வி என்பது ஒரு கலாச்சாரமாகிவிட்டது என்றார்.

கல்விக்கு ஒரு பிள்ளைக்கு மாதம் 15,000 ரூபாய்; செலவு! தனியார் கல்வி நிறுவனங்களின் முடிவின் ஆரம்பம்!

கல்விக்கு ஒரு பிள்ளைக்கு மாதம் 15,000 ரூபாய் செலவு! தனியார் கல்வி நிறுவனங்களின் முடிவின் ஆரம்பம்!

 

பாடசாலை ஆசிரியர்கள் தனியார் கல்வி நிறுவனங்களில் வகுப்புகளை நடாத்துவதற்கு தடைவிதித்து மேல் மாகாண கல்வி அமைச்சு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. இதன்படி, ஆசிரியர்கள் பாடசாலை நேரம் முடிந்த பிறகும், வார விடுமுறை நாட்களிலும், பொது விடுமுறை நாட்களிலும் கூடுதல் வகுப்புகளை பல்வேறு வெளி இடங்களில் நடத்தி வருமானம் ஈட்டத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அறிவுறுத்தல்களை புறக்கணிக்கும் ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் கல்வி அமைச்சுக்களால் சுற்றறிக்கைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன.

இந்நடைமுறையை யாழ் மாவட்டத்திலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என முன்பள்ளி கல்விச் செயற்பாட்டாளர் என் சச்சிதானந்தன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். வடக்கில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா பயிற்சி நெறிகளை யாழ் மற்றும் வவுனியா பல்கலைக்கழகங்களில் ஆரம்பிப்பதில் முன்நின்ற இவர், இலவசக் கல்வி பெயரளவில் உள்ளதேயல்லாமல் உண்மையில் மூன்று பிள்ளைகளையுடைய குடும்பம் மாதம் 50,000 ரூபாய்களை தனியார் கல்விக்குச் செலவிடவேண்டியுள்ளதாக தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

இதே கருத்தை வெளியிட்ட வறணி ஆரம்பப் பாடசாலையின் அதிபர் நாகப்பர் கண்ணதாசன், 9ம் தரம் வரை மாணவர்கள் தனியார் கல்வியை நாட வேண்டிய அவசியம் இல்லை எனத் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் தனியார் கல்வி நிலையங்களுக்குச் செல்வது கற்பதற்காக என்பதிலும் பார்க்க அதுவொரு கலாச்சாரமாகிவிட்டது.

நேர்காணலை மேற்கொண்ட த ஜெயபாலன், “தமிழ் மாணவர்கள் தனியார் கல்விக்கு இப்பெரும்தொகையைச் செலவழிக்க, இவர்களின் பெற்றோர்கள் செல்வந்தர்களாக வந்துவிட்டார்களா? அல்லது மாணவர்கள் சோம்பேறிகளாக ஆகிவிட்டார்களா?” எனக் கேள்வி எழுப்பினார். தன்னூக்கக் கல்வி முக்கியத்துவம் பெற்றுள்ள இன்றைய காலகட்டத்தில், தெரியாத ஒரு விடயத்தை கற்றுக்கொள்வது என்பது ஒரு பட்டனை அழுத்தும் தொலைவில் இருக்கும் இன்றைய காலத்தில் தனியார் கல்வி ஏன் அவசியம் என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது. கல்வியில் முன்னணி வகிக்கும் நாடுகளில் தனியார் கல்வி நிறுவனங்கள் இல்லை என்பதைக் கவனிக்க.

இதேவேளை, தனியார் கல்வி நிறுவனங்கள் தொடர்பில் இறுக்கமான தீர்மானங்களை யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் கடந்த வாரம் நடைபெற்ற மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் மேற்கொண்டிருந்தார். இதன்படி, தரம் 9 மற்றும் தரம் 9 இற்கு கீழப்பட்ட வகுப்புக்களுக்கான தனியார் கல்வி செயற்பாடுகள் மற்றும் குழு வகுப்புக்களை வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் வேளைகளிலும் ஞாயிற்றுக்கிழமை முழு நேரமாகவும் நிறுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

தனியார் கல்வி நிலைய வாசலில் பெற்றோர்கள் காத்திருப்பதனால் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடிகளை உரிய முறையில் நிர்வாகிகள் கட்டுப்படுத்த வேண்டும். தவறினால் பொலிஸாரின் உதவி பெற்றுக்கொள்ளப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. தனியார் கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பாக கடந்த காலங்களிலும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆயினும் அவை உரிய முறையில் நடைமுறைப்படுத்தபடவில்லை. புதிய அரசாங்கத்தின் கீழ் இவை உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு மட்டுமல்ல இந்தப் பரீட்சையே நிறுத்தப்பட வேண்டும்! 

5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு மட்டுமல்ல இந்தப் பரீட்சையே நிறுத்தப்பட வேண்டும்!
இறுதியாக நடந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாளில் மூன்று கேள்விகள் கசிந்தமை தொடர்பில் அடிப்படை உரிமை மீறல் மனு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீதான தீர்ப்பு 31 ஆம் திகதி வழங்கப்படவிருக்கிறது. ஏலவே இப்பரீட்சையானது மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் மிகுந்த உள நெருக்கடியை வழங்குவதாக கல்வியாளர்கள் கண்டிக்கின்றனர். ஆளும் என்பிபி அரசாங்கமும் இப்பரீட்சை இலங்கையின் இலவச கல்வியின் அடிப்படை நோக்கங்களை சிதைக்கிறது என கூறுகிறது. கல்வி அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் பிரதமர் ஹரிணி அமரசூரிய, இந்த புலமைப் பரிசில் பரீட்சை வகுப்புக்கள் மாணவர்களை உளநெருக்கடிக்கு உள்ளாக்குவதாகவும், தமது அரசு இந்த பரீட்சைகளை நிறுத்த திடசங்கற்பம் கொண்டுள்ளதாகவும் திட்டவட்டமாக அறிவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
யாழ் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்விக் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியதன் அவசியம் பற்றி தேசம்நெற் செய்திகளையும் நேர்காணல்களையும் வெளியிட்டு இருந்தமை தெரிந்ததே. அண்மையில் சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய, ஞாயிற்றுக் கிழமைகளில் தரம் ஒன்பது மற்றும் தரம் ஒன்பதிற்கு உட்பட்ட வகுப்புகளுக்கு தனியார் கல்விநிலையங்கள் வகுப்புகள் எடுக்கக் கூடாது என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஒரு நாட்டின் வளர்ச்சியில் கல்வியே அடிப்படைப் பங்காற்ற வேண்டும் என்ற பொறுப்பில் இருந்து படிப்படியாக கடந்த கால அரசாங்கங்கள் விலகிவிட்டன – பிரதமர் ஹரிணி அமரசூரிய

கல்வித்துறை அரசியலாகிவிட்டது. தற்போது சமூகத்தில் கல்வியின் மீது நம்பிக்கை இல்லை. கல்வியின் மீதான நம்பிக்கையை கட்டியெழுப்புவது மிகவும் முக்கியமானது. இலங்கையை உலகில் அங்கீகரிக்கப்பட்ட நாடாக மாற்றும் கல்வி முறையை தயார் செய்ய வேண்டும் என பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

 

நாட்டில் நிலவும் நெருக்கடிகளுக்கு விரைவான தீர்வுகளைத் தேடும் அதே வேளை சிறந்த கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த விரும்புகிறோம். இது ஒரு கூட்டுப் பயணம். ஒரு கட்சியோ, ஒரு அரசாங்கமோ மாத்திரம் அதை செய்ய முடியாது. அதற்கு மக்களின் ஆதரவை எதிர்பார்க்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

 

ஐந்து வருடங்களின் பின்னர் நாடளாவிய ரீதியில் உள்ள 396 தேசிய பாடசாலைகளின் அதிபர்கள் பங்குபற்றிய விசேட செயலமர்வொன்று கொழும்பு ஆனந்தா கல்லூரியில் நடைபெற்றது.

இச்செயலமர்வில் பாடசாலை நிதி முகாமைத்துவம் தேசிய பாடசாலைகளின் நிர்மாணப் பணிகள் மற்றும் புனரமைப்பு பணிகள் தேசிய பாடசாலைகள் மேற்பார்வையின்போது இனங்காணப்பட்ட பொதுவான விடயங்கள் உட்பட தேசிய பாடசாலைக் கிளையினால் மேற்கொள்ளப்படும் விழிப்புணர்வுத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டார்.

 

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

மறுமலர்ச்சி யுகம் – வளமான நாடு நம் அனைவருக்கும் அழகான வாழ்க்கை என்ற இந்த தொலைநோக்கை யதார்த்தமாக்குவதற்கு கல்வியின் முக்கியத்துவத்தை இங்குள்ள அதிபர்கள் நன்கு அறிவார்கள். அரசாங்கம் என்ற வகையில் கல்விக்கான அனைத்து ஒத்துழைப்பையும் வழிகாட்டுதலையும் வழங்க நாம் தயாராக உள்ளோம்.

 

கல்வி என்பதன் மூலம் நாம் எதிர்பார்ப்பது அறிவை மட்டும் வழங்குவதன்று. அதையும் தாண்டிய ஒரு விரிந்த தொலைநோக்கு கல்வியில் உள்ளது. தொழிலுக்காக மட்டுமின்றி இந்த நாட்டைப் பொறுப்பேற்கக்கூடிய, இந்த நாட்டை மாற்றக்கூடிய, இந்த நாட்டை வழிநடத்தக்கூடிய நல்லொழுக்கமுள்ள சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன் எமது கல்விக் கொள்கையைத் தயாரித்துள்ளோம்.

 

ஒரு வளமான நாடு என்பதன் மூலம் எமது அரசாங்கம் நாடுவது பொருளாதார அடிப்படையில் மட்டும் வளமான நாடாக இருப்பதையல்ல. கலாசாரம், ஒழுக்கப் பெறுமானங்கள் மற்றும் மனப்பாங்குகளுடன் அனைத்து அம்சங்களிலும் நாம் வளம் பெற வேண்டும் என்பதாகும்.

இத்தகைய சமூகத்தில் நாம் அனைவரும் அழகான வாழ்க்கையை வாழ முடியும். நாம் மறுமலர்ச்சி யுகம் என்று கூறுவது, இந்த நாட்டுக்கு ஒரு புதிய ஆரம்பம் தேவை என்பதையே ஆகும்.

 

ஐக்கியம், நல்லிணக்கம் மற்றும் நவீன உலகில் பெருமையுடன் முன்னோக்கிச் செல்லக்கூடிய பிரஜைகளை நாம் உருவாக்க வேண்டும். நாம் முன்மொழிந்துள்ள கல்விக் கொள்கை இந்த அபிலாஷைகளை அடைவதை நோக்கமாகக் கொண்டதாகும்.

 

தற்போது சமூகத்தில் கல்வியின் மீது நம்பிக்கை இல்லை. கல்வியின் மீதான நம்பிக்கையை கட்டியெழுப்புவது மிகவும் முக்கியமானது. விரக்தியான நிலையே காணப்படுகிறது. தற்போதுள்ள கல்வி முறையில் பிள்ளைகள் பெற்றோர்கள் மற்றும் சமூகம் திருப்தி அடைகின்றனரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

 

திட்டமிட்டபடி பரீட்சையை நடத்த முடியுமா? பரீட்சை பெறுபேறுகள் பற்றி நீங்கள் நம்பிக்கையோடு இருக்க முடியுமா? கல்வித்துறையில் நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் குறித்து நீங்கள் நம்பிக்கையுடன் இருக்க முடியுமா? பிள்ளைகளை பாடசாலையில் சேர்க்கும் முறையில் சமுதாயம் நம்பிக்கை வைக்க முடியுமா? நம்பிக்கையை இழக்கும் வகையில் இந்த செயல்முறை மற்றும் முறைமை பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. இது அரசியலாகிவிட்டது.

 

இங்கு இந்த கல்வி முறைமையில் பணியாற்றும் உங்களிடம் தவறில்லை. காலாகாலமாக கல்வியில் கவனம் செலுத்தாமை கல்வியின் முக்கியத்துவம் ஒரு நாட்டின் வளர்ச்சியில் கல்வியே அடிப்படைப் பங்காற்ற வேண்டும் என்ற பொறுப்பில் இருந்து படிப்படியாக அரசு விலகியதால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

 

கல்வி அரசியல்மயமாகியுள்ள காரணத்தினால் இத்துறையில் உள்ள அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம். உங்கள் தொழில்முறை கண்ணியத்தைப் பாதுகாக்கும் வகையில் கல்வி முறையை கட்டியெழுப்ப நாம் விரும்புகிறோம். உங்களது பொறுப்பை சுதந்திரமாக நிறைவேற்றத் தேவையான சூழலை உருவாக்குவதே எங்கள் நோக்கம்.

 

ஒவ்வொரு அரசாங்கமும் கல்வி சீர்திருத்தங்கள் பற்றி பேசின. அந்த சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தியதன் மூலமே கல்வி முறை மிகவும் சிக்கலான நிலைமையை அடைந்துள்ளது. கல்வி முறையின் வீழ்ச்சிக்கு மற்றொரு காரணம் ஒழுங்குபடுத்தல். ஒரே இடத்தில் இல்லாதிருப்பதாகும். கல்வி அமைச்சு ஒன்றை கூறுகிறது. கல்வி ஆணைக்குழு இன்னொன்றை கூறுகிறது.

 

சில நேரங்களில் ஜனாதிபதி அலுவலகம் மேலும் ஒன்றை கூறுகிறது. எந்தக் கொள்கைக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும், எந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற தெளிவின்மை கடந்த பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. அந்த தெளிவற்ற நிலையின்றி நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கூட்டாகச் செயற்படுத்தக்கூடிய ஒரு கொள்கையை நாங்கள் நடைமுறைப்படுத்த விரும்புகிறோம்.

 

எங்கள் அரசியல் இயக்கம் கலந்துரையாடல்களுக்கு எப்போதும் தயாரகவுள்ளது. உங்கள் கருத்துகளுக்கு மதிப்பளிக்கத் தயாராகவுள்ளது. இந்த நாட்டில் நிலவும் நெருக்கடிகளுக்கு விரைவான தீர்வுகளைத் தேடும் அதே வேளையில் சிறந்த கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த விரும்புகிறோம். மீண்டும் நெருக்கடிக்குள் செல்லாமல் இந்த நாட்டை உலகில் அங்கீகரிக்கப்பட்ட நாடாக மாற்றும் கல்வி முறையை தயார் செய்ய வேண்டும்.

நாட்டுக்குத் தேவையான மதிப்புமிக்க பிரஜைகள் கல்வி முறையின் மூலமே உருவாக்கப்படுகின்றனர். அரசாங்கம் என்ற வகையில் கல்வியில் அதிக கவனம் செலுத்துகிறோம். இது ஒரு எண்ணக்கரு மட்டுமல்ல, அதற்குத் தேவையான நிதிப் பங்களிப்பையும் எமது அரசாங்கம் வழங்கும்.

 

அதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். மொத்த தேசிய உற்பத்தியில் 6 வீதம் கல்விக்காக ஒதுக்கப்பட வேண்டும் என்று எமது கொள்கைத் திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதார நெருக்கடியின் போது இதை ஒரேயடியாக செயற்படுத்துவது கடினம் என்றாலும் அந்த இலக்கை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறோம். எமது வரவு – செலவுத் திட்டத்தில் கல்விக்கு விசேட கவனம் செலுத்தப்படும்.

 

குடும்பத்தின் பொருளாதார நிலை பிள்ளைகள் தரமான கல்வியைப் பெறுவதற்கு தடையாக இருக்கக்கூடாது. பிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர்கள் செலவிடும் தொகை மேலும் மேலும் அதிகரித்துள்ளது. இலவசக் கல்வி உள்ள நாட்டில் இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இலவசக் கல்வி இருந்தாலும் கல்விக்காக பெற்றோர்கள் அதிக பணம் செலவழிக்க வேண்டியுள்ளது.

 

இலவசக் கல்வி மூலம் நாம் எதிர்பார்த்த முக்கிய விடயம் நடக்கவில்லை. அதாவது பிள்ளைகளின் கல்விக்கு தமது வருமானம் ஒரு காரணியாக இருக்கக் கூடாது என்ற உண்மை இல்லாமல் போய்விட்டது. இலவசக் கல்வி மூலம் இந்த நாட்டில் ஆயிரக்கணக்கான புத்திஜீவிகள் உருவானார்கள். இதனால் பலர் உலகின் மிக உயர்ந்த இடங்களை அடைய முடிந்தது. ஆனால் மீண்டும் தரமான கல்வியைப் பெறுவதற்கு பணம் ஒரு காரணியாக மாறியுள்ளது.

 

எனவே பாடசாலைகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை மாற்ற வேண்டும். பிள்ளைகளின் கல்விக்காக செலவிடப்படும் பணத்தின் பெரும் சுமையிலிருந்து பெற்றோர்கள் விடுவிக்கப்பட வேண்டும். பிள்ளை கல்விக்காக பாடசாலைக்கு அனுப்பப்பட்டவுடன் பெற்றோர்களின் சுமை குறைக்கப்பட வேண்டும். அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.இந்த இலக்குகளுக்கு பங்களிக்கும் கல்வி நிர்வாகம் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வசதிகள் மற்றும் தேவையான பயிற்சிகளை வழங்குவதில் விசேட கவனம் செலுத்தப்படும்.

 

உலகின் தலைசிறந்த கல்விக் கட்டமைப்பு இங்கு அறிமுகப்படுத்தப்பட்டாலும் அது உங்கள் மூலமே செயற்படுத்தப்பட வேண்டும். அதனை நிறைவேற்றுவதற்கு முடியாத தடைகளை நீக்குவது எங்களின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாகும். இது ஒரு கூட்டுப் பயணம். ஒரு கட்சியோ ஒரு அரசாங்கமோ மட்டும் அதை செய்ய முடியாது. அதற்கு உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன் என்றார்.

2025ஆம் ஆண்டு முதல் முழுமையாக மாற்றமடையும் இலங்கையின் கல்வி முறை..!

2025 ஆம் ஆண்டின் முதல் தவணை முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்த முன்மொழிவுகளின் படி, பாடசாலையின் தரங்களின் எண்ணிக்கை 13 இல் இருந்து 12 ஆக குறைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

அதன் படி, ஒவ்வொரு மாணவர்களும் 17 வயதிற்குள் பாடசாலை கல்வியை முடிக்க வேண்டும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், புதிய சீர்திருத்தத்தின் மூலம் தகவல் தொழில்நுட்பம், தொழில்நுட்பம் ஆகிய பாடங்கள் படிப்படியாக கட்டாயமாக்க முன்மொழியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை, புதிய சீர்திருத்தத்தின் கீழ், தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கு குறிப்பிட்ட சதவீத புள்ளிகளையும் வழங்கி பரீட்சையை இலகுபடுத்தவும் போட்டியை குறைக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.

மேலும், சாதாரண தர பரீட்சைக்கான பாடங்களும் 9ல் இருந்து 7 ஆக குறைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பாடசாலைகளில் செயற்கை நுண்ணறிவு கழகம் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

புதிய பொருளாதாரத்துடன் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மேம்பட்ட கல்வி முறையும் அவசியமானது எனவும், அதற்கான கல்விச் சீர்திருத்தங்கள் தற்போது நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

காலி – ஹால் டி கோல் ஹோட்டலில் இன்று (06) நடைபெற்ற கல்வி நவீனமயமாக்கலின் புதிய அத்தியாயமாக தென் மாகாணத்தின் 200 பாடசாலைகளுக்கு 2,000 நவீன வகுப்பறைகள் மற்றும் 2,000 டெப் கணனிகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்திர் ரமேஷ் பத்திரன இந்திய அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய தென் மாகாண சபைக்கு கிடைத்த 3,000 இலட்சம் ரூபாய் (30 கோடி) நிதி ஒதுக்கீட்டின் கீழ் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இத்திட்டத்திற்காகத் தெரிவு செய்யப்பட்ட 200 பாடசாலைகளில் 150 பாடசாலைகள் காலி மாவட்டத்திலும் ஏனைய 50 பாடசாலைகள் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அமைந்துள்ளன.

ஒரு வகுப்பறைக்கு 10 டெப் கணினிகள் என்ற வகையில் 200 வகுப்பறைகளுக்கு 2,000 டெப் கணினிகள் வழங்கப்பட்டன.

இதன் அடையாள அம்சமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்திய உயர்ஸ்தானிகர் சந்தூஷ் ஜாவிற்கு நினைவுப் பரிசு ஒன்றையும் வழங்கினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க:

“தற்போது உலகம் நவீன தொழில்நுட்பத்துடன் முன்னேறி வருகிறது. அதற்கேற்ப, இந்நாட்டின் கல்வி முறையும் நவீன தொழில்நுட்பத்துடன் நடத்தப்பட வேண்டும். அதற்குத் தேவையான கல்விச் சீர்திருத்தங்கள் அமைச்சினால் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

அன்று நாம் பல கல்விக் கொள்கைகளை நாட்டுக்கு அறிமுகப்படுத்தினோம். அந்தக் கல்விக் கொள்கைகள் அன்றைய காலத்திற்கு ஏற்றதாக இருந்தாலும், இன்று ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியால், கல்வித் துறையில் புதிய சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன.

தற்போது பாடசாலைகளில், செயற்கை நுண்ணறிவுக் கழகங்களை உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பக் கல்வியை தொடங்கி சில வருடங்கள் ஆகிறது. இந்த ஆண்டு நாம் ஆரம்பித்திருக்கும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல ஆசிரியர்களுக்கு சிறந்த பயிற்சி தேவைப்படும். அதற்குத் தேவையான பயிற்சி மற்றும் உட்கட்டமைப்பு வசதிளை அரசாங்கம் ஏற்படுத்தும். மத்திய கல்லூரிகள் மற்றும் தேசிய பாடசாலைகள் செயற்கை நுண்ணறிவு பாடசாலைகளாக மேம்படுத்தப்பட வேண்டும்.

நவீன தொழில்நுட்பத்துடன் முன்னேறுவதில் அண்டை நாடான இந்தியாவிடம் இருந்து கிடைக்கும் ஆதரவு மிகவும் பாராட்டத்தக்கது. பிரதமர் நரேந்திர மோடியும் இலங்கைக்கு ஐ.ஐ.டி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை வழங்க விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவுடன் எரிசக்தித் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளும் வெற்றிகரமாக நடந்து வருகின்றன.

மலேசியாவில் நான் எலான் மஸ்குடன் கலந்துரையாடினேன். அவரது நிறுவனத்தின் இணையத் தொழில்நுட்பம் பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் இலங்கையில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கிறோம். இதன் மூலம் தொலைதூர கிராமங்களில் உள்ள பிள்ளைகளுக்கு தொழில்நுட்பக் கல்வி வழங்கும் வாய்ப்பு கிடைக்கும். இன்று தென் மாகாணம் கல்வித்துறையில் அதீத திறமைகளை வெளிப்படுத்தும் மாகாணமாக மாறியுள்ளது. தென் மாகாணத்தின் முதலாவது டச்சு பாடசாலையான பத்தேகம கல்லூரி இன்று தேசிய பாடசாலையாக மாறியுள்ளது.

நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்காலத்திற்கு ஏற்ற சந்ததியை உருவாக்கி ஒரு நாடாக உலகையே வெல்லும் வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது” என்று தெரிவித்தார்.

இரண்டாவது நாளாகவும் தொடரும் ஆசிரியர் போராட்டம் – பாதிக்கப்படும் மாணவர்கள் கல்வி !

தொழிற்சங்க நடவடிக்கையில் இன்றும் ஈடுபடவுள்ளதாக அதிபர் – ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.

குறித்த விடயத்தை இலங்கை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதிபர் – ஆசிரியர் சங்கங்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பள முரண்பாடு உள்ளிட்ட சில பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி, சுகவீன விடுமுறையை பதிவு செய்த அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் நேற்று(26) பகல் கொழும்பு – கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக ஆரம்பித்த எதிர்ப்பு நடவடிக்கையை கலைப்பதற்கு காவல்துறையினர் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டிருந்தனர்.

தமது போராட்டம் மீதான நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக ஆசிரியர் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

இதேவேளை, இந்த ஆசிரியர் போராட்டத்தினால் நாட்டில் நேற்றையதினம் மொத்தமாக 10,026 அரச பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், இன்றையதினமும் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

இந்நிலையில், நாட்டில் உள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகளும் இன்று (27) வழமை போன்று இயங்கும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

“இலங்கையின் கல்வி முறையின் மீது பிள்ளைகள் நம்பிக்கை இழந்துள்ளனர்” – நாடாளுமன்றத்தில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த !

“தரம் ஒன்றுக்கான மாணவர் சேர்க்கை வீழ்ச்சியடைந்து வருவதாக” கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” பிறப்பு வீதம் வீழ்ச்சியடைந்ததன் காரணமாக தரம் ஒன்றிற்கான மாணவர் சேர்க்கை வீழ்ச்சியடைந்து வருகின்றது. குறிப்பாக ஒரு சில வருடங்களுக்கு முன்னர் 330,000 ஆக காணப்பட்ட இலங்கையின் வருடாந்த பிறப்பு வீதம் தற்போது 33,0000 ஆக குறைந்துள்ளது.

இதனால் எதிர்காலத்தில் தரம் ஒன்று மாணவர் சேர்க்கை குறைவடையும் நிலை காணப்படுகின்றது.

இலங்கையில் பிள்ளைகள் பாடசாலைகளை விட்டு விலகி தனியார் வகுப்புகளுக்கு அதிகம் செல்கின்றனர். ஏனெனில் நாட்டின் கல்வி முறையின் மீது பிள்ளைகள் நம்பிக்கை இழந்துள்ளனர்” இவ்வாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

படிக்கவில்லை என கூறி மாணவனை கடுமையாக தாக்கிய ஆசிரியை வவுனியாவில் கைது !

வவுனியா சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் இரண்டில் கல்வி பயிலும் மாணவன் மீது ஆசிரியர் கண்மூடித்தனமாக தாக்கியதில் மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நான்கு நாட்களின் பின்னர் குறித்த ஆசிரியர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

குறித்த ஆசிரியர் இன்று(07) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த மூன்றாம் திகதி பாடசாலை முடிந்து வீட்டிற்கு சென்ற சிறுவனின் முகத்திலும் தலையிலும் அடிகாயங்கள் காணப்பட்டதை அடுத்து பெற்றோர் சிறுவனிடம் விசாரித்ததில் அவரது ஆசிரியை தாக்கியதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சிறுவனின் தந்தை குறித்த ஆசிரியருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சிறுவனை தாக்கியதற்கான காரணம் என்ன மற்றும் காலிற்கு கீழ் அடித்து இருக்கலாமே என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த ஆசிரியர், உங்கள் மகனுக்கு அ, ஆ தெரியவில்லையென்றும், அதனாலேயே அடித்ததாகவும் மற்றும் அடிக்கும் போது சிறுவன் அங்கும் இங்கும் ஓடியதால் முகத்தில் அடிபட்டுவிட்டது என்றதோடு மகனுக்கு அடிக்காமல் கொஞ்சுவதா என ஆசிரியர் கேட்டுள்ளார்.

காயமடைந்த சிறுவன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டமையுடன் காவல்துறையினரிடம் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக சிறுவன் மீது தாக்குதல் மேற்கொண்ட ஆசிரியரை கைது செய்யப்படாமையினால் சமூக வலைத்தளங்களில் பொலிஸாருக்கு எதிரான கருத்துக்கள் வலுப்பெற்றிருந்தன.

 

இதையடுத்து வவுனியா ஈச்சங்குளம் பொலிஸார் இன்று காலை குறித்த ஆசிரியரை கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

வெற்றிகரமான கல்வி முறை இல்லாத நாட்டில் அபிவிருத்தியை எதிர்பார்க்க முடியாது – சாகல ரத்நாயக்க

வெற்றிகரமான கல்வி முறை இல்லாத நாட்டில் அபிவிருத்தியை எதிர்பார்க்க முடியாது என ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

 

எத்தனை கல்விச் சீர்திருத்தங்களைச் தயார் செய்தாலும், அதற்கேற்ப மனித வளங்களை முகாமைத்துவம் செய்யாவிட்டால், கல்விச் சீர்திருத்தங்கள் பலனளிக்காது எனவும் சாகல ரத்நாயக்க சுட்டிக்காட்டினார்.

 

மாத்தறை கொடபொல இலுக்பிடிய கனிஷ்ட பாடசாலை மாணவர்களுக்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடிக் கட்டிடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் திங்கட்கிழமை (25) கலந்துகொண்டபோது, ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார்.

 

கொழும்பு றோயல் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் 1981 குழுவின் முழுமையான நிதி உதவியுடனும் 12ஆவது இராணுவப் பொறியியலாளர் சேவைப் படைப்பிரிவின் பங்களிப்புடனும் இந்தப் புதிய கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

 

பாடசாலைக்குச் சென்ற சாகல ரத்நாயக்கவுக்கு மாணவர்களால் அமோக வரவேற்பளிக்கட்டது.

 

மாணவர்களின் கலைத்திறன்களை வெளிப்படுத்தும் பல கலைநிகழ்ச்சிகளும் மேடையேற்றப்பட்டன.

 

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற வைபவத்தில் மேலும் உரையாற்றும் சாகல ரத்நாயக்க மேலும் கூறியதாவது,

 

”இரண்டு மாடிகளைக் கொண்ட இந்தக் கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கு ஆறு மாத காலமே சென்றது. இப்பாடசாலையின் பௌதீக வளங்கள் மட்டுமன்றி மாணவர்களின் கல்வியிலும் தற்போது முன்னேற்றம் காணப்படுகின்றது. இந்த நடவடிக்கைகளில் அதிபரின் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது. இக்கட்டடத்தை நிர்மாணிப்பதில் இராணுவம் பாரிய பங்களிப்பு வழங்கியது.

 

வெற்றிகரமான கல்வி முறை இல்லாத நாடு வெற்றி பெறாது. கல்வித் திட்டங்களை யார் வேண்டுமானாலும் உருவாக்கலாம். ஆனால் அந்தத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு மனித வளத்தை நிர்வகிக்க வேண்டும். கடந்த காலங்களில், நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து, எண்ணெய் மற்றும் எரிவாயுவுக்கு வரிசைகள் ஏற்பட்டன. அந்த நிலையில் நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்ற ரணில் விக்ரமசிங்க, பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்கும் வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி இந்நாட்டின் பொருளாதார நிலைமையை குறிப்பிடத்தக்க நிலைக்குக் கொண்டு வர பாடுபட்டார்.

அதற்கு அப்பால் இலங்கையின் பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு புதிய வேலைத் திட்டம் அவசியம். அதற்காக ஜனாதிபதி தற்போது பல சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகின்றார். இலங்கை மத்திய வங்கி சுயாதீனமான நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளது. மத்திய வங்கி விவகாரங்களில் இனி அரசியல்வாதிகள் தலையிட முடியாது என்பதே இதன் பொருள். மத்திய வங்கி நாட்டுக்கும் மக்களுக்கும் பொறுப்புக் கூற வேண்டும். மேலும், ஒவ்வொரு நிறுவனமும் நாட்டுக்கும் மக்களுக்கும் பொறுப்புக் கூற வேண்டும். அதற்குத் தேவையான சட்டங்கள் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளன. அவ்வாறு செயற்படாத நிறுவனங்களின் தலைவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியும்.

 

அத்துடன், நாட்டின் அனைத்து பிரதேசங்களையும் அபிவிருத்தி செய்வதற்கான பொருளாதார வேலைத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரதேசத்திற்கும் தனித்துவமான முறைகளின் மூலம் அந்தப் பிரதேசத்தின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் செயற்பாட்டில் தெனியாயவுக்கும் விசேட இடம் உண்டு. சுற்றுலாத் துறையிலும் தேயிலைத் தோட்டத் தொழிலிலும் தெனியாயவுக்கு அதிக வாய்ப்புகள் காணப்படுகிறது. அதற்கேற்ப இப்பகுதி மக்களுக்கும் செலவுக்கு ஏற்ற வருமானம் பெறும் பின்னணியை தயார் செய்து வருகிறோம்” என சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.

 

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே உள்ளிட்ட சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், கொழும்பு றோயல் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் 1981 குழுவின் சிரேஷ்ட உறுப்பினரான அமநடா வீரசிங்க உள்ளிட்ட உறுப்பினர்கள், பாடசாலை அதிபர் ஏ.ஜி.என்.சி. லக்மால் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர், பழைய மாணவர் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.