பிரதமர் மோடி தமிழ் தலைவர்களிடம் சொன்ன கருத்து போட்டுடைத்தார் புளொட் கஜதீபன் !
தமிழ் தேசியத் தலைமைகள் தாங்கள் பிரதமர் மோடிக்கு சொன்ன கருத்துக்கள் வெளிவந்தது. ஆனால் பிரதமர் மோடி தமிழ் தலைமைகளிடம் என்ன சொன்னார் என்பதை அவர்கள் வெளியிடவே இல்லை. தற்போது புளொட் கஜதீபன் அதனைப் போட்டுடைத்துள்ளார். “இரா சம்பந்தன் இருந்த போது எல்லொரும் ஒன்றாக வந்து சந்தித்தீர்கள். தற்போது தனித் தனியாக வந்து சந்திக்கின்றீர்கள்” என இந்தியப் பிரதமர் மோடி தன்னைச் சந்தித்த தமிழ் தரப்பிடம் கருத்து வெளியிட்டதாக தெரியவருகின்றது. அண்மையில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் புளொட் பிரதிநிதி பா கஜதீபன் தாய் ரிவி என்ற காணொலி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கட்சிகள் தனித்துப் போட்டியிட்டாலும் தனித்து ஆட்சியமைக்கும் பெரும்பான்மையைப் பெறுவது கடினம் எனத் தெரிவித்தார் அவர்.
இந்நிலையில் ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பாக போட்டியிடும் தாங்கள் இன்னுமொரு தமிழ் தேசியக் கட்சியை ஆட்சி அமைப்பதற்கே உதவுவோம் எனத் தெரிவித்தார். அதாவது தேசிய மக்கள் சக்தியை ஆட்சியமைக்க விட மாட்டோம் எனச் சூளுரைத்தார். அதேசமயம் தமிழ் தலைமைகள் தேசிய மக்கள் சக்தியின் அரசியல் ராஜதந்திரத்தோடு ஒப்பிடும் போது பலவீனமாகி இருப்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்பதையும் புளொட் கஜதீபன் தெரிவித்தார்.
இந்த உள்ளுராட்சித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியை தோற்கடிப்பதே தங்களது பிரதான நோக்கம் என்பதையும் புளொட் கஜதீபன் அந்நேர்காணலில் தெளிவாகக் குறிப்பிட்டு இருந்தார். தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜேவிபி கட்சியின் கொள்கைகளை மீறி தமிழ் மக்களுக்காக நிற்கமாட்டார்கள் என்று குறிப்பிட்டார் பா கஜதீபன். அதனால் தமிழ் தேசியக் கட்சிகள் வெற்றி பெறாதது தனக்கு வருத்தமளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த மாகாண சபையை தமிழரசுக்கட்சி வெற்றி பெற்ற போது ஜனநாகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதில் அங்கம் வகித்து இருந்தது. தாங்கள் மாகாண சபையைக் கைப்பற்றியது ஈபிடிபி அதனைக் கைப்பற்றிவிடக் கூடாது என்பதற்காக எனத் தெரிவித்து இருந்தனர். அதனால் மாகாண சபையால் இவர்கள் தமிழ் மக்களுக்கு எதனையும் சாதிக்கவில்லை.
தற்போது உள்ளுராட்சி சபைகளிலும் தங்களுடைய நோக்கம் ஜேவிபி வருவதைத் தடுப்பதே எனத் தெரிவித்து வருகின்றனர். ஜேவிபி ஆட்சி ஆட்சி அமைக்க விடாமல் தடுத்துவிட்டு இந்தக் கட்டமைப்பில் அதிகாரம் இல்லை எங்களை சிங்கள பேரினவாதம் இயங்கவிடாமல் தடுக்கின்றது என்று சொல்வார்களோ என்ற அச்சம் தமிழ் மக்களிடம் காணப்படுகின்றது.

