அருண் சித்தார்த்

அருண் சித்தார்த்

“இலங்கையில் உள்ள மிகச் சிறந்த ஜனாதிபதி சட்டத்தரணிகளை எங்கள் செலவில் அர்ச்சுனாவிற்குத் தரத் தயாராக உள்ளோம்.” – வைத்தியருக்கு அருண் சித்தார்த் அழைப்பு !

“இலங்கையில் உள்ள மிகச் சிறந்த ஜனாதிபதி சட்டத்தரணிகளை யாழ் சிவில் சமூக நிலையம் தனது செலவில் அர்ச்சுனாவிற்குத் தரத் தயாராக உள்ளது.” எனவும் “எம்மைப் பயன்படுத்திக் கொள்ள விருப்பம் இருந்தால் அர்ச்சுனா எம்முடன் எத்தருணத்திலும் தொடர்பு கொள்ளலாம்.” எனவும் யாழ் சிவில் சமூக நிலையத்தினுடைய தலைவர் அருண் சித்தார்த் தெரிவித்துள்ளார்.

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா மீது சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் 05 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தனக்கான சட்ட ஆலோசனைகளை வழங்குமாறு பகிரங்கமாக வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா சமூக வலைத்தளப்பதிவினூடாக கோரியிருந்த நிலையில் அவருக்காக உதவி செய்வதாக குறிப்பிட்டு யாழ் சிவில் சமூக அமைப்பினுடைய தலைவர் அருண் சித்தார்த் முகநூலில் பதிவு செய்துள்ள பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பதிவு வருமாறு..,

 

வைத்தியத்துறைசார் மாஃபியாவைப் பாதுகாக்கச் சட்டத்துறைசார் மாஃபியா களமிறங்கியுள்ளது.

—————————————————————-

Ramanathan Archchuna மீது 5 வழக்குகள் பாய்ந்துள்ளது. தனக்கு எதிராக வழக்குத் தொடுநர்கள் சார்பாக 7சட்டத்தரணிகளுக்கு மேல் களமிறங்கியுள்ளதாக வைத்தியர் “சமூகம்” எனும் ஊடகத்துக்கு வழங்கிய பேட்டியில் குறிப்பிடுகின்றார். அதில் இருவர் சிரேஷ்ட சட்டத்தரணிகள்.

 

ஒருவர் கிரிமினல் வழக்குகளில்

பிரபலமானவர். கொலைக் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், பாரிய

அளவிலான போதைப் பொருள் வியாபாரம் சார்ந்து குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், வாள் வெட்டுத் தெருச் சண்டியர்களாக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், பாலியல் துஷ்பிரயோக வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அதாவது சமூக விரோதிகளாகப் பொலிஸாரினால் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டு வழக்குகளில் சிக்கும் குற்றஞ்சாட்டப்பட்டவர்களைக் தனது சட்டப்புலமை மூலம் வெளியில் கொண்டு வரக்கூடிய கெட்டிக்கார சட்டத்தரணி என யாழ்ப்பாணத்தில் புகழ் பெற்றவர்.

 

மிகவும் டிமான்ட் உள்ளவர் அவருடைய பீஸூம் ஏனைய சட்டத்தரணிகளை விட சற்று அதிகமானது. ஆனால் பேர் போனவர். அவரது தம்பியும் ஒரு பிரபலமான அரசியல்வாதி.

 

இவரிடம் ஏன் ஐயா பொலிஸார் கஷ்டப்பட்டு குற்றவாளிகளைப் பிடிச்சு மீண்டும் மீண்டும் உள்ள போடப் போட நீங்களும் திருப்பித் திருப்பி அவர்களை வெளியில எடுக்கிறீங்கள் இது அறமா எனக் கேட்டால் தம்மைச் சேவை நாடி வருபவர்களுக்கு சார்பாக வாதாடுவது தமது தொழில் தர்மம் என அவர் கூறுவார்.

 

ஆனால் கொழும்பில் மிகப் பிரபலமான மிகத் திறமையான ஜனாதிபதி சட்டத்தரணிகளை எனக்குத் தெரியும். அவர்களில் சிலர் போதைப் பொருள் சார்ந்த குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் , பாலியல் துஷ்பிரயோகம் சார்ந்த குற்றாவாளிகளுச் சார்பாக தமது வாதத் திறமையையோ சட்டப் புலமையையோ பாவிப்பதில்லை எனக் கொள்கையாக வைத்துள்ளவர்களை நான் அறிவேன்.

 

மற்றவர் சட்டத்துறையில் ஜாம்பவான். அரசியலிலும் முக்கிய புள்ளி. பல்கலைக்கழகத்தில் முக்கிய பதவியில் இருக்கும் போதே வெளியிலும் வழக்குகளை எடுத்து நடத்தினார். (இது மருத்துவர்கள் அரசாங்க வைத்தியசாலையின் கடமை நேரத்தில் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை அளிப்பதற்கு ஒப்பானது)

 

ஒரே நேரத்தில் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் வெளியில் நீதிமன்றங்களில் வழக்கும் எடுத்து நடத்தமுடியாது எனக் கூறி இவருக்கு நீதிமன்றங்களில் ஆஜர் ஆகத் தடை விதிக்கப்பட்டது.

 

உயர்நீதிமன்றில் இத்தடைக்கெதிராக வழக்குப் போட்டு பல்கலைக்கழகப் பதவியில் இருந்து கொண்டே தான் வழக்கும் பேச வேண்டும் எனப் போராடிப் பார்த்தார். ஒன்றும் சரிவரவில்லை. பின்னர் தனது பல்கலைப் பதவியை இராஜினாமா செய்து விட்டு வெளிநாடு ஒன்றுக்குச் சென்று அண்மையில் மீண்டும் நாட்டுக்கு வந்தவர்.

 

யாழ்ப்பாணத்தில் கள்ள உறுதி முடித்து ஊழல் மோசடி பண்ணியதாக சில சட்டத்தரணிகளைப் பொலிஸார் அண்மையில் கைது செய்து உள்ளே தள்ளியது உங்களுக்கு ஞாபகமிருக்கலாம். அவர்கள் சார்பாக ஜனாதிபதியைச் சந்தித்த சட்டத்தரணிகள் குழுவை வழிநடத்திச் சென்று இனிமேல் சட்டத்தரணிகள் பிழை செய்தாலும் கைது செய்யப் பொலிஸாருக்கு அனுமதி வழங்க வேண்டாம் எனக் கோரிக்கை வைத்தவர் இவர்.

 

சிஸ்டத்தை உப்பிடி உடைக்க கூடாது என்று அர்ச்சுனாக்கு தாபன விதிக் கோவை குறித்து யூரியூப்பில் பாடம் நடத்தியவர் இவர்.

 

தமிழ்த் தேசியம் எங்கள் உயிர்மூச்சு என்று மேடைகளில் கொந்தளிப்பவர்களில் ஒருவர் இவர். தமிழ்த் தேசியப் போரவை என்று யாழ் மாவட்ட ஊழல் மோசடி அரசியல்வாதிகளை வைத்து ஒரு அமைப்பையே பெரும் எடுப்பில் அறிமுகப்படுத்தியவர். அது புஸ்வானமாப் போனது வேற கதை.

 

ஆகவே மக்களே !

தமிழ்த் தேசியத்தைப் போலியாகப் போர்வையாகக் போர்த்திக் கொண்ட நீதித்துறைசார் மாஃபியா, வைத்தியத்துறைசார் மாஃபியாவைக் பாதுகாக்க அர்ச்சுனாவிற்கு எதிராகக் களம் இறங்கியிருப்பதை அறிந்து கொள்ளுங்கள்.

 

சிலவேளை அர்ச்சுனா நீதிமன்றால் தண்டிக்கப்பட்டால் அது அங்கொன்றும் இங்கொன்றுமாக அநீதிகளுக்கெதிராக, ஊழல் மோசடிகளுக்கெதி்ராக அதிகாரத் துஷ்பிரயோகங்களுக்கெதிராக அதிகாரத் தரப்புகளுடன் மோதும் சாமானியனை மெளனிக்க வைக்கும் ஆபத்தை உருவாக்கும் என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள்.

 

அந்நிலை எமது சமூகத்துக்கு ஆரோக்கியமானதல்ல.

 

இங்கு காலங்காலமாகத் தமிழ் அரசியல்வாதிகள் தமக்கு அதிகாரம் கேட்பதும் அதிகாரம் கிடைத்ததும் அவ்வதிகாரத்தை மக்களுக்காகப்

பாவிக்காமல் இருப்பதும் இப்போதாவது கண்கூடாக உங்களுக்குத் தெரிகிறதா?

 

இந்த இலட்சணத்தில் அர்ச்சுனாக்களும் இல்லாது போனால் இச்சமூகத்தில் வாழும் எளிய, வறிய , அறியாமையுடன் உள்ள சமான்ய குடிமகன், என் பாட்டனையும் பூட்டனையும் போன்றவன் என்ன செய்வான்.?

 

அர்ச்சுனாவை நீதிமன்றுக்கு இழுக்க அவசரமாக வந்தவர்கள் அர்ச்சுனா கூறிய குற்றச்சாட்டுகளை விசாரிக்குமாறு Public interest litigation (PIL) வழக்கொன்றை ஏன்

போடவில்லை.?

 

அர்ச்சுனாவினால் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் இன்னமும் அந்த வைத்தியசாலையில் வேலையில் இருக்கின்றார்கள. அர்ச்சுனா கூறிய குற்றச்சாட்டுகளின் ஆதாரங்களை இவர்கள் அழித்திருக்க மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்.?? சிறந்த சட்டத்தரணிகள் அவர்களுக்காக முன்வந்திருக்கின்றார்கள். அவர்கள் இவர்களுக்குத் தப்பும் வழிகளை இந்நேரம் சொல்லிக் கொடுத்து இருக்கமாட்டார்களா???

 

ஆகவே இந்த வழக்கில் அர்ச்சுனாவிற்காக என்பதை விடப் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அர்ச்சுனாவிற்குத் தேவையான சட்டத்தரணிகளை கொழும்பில் இருந்து அழைப்பித்துத் தர நாம் தயாராக உள்ளோம்.

 

இலங்கையில் உள்ள மிகச் சிறந்த ஜனாதிபதி சட்டத்தரணிகளை யாழ் சிவில் சமூக நிலையம் தனது செலவில் அர்ச்சுனாவிற்குத் தரத் தயாராக உள்ளது.

 

எம்மைப் பயன்படுத்திக் கொள்ள விருப்பம் இருந்தால் அர்ச்சுனா எம்முடன் எத்தருணத்திலும் தொடர்பு கொள்ளலாம்.

 

பின்குறிப்பு – வைத்தியத்துறை மாஃபியா என்ற பதத்தை நாம் ஊழல் மோசடி செய்யும் ஒரு சில வைத்தியர்களை மட்டும் குறிக்கவே பயன்படுத்துகின்றோம். சட்த்துறை மாஃபியா எனும் பதமும் அவ்வாறானதே எனத் தெளிவுபடுத்துகின்றோம்.

 

அருண் சித்தார்த்

தலைவர்

யாழ் சிவில் சமூக நிலையம்

077-4842464

 

17/07/2024

5:29 Am

ஐக்கிய தேசியக் கட்சியால் தீர்வு கிடைக்காது – மவ்பிம ஜனதா கட்சியில் இணைந்தார் அருண் சித்தார்த் !

ஐக்கிய தேசியக் கட்சியில் ஒடுக்குமுறைக்கு தீர்வில்லை என கூறிய அருண் சித்தார்த்  மவ்பிம ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.

மவ்பிம ஜனதா கட்சியின் யாழ். மாவட்ட பிரதான அமைப்பாளராக அருண் சித்தார்த்  இன்று (22) நியமிக்கப்பட்டுள்ளார்.

மவ்பிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தலைமையில் கொழும்பில் இன்று நடைபெற்ற  நிகழ்வின் போதே  மவ்பிம ஜனதா கட்சியின் மாவட்ட பிரதான  அமைப்பாளராக  அருண் சித்தார்த் நியமிக்கப்பட்டார்.

அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியில் தாம் இணைந்துகொண்டபோதிலும், ஒடுக்குமுறைக்கு எதிரான தீர்வுகள் அந்தக் கட்சியில் கிடைக்காததால், மவ்பிம ஜனதா கட்சியில் இணைவதற்கு தீர்மானித்ததாக அருண் சித்தார்த் கூறினார்.

ஐ.தே.க கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளராக அருண் சித்தார்த்..? – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியது என்ன..?

ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளராக அருண் சித்தார்த் நியமிக்கப்பட்டுள்ளார் என நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில்  தனியார் மண்டபத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போது ஜக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ரவி கருணாநாயக்க குறித்த விடயத்தை தெரிவித்தார்.

 

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களின் பிரதான அமைப்பாளராக முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் செயற்பட்டு வருகிறார். குறித்த கூட்டத்தில் இதுவரை காலமும் கட்சியின் ஆதரவாளர்களாக உறுப்பினர்களாக இருந்த பலரும் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

 

இந்த நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு ஐக்கிய தேசிய கட்சியின் புதிய அமைப்பாளர் ஒருவரை இன்னும் உத்தியோகப்பூர்வமாக தெரிவு செய்யவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஐ.தே.க நிர்வாகக்குழு உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 

ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் இந்த மறுசீரமைப்புகள் தொடர்பில் இதுவரையில் உத்தியோகப்பூர்வமாக தீர்மானங்கள் எடுக்கப்பட வில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

இதேவேளை, தனது யாழ்ப்பாண விஜயத்தில் அங்கஜன் ராமநாதன் கூட இருப்பார் என்றும், உத்தியோகப்பூர்வ நியமனங்கள் வழங்குவதற்கு முன்னர் எதிர்ப்புகள் காணப்படுமாயின் அவை கருத்தில் கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

 

அருண் சித்தார்த் தலைமையில் யாழ்ப்பாணத்தில் இளைஞர் பௌத்த சங்கம் அங்குரார்ப்பணம் !

யாழ். இளைஞர் பௌத்த சங்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (20) யாழ்ப்பாணத்தில் உள்ள வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வு யாழ்ப்பாணம் சிவில் சமூக நிலையத்தின் தலைவர் அருண் சித்தார்த் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது கொழும்பு பௌத்த இளைஞர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட பொருளாதார நிவாரண உதவித் திட்டத்தினூடாக 250 கர்ப்பிணிப் பெண்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் கூரஹல ரஜமஹா விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய வத்துறகும்புற தம்மரத்தன தேரர், பலாங்கொட இம்புல்பே விஜித வன்ச தேரர், யாழ்ப்பாணம் நாக விகாரையின் விகாராதிபதி மீஹஜந்துர விமலதர்ம சுவாமி, கொழும்பு இளைஞர் பெளத்த சங்கத்தின் தலைவர் மகேந்திர ஜயசேகர மற்றும் அவர்களது குழுவினரும் கலந்துகொண்டிருந்தனர்.

 

 

தையிட்டி விகாரைக்கு ஆதரவு தெரிவித்து அருண் சித்தார்த் தலைமையில் பேரணி சென்ற மக்கள் !

தையிட்டி விகாரைக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாண சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில் இன்று (13) பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு ஆதரவு தெரிவித்து, ‘அனைத்து மதங்களையும் ஒன்றாக மதிக்க வேண்டும்’ என்ற தொனிப்பொருளில் இப்பேரணி தையிட்டி சந்தியிலிருந்து விகாரை வரை முன்னெடுக்கப்பட்டது.

அருண் சித்தார்த் தலைமையில் தையிட்டி விகாரைக்கு ஆதரவு தெரிவித்து பேரணி | தினகரன்

இதன்போது 200இற்கும் மேற்பட்ட மக்கள் விகாரைக்கு ஆதரவு தெரிவித்து பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக சென்றனர்.

இதன்போது யாழ்ப்பாண சிவில் சமூக நிலைய தலைவர் அருண் சித்தார்த் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையில் அனைவருக்கும் அனைத்து மதங்களையும் மதிக்கின்ற மத வழிபாடுகளை மேற்கொள்ளும் சுதந்திரம் உண்டு. தையிட்டி விகாரை யாழ்ப்பாண மாவட்ட வரைபடத்தில் 1959ஆம் ஆண்டு விகாரைக்குரிய பகுதி என குறிக்கப்பட்டுள்ள நிலமாகும். இது பொதுமக்களின் காணிகள் அல்ல. விகாரை அழிவடைந்த காலத்தில் பொதுமக்கள் அக்காணியை கையகப்படுத்தி தமது குடியிருப்புகளை அமைத்துள்ளனர். ஆனாலும், அது விகாரைக்குரிய நிலமாகவே காணப்படுகிறது. பொதுமக்களின் காணியில் விகாரை அமைக்கப்பட்டால், அவர்கள் நீதிமன்றத்தினை நாட முடியும்.

ஒவ்வொரு மதத்தையும் இனத்தையும் கூறி இனவாதம் மற்றும் மதவாதத்தினை எவரும் தூண்ட முயற்சிக்க வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்தார்.

நான் நளவன் என்பதால் என்னை ஆவாக்குழு, போதைப்பொருள் கடத்துபவன் என்கின்றனர் – அருண் சித்தார்த் உடனான நேர்காணல் காணொளி!

நான் நளவன் என்பதால் என்னை ஆவாக்குழு, போதைப்பொருள் கடத்துபவன் என்கின்றனர் என யாழ்ப்பாண சிவில் சமூக நிலைய  தலைவர் அருண் சித்தார்த் தெரிவித்துள்ளார்.

அருண் சித்தார்த் தொடர்பிலும் அவர் மீதான விமர்சனங்கள் தொடர்பிலும் – யாழ்ப்பாணத்திலுள்ள சாதிய அடக்குமுறை தொடர்பிலும் தேசம் திரையுடன் இடம்பெற்ற நேர்காணல்.

 

முழுமையான காணொளியை காண கீழேயுள்ளLink ஐ கிளிக் செய்யவும்..!