தேசிய மக்கள் சக்தி

தேசிய மக்கள் சக்தி

என்பிபி, தமிழ் மக்களுக்குக் கிடைத்துள்ள இறுதிச் சந்தர்ப்பம்!

என்பிபி, தமிழ் மக்களுக்குக் கிடைத்துள்ள இறுதிச் சந்தர்ப்பம்!

என்பிபிக்கு வாக்களித்து தமிழர்கள் வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற வேண்டும்!

தோழர் சுகு சிறிதரன் முன்னாள் ஈபிஆர்அல்எப் போராளி)என்பிபி,

தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்தால் பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படும் என்பதை நான் உறுதியாகக் கூறுகின்றேன் – இராமலிங்கம் சந்திரசேகரன்

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நிச்சயம் நீக்கப்படும் என்று அந்த்க கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால், பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படாது என்று தொடர்ச்சியாகச் சிலர் தெரிவித்து வருகின்றனர்.

அவர்கள் ஒரு பதற்றநிலையை ஏற்படுத்துவதுடன், எமக்கு எதிராக அவதூறையும் சுமத்தி வருகின்றனர். குறிப்பாக சுமந்திரன் இவ்வாறான கருத்துக்களை போலியாகவும், திரிவுபடுத்தியும் கூறி வருகின்றார். இது ஆரோக்கியமானது அல்ல. நாம் ஆட்சிக்கு வந்தால் (தேசிய மக்கள் சக்தி) பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படும் என்பதை நான் உறுதியாகக் கூறுகின்றேன்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தால் அதிகளவான பாதிப்புக்களை எதிர்கொண்டவர்கள் தமிழர்கள். இந்தச் சட்டத்தின் கொடுமையை, இந்தச் சட்டம் தரும் வலியை நாம் அறிந்து வைத்துள்ளோம். ஆதலால், அதை நிச்சயம் நீக்கியே தீருவோம்.

இது எமது கொள்கைப் பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது.

அத்துடன், மாகாணசபைத் தேர்தல்கள் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் நடத்தப்படாது என்றும், மாகாணசபைத் தேர்தல்களை தேசிய மக்கள் இல்லாமல் செய்யும் என்றும் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

உண்மையில் இந்தக் கருத்துக்கள் அனைத்தும் திரிவுபடுத்தப்படுகின்றன. மாகாணசபைத் தேர்தல் உடனடியாக நடத்தப்படும். முடியுமான விரைவில் நாம் அவற்றை நடத்துவோம். அத்துடன், தமிழ் அதிகாரிகளின் நியமனங்களை நாம் மேற்கொள்வோம். தமிழர்கள் தமது தேவைகளுக்கு கொழும்புக்கு ஓடிச்செல்லாமல், யாழ்ப்பாணத்தில் தம் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளக் கூடிய நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுப்போம்.- என்றார்.

அனுர ஆட்சியில் மக்கள் எதிர்பார்த்த மாற்றம் நிகழுமா என்பதில் பாரிய சந்தேகம் – ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்

மக்கள் எதிர்பார்த்த மாற்றம் நிகழுமா என்பதில் பாரிய சந்தேகம் இருக்கிறது என இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இன்று (31) யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒரு தேர்தல் வருகிறது, ஒரு மாற்றத்திற்கான தேர்தல் என்று சொல்லப்படுகிறது. அந்த மாற்றத்தின் ஆரம்பம் ஜனாதிபதி தேர்தல் என்று ஜனாதிபதி தேர்தலை கூறுகிறார்கள்.

அது ஒரு வகையிலும் சரியானது தான் எமது நாட்டில் இரு கட்சி ஆட்சி என்று சொல்லப்படும் நிலையில் அந்த இரு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்த காலத்தில் ஒரு பாரிய மாற்றமாக மூன்றாம் தரப்பு இப்பொழுது ஆட்சியை பிடித்து இருக்கிறது.

அந்த மூன்றாம் தரப்பு யார் என்று நாங்கள் பார்த்தால் ஒரு தடவை அல்ல இரண்டு தடவைகள் ஆட்சியை பிடிப்பதற்காக ஆயுதம் எடுத்து போராடிய தரப்பினர்.

ஒரு மாற்றம் வேண்டும் என்ற நிலையில் யாரிடம் இந்த பொறுப்பை ஒப்படைக்க மக்களுக்கு கிடைத்தது தேசிய மக்கள் சக்தி தான். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த மாற்றம் நிகழுமா என்பதில் பாரிய சந்தேகம் இருக்கிறது என தெரிவித்தார்.

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் – 15 ஆசனங்களை கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி!

இன்று (26) நடைபெற்ற எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வௌியிடப்பட்டுள்ளன.

இதற்கமைய,

தேசிய மக்கள் சக்தி – 17,295 வாக்குகள் – உறுப்பினர்கள் 15

ஐக்கிய மக்கள் சக்தி 7,924 வாக்குகள் – உறுப்பினர்கள் 06

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 3,957 வாக்குகள் – உறுப்பினர்கள் 03

பொதுஜன எக்சத் பெரமுன – 2,612 வாக்குகள் – உறுப்பினர்கள் 02

சுயேட்சைக்குழு 1 – 2,568 வாக்குகள் – உறுப்பினர்கள் 02

பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி – 1,350 வாக்குகள் – உறுப்பினர்கள் 01

தேசிய மக்கள் கட்சி – 521 வாக்குகள் – உறுப்பினர்கள் 01

தெவன பரபுர கட்சி – வாக்குகள் 388 – உறுப்பினர்கள் தெரிவாகவில்லை

ஜனசெத பெரமுன – வாக்குகள் 50 – உறுப்பினர்கள் தெரிவாகவில்லை

29 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக அங்கீகரிக்கப்பட்ட 8 அரசியல் கட்சிகளும் 1 சுயேச்சைக் குழுவும் இன்று தேர்தலில் போட்டியிட்டன.

 

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது.

 

இன்றைய வாக்களிப்பு 48 நிலையங்களில் இடம்பெற்றதுடன், இம்முறை எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் 55,643 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.

தேசிய மக்கள் சக்தியினர் தமது உண்மை முகங்களை தற்போது வெளிக்காட்டி தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்துவிட்டனர் – முருகேசு சந்திரகுமார்

தேசிய மக்கள் சக்தியினர் தமது உண்மை முகங்களை தற்போது வெளிக்காட்டி தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்துவிட்டனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று சனிக்கிழமை (26) இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் ஏராளமான சுயேட்சை குழுக்கள் களமிறங்கி வாக்குகளை சிதைக்க முயற்சிக்கின்றனர். அவர்கள் யார் என்பது பற்றி மக்கள் மத்தியில் தெளிவு இருக்கிறது.

ஐக்கிய மக்கள் சக்தியில் நாம் தேர்தலில் போட்டியிடுகிறோம். ஐக்கிய மக்கள் சக்தியில் மாத்திரமே தான் சிறுபான்மையினர் போட்டியிடுகின்றனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி மாத்திரமே சிறுபான்மையினர் மீது அக்கறை உள்ளவர்கள். கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச இனவாதி அல்ல. அவரே சிறுபான்மையினர் மீது அக்கறை கொண்டவர்.

தேசிய மக்கள் சக்தியினரின் உண்மை முகங்கள் தற்போது வெளிவர தொடங்கிவிட்டது. அவர்களே எல்லாம் என்ற மாயை உருவாகி அலை ஒன்று ஏற்பட்டிருந்தது.

தற்போது அதன் உண்மை வெளிவர தொடங்கிவிட்டது. ரில்வின் சில்வாவின் கருத்து, அவர்கள் யார் என்பதனையும் அவர்களின் உண்மை முகங்களையும் காட்டுகின்றது.

தமிழ் மக்களின் இன பிரச்சினைக்கு ஒழுங்கான தீர்வு திட்டம் எதுவும் அவர்களிடம் இல்லை. தமிழ் மக்களுக்கு பொருளாதார பிரச்சினை தான் இருக்கிறது என கூறுகின்றனர். தமிழர்களுக்கு சோற்றுக்கு தான் பிரச்சினை என சொல்கின்றனர்.

தமிழ் மக்கள் மத்தியில் அவர்கள் செல்வாக்கை இழந்துவிட்டார்கள். சஜித் பிரேமதாச தலைமையில் தான் பாராளுமன்றம் அமையும். அவரே பிரதமராக பதவியேற்பார்.

ஊழலற்ற நேர்மையானவர்களே நாடு முழுவதும் சஜித் தலைமையில் போட்டியிடுகின்றனர் என்றார்.

அதேவேளை குறித்த ஊடக சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளரும் யாழ். தேர்தல் மாவட்ட வேட்பாளருமான உமாச்சந்திர பிரகாஷ் கருத்து தெரிவிக்கையில்,

ஐக்கிய மக்கள் கூட்டணியாக நாங்கள் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுகிறோம். தேசிய மக்கள் சக்தியினர் ஆட்சி பீடம் ஏறி எதனையும் செய்யவில்லை.

குறிப்பாக வடக்கு, கிழக்கு தமிழர்கள் மற்றும் மலையக தமிழர்கள் என எவருக்கும் எதுவும் செய்யவில்லை. அவர்கள் இனியும் செய்யப்போவதில்லை.

எனவே தான் சஜித் பிரேமதாச தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவு வழங்க வேண்டும். யார் மக்கள் பிரதிநிதியாக போக வேண்டும் என்பதனை மக்கள் தான் தெரிவு செய்ய வேண்டும்.

தேசிய மக்கள் சக்தியின் தமது கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்பது ஜனநாயகம் அல்ல. வேட்பாளர். தெரிந்தவர் அறிந்தவர் அயலவர்கள் என வாக்களித்து வாக்கை சிதறடிக்க வேண்டாம் என்றார்.

யாழ்ப்பாண மக்கள் அனுர குமாரவின் பக்கம் தான் நிற்கிறார்கள் – யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட NPP முதன்மை வேட்பாளர் இளங்குமரன்!

முன்பள்ளி முதல் மும்மொழி அறிமுகம்!

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு தகுந்த சம்பளம்!!

புலம்பெயர்ந்தவர் உதவியோடு வடக்கில் தொழிற்சாலைகள் அமையும்!!!

தேசிய மக்கள் கட்சியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் இளங்குமரன் உடனான நேர்காணல்.

 

 

வடக்கு மக்களுக்கு 13 ஆவது திருத்தச்சட்டமும் அதிகாரப்பகிர்வும் அவசியமாக இல்லை – ரில்வின் சில்வா

வடக்கு மக்களுக்கு 13 ஆவது திருத்தச்சட்டமும் அதிகாரப்பகிர்வும் அவசியமாக இல்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

 

தமிழ் அரசியல்வாதிகள் தங்களது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள இந்த வசனங்களை பயன்படுத்தி வருகின்றன என ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

 

தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ”வடக்கில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. யாழ்ப்பாணத்தில் ஓரளவு தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளக் கூடிய வசதிகள் உள்ள போதிலும் கிளிநொச்சி, வவுனியா அல்லது முல்லைத்தீவில் வாழும் மக்கள் மிகவும் கஷ்டமான வாழ்கையையே வாழ்கின்றனர்.

இங்குள்ளவர்கள் கல்வி முதல் அனைத்து விடயங்களையும் பெற்றுக்கொள்வதில் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். இந்த மக்கள் மிகவும் வறுமைக்கு உட்பட்டவர்களாக உள்ளனர். அங்குள்ள மக்களின் வாழ்கை முள்ளின் மேல் உள்ளது. பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி தேடுவதே அவசியமாக உள்ளது.

காணி முரண்பாடுகள் நீண்டகாலமாக உள்ளன. யுத்தக்காலத்தில் தமது காணியை கைவிட்டு வெளியேறி மக்கள் யுத்தம் நிறைவடைந்து சென்ற போது அந்த காணிகளை வேறு நபர்கள் கைப்பற்றி குடியேறியுள்ளனர்.

அரசாங்கம் தலையீடு செய்து அந்தப் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டியுள்ளது. பிரச்சினைகள் அவ்வாறுள்ளன.

ஆனால், இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்காத வடக்கின் தமிழ் அரசியல் தலைவர்கள், தமது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள 13ஆவது திருத்தச்சட்டம் மற்றும் அதிகாரப்பகிர்வு போன்ற வசனங்களை பயன்படுத்திக்கொண்டனர்.

ஆனால், வடக்கின் அடித்தட்டு மக்களுக்கு 13ஆவது திருத்தச்சட்டம் அவசியமில்லை. அவர்களுக்கு அதிகாரப்பகிர்வு அவசியமில்லை.

 

அவர்களுக்கு விசாயத்தை மேற்கொள்ள நீர் வசதிகளும், அவற்றை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகளும், கல்வியும், நல்ல வைத்தியசாலைகளுமே அவசியமாக உள்ளன. எமது நாட்டில் ஒருவர் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் அவர் கொழும்புக்கு கட்டாயம் வரவேண்டிய தேவையுள்ளது.

கண் பரிசோதனைகளுக்கு யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு வரவேண்டியுள்ளது. அனைத்தும் கொழும்பை மையப்படுத்தியுள்ளன. இவ்வாறு கொழும்பை மைப்படுத்தியுள்ள அனைத்து விடயங்களும் நாட்டின் அனைத்து பிரதேசங்களுக்கும் செல்லும் போது மக்களின் பிரச்சினைகள் தீரும்.

குறிப்பாக எமது நாட்டில் உற்பத்தி பொருளாதார முறைமையொன்று உருவாக்கப்பட வேண்டும். அந்தப் பொருளாதாரத்தின் பங்காளிகளாக அனைத்து பிரதேச மக்களும் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்பதுடன், அந்த பொருளாதாரத்தின் பிரதிபலன்களும் அவர்களுக்கு கிடைக்க வேண்டும்.

 

உற்பத்தி பொருளாதார்ததின் பயன்கள் அனைத்து தரப்பினருக்கும் கிடைக்கும் போது நாட்டில் தற்போது காணப்படும் பிரச்சினைகளில் பெரும்பான்மையானவைக்கு தீர்வு கிடைத்துவிடும். அதன் ஊடாக அடிப்படை பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி எதிர் நோக்கும் சவால்கள் !

எழுத்து – இதயச்சந்திரன்

இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக பலராலும் பார்க்கப்படுகிறது தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் வெற்றி.

‘முறைமை மாற்றம்’ என்பதை நோக்கி இத் திருப்பு முனை நகர்கிறது என்கின்றனர் சில அரசறிவியலாளர்.

‘சிஸ்டம் செஞ்’ என்பதை பலவிதமாக அர்த்தப்படுத்தினாலும் அரசியலமைப்பிலும் பொருளாதாரக் கட்டமைப்பிலும் அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்தாமல் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் அனைத்தும் இருப்பதை மேம்படுத்தும் சீர்திருத்தங்களாகவே அமையும்.

ஊழல் அற்ற ,ஏற்ற தாழ்வு இல்லாத நிர்வாகம் அடிப்படை மாற்றத்திற்கான ஆரம்பமாக இதனைக் கொள்ளலாம். அதுவே ஒரு கட்டமைப்புக் கோட்பாடாக மாறாது.

தே.ம. சக்தி சனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றவுடன் , இந்திய-மேற்குலகின் மைய நீரோட்ட ஊடகங்கள், ‘இடதுசாரிகள் மார்க்சிசவாதிகள் வெற்றி பெற்று விட்டனர்’ என்று தலைப்புச் செய்திகளை வெளியிட்டனர்.

ஆயுதக் கிளர்ச்சி ஊடாக புரட்சிகர மாற்றத்தினை ஏற்படுத்த முயன்று தோற்றுப் போனவர்கள் , முதலாளித்துவ தேர்தல் முறைமை ஊடாக அடிப்படை சோஷலிஸக் கட்டமைப்பு மாற்றத்தை ஏற்படுத்திவிடுவார்களோ என்று இவ் வல்லரசுகள் அச்சப்படுகின்றன.

இதுவரை ஆண்ட நவ தாராண்மைவாத தரகர்கள் , தேசிய இன முரண்பாட்டினை ஊக்குவித்து நாட்டினை அழிவுப் பாதையில் இட்டுச் சென்று , இறுதியில் வங்குரோத்து நிலைமையில் அனைத்து மக்களின் இறைமையை அடகு வைத்துள்ளனர்.

பொருளாதார வீழ்ச்சியினால் ஏற்பட்ட ஆழமான பாதிப்பினை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி தமது பிராந்திய பூகோள நலனை அடைந்திட முயலும் போது , அதற்கு இசைந்து போகாத ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்டுவிட்டதென இவர்கள் ஆதங்கப்படுகின்றனர். அதுவே இந்த மார்க்சிச முலாம் பூசலின் வெளிப்பாடு எனக் கொள்ளலாம்.

இந்த பொருளாதார வீழ்ச்சியால் ஏற்பட்ட அரச கட்டமைப்பின் பலவீனம் , திடமான வெளியுறவுக் கொள்கையினை உருவாக்க முடியாததொரு இக்கட்டான நிலையினை ஏற்படுத்தியுள்ளதாக பேராசிரியர் காமினி கீரவேல அவர்கள் கூறுகின்றார்.

இலங்கைக்காக இருதரப்பு , பலதரப்பு மற்றும் சர்வதேச கடன் முறித்தரப்பு என்போருடன் பேசும் சர்வதேச நாணய நிதியமும் மறைமுகமாக மேற்குலகத்தின் உடனான வெளியுறவுக் கொள்கையில் தாக்கம் செலுத்துகிறது.

கடன்களை செலுத்த முடியாதென கூறினால் , எந்த முதலீடுகளும் நாட்டுக்குள் வராது.

‘முதலையும் வட்டியையும் நீண்ட காலத்திற்குப் பிறகு தருகிறோம்'[Reprofiling] என்று ரணில் உடன்பாடு காணவில்லை.

மாறாக முறிகளின் ‘முதல்’ குறைப்பையும் [Haircut]வட்டிக் குறைப்பையும் முன்வைத்துள்ளார்.

 

இந்த நிலையில் புதிய அதிபர் அநுரகுமார திசாநாயக்க அவர்கள் , நாடாளுமன்றத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றாலும் , அவருக்கு முன்னால் பெரும் சவால்கள் காத்திருக்கின்றன.

நாடு பெற்ற கடன்களை வைத்தே அடுத்த பூகோள அரசியல் ஆட்டம் ஆரம்பமாகும்.

 

அண்மைய நேர்காணல் ஒன்றில் தற்போதைய பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்கள் இந்திய முதலீடுகள் குறித்து கூறியது கவனிப்புக்குரியது.

ஊழலற்ற. வெளிப்படைத்தன்மை உள்ள , தமது பொருளாதாரக் கொள்கைக்கு இசைந்து பயணிக்கக்கூடிய முதலீடுகளை நாம் வரவேற்போம் என்றார்.

 

இதற்கிடையே அனுராவிற்கு வாழ்த்துச் சொல்ல ஓடோடி வந்த இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் குறித்தும் பேச வேண்டும்.

 

இந்த சந்திப்புதான் என்பிபி என்று அழைக்கப்படும் ஜேவிபி யானது அதிகார நாற்காலியில் இருந்தவாறு ஒரு வல்லரசு நாட்டினை எதிர்கொண்ட முக்கிய நிகழ்வாகும்.

வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்தையும் சந்தித்தார்.

அவர் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தைப் பற்றி பேசியது தமிழர் தரப்பிற்கு மகிழ்ச்சி.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை நினைவுபடுத்தவே பதின்மூன்றை ஜெய்சங்கர் குறிப்பிட்டார் என்பது சிங்கள தரப்பிற்கு தெளிவாகப் புரியும்.

அநேகமாக சர்ச்சைக்குரிய தென்கடல் அடியில் உள்ள கனிமவள பாறைகள் குறித்தும் பேசியிருக்க வேண்டும்.

 

இரண்டாவது நிகழ்வாக சீனாவின் பாய்மர போர்க்கப்பல் ஒன்று இலங்கைக்கு வருகிறது.

வழமை போல் இந்தியத் தரப்பிலிருந்து அச்சுறுத்தலைக் காணவில்லை. அமைச்சர் விஜித ஹேரத்தின் கப்பல் குறித்த விளக்கங்களும் தெளிவாக வித்தியாசமாக இருக்கிறது. ‘எல்லோரையும் சமமாகப் பார்க்கிறோம்’ என்கிறார்.

 

ஆனாலும் தற்போதைய பல்துருவ உலக ஒழுங்கில் , எல்லோரையும் சமமாக நண்பர்களாக பார்ப்பதென்பது யதார்த்தபூர்வமானதல்ல.

 

பிரிக்சில் இணைவதற்கு இந்தியாவை அணுகுவது யதார்த்த அரசியல். அது தென் உலகத்தின்[Global South] முக்கிய அணி என்பதை இடதுசாரிகள் புரிந்து கொள்வர்.

ஆகவே இன்னும் சில ஆண்டுகளுக்கு இந்த தேசிய மக்கள் சக்தியின் முழுமையான தோற்றம் புலப்படாது.

நாட்டின் பொருளாதாரம் நிமிரும் வரை , நிர்வாகக் கட்டமைப்பை சீர் செய்வதிலும் மக்களின் நன்மதிப்பினைப் பெறுவதிலும் அரசு அதிக கவனம் செலுத்துமென எதிர்பார்க்கலாம்.

 

இருப்பினும் மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம் தீவிரவடையுமாயின் முன்னேற்றம் தடைப்படும் வாய்ப்புகள் அதிகம்.

ஊழல் மற்றும் இனவாத அரசியல்வாதிகள் அரசியலில் இருந்து ஒதுங்குவது அனுரகுமாரதிசநாயக்க ஜனாதிபதியானதற்கு கிடைத்த வெற்றி !

ஊழல் அரசியல்வாதிகள் அரசியலில் இருந்து ஒதுங்குவது அனுரகுமாரதிசநாயக்க ஜனாதிபதியானதற்கு கிடைத்த வெற்றி என தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் பிமல்ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தோல்வியிலிருந்து தப்புவதற்காக ஊழல் மற்றும் இனவாத அரசியல்வாதிகள் இந்த முறை தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்துக்கொண்டுள்ளனர் என தெரிவித்துள்ள அவர் அடுத்த தேர்தலில் அவ்வாறான அரசியல்வாதிகள் வேட்பாளர்களாக நிற்காத நிலையை ஏற்படுத்தியமை பொதுத்தேர்தலிற்கு முன்னர் தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்த பெருவெற்றி என தெரிவித்துள்ளார்.

அனுரகுமாரவை ஜனாதிபதியாக தெரிவு செய்யதமைக்காக மக்களிற்கு நன்றி தெரிவிக்கவேண்டும்,இது இறுதியில் ஊழல் இனவாத அரசியல்வாதிகளின் அரசியல் வாழ்க்கையை முடித்துவைத்தது என அவர் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி தேர்தலில் அனுரகுமாரவிற்கு வாக்களித்தன் மூலம் மக்கள் சிறந்த செயலை செய்தனர் இது இறுதியில் ஊழல் அரசியல்வாதிகளை அகற்றியது,தோல்வியi தவிர்ப்பதற்காக இந்த அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

 

9/21: இலங்கையில் நிகழ்ந்த அரசியல் சுனாமி ! வீழ்ச்சியிலிருந்து ஆட்சியை நோக்கி …

செப்ரம்பர் 21, 2024 இல் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் சுனாமியை கண்டு மேற்குலகின் தலைநகர்களில் இருந்தவர்களின் புருவங்கள் உயர்ந்தன என்று சர்வதேச மற்றும் நோர்வே ராஜதந்திரியும் அரசியல்வாதியுமான எரிக்சோல்ஹைம் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் தேர்தல் மற்றும் ஆட்சி மாற்றத்தை எவ்வாறு கண்ணியமாக மேற்கொள்ள வேண்டும் என்பதை மேற்கு நாடுகள் இலங்கையிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கின்றார். அத்தோடு நீண்டகாலத்திற்குப் பின் இலங்கையில் இனவாதத்திற்கு மதவாதவாதத்திற்கு தீவிரவாதத்திற்கு இடம்கொடுக்காமல் இத்தேர்தல் நடந்தது என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கின்றார். அமெரிக்கா தலைமையிலான மேற்குநாடுகள் அண்மைய எதிர்காலத்தில் புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸ்ஸநாயக்காவிற்கு எதிராகச் செயற்படமாட்டார்கள் என்பதை எரிக் சொல்ஹைம் கோடிட்டுக்காட்டியுள்ளார். அமெரிக்க வல்லரசின் ஒரு மென்போக்கு முகமே நோர்வே ராஜதந்திரி எரிக் சொல்ஹைம். அவருடைய பதிவில் “தேர்தல் காலத்தில் ஏகேடி (அனுர குமார திஸ்ஸநாயக்க) இந்தியாவை சீனாவை மேற்குலகையும் தொடர்பில் வைத்திருந்தார்” என்பதையும் குறிப்பிட்டுள்ளார். “ஏகேடி ஒரு தலைவராக வெற்றி பெறவும், இலங்கை வளமான, அமைதியான, பசுமையான நாடாக வருவதற்கும் நாங்கள் உதவ வேண்டும்” என்றும் எரிக் சோல்ஹைம் குறிப்பிட்டுள்ளார். 2001 செப்ரம்பர் 9/11 க்குப் பின்னாக இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தம் வகிஸ்தவர், கொழும்புக்கும் வன்னிக்கும் டெல்லிக்கும் இடையே பறந்து திரிந்தவர் எரிக் சொல்ஹைம்.

சுதந்திர இலங்கையின் அரசியலில் 9/21 என்பது ஒரு அரசியல் சுனாமி என்றால் மிகையல்ல. ஆனால் இது எப்படி சாத்தியமானது ? என்பது, ஆறு சகாப்தங்களுக்கு மேலான ஒரு தவம்.

ஜேவிபி – ஜனத்தா விமுக்தி பெரமுன (மக்கள் விடுதலை முன்னணி) அறுபதுக்களின் நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட இடதுசாரித்துவம் கொண்ட அரசியல் இயக்கம். விவசாய பூமியான இலங்கை பிரித்தானிய காலனித்துவவாதிகளால் கொள்ளையிடப்பட்டு, சுறையாடப்பட்டு, தன்னிறைவை இழந்து, வறிய நாடாக்கப்பட்டு, 1948இல் சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது. இலங்கையின் ஆட்சி அதிகாரம் பிரித்தானிய காலனித்துவ வாதிகளுக்கு விசுவாசமான அவர்களால் உருவாக்கப்பட்ட அதிமேட்டுக்குடி சிங்கள – தமிழ் அதிகார வர்க்கத்திடம் கை மாற்றப்பட்டது. இலங்கையின் கிராமம்புற விவசாயிகள் பெரும் கஸ்டத்தை அனுபவித்த காலகட்டம் அது. வேலையில்லாத் திண்டாட்டம் இளைஞர்களை உலுக்கிய காலகட்டம். இந்தக் காலகட்டத்தில் தான் ஜேவிபி கருக்கொண்டது. இது கியூபா புரட்சிக்குப் பின்னான காலகட்டம். கியூபாப் புரட்சியால் ஈர்க்கப்பட்டவர்களில் ரோகனவிஜயவீரவும் ஒருவர். கியூபாப் புரட்சியில் பிடல் கஸ்ரோவோடு தோளோடு தோள் நின்று போராடியவர் சே குவெரா. ஜேவிபியின் தலைவர் ரோகன விஜயவீர பொலிவியாவில் 1967இல் சிஐஏ – அமெரிக்க புலனாய்வுப் பிரிவு – சென்ரல் இன்ரலிஜன் ஏஜென்சி யினால் படுகொலை செய்யப்பட்ட சேகுவராவின் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டவர். அதனால் பிற்காலங்களில் இவ்வமைப்பு ‘சேகுவேரா’ என்றும் அறியப்பட்டிருந்தது.

1971 அன்று மார்ச் மாத முற்பகுதியில் இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் அனுராதபுரத்தில் நான் பிறந்திருந்த காலத்திலேயே அந்தப் புரட்சி வெடிக்கக் காத்திருந்தது. அனுராதபுரம் சிங்கள மக்களின் கலாச்சாரத் தலைநகரம். எமது குடும்பத்தின் பூர்வீகம் யாழ்ப்பாணமாக இருந்தாலும் என்னுடைய அம்மப்பாவின் தந்தையின் தொழில்நிமித்தம் அன்றைய காலத்தில் எனது குடும்பமும் உறவுகளும் அனுராதபுரத்தில் வாழ்கின்றோம். எனது தந்தையார் ஈவிகே பெரியாரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட ஒரு திராவிடன். அதனால் அவருக்கு ஜேவிபி மீதும் ஆர்வமும் ஈடுபாடும் இருந்தது. ஆனால் ஒரு ஜேவிபி உறுப்பினராக ஆயதம் ஏந்த அவர் முன்செல்லவில்லை. ஆனால் அவர் ஜேவிபியை மனதார ஆதரித்தார். இந்தப் பின்னணியில் நான் பிறந்திருந்த அந்தச் சுழல், இலங்கை அரசைக் கைப்பற்றும் இராணுவத்திட்டம் ஒன்றுக்கு ஜேவிபி தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தது.

‘சேகுவரா கலவரம்’ என்று பெரும்பாலும் அறியப்பட்ட ஜேவிபி இலங்கை அரசைக் கைப்பற்ற ஏப்ரல் 5, 1971இல் மேற்கொண்ட புரட்சிக்கு முன்னதாகவே அதன் தலைவர் ரோகன விஜயவீர உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். இருந்தும் இலங்கையின் பல மாவட்டங்கிளிலும் இருந்தும் 100 வரையான பொலிஸ் நிலையங்கள் ஏப்ரல் 5 இரவு தாக்கப்பட திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் மாறாக ஏப்ரல் 5 அதிகாலையிலேயே தவறான தகவலையடுத்து மொனராகலை மாவட்டத்தில் உள்ள வெல்லவாய பொலிஸ் நிலையம் தாக்கப்பட்டதால் ஏனைய பொலிஸ் நிலையங்கள் உசார் படுத்தப்பட்டது. ஒரு அதிர்ச்சியான தாக்குதலை தொடுக்க இருந்த ஜேவிபியால் அந்த அதிர்ச்சியைக் கொடுக்க முடியவில்லை. பல்வேறு களநிலைமைகள் காரணமாக ஒரு சில வாரங்களிலேயே புரட்சியில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, பலர் அநியாயமாகப் படுகொலை செய்யப்பட்டனர். அரச இயந்திரம் கொடூரமான கரங்கள் கொண்டு, ஜேவிபி இல் இருந்தவர்களை மட்டுமல்ல அவர்களுடைய குடும்பங்கள், அவர்களுக்கு ஆதரவளித்தவர்கள் எனப் பல நூறு, ஆயிரம் பேரை கொன்றொழித்தது. அந்தக் கொடூரக் கொலைகளின் அடையாளங்களில் ஒன்றுதான் கத்தரகம (கதிர்காமம்) புதவருட அழகுராணி பிரேமாவதி மன்னம்பேரியின் படுகொலை. 22 வயதேயான இவ்விளம்பெண்இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, நிர்வாணமாக தெருவால் இழுத்துவரப்பட்டு ஏப்ரல் 16, 1971 அன்று பல தடவை சுடப்பட்டு உயிருடன் எரிக்கப்பட்டாள். யாழ் செம்மணியில் எரிக்கப்பட்ட கிருசாந்திக்கும் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட இசைப்பிரியாவுக்கும் இவள் அக்காவாக இருந்திருக்க வேண்டும். இவ்வாறான பல சம்பவங்கள் தெற்கிலும் அதன் பின் வடக்கிலும் இடம்பெற்றது.

இலங்கை சுதந்திரம் அடைந்ததைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த சிங்கள – தமிழ் ஆளும் குழமங்கள் குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ் காங்கிரஸ் தங்கள் வாக்கு வங்கிகளைக் காப்பாற்ற அதிகாரத்தை சுவைக்க ஏட்டிக்குப் போட்டியாக இனவாதத்தை கக்கி அந்த இனவாதத்திற்கு நெய்யூற்றி வளர்த்து வந்தனர். தமிழரசுக் கட்சியுடைய உண்மையான பெயர் சமத்துவக் கட்சி. தமிழ் மக்களை ஏமாற்றவும் உசுப்பேத்தவும் வைத்த பெயர்தான் தமிழரசுக் கட்சி;. 1970 தேர்தலில் இடதுசாரிகளின் கை ஓங்குவதை அவதானித்த தமிழரசுக் கட்சியும் தமிழ் காங்கிரசும் 1976இல் ஒன்றாகி தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கி இடதுசாரிகளை தோற்கடிக்க போட்ட திட்டம் தான் நாட்டைப் பிரிக்கின்ற தமிழீழ விடுதலைக் கோரிக்கை – வட்டுக்கோட்டைத் தீர்மானம். அப்புகாமியும், பொன்னையாவும், சலீம்பாயும் தெருவில் வயிற்றுப்புழைப்புக்காகச் சண்டைபிடிக்க ஜேஆர் மாத்தையாவும், பொன்னம்பலம் மாத்தையாவும் ஹக்கீம் மாத்தையாவும் தொண்டமான் மாத்தையாவும் கூடி விருந்துண்டு மகிழ்ந்திருந்தனர். இந்த முரண்பாடு அன்றிலிருந்து இன்று வரை இலங்கையில் தொடர்கிறது.

1971 வீழ்ச்சியிலிருந்து ஜேவிபி படிப்படியாக தனது அரசியல் பண்புகளை மாற்றி அரசியல் களம் புகந்தது. ரோகன விஜயவீர உட்பட அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டிய நிலைக்கு அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி (யூஎன்பி) தள்ளப்பட்டது. 1979இல் கொழும்பில் நடைபெற்ற மாநாகரசபைத் தேர்தலில் ஜேவிபி வெற்றி பெறாவிட்டாலும் ஏனைய இடதுசாரிகளைப் புறம்தள்ளி முன்னிலைக்கு வந்தது. 1981 இல் இடம்பெற் மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலில் நாடளாவிய ரீதியில் ஜேவிபி போட்டியிட்டு 13 ஆசனங்களைப் பெற்றது. 1982இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ரோகண விஜயவீர போட்டியிட்டார். எனது தந்தையின் வாக்கும் அவருக்குச் சென்றது. 1982இல் அனுராதபுரத்திலிருந்த ‘கடதாய’ என்ற குறிச்சியிலிருந்த குவாட்டஸில் நான் எனது தந்தை சிறிய தந்தையின் வீட்டில் குடியிருந்தோம். வானொலியில் கேட்டு தேர்தல் முடிவுகளை கொப்பியில் எழுதிய ஞாபகங்கள் இன்னும் இருக்கின்றது. அப்போது இலங்கையின் மூன்றாவது பெரும் கட்சியாக ஜேவிபி பரிமாணம் பெற்றது.

ஜேவிபி யின் வளர்ச்சியை அவதானித்த ஐக்கிய தேசியக் கட்சியின் (யுஎன்பி) அன்றைய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஜேஆர் ஜெயவர்த்தன, ஒரு நரித்தந்திரத்தை மேற்கொண்டார். தனது வாக்குவங்கியைப் பலப்படுத்த இனவாதத்தைத் தூண்டிவிட்டார். ஜேஆர் ஜெயவர்த்தனா 1977இல் ஆட்சிக்கு வந்ததுமே இனக்கலவரம் ஒன்றைத் தூண்டிவிட்டார். அதனைத் தொடர்ந்து மீண்டும் அவருடைய ஐக்கிய தேசியக் கட்சி காடையர்கள் 1983இல் மற்றுமொரு இனக் கலவரத்தை திட்டமிட்டு தூண்டிவிட்டனர். அதனைச் சாதுரியமாக ஜேபிவி இன் தலையில் போட்டார் ஜேஆர் ஜெயவர்த்தன, ஜேவிபியை அரசியலில் இருந்து தடைசெய்தார்.

இந்த இடைவெளியில் ஜேவிபி மீண்டும் தலைமறைவாகியது. 1987 இலங்கை – இந்திய ஓப்பந்தம் உருவாகி இந்திய இராணுவம் அமைதிப்படை என்ற போர்வையில் ஆக்கிரமிப்பு இராணுவமாக இலங்கைக்குள் நுழைந்தது. ஏற்கனவே இந்திய விஸ்தரிப்பு வாதம் பற்றிய விசேட கற்கைகளைக் கொண்டிருந்த ஜேவிபி மீண்டும் ஆயதங்களை ஏந்தியது. இதில் உள்ள பெரும் முரண்நகை என்னவென்றால்: ஐக்கிய தேசியக் கட்சியில் ஜனாதிபதியாக வந்த ரணசிங்க பிரேமதாஸ இந்திய எதிர்ப்பை முன்வைத்து, “இந்திய இராணுவத்தை நாட்டிலிருந்து வெளியேற்றுவேன்” என்ற கோஸத்துடன் ஜனாதிபதியானவர். தமிழீழ விடுதலைப் புலிகள் இந்திய இராணுவத்துக்கு எதிராக வடக்கு கிழக்கில் யுத்தத்தை ஆரம்பித்திருந்தனர். ஜேவிபி யும் இந்தியாவுக்கு எதிராக ஆயதம் ஏந்தினர். ஜனாதிபதி பிரேமதாஸா விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை தன்னுடைய சகோதரன் என்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் குறிப்பிட்டார். ஆனால் …

ஜனாதிபதி பிரேமதாஸாவின் மென்போக்கை சாதகமாக்கி தமிழீழ விடுதலைப் புலிகள், இந்தியாவுக்கு சார்பான நிலைப்பாட்டையே எப்போதும் கொண்டிருக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் (ரியுஎல்எப்) தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் மற்றும் வெற்றிவேலு யோகேஸ்வரன் ஆகியோரை யூலை 13, 1989 அன்று கொழும்பில் அவர்களுடைய இல்லத்தில் வைத்துப் படுகொலை செய்தனர். இப்படுகொலை நடைபெற்று 48 மணிநேரங்களுக்குள்ளாக யூலை 16, 1989 அன்று ஜேவிபி உடன் நெருக்கத்தைக் கொண்டிருந்த ஒரே தமிழ் அமைப்பான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் உமா மகேஸ்வரன், அவருடைய மெய்பாதுகாவலரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இப்படுகொலையில் சம்பந்தப்பட்டவர்கள் அச்சம்பவம் நடைபெற்றது வெளி உலகத்திற்கு தெரியவருமுன்னரேயே தமிழகம் சென்று, இந்திய புலனாய்வுப் பிரிவான ரோவிடம் அடைக்கலம்பெற்றனர். அதற்கான ஏற்பாடுகளை ரோ முகவர் வெற்றிச்செல்வன் ஏற்படுத்தி இருந்தார். அப்போது நானும் அவர்களோடு இந்தியாவில் தங்கி இருந்தேன், வெளிநாடு வருவதற்காக. நவம்பர் 13, 1989இல் ஜேவிபி இன் தலைவர் ரோகண விஜயவீர இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார்.

தமிழீழ விடுதலைப் புலிகளாலும், இலங்கை அரசாங்கத்தாலும் 1990க்களில் இந்திய இராணுவம் பெருத்த அவமானத்துடன் இந்தியாவுக்கு திரும்ப நிர்ப்பந்திக்கப்பட்டது. மே 21, 1991 இலங்கை – இந்திய ஓபந்தத்தை பலவந்தமாக அங்கீகரிக்க வற்புறுத்தியமைக்காகவும் இந்திய அமைதிப்படை தங்களைத் தாக்கியமைக்காகவும் முன்னாள் இந்தியப் பிரதமரான ராஜீவ் காந்தியை தமிழீழ விடுதலைப் புலிகள் படுகொலை செய்தனர். மே 1, 1993 இலங்கையின் ஜனாதிபதி பிரேமதாஸாவையும் தமிழீழ விடுதலைப் புலிகள் படுகொலை செய்தனர். இவர்கள் எல்லோரையும் படுகொலை செய்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனையும் அவரது குடும்பத்தையும் மே 18, 2009இல் இலங்கை அரசு படுகொலை செய்தது. இதன் பின்னணியில் இந்தியாவின் உளவுத்துறை செயற்பட்டதாக பலத்த குற்றச்சாட்டுகள் உண்டு. 1987 இலங்கை – இந்திய ஒப்பந்தத்தில் சம்பந்தப்பட்ட முக்கிய தலைவர்கள் யாரும் இன்று உயிருடன் இல்லை. இவர்களில் ஜேஆர் ஜெயவர்த்தன மட்டுமே இயற்கை மரணத்தைத் தழுவினார். இலங்கை – இந்திய ஒப்பந்தம் ஒரு முத்தரப்பு தோல்வி. அது தமிழ் மக்களது தேசிய இனப் பிரச்சினைக்கான கேள்விக்கு எந்தத் தீர்வையும் தரவில்லை. அதனைத் தீர்க்க வேண்டும் என்ற விருப்பமோ அல்லது 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்ற விருப்பமோ இந்தியாவுக்கு இருக்கவில்லை. ஆனால் அதனை இலங்கை அரசை தனது நலன்சார்ந்து கட்டுப்படுத்தும் ஒரு துருப்புச் சீட்டாகவே இந்தியா தற்போதும் பயன்படுத்தி வருகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் 1977 முதல் 1993 வரையான தொடர்ச்சியான ஆட்சியில் இலங்கையில் இரத்த ஆறு ஓடியது. அது தெற்கிலே ஆரம்பித்து வடக்கு வரை வற்றாது ஓடியது. ஜனாதிபதி பிரேமதாஸ ஜேவிபி உறுப்பினர்களைப் படுகொலை செய்து சடலங்களை களனி ஆற்றில் மிதக்கவிட்டார். 1989 காலப்பகுதியில் 60,000 சிங்கள ஜேவிபி இளைஞர்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்படுகின்றது. 1971 ஜேவிபி புரட்சியில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,000 ஆக இருந்தது. அதே போல் வடக்கு – கிழக்கில் இடம்பெற்ற மோதல்களில் இலங்கை – இந்திய ஒப்பந்தம் வரை கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அனைத்து தரப்பையும் சேர்த்து 5,000 பேராகவே மதிப்பிடப்பட்டது. (இந்திய – இராணுவத்துடனான மோதல் புள்ளிவிபரங்கள் இதனுடன் இணைக்கப்படவில்லை.)

இதன் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சி மீதான வெறுப்பால் முதல் தடவையாக சிங்கள – தமிழ் மக்கள் இணைந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வாரிசான சந்திரிகா குமாரதுங்கவை ஜனாதிபதியாகத் தெரிவுசெய்தனர். இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைகளுக்கு மதிப்பளித்த ஒரு தலைவராக அவர் அன்று காணப்பட்டார் என்றால் மிகையல்ல. இவர் ஜேவிபி மீதும் மென் போக்கைக்காட்டினார். 1995இல் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஜேவிபி ஒரு ஆசனத்தைப் பெற்றுக்கொண்டது. இதுவே ஜேவிபியின் முதல் பாராளுமன்ற ஆசனம். ஆனால் 2001இல் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஜேவிபி 16 ஆசனங்களை வென்றதோடு சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்ற கூட்டமைப்பை உருவாக்கியது. ஆனால் கொள்கை முரண்பாடுகளால் இம்முன்னணி நீண்டாகாலம் நிலைக்கவில்லை. 2020இல் ஜேவிபி, என்பிபி – தேசிய மக்கள் சக்தி என்ற முன்னரங்க அமைப்பொன்றை நிறுவிப் போட்டியிட்டு மூன்று ஆசனங்களைப் பெற்றுக்கொண்டது.

ஏழ தசாப்தங்களுக்கு மேலாக மாறி மாறி ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆளும் குழுமம் தங்களுடைய பொறுப்பற்ற ஆட்சிமுறைமையினால் நாட்டை மெது மெதுவாக வங்குரோத்து நிலைக்குத் தள்ளியது. சிங்கள, தமிழ், முஸ்லீம் மற்றும் மலையக ஆளும் குழமங்களின் குடும்பங்களின் வளர்ச்சிக்கு இன, மத பேதமின்றி அப்பாவி மக்கள் பலிக்கடாவக்கப்பட்டனர். அவர்கள் நாளாந்த வாழ்வுக்கு கஸ்டத்தை அனுபவிக்க, சிங்கள, தமிழ், முஸ்லீம் மற்றும் மலையகத் தலைவர்கள் பொருளாதார சுபீட்சத்தை எட்டினர். இதனால் ஏற்பட்ட தார்மீகக் கோபம் ‘அறகலயா’ என்ற மக்கள் எழுச்சிக்கு வித்திட்டது. ஆனால் இந்த மக்கள் எழுச்சியை மக்கள் தங்களுக்கு சார்பானதாக்க முதலே, மேற்குலகம் அந்த எழுச்சியை தனக்கு சாதகமாக்கியது. சீன சார்பான ராஜபக்ச குடும்ப ஆட்சியைக் கலைத்து மேற்குக்கும் இந்தியாவுக்கும் மிகுந்த விசுவாசமிக்க முகவரும் ராஜபக்சாக்களின் நெருங்கிய நண்பருமான ரணில் விக்கிரமசிங்கா ஜனாதிபதியாக்கப்பட்டார். மாறாக ‘அறகலயா’ போராட்டத்தை முன்னெடுத்தவர்களை விரட்டியடிக்க மேற்குலகம் முழு ஆதரவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்குக் கொடுத்தது. மக்கள் மேலும் சினங்கொண்டனர். 2024 செப்ரம்பர் இலங்கை மக்களின் தீர்க்கமான நாளாக மாறியது. இந்த மாற்றத்தை தமிழ், முஸ்லீம், மலையகத் தலைமைகள் உணர்ந்தார்களோ இல்லையோ இந்தியா மிகத் தெளிவாக உணர்ந்திருந்ததை முன்னாள் இந்திய இராணுவத்தளபதி ஹரிகரன் இலங்கை வானொலிக்கு செப்ரம்பர் 28 வழங்கிய நேர்காணலில் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

ஜேவிபியின் வெற்றியைத் தடுப்பதற்காக வடக்கு, கிழக்கில் உள்ள வாக்குகள் ஜேவிபிக்கு சென்றுவிடக்கூடாது என்பதற்காக இந்திய புலனாய்வுத்துறையின் செல்லப்பிள்ளையான முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆலோசகர் மு திருநாவுக்கரசு கொண்டுவந்த திட்டமே தமிழ் பொதுவேட்பாளர். கொழும்பில், யாழில் உள்ள இந்திய தூதரகத்தின் சட்டைப்பையில் இருக்கின்ற தமிழ் ஊடகங்கள், அதற்கு தமிழ்த் தேசிய மூலாம் பூசி ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக அரசியல் முகவரியற்ற பாக்கியசெல்வம் அரியநேந்திரனைக் களமிறக்கினர். அவரை வைத்து ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஜேவிபிக்கும் செல்லக்கூடிய வாக்குகள் சஜித் பிரேமதாசவுக்கு மடைவெட்டிவிடப்பட்டது. இதே பாணியில் தமிழீழ விடுதலைப் புலிகள் 2006 தேர்தலில் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்கவுக்கு விழக்கூடிய வாக்குகளை தடுப்பதற்காக தேர்தலைப் பகிஸ்கரிக்கக் கோரினர். அதற்காக மகிந்த ராஜபக்ச 200 கோடிகளை இலங்கை ரூபாய்களை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வழங்கியிருந்தனர். இது இலங்கையின் அனைத்து ஊடகங்களிலும் வெளியாகி இருந்தது. 2006இல் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியான பின்னர் என்ன நடந்தது என்பதை வரலாறு குறித்துக்கொண்டுள்ளது.

இத்தேர்தலில் வீழ்ந்த வாக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் வடக்கு கிழக்கில் தமிழ், முஸ்லீம் மக்கள், மலையகத்தில் உள்ள தமிழ் மக்கள் மத்தியில்; ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸாவின் மகன் சஜித் பிரேமதாசவும் அவரைத் தொடர்ந்து சுயேட்சையாகப் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் ரணில் விக்கிரமசிங்கவும் கூடுதலான வாக்குகளைப் பெற்றுள்ளனர். வடக்கு கிழக்கில் தமிழ் தேசியத்தின் அழைப்பை தமிழ் மக்கள் முற்றாக நிராகரித்து இருந்தனர். வடக்கு கிழக்கில் உள்ள எந்தவொரு மாவட்டத்திலும் தமிழ் பொது வேட்பாளரான பாக்கியசெல்வம் அரியநேத்திரனால் முதலிடத்தைப் பெற முடியவில்லை. யாழ் மாவட்டத்தில் மட்டுமே அவரால் இரண்டாம் இடத்தைத் தக்க வைத்துக்கொள்ள முடிந்தது. வன்னி மாவட்டத்தில் பாக்கியசெல்வம் அரியநேந்திரன் மூன்றாம் நிலைக்குத் தள்ளப்பட்டார். பாக்கியசெல்வம் அரியநேந்திரனின் சொந்த மாவட்டமான மட்டக்களப்பிலும் திருகோணமலையிலும் அவர் நான்காம் நிலைக்குத் தள்ளப்பட்டார். இதுவே தமிழ் தேசியத்தின் காவலர் என்ற போர்வையில் களமிறக்கப்பட்ட தமிழ் பொதுவேட்பாளருக்கு தமிழ் மக்கள் வழங்கிய தீர்ப்பு.

வாக்களிக்கப்பட்ட வீத்த்தை ஒப்பிடுகையிலும் சிங்களப் பகுதிகளுக்கு ஈடாக தமிழ் மக்களும் வாக்களிப்பில் கலந்துகொண்டுள்ளனர். இதன் மூலம் தமிழ் தேசியத்தை முன்னெடுத்த கஜா அணியான தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தலைப் பகிஸ்கரிக்கும் அறிவிப்பை தமிழ் மக்கள் முற்றாக நிராகரித்துள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரை தமிழ் மக்கள் ஓரம் கட்டியுள்ளனர் என அனந்தி சசிதரன் குறுஞ்செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் தேசியம் பேசி தமிழ் பொதுவேட்பாளரை அறிவித்தவர்களையும் தமிழ் மக்கள் தோற்கடித்து மூன்றாம் நான்காம் நிலைக்குத் தள்ளி மண் கவ்வச் செய்துள்ளனர்.

மேலும் இதுவரை நடந்த இலங்கைத் தேர்தல் முடிவுகளில் பின்பற்றப்பட்ட போக்கு இத்தேர்தல் முடிவிலும் வெளிப்பட்டு இருப்பது கண்கூடு. 1994இல் சந்திரிகா பண்டாரநாயக்காவும் அதன் பின் மைத்திரிபால சிறிசேனவும் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட இரு தேர்தலைத் தவிர ஏனைய தேர்தல்களில் தமிழ் மக்களின் தெரிவுக்கு மாறாகவே சிங்கள மக்களின் ஜனாதிபதித் தெரிவு அமைந்துள்ளது.

இதுவரை ஆட்சி செய்து வந்த ஆட்சிக்குழுமத்திற்கு எதிரான போக்கு அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஏற்பட்டு வருகின்றது. அதன் வெளிப்பாட்டை இலங்கையிலும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இந்த நகர்வை, மக்களை அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் கவனிக்கத் தவறியிருந்தன. இளையோர் சமூகம் ஊழலற்ற ஒரு ஆட்சியை, மாற்றமொன்றுக்காக வாக்களித்துள்ளனர். சுதந்திர இலங்கையில் இதுவரை நடந்த தேர்தலைக்காட்டிலும் இத்தேர்தலில் இனவாதம் மதவாதம் பின் தள்ளப்பட்டது. அதற்கு முக்கிய காரணம் தேசிய மக்கள் சக்தி. அதனால் அவர்கள் முதற்தடவையாக சிறுபான்மை மக்கள் மத்தியில் தங்கள் வாக்கு வங்கியை பல மடங்காக அதிகரித்துள்ளனர்.

இலங்கையின் தென்பகுதியைப் போல் வடக்கு, கிழக்கு மலையகத்திலும் மக்கள் அலையாகத் திரண்டு வந்து ஜேவிபியின் முன்னரங்க அமைப்பான என்பிபிக்கு வாக்களித்துள்ளனர். தென்பகுதியில் கடந்த காலங்களைக் காட்டிலும் பத்து மடங்கு அதிகமாக மக்கள் ஜேவிபிக்கு வாக்குகளித்து இருந்தனர். ஆனால் வடக்கு கிழக்கில் தமிழ் பிரதேசங்களில் மக்கள் பதினைந்து மடங்கிலும் அதிகமாக ஜேவிபிக்கு வாக்களித்துள்ளனர். இலங்கையில் 2019இல் நடைபெற்ற தேர்தலைக் காட்டிலும் இத்தேர்தலில் என்பிபி க்கு பதின்மூன்று மடங்கு வாக்குகள் கிடைத்திருந்தது. ஆனால் யாழ் மாவட்டத்தில் கடந்த தேர்தலைக்காட்டிலும் 20 மடங்கு அதிகமாக மக்கள் என்பிபிக்கு வாக்களித்துள்ளனர். இலங்கையிலேயே யாழ் மாவட்டத்தில் தான் என்பிபி கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் கூடுதல் மடங்கு வாக்குகளைப் பெற்றுள்ளது. 2019 இல் என்பிபி பெற்ற வாக்குகள் 1,375. இத்தேர்தலில் என்பிபி பெற்ற வாக்குகள் 27,086 வாக்குகள். அது தமிழ் மக்கள் மத்தியிலிருந்த ஜேவிபி மிதான அச்சம் நீங்கி தமிழ் மக்கள் ஜேவிபியை நோக்கி நகர்வதைக் காட்டுகின்றது. இந்த வாக்கு நகர்வு நவம்பரில் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கவே அதிக வாய்ப்பு உள்ளது. இதுவரை வடக்குக் கிழக்கில் ஒரு போதும் பாராளுமன்ற ஆசனத்தைப் பெறாத ஜேவிபி நவம்பர் 2024 பாராளுமன்றத் தேர்தலில் மூன்று முதல் ஐந்து ஆசனங்களைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கலாம். இப்பாராளுமன்றத் தேர்தல் போலித் தமிழ் தேசியவாதிகளை அம்பலப்படுத்துவதாக அமையும்.

தமிழ் முஸ்லீம் கட்சிகள், தேசியம் பேசிய தமிழ் கட்சிகளும் கூட மக்களைப் புரிந்துகொள்ளவில்லை. இவர்கள் கடந்த 2019 தேர்தலில் கோட்டாபாய ராஜபக்சவுக்கு எதிராக சஜித் பிரேமதாச கணிசமான வாக்குகளைப் பெற்றதால் தங்களுடைய வழமையான புளித்துப்போன போர்மிளாவின் அடிப்படையில் சஜித் பிரேமதாசாவை ஆதரித்தனர். தற்போது மண் கவ்வியுள்ளனர். இவர்கள் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கும் தகுதியை இழந்துள்ளனர். தமிழ், முஸ்லீம், மலையக மக்கள் மத்தியிலிருந்து அரசியல் புத்துணர்ச்சி கொண்ட இளைய தலைமுறை அரசியலுக்கு வந்து காலாவதியாகிப் போன இப்போதுள்ள தலைமைகளை அரசியலில் இருந்து அப்புறப்படுத்துவது மிக அவசியம்.

இலங்கையில் பெரும்பான்மைச் சிங்கள மக்கள் மாற்றத்தை நோக்கி நாட்டை நகர்த்த தயாராகி விட்டனர். ஏனைய சமூகங்களும் அந்தப் பாதையில் முன்னேறிச் செல்வதை இத்தேர்தல் மிகத் தெளிவாகக் காட்டியுள்ளது. ஜனாதிபதியாக அனுரகுமார திஸ்ஸநாயக்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டாலும் நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடப்போவதில்லை. மாற்றங்கள் அவ்வளவு இலகுவில் வந்துவிடப் போவதுமில்லை. தேசிய மக்கள் சக்தியின் அடுத்துவரும் காலங்கள் கடுமையானதாகவும் சவாலானதாகவும் அமையும்.

நவம்பரில் வருகின்ற பாராளுமன்றத் தேர்தல் மூலம் இலங்கையில் உள்ள சிங்கள, தமிழ், முஸ்லீம், மலையக மக்கள் என்பிபிக்கு வழங்கிய ஆணையை உறுதிப்படுத்தும் வகையில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் (113 ஆசனங்கள்) பெற்றுக்கொள்ளும் வகையில் தங்கள் வாக்குகளை வழங்க வேண்டும். என்பிபி பாராளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மையை நிரூபிக்கும். ஆனால் அவர்களால் அறுதிப் பெரும்பான்மையை அதாவது மூன்றில் இரண்டு (150 ஆசனங்கள்)பெரும்பான்மையை தக்க வைக்க முடியும் என்பது இலங்கைத் தேர்தல் முறையில் மிகக் கடினமானது. ஆனால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மக்கள் ஆணையைப் பெற்றாலேயே ஜேவிபி யால் தன்னுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கான வாய்ப்பு ஏற்படும்.

அந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கு வரும் நவம்பர் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னாக ஜேவிபி தன்னுடைய பிரத்தியேக ஆட்சி முறையை மக்களுக்கு நிரூபிக்க வேண்டும். பொருளாதாரத்தில் குறிப்பாக பொருட்களின் விலையில் வீழ்ச்சியயைக் காட்ட வேண்டும். குறிப்பாக இந்தியாவுக்கும் மற்றும் மேற்குலகுக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் பணியாமலும் எகிறாமலும் உறவைத் தக்கவைத்து காய்களை நகர்த்த வேண்டும். இவற்றைச் சாத்தியமாக்குவதற்கு மக்கள் ஜேவிபியின் பின்னால் நின்றால் மட்டுமே சாத்தியம். என்பிபியைப் பொறுத்தவரை ஜனாதிபதிப் பதவியையும் பாராளுமன்றத்தையும் கைப்பற்றுவது இலகு. ஆனால் அவற்றைத் தக்க வைக்க மக்களுடைய பரந்துபட்ட எதிர்பார்ப்புக்கு தீர்வுகளை வழங்குவது மிகச்சிக்கலானதும் கடினமானதும் ஆகும். இலங்கையில் அடிப்படை அரசியல், பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த என்பிபிக்கு இரண்டு பாராளுமன்றக் காலம் அவசியமானது. அதிகாரத்தின் சுவை என்பிபியை மாற்றுகின்றதா இல்லை என்பிபி நாட்டின் அரசியல் பொருளாதார கட்டமைப்பை மாற்றுவார்களா என்பதை அடுத்து வரும் மாதங்கள் வெளிப்படுத்தும்.