சுமந்திரன்

சுமந்திரன்

கட்சியில் அங்கத்துவம் இல்லாத பெண்கள் இருவரை சுமந்திரன் திட்டமிட்டு களமிறக்கியுள்ளார் – தமிழரசுக்கட்சி மகளிர் அணி குற்றச்சாட்டு!

நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெண் வேட்பாளர் தெரிவில் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ள கட்சியின் மகளிர் அணியினர், கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தி பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளார்கள்.

தமிழரசுக் கட்சியின்மகளிர் அணியின் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து யாழ். ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பை நடத்தினர்.

இதன்போது கட்சியின் யாழ். மாவட்ட மகளிர் அணித் தலைவி மதனி நெல்சன் தெரிவித்ததாவது:-

“நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சார்பில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் பிரேரிக்கப்பட்டுள்ள பெண் வேட்பாளர் தெரிவில் கட்சியின் மகளிர் அணிக்குக் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

உண்மையில் எதற்காக இவ்வாறான தெரிவுகளைச் செய்தார்கள் என்ற சந்தேகமும் கேள்வியும் இருக்கின்றது. இந்தப் பெண் வேட்பாளர் தெரிவு சர்வாதிகாரமான முறையிலே நடைபெற்றிருக்கின்றது. இதனால் கட்சியில் உள்ள பெண்கள் அவமானப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள்.

நாடாளுமன்றத் தேர்தலில் யாழில் போட்டியிடுவதற்காக மகளிர் அணியில் இருக்கின்ற ஐந்து பேர் இரண்டு கிழமைக்கு முன்னதாகவே விண்ணப்பித்து இருந்தனர்.

ஆனால், வவுனியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட சுமந்திரன் பெண்கள் விண்ணப்பிக்கவில்லை என்றும், காடுகள், மலைகள், மேடுகள், பள்ளங்கள் எனப் பல இடங்களிலும் பெண்களைத் தேடுவதாகவும் தனது பாணியில் கிண்டலாகச் சொல்லியிருந்தார்.

ஆனால், 5 ஆம் திகதி பெண்கள் விண்ணப்பிக்கவில்லை என்றவர் மறுநாள் 6 ஆம் திகதி இரண்டு பெண்கள் விண்ணப்பித்து அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்று கூறுகின்றார். உண்மையில் ஓரிரு வாரங்களுக்கு முன்னர் விண்ணப்பித்தவர்களை மறைத்து யாரும் விண்ணப்பிக்கவில்லை எனச் சொன்னவர் திடீரென இருவர் விண்ணப்பித்துள்ளதாகவும், அவர்களைத் தெரிவு செய்துள்ளதாகவும் கூறுகின்றார்.

ஆகவே, எதற்காக அவர் உண்மையைச் சொல்லாமல் பொய் சொல்லுகின்றார். இவ்வாறாக அவரின் பொய்களைக் கேட்கவோ, சர்வாதிகாரத்துடன் அவர் செயற்பட்டு வருவதையோ அனுமதிக்க நாங்கள் தயாராக இல்லை.

எங்களில் பல பேர் போட்டியிட விண்ணப்பித்து இருக்கையில் அதனை மறைத்துவிட்டு தனக்குத் துதிபாடுபவர்களை வேட்பாளர்களாகச் சுமந்திரன் நிறுத்தியுள்ளார். ஆக முதலில் விண்ணப்பித்த நாங்கள் யார்? இப்போது சுமந்திரன் தெரிவு செய்த இருவரும் யார்? எந்த அடிப்படையில் அவர்களைச் சுமந்திரன் தெரிவு செய்தார்..?

ஆக மொத்தத்தில் தனக்குத் துதி பாடுபவர்களைத் தானே நிறுத்திவிட்டு இப்போது ஆளுமை மிக்க பெண்கள் என அவர் பொய் கூறுகிறார்.

வெறுமனே அடாவடித்தனமாகச் சர்வாதிகாரத்துடன் தான் செயற்படுவதால் மற்றவர்களை முட்டாள்கள், மடையர்கள் எனச் சுமந்திரன் நினைக்கக்கூடாது. எல்லாத்துக்கும் தனித்து ஒற்றையாளாக முடிவெடுகின்ற அவரது ஆட்டம் இனி முடிவுக்கு வரும்.

 

இந்த இரு பெண் வேட்பாளர்களின் தெரிவு என்பது தன்னிச்சையாக சுமந்திரனால் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. இதற்கு யாருடைய ஒப்புதலும் இன்றி தனக்குத் துதிபாடுபவர்களைத் தனது வாக்கு வங்கிக்காக அவர் தெரிவு செய்துள்ளார்.

 

எங்கள் யாருக்கும் தெரியாமல் திருட்டுத்தனமாக இந்த இருவரையும் சுமந்திரன் நியமித்துள்ளார். முன்னர் விண்ணப்பித்தவர்களைப் புறந்தள்ளி தனக்குத் துதிபாடிக்கொண்டு தன்னோடு பயணிக்கக்கூடிய இரண்டு கொத்தடிமைகளை வேட்பாளர்களாகச் சுமந்திரன் நியமித்துள்ளார்.” – என்றார்.

 

தமிழரசுக் கட்சியின் மகளிர் அணிச் செயலாளர் ரஜனி ஜெகப்பிரகாஷ், தமிழரசுக் கட்சியின் மகளிர் அணியைச் சேர்ந்த முன்னாள் பிரதேச சபை தவிசாளர் நாகரஞ்சினி ஜங்கரன், தமிழரசுக் கட்சியின் மகளிர் அணியைச் சேர்ந்த விமலேஸ்வரி ஆகியோரும் பெண் வேட்பாளர் நியமனத்துக்கு எதிராகக் கருத்து வெளியிட்டனர்.

 

தமிழரசுக் கட்சிக்குள் தற்போது சுமந்திரனின் சர்வாதிகார ஆட்சிதான் நடக்கின்றது என்றும் அவர்கள் கடும் விசனம் தெரிவித்தனர்.

“சிறீதரனும் நானும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் – வெற்றிபெறுவோம்.” – மத்திய குழு கூட்டத்தின் முடிவில் சுமந்திரன் !

பெண் வேட்பாளர்களை அடையாளம் காணுவது கடினமாக உள்ளதுடன் நாளையும் வேட்பாளர் தெரிவு முடிவு பெறாது என தமிழரசுக்கட்சியின் ஊடக பேச்சாளர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

இன்று சனிக்கிழமை (05) தமிழரசுக்கட்சியின் வேட்பாளர் நியமன குழு இன்று வவுனியாவில் கூடிய நிலையில் அதன் நிறைவில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
தேர்தல் நியமன குழுவானது இன்று வவுனியாவில் கூடி மாவட்டம் மாவட்டமாக ஆராய்ந்து இருக்கின்றோம்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் எவ்வாறானவர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பதும் எந்தெந்த இடங்களிலிருந்து வேட்பாளர்கள் வரவேண்டும் குறிப்பாக இன்றைய நிலையில் மாற்றத்தை இளைஞர் யுவதிகள், படித்தவர்கள் வரவேண்டும் என பெருவாரியான எதிர்பார்ப்போடு இருக்கின்றனர். அதற்கு இடம் கொடுத்து எந்த விதமாக இந்த வேட்பாளர்களை நியமிப்பது தொடர்பில் பல சிந்தனைகள் இன்று பரிமாறப்பட்டன.

எனினும் நாங்கள் இன்றைய தினம் எந்த மாவட்டம் தொடர்பிலும் ஒரு தீர்மானம் எடுக்கவில்லை.

எனினும் நாங்கள் கடந்த முறை மத்திய செயற்குழுவிற்குப் பின்னர் அறிவித்ததை போலத் திருகோணமலை மாவட்டம் அம்பாறை தேர்தல் மாவட்டம் சம்பந்தமாக விசேட கரிசனை ஒன்று இருக்கின்றது.

இந்த இரு மாவட்டங்களிலும் ஒரு தமிழ் பிரதிநிதியையே பெற்றுக் கொள்ள முடியும். எனவே தமிழ் கட்சிகள் எதிர் எதிராகப் போட்டியிட்டால் அம்பாறை மாவட்டத்தில் கடந்த முறை ஒரு பிரதிநிதித்துவம் இல்லாமல் போனதைப் போல இம்முறையும் அந்த மாவட்டத்திலும் திருகோணமலையிலும் இவ்வாறான ஒரு சாத்தியக்கூறு இருப்பதன் காரணத்தினால் அது குறித்து சில நடவடிக்கைகளை நாங்கள் எடுக்க வேண்டி இருக்கின்றது.

இந்த விடயத்தில் திருகோணமலை கத்தோலிக்க ஆயர் மிக முனைப்பாகப் பல கட்சிகளோடு பேசி சில நகர்வுகளைச் செய்திருக்கின்றார். அவரை சந்திப்பதற்காக நாங்கள் சிலர் செல்கின்றோம். அந்த விடயத்தை நாங்கள் வெற்றிகரமாக முடிப்போமாக இருந்தால் எங்களுடைய மத்திய செயற்குழு தீர்மானம் மற்றும் அரசியல் குழு தீர்மானம் இன்றும் நாங்கள் எடுத்த தீர்மானத்தின் பிரகாரம் தமிழரசு கட்சியினுடைய பெயரிலும் சின்னத்திலும் தான் நாங்கள் ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் போட்டியிடுவோம்.

ஆனால் திருகோணமலையிலும் அம்பாறையிலும் மற்ற கட்சி உறுப்பினர்களையும் உள்வாங்கி ஒரு போட்டி இல்லாமல் தேர்தலை சந்திப்பதற்கான விடயங்கள் ஆராயப்படுகின்றன. அதனை நாங்கள் செய்து முடித்த பின்னர் நாளை மீண்டும் சந்தித்து வேட்பாளராக விண்ணப்பித்தவர்கள் உடைய பெயர்களை ஆராய்ந்து தீர்மானங்களை எடுப்போம்.

எனினும் நாங்கள் நாளையும் இறுதி தீர்மானம் எடுப்போம் என்று கூற முடியாது. நாங்கள் எதிர்பார்க்கின்ற மாதிரியான வேட்பாளர்கள் சில இடங்களில் முன் வரவில்லை.

இதேவேளை பெண்கள் பல இடங்களில் முன்வரவில்லை. பள்ளம் மேடு காடு எங்குத் தேடியும் பெண்கள் கிடைக்காமல் இருக்கிறார்கள். பெண்கள் பல குறைபாடுகளைக் கூறுகின்றார்கள். அவர்களுக்கான நியமனங்களை நாங்கள் கொடுப்பதில்லை என்று. ஆனால் நாங்கள் அவர்களுக்குச் சந்தர்ப்பத்தை வழங்கத் தயாராக இருக்கின்ற போதிலும் வராத ஒரு சூழ்நிலை இருக்கின்றது. எனவே பெண்களுக்கும் பெண்கள் அமைப்புகளுக்கும் ஒரு விசேட கோரிக்கையாக நாங்கள் முன்வைக்கின்றோம். தேர்தலில் வெல்லக்கூடிய எங்களோடு சேர்ந்து பயணிக்கக் கூடிய பெண்களைத் தயவு செய்து முன்மொழிவியுங்கள்.

அவர்களுக்கான இடங்களை வழங்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். இந்த தடவை அவ்வாறான ஒரு புதிய பரிமாணத்திலே மக்களுடைய எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்கின்ற வகையிலே பல புதிய ஆற்றல் உள்ள இளைய தலைமுறைகளுக்கு வாய்ப்பளித்து நிச்சயமாக இடம் கொடுப்போம். அதற்கான தேடலையும் நாங்கள் செய்து வண்ணம் இருக்கிறோம்.

யாழ் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினராக இருந்த சிவனேசனுக்கு இம்முறை வேட்பாளர் நியமனம் கொடுப்பதில் ஏதேனும் சிக்கல் இருப்பதாக ஊடகங்களில் பல கருத்துக்கள் வெளி வந்திருக்கின்றனவே என ஊடகவியலாளர் கேட்டபோது,

எங்களுடைய மத்திய செயற்குழு கூட்டத்திலே ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது மீளவும் இன்று உறுதி செய்யப்பட்டது. ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்து அதற்குப் பின்னர் தேர்தலிலே தோற்றவர்கள் இந்த தடவை சந்தர்ப்பத்தை வழங்காமல் புதியவர்களை உள்வாங்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. எனவே அந்த பிரிவுக்குள் பலர் அடங்குவார்கள். ஆனால் சிறிதரணை பொறுத்தவரை அதற்குள் வர மாட்டார்.

எனினும் இன்றைய கூட்டத்தில் நான் கூறியிருந்தேன் கட்சியினுடைய தீர்மானத்தை மீறி ஜனாதிபதி தேர்தலிலே கட்சியின் தீர்மானத்தை எதிர்த்து பிரசாரம் செய்த காரணத்தினால் அவருக்கு நியமனம் கொடுக்கக் கூடாது என்பதற்கு அப்பால் அவராகவே ஒதுங்கி இருந்தால் நல்லது என தெரிவித்திருந்தேன். எனினும் ஸ்ரீதரன் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் போட்டியிடுவார்.

என்னையும் அவரையும் யாழ் மாவட்டத்தில் கட்டாயமாகப் போட்டியிட வேண்டும் என சகல நியமன குழு உறுப்பினர்களும் கூறி இருந்தார்கள். அதற்கு அமைவாக நாங்கள் இருவரும் யாழ் மாவட்டத்திலே போட்டியிடுவோம். வெற்றியும் அடைவோம் என்று எதிர்பார்க்கின்றோம்.

எங்கள் இருவருக்கும் இது நான்காவது பாராளுமன்றம் எனினும் இன்னும் ஏழு பேரை நியமிக்க வேண்டும். மிகவும் ஆர்வமாக இளையவர்களுக்கும் புதியவர்களுக்கும் இடம் கொடுப்பதற்கு நாங்கள் கருத்தாகக் கொண்டுள்ளோம் என தெரிவித்தார்.

“சுமந்திரன் எவ்விதமான நிபந்தனைகளுமில்லாமல் எதிர்க்கட்சித் தலைவருக்கு ஆதரவு வழங்கியுள்ளார்.இது தமிழ் மக்களுக்கு இழைத்துள்ள துரோகம்” – அங்கஜன் இராமநாதன் காட்டம் !

 

பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம் ஆகியோர் நிபந்தனைகளின் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவருக்கு ஆதரவு வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார்கள்.ஆனால்  இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் சுமந்திரன் எவ்விதமான நிபந்தனைகளுமில்லாமல் எதிர்க்கட்சித் தலைவருக்கு ஆதரவு வழங்கியுள்ளார்.இது தமிழ் மக்களுக்கு இழைத்துள்ள துரோகமல்லவா,  வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் வாக்குகளை சிதறடிக்கும் சூழ்ச்சிகளுக்கு தமிழ் மக்கள் அகப்பட கூடாது. செய்நன்றி மறவாமல், ஜனாதிபதிக்கு மீண்டும் ஆணையளிக்க வேண்டும் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் – உடுப்பிட்டி பகுதியில் நேற்று சனிக்கிழமை (07)  இடம்பெற்ற சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின் ‘இயலும் ஸ்ரீ லங்கா’ தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

இது தேர்தல் பிரச்சாரக் கூட்டமல்ல, ஜனாதிபதிக்கு யாழ் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை நடத்த வேண்டிய தேவை கிடையாது. நன்றிக்கான கூட்டம். பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு நிம்மதியாக வாழ்வதற்கு நம்பிக்கையளித்துள்ளார்.

ஜனாதிபதியின் வெற்றிக்கான கூட்டமாகவே இதனை கருத வேண்டும். தற்போதைய முன்னேற்றத்தை மென்மேலும் உறுதிப்படுத்த வேண்டுமாயின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெற்றிப் பெற வேண்டும்.இல்லையேல் நாடு மீண்டும் பின்னடையும்.

வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் சிறந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்கள். தமது அபிலாசைகளை வென்றெடுப்பதற்கு தமிழ் மக்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பலதடவைகள் ஆதரவளித்துள்ளார்கள்.  ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கும் முதல் மேடை இதுவென்பதை குறிப்பிட்டுக் கொள்ள வேண்டும்.

நெருக்கடியான சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தை பொறுப்பேற்றாமல் தலைவர்கள் இருந்த போது மக்களுக்காக சவால்களை பொறுப்பேற்பேன் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார். இரண்டு வருடங்களில் நாட்டை வழமைக்கு கொண்டு வந்துள்ளார். நாங்கள் சந்தர்ப்பவாதிகளல்ல, நன்றியுள்ளவர்கள்.

நெருக்கடியான சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி அரசாங்கத்தை பொறுப்பேற்றாமல் இருந்திருந்தால் இலங்கை சோமாலியாவை போன்று மாறியிருக்கும். பொருளாதார மீட்சிக்கு சிறந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டு, அவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. எழுச்சிப் பெறுவதா?  அல்லது வீழ்ச்சியடைவதா ?  என்பதை செப்டெம்பர் 21 திகதி தீர்மானிக்க வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் வாக்குகளை சிதறடிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகிறது. இலங்கை தமிழரசுக் கட்சி வேடிக்கையான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. தமிழரசு கட்சியின் ஒரு தரப்பினர் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்கியுள்ள நிலையில்.

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் விரைவாக சென்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு  ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளார்.ஜனாதிபதியை என்னுடைய அலுவலகத்துக்கு அழைத்து தமிழ் மக்களின் நீண்டகால கோரிக்கைகளை எழுத்துமூலமாக அவரிடம் வழங்கினேன். இதனை ஏற்றுக் கொண்டதன் பின்னரே நான் அவருக்கு ஆதரவு வழங்கினேன்.

பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம் ஆகியோர் நிபந்தனைகளின் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவருக்கு ஆதரவு வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார்கள்.ஆனால்  இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் சுமந்திரன் எவ்விதமான நிபந்தனைகளுமில்லாமல் எதிர்க்கட்சித் தலைவருக்கு ஆதரவு வழங்கியுள்ளார்.இது தமிழ் மக்களுக்கு இழைத்துள்ள துரோகம்,

தமிழ் மக்களின் வாக்குகள் எம்மிடம் என்ற மாயையில் இருந்துக் கொண்டு செயற்படும் இவர்கள் தமிழர்களை நெருக்கடிக்குள்ளாக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள். தமிழர்கள் இந்த சூழ்ச்சியில் அகப்பட மாட்டார்கள். யார் உண்மையானவர்கள் என்பதை தமிழர்கள் நன்கு அறிவார்கள்.

ஜனாதிபதியை இனவாதி என்று குறிப்பிடுகிறார்கள். நல்லாட்சியில் அவர் தமிழர்களுக்கு செய்த அபிவிருத்திகளை மக்கள் நன்கு அறிவார்கள்.வடக்கில் இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி பணிகளை மீண்டும் தொடர்வோம் என்றார்.

சிறிதரன் வென்றால் “தமிழ் தேசியம் வென்றுவிட்டது !” சுமந்திரன் வென்றால் “துரோகத்தால் துரோகிகளால் தமிழ் தேசியம் தோற்கடிக்கப்பட்டது !”

 

சிறிதரனா ? சுமந்திரனா ? : நாளைய செய்தித் தலைப்பு: சிறிதரன் வென்றால் “தமிழ் தேசியம் வென்றுவிட்டது !” சுமந்திரன் வென்றால் “துரோகத்தால் துரோகிகளால் தமிழ் தேசியம் தோற்கடிக்கப்பட்டது !”

 

 

நாளை ஜனவரி 21 தமிழரசக் கட்சியின் தலைவராக யார் தெரிவு செய்யப்படப் போகின்றார் என்பது பெரும்பாலும் தெரியவரும். இதற்கான தமிழரசுக் கட்சி அங்கத்தவர்களின் வாக்கெடுப்பு ஞாயிற்றுக்கிழமை நாளை திருகோணமலையில் இடம்பெற இருக்கின்றது. அதற்கு கட்சியின் அங்கந்தவர்கள் 325 பேர்வரை வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருந்து கிழக்கில் உள்ள திருகோணமலைக்குச் செல்கின்றனர். வாக்கெடுப்பு எண்ணிக்கை நிறைவில் வெற்றி தோல்வி அறிவிக்கப்படும் போது அசம்பாவிதங்களும் ஏற்படும் அளவுக்கு நிலைமை பதட்டமானதாக இருப்பதாக தேசம்நெற்க்கு கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. தலைமைத்துவத்துக்கு போட்டியிடும் இருவருமே தேர்தல் முடிவுகளை ஏற்று மற்றையவருடன் கட்சியின் நன்மைகருதி இணைந்து பயணிப்போம் எனத் தெரிவித்து இருந்த போதும் தமிழரசுக் கட்சியின் நாளைய தேர்தல் தமிழரசுக்கட்சிக்குள் ஒரு பாரிய பிளவை ஏற்படுத்தும் என்று தேசம்நெற்க்குத் தெரியவருகின்றது.

இலங்கையில் உள்ள எந்தவொரு கட்சிக்காவது ஜனநாயகப் பாரம்பரியம் இருக்கின்றதா என்றால் எடுத்த எடுப்பிலேயே இல்லை என்று சொல்லி விடலாம். கட்சிக்குத் தலைவரானால் சாகும்வரை அவரே தலைவராக இருந்துவிடுவார். இதற்கு தமிழ் கட்சிகளும் தமிழரசுக் கட்சியும் விதிவிலக்கல்ல. தமிழரசுக்கட்சி வரலாற்றில் தேர்தல் மூலம் ஒருவரைத் தெரிவது இதுவே முதற்தடவை. ஏகமனதாக, ஏகோபித்த முடிவு, ஏக பிரதிநிதித்துவம் என்று இன்னொரு பக்கம் இருக்கின்றதை ஏற்றுக்கொள்ளாத சமூகமும் கட்சிகளுமாக நாம் எங்களை பன்மைத்துவத்தின் விரோதிகளாக பழக்கிக் கொண்டுவிட்டோம். அப்படிப் பார்க்கின்ற போது தமிழரசுக்கட்சியின் தலைமைக்கான தேர்தல் ஜனநாயகத்தின் பார்வையில் மிகப்பெரும் பாச்சல் என்றே சொல்லலாம். ஆனால் என்ன இந்தத் தேர்தலினால் தமிழ் மக்களுக்கு ஏதும் நன்மை ஏற்பட வாய்ப்பு இருக்கின்றதா என்பதே தற்போதுள்ள கேள்வி.

 

இலங்கைத் தமிழர்களுடைய இனப்பிரச்சினைக்கான தீர்வில் தமிழரசுக் கட்சி அது ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இன்றுவரை ஒரு இம்மியளவு முன்னேற்றத்தை நோக்கியும் நகரவில்லை. எழுபதுக்களில் தங்களுடைய வீழ்ந்துபோன வாக்கு வங்கியைத் தக்க வைக்க வே பிரபாகரன் போன்ற இளைஞர்களை உசுப்பேத்தி தமிழீழக் கோரிகையை வைத்து, அந்த இளைஞர்களாலேயே மரணத்தையும் தழுவினர். அந்த இளைஞர்களும் ஆளுக்கு ஆள் சகோதரப்படுகொலை செய்து தங்களைத் தாங்களே அழித்தனர். அன்று தப்பித்த இரா சம்பந்தன் ஒருவாறு இறுதியில் வே பிரபாகரனை பொறியில் வீழ்த்தி மீண்டும் தமிழ் தேசியத்தின் ஒற்றைத் தலைவரானார். அன்று மரணத்தில் இருந்து தப்பிய இன்னும் சிலரும் குட்டிக் குட்டித் தலைவர்களாகினர். இப்போது ஒரு காலத்தில் தமிழ் மக்களின் ஏகபோக பிரதிநிதியான தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு ஒரு போட்டி வந்துவிட்டது.

 

இத்தேர்தல் முடிவுகளில் இலங்கைத் தமிழர்களின் நலன்கள் பாதுகாக்கப்படுகின்றதோ இல்லையோ புலம்பெயர் தமிழ் – புலித் தேசியவாதிகளின் அரசியல் நலன்கள் பேணப்பட வேண்டும், இலங்கை அரசியலில் தங்களுடைய ஆதிக்கம் இருக்க வேண்டும் என்பதில் புலம்பெயர் சக்திகள் மிகத் தீவிரமாகச் செயற்படுகின்றனர். புலம்பெயர் புலித் தேசியவாதிகளைப் பொறுத்தவரை ஏ சுமந்திரன் தீண்டத்தகாத ஒரு மனிதர். அதற்கு சுமந்திரனுடைய அரசியல் நிலைப்பாடு மட்டுமல்ல சுமந்திரனுடைய அறிவும் ஆளுமையும் அவர்களுக்கு மிகுந்த அச்சத்தை கொடுக்கின்றது. தமிழரசுக் கட்சிக்கு சுமந்திரன் தலைவரானால் தமிழ் தேசிய அரசியலில் புலம்பெயர் விசிலடிச்சான் குஞ்சுகளின் குரல்களுக்கு இடமிருக்காது. மிகத் தீவிர புலித்தேசியத்தின் குரல்களுக்கு தமிழரசுக் கட்சியில் இடமிருக்காது.

 

அதனால் என்ன விதப்பட்டும் எஸ் சிறீதரனை வெல்ல வைப்பதில் அவர்கள் மிகத் தீவிரமாக உள்ளனர். எஸ் சிறிதரன் தமிழரசுக் கட்சிக்கு தலைவரானால் புலத்தில் உள்ள விசிலடிச்சான் குஞ்சுகள் எல்லாம் அவருக்கு அரசியல் வகுப்பும் ஆங்கில வகுப்பும் எடுப்பார்கள். தன்னுடைய வங்கிக் கணக்கை அவர்களிடம் கொடுத்துவிட்டு அவர்கள் சொல்வதை எல்லாம் கிளிப்பிள்ளை மாதிரி எஸ் சிறிதரன் கேட்பார் என்ற நம்பிக்கை புலம்பெயர் விசிலடிச்சான் குஞ்சுகளிடம் நிறையவே உள்ளது. அவ்வாறு லண்டனுக்கு மகனையும் அனுப்பி வைத்துள்ளார் எஸ் சிறிதரன்.

 

ஏ சுமந்திரனும் எஸ் சிறிதரனும் 2010இல் ஒரே காலகட்டத்தில் அரசியலுக்குச் சென்றவர்கள். இன்றுவரை பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். கல்வி, கேள்வி ஞானம், அரசியல் அறிவு, உள்ளுர் சர்வதேச தொடர்புகள் என்று பார்க்கின்ற போது ஏ சுமந்திரன் பலமானவராக உள்ளார். மக்கள் மட்டத்தில் புலம்பெயர் நாடுகளில் எஸ் சிறிதரன் பலமாக உள்ளார். இலங்கைத் தமிழ் மக்களைப் பொறுத்தவரை குறிப்பாக வடக்கு – கிழக்கில் வாழும் தமிழர்களைப் பொறுத்தவரை இவர்களில் யாரும் இதுவரை அவர்களுக்காக எதனையும் குறிப்பாக சாதித்துவிடவில்லை. ஏ சுமந்திரன் சில அரசியல் கைதிகளை தனது தொழில் ரீதியில் விடுதலைபெறக் காரணமாக இருந்ததைத் தவிர.

 

ஆனால் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு எஸ் சிறிதரன் தெரிவு செய்யப்பட்டால் அந்தக் கட்சியில் தொடர்ந்து செயற்பட ஏ சுமந்திரன் அனுமதிக்கப்பட மாட்டார். அதனை புலம்பெயர் விசிலடிச்சான் குஞ்சுகள் அனுமதிக்காது. மேலும் ஆளுமையுள்ள சுமந்திரன் தொடர்ந்தும் கட்சியில் இருப்பது எஸ் சிறிதரனின் தலைமைத்துவத்தை எப்போதும் நெருக்கடிக்கு உள்ளாக்கும். அடுத்த ஆண்டு நாடு பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்கின்ற போது விரும்பு வாக்குகளுக்காக இருவரும் கடுமையாக மோத வேண்டிவரும். அது ஏ சுமந்திரனுக்கு மிக நெருக்கடியாக அமையும். அதனால் ஏ சுமந்திரன் தமிழரசுக்கட்சித் தேர்தலில் தோல்வியடைந்தால் பிரிந்துசெல்வதற்கான வாய்ப்பே அதிகம் உள்ளது.

 

மாறாக, எஸ் சிறிதரன் தோற்கடிக்கப்பட்டால் அவர் தொடர்ந்தும் தமிழரசுக் கட்சியில் இருப்பாரா அல்லது பிரிந்து செல்வாரா அல்லது கட்சி தாவுவாரா என்பது அவருக்கு கிடைக்கும் வாக்குகளின் எண்ணிக்கையிலும் புலம்பெயர் புலித் தேசியவாதிகளின் நிலைப்பாட்டிலும் தங்கியுள்ளது. சிறிதரன் தேர்தலில் தோற்றுப் போனாலும் தமிழரசுக்கட்சியில் தொடர்ந்தும் இருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளது. கிளிநொச்சியில் உள்ள பலமான அந்த வாக்கு வங்கியை அவர் இழப்பதற்கு துணிய வாய்புகள் குறைவு. ஏற்கனவே எம் சந்திரகுமாருடைய சமத்துவக் கட்சி அவருடைய வாக்கு வங்கியை உடைத்து வளர்ந்து வருகின்ற நிலையில் எஸ் சிறிதரன் தமிழரசுக் கட்சியை உடைத்து வெளியேறினால் அடுத்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் அவருடைய வெற்றிவாய்ப்பை உறுதிப்படுத்துவது கடினமானதாக அமையும்.

 

தேசம்நெற்க்கு கிடைக்கின்ற தகவல்களின்படி புலம்பெயர் நாடுகளிலும் தாயகத்திலும் தங்களை உயர்சாதியினராகக் கருதுபவர்கள் மத்தியில்; எஸ் சிறிதரனுக்கு செல்வாக்கு உள்ள போதிலும் ஒடுக்கப்பட்ட வன்னியில் வாழும் மலையக மக்கள் மத்தியில் அவருக்கு குறிப்பிடத்தக்க செல்வாக்கு இல்லை. அதைவிடவும் சாணக்கியன் உட்பட தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலும் ஏ சுமந்திரனுக்கே ஆதரவைத் தெரிவித்துள்ளனர். 325 வரையான கட்சி உறுப்பினர்கள் மத்தியிலும் ஏ சுமந்திரனுக்கே ஆதரவு இருப்பதாக சொல்லப்படுகின்றது. எஸ் சிறிதரன் செல்வாக்கு ஆனையிறவுக்கும் கிளிநொச்சிக்கும் அப்பால் உள்ளதா என்பதும் கேள்விக்குறியே.

 

இன்னும் சில மணி நேரங்களில் தேர்தல் முடிவுகள் வெளிவரும்.

நாளைய செய்தித் தலைப்பு:

சிறிதரன் வென்றால் “தமிழ் தேசியம் வென்றுவிட்டது !”

சுமந்திரன் வென்றால் “துரோகத்தால் துரோகிகளால் தமிழ் தேசியம் தோற்கடிக்கப்பட்டது !”