புத்தாண்டு காலப் பகுதியில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் விழிப்புடன் செயற்பட்டு பாதுகாப்புத் தரப்பினருக்கு ஒத்துழைக்க வேண்டுமென்றும் பொலிஸ் தலைமையகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
புத்தாண்டு சமயத்திலும் அதனைத் தொடர்ந்து வரும் தேர்தல் வேளையிலும் பொதுமக்கள் கூடுதலாக ஒன்றுகூடுவார்கள். இதன்போது பொதுமக்கள் பாதுகாப்புத் தரப்பினரின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதுடன், அவர்களது ஒத்துழைப்பையும் பெற்றுக் கொடுக்க வேண்டுமென்றும் பொலிஸ் தலைமையக ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.
புத்தாண்டை முன்னிட்டு நாட்டின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பிரதான நகரங்களிலும் கிராமங்களிலும் சன நெரிசல் ஏற்படுவதால் அதிரடிப் படையினரும் பொலிஸாரும் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் பொதிகளை சோதனையிடும் பாதுகாப்புத்தரப்பினர் முக்கிய இடங்களையும் சோதனையிட்டு வருகின்றனர்.