யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவிகளை பாதுகாக்க மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத் புதிய திட்டம் !

யாழ்.மாவட்டத்திலுள்ள பெண்கள் பாடசாலைகளில் மாணவிகளின் நலன் கருதி பெற்றோரின் கைபேசி இலக்கங்கள் இணைக்கப்பட்ட வட்ஸ் அப் குழுக்கள் உருவாக்கப்பட வேண்டுமென மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத்தினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளில் வகுப்பு ரீதியாக வட்ஸ் அப் குழுக்கள் உருவாக்கப்பட்டு மாணவிகளின் பெற்றோரின் கைபேசி இலக்கங்கள் இணைக்கப்பட்டு, வகுப்பு ஆசிரியைகளால் கையாளப்பட வேண்டும் என்றும், மாணவிகள் தொடர்பான அவதானிப்புக்கள் அதில் பதிவிடப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

யாழ்ப்பாண மாவட்டத்தில் பதின்ம வயதினர் தொடர்பான குற்றங்களைக் குறைக்கும் நோக்கில் இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

 

அத்துடன், மாணவிகள் பாடசாலைக்கு சமூகமளிக்காவிட்டால் உடனடியாக இந்தக் குழுக்கள் ஊடாக பெற்றோருக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றும், மாணவிகள் பாடசாலைக்கு வரும் வாகன விவரங்கள், சாரதிகளின் கைபேசி இலக்கங்கள் போன்றவையும் இந்தக் குழுக்களில் பகிரப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

இந்த நடைமுறையை உடனடியாக நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் குறித்த செயற்திட்டம் அந்தந்த பொலிஸ் பிரிவில் உள்ள பொலிஸ் பொறுப்பதிகாரிகளினால் மேற்பார்வை செய்யப்படும் எனவும் யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாடசாலை அதிபர்களுக்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *