மடகஸ் கார் உச்ச நீதிமன்றமானது அந்நாட்டின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவர் அன்றி ராஜோலினாவிடம் அதிகாரம் கையளிக்கப்பட்டமைக்கு அங்கீகாரம் அளித்துள்ளது.
அந்நாட்டு ஜனாதிபதி மார்க் ரவலோமனானா பதவியை விட்டு விலகிய பின், அந்நாட்டு இராணுவம் 34 வயது அன்ட்றி ரஜோலினாவிடம் அதிகாரத்தை கையளித்திருந்தது. மடகஸ்கார் அரசியலமைப்பு சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் ஒருவர் ஆகக் குறைந்தது 40 வயதை அடைந்திருப்பது கட்டாயமாகும்.
இந்த வயது நிபந்தனையின் பிரகாரம் 6 வயது இளமையான அன்றி ரஜோலினா ஜனாதிபதியாக பதவியேற்பது சட்ட சிக்கல் மிக்க ஒரு விடயமாகவே கருதப்பட்டது.
இந்நிலையில் அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அவரது ஜனாதிபதி நியமனத்துக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது. இதனையடுத்து ஆபிரிக்க நாடான சாம்பியாவானது, உடனடியாக மடகஸ்காரை ஆபிரிக்க ஒன்றியத்திலிருந்தும் தென் ஆபிரிக்க அபிவிருத்தி சமூகத்திலிருந்தும் நீக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
மடகஸ்காரில் அரசியலமைப்புக்கு முரணான வகையில் அமைக்கப்படும் அரசாங்கத்தை சாம்பியா நிராகரிக்கிறது†என சாம்பிய வெளியுறவுத் துறை அமைச்சர் கபிங்கா பண்டே தெரிவித்தார்.
மடகஸ்காரில் புதிய தேர்தலை 24 மாதங்களில் நடத்துவதாக அன்றி ரஜோலினா வாக்களித்திருப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. அது மிக நீண்டகாலமாகும்†என பிரான்ஸ் வெளிநாட்டு அமைச்சு தெரிவித்தது.
மடகஸ்கார் உலகின் நான்காவது பெரிய தீவாகும். அந்நாட்டின் சனத்தொகை 20 மில்லியனாகும். நாட்டு மக்களின் 70 சதவீதமானவர்கள் நாளொன்றுக்கு ஒரு அமெரிக்க டொலருக்கும் குறைவான வருமானம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.