நேட்டோ படையில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா கடந்த 24-ந் திகதி முதல் அந்த நாடு மீது தாக்குதல் நடத்தி வருகிறது. குண்டுகளை பொழிந்தும், ஏவுகணைகளை வீசியும் அதிரடியான தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. 6-வது நாளாக ரஷ்ய இராணுவப் படைகள் தலைநகர் கீயுவ், கார்கீவ் போன்ற முக்கிய நகரங்களின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்தநிலையில் உக்ரைன் அதிபர் விலாடிமிர் செலன்ஸ்கியை கொல்ல 400 கூலிப்படையினரை ரஷியா அனுப்பி உள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
ரஷ்யாவில் உள்ள வாக்னர் குழுவை சேர்ந்த தனியார் கூலிப்படை அமைப்பு 400 பேரை ரஷ்யாவுக்கு அனுப்பி உள்ளது. இவர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து உக்ரைன் தலைநகர் கீவ்வுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். வாக்னர் குழுமத்தில் 2 ஆயிரம் முதல் 4 ஆயிரம் பேர் வரை கூலிப்படையினராக உள்ளனர். இந்த அமைப்பு ரஷிய அதிபர் விளாடிமிர் புடினின் கூட்டாளியான யெவ்ஜெனி பிரிகோஜினால் நடத்தப்படுகிறது.
இந்த கூலிப்படையை சேர்ந்த 400 பேர் ஆப்பிரிக்காவில் இருந்து பெலாரஸ் வழியாக கீயூவ் நகருக்குள் 5 வாரங்களுக்கு முன்பு நுழைந்து விட்டதாகவும் அந்த தகவல் தெரிவிக்கிறது. இந்த கூலிப்படையினருக்கு உக்ரைன் அதிபர் விலாடிமிர் செலன்ஸ்க்கியை தேடி கண்டுபிடித்து கொல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.
உக்ரைன் அதிபரோடு அவரது மந்திரி சபையில் உள்ள மந்திரிகள், அதிகாரிகள் உள்பட மொத்தம் 23 பேரை கொல்வதற்கு ரஷ்யா உத்தரவிட்டு இருக்கிறது. இதற்காக அவர்களுக்கு மிகப்பெரிய தொகையும் முதல்கட்டமாக அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பரிசுத்தொகை விவரம் எதுவும் தெளிவாக தெரிய வில்லை.
ரஷிய அதிபர் விளாடிமிர் புடின்தான் தனது கூட்டாளியான கூலிப்படை அமைப்புக்கு இந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாகவும் அந்த தகவல் தெரிவிக்கிறது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்யாவில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த பிறகு இந்த கூலிப்படையினர் செலன்ஸ்க்கியை கொல்ல திட்டமிட்டுள்ளனர். ஒருபுறம் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டுவிட்டு, உக்ரைன் அதிபரை கொல்ல கூலிப்படையை அனுப்பி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உக்ரைன் அதிபர் ஏற்கனவே தன்னை கொல்ல ரஷ்யா திட்டமிட்டுள்ளது என்று குற்றம் சாட்டி இருந்தார். தன்னை கொல்வதுதான் ரஷ்யாவின் முதன்மை நோக்கம் என்றும், தன்னையும் தனது குடும்பத்தையும் அழித்துவிட்டால் நாட்டை அழித்து விடலாம் என்று ரஷ்யா கருதுவதாகவும் அவர் கூறி இருந்தமை நோக்கத்தக்கது.