கறுப்புசந்தையில் பெற்ற டொலரை பயன்படுத்தி வடகொரியாவிடமிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்ததாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளமை குறித்து இலங்கையில் உள்ள பல வெளிநாட்டு தூதரகங்களும் சர்வதேச அமைப்புகளும் கரிசனை வெளியிட்டுள்ளன.
இலங்கை அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தால் அது சர்வதேசமோதல்கள் குறித்த வழக்காறுகளை மீறும் செயல் அதனுடன் தொடர்புடைய ஏனைய மனித உரிமை பிரகடனங்களை மீறும் நடவடிக்கை என வெளிநாட்டு தூதரகங்கள் தெரிவித்துள்ளன. நிதியமைச்சர் பேட்டியொன்றின் போது வெளியிட்டுள்ள கருத்துக்கள் குறித்து மனித உரிமை ஆர்வலர்களும் அரசியல் கட்சிகளும் கடும் விமர்சனத்தை வெளியிட்டுள்ளனர்.
இந்த விமர்சனங்கள் வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் கவனத்தை ஈர்த்துள்ளன-இந்த அமைப்புகள் நிதியமைச்சர் தெரிவித்துள்ள விடயங்கள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என்பது குறித்து உள்ளக பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளன என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கறுப்புச்சந்தையில் பெறப்பட்ட டொலரை பயன்படுத்தி வடகொரியாவிடமிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்ததாக நிதியமைச்சர் தெரிவித்துள்ள தகவலின் தீவிரதன்மை சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது என மனித உரிமை செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வில் இலங்கை நிதியமைச்சரின் கூற்று குறித்து ஆராயப்படலாம் என மனித உரிமை செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சரின் கூற்று சர்வதேச நிதியமைப்புகளின் கவனத்தை ஈர்க்கும் என தெரிவித்துள்ள கொழும்பு பல்கலைகழகத்தின் பொருளாதார விரிவுரையாளர் பிரியங்க டுனுசிங்க நெருக்கடியான தருணத்தில் சர்வதேச நிதியமைப்புகளின் ஆதரவை பெறும் இலங்கையின் முயற்சிகளிற்கு இது பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.