மின்சார உற்பத்தி நடைபெறும் நீரேந்து பகுதிகளில் நீர்மட்டம் குறைவடைந்ததை அடுத்து, மின் விநியோகத்தில் தடங்கல் ஏற்படலாமென அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ள போதும், மின் விநியோகத்தில் தடைகள் எதுவும் ஏற்படாது என மின்சார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார். சீரான மின் விநியோகத்துக்கான முன்னேற்பாடாக, மின் பிறப்பாக்கி இயந்திரங்கள் கைவசமுள்ளதால் மின்சாரத்தை விநியோகிப்பதில் தடங்கல்கள் ஏற்படமாட்டாது என அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக, உயரதிகாரிகளுடன் மேற்கொண்ட கலந்துரையாடலை அடுத்தே, மின்சார சபை தலைவர் மின் விநியோகத்தில் தடங்கல்கள் ஏற்படமாட்டாது என்ற தகவலை வெளியிட்டார். இதனிடையே, மார்ச் முதலாம் திகதிக்கு முன்னர் மழை பெய்யாவிடின், நாட்டின் மின் விநியோகத்தில் தடங்கல்களை எதிர்நோக்க வேண்டியிருக்குமென அண்மையில் மின்சாரசபை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
தற்சமயம், நீரேந்து பகுதிகளில், உள்ள மொத்த நீரின் அளவில் 35 வீதமான, 444 கன அடிநீர் மாத்திரமே காணப்படுவதாக மின்சாரசபையின் சிரேஷ்ட அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மின்சார சபை பொது நிர்வாக பொறியியலாளர் சபையின் தலைவருக்கும் அறிவித்திருந்தார்.
ஏற்கெனவே, கடந்த வருடம் ஜனவரியில் 200 கன அடி நீளம் கொண்டிருந்த நீரேந்து பகுதிகள் இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதியில் 600 கனஅடி நீரைக் கொண்டிருந்ததாகவும், தொடர்ச்சியாக வரட்சி காரணமாக இந்த நீர்மட்டத்தில் திடீர்வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.