ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் நேற்று நியூசிலாந்தின் ஓக்லாந்திலுள்ள விற்பனை நிலையமொன்றில் மக்கள் மீது தாக்குதல் நடாத்தியபோது அவரை பின்தொடர்ந்து வந்த பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.
இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டவர் இலங்கை சேர்ந்தவர் எனவும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புபட்டவர் எனவும் அந்த நாட்டு பிரதமர் அறிவித்திருந்தார்.
சுட்டுக்கொல்லப்பட்டவர் மட்டக்களப்பு காத்தான்குடி முதலாம் வட்டாரத்தினை சேர்ந்த முகமட் சம்சுதீன் ஆதில் என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் , இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கையுடன் தொடர்புடைய அனைத்து அமைப்புக்களையும் நிபந்தனையற்ற வகையில் தடை செய்ய அரசாங்கம் துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் அறிக்கை ஒன்றைின் மூலம் தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ,
நியூஸிலாந்து ஒக்லாந்து நகரில் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்து தாக்குதல் தொடர்பில் இலங்கை அதிகளவில் அவதானம் செலுத்த வேண்டும். மேலும் இஸ்லாமிய அடிப்படைவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்யுமாறு தேசிய மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் அழுத்தம் பிரயோகிக்கின்றமையை அரசாங்கம் ஒருபோதும் கருத்திற் கொள்ள கூடாது.
அஹமட் ஆதில் மொஹமட் சம்சுதீன் என்ற பெயரால் அடையாளப்படுத்தப்பட்ட நபரால் கத்திக்குத்து தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக நியூஸிலாந்து புலனாய்வு பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்நபர் 2017 ஆம் ஆண்டு நியூஸிலாந்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரண்டு பேஸ்புக் பக்கங்கள் ஊடாக இஸ்லாம் மத தீவிரவாதத்தை வளர்ப்பற்கான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இருப்பினும் மனித உரிமை காரணிகளையும், ஏனைய பொது காரணிகளையும் அடிப்படையாகக் கொண்டு இவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
எனினும் இவரை நியூஸிலாந்து பாதுகாப்பு தரப்பினர் அவரை இரகசியமாக கண்காணித்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.