இலங்கை அரசாங்கத்தால் அனுப்பப்பட்ட உணவுப்பொருட்கள் இன்று முல்லைத்தீவை வந்தடைந்ததாக கிளிநொச்சி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சத்திய மூர்த்தி தெரிவித்துள்ளார். அத்துடன் பல நோயாளர்கள் நேற்று (18) கப்பல் மூலம் திருகோணமலைக்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறினார்.
அதேவேளை இன்னமும் அங்கு உணவுப்பற்றாக்குறையும், குடிநீருக்கான தட்டுப்பாடும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இன்றும் எறிகணை வீச்சுக்கள் நடந்து, அங்கு பலர் கொல்லப்பட்டதாகவும், 12 பேரது சடலங்கள் நேற்று புதுமாத்தளனில் உள்ள தற்காலிக மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டதாகவும் டாக்டர் சத்திய மூர்த்தி கூறினார்.
கடுமையான வெயில் காரணமாகவும், தூய்மையற்ற சூழ்நிலை காரணமாகவும் பல தொற்று நோய்கள் அங்கு பரவிவருவதாகவும், அவற்றை எதிர்கொள்வதற்கான மருத்துப் பொருட்களோ அல்லது ஏனைய மருத்துவ வசதிகளோ தம்மிடம் கிடையாது என்றும் அவர் கூறினார்.